அத்தியாயம் 11...
பாண்டியன் சொன்னதைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்....
ஆனால் காசிலிங்கமோ அனைவரின் மனநிலையை அறியாமல், பாண்டியனின் வார்த்தையைக் கேட்டு, தன்னுடைய அலைபேசியை எடுத்து தன் மகளின் புகைப்படத்தை முதலில் வேதநாயகத்திடம் காண்பித்தார்...
வேதநாயகமோ, புதியவர் முன் எதுவும் பேச விரும்பாததால், "வா.. காசி... எப்புடி இருக்க? வீட்டுல எல்லாரும் சொகமா? பாத்து அநேக வருசமாச்சி..." என்று அவர் நீட்டிய அலைபேசியை பார்க்காமல் தவிர்த்து பேச்சை திசைமாற்றினார்...
காசியோ, "எல்லாரும் நல்லாயிருக்கோங்க... நீங்க எல்லாரும் எப்டி இருக்கீங்க? சென்னையில போய் செட்டில் ஆயிட்டதால, நல்லது கெட்டதுன்னு எதுலயும் கலந்துக்க முடியல... அக்கா பொண்ணுக்கு கல்யாணம் இன்னைக்கு... அதான் வந்தேன்... நான் மட்டுந்தான் வந்தேன்... இவ்ளோ தொலைவுல வர முடியாதுன்னுட்டாங்க வீட்டுல... என் பொண்ணுக்கும் என் மனைவிக்கும் இந்த மாதிரி கிராமம்லா புடிக்காது.. அதான்" என்றார்...
அவரின் கடைசி வார்த்தையைக் கேட்டதும், அனைவருக்கும் ஒரு பெரும் நிம்மதி தோன்றியது பாண்டியனைத் தவிர...
யாழினியோ, நக்கலாக ஒரு பார்வைப் பார்த்தாள்...
"இப்பொழுதுதான் வள்ளியம்மை நிம்மதியாக உணர்ந்தார்... "வாப்பா... வந்து உக்காரு மொதல்ல... நின்னுக்கிட்டேயிருக்கியே..." என்று கூறியவர், சமயலறை நோக்கி, "ஏலே பேச்சி... குடிக்க மோர் கொண்டா..." என்று கட்டளையிட்டார்...
லட்சுமியும் வேல்முருகனும் தன் பங்கிற்கு நலம் விசாரித்தனர்...
பேச்சியம்மா அதற்குள் மோர் கொண்டுவரவும் அதை தன் கைகளில் வாங்கி, காசிலிங்கத்திற்கு கொடுத்தாள் யாழினி...
"அங்கிள்... இந்தாங்க.. வெயில்ல சூடா வந்திருப்பீங்க... சில்லுன்னு மோர் குடிங்க..." என்றவள் அவர் மோர் குவளையை வாங்குவதற்குள் கையை விட்டிருந்தாள்...
அது அவரின் கால்சட்டையை நனைத்தது... வேண்டுமென்றே அவ்வாறு செய்தவள், ஒன்றுமறியாதவள்போல், "அய்யோ அங்கிள்... சாரி அங்கிள்.. நீங்க கிளாஸை பிடிச்சிட்டீங்கன்னு நெனச்சி விட்டுட்டேன். எக்ஸ்ட்ரீம்லி சாரி அங்கிள்..." என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள்...
அங்கிருந்த அனைவருக்கும் இது தெரியாமல் கைதவறி நிகழ்ந்த தவறு என்றே தோன்றியது...
காசிலிங்கமோ என்ன செய்வது என்று புரியாமல் பார்க்க, யாழினியோ, "அங்கிள்... அந்தப் பக்கம் 'வாஷ் ரூம்' இருக்கு... 'க்ளீன்' பண்ணிக்கிட்டு வாங்க... பேச்சியக்கா... அங்கிள்கு ஒரு துண்டு எடுத்துக் குடுங்க" என்று இருவரையும் அவ்விடத்தைவிட்டு நகர்த்தினாள்...
அவர்கள் அங்கிருந்து நகர்ந்ததும், பாண்டியனின் அருகில் வந்தாள்...
ஏற்கனவே, காசிலிங்கம் தன் மகளுக்கு கிராமம் என்றால் பிடிக்காது, கிராமத்து வாழ்க்கையை அவள் விரும்பாட்டாள் என்று கூறியதில் கடுப்பாகியிரு்தவன், யாழினி செய்த செயலால் அவளை முறைத்துக் கொண்டிருந்தான்...
அவள் வேண்டுமென்றேதான் அவ்வாறு செய்தாள் என்பது அவனுக்கு மட்டும் புரிந்திருந்தது...
முறைத்தவன் அருகில் வந்தவள், அவனுக்கு மட்டும் கேட்கும்படி "மாமோய்... என்னை வெச்சிக்கிட்டே வேற பொண்ண பாக்கறீங்களா கல்யாணத்துக்கு? நான் அப்ப சொன்னதுதான்.... மறுபடியும் சொல்றேன்... நல்லா கேட்டுக்கோங்க.... ஒரு தடவை உங்களை விட்டுக் கொடுத்துட்டு நான் ரொம்பவே கஷ்டத்த அனுபவிச்சிட்டேன்... இனி யாருக்காகவும் எதுக்காவும் உங்கள விட்டுக் கொடுக்கமாட்டேன்... நம்ம கல்யாணத்த யாராலயும் தடுக்க முடியாது... உங்களாலயும் நிறுத்த முடியாது... புரிஞ்சிதா.." என்று சவால் விட்டாள்...
அதில் அவன் கோவம் இன்னும் தலைக்கேற, அடிக்குரலில் அடக்கப்பட்ட கோவத்துடன், "இம்புட்டு பேச்சு பேசற அளவுக்கு உனக்கு நெஞ்சு தெகிரியம் வந்துடுச்சா? இப்ப சொல்றேன் கேட்டுக்க... நான் பாத்த இந்த பொண்ண ... யாருக்கு புடிக்கிதோ இல்லையோ... கவலயில்ல எனக்கு... அவ கழுத்துல தாலிகட்டி கூட்டிக்கிட்டு வர்றேன் பாருடி..." என்று சீறினான்....
அங்கிருந்த மற்றவர்களுக்கு இவர்கள் பேசிக்கொள்வது சரியாக கேட்காவிடினும், ஏதோ அவர்களுக்குள் வாக்குவாதம் நடைபெறுகிறது என்பதை மட்டும் புரிந்துகொண்டனர்....
அதற்குள் காசிலிங்கம் தன் கால்சட்டையை சுத்தப்படுத்திக் கொண்டு வந்துவிட்டார் ... பாண்டியன் அவரிடம் ஏதோ கூற போக, அதற்குள் யாழினி முந்திக்கொண்டு அவர் அருகில் சென்று நின்று, "சாரி அங்கிள்.... வெரி வெரி சாரி அங்கிள்..." என்றாள்....
அதற்கு அவரோ, "ஐயோ என்னம்மா நீ? கொஞ்சம் மோர் துணியில பட்டதுக்கு இத்தன மொற சாரி கேக்குற... விடும்மா...பராவாயில்ல ..." என்றார்...
"இல்ல அங்கிள்... நான் அதுக்காக சாரி கேக்கல அங்கிள்" என்றாள்...
அதில் அவளை புரியாமல் பார்த்தவர், "பின்ன வேற எதுக்குமா?" என்றார்
"அதுவந்து அங்கிள்... அதை எப்படி சொல்றதுன்னு தெரியல... சொன்னா நீங்க கஷ்டப்படுவீங்க... ஆனா சொல்லாமலும் இருக்க முடியல..." என்று கையை பிசைந்து கொண்டு நின்றாள்...
அவள் வார்த்தையில் அங்கிருந்த அனைவரும் குழம்பி நின்றனர்... பாண்டியன் உட்பட...
அவள் வார்த்தைக்காக காத்திருக்க பொறுமையில்லாதவர், "எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுமா" என்றார்...
"ம்ம்ம்... சொல்றேன் அங்கிள்..." என்றவாறு முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு, "நீங்க உங்க பொண்ணு கல்யாண விஷயமா பேச வந்தீங்க... ஆனா அபசகுணமா மோர் கீழ விழுந்திருச்சி... நல்ல விஷயம் பேசும்போது இப்படி ஆச்சுன்னா... அந்த காரியம் உருப்படாதுன்னு சொல்லுவாங்க... அதையும் மீறி கல்யாணம் பண்ணினா... அது நல்லாவே அமையாதுன்னு சொல்லுவாங்க... நீங்க வேற... ஒண்ணே ஒண்ணு... கண்ணே கண்ணுனு கருவேப்பில கொத்து மாதிரி.... ஒரு பொண்ணப் பெத்து வெச்சிருக்கீங்க... அந்தப் பொண்ணு இந்த வீட்டுக்கு வாழ வந்தா என்ன ஆகும்னு யோசிச்சாலே பயமாயிருக்கு அங்கிள்.... எதுக்கும் ஒரு முறைக்கு ரெண்டு முறை யோசிச்சிப் பாருங்க அங்கிள்...." என்றவள் அவர் யோசிப்பதைப் பார்த்து, தன் பின்பக்கம் நின்றிருந்த தன் பாட்டியைப் பார்த்து கண்ணடித்துவிட்டு, "அப்படிதானே பாட்டி" என்றாள்....
இதுவரை அவள் ஏன் அப்படி பேசினாள் என்பது அனைவருக்கும் புரிய, பாட்டியோ, "ஆமாந்தாயீ..." என்று அவளுக்கு ஒத்து ஊதினார்...
தன் மகள் மற்றும் மனைவியின் அன்றாட அத்தியாவசிய (அநாவசிய) செலவுக்கு பணம் ஈட்ட முடியாமல் விழி பிதுங்கி கடனில் தத்தளிக்கும் வேளையில், கோவிலில் தன்னைப் பார்த்து நலம் விசாரித்த பாண்டியன், அவர் மகளுக்கு வரன் தேடுவதைப் பற்றிக் கூறியவுடன், யாழினி மீதிருந்த கோவத்தில் அவன் அவரின் மகளை திருமணம் செய்ய ஒப்புக் கொண்டான்...
அவனின் பணபலம் ஏற்கனவே அவருக்கு தெரியுமாகையால், தன் மகளை இவனின் பணத்தை காட்டி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து, திருமணம் முடிந்த பின் சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு சென்னைக்கு அவனுடன் சென்று சுகமாக காலம் முழுதும் வாழ்ந்துவிடலாம் என்று எண்ணி வந்திருந்தார் காசி...
என்னதான் பணத்திற்காகப் பார்த்தாலும் தன் மகளின் திருமண வாழ்க்கை நன்றாக அமையாமல் போகும் என்ற வார்த்தை வரும்போது ஒரு தகப்பனாக யோசிக்க ஆரம்பித்துவிட்டார்...
"தம்பி..தப்பா நெனச்சிக்காதீங்க... இந்த பொண்ணு சொல்றதுலயும் அர்த்தமிருக்கு... இந்த கல்யாணப் பேச்ச இத்தோடு நிறுத்திக்குவோம்... நான் வர்றேன் தம்பி..." என்று பாண்டியிடம் உரைத்தவர், மற்றவர்களைப் பார்த்து, "நான் கௌம்பறேங்க..." என்று கூறிவிட்டு, பாண்டியன் பேச வந்ததை கேட்காமல் வெளியேறிவிட்டார்...
வெளியே செல்லும் அவர் முகத்தையேப் பார்த்திருந்தவன் கோவத்துடன் திரும்பினான்...
தன் தாயையும் அப்பத்தாவையும் கோபத்துடன் பார்த்தவன், "உங்க புள்ள நான் உங்களுக்கு முக்கியம் இல்லாமப் போயிட்டேன்... இப்ப வந்த இவளுக்கு நீங்க சப்போர்ட் பண்றீங்க... எல்லாரும் கூட்டு சேந்துதேன் இந்த வேலையெல்லாம் பாக்குறீங்கள்ல.. அப்பா நீங்களும் அவங்க கூட சேந்துக்கிட்டீங்களா? தாத்தா நீங்களுமா?" என்றான் ஆற்றாமையுடன்...
வேதநாயகம் மிகவும் பொறுமையாக, "ஐயா, ஏன்யா அப்புடி சொல்லுதே... இந்த ஒலகத்துல ஒன்ன விட வேற யாரும் எங்களுக்கு ஒசத்தியில்ல... நாங்க எது செஞ்சாலும் அது ஒன் நல்லதுக்காகத்தேன் இருக்கும்..." என்றுவிட்டு சில வார்த்தைகள் பேசிவிட்டு பாண்டியனின் தோளைத் தட்டிவிட்டு சாப்பிட அமர்ந்தார்...
அனைவரும் சாப்பிட அமர்ந்தனர்..
வடிவும் யாழினியும் சாப்பிட அமர்ந்ததும், பாண்டியன் முறைத்தவாறே, "நான் கெளம்புறேன்.. எனக்கு சாப்பாடு வேணாம்..." என்றுவிட்டு எழும்பி நகரப் போகவும் தன் கால்களை நீட்டி அவன் கால்களைத் தட்டிவிட்டாள் யாழினி.. கீழே விழப்போனவன், தட்டுத்தடுமாறி நேராக நின்று, அவளை முறைத்து ஏதோ பேச வருவதற்குள், "ஐயோ, மாமா... சாரி மாமா.. தெரியாம கால் பட்டுடுச்சி... மன்னிச்சிக்கோங்க..." என்றுவிட்டு, "ஏன் மாமா.. பசிக்கலியா? இல்ல நான் எல்லாத்தையும் காலி பண்ணிடுவேன்னு நெனச்சிக்கிட்டு வேணாம்னு சொல்லுறீங்களா? அதெல்லாம் உங்களுக்கு பங்கு வெக்காம சாப்பிட்டுட மாட்டேன்... உக்காருங்க..." என்று கூறிவிட்டு அவனுக்கு வழிவிடாதவாறு நின்றுகொண்டாள்...
வேல்முருகனும், "பாண்டி.. என்ன பழக்கம் இது... சாப்பிட ஒக்காந்துட்டு, சாப்புடாம எழுந்து போறது? ஒக்காந்து சாப்பிட்டுட்டு போ..." என்று அதட்டினார்...
தன் குடும்பத்தாரின் முன்னிலையில் எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக அமர்ந்தான் சாப்பிட... அவன் அருகில் அமர்ந்த யாழினி, அவனை சாப்பிடவிடாமல் சேட்டைகள் செய்து கொண்டிருந்தாள்.. அவனுக்கு வைத்த பதார்த்தங்களை "எனக்கு இது புடிக்கும் நான் கொஞ்சம் எடுத்துக்கறேன்" என்று கூறிவிட்டு எடுத்துக்கொண்டாள்.. அவளின் சேட்டைகளை தன் குடும்பத்தினருக்காக தாங்கிக்கொண்டவன், ஏதோ பெயருக்கு சாப்பிட்டுவிட்டு எழுந்து சென்றுவிட்டான்...
அவன் கை அலம்பும் நேரம், அவன் பின்னால் சென்றவள், அவன் அருகில் நின்று, "மாமோய்.... இனி யாழினி தொல்லையை சமாளிச்சிதான் ஆகணும்... விடாது கருப்பு மாதிரி உங்கள விடாம தொரத்திக்கிட்டேதான் இருப்பேன்... இனி இன்னொரு முறை கல்யாணத்துக்குப் பொண்ணு பாத்தீங்கன்னா... இன்னைக்கு மாதிரி சில்லுன்னு மோர் ஊத்தமாட்டேன்... சுடச்சுட காஃபி தான் ஊத்துவேன்... மனசுல வெச்சிக்கோங்க... அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் மாமா... இனி இந்த யாழினி இங்கேயே, இந்த வீட்டுலயே தங்குறதா முடிவு பண்ணிட்டா... அதனால கொஞ்சம் அலர்ட்டாவே இருங்க...." என்று கூறிவிட்டு நகர்ந்தாள்...
அதில் மேலும் கோபமுற்றவன், 'இவ போற வரைக்கும் இந்த வீட்டுப் பக்கம் வரவே கூடாது' என்று மனதில் நினைத்துக் கொண்ட அடுத்த நொடி அவன் காதருகில், "அப்படியெல்லாம் முடிவு எடுத்துடாதீங்க மாமோய்... அப்புறம் ராமர் இருக்குற இடம்தான் சீதைக்கு அயோத்திங்கற மாதிரி... நீங்க எங்க இருக்கீங்களோ அங்கயே நானும் வந்துடுவேன்..." என்று கூறிய யாழினி, அவன் கன்னத்தை தன் விரலால் சுண்டிவிட்டு, கண்ணடித்துவிட்டு, "மாமோய்... வர்ட்ட்டா..." என்று கூறிவிட்டு ஓடிவிட்டாள்...
"இவள..." என்று பல்லைக் கடித்தவன், "ச்சே" என்று தலையை உலுக்கிக்கொண்டு வண்டியைக் கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டான்...
அவன் சென்றதும், அனைவரையும் அழைதனதாள் யாழினி...
"தாத்தா... பாட்டி... அத்தை....மாமா... உங்க எல்லாருக்கும் நான் பண்றது கோவத்தக் கொடுக்கலாம்... ஆனா...மாமாக்கிட்ட கெஞ்சிக் கேட்டா, எதுவும் வேலைக்கு ஆகாது... அதான் இப்படி அதிரடியா நடந்துக்கறேன்... என் மேல முழு நம்பிக்கை வெச்சி நான் பண்ணுறத கண்டுக்காம விட்ருங்க.. அதே மாதிரி உங்களுடைய முழு சப்போர்ட்டையும் எனக்கு குடுங்க... மத்த எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்..." என்று கூறினாள்....
அனைவரும் ஒரு மனதுடன் அவளின் வாரத்தையை ஏற்றுக்கொண்டனர்...
"நீ வடிவை அந்த புள்ள வீட்டுல விட்டுட்டு உன் துணியெல்லாம் இங்கன கொண்டாந்துரு ... பக்கத்துலயே இருந்தாதான் அவன உன் வழிக்கு கொண்டார முடியும்...." என்று வள்ளியம்மை கூறியதை அனைவரும் ஆமோதிக்கவும் அவளை அழைத்துக்கொண்டு கிளம்பினாள்...
இங்கு வண்டியைக் கிளப்பிக்கொண்டு வந்தவன், கோவத்தில் என்ன செய்வதென்று புரியாமல், வடிவேலுவுக்கு அழைத்தான்... அப்பொழுதுதான் வடிவேலுவைத் திட்டியது நினைவிற்கு வந்தது பாண்டிக்கு.... தன் தலையில் அடித்துகொண்டவன் அலைபேசியை வெறித்துப் பாா்த்தான்...அதற்குள் மறுமுனை எடுக்கப்பட்டு, "சொல்றா மாப்ள...." என்றான் வடிவேலு... அதில் நிம்மதியுற்றவன், "எங்ஙன இருக்கடா?" என்று கேட்டுவிட்டு அவன் இருக்கும் கம்மாய்க்கரைக்கு சென்றான்...
பாண்டியனைக் கண்டதும், தலையை குனிந்தவாறே எழுந்து நின்ற வடிவேலு , "என்னிய மன்னிச்சிரு மாப்ள... உனக்கு நல்லது நடக்கும்னு நெனச்சிதேன்..." என்று இழுத்தவனை தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் பாண்டி...
"நான்தாண்டா மன்னிப்பு கேக்கணும்... உன்னிய பத்தி தெரிஞ்சிருந்தும் நான் அந்த வார்த்தைய உன்னிய பாத்து சொல்லியிருக்கக் கூடாது... அவ மேல இருந்த கோவத்த உன் மேல காட்டிப்புட்டேன்... மன்னிச்சிருடா..." என்றான் பாண்டி...
"விடு மாப்ள..." என்றான் வடிவேலு....
தோழர்கள் இருவரும் தங்களின் மனபாரம் நீங்கி சகஜ நிலைக்கு மாறிவிட்டிருந்தனர்...
ஒரு மணி நேரம் சென்றிருந்த வேளையில், வடிவேலுவுக்கு யாழினி அலைபேசியில் அழைத்தாள்...
அதே நேரம் பாண்டிக்கும் வேறொரு அழைப்பு வரவும் அதில் பேசிக் கொண்டிருந்தான்...
தன் தோழியின் வீட்டிற்கு சென்று அங்கிருப்பவர்களிடம் தன் நிலையைக் கூறிவிட்டு தன் துணிமணிகளை எடுத்துக்கொண்டு வண்டியில் வந்தவள், அவ்வண்டியை வடிவேலுவிடம் ஒப்படைப்பதற்காக அவனுக்கு அழைத்திருந்தாள்...
அவனும் தான் இருக்கும் இடத்திற்கு வரும் வழியைக் கூறிவிட்டு, ஊரில் உள்ள அனைத்து தெய்வங்களையும் வேண்டிக் கொண்டிருந்தான்...
அவன் எண்ணம்போலவே அவள் வண்டியை ஓட்டிவரும் போதே தூரத்திலேயே கண்டுவிட்டான் பாண்டி...
அவன் கோவத்துடன், "இவள..." என்று பல்லைக் கடிக்கவும், வடிவேலு, பாண்டியிடம், "மாப்ள... வண்டிய எங்கிட்ட குடுக்கதான் வருது அந்த புள்ள... வஞ்சிப்புடாதடா.." என்றான் கெஞ்சலாக...
அதற்கு, "வந்த வேலையை மட்டும் பார்த்துட்டு போனாக்கா.. நான் ஒண்ணும் பண்ண மாட்டேன்... இல்லன்னு வை...." என்ற பாண்டியிடம்., "இல்ல மாப்ள... அந்த புள்ள ஒண்ணும் பண்ணாது ... அதுக்கு நான் பொறுப்பு" என்றான்...
வடிவேலு கூறியதைப் போல் யாழினியும் அமைதியாக வந்து வண்டியை அவன் அருகில் நிறுத்திவிட்டு, "தேங்க்ஸ் அண்ணா..." என்று கூறினாள்...
அதற்கு மேல் அங்கிருக்கப் பிடிக்காதவனாய் பாண்டி, "மாப்ள கௌம்பறண்டா" என்று கூறிவிட்டு வண்டியைக் கிளப்பினான்...
அவன் எதிர்பாரா நேரம் அவன் வண்டியில் ஏறி அமர்ந்த யாழினி, "அண்ணா நானும் கௌம்பறேண்ணா..." என்று வடிவேலுவைப் பார்த்து கூறிவிட்டு, பாண்டியிடம், "நாம கௌம்பலாம் மாமா... " என்றாள் கூலாக...
அதில் வடிவேலுவைப் பார்த்து முறைத்தான் பாண்டி...
மூவரின் ரியாக்ஷன் என்னன்னு அடுத்த அத்தியாயத்துல பாக்கலாம்...