அத்தியாயம் 4 ...
3 வருடங்களுக்கு முன்...
பாண்டியன், தன்னை யாரும் 'மாமா' என்று அழைப்பதை முற்றிலுமாக வெறுத்துக்கொண்டிருந்த நேரம் அது...
இந்த விஷயம் தெரியாத அவன் உறவின் முறையில் மாமன் மகளாகிய ஒரு பெண் அவனிடம், "கோயிலுக்கு போய்ட்டு வந்தேன்.. பிரசாதம் எடுத்துக்கிடுங்க மாமா.." என்று கூறிய அடுத்த நொடி அவன் முகம் கோவத்தில் சிவந்து, அவள் கையிலிருந்த பிரசாதத்தை வாங்கி கீழே வீசி எறிந்தவன் வேகமாக அவள் கழுத்தைப் பிடிக்கப் போக, அதில் பயந்தவள், பின்னால் இரண்டடி எடுத்து வைக்க, அதில் இன்னும் கோபமுற்றவன், தன் அருகில் நின்றிருந்த வண்டியின் 'சைட் மிர்ரரில்' (Side Mirror) கையை ஓங்கிக் குத்தினான்... அதில் அதிலிருந்த கண்ணாடி உடைந்து அவன் கைகளைப் பதம் பார்த்தது...
கைகளில் இரத்தம் சொட்ட சொட்ட நின்றிருந்தவனைப் பார்த்த அப்பெண் பயத்தில் உறைந்துபோய் நின்றிருந்தாள்...
அனல் பறக்க ஒரு பார்வையை அவள் மீது வீசியவன் அவளிடம் "இன்னொரு வட்டம் 'மாமா'ன்னு கூப்புட்டன்னு வை.. அங்கனயே கொன்னு பொதச்சிருவேன் பாத்துக்க..." என்று உறுமிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்...
இதைப் பார்த்துக்கொண்டிருந்த அவனின் தாய்தான் அவனை சமாதானப்படுத்தி, அவனை வடிவேலுவுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்...
பயத்தில் முகம் வெளிறி கண்களில் நீர் வழிய நின்றிருந்த அப்பெண்ணிடம் சென்று, "பாப்பா... பயப்படாதம்மா... அவன் இப்பவெல்லாம் இப்புடித்தேன் நடந்துக்கிடறான்... நீ ஒண்ணும் மனசுல வெச்சிக்கிடாத பாப்பா... போ... போய்... மூஞ்சியக் கழுவிக்கிட்டு வீட்டுக்குப் போம்மா..." என்று கூறிய லஷ்மி, தன் மனதினுள், 'இவன் எப்பதேன் பழையமாதிரி ஆவானோ தெரியலியே? ஆத்தா மீனாட்சி.. நீதேன் அவனை மாத்தணும்...' என்று கோரிக்கையை வைத்துவிட்டு நகர்ந்தார்....
அந்நாளைய நினைவில் நின்றுகொண்டிருந்த மருதுவின் தோள்களைக் குலுக்கி நிகழ்காலத்திற்கு கொண்டுவந்தான் வடிவேலு...
"ஏலே... என்னாச்சிலே... பழச நெனச்சியோ?" என்று அவன் காதருகில் கேட்டான் வடிவேலு...
"ஆமாண்டா மாப்ள..." என்று கம்மிய குரலில் கூறினான் மருது...
இவர்களிருவரையும் கவனிக்காமல், அந்தப் பெண் சென்ற வழியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் பாண்டியன்...
"ஏலே மருது... அன்னைக்கு அப்புடி நடந்துக்கிட்டவேன், இப்ப இந்த புள்ள இம்புட்டுப் பேச்சு பேசிட்டு, இடிச்சிட்டு வேற போறாளே... சும்மா நிக்கானே... எப்புடிடா?" என்று மருது ரகசிய குரலில் கேட்க, "அதான் மாப்ள நானும் யோசிக்கிறேன்... இந்நேரம் அந்தப் புள்ளய இழுத்து நிறுத்தி நாளு அறை விட்ருப்பானே... ஏன் செய்யல?" என வடிவேலுவும் பதிலுக்கு ரகசிய குரலில் பேசினான்...
"ஏண்டா... பாவம்டா அந்த புள்ள..." என்ற மருதுவிற்கு, "அடேய்.. அந்த புள்ள நேத்துலயிருந்து அவன்கிட்ட ஒரண்டை இழுத்துக்கிட்டுக் கெடக்கா... எப்ப என்ன செய்வான்னே தெரில இவன்... அவன் ஏதாவது அந்தப் புள்ளய செய்யறதுக்குள்ளார நாம ஏதாவது செஞ்சி அந்தப் புள்ளய இவன்கிட்டக்கயிருந்து காப்பாத்தியாகணும்..." என்றான் வடிவேலு...
அதை ஆமோதித்தான் மருது....
சில நிமிடங்களுக்குப் பிறகு, ஏதோ யோசனை செய்த வடிவேலு, பாண்டியனை தன் பக்கம் திருப்பி, "மாப்ள" என்றான்...
அதில் தன் சுய உணர்வு பெற்ற பாண்டியன், "அவளை கொல்லாம விடமாட்டேண்டா... அவள கொன்னாத்தேன் எங்கோவம் அடங்கும்..." என அடிக்குரலில் கர்ஜித்தான்... அவன் கோவத்தில் கத்திக் கொண்டிருந்தாலும் தன் சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்து மருதுவிடம் கொடுக்க மறக்கவில்லை... அவனின் செய்கை புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த இருவரும், 'இவன் கோவத்துல கத்துறான்... ஆனா, அந்தப் பொண்ணு சொன்னதுக்காக காசை குடுக்கறான்... என்ன ஆச்சி இவனுக்கு?' என மனதினில் நினைத்துக் கொண்டிருக்கும்போதே, மீண்டும் கத்த ஆரம்பித்தான்.
"எம்புட்டு நெஞ்சழுத்தம் இருந்தா இம்புட்டு திமிரான காரியத்தை செய்வா அவ?" என்று எகிறிக் கொண்டிருந்தான் பாண்டியன்...
"பாண்டி" என்று சற்றே அதட்டிய குரலில் அழைத்த வடிவேலு, "இங்கிட்டு நின்னு எதுவும் பேச வேணாம்... கடையில வியாவாரம் கெட்டுப் போயிடும்... வா வெளில போயி பேசிக்கலாம்..." என்று அவனை இழுத்துக்கொண்டு செல்ல முயன்றவன், மறுபடி ஏதோ யோசனை செய்துவிட்டு, "ஏலே மருது... அந்த புள்ளய எங்கிட்டோ பார்த்த நியாபகமா இருக்குலே... உனக்கு அப்புடி ஏதாவது தோணுதா?" என்றான்...
மருதுவும் சிறிது யோசனை செய்துவிட்டு, "ஆமாலே.... எனக்கும் அந்தப் புள்ளய எங்கிட்டோ பார்த்த மாதிரியில்ல இருக்கு.... ஆனா... எங்கிட்டுப் பார்த்தேன்னுதான் புடிபடல.." என்று தன் தாடையை தடவி யோசித்துக் கொண்டிருந்தான்...
இவர்கள் இருவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டே அவர்களை முறைத்தவாறே, தன் மார்புக்குக் குறுக்கே இரு கைகளையும் கட்டியவாறு தோரணையாக நின்றவன், அவர்களை இன்னும் அதிகமாக முறைக்க ஆரம்பித்தான்...
அதைக் கண்ட மருது, வடிவேலுவின் தோளைத் தன் தோள்களால் இடித்துவிட்டு பாண்டியனை கண்களால் காட்டி, "மாப்ள... முறைச்சே நம்மள பொசுக்கிடுவான் போல... எங்கிட்டாவது அவன கூட்டிக்கிட்டுப் போய் மலையெறக்கு..." என அடக்கிய குரலில் கூறினான்...
அவன் வார்த்தைகளில் பாண்டியனைப் பார்த்த வடிவேலு, 'அடியாத்தி.... இவன் என்ன இப்புடி மொறைக்கிறான்' என மனதில் நினைத்துக்கொண்டவன் சிறிது மனதிடத்தை வரவழைத்துக் கொண்டு, "இல்ல மாப்ள... நெசமாவே அந்தப் புள்ளய எங்கிட்டோ பார்த்த நியாபகமாவே இருக்கு... அதேன் கேட்டேன்... சாரி மாப்ள.. வா போலாம்..." என்று அவனை இழுத்தான்...
தன்னை இழுக்கும் தன் நண்பனின் கைகளை தடுத்து நிறுத்தியவன், அழுத்தமான வார்த்தைகளை உதிர்த்தான்....
"அவளை நீங்க வேணும்னா மறந்திருக்கலாம்.... ஆனால் என் கட்டை வேகற வரைக்கும் நான் மறக்க மாட்டேன்... நேத்து கபடி நடக்கும்போது பேசினது அவதான்னு நான் அப்பவே கண்டுபுடிச்சிட்டேன்... அவ பாடினாலே ஒரு பாட்டு.... அப்பவே அவதான்னு மறுபடியும் ஊர்ஜிதம் பண்ணிக்கிட்டேன்... என் வாழ்க்கையவே பொறட்டிப் போட்டவளாச்சே அவ... அவளை நீங்க மறந்தாலும் நான் மறக்க மாட்டேன்லே... மறக்கக்கூடிய காரியமா அவ எனக்குப் பண்ணினது? நான் இப்ப இப்புடி நிம்மதி இல்லாம சுத்தரதுக்கு காரணமே அவதானே... அவளைக் கண்டாலே ஒடம்பு முழுக்க பத்திக்கிட்டு எரியுது..." என்று கண்ணில் கோபத்துடனும் வார்த்தையில் வெறுப்புடனும் பேசிவனின் பேச்சில் இருவருக்கும் ஏதோ ஒன்று புரிய ஆரம்பிக்க, இருவரும் ஒரு சேர, "மாப்ள... அப்ப அந்தப் புள்ள... அ...வ...ளா...?" என்று திக்கித் திணறிக் கேட்டு முடித்தனர்..
அதில் கசந்த புன்னகை ஒன்றை இருவருக்கும் வீசியவன், "அவளேதான்..." என்று அழுத்தமாகக் கூறிவிட்டு, கண்களை அழுந்த மூடிக்கொண்டு, ஆழ்ந்த மூச்சொன்றை இழுத்துவிட்டு, "ஸ்ரீ யாழினி... " என்று முடித்தான்...
அவனின் வார்த்தையில் ஸ்தம்பித்து நின்ற இருவரின் மனதிலும், 'சொக்கநாதா... இனி என்ன நடக்கப் போவுதோ...' என எண்ணிக் கொண்டிருந்தனர்....
ஸ்ரீ யாழினி...
இருபது வயது நிரம்பிய பி.எஸ்ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி...
இடைவரை நீண்ட அடர் கூந்தல், மனம் நினைப்பதை படம்பிடித்து வெளிப்படுத்தும் அழகிய விழிகள், கோபம் வந்தால் சிவக்கும் கூர்மூக்கு, அளவான அழகான உதடுகள், நல்ல சிகப்பு நிறம், பெண்களுக்கான சராசரியான உயரம், பார்த்த அடுத்த ஐந்து நிமிடங்களில், தன்னைச் சுற்றியுள்ளவர்களை தன் தோழமைகளாக்கிக் கொள்ளும் பேச்சு, சுறுசுறு பட்டாசாய் வார்த்தைகள், மொத்தத்தில் ஆளை அசத்தும் அழகிதான் நம் ஸ்ரீயாழினி...
பிறந்தது, படித்து வளர்ந்தது எல்லாம் சென்னை... அம்மா, அப்பா, ஒரு மூத்த சகோதரி என்ற அளவான குடும்பம் அவளுடையது...
அக்கா, தங்கைகள் இருவரும் அவர்களின் பெற்றோருக்கு இளவரசிகள்... தாய், தந்தையாகப் பழகாமல், தோழன் தோழியாகப் பழகுபவர்கள் தங்களின் பெற்றோர்களாகக் கிடைக்கப்பெற்றதில், மகள்கள் இருவரும் அதிர்ஷ்டசாலிகளே... மகள்கள் இருவருக்கும் தங்களின் பெற்றோர்தான் முதல் நண்பர்கள்... எதையும் அவர்களிடம் மறைத்ததில்லை... அந்த அளவிற்கு பாசத்துடன் கூடிய நட்போட்டம் நால்வருக்குள்ளும் உண்டு...
வயிற்றுப் பிழைப்பிற்காக தன் சொந்த ஊரான மதுரையை விட்டு தன் மனைவியுடன் சென்னைக்கு சென்றவர், அங்கேயே சிறு பழக்கடை ஆரம்பித்து நடத்தி வந்தார்... தன் அயராத உழைப்பினாலும், தன் மனையாளின் ஊக்குவிப்புடனும் மேலும் மேலும் உயர்ந்து, இன்று "மதுரக் கனிகள்" என்ற பெரிய அளவிலான பல கிளைகளைக் கொண்ட பழங்கள் விற்பனையகத்தை நடத்தி வருகிறார் யாழினியின் தந்தை... சென்னை மட்டுமல்லாது, தமிழகத்தின் நான்கு பிற மாவட்டங்களிலும் கிளைகள் சிறப்பாக இயங்கி வருகிறது... தாய் இல்லத்தரசி... யாழினியின் தமக்கையைப் பற்றி பிறகு தெரிந்துகொள்வீர்கள்...
பாண்டியனை இடித்துவிட்டு அங்கிருந்து ஓடியவள், சற்று தூரம் ஓடிச் சென்றுவிட்டு, அவன் பார்வையில் இருந்து மறையும்படியாக நின்றுகொண்டு, 'ஐயோ, யாழினி... இருந்தாலும் உனக்கு இ்வ்ளோ தைரியம் ஆகாதுடி... இழுத்து நாலு அறை விட்டிருந்தா என்ன பண்ணியிருப்ப?' என்று தன் மனதினில் நினைத்தவள், 'இனி கொஞ்சம் தூர நின்னுதான் விளையாட்டை ஆடணும்... இ்ல்லன்னா சேதாரம் ஜாஸ்தியாயிடும்' என எண்ணினாள்...
அவன் தோளை உரசிய தன் தோளில் ஏற்பட்ட குறுகுறுப்பும், மேனியில் ஏற்பட்ட சிலிர்ப்பும் அவளுள் ஒரு படபடப்பை ஏற்படுத்தியது...
'இருந்தாலும் செமயாதான் இருக்கு இந்த ஃபீலிங்' என அவள் எண்ண, அவளின் மனசாட்சியோ, 'ஏன் இருக்காது? அறை வாங்காம தப்பிச்சு வந்திருக்கல்ல... அதான் மெதப்புல இருக்க... அடக்கி வாசி... இல்லன்னா... உன் ஆளு உன்னை அடக்கிடுவான்...' என எச்சரித்தது...
மனசாட்சியின் பேச்சில் எரிச்சலுற்றவள், 'இப்ப உன்கிட்ட கேட்டேனா? வாயை மூடிக்கிட்டு இரு... எதுவா இருந்தாலும் நான் சமாளிச்சிக்கிறேன்... இது எனக்கும் என் மாமனுக்கும் நடக்கற விஷயம்... இதுல நீ தலையிடாத... நீ உன் வேலையைப் பார்த்துக்கிட்டுப் போ' என்று அதட்டி அமைதிப்படுத்த முயற்சித்தாள்...
'அடியேய்... அறிவு கெட்டவளே... இதுதாண்டி என் வேலையே...' என அவளின் மனசாட்சி அவளை இடித்துரைக்க, 'அட ஆமாம்ல... எனக்கு மறந்தே போச்சி... சரி சரி... நீ உன் வேலைய பாரு... நான் என் வேலையப் பாக்குறேன்... ஆனா ஓவராப் பேசக்கூடாது ஓகே...' என்ற கூறியவளைப் பார்த்த அவளின் மனசாட்சி, 'இதெல்லாம் நாம சொன்னா அடங்காது... வாங்க வேண்டிய எடத்துல... வாங்க வேண்டியதை வாங்கினாத்தான் சரிப்படும்' எனக் கூறிவிட்டு போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்தேவிட்டது...
அங்கே பாண்டியனோ இன்னும் உடல் இறுக நின்றிருந்தான்...
அவன் அருகே தயங்கி தயங்கி வந்து, அவன் தோள்களில் கைவைத்த வடிவேலு, "ஏலே மாப்ள..." என்றான் தண்மையாக...
"என்னலே" என்று அடிக்குரலில் சீறினான் பாண்டியன்...
"இல்லலே... நீ எதுவும் டென்ஷன் ஆகாதலே... அந்தப் புள்ளயப் பார்த்து நான் பேசிக்கிடுதேன்... அந்தப்புள்ள இனி உன் பக்கமே வராத மாதிரி நான் பாத்துக்கிடுதேன்... சரியா" என்றான் ஆதரவாக...
நண்பனின் பேச்சில், அவனை ஏற இறங்க பார்த்தவன், "யாருலே? நீ போய் பேசப்போறியோ? கேட்டுக்கிடுவாளா அவ? அவ என்னியப் புடிச்ச ஜென்மசனிலே... விடமாட்டா... இதுக்கு நானேதேன் பரிகாரம் பண்ணனும்... உங்களால ஒண்ணும் முடியாது...." என்று இறுகிய குரலில் கூறியவன், "அடுத்தவட்டம் அவளை நான் எங்கிட்டு பாக்குறனோ, அங்கனயே குழிதோண்டிப் பொதச்சிப்புடுறேன்..." என்று கூறிவிட்டு தன் முறுக்கு மீசையை முறுக்கியவாறு கடையை விட்டு வேகமாக வெளியே சென்றுவிட்டான்....
இங்கே யாழினி செய்த அனைத்தையும் பார்த்தவாறே அவளருகில் வந்த ஒருத்தி அவள் தோளில் கை வைத்தாள்...
அதில் அதிர்ந்து அரண்டு திரும்பியவள், அங்கிருந்தவளைப் பார்த்ததும், "அடியே.. வடிவு... இப்பிடியா வந்து பயமுறுத்துவ? இந்நேரம் எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்திருக்கும்" என்றவளை முறைத்துக் கொண்டிருந்தாள் வடிவு எனும் வடிவழகி... யாழினியின் தோழி...
"அடியேய் நேத்து நீ பண்ணுன காரியத்துக்கே அவுக உன்னை தேடிப்புடிச்சு அறையாம விட்டதே பெருசு... இதுல இன்னைக்கு என்னாடான்னா... இந்த வேலை பாத்துட்டு வார நீ... ஏண்டி இப்புடி செஞ்சித் தொலையுற? உன்னால என் கதி என்ன ஆகப் போகுதுன்னு தெரியல... உங்கிட்ட அந்த விஷயத்தை சொன்னது தப்பாப் போச்சு... எல்லாம் என்னை சொல்லணும்... உங்கிட்டப் போய் சொல்லி வெச்சேன் பாரு... நீ மட்டும் என் வீட்டு விருந்தாளின்னு பாண்டி அண்ணனுக்குத் தெரிஞ்சிதுன்னு வெய்யி... நான் செத்தேண்டி..." என்று புலம்பிக் கொண்டிருந்தாள் வடிவழகி...
வடிவழகி... பெயருக்கேற்றார்போல் அழகி... மதுரைக்கே உரித்தான கிராமத்துக் கருப்பழகி... தாய் தந்தையரை ஒரு வாகன விபத்தில் இழந்தவள், சென்னையில் இருந்த தன் அண்ணன் குடும்பத்துடன் வசித்து வந்தாள்... யாழினியும் வடிவழகியும் வகுப்புத் தோழிகள்... மதுரைக்காரி என்பதாலேயே யாழினி இவளிடம் முதலில் நெருக்கம் காட்டினாள்... ஆனால், போகப்போக அவளின் வெள்ளந்திப் பேச்சும், அக்கறையான வார்த்தைகளும், பாசமான பார்வைகளும் அவளை முழுமனதுடன் தன் தோழியாக ஏற்றுக் கொள்ள வைத்துவிட்டது...
யாழினியின் குடும்பத்தில் இவளும் ஒருத்தி என்கி்ன்ற அளவுக்கு அவர்களின் தோழமை வளர்ந்து நின்றது...
தங்களின் கல்லூரிப் படிப்பை தற்பொழுதுதான் முடித்திருந்தார்கள்... இத்தனை நாட்கள் ஒன்றாக இருந்துவிட்டு, திடீர் பிரிவை ஏற்க முடியாத வடிவு, "அம்மு... என்னால உன்னைவிட்டுப் போக முடியலடா... என் படிப்பு முடிஞ்சதும், அண்ணேன் வேற எனக்கு கல்யாணத்தை முடிச்சிடணும்னு ஒத்தக் காலுல நிக்கறாரு... கல்யாணங்காட்சின்னு ஆகி, புள்ளக்குட்டிக பொறந்துடுச்சின்னா.. அப்புறம் நாம பாத்துக்கிட நேரம் அமையாமப் போனாலும் போவும்... அதனால நான் அடுத்த வாரம் மதுரைக்குப் போவும்போது நீயும் எங்கூட வாயேன்.... ஒரு பத்து நாள் ஒண்ணா இருந்துட்டு வரலாம்டா... ப்ளீஸ்டா..." என்று தன் தோழியிடம் கெஞ்சியவள், "அப்பா... அம்மா... ப்ளீஸ்... எங்கூட அனுப்பி வெக்கறீங்களா" என்று யாழினியின் பெற்றோரிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்...
பாவம் அவளுக்கு என்ன தெரியும்? முதலில் இருந்தவர்கள் போல் இருந்திருந்தால், யாழினியை பிரிந்திருக்க முடியாமல் அனுப்பியிருக்க மாட்டார்கள்... ஆனால் இப்பொழுதோ அவளை சுமையாக நினைக்கும் பெற்றவர்களாக ஆகிவிட்டனரே... வடிவுக்கு இது எதுவும் தெரியாதவண்ணம் பாரத்துக் கொண்டிருந்தாள் யாழினி... அதுமட்டுமல்லாமல், வடிவழகியின் பெற்றோர் உயிருடன் இல்லை என்பது தெரிந்ததால், யாழினியின் பெற்றோர் அவளைத் தன் மகள்போல் நடத்தினார்கள்... அந்த உரிமையில்தான் இப்பொழுது கெஞ்சி கொஞ்சிக் கொண்டிருந்தாள் வடிவு...
"உன் இஷ்டம் வடிவு" என்று கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்கள் பெற்றவர்கள் இருவரும்...
சம்மதம் கிடைத்த மகிழ்ச்சியில் வடிவு யாழினியை அணைத்துக்கொண்டு, "அம்மு... எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குடா... அடுத்த வாரம் நாம ரெண்டுபேரும் சேர்ந்து ஊருக்குப் போறோம்... எல்லாம் தயாரா வெச்சிக்க... நாம ட்ரெயின்ல போயிடலாம்... எப்படியும் உன்னைக் கூட்டிக்கிட்டுப் போகணும்னு முடிவு பண்ணித்தேன் நான் மொதல்லயே டிக்கட் புக் பண்ணிட்டேன்... அடுத்த வாரம் பார்ப்போம்... நான் கௌம்புறேன் இப்ப..." என்று கூறிவிட்டுக் கிளம்பிவிட்டாள்...
தோழி சென்ற திசையைப் பார்த்திருந்தவள், அவள் தலை மறையவும், இவ்வளவு நேரமாக அடக்கி வைத்திருந்த அழுகை பீறிட்டு வெளியே வந்தது...
தன் அறைக்கு சென்று தாழிட்டுக்கொண்டு ஒரே மூச்சாக அழுது தீர்த்தவள், அருகிலிருந்த தன் குடும்பத்தாருடன் இருக்கும் புகைப்படத்தைக் கையில் வைத்துக்கொண்டு, "ஏம்மா... உங்களுக்கு என்னைப் புடிக்காமப் போச்சு? ஏம்ப்பா... உங்களுக்குக் கூட என்னைப் புடிக்கலியாப்பா? முழுசா மூணு வருஷமாயிடுச்சிப்பா நீங்க எங்கிட்ட பேசி... ஏம்ப்பா என்னை ஒதுக்கி வெச்சிட்டீங்க? என் மேல என்ன கோவம் இருந்தாலும் என்னை அடிச்சிடுங்கப்பா... பேசாம இருக்காதீங்கப்பா... என்னால தாங்க முடியலப்பா... நான் மதுரைக்குப் போகப் போறேன்பா... என் எதிர்காலத்தைத் தேடிப் போகப் போறேன் பா... அங்க நான் நெனைக்கறது நடந்தா உயிரோட இங்க வருவேன்... இல்லன்னா பொணமாத்தான் வருவேன் இங்க... அப்பவாச்சும் 'குட்டிம்மா'ன்னு கூப்புடுவீங்களாப்பா?" என அழுது கரைந்து கொண்டிருந்தாள்...
இது இவளுக்கு மூன்று வருடமாக பழகிப்போன ஒரு விஷயம்தான் என்றாலும், அது ஏற்படுத்தும் வலியின் அளவு மட்டும் கூடிக்கொண்டே போனதே தவிர குறைந்தபாடில்லை...
அந்நேரம் அவளின் அலைபேசி சிணுங்கவும், யாரென்று பார்த்தவளின் முகம் பிரகாசமாது... "அக்காஆஆஆஆ" என மெதுவாக வாய்விட்டு கூறியவள் அவசரமாக ஓடிச்சென்று முகத்தைக் கழுவிவிட்டு, அழுந்தத் துடைத்துக்கொண்டு வந்தாள்... அதற்குள் அழைப்பு நின்றுவிடவே, 'அக்கா... உன் மடியில படுத்துக்கிட்டு அழணும்போல இருக்குக்கா...' என்று மனதினில் நினைத்தவள், அது நடக்க வாய்ப்பில்லை என்ற நிதர்சனம் புரியவும், ஆழ்ந்த மூச்சொன்றை இழுத்துவிட்டுவிட்டு, அலைபேசியை எடுத்துக்கொண்டு மொட்டைமாடிக்கு சென்று சிறிது நேரம் தன் தமக்கையிடம் பேசிவிட்டு வந்தாள்... அக்காவிடம் பேசிய பிறகுதான் ஓரளவிற்கு மனம் நிம்மதியுற்றது... இங்கே நடப்பது எதுவும் தனது தமக்கைக்கு தெரியப்படுத்தமாட்டாள்... இருப்பினும் அவளிடம் சில நிமிடங்கள் பேசினால், தன் மனதிற்கு நிம்மதி கிடைப்பதை உணர்வாள்...
ஒரு வாரம் கடந்த நிலையில், வடிவு தன் அண்ணனுடன் எழும்பூர் இரயில் நிலையத்தில் காத்திருப்பதாகவும்... யாழினியை நேரே எழும்பூர் இரயில் நிலையத்திற்கு வருமாறும் கூறிவிட்டாள்...
தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு, வரவேற்பறையில் அமர்ந்திருந்த தன் பெற்றோரிடம் "நான் போய்ட்டு வர்றேன்மா.. நான் கௌம்பறேன்பா..." என்று கூறிவிட்டு, அங்கேயே நின்றிருந்தாள்...
எப்படியும் அவர்கள் வாயிலிருந்து எந்த வார்த்தையும் வரப்போவதில்லை என்பதை நன்கு உணர்ந்திருந்தும், ஏதோ ஒரு நப்பாசையில் நின்று கொண்டிருந்தாள்...
அவள் இ்ன்னும் அங்கேயே நிற்பதை உணர்ந்த அவளின் தந்தை, "ஏய்... மொதல்ல அவளை எங்கண்ணு முன்னாடியிருந்து கௌம்பச் சொல்லு... மூஞ்சியப் பார்க்கவேப் புடிக்கல..." என தன் மனைவியிடம் கத்தினார்...
"நீங்க ஏன் டென்ஷன் ஆகறீங்க? நீங்க கோவப்பட்டு உங்க ஒடம்பைக் கெடுத்துக்காதீங்க... எல்லாம் நம்ம தலையெழுத்து..." என்று தன் தலையில் அடித்துக்கொண்ட தன் தாயைப் பார்த்தவளுக்கு அழுகை வெளிவரப் பார்க்க, அதை கடினப்பட்டு அடக்கியவள், 'நான் பண்ணது தப்புதான்... ஆனா... இந்த அளவுக்கு என்னை வெறுத்துடுவீங்கன்னு நான் சத்தியமா கனவுலகூட நெனச்சிப் பார்க்கல... எனக்கு என்னோட பழைய குடும்பம் மீண்டும் கிடைக்காதா ஆண்டவா? அவங்களோட பாசம் எனக்கு இந்த ஜென்மத்துல கெடைக்கவே கெடைக்காதா?' என்று மனதினில் மருகியவள், 'இது எல்லாத்துக்கும் கூடிய சீக்கிரம் எனக்கு விடை கிடைச்சிடும்' என்ற ஓர் உறுதியை தன் மனதில் உருவாக்கிக் கொண்டவள், அவர்கள் இருவரையும் பார்த்து, "நான் போறேன்" என்று கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்தாள்...
ஏற்கனவே புக் செய்திருந்த 'கால் டாக்ஸி'யில் எழும்பூரை அடைந்தவள், வடிவுடன் சேர்ந்து மதுரைக்குக் கிளம்பிவிட்டாள் தன் எதிர்காலத்தைத் தேடி...
காலம் அவளுக்கு என்ன வைத்துக்கொண்டு காத்திருக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...