All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அன்பின் அதீதங்களில்..!" - கதைத் திரி.

Status
Not open for further replies.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் டியர்ஸ்..!

அன்பின் அதீதங்களில்..! அடுத்த அத்தியாயம் பதிஞ்சாச்சு.

உங்களின் தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள்.

வாரம் மூணு எபி கொடுக்க முயற்சி செய்றேன். எந்த நாள் நேரம் மட்டும் சரியா சொல்ல முடியலை. கொஞ்சம் பர்ஸ்னல் வேலைகள் இருக்கு. அது முடிஞ்சதும் ரெகுலர் நாட்களில் கொடுத்துடுவோம்.

கருத்துத் திரி:
Post in thread 'சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.' சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதீதம்-5


மறுநாள் காலையிலேயே ஆருத்ராவின் வீட்டு வாசலில் வந்து இறங்கினான் ராகவ். தன் அறையின் பக்கவாட்டில் அமைந்திருந்த பலகனியில் தன் ஈரக் கூந்தலை உலர்த்திக் கொண்டிருக்க, எதேச்சையாய் வெளியே எட்டிப் பார்த்தவள் அதிர்ந்து தான் போனாள்.


"ஐயோ.. இவனை யார் இங்கே வரச் சொன்னது? நான் தொலைஞ்சேன். ஏற்கனவே தாத்தா வாய்க்கு வந்ததெல்லாம் பேசுறார். இவனைப் பார்த்தால் இன்னும் என்னென்ன நடக்கப் போகுதோ?" எனப் பதற்றத்துடன் புலம்பியவள், தன் அறையிலிருந்து கீழே இறங்கி ஓட,


"ஆரு! எங்கே ஓடுற? அம்மா சேலை கட்டச் சொன்னாங்க டி!" என்றபடியே பின்னால் ஓடி வந்தாள் மஞ்சரி.


"மஞ்சு! நீ உள்ளே போ! நான் வர்ரேன். அம்மா கேட்டால், ரூமில் இருக்கேன்னு சொல்லு!"



"அப்படி அவசரமா எங்கே போற? அம்மா என்னைய தான் வையும்!"


"நான் ஒண்ணும் ஓடிப்போக மாட்டேன் டி! என் ஃப்ரெண்ட், அந்த எருமை சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கான். இருக்கிற தலைவலியில் இவன் வேற?" என ஆருத்ரா சொல்ல,



"யாரு.. ராகவ் தானே உன் ஃப்ரெண்ட்! எனக்கு இண்ட்ரோ கொடு ஆரு ப்ளீஸ்..!" என மஞ்சரி கேட்க,


"கொன்னுடுவேன் போடி!" என விரல் நீட்டி தங்கையை விரட்டினாள் ஆருத்ரா. திரும்பி திரும்பி பார்த்தபடியே மஞ்சரி நடக்க, அவசரமாய்ப் படிகளில் இறங்கி, தன் நண்பனை நோக்கி ஓடினாள் ஆருத்ரா.


நிதானமாய் வீட்டின் முன்புறத் தோட்டத்தை வேடிக்கைப் பார்த்தபடி, நடந்துவந்து கொண்டிருந்தவனின் முன்னால், மூச்சு வாங்க ஓடி வந்து நின்றாள் ஆருத்ரா.


"ஹாய் ஆரு! என்ன ஒரு இன்ஃபர்மேஷனும் காணோம். நான் மேரேஜ் முடிஞ்சுருக்கும்ன்னு நினைச்சேன் தெரியுமா?" எனச் சாதாரணமாய் அவன் வினவ,


"ராகவ்! நீ ஏன் இங்கே வந்த? எதுக்குடா வந்த?" எனக் கேட்டாள் ஆருத்ரா.


"என்ன விளையாடுறியா? நீ தானே வரச் சொன்ன? இப்போ என்னடான்னா எதுக்கு வந்தேன்னு கேட்கிற? இப்படி வந்தவனை வாசலிலேயே விரட்டுறதுக்குப் பேருதான் உங்க ஊரு விருந்தோம்பலா?" என அவன் கேட்க,



"எருமை.. பைத்தியம் மாதிரி உளறாதே டா! நான் எங்கே உன்னை வரச் சொன்னேன்.? என்கிட்டே இருந்து எந்தத் தகவலும், வரலைன்னா தானே வரச் சொன்னேன். நீ ஏன் இப்போ வந்த?" அவள் புரியாமல் கேட்க,


"நீ எதாவது கால் பண்ணி சொன்னியா? நைட் கிளம்பிடுவேன்னு சொன்ன, ஆனால் என்கிட்டே எதுவுமே சொல்லலையே? உன் ஃபோனை எடுத்து பாரு, எத்தனை தடவை கால் பண்ணிருக்கேன்னு..? வேறு வழியில்லாமல், உனக்கு எதாவது பிரச்சனையோன்னு பயந்து பதறி ஓடி வந்திருக்கேன். ஆனால் நீ என்னடான்னா என்னை விரட்டுறதில் தான் குறியா இருக்க?" எனச் சொன்னான் அவன்.


"ம்ப்ச்.. மறந்துட்டேன் ஸாரி டா! இப்போ நீ கிளம்பு.. நான் அப்பறமா கால் பண்ணி எல்லா விவரமும் சொல்றேன். இப்போ நீ இங்கிருந்து கிளம்பு. அவனை அவசரப்படுத்தினாள் அவள்.


"ஆரு.. இவ்வளவு தூரம் ட்ராவல் பண்ணி வந்தவனை, கிளம்புன்னு சொன்னால், எங்கே கிளம்புறது? எனக்கு இந்த மதுரையில் உன்னைத் தவிர யாரையும் தெரியாதும்மா.. என்னால் எங்கேயும் போக முடியாது.!" என அவன் மறுக்க என்ன செய்வதெனப் புரியாமல் திணறினாள் ஆருத்ரா.


"உனக்கு நான் எப்படிச் சொல்றது? இங்கே நம்ம ஃப்ரெண்ட்ஷிப்பை மிஸ் அண்ஸ்டாண்ட் பண்ணிக்கிறாங்க டா! அப்படி இருக்கும் போது, நீ இங்கே தங்கினால் நல்ல இருக்காது ராகவ்.!"


"ஓகே! எனக்குப் புரியுது. ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஷிப் தானே ஆரு.. அதைக் கூடப் புரிஞ்சுக்க மாட்டாங்களா? இது தெரியாமல், நான் தான் அவசரப்பட்டு வந்துட்டேன் போல, இப்போ என்னைப் பார்த்தால் உன்னைத் தப்பா நினைப்பாங்க தானே? ஐ அம் ஸாரி ஆரு.. நான் யோசிக்காமல் கிளம்பி வந்துட்டேன். நீ கால் பண்ணலைன்னதும், கொஞ்சம் பயம் வந்துடுச்சு. கட்டாயக் கல்யாணம் எதுவும் பண்ணி வச்சிடுவாங்கன்னு தான், அவசரமாய் வந்தேன். சரி! நான் கிளம்பறேன். இங்கே நல்ல ஹோட்டல் எங்கே இருக்கும்ன்னு சொல்லு. கொஞ்சம் ரெஃப்ரெஷ் ஆகிட்டு, ரெஸ்ட் எடுத்துட்டு கிளம்பறேன்.!" எனத் தன் தோழியைப் புரிந்துக்கொண்டு அவன் பேச,



"ஐ அம் ரியலி ஸாரி ராகவ்! என் ஊருக்கு என் வீட்டுக்கு வந்துட்டு, உன்னை உள்ளே கூடக் கூப்பிட முடியலையேன்னு எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. குற்றவுணர்ச்சியா இருக்கு டா ஸாரி..!" என மனம் வருந்தி சொன்னாள் ஆருத்ரா.



"போதும்.. உன் ஃபீலிங்ஸெல்லாம் ஓரம் கட்டி வை! இந்தக் கல்யாணத்தை நிறுத்த போறேன்னு சொன்ன, என்னதான் ஆச்சு? உங்க வீட்டில் ரொம்ப ஃபோர்ஸ் பண்ணுறாங்கன்னா சொல்லு, நாம போலீஸ் ஹெல்ப்பை கேட்கலாம். நம்ம பசங்களே டிப்பார்ட்மெண்ட்டில் இருக்காங்க!"



"தெ.. தெரியலை டா! என் வாழ்க்கையில் என்ன நடக்குது? ஏன் இப்படி நடக்குது எதுவுமே எனக்குப் புரியலை டா.! எனக்கு ஒண்ணே ஒண்ணு மட்டும் தெளிவா தெரிஞ்சுடுச்சு. என்னால் இந்தக் கல்யாணத்தை நிறுத்தவோ, தடுக்கவோ முடியாது. இங்கிருந்து என்னால் வரவும் முடியாது. இப்போ என்ன பண்ணுறதுன்னு கூட எனக்குத் தெரியலை. நான் ஒண்ணு செய்ய நினைச்சு, அது இங்கே வேற மாதிரி மாறி போச்சு. ஐ அம் டோட்டலி கன்ஃப்யூஸ்டு ராகவ்.!" என அவள் வருத்தம் தோய்ந்த முகத்துடன் சொல்ல,



"ஆரு! இப்போவும் ஒண்ணும் பிரச்சனை இல்லை! நீ இப்படியே என்னோட வந்துடு!" என அவன் சொல்லி நிறுத்தவும், வீட்டின் நுழைவாயிலில், அந்த மகிழுந்து நிற்கவும் சரியாக இருந்தது. அந்தக் கருப்பு நிற மகிழுந்தின் முன்னிருக்கையின் கதவைத் திறந்தபடி இறங்கினான் இமயவரம்பன்.


கதவைத் திறந்து இறங்கிய அந்த முதல் நொடியிலிருந்தே அவன் பார்வை ஆருத்ராவின் மீதே இருந்தது. இமை கூடச் சிமிட்டாமல், அவளைப் பார்த்தபடியே அழுத்தமான எட்டுகளுடன் அவளை நோக்கி வந்தான் இமயவரம்பன். ஆருத்ராவோ முதன் முறையாய் அவனை நெருக்கத்தில் சரியாகப் பார்த்தாள்.


அவள் நிமிர்ந்து தலையைத் தூக்கி பார்க்குமளவிற்கு உயரமாய் இருந்தான். அழுத்தமான கண்கள், உறுதியான உடல்வாகு, லேசான தாடியும், அடர்த்தியான மீசையுமாய் மாநிறத்தில் இருந்தவனின் நடையில் ஆளுமை தெரிந்தது. வெள்ளை முழுக்கை சட்டையும், வெள்ளை வேட்டியும் அணிந்திருந்தான். அவன் அணிந்திருந்த கரை வைத்த வேட்டி, அவன் ஆளும் கட்சியைச் சேர்ந்தவன் என்பதைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது. சட்டையை முழங்கை வரை மடக்கி விட்டு, அவன் கரத்தில் அணிந்திருந்த தங்கக் காப்பும், கழுத்தில் கிடந்த தங்கசங்கிலியும் அவனுக்கு வெகு பொருத்தமாய் இருந்தது.


'ஆள் அழகாக இருந்து என்னத்துக்கு? கேரக்டர் சரியில்லையே..?' எனத் தனக்குள் புலம்பியபடி, அவனைக் கோபமாய்ப் பார்த்தாள் ஆருத்ரா.


"ம்க்கும்!" எனத் தொண்டையைச் செருமியபடி வந்தவன்,

"வணக்கம்! வாங்க ராகவ்! நீங்க ஆராவோட ஃப்ரெண்ட் தானே?" எனக் கேட்க, இத்தனை நேரமாய், இமயனைப் பார்த்து அசந்து, கொஞ்சம் மிரண்டு போய் நின்றிருந்த ராகவ், கொஞ்சம் தடுமாறி, திணறி..


"ஹா.. ஹாய் சார்..! நைஸ் டூ மீட் யூ..!" என அவனை அறியாமலே கைக்குலுக்கியிருந்தான்.


"வீட்டுக்கு வந்த விருந்தாளை இப்படித்தேன் வெளியே நிக்க வச்சு பேசுவியா? உள்ளே கூட்டிப் போ ஆரா!" என இமயன் சொல்ல, ராகவை எப்படி இமயனுக்குத் தெரியும்? எனக் குழம்பி நின்றாள் ஆருத்ரா.


"உனக்கு.. ம்ப்ச்! உங்களுக்கு இவனைத் தெரியுமா?" என அவள் உளற,


"என்னோட சரிபாதியாய் மாறப் போறவ நீ.. நமக்குள்ளே மரியாதை அவசியமில்லை ஆரா. நீ என்னைப் பேர் சொல்லியே கூப்பிடலாம்!" என அவன் சொல்ல, எரிச்சலுடன் அவனை முறைத்தபடி நின்றாள் ஆருத்ரா.


"நான் இவனை உனக்குத் தெரியுமான்னு கேட்டேன்.?" என இல்லாத பொறுமையுடன் வினவினாள் அவள்.


"நமக்குப் பிடிச்சவங்களைப் பத்தி தெரிஞ்சுக்கிறதில் ஒண்ணும் தப்பு இல்லையே..!" அவ எதார்த்தமாய்ச் சொன்னான்.


"நீ என்னைப் பத்தி தெரிஞ்சுக்கலை.. என்னை வேவு பார்த்திருக்க.. பிடிச்சவங்களை யாரும் வேவு பார்க்க மாட்டாங்க! இந்தக் கல்யாணமே அரசியல் ஆதாயத்திற்காகத் தானே செய்ற? என் தாத்தாவை ஏமாத்தி காசு புடுங்கலாம்ன்னு திட்டம் போட்டுருப்ப.. அதுக்காகத்தானே இத்தனையும்.?!" என்றவளின் குரலில் ஒருவித சலிப்புத் தெரிந்தது.


"பணத்தால் எல்லாத்தையும் மதிப்பிட முடியாது ஆரா.. பணத்தை விட விலைமதிப்பில்லாத நிறைய விஷயங்கள் இந்த வாழ்க்கையில் இருக்கு. ஒரு குறிப்பிட்ட விஷயத்தை இழக்கும் வரை.. அதோட மதிப்பு நமக்குத் தெரியாது.!" அவன் ஏதோ சொல்ல, அவன் சொல்ல வருவதன் பொருள் புரியாமல், புருவம் சுருக்கினாள் பெண்.


"இப்போ புரியலைன்னா பரவாயில்லை ஆரா.. சீக்கிரமே புரியும்!" அவள் முகம் பார்த்தே அவன் மன உணர்வுகளை அறிந்துக்கொண்டு அவன் பதில் சொல்ல,


"எந்தக் கருமமும் எனக்குப் புரியவேண்டிய அவசியம் எனக்கில்லை.!" எனச் சொல்லிவிட்டு, முகத்தைத் திருப்பிக்கொண்டு அவள் முன்னால் நடக்க, ராகவ் மட்டும் எந்தப் பக்கம் போவதெனத் தெரியாமல் விழித்துக்கொண்டு நின்றான்.


"அட வாங்க ராகவ்! ஆராவின் நண்பன், எனக்கும் நண்பன் தான்.!" எனச் சொன்னபடியே ராகவ் தோள் மீது கைபோட்டு அழைத்துப் போன இமயனின் பார்வை முழுதும் ஆருத்ராவில் மட்டும் நிலைத்திருந்தது.


ஒயின் நிறத்தில் மஞ்சள் நிற பூக்கள் விரவியிருந்த மேக்ஸி அணிந்திருந்தாள். அவளின் கோதுமை நிறத்திற்கு ஒயின் நிறம் அழகாகப் பொருந்தியிருந்தது. குளித்துவிட்டு விரித்துவிட்டிருந்த கூந்தல், நுனியில் மட்டும் சுருள் சுருளாய்ச் சுருண்டிருக்க, துளியும் ஒப்பனையில்லாத முகத்துடன் இருந்தவளை இன்னும் கொஞ்சம் அதிகமாய்ப் பிடித்திருந்தது அவனுக்கு.


ஏனோ இவளைப் பார்க்கும் தருணங்களில் அவன் அறியாமலே, அவன் உதடுகளில் புன்னகை விரிகிறது. இவள் என்ன மாயம் செய்தாள் என அவனுக்குப் புரியவில்லை. கண்கள் அவளைத் தவிர வேறெதையும் பார்க்க மறுக்கிறது. முப்பத்தைந்து வயது ஆண்மகன் ஏனோ விடலைப் பையனைப் போல் உணர்ந்தான்.



இவன் பார்ப்பதை உணர்ந்ததாலோ என்னவோ, முதுகைத் துளைக்கும் பார்வையில் பின்னால் திரும்பிப் பார்த்தாள் ஆருத்ரா. அவன் பார்வை தன்னைத் துளைப்பதை உணர்ந்து, அவனை முறைக்க முயன்று தோற்றுப்போனாள் அவள். அவள் முறைப்பதை அவன் ஒரு பொருட்டாக மதிக்காத போது, அவள் தான் பார்வையைத் திருப்பிக்கொண்டு, முன்னால் நடக்க வேண்டியதாயிற்று.


"இவன் பார்க்கிறதைப் பார்த்தாலே எரிச்சலா வருது!" எனப் புலம்பியவள், திடீரென ஏதோ யோசித்தவளாக,


"உன் ஃபர்ஸ்ட் வொய்ஃப் எப்படி இருக்காங்க இமயன்!" எனக் கேட்க, அவன் பர்வை சட்டெனக் கடினமாகி, முகம் இறுகுவதைக் கண்கூடாகக் கண்டாள் பெண். அவன் முகம் இறுகுவதைக் கண்டதும் உற்சாகமாய் இருந்தது அவளுக்கு.


"அவங்களை நீ வேணாம்ன்னு சொன்னியா? இல்லை அவங்க உன்னை வேணாம்ன்னு சொல்லிட்டாங்களா? ஒருவேளை சில விஷயங்களுக்கு நீ சரிப்பட்டு வரலையோ என்னவோ?" நக்கலாய் அவள் வேண்டுமென்றே சொல்ல, அவன் முகம் முற்றிலும் உணர்ச்சி துடைத்து இறுகியது.


"அது கடந்த காலம்.. அது முடிஞ்சு போச்சு! நீ இதைப் பற்றி இனிமேல் பேசாமலிருப்பது நல்லது.!" இறுகிய முகத்துடன் கடினமான குரலில் சொன்னான் அவன்.



"அது எப்படிப் பேசாமலிருக்க முடியும்? உன்னைப் பற்றி எனக்கு எல்லாமே தெரியணும் தானே? இத்தனை வயசிலேயும், உன்னை விடப் பத்து வயசு கம்மியான பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நினைக்கும் போது, அதுவும், ஃப்ரெஷ்ஷான பொண்ணா, கல்யாணம் ஆகாத பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணணும்ன்னு நினைக்கும் போது, நான் உன்னைப் பத்தி தெரிஞ்சுக்கக் கூடாதா?!" என அவள் கேட்க, ராகவை தன் கைவளைவிலிருந்து விடுவித்துவிட்டு முன்னோக்கி நடந்தான் இமயவரம்பன்.


"இப்படிப் பதில் சொல்லாமல் போனால், என்ன அர்த்தம்? எனக்குப் பதில் தெரிஞ்சாகணும்! நில்லு இமயன்.. பதில் சொல்லிட்டு போ! நீ ஏதோ தப்புப் பண்ணியிருக்க, அதனால் தான் பயந்து ஓடுற! தைரியமான ஆளாய் இருந்தால், பதில் சொல்லிட்டு போ!" என அவள் சொல்ல, அவளைத் தாண்டி நடந்து கொண்டிருந்தவன், சட்டென நடையை நிறுத்தித் திரும்பி நின்றான்.


"என்னடி! என்ன? உனக்கு இப்போ என்ன தெரியணும் ஹான்? எனக்கும் அவளுக்கும் விவாகரத்து ஆகிடுச்சு. இதைத் தவிரத் தெரிஞ்சுக்கப் பெருசா என் வாழ்க்கையில் எதுவும் இல்லை!"



என அவன் சொன்னாலும் கூட, அவள் அவன் சொன்ன விஷயங்களில் சமாதானமாகவில்லை. திருமணத்தை நிறுத்த வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தவளுக்கு, எதேச்சையாய் அவன் மனைவியைப் பற்றிப் பேசப் போய், அதுவே அவனை வெறுப்பேற்ற துருப்புச் சீட்டாய் மாறிப் போக, எளிதில் விட்டுவிடுவாளா என்ன?


"நீ சொல்றதையெல்லாம் நம்பறதுக்கு நான் தயாராய் இல்லை! எனக்கு உன் வொய்ஃப் கிட்டே பேசணும். எதுவுமே தெரியாமல், கண்ணை மூடிட்டுக் கடலில் குதிக்க நான் தயாராய் இல்லை.!" என அவள் தீர்க்கமான குரலில் சொல்ல, இந்தமுறை அதிர்ந்து நின்றதென்னவோ இமயவரம்பன் தான்.


"வாங்க தம்பி! என்ன இங்கனையே நின்னுட்டீக? உள்ளார வாங்க!" என ராஜன் அழைக்க, அதிர்ந்து நின்ற நிலையிலிருந்து, தன்னிலை மீண்டான் அவன்.


"உள்ளாரதேன் வந்தேன் மாமா! ஆராவைப் பார்க்கவும் அப்படியே பேசிக்கிட்டே நின்னுட்டேன்.!" எனச் சமாளிப்பாய் சொல்லி வைத்தவன்,


"வெரசா கிளம்பச் சொல்லுங்க! நேரம் ஆகிடுச்சே..!" எனச் சொன்னான். அதே நேரம், ராஜனின் பார்வை எதேச்சையாய் ராகவ் மீது விழ,


"என் நண்பன் தான் மாமா.. சென்னையிலிருந்து கல்யாணத்திற்காக வந்திருக்கான். இப்போ தான் வந்தான்.. அப்படியே வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன். பையன் அப்படியே பல்லு கில்லு விளக்காமல் வந்துட்டான். கொஞ்சம், ஏதாவது ரூம் ஏற்பாடு செஞ்சீங்கன்னா குளிச்சுட்டு வந்துருவான்.!" என ராகவை உள்ளே அனுப்பிவிட்டு ராஜனுடன் உள்ளே சென்றான் இமயவரம்பன்.

******


சில பல ஏக்கர்களை வளைத்துப் போட்டு, தரை தளத்தில், நகைக்கடை, முதல் தளத்தில், பிரத்யோகப் பட்டுப் பிரிவு, இரண்டாம் தளத்தில், இதர மற்றும் குழந்தைகள் ஆடைப்பிரிவு என அமைக்கப்பட்டிருந்த அந்தக் கடைக்கு, ஆருத்ராவையும் அவள் குடும்பத்தினரையும் அழைத்து வந்திருந்தான் இமயவரம்பன்.


"மீனாட்சி சில்க்ஸ்!" எனக் கருப்பு நிறப் பின்னணியில் எழுதியிருந்த தங்கநிற எழுத்துக்கள் பளபளத்தது.


"தம்பி! வாங்க! வாங்க!" என வரவேற்ற கடையின் உரிமையாளர்,


"சொல்லி அனுப்பியிருந்தால், அம்புட்டு சேலையையும் வீட்டுக்கு அனுப்பியிருப்பேனே? நீங்க இம்புட்டுத் தூரம் அலையணும்ன்னு என்ன அவசியம் தம்பி?!" என மிகவும் பணிவாகப் பேசினார் மீனாட்சி சில்க்ஸின் உரிமையாளர்.


"கல்யாணப் பட்டு எடுக்க வந்திருக்கோம்! நேரில் வந்து பார்த்தால் கூட நாலு புடவை சேர்த்து பார்க்கலாமில்லையா.? அதோட கல்யாணப் பொண்ணுக்கு பிடிக்கணுமே..?" பேச்சுக் கடை உரிமையாளரிடம் இருந்தாலும், பார்வை ஆருத்ராவிடம் இருந்தது. ஆனால் ஆருத்ராவோ யாருக்கு வந்த விதியோ? என அமைதியாய் நின்றிருந்தாள்.


"எப்படியும் சிவப்பு கலர் சேலைதேன் எடுப்பாய்ங்க! அதுக்கு இம்புட்டு பில்ட்-அப் வேற..!" என முணுமுணுத்தபடி நின்றிருக்க,


"சார் உள்ளே போங்க! லேட்டஸ்ட் டிஸைன் எல்லாமே நானே வந்து காட்டுறேன்.!" என அவர்களை உள்ளே அனுப்பிவிட்டு, தன் அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தார் கடை உரிமையாளர்.


"சார்! நீங்க சொன்னபடியே உள்ளே உட்கார வச்சுட்டேன்.!"


"எத்தனை பேரு வந்திருக்காங்க?"


"சார்! அந்தப் பொண்ணு, அந்தப் பொண்ணு ஃபேமிலி வந்திருக்காங்க! அதுவும், பழநிவேலும், வள்ளியம்மையும் வரலை சார்!"


"அவிங்க துணியெடுத்துட்டு கிளம்பினதும் எனக்குச் சொல்லு! நம்ம பசங்க வந்துருவாய்ங்க! பிறகு எல்லாம் அவிங்க பார்த்துப்பானுங்க!" எனக் கேட்க குரல், சாட்சாத் மயில்ராவணணுடையது.


"ஓகே சார்! நீங்க சொன்னபடியே செய்றேன். என் பேரும், கடை பேரும் வராமல் பார்த்துக்கோங்க சார்!" என அவர் சொல்ல,


"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்ய்யா! நீ நான் சொன்னதை மட்டும் செய்!' எனச் சொல்லிவிட்டு, அலைபேசியை அணைத்திருந்தார் மயில்ராவணன்.
அவர் சொன்னபடியே, அவர்களை அமர வைத்து, நவீனரகப் பட்டுப் புடவைகளைக் காட்டினார் உரிமையாளர்.


"இது டிஸ்யூ சில்க், இது காஞ்சிபுரம் பட்டு, மைசூர் சில்க், போச்சம்பள்ளி, சுங்கிடி, கூரைப்பட்டு, சாஃப் சில்க் கூட நம்மகிட்ட இருக்கு.. எல்லாச் சேலையும் இருக்கு! என்ன வேணுமோ, சொல்லுங்க எடுத்துட்டு வந்துடலாம்!" என அவர் சொல்ல,


"நீங்க இன்னும் நல்லதா எடுத்துட்டு வாங்க! நாங்க பார்த்துட்டு இருக்கோம்!" எனச் சொல்லி உரிமையாளரை அனுப்பியவன்,


"ஆரா..! உனக்குப் பிடிச்சதை எடு! செலவைப் பற்றியெல்லாம் கவலைப் படாதே! நான் பார்த்துக்கிறேன்.!" என ஆருத்ராவைப் பார்த்துப் பேசினான்.


"ஆமா! இந்தக் கல்யாணம் மட்டும் எனக்குப் பிடிச்சா நடக்குது.? உனக்கு என்ன பிடிக்குதோ, அதையே எடு!" என அவனிடம் சொல்லிவிட்டு அமைதியாய் அமர்ந்துக் கொண்டாள்.


"ஆரு.. உனக்கு என்ன பிடிச்சுருக்குன்னு பாருடா தங்கம்!" என அபிராமி சொல்ல,


"உங்க மாப்பிள்ளைக்குப் பிடிச்சதே எடுங்க! எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை.!" எனச் சாதாரணமாய்ச் சொல்லிவிட்டு, அமைதியாய் அமர்ந்துக்கொண்டாள்.


அவளுக்கு என்னவோ, இதிலெல்லாம் விருப்பமே செல்லவில்லை. திருமணமே வேண்டாம் என நினைக்கையில், சேலை ஒன்று தான் குறைச்சல்?!" எனத் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.


"அவதேன் ஆசைப்படுறாளே.. நீங்களே தேர்ந்தெடுங்க மாப்பிள்ளை!" எனப் பரமசிவம் சொல்ல, ராஜனும் அதையே ஆமோதித்தார். வேறு வழியில்லாம, இமயனே புடவையைத் தேர்ந்தெடுக்க, வேடிக்கைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் ஆருத்ரா.


கிட்டதட்ட, ஒருமணி நேரத்திற்குப் பின், அழகான அடர் அரக்கு நிறத்தில், பச்சை நிறக் கரை வைத்த வெள்ளி இழைகளால் நெய்யப்பட்டிருந்தது. புடவை முழுதும், தாமரைப் பூக்களும், கொடிகளும் நெய்யப்பட்டிருக்க, புடவையின் கரையில், அழகாகக் கிளிகள் வரிசையாக அமர்ந்திருப்பது போல் நெய்யப்பட்டிருந்தது.


"அத்தை! இந்தப் புடவையைப் பாருங்க!" எனப் பொன்னியிடம் கொடுதான் அவன். பொன்னியும் புடவையை ஆருத்ராவின் தோளில் வழிய விட, அவளின் நிறத்திற்கு ஏற்றாற் போல் அழகாக இருந்தது அந்தப் புடவை. ஆருத்ராவிற்கும், புடவை பிடித்திருந்தது. ஆனாலும், அதை வெளிக்காட்டாமல், அமைதியாய் அமர்ந்திருந்தாள்.


அவளுக்குப் பிடித்திருக்கிறது என்பதை அவளின் கண்களை வைத்தே புரிந்துக்கொண்டவன், வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு உடை எடுத்துவிட்டு, பின் தாலி செய்வதற்கு ஆர்டர் கொடுத்துவிட்டு, உடன் வந்தவர்களையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்தான்.


அவன் கடையிலிருந்து வெளியே வந்த நொடி, கடையைச் சுற்றிலும், விவகாரமான முகங்கள் அவன் பார்வைக்குத் தென்பட்டன. ஏதோ பொறி தட்டுவதைப் போல் உணர்ந்தான் இமயவரம்பன்.


அவர்களைத் தாண்டிச் சென்று தான் வாகனத்தைக் கிளப்ப வேண்டும். ஆனால் பக்கத்தில் சென்றால், வம்புக்கு வருவார்கள் என்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்தது.
சில விநாடிகள் மட்டும் யோசித்தவன், தன் உடன் வந்தவர்கள் அனைவரையும், ராகவின் பாதுகாப்பில் அனுப்பிவிட்டுவிட்டு, ஆராவுடன் அவன் மட்டும் பின் தங்கினான். கடையிலிருந்து சற்று தள்ளி நிறுத்தப்பட்டிருக்கும், இன்னொரு மகிழுந்தை நோக்கி, ஆருத்ராவுடன் நடந்தான் அவன்.

"அவங்களை மட்டும் ஏன் முன்னால் அனுப்பின?!"

"நானும் அவங்களோடவே போயிருப்பேன். எனக்கு உன்னைப் பிடிக்கவே இல்லை இமயன்.!"

"எதாவது பேசித் தொலையேன்! நான் மட்டுமே பேசிட்டு வரணுமா?!"


"உங்க அம்மா அப்பாவெல்லாம் ஏன் வரலை? உன் வொய்ஃப்க்கு இந்தக் கலர் புடவை தான் எடுத்துக் கொடுத்தியா?!" என வாய் ஓயாமல் அவள் பேசிக்கொண்டே வர, அவளின் கடைசிக் கேள்வியில், பதிலேதும் பேசாமல் அவளை முறைத்தவன், அவளுக்குப் பின்னாலிருந்து தாக்க வந்தவனை அடித்துக் கீழே தள்ளிவிட்டு, ஆருத்ராவை தன் கை வளைவில் அவன் கொண்டு வந்த அதே நேரம், அவர்கள் இருவரையும், கையில் கத்தியுடன் இன்னும் நான்குபேர் சுற்றி வளைத்திருக்க, தன் பின்னால் எவனோ தாக்க வந்ததிலேயே பயந்திருந்தவள், இன்னும் நால்வர் அவர்களைச் சுற்றி நிற்கவும் நிரம்பவும் பயந்து போனாள்.


கரத்தினில் கத்தியுடன், தன் எதிரில் நிற்பவர்களைப் பார்க்க பயமாக இருக்க, தன்னை அறியாமலே, அவன் கரத்தினை இறுகப் பற்றியிருந்தாள் அவள்.


"ஆரா.. ஒண்ணும் இல்லை! நான் இருக்கேன் பயப்படாதே! உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன்.!" என அவன் அவளைச் சமாதானப்படுத்திக் கொண்டிருக்கும் போதே, சுற்றி நின்றவர்களில் ஒருவன் அவன் தோள்பட்டையில் கத்தியால் கீற, சத்தமாய் அலறியிருந்தாள் ஆருத்ரா.


"ஆரா.. ஒண்ணும் இல்லைன்னு சொல்றேன்ல்ல?" என அவளைத் தன் கை வளைவில் தாங்கியபடியே.. தன் மீது கீறல் போட்டவனை ஓங்கி மிதித்தான் இமயன். ஒற்றைத் தாக்குதலில் அவன் கீழே விழுந்து துடித்துக் கொண்டிருக்க,


"இந்தாருங்கடா! ஒழுங்கு மரியாதையாய் ஓடிருங்க! உங்களை எவன் அனுப்பினான்னு எனக்குத் தெரியும். என் மேலே கை வச்சீங்கன்னா என்ன நடக்கும்ன்னு உங்களை அனுப்பினவன் பார்க்க வேணாம்?!" என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, காவல்துறை வாகனம் அந்த இடத்தில் வந்து நின்றது.
இவன் காவல்துறைக்கு அழைத்துவிட்டுத்தான் இத்தனை நிதானமாய் இருந்திருக்கிறான். என்பதை அவர்களால் உணர முடிந்தது.

வாரமொருமுறை சந்தைக் கூடும் இடமாதலால்,ஆளரவமில்லாது வெறிச்சோடிக் கிடந்தது. எனவே அவர்களுக்கு அது இமயனை அவர்கள் மடக்குவதற்கு வசதியாய்ப் போய்விட்டது. ஆனாலும், இமயன் அவர்ளை தாக்காமல், பொறுமை காத்ததற்கு, கண்காணிப்பு கேமிரா, பொது இடம் என்பதோடு மட்டுமில்லாமல், இன்னொரு காரணமும் இருக்கத்தான் செய்தது. காவல்துறை வாகனம் அந்த மூவரையும் கைது செய்துவிட்டுப் போகும் வரை அவன் கரத்தை அவள் விடவே இல்லை.
அடுத்த அரைமணி நேரத்தில், ஒரு கையில் காயத்தோடும், மறு கையில் ஆருத்ராவோடும் நின்றிருந்த இமயவரம்பன், தலைப்புச் செய்தியாகத் தமிழ்நாட்டின் தொலைக்காட்சிகளை அலங்கரித்துக் கொண்டிருந்தான்.

"மாண்புமிகு முதல்வர். மயில்ராவணனின் முன்னாள் மருமகனும், ஆளும் கட்சியின் முக்கியப் பிரமுகருமான இமயவரம்பன் மீது தாக்குதல்.. பொது இடத்தில் அதிரடி தாக்குதல் நடத்திய நால்வர் கைது. ஒருவர் தப்பி ஓட்டம்.. இது எதிர்க்கட்சியின் சதியா? காவல் துறையினர் விசாரணை..!" என்ற தலைப்புச் செய்தியைப் பார்த்துவிட்டுக் கொதித்துப் போய் அமர்ந்திருந்தார் மயில்ராவணன்.


அன்பாகும்..?
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் டியர்ஸ்..!

அன்பின் அதீதங்களில்..!

அடுத்த அத்தியாயம் பதிஞ்சாச்சு.

படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்.

தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤

கருத்துத் திரி:
Post in thread 'சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.' சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதீதம்-6


தோள்பட்டையில் கட்டுடன் அமர்ந்திருந்தான் இமயவரம்பன். நடப்பது என்னவெனப் புரியாமல் குழப்பமாய் நின்றிருந்தாள் ஆருத்ரா. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது? எதற்காக நடக்கிறது? எதுவுமே அவளுக்குப் புரியவில்லை. ஒன்றும் புரியாமல், அவள் நின்றிருக்க, நாடியில் கரம் பதித்து யோசனையுடன் அமர்ந்திருந்தார் பழனிவேல்.


"என்னமோ இதோட போச்சு! நம்ம பிள்ளைக்கு எதாவது ஒண்ணுன்னா என்ன செஞ்சிருக்க முடியும்? எனக்கு என்னவோ இது சரியா படலை.!" வள்ளியம்மையின் கூற்றை ஆமோதிப்பதைப் போல், மொத்த வீடும் அமைதியாய் இருந்தது.


"எனக்கும் அத்தை சொல்றதுதேன் சரின்னு படுதுங்க மாமா! அந்தஸ்து, வசதின்னு பொண்ணைக் கட்டிக் கொடுத்துட்டு பொழுதுக்கும் பதறிக்கிட்டே கிடக்க முடியுமா?! உங்க அரசியல் ஆதாயத்திற்காக என் பொண்ணு வாழ்க்கையைப் பலி கொடுத்துறாதீக!" என ஒருவித ஆற்றாமையுடன் பேசினார் இந்துமதி.


"இந்து.. வாயை மூடிக்கிட்டு இருக்க மாட்ட! அப்பா யோசிக்கிறாங்கல்ல என்ன முடிவுன்னு அவங்களே சொல்லுவாக!" என மனைவியை அடக்கினார் பரமசிவம்.


"நீ என்னடா கூறுகெட்டத்தனமா பேசுற?, மாப்பிள்ளை தம்பி மேல பட்டது, தவறி உன் மகள் மேலே பட்டிருந்தாலும் இப்படித்தேன் பேசுவியா? பணம் காசு முக்கியந்தேன்.. ஆனால் எல்லாத்துக்கும் மேலே உசிரு முக்கியம்.! பணம் காசு போனால் சம்பாதிச்சுக்கிடலாம்.. உசுரு போனால் வருமா?" முதன் முறையாய் மருமகளின் கருத்தோடு ஒத்துப் போனார் வள்ளியம்மை.


"ம்மா.. புரியாமல் பேசாதேம்மா.. பொது வாழ்க்கைன்னு இருந்தால் இதெல்லாம் சகஜம்தேன்.. குடும்பத்தோடு போறோமின்னு தம்பி பாதுகாப்பு இல்லாமல் வந்துடுச்சு. போற இடத்திற்குப் பாதுகாப்போட போய்ட்டோமின்னா என்ன பிரச்சனை வரப் போகுது?" எனப் பரமசிவம் சொல்ல,


"ஆமாடா.. நான் புரியாமல் பேசுறேனா? நீதேன் புரியாமல் பேசிட்டு கிடக்க! பொது வாழ்க்கைன்னு அந்தத் தம்பி கஷ்டப்படுறாக.. எம் பேத்தி என்னத்துக்குக் கஷ்டப்படணுங்கிறேன்? இந்த அரசியல் ஆதாயமெல்லாம் வேணாம். நமக்குத் தோதான மாப்பிள்ளையாய் பார்த்துக் கல்யாணம் செஞ்சு வைப்போம். கல்யாணத்திற்கு முன்னேயே இப்படி நடக்கிறது எனக்குச் சரியா படலை!" எனச் சொன்ன வள்ளியம்மையை ஆச்சர்யமாய்ப் பார்த்தாள் ஆருத்ரா.

இங்கு வந்த நாளில் இருந்து, அவள் தான் மறுப்புத் தெரிவித்துக் கொண்டிருந்தாள். முதல் மறுப்புப் பெரியவர்கள் பக்கமிருந்து வந்திருக்கிறதென்றால், அது வள்ளியம்மையிடமிருந்து தான்.
என்னதான் அவள் அன்னை அவளுக்காகப் பேசினாலும் கூட, அது இந்த வீட்டில் எடுபடாது என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், வள்ளியம்மை பேசினால், அவளின் தாத்தா யோசிக்கவாவது செய்வார் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது. ஆனால், அவள் நம்பிக்கைக்கு ஆயுள் குறைவென்பதை அவள் அடுத்த நொடியே அறிந்துக்கொண்டாள்.


"வள்ளி! நீ கொஞ்சம் புலம்பாமல் இரேன்.. எனக்குத் தம்பி மேலே நம்பிக்கை இருக்கு. இமயன் எல்லாத்தையும் பார்த்துப்பான்..!" என ஒற்றை வார்த்தையில், அனைத்திற்கும் முடிவு கட்டினார் பழனிவேல்.


"எல்லாத்தையும் தம்பி பார்த்துப்பான்னு நீங்க சொல்றதெல்லாம் சரிதான்.. ஆனால் நாளைக்கு இந்தத் தம்பியே இல்லாமல் போய்ட்டால், நம்ம பொண்ணு நடுவில் நிற்குமா? எதுவா இருந்தாலும் யோசிச்சு பேசுங்க!" என மீண்டும் வள்ளியம்மை சொல்ல,


"எம்புட்டுச் செலவு பண்ணி கல்யாணம் ஏற்பாடு பண்ணிருக்கு.? மருதை மட்டுமில்லை, தமிழ்நாடு, டெல்லின்னு எல்லா ஊருபக்கமும் பத்திரிக்கை கொடுத்தாச்சு. இப்போ வந்து அது, இதுன்னு விளையாடுறீகளா? கல்யாண வேலையை நாங்க பார்த்துக்கிடுவோம்.. நீங்க போய் உங்க பொழப்பை பாருங்க!"எனப் பழனிவேல் உறுதியாய் சொல்லிவிட, ஏமாற்றம் தாங்கிய முகத்துடன் நின்றிருந்தாள் ஆருத்ரா.


"இமயன்! நீ ஒத்தைக்கு வீட்டுக்குப் போக வேண்டாம். நான் துணைக்கு ஆள் அனுப்பறேன். முதலில் போலீஸில் கம்ப்ளைண்ட் கொடுத்து, பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்! இத்தனை வருஷமாய், கட்சியில் இருந்து, கட்சியின் வளர்ச்சிக்கு உழைச்ச உனக்கே இந்த நிலைமைன்னா, அடிமட்ட தொண்டர்களோட நிலை என்ன? இதுக்குத்தேன் அப்போவே சொன்னேன். அவங்க தாரேன்னு சொல்லும் போதே, வேண்டாம்ன்னு சொல்லாமல் பதவியில் உட்கார்ந்திருக்கணும். நாம யோசிக்க எடுத்துக்கிட்ட நேரத்தை எதிராளி அவனுக்குச் சாதகமாய்ப் பயன்படுத்திக்கிட்டான்.! சுதாரிக்க வேண்டிய இடத்தில், சுதாரிக்காமல் விட்டது நம்ம தப்புத்தேன்.!" எனப் பழனில் வேல் சொல்ல,


"நீங்க சொல்றது சரிதானுங்க ஐயா.. நம்பி கெட்ட பிறகுதேன் புத்திக்கு உரைக்குது. இனிமே இதை நான் லேசில் விடப் போறதில்லைங்க ஐயா!" எனச் சொன்னவன், ஒருபுறம் மட்டும் கழற்றி விடப்பட்டிருந்த சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினான். ஆருத்ராவோ, அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள்.

காலையிலிருந்து நடந்தவை அனைத்தும் அவள் மனதிற்குள் ஒருவித உறுத்தலை ஏற்படுத்தியிருந்தது. வேறு வழியில்லாமல் குழப்பத்துடனே தோட்டத்தின் கல் மேடையில் சென்று அமர்ந்தாள். வேப்பமர நிழலின் குளுமையை உடல் உணர்ந்தாலும், மனம் அதில் லயிக்க மறுத்தது.
அதே நேரம்,


"ஆரு.. என்னதான் இமயனுக்கு அடிபட்டாலும், ஒரே நாளில், உலக ஃபேமஸாகிட்ட போ..!" என அலைபேசியில் பார்வை பதித்தபடியே வந்தான் ராகவ்.


"என்னடா உளறுறே?!" என இவள் புரியாமல் கேட்க,


"இவருடன் இருக்கும் இவர் யார்? இமயவரம்பனை திருமணம் செய்துக்கொள்ளப் போகும் இந்தப் பெண் யார்? இந்த ஆருத்ராவின் பின்னணி என்ன?" எனச் சமூக வலைதளம் முழுதும் அவளைப் பற்றிய செய்திகளாகவே இருந்தது. ஒருபுறம் இமயவரம்பன் தாக்கப்பட்டதைப் பற்றி வதந்திகள் பரவிக்கொண்டிருக்க,

இன்னொருபுறம் இவளைப் பற்றிய தேடுதல் நடந்து கொண்டிருந்தது.


"இவரைத் திருமணம் செய்யப் போவது இவரா?!"


"இரண்டாம் திருமணத்திற்குச் சம்மதித்ததற்கு இது தான் காரணமா?"


"இவரும் அரசியல் பின்னணியைச் சார்ந்தவரா?"


"பணத்திற்காகத் திருமணத்திற்குச் சம்மதித்தாரா ஆருத்ரா?!" எனத் திரும்பத் திரும்ப அலைபேசியின் திரையை நிறைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து எரிச்சலாய் வந்தது அவளுக்கு. அதிலும், அவளும் இமயனும் சேர்ந்து நிற்கும் புகைப்படங்கள் பேசு பொருளாகியிருந்தன.


"இதெல்லாம் என்னடா? அடுத்தவங்க வீட்டை எட்டிப் பார்க்கிறதைத் தவிர இவங்களுக்கு வேற வேலையே இல்லையா.? இதெல்லாம் பார்க்கப் பார்க்க எரிச்சலாய் வருது.!" எனக் கோபப்பட்டாள் ஆருத்ரா.


"ஏய் ஆரு.. சோஷியல் மீடியா அப்படித்தான். உனக்குத் தெரியாதா என்ன? நீ ஒரு முக்கியப் புள்ளியைக் கல்யாணம் பண்ணிக்கப் போறம்மா! அதுவும் அவர் முதலமைச்சரோட முன்னாள் மருமகன் வேற.. அப்போ கிளறத்தான் செய்வானுங்க! நீ இதையெல்லாம் கண்டுக்காதே! இதையெல்லாம் மனசில் போட்டுக்கிட்டால் நிம்மதியைத் தொலைக்க வேண்டியது தான்.!" என ராகவ் சொன்னது சரியாகப்பட்டாலும், அவளால் கோபப்படாமல் இருக்க முடியவில்லை.


இதற்கெல்லாம் காரணம், இமயன் தான் என அவன் மீது தான் அவளுக்குக் கோபம் வந்தது.


"நீ சொல்றதெல்லாம் புரியுது ராகவ். பட், ஏதோ ஒண்ணு உள்ளுக்குள்ளே உறுத்திட்டே இருக்கு. எதோ தப்பா இருக்குன்னு தோணுது.!" என அவள் சொல்ல,


"என்ன சொல்ற ஆரு?" எனப் புரியாமல் கேட்டான் ராகவ்.


"ஏன் ராகவ்.. இது நிஜமாவே எதிர்க்கட்சியோட சதின்னு உனக்குத் தோணுதா?" என யோசனையுடன் கேட்டாள் ஆருத்ரா.


"ஐ திங்க் ஸோ..!" என அவன் சொல்ல,


"எனக்கு அப்படித் தோணலை ராகவ். இன்னைக்குத் தாத்தாக்கிட்டே பேசிட்டு இருந்தப்போ, இமயனின் கண்ணில் ஒருவித உறுதி தெரிஞ்சது. தன்னைத் தாக்க வந்தவங்க மேலே அவனுக்குக் கோபமே வரலை. அமைதியாய் இருந்தான். அந்த அமைதி ரொம்ப அசாத்தியமானதா இருந்தது. எனக்கென்னவோ இதற்குப் பின்னால் வேற என்னவோ இருக்குன்னு தோணுது.!" எனச் சொன்னாள் ஆருத்ரா.


"ஆரு.. எதையாவது யோசிச்சு நீ குழம்பிட்டு திரியாதே..! எனக்கென்னவோ இமயன் சாரைப் பார்த்தால் தப்பா தோணலை. அவர் கண்ணில் ஒரு நேர்மை தெரியுது.!"


ராகவ் கூட, முதலில் இமயனுடனான திருமணத்தை நிறுத்துவதில் தான் மும்முரமாய் இருந்தான். ஆனால், இமயனைப் பார்த்த அந்த நொடி முதல் அவனால் சந்தேகப்பட முடியவில்லை. அதோடு கூட, ராகவை ஒருநொடி கூட இமயன் சந்தேகக் கண்ணோடு பார்க்கவில்லை. ஆருத்ராவையும், தன்னையும் இணைத்து ஏதாவது பேசிவிடுவானோ? என்ற பயம் கூட ராகவிடம் இருந்தது. ஆனால் இமயன் அதைப் பற்றி ஒற்றை வார்த்தைக் கூடப் பேசவில்லை. அதுவே ராகவிற்கு இமயன் மீது ஒரு சிறு நம்பிக்கை துளிர்விடக் காரணமாகவும் இருந்தது.


"அவன்கிட்டே உனக்கு நேர்மை தெரியுதா? எனக்கு அவன் நேர்மையானவன்னு தோணலை! அவனைப் பார்த்தால் எனக்கு நிறையக் கேள்விகள் மட்டும் தான் தோணுது. இவனுக்கும் இவன் வொய்ஃப்க்கும் என்ன பிரச்சனை? ஏன் டிவோர்ஸ் பண்ணினாங்க? முதலமைச்சரோட மருமகன்ங்கிறது எவ்வளவு பெரிய அந்தஸ்து.. அதை ஏன் இவன் வேணாம்ன்னு சொல்லணும்? ஒருவேளை இவன் வேணாம்ன்னு சொல்லலைன்னாலும் பணத்திற்காக ஸ்டிக் ஆன் பண்ணி இருந்திருக்கலாமே.? தாத்தாகிட்டே பேசினதை வச்சு பார்த்தால், முதலில் பதவி கொடுக்கிறேன்னு சொல்லிருக்காங்க, இவன் மறுத்திருக்கான். என்னோட கெஸ் இப்போ இவனுக்குப் பதவி வேணும். அதுக்காகத்தான் இத்தனையும் பண்ணுறான்னு தோணுது!"


"ஆனால் கடைசியில் இது எல்லாமே அனுமானங்கள் மட்டும் தான் ஆரு! உன்னோடஅனுமானங்கள் சரியாகவும் இருக்கலாம். தவறாகவும் இருக்கலாம்.!"


"இது உண்மையாகவும் வாய்ப்பு இருக்கு தானே.?!"


"வாய்ப்பு இருக்கு தான்.. இல்லைன்னு நான் சொல்ல மாட்டேன். ஃபர்ஸ்ட் இம்ப்ரஷன், பெஸ்ட் இம்ப்ரஷன்னு சொல்லுவாங்க! இப்போ வரை இமயன் கிட்டே எதுவும் தப்பா இருக்கிற மாதிரி எனக்குத் தோணலை..! அதுவே விவேக் விஷயத்தில் எனக்குக் கொஞ்சம் உறுத்தல் இருந்துச்சு.. அப்போ உன்னோட இந்த அளவிற்கு நான் பேச மாட்டேனே.. அதனால் கொஞ்சம் தயக்கமாகவும் இருந்தது. ஆனால் நீ இப்போ சொல்ற எதுக்கும் ஆதாரமே இல்லை ஆரு! நாமளா எதையாவது ஒண்ணு யோசிச்சு அது தப்பா போய்டுச்சுன்னா? நல்லவரா இருக்கிற ஒருத்தரை தப்பா ஃப்ரேம் பண்ணிடுவோமோன்னு தோணுது!"


"ஏன்டா நீ இப்படி ஓவர் நல்லவனா இருக்கே? யாரையுமே இப்படிக் குருட்டாம்போக்கில் நம்பாதே டா!" என அவள் சொல்ல,


"நானும் அதையே திருப்பிச் சொல்லலாம் இல்லையா? நீயும் பார்க்கிறவங்க எல்லாரையும் சந்தேகப்படாதே.. நீ தேவையில்லாமல் அவரைச் சந்தேகப்படுறியோன்னு தோணுது.!" எனச் சொன்னான் அவன்.


"டேய் எருமை! நீ எனக்கு ஃப்ரெண்டா.. இல்லை அவனுக்கு ஃப்ரெண்டா? நீ வந்தது கல்யாணத்தை நிறுத்துறதுக்கா? இல்லை நடத்தி வைக்க வந்தியா டா? என்னடா நினைச்சுட்டு இருக்க நீ?" எனக் கோபமாய் அவள் முறைக்க,


"தெரியலை ஆரு.. இரண்டாவது கல்யாணம்ங்கிற ஒரு காரணத்தைத் தவிர எனக்கு வேறெதுவும் முரணா தெரியலை ஆரு..! எனக்குத் தோணினதைப் பேசினேன்.. அதுக்கு ஏன் இவ்வளவு கோபம்?!" எனக் கேட்டான் ராகவ்.


"உன் நியாயம் மண்ணாங்கட்டியெல்லாம் வேற எங்கேயாவது வச்சுக்கோ.. முதலில் நீ என் ஃப்ரெண்ட்.. அதை முதலில் ஞாபகம் வச்சுக்கோ!" எனப் போலியாய் விரல் நீட்டி மிரட்டினாள் அவள்.


"சரிம்மா! நீ என் ஃப்ரெண்ட் அது எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு போதுமா?" என அவன் சொல்ல, அவனோடு சேர்ந்து சிரித்துக் கொண்டாள் ஆருத்ரா.


என்னதான், அவள் வெளியே சிரித்தாலும், அவள் மனதிற்குள் நிறைய யோசனைகள் ஓடிக்கொண்டிருந்தது. ஏனோ இமயனை அவளால் முழுதாக நம்ப முடியவில்லை. அவளைச் சுற்றி நடக்கும் அனைத்தின் பின்னாலும் அவன் தான் இருக்கிறான் என்பது அவளுக்குத் தோன்றிக் கொண்டே இருந்தது. அவளின் பெயரும், அவன் பெயரும் சேர்ந்து பேசு பொருளானதன் பின்னணியிலும், அவன் தான் இருப்பானோ? என்ற சந்தேகம் அவளுக்கு இருந்தது. எல்லோரையும் ராகவோடு அனுப்பிவிட்டு, தன்னை மட்டும் ஏன் அவன் தன்னோடு இருத்திக் கொண்டான்? தன் ஆதாயத்திற்காக இவன் என்னை வைத்துக் காய் நகர்த்துகிறானோ? என்ற சந்தேகமும் அவளுக்குள் இருந்தது. பொதுவாய் ஆருத்ரா இப்படி அதீதமாய்ச் சிந்திப்பவள் எல்லாம் இல்லை. ஆனால் இமயன் விஷயத்தில் யோசிக்காமல் அவளால் இருக்க முடியவில்லை. தான் வேண்டாம் என முடிவு செய்த ஒரு விஷயம், தன்னை மீறி நடந்துவிடுமோ? என்ற பயம் தான் ஆருத்ராவின் அதீத சிந்தனைக்குக் காரணமோ என்னவோ?


******


"டேய் என்னதான்டா செஞ்சு தொலையறீங்க? நான் என்ன சொன்னேன்? நீங்க என்ன செஞ்சு வச்சிருக்கீங்க? அவனை ஆள் இருக்கிற இடம் தெரியாமல் பண்ணுங்கன்னு சொன்னால், பொது இடத்தில் வச்சு செஞ்சு விட்டுருக்கீங்க? சொன்னதை விட்டுட்டு சுரையைத் தான் புடுங்குவீங்க..!" என எதிரில் நின்ற இருவரையும் பார்த்துக் கத்திக் கொண்டிருந்தார் மயில்ராவணன்.



தான் சொன்னதை விட்டுவிட்டு வேறொன்றைச் செய்துவிட்டார்களே? என்ற கோபத்தில் அவர் முகம் கல்லாய் இறுகியிருந்து. அதீத கோபத்தின் காரணமாய் இரத்த அழுத்தம் உயர்ந்து வியர்த்துக் கொட்டியது அவருக்கு. அதற்குமேல் நிற்க முடியாமல், தொப்பெனப் பக்கத்திலிருந்த இருக்கையில் அமர்ந்தார் மயில்ராவணன். தான் வேலை ஏவிய நபர்களை விசாரிப்பதற்காக, தன் பாதுகாவலர்களைத் தவிர்த்துவிட்டு, இரகசியமாய், அதி நவீன தங்கும் விடுதிக்கு வந்திருந்தார்.


"சார்! நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க சார்!" என எதிரில் நின்றவனில் ஒருவன் சொல்ல,


"என்னத்தைய்யா கேட்க சொல்ற? ஒட்டுமொத்த மீடியாவும் இவனைப் பற்றி மட்டும் தான் பேசுது. ஆள் அடையாளம் தெரியாமல் ஆக்க சொன்னால், ஊரு உலகம் முழுதும் அவனை ஃபேமசாக்கி விட்டுருக்கீங்க? உங்களை நம்பி ஒரு காரியத்தை ஒப்படைச்சேனே என்னை நானே செருப்பால் அடிச்சுக்கணும்.! இந்த மீடியாக்காரணுங்க வேற, என்னையே உத்து உத்து கவனிக்கிறானுங்க! அவனுங்க கண்ணில் மாட்டாமல் வர்ரதுக்குள்ளே ஒருவழி ஆகிட்டேன். எல்லாத்துக்கும் காரணம் நீங்க செஞ்ச வேலை தான்.! இப்படி விளங்காத வேலையை நீங்க செய்றதுக்கு, ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ரூம், தம், தண்ணி, பொண்ணு, ட்ரக்ஸ், எல்லாத்துக்கும் மேலே பொட்டி பொட்டியாய் பணம் எல்லாத்தையும் அழுதிருக்கேன். ஆனால் நீங்க என்னடான்னா காரியத்தையே கெடுத்துட்டீங்க!" எனத் தன்னை மீறி கத்தியவர், நெற்றியில் அரும்பிய வியர்வையைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டார்.


"இங்கே பாருங்க சார்! என்ன ஏதுன்னு புரியாமல், நீங்கபாட்டுக்கு பேசிட்டே போறீங்க? முதலமைச்சராச்சேன்னு அமைதியாய் நிற்கிறோம். நானும் கிருபாவும் எத்தனை சம்பவம் பண்ணிருக்கோம்? எதுக்குமே ஆதாரமோ ஆளோ கிடைக்கலையே? அப்படி இருக்கயில், நாங்க இப்படி அசிங்கமா பண்ணிருப்போம்ன்னு நினைக்கிறியா சார்?" என மாரி கேட்க, யோசனையாய் புருவம் சுருக்கினார் மயில்ராவணன்.


"இப்போ என்ன சொல்றீங்க? இதை நீங்க செய்யலையா?! நீங்க செய்யலைன்னு சொல்லி என்கிட்டே இருந்து தப்பிச்சுக்கப் பார்க்கிறீங்களா?!"


"சார்! உங்க கிட்டே கை நீட்டி துட்டு வாங்கியிருக்கோம். நாங்கதான் சார் செஞ்சோம்.. கொஞ்சம் மிஸ் ஆகிருச்சுன்னு சொல்லி, பணத்தை அடிச்சுட்டுப் போயிருக்கலாம். அதை விட்டுட்டு நாங்க ஏன் பொய் சொல்லணும்? இந்தத் தொழிலில் எங்களுக்கு நேர்மை ரொம்ப முக்கியம் சார்! நீங்க அரசியல் பண்ணுறவங்க ஆயிரம் பொய் பேசுவீங்க.. நாங்க அப்படி இல்லை சார்! நாங்கதான் சொன்னோமே சார், அடுத்த வாரம் தான் சம்பவத்திற்கு நாள் குறிச்சுருக்கோம்ன்னு சொன்னோமே?!சொன்ன தேதியை விட்டுட்டு வேற நாளில் பண்ணுறதெல்லாம் நமக்குப் பழக்கமில்லை சார்.!" எனக் கிருபா கேட்க, இந்த முறை அதிர்ந்ததென்னவோ மயில்ராவணன் தான்.

"அப்போ இமயனைக் கொல்ல முயற்சி பண்ணினது நீங்க இல்லையா?"


"இவ்வளவு நேரமா தெலுங்கிலேயே சொல்லிட்டு இருக்கோம்? நாங்க செய்யலை சார்!" என உறுதியாய்ச் சொன்னான் மாரி.


"டேய்.. நீங்க செய்யலைன்னா அதைச் செஞ்சது யாருடா? எதிர்க்கட்சியோட சதின்னு நியூஸில் சொல்றாணுங்க! எனக்குத் தெரிஞ்சு இதை எதிர்க்கட்சி செஞ்சிருக்க வாய்ப்பில்லைன்னுனோ தான் தோணுது!" என யோசித்தபடியே சொன்னார் அவர்.


'இவனுங்களும் இல்லை, எதிர்க்கட்சியும் இல்லை! அப்போ இதை யாரு பண்ணிருப்பா.?!' என அவர் தனக்குள் யோசனையோடு அமர்ந்திருக்க, அவர் சாந்தனையைக் கலைத்து அலறியது அலைபேசி. காவல்துறை ஆணையரிடமிருந்து தான் அழைப்பு வந்தது.


"சொல்லுய்யா! என்ன நிலவரம்?" கைது நடவடிக்கை என்ன ஆனது? கைதானவர்கள் ஏதேனும் சொன்னார்களா? என்பதை ஒற்றைக் கேள்வியாய்க் கேட்டார் அவர்.


"சார்..!" என அந்தப்பக்கமாய் ஆணையர் தயங்குவது இவருக்குப் புரிந்தது.


"என்னய்யா? சொன்னால் தானே தெரியும்?!" என மயில்ராவணன் கேட்க,


"சார்! எப்படி விசாரணை பண்ணினாலும் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்றானுங்க சார்!" எனச் சொன்னார்.


"நீ எப்படி விசாரிச்சாலும், நான்தான் செய்யச் சொன்னேன்னு என் பேரைச் சொல்லிருப்பானுங்களே? நான்தான் இமயனை போட சொன்னதா சொன்னானுங்களா?!" என இமயன் தாக்கப்பட்ட விஷயத்தில் கைதான நால்வரும் என்ன சொல்லியிருப்பார்கள் என்பதை மயில்ராவணன் சொல்லவும்,


"உங்களுக்கு எப்படிச் சார் தெரியும்?!" எனக் கேட்டார் காவல்துறை ஆணையர்.


"அதெல்லாம் அப்படித்தான்ய்யா! இதுக்குப் பின்னாடி யாரு இருக்கா, என்ன செய்ய முயற்சிக்கிறாங்க? எல்லாம் எனக்குத் தெரியும். நீ கொஞ்ச நாளைக்கு இந்த விஷயம் வெளியே வராமல் பார்த்துக்கோ! எப்படியும் ப்ரஸ் மீட் வைக்கும் போது, எவனாவது கேள்வி கேட்பான். விசாரிச்சுட்டு இருக்கோம்ன்னு மட்டும் தான் நீ சொல்லணும். மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.! அதோட அந்த இமயவரம்பன் என்ன செய்றான்னு ஒரு கண்ணு வச்சிக்கோ.." என அவர் சொன்னதும், சம்மதம் தெரிவித்து அலைபேசியை அணைத்திருந்தார் காவல் ஆணையர்.


"நீங்க போங்க டா! அடுத்து நான் என்ன செய்யணும்ன்னு சொல்ற வரை எதுவும் செய்ய வேணாம். உங்களுக்கு வர வேண்டியது வந்து சேரும்!" எனச் சொல்லி, மாரியையும், கிருபாவையும் அனுப்பி வைத்தார். அவர் மனதிற்குள்ளோ, பத்து ஆண்டுகளாய், கைப்பற்றிக் காப்பாற்றிய பதவிக்கு, இந்த ஓராண்டு முடிவதற்குள்ளாகவே முடிவு வந்துவிடுமோ, என்ற பயம் அவருக்குள் இருந்தது.


அதோடு, மயில்ராவணன் மனம் முழுதும், இமயனைப் பற்றிய சிந்தனைகள் மட்டுமே ஓடிக்கொண்டு இருந்தது. அவன் இத்தனையும் செய்வதன் காரணக் காரியமெல்லாம் அவருக்குப் புரியத்தான் செய்தது. ஆனாலும், அவனாக இல்லாமல் வேறு யாராவது இருக்குமோ? என்ற சந்தேகமும் அவருக்குள் இருந்தது. இதை இதற்குமேல் வளரவிடாமல் எப்படித் தடுப்பது என அவர் யோசித்துக் கொண்டிருக்க, இடியாய் அடுத்தச் செய்தி அவர் தலையில் வந்திறங்கியது.


"சார்.. சார்..!" என மயில்ராவணனின் உதவியாளனான மணிண்டன் அவசரமாய்ப் பதறியபடி ஓடி வந்தான்.


"ஏன்டா இப்படிப் பேயடிச்ச மாதிரி பயந்து ஓடி வர்ர? இருக்கிற பிரச்சனையில், நீ எதாவது புதுசா கிளப்பி விட்டுடாதே! நேரம் ஆகிருச்சு! எவன் கண்ணிலும் மாட்டும் முன்னே இங்கிருந்து கிளம்பணும்!" என அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவரின் அலைபேசி அவருக்குஇடையூறாய் அலறியது.


"சார்.. சோஷியல் மீடியா முழுசும் ஒரு வீடியோ வைரலாகிட்டு இருக்கு முதலில் அதைப் பாருங்க!" என்ற பதற்றமான குரல் அந்தப்பக்கம் கேட்க,


"இருக்கிற இம்சையில் இவனுங்க வேற..!" எனப் புலம்பியபடியே அலைபேசியை எடுத்துப் பார்த்தவர் நிஜமாகவே அதிர்ந்து தான் போனார்.



நிச்சயமாய் அவர் இப்படியொன்றை எதிர்பார்க்கவே இல்லை. இன்னும் என்னென்ன நடக்கப் போகிறதோ? என்ற பயம் முதன் முறையாய் அவருக்குள் முளைத்திருந்தது. தன் வாழ்நாளிலேயே முதன்முறையாய் இமயவரம்பனை நினைத்து அவருக்குள் ஓர் அதிர்வு வந்து போனது. அவனைக் கொஞ்சம் குறைத்து எடை போட்டுவிட்டதாக அவருக்குத் தோன்றியது. இனி அவர் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து, தன் அவப் பெயரை போக்கி, ஆட்சியை நிலைக்க வைக்க எதாவது செய்தாக வேண்டும். என்ன செய்வதெனப் புரியாமல் குழம்பிப் போய் அவர் நிற்க, அவரின் அலைபேசியில் அந்தக் காணொளி இன்னும் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.


"நாங்க அஞ்சு பேரும், இமயவரம்பன் மீது தாக்குதல் நடத்தியதற்குக் காரணம் மயில்ராவணன் சார் தான். பணத்திற்காகத்தான் செய்தோம். சார் எல்லாத்திற்குமே ப்ரூஃப் இருக்கு சார். இமயன் சாரை மொத்தமா முடிச்சுடுறது தான் எங்களுக்கு வந்த ஆர்டர்.!" என அவன் பேசிக் கொண்டே இருந்தான். இப்போது தான், இந்தச் சதுரங்க ஆட்டத்தின் பின்னால் இருப்பது இமயன் தான் என்பது அவருக்குத் தெளிவாய் விளங்கியது.
நால்வர் மாட்டியதும், ஒருவர் தப்பிச் சென்றதும் இதற்குத்தான். தன் மீதும் தன் ஆட்சியின் மீதும் அவதூறு பரப்பத்தான் இத்தனையும் என்பது அவருக்குப் புரிந்தது. புரிந்த மாத்திரத்தில், அவர் தயங்கி குழம்பி நின்றதெல்லாம் ஒரேயொரு நொடி மட்டும் தான். அடுத்தநொடியே தன் அதிகாரத்தைக் கையிலெடுத்து, எந்த மூலை முடுக்கிலும் இந்தக் காணொளி காட்சியை ஒளிபரப்பாத படி அதை நீக்குவதற்கான அனைத்துப் பணிகளையுமே துரிதமாய் செய்து முடித்தார்.


முழுதாகப் பத்து வருடங்கள் ஆட்சி செய்திருக்கிறார் தன் சாம்ராஜ்ஜியத்தை அத்தனை எளிதில் சரிய விட்டுவிடுவாரா என்ன? அரசியல் எப்படிப்பட்ட விளையாட்டு என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அடுத்த இரண்டு மணி நேரத்தில்,


"அரசின் மீது அவதுறு பரப்பியதாக, பதிமூன்று யூ ட்யூப் சேனல்கள் முடக்கப்பட்டன.!"


" சமுக வலைதளங்கள் மூலமாகத் தவறான கருத்துக்களைப் பரப்பும் நபர்கள் மீது உடனடி நடவடிக்கை.!"


" தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்படும்! தயவு செய்து அரசுக்குப் புறம்பான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம். முதலமைச்சர் வேண்டுகோள்.!"


எனச் செய்திகள் மாற்றி எழுதப்பட்டன. மாற்றி எழுதினார் மயில்ராவணன். முதலில் பதவி தன்னைக் காப்ப்பதற்குப் பிறகு தான் மக்களைக் காப்பதற்கு என்ற கொள்கை உடையவர் அவ்வளவு எளிதில் விட்டுவிடுவாரா என்ன? தனக்குச் சாதகமான காய்களை நகர்த்தித் தனக்குச் சாதகமான சூழ்நிலையைக் கொண்டு வந்த பின்னரே நிம்மதியாய் மூச்சுவிட்டார் மயில்ராவணன். ஆனாலும் இமயவரம்பன் அவர் கண்ணில் விழுந்த துரும்பாய் உறுத்திக் கொண்டிருந்தான்.


முதலில் இமயனோடு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினால், மட்டுமே இதற்கு முடிவுகட்ட முடியும் என உணர்ந்துக் கொண்டவர்,


"மணி.! இமயனை என்னை வந்து பார்க்கச் சொல்லு! என்னைத் தனியா மீட் பண்ண எங்கே வரணும்ன்னு அவனுக்குத் தெரியும்!" எனத் தன் உதவியாளரின் மூலம் தகவல் அனுப்பினார் அவர்.


"சார்.. இமயன் சார் கல்யாண வேலையில் பிஸியாய் இருக்காராம். இப்போதைக்கு உங்களை வந்து சந்திக்கிற சூழல் இல்லைன்னு சொல்ல சொன்னார் சார்!" என மணிகண்டன் மூலமாய் இமயனிடமிருந்து கிடைத்த பதில் அவரை அதீதக் கோபத்தில் ஆழ்த்தியது.


அந்தக் கோபம் தணியும் முன்னமே இமயனுக்கு அழைப்பெடுத்திருந்தார் மயில்ராவணன். ஆறேழு முறை அழைப்பெடுத்த பிறகும் கூட, அவன் அழைப்பை ஏற்காமல் போக, ஆத்திரமும் கோபமும் ஒருசேர உச்சிக்கு ஏறியிருக்க, கடுகடுத்த முகத்துடன் நின்றிருந்தார் அவர். அவர் மனமோ அடுத்துச் செய்ய வேண்டியவைகளைக் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது. ஜனநாயகம் எனப் பெருமையாய்ச் சொல்லிக்கொண்டு, பணத்தை மையமாய் வைத்துப் பணநாயகம் நடத்திக் கொண்டிருக்கும், இவர்களை ஏளனமாய்ச் சிரித்துக் கொண்டிருந்தது காலம்.

அன்பாகும்..?
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் டியர்ஸ்..!

அன்பின் அதீதங்களில்..! அடுத்த அத்தியாயம் பதிஞ்சாச்சு.

காத்திருந்து படிக்கும், உங்களின் தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள்.

கருத்துத் திரி:
Post in thread 'சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.' சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதீதம்-7

அந்த அறை முழுவதையும், நிசப்தம் மட்டுமே ஒட்டுமொத்தமாய் ஆட்கொண்டிருந்தது.


குளிரூட்டியின் மென்மையான காற்றுக்கு, கனமான திரைச்சீலைகள் கூட அசைய மறுத்தது. அந்த அளவிற்கு அடர்த்தியான நிசப்தம், அந்த அறையை ஆட்கொண்டிருக்க,


"என்ன சார், சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கீங்க? இந்த மாநிலத்தையே ஆளுற முதலமைச்சர் என் வீடு தேடி வந்திருக்கீங்கன்னா அது முக்கியமான விஷயமாகத்தான் இருக்கும்.!" என்றபடியே உள்ளே நுழைந்தான் இமயவரம்பன்.


இமயவரம்பனை அலைபேசியில் பிடிக்க முடியாது, நேரிலேயே அவனைச் சந்திப்பதற்காக மதுரை வந்துவிட்டார் மயில்ராவணன். அவன் வீட்டிற்கு அவனைத் தேடி வந்தவரை, காக்க வைத்து வேண்டுமென்றே அவன் தாமதமாக வந்து நிற்பதில், ஏகக் கடுப்பில் இருந்தார் அவர்.


"சும்மா நடிக்காதே இமயன்! நான் இங்கே வருவேன்னு உனக்குத் தெரியாதா என்ன?!"


"நீங்க இங்கே வருவீங்கன்னு எனக்கு எப்படிச் சார் தெரியும்? நான் என்ன உங்க மனசாட்சியா?!" நக்கலாய் இமயன் பதில் சொன்னதும் அவரிடத்தில் கோபத்தைத் தான் கிளப்பியது.


"ம்ப்ச்! உன் நடிப்பையெல்லாம் என்கிட்டே வச்சுக்காதே! இப்போ உனக்கு என்னதான் வேணும்? நான் தமிழ்நாட்டோட முதலமைச்சர் உன் வீட்டு வேலைக்காரன் இல்லை. உன் இஷ்டத்திற்கு என்ன வேணும்ன்னாலும் பண்ணலாம்ன்னு நினைப்பா? சொந்த ஊருக்காரன்னு கூடப் பார்க்க மாட்டேன். செஞ்சு விட்டுட்டு போய்ட்டே இருப்பேன் பார்த்துக்கோ!" எனக் கோபமாய்ப் பேசினார் மயில்ராவணன்.


"முடிஞ்சா செஞ்சு விட்டுருங்க! நான் எல்லாத்துக்கும் தயாராகத்தேன் இருக்கேன். என்னை என்ன பழைய இமயவரம்பன்னு நினைச்சீங்களா? பழைய மாதிரி அடிமையாய் உங்க காலடியில் கிடப்பேன்னு மட்டும் நினைச்சுராதீங்க! சென்னையிலேயே ஒய்யாரமாய் உட்கார்ந்துட்டு இருந்த உங்களை, என் வீடு தேடி, என் வாசல் தேடி வர வச்சிட்டேன்ல்ல? நீங்க முதலமைச்சர் தான் கடவுள் இல்லை. இப்போவும், கம்பீரமா உங்க பதவியில் நீங்க உட்கார்ந்திருக்கீங்கன்னா அதற்குக் காரணம் நான் தான். அது உங்களுக்கே நல்லா தெரியும்.!" என அவன் சொல்ல, மயில்ராவணன் முகத்தில் ஈயாடவில்லை.


"நீ எனக்காக நிறையச் செஞ்சுருக்க இமயன்.. நான் இல்லைன்னு சொல்லவே இல்லை. உன்னால் தான் நான் இந்த நிலையில் நிற்கிறேன். எனக்கு விழுந்த ஒவ்வொரு ஓட்டுக்குப் பின்னாடியும் நீ இருக்கேன்னு எனக்குத் தெரியும். எந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தலாம். தொகுதி வாரியாய் என்ன பிரச்சனை? நமக்கு ஓட்டு விழ வைக்க என்ன செய்யணும்? எங்கெங்கே எப்படி ஓட்டு கேட்கணும்ன்னு ஒவ்வொண்ணுக்கும் பின்னாலேயே தான் நீ இருந்த. இப்போவும் இருக்க. என்னதான் வெளியில் நீ கட்சிக்குச் சம்மந்தம் இல்லாத ஆள் மாதிரி இருந்தாலும், என்னோட தனிப்பட்ட அரசியல் ஆலோசகரா இருக்கிறவன் நீ தான். நான் நன்றி மறக்கிறவன் இல்லை இமயன்!" என அவர் சமாதான உடன்படிக்கைக்கு முயல,


"இம்புட்டு நன்றி உங்க மனசில் இருந்ததால் தான், என்னைக் கொல்ல ஆள் அனுப்புனீங்களா? இதிலேயே உங்க நன்றி என்னன்னு தெரியலை.?!" நறுக்குத் தெறித்தார் போல் கேட்டான் இமயன். அவர் பதிலே பேசவில்லை. அவரால் பதில் பேச முடியவில்லை.


"நா.. நான் ஒண்ணும் அதெல்லாம் பண்ணலை இமயன். உனக்கு என்னைப் பற்றித் தெரியாதா? உன் மேல நம்பிக்கையும், நன்றியும் இருக்கப் போய்த்தான், என் பொண்ணையே உனக்குக் கட்டிக் கொடுத்தேன். என்னைக் கை நீட்டி குற்றம் சொல்லும் முன் யோசிச்சு பாரு இமயன்!" என அவர் சொல்ல,



"நீங்க ஆள் ஏற்பாடு பண்ணுணீங்கன்னு எனக்குத் தெரியும். ஆதாரம் காட்டவா?! உங்க சுயநலத்திற்காக உங்க பொண்ணுக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணி வச்சீங்க.. கடைசியில் என்ன ஆச்சு? நான் உங்களை விட்டு வெளியே போய்டக் கூடாதுன்னு, என்னை இழுத்துப் பிடிக்கத் தானே இந்தக் கல்யாணத்தைப் பண்ணி வச்சீங்க?" என அவன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது வாயடைத்து நின்றார் மயில்ராவணன்.

இமயனுக்கு மனம் நிரம்ப வலித்தது. தன் தகப்பனுக்கு நிகராக நினைத்தவர் தன் முதுகில் குத்துவார் என அவன் கனவிலும் நினைத்ததில்லை. அவரை நம்பினான். தன்னை நம்பியதை விட, மயில்ராவணனை அதிகமாய் நம்பினான். ஆனால் அவர் தனக்கே துரோகம் செய்வார் என ஒருநாளும் அவன் நினைக்கவில்லை. அவர் அரசியல்வாதி.. இவரிடம் ஒன்றும், அவரிடம் ஒன்றும் மாற்றி மாற்றிப் பேசி, காரியம் சாதித்துக்கொள்ளும் வல்லமை படைத்தவர். அவருக்கு அது வழக்கம் தான். ஆனால் நம்பி காயம் பட்ட அவனுக்குத் தானே ஏமாற்றப்பட்டதன் வலி தெரியும். இன்றும் அவன் அவரை மதிக்கிறான். இன்றும் அவரைப் பற்றிய இரகசியங்கள் அவன் மனப் பெட்டகத்தில் பத்திரமாய் இருப்பதால் மட்டுமே அவர் தலை நிமிர்ந்து நடக்கிறார். இப்போதும், கண் சிமிட்டும் நேரத்தில், அவரைப் பற்றிய இரகசியங்களை அவன் உடைத்துவிட முடியும். ஆனாலும் அவனுக்கென்று சில கொள்ளைகள் இருக்கிறதே..?


இமயனைப் போல, நன்றிக்காக, நம்பிக்கைக்காகக் கடைசிவரை உண்மையாய் இருக்கும் நபர்கள் தான் அதிகமாய்க் காயப்படுகிறார்கள். இங்கே கேட்டு, அங்கே சொல்லி காரியம் சாதித்துக் கொண்டு, வெளியே நல்லவராய் காட்டிக் கொண்டு திரிபவர்கள், தனக்கென்று கூட்டம் சேர்த்துக் கொண்டு, நன்றாகத்தான் இருக்கிறார்கள் மயில்ராவணனைப் போல. காலம் கலிகாலமாய் மாறிவிட்ட பின் தலைகீழாய் மழை பெய்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை தான்.


"பேசுங்க சார்.. வாயைத் திறந்து பேசுங்க! இந்த மாநிலத்தின் முதலலமைச்சர், கட்சிக் கூட்டத்தில் வாய் ஓயாமல் பேசுறவர் இப்போ வாயடைச்சு நிற்பதின் காரணம் என்ன? எதுக்காக இந்த மௌனம்.? என் நல்லதுக்குன்னு நீங்க செஞ்சது அத்தனையும் உங்க சுயநலத்திற்காக மட்டும் தானே? அப்பறம் ஏன் எனக்காகன்னு பொய் சொல்றீங்க? நீங்க மேடையில் பேசி பேசி மக்களை ஏமாத்தற மாதிரி என்னையும் ஏமாற்றலாம்ன்னு நினைக்காதீங்க!" எனக் கோபமாய் அவன் பேச,.


"கொஞ்சம் பொறுமையாய் இரு இமயன்! நான் சொல்றதைக் கேளு! இப்போவும் எனக்கு நீ ரொம்ப முக்கியம். நீ முக்கியம்ன்னு நினைச்சதால் மட்டும் தான், எல்லா வேலையையும் விட்டுட்டு மதுரை வரை வந்திருக்கேன். உனக்கு எவ்வளவு பணம் வேணும்ன்னு சொல்லு. நாம நமக்குள்ளே ஒரு டீல் போட்டுப்போம். இந்தக் கட்சி, பதவின்னு நீ வராமல் இருக்கணும்ன்னா நான் உனக்கு எவ்வளவு தரணும்? நீ எவ்வளவு கேட்டாலும் நான் கொடுத்துடுறேன். ஆனால் நீ அதோட விலகிடணும்!" எனத் தன் காரியம் முடிவதற்காக, நிதானமாய்ப் பொறுமையாய், இமயன் மீது அக்கறை இருப்பவர் போலவே பேசினார் மயில்ராவணன்.

இமயன் பதில் ஏதும் பேசாமல், அமைதியாய் நிற்க,


"இங்கே பாரு இமயன்! உனக்கும் கல்யாணம் ஆகப் போகுது. நீயும் வாழணும். உன்னை நம்பி வர்ர அந்தப் பொண்ணையும் யோசிச்சு பாரு! நான் உன் நல்லதுக்குத் தான் சொல்றேன்ங்கிறது புரியும்.!" என அவன் மனதைக் கரைக்க முயன்றார் அவர்.


"அப்போ அந்தப் பாலம் கட்டுற கான்ட்ரேக்ட்டில் அடிச்சீங்களே.. அந்த ஐயாயிரம் கோடி.. அதை எனக்குக் கொடுங்க!" என அவன் சட்டெனக் கேட்டுவிட, கண்கள் தெறித்து விழுமளவிற்கு அதிர்வுடன் நிமிர்ந்து அவனைப் பார்த்தார் மயில்ராவணன்.


"விளையாடுறியா இமயன்.? நானும் என் பொறுமையை இழுத்துப் பிடிச்சு வச்சிட்டு நிற்கிறேன். என் பொறுமையை ரொம்பவே சோதிக்கிற நீ.. ஐயாயிரம் கோடி உனக்குச் சாதாரணமா போச்சா? அதில் வந்த பணம் சம்மந்தப்பட்டவங்களுக்கெல்லாம் பங்கு பிரிச்சுக் கொடுத்தாச்சு.!" என எரிச்சலுடன் சொன்னார் அவர்.


"நான் விளையாடலை சார். நிஜமாகத்தான் கேட்கிறேன். இது விளையாட்டு விஷயமில்லைன்னு எனக்குத் தெரியும்! தொகுதி மேம்பாட்டு நீதி, பேரிடர் மேலாண்மை நிதி, வடிகால் சீரமைப்பு நிதின்னு எவ்வளவு வருது.. நீங்க எவ்வளவு செலவு பண்ணுறீங்க? குறிப்பிட்ட பணிக்கு எவ்வளவு போகுது.. உங்க பைக்கு எவ்வளவு வருதுன்னு எல்லாமே எனக்குத் தெரியும். ஐயாயிரம் கோடியெல்லாம் உங்களுக்கு ஒரு விஷயமே இல்லைன்னு எனக்குத் தெரியும். ஸ்விஸ் பேங்க்கில் இதைவிட நிறையப் பதுக்கியிருக்கீங்கன்னு கூட எனக்குத் தெரியும்!" என அவன் சொல்ல,


"தெரிஞ்சு வச்சு என்ன செய்யப் போற? இதெல்லாம் வெளியில் போய்ச் சொன்னால் ஒரு பய நம்ப மாட்டான். கொலையே செஞ்சிருந்தாலும், ஆதாரம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது இமயன். இது அரசியல். இது ஒண்ணும் சின்னக் குழந்தைங்க விளையாட்டு இல்லை. வந்த வரை லாபம்ன்னு கொடுக்கிற காசை வாங்கிக்கிட்டு விலகும் வழியைப் பாரு! இப்போ உனக்கு நான் பணம் கொடுக்கிறதே, இத்தனை நாளாய் கட்சிக்காக உழைச்சிருக்கிறியே அதுக்கான சன்மானம் தான்.!"


"அப்போ உங்க பொண்ணைக் கட்டிக்கிட்டு என் வாழ்க்கையைத் தொலைச்சதுக்கான நஷ்ட ஈடாக என்ன தருவீங்க மாமனாரே? தொலைஞ்சு போன என் வாழ்க்கையை உங்களால் திருப்பித் தர முடியுமா? இது அரசியல், குழந்தைங்க விளையாட்டு இல்லைன்னு சொல்ற நீங்க, என் வாழ்க்கையை விளையாட்டாய் மாத்துனீங்களே அதுக்கான பதில் என்ன? நான் தொலைச்ச என் வாழ்க்கையை உங்க பணத்தால் மதிப்பிட முடியுமா? இல்லை நான் இழந்த நாட்களை உங்களால் திருப்பித் தர முடியுமா? உங்க பொண்ணோட நடந்த கல்யாணத்தை இல்லாமல் பண்ண முடியுமா? இப்போ நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன் தான்.. ஆனால் எனக்கு இது ரெண்டாம் கல்யாணம் தானே? இதை உங்களால் மாத்த முடியுமா? இதுக்கான நஷ்டஈடாக, சன்மானமாக, உங்க பாஷையில் சொல்லணும்ன்னா லஞ்சமாக என்ன தரப் போறீங்க?!" என அவர் கண்களை ஆழ்ந்து பார்த்துக் கேள்வி கேட்டான் இமயன்.


"ம்க்கும்..!" எனத் தொண்டையைச் செருமிக் கொண்டவர்,


"அதுக்காகத்தான் உன் கல்யாணத்தை நானே முன்னே நின்னு நடத்தி வைக்கிறேன். இது பத்தாதா உனக்கு? பணத்தைத் தண்ணியா இரைக்கிறேன். இதற்குமேல் என்ன செய்யணும்ன்னு நினைக்கிற?!" எனத் திமிராகவே கேட்டார்.


"நீங்க இப்போ நேரில் வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. நான் அன்றைக்கு ஃபோனிலேயே எனக்கு என்ன வேணும்ன்னு தெளிவா சொல்லிட்டேன். அதோட, நீங்க என்னைப் பார்க்க வரலைன்னு கூட எனக்குத் தெரியும் மாமனாரே.. மதுரையில் நடக்கிற புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைக்கத்தான் வந்தீங்கன்னு கூட எனக்குத் தெரியும். எனக்கு நம்மக் கட்சியில் பதவி வேணும். எம்.எல்.ஏ என்கிற அந்தஸ்து வேணும்.!" எனத் தெள்ளத் தெளிவாய் அவன் சொல்ல,


"ம்ப்ச்! எந்தத் தொகுதியும் காலியா இல்லை இமயன். தேர்தல் எல்லாம் முடிஞ்சாச்சு. இனி என் கையில் ஒண்ணும் இல்லை. வேணும்ன்னா அடுத்தத் தேர்தலில் பார்க்கலாம்!" தட்டிக் கழிக்க முயன்றார் மயில்ராவணன்.


"இந்தத் தட்டிக் கழிக்கிற வேலையெல்லாம் வேணாம் மாமா! நம்ம மேலூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் சுந்தரம் உடம்பு சரியில்லாமல் ஹாஸ்பிட்டலில் தானே இருக்கார். பிழைக்க வாய்ப்பில்லைன்னு சொல்லிட்டாங்களாமே..? அந்தத் தொகுதியில் என்னை நிறுத்துங்க! இத்தனை வருஷம் கட்சிப்பணி செஞ்ச எனக்காக இதைக் கூடச் செய்ய மாட்டீங்களா? நீங்க நினைச்சால் செய்யலாம் மாமா! ஏன்னா நீங்க இந்த மாநிலத்தோட முதலமைச்சர். உங்களால் முடியாதது எதாவது இருக்கு?" என நக்கலாகவே கேட்டான் அவன்.


"முடியலைன்னு நான் சொன்னால்?!" எனக் கேள்வியாய் அவர் நிறுத்த,


"இத்தனை வருஷமாய் உங்க கட்சியில் இருந்த நான்.. எதிர்க்கட்சியில் சேருவதை உங்களால் தடுக்க முடியாது..! வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும். அதோட பின் விளைவுகள் நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியது இல்லைன்னு நினைக்கிறேன். யோசிச்சு எனக்கு நல்ல முடிவா சொல்லுங்க மாமா! எனக்கு நல்லதா இருக்கணும்..! சொல்றது புரியுது தானே?!" என அழுத்தம் தந்து அவன் கேட்க, விக்கி விரைத்துப் போய் அசையாமல் நின்றார் மயில்ராவணன்.


********

"ம்மா! எதுக்கும்மா அவங்க ஊருக்குப் போகணும்? நான் எங்கேயும் வரலை.. நீங்க போய்ட்டு வாங்க! நான் கல்யாணத்திற்கு ரெண்டு நாள் முன்னாடி வர்ரேன்.!" எனத் தன் தாயிடம் புலம்பிக் கொண்டிருந்தாள் ஆருத்ரா.


"என்கிட்டே சொன்னதைப் போய் உன் தாத்தாக்கிட்டே சொல்லு ஆரு! அவிங்க ஊரில் தான் கல்யாணத்தை நடத்தணுமாம். பேசாமல் வாயை மூடிக்கிட்டு துணியை எடுத்து வைக்கிற வழியைப் பார்!"


"ம்ப்ச்! ம்மா! நம்ம வழக்கப்படி பொண்ணு வீட்டில் தானே கல்யாணம் பண்ணுவாங்க? இவங்க மட்டும் ஏன் புதுசு புதுசா செய்றாங்க? எனக்கு இதெல்லாம் பிடிக்கலை!" சலித்துக் கொண்டாள் அவள்.


"ஆமா! உன்னையும் என்னையும் கேட்டுத்தேன் இந்த வீட்டில் எல்லாம் நடக்குது பாரு? அவங்களுக்கு எது வசதியோ அதைத்தேன் செய்வாங்க! நீ வெரசா துணிமணிணை எடுத்து வச்சுட்டு, குளிச்சுட்டு வந்துரு. நல்ல சேலையாய் எடுத்து கட்டிக்கோ ஆரு!"


"ம்மா! நான் கிளம்புறதே பெரிய விசயம். இதில் சேலையெல்லாம் கட்டச் சொன்னன்னு வையி.. நான் வரவே மாட்டேன். அப்படியே சென்னைக்கு ஓடிப் போயிருவேன் பார்த்துக்கோ!"


"போடி.! அப்படியே என்னையும் கூட்டிக்கிட்டு போ! உனக்கு நடுவிலும் இந்தக் குடும்பத்திற்கு நடுவிலும் சிக்கி சீரழிஞ்சுட்டுக் கிடக்கேன். நிம்மதியாய் இவிங்க இல்லாத ஊரில் இருந்துட்டு போறேன். உன் தாத்தன் என்னடான்னா புள்ளையை வெரசா கிளப்பி விடுன்னு சொல்றார். நீ என்னடான்னா ஆயிரம் நொட்டை சொல்லிக்கிட்டு இங்கணயே உட்கார்ந்து கிடக்க. இதில் உன் பெரியம்மா வேற ஆரு கிளம்பிட்டாளா? ஏழு கிளம்பிட்டாளான்னு இப்போ வந்துருவா! என்னைப் போட்டு சாவடிக்கிறீங்க! உங்க கிட்டே கிடந்து பாடுபடுறதுக்குப் போய்ச் சேர்ந்துடலாம் போல இருக்கு.!" என ஆற்றாமையோடு இந்துமதி சொல்ல,

"ம்மா! ஏம்மா லுசு மாதிரி பேசுற..?" எனக் கேட்டாள் ஆருத்ரா.


"எம்மா ராசாத்தி! போதும் முடியலை.. வாயை மூடிட்டு கிளம்பு!" என அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,


"என்ன ஆரு, நேரம் ஆகிடுச்சு.. இன்னும் குளிக்காமல் உட்கார்ந்து கிடக்க? தாத்தாஅங்கண இன்னும் கிளம்பலையான்னு வையுறாக!" என்றபடி வந்து நின்றார் பொன்னி.


"அவருக்கு என்ன சேலை கட்டுற வேலையா? தலையைப் பின்னி பூ வைக்கிற வேலையா? போங்கக்கா ஆரு பத்து நிமிஷத்தில் வந்துடுவா!" என இந்துமதி சொல்ல பொன்னியின் முகம் ஒருமாதிரி சுருங்க, அமைதியாய் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.


"ம்மா! பெரியம்மா தாத்தாக்கிட்டே சொல்லிடப் போறாங்கம்மா!"


"சொன்னால் சொல்லட்டும். சும்மா இங்கே கேட்டு அங்கே சொல்லிக்கிட்டு.. எம்புட்டு தான் நானும் பொறுத்துப் போக?" எனச் சலித்துக் கொண்டார் இந்துமதி.


"ம்மா! பேசாமல், நீ சொன்ன மாதிரி நீயும் நானும் ஓடிப் போயிருவோமா? உனக்கும் இந்தக் கல்யாணம் பிடிக்கலை தானே? பின்னே ஏம்மா?!" எனக் கேட்டாள் ஆருத்ரா.


"கொஞ்சம் பயம் இருக்கு டி! இல்லைன்னு சொல்ல மாட்டேன். ஏன்னா ரெண்டாந்தாரம்ன்னு ஒண்ணு, அப்பறம் அந்தப் பையனுக்கு அடிப்பட்டது ஒண்ணு.. ரெண்டும் என் மனசுக்குள்ளே உறுத்திக்கிட்டு தான் இருக்கு. ஆனால் உன் தாத்தா என்னதேன் கோபமாய்ப் பேசினாலும், உங்களுக்குக் கெட்டது நினைக்க மாட்டாரு... அந்த ஒரேயொரு காரணத்திற்குத் தான் அமைதியாய் இருக்கேன்.! என்னதேன் கல்யாணத்தை விட்டுட்டு ஓடிப் போனாலும், உன் அப்பாவும், தாத்தாவும் நம்மளை விட்டுட்டுதேன் மறுவேலை பார்ப்பாங்க! சும்மா புலம்பாமல் படக்குன்னு கிளம்பி வா! நான் கீழே போறேன்.!" எனச் சொல்லிவிட்டு அவர் எழுந்து சென்றுவிட, யோசனையாய் அமர்ந்திருந்தாள் ஆருத்ரா.


அவளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. திருமணத்தை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், தவிர்க்கவும் முடியாமல், இருதலைக் கொள்ளி எறும்பாய் தவித்துக் கொண்டிருந்தாள் ஆருத்ரா.



எல்லாவற்றிற்கும் மேலாக அவள் நண்பன் ராகவ் இமயனுக்கு ஆதரவாய்ப் பேசுவதைத் தான் அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தனக்குத் தானே அவன் முதலில் நண்பன், அப்படியிருக்கையில் தன்னை விட்டுவிட்டு, அவன் இமயன் பக்கம் நிற்பதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.


'அப்படி என்ன இவன் நல்லவன்.? எல்லாரும் இவனுக்கே சப்போர்ட் பண்ணுறாங்க? ராகவ் மட்டும் தான் என் பக்கம் இருந்தான். இப்போ அவனும் நியாயம் பேசுறேன், அவன் கண்ணுல நேர்மை தெரியுதுன்னு திரியறான் எருமைமாடு! கடவுளே.. என்னைக் காப்பாத்து. என்னால் முடிஞ்ச வரை முயற்சி பண்ணிட்டேன். இந்தக் கல்யாணத்தை மட்டும் எப்படியாவது நிறுத்திடு.!' எனத் தனக்குள் வேண்டிக் கொண்டாள் ஆருத்ரா.


அடுத்த அரைமணி நேரத்தில் அழகான ஆர்க்கிட் நிறத்தில், வெள்ளிக் கரை வைத்த புடவை அணிந்து, தோகையாய் விரித்த கூந்தலுடன் படிகளில் இறங்கி வந்தாள். பெரிதாய் ஒப்பனை எதுவும் அவள் முகத்தில் இல்லை. புடவையிலிருந்த சில்வர் நிறத்திற்குத் தோதாக, குட்டி ஜிமிக்கியும், கழுத்தில் மெல்லிய சங்கிலியும் அணிந்திருந்தாள்.


"என்னடி இப்படி வந்து நிற்கிறே? நகையெல்லாம் எடுத்து போட்டுட்டு வான்னு சொன்னேன்ல்ல? எல்லார்கிட்டேயும் எனக்கு வசவு வாங்கிக் கொடுக்கிறதே உனக்கு வேலையா டி?" என இந்துமதி அவள் காதுக்குள் முணுமுணுக்க,


"ம்மா! நான் இப்படித்தான் வருவேன். இல்லைன்னா என்னை விட்டுட்டு நீங்க எல்லாம் கிளம்புங்க!" என அவள் பதிலுக்குச் சத்தமாய்ச் சொன்னாள்.


"கொஞ்சம் மெதுவா பேசு டி!" என மகளைக் கண்டித்தவர்,


"மஞ்சு! அக்காவோட நகையெல்லாம், அந்த மெருன் கலர் பேக்கில் இருக்கும் அதை எடுத்துட்டு வா!" எனத் தன் இளைய மகளைப் பணித்தார்.


"ஆமா இந்து! நீ செய்றதுதேன் சரி! பொண்ணுக்குப் பூவு, பொட்டு, நகைதேன் அழகு!" என இடையில் வந்து நின்றார் பொன்னி.


"ஆமா! ஃபாரின் கன்ட்ரீஸில் இருக்கிறவங்க எல்லாரும் பொட்டு வச்சு பூ வச்சுட்டு தானே திரியறாங்க? அவங்க எல்லாம் அழகா இல்லையா பெரியம்மா?" வேண்டுமென்றே கேட்டாள் ஆருத்ரா.


"ம்க்கும்.. அவங்க எங்கே அழகா இருக்காங்க? வெள்ளை வெளேர்ன்னு வெளுத்துப் போய்தேன் கிடக்காக!" எனப் பொன்னி சொன்ன அதே நேரம்,


"அவளுக்குப் பிடிச்ச மாதிரி வரட்டும் அத்தே! ஆராவைக் கட்டாயப் படுத்தாதீங்க!" என்றபடி வந்து நின்றான் இமயவரம்பன். தன் செவிகளை அவன் குரல் தீண்டிய மாத்திரத்தில், விலுக்கென்று தன்னை அறியாமலே நிமிர்ந்து பார்த்தாள் ஆருத்ரா. எப்போதும் போல், வேட்டி சட்டையில் தான் இருந்தான். ஆனாலும் அழகாகத் தான் இருந்தான்.


'இவனுக்கு வேற அவுட்- ஃபிட்டே கிடைக்காதா? எப்போ பார்த்தாலும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டைன்னு தான் இருக்கான். கொஞ்சம் கலர்ஃபுல்லா ட்ரெஸ் பண்ணினால் என்ன?' எனத் தனக்குள் நினைத்துக் கொண்டாள்.


'என்னைக் கட்டாயப்படுத்தி மணக்கத் துணியும் இவனா, என் விருப்பத்திற்கு மதிப்பளிக்கிறான்?' வியப்பாய் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் ஆருத்ரா.


அதே நேரம், இவர்கள் பயணம் செய்வதற்கான வாகனங்கள் தயாராகிவிட, வாகனத்தில் ஏறி அமர்ந்தாள் ஆருத்ரா. இவர்களின் வாகனம் கிளம்பி வாசலைக் கடக்கும் வரையிலுமே இமயனின் பார்வை ஆருத்ராவிடம் மட்டுமே இரசனையாய்ப் படிந்திருந்தது.
சிறிது தூரம் பயணப்பட்டு வந்ததுமே,


"எந்த ஊருக்கு போறோம்மா?!" தன் பக்கத்தில் அமர்ந்திருந்த அன்னையிடம் கேட்டாள் ஆருத்ரா.


"எந்த ஊருன்னு தெரியாமல்தேன், வண்டியில் ஏறி உட்கார்ந்தியாக்கும்? நல்ல பொண்ணு.. பத்திரிக்கையில் பார்த்திருந்தாலே எந்த ஊருன்னு தெரிஞ்சுருக்குமே?" எனப் பொன்னியின் குரல் பின்னாலிருந்து கேட்க,


"நான் எப்படியும் சென்னைக்குத்தான் போகப் போறேன். இந்த ஊரையெல்லாம் தெரிஞ்சு நான் என்ன பண்ணப் போறேன்?!" எனப் பொன்னிக்குப் பதில் கொடுத்தவள், தன் அன்னையிடம் மீண்டும் ஊரின் பெயரைச் சத்தமில்லாமல் வினவினாள்.


"யானைக்கல் டி! அதுதேன் இமயன் தம்பி பிறந்த ஊராம்!" என இந்துமதி சொல்ல,


"இப்படியொரு ஊரு மதுரையில் இருக்கா?!" எனக் கேட்டவளுக்கு, இந்தப் பெயரை எங்கோ கேட்டது போலவும் ஞாபகம் இருந்தது.


"நீயெல்லாம் மருதையில் பிறந்து வளர்ந்தேன்னு சொல்லிக்காதே! நம்ம வடக்குவெளி வீதியிலே யானைக்கல் சிலை இருக்குமே அந்த ஊருதேன் யானைக்கல். சின்ன வயசில் உங்க அப்பா கூட்டிட்டு போயிருக்காரே டி! உனக்கு ஞாபகம் இல்லை? பூங்கா, நீருற்று எல்லாம் பார்த்தேன்னு கதை சொல்லுவியே?!" என இந்துமதி கேட்க அவளுக்குச் சுத்தமாய் நினைவில்லை.


மதுரையின் வடக்கு வெளி வீதியில், நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் நிறுவப்பட்ட யானைக்கல் சிலையைச் சுற்றி அமைந்த மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதியே யானைக்கல் என்ற புறநகர்ப் பகுதி.



மதுரையின் நான்கு வெளிவீதிகளிலும் (கீழ வெளி வீதி, மேல வெளி வீதி, வடக்கு வெளி வீதி மற்றும் தெற்கு வெளி வீதி) பழங்காலத்தில் கட்டப்பட்டிருந்த பிரம்மாண்டமான கோட்டைச் சுவர்கள் மற்றும் நுழைவு வாயில்களில், மேல வெளி வீதி கோட்டை வாசலைத் தவிர மீதி மூன்று கோட்டைச் சுவர்களும், நுழைவு வாயில்களும், பிற்காலத்தில் வெள்ளைக்கார கலெக்டரான 'மாரட்' (Marret) என்பவரது உத்தரவால் அகற்றப்பட்டன. வடக்கு வாசல் அகற்றப்பட்ட இடத்தில் அடையாளச் சின்னமாக, மகாலிலிருந்து எடுத்து வரப்பட்ட ஒரு யானைக்கல் சிலை நிறுவப்பட்டது. அதுவே, இன்றும் காட்சி தருகிறது. அந்த இடமே யானைக்கல் என்று இன்றும் அழைக்கப்படுகிறது.


சில நூற்றாண்டுகளுக்கு முன்னர், கிழக்குத் திசை நோக்கி வைக்கப்பட்டிருந்த இந்த யானைக்கல் சிலை, சில காலம் வேறு திசையைப் பார்க்கும் வண்ணம் திருப்பி வைக்கப்பட்டது. அப்போது முதல் மழை இல்லாது மதுரை வறட்சியாகக் காணப்பட்டதாகவும், பின்னர்ப் பழையபடி கிழக்குத் திசை நோக்கியே திருப்பி வைக்கப்பட்டதும், மீண்டும் மழையால் செழிப்படைந்ததாகவும் செவி வழிக் கதை ஒன்று உண்டு. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தற்போது காந்தியடிகள் சிலை, சிறிய பூங்கா மற்றும் நீரூற்றும் ஏற்படுத்தப்பட்டு, மதுரை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், யானைக்கல்லும் புதுப்பிக்கப்பட்டு ஜொலிக்கிறது.


ஆனால் அவளுக்கு எதுவும் நினைவில்லாமல் போனாலும், அந்தப் பெயர் எங்கோ கேட்டது போல் மட்டும் ஞாபகம் இருந்தது. ஒருவேளை சிறு வயதில் போய் வந்ததால் நினைவிருக்குமோ என நினைத்துக் கொண்டாள்.


அதே நேரம், 'ராகவை காலையிலிருந்து பார்க்கவே இல்லையே? எங்கே சென்றான் அவன்? சொல்லாமல் கொள்ளாமல் ஊருக்குப் போய் விட்டானோ?!' என்ற எண்ணம் தோன்ற,


"ராகவ் எங்கேம்மா?" எனத் தன் அன்னையிடம் கேட்டாள் ஆருத்ரா.


"அவரு இமயன் கூட இருப்பாரு. அவரு தானே மாப்பிள்ளை தோழன். அந்த ராகவ் உன் கூடத்தேன் வேலை செய்யுதாம்ல்ல?! நீயும் ஒத்தை வார்த்தை கூடச் சொல்லவே இல்லை ஆரு?!" எனத் தன் அன்னை பதில் கேள்வி கேட்பதை விநோதமாய்ப் பார்த்தாள் ஆருத்ரா.


"ஏம்மா உனக்குத் தெரியாதாக்கும்? அவன் என் ஃப்ரெண்ட் மா! அவன் என்னைப் பார்க்கத்தான் இங்கே வந்தான். தாத்தா கூடச் சென்னையில் பையன் கூடச் சுத்துறேன்னு திட்டினாரே.. இவன் தான் அவன். நீ என்னடான்னா அவன் என் கூட வேலை செய்யறதே தெரியாதுங்கிற?" என அவள் கேட்க,


"ஆமாம்மா! ஆரு என்கிட்டே சொல்லிருக்கா! ராகவ் அவ கூட வொர்க் பண்ணுறவங்க தான்.!" என மஞ்சரியும் இடையிட்டு சொல்ல,


"அப்போ அதுவும், இதுவும், ஒரே பையன் தானா? எனக்கு உன்கூட வேலை செய்யறதெல்லாம் இப்போதேன் தெரியும். முதல் நாள், இமயன் அந்தப் பையனை நம்ம வீட்டுக்கு கூட்டி வந்துச்சே, அப்போ தாத்தாதேன் இந்தப் பையன் இமயனோட தம்பின்னு சொன்னாக. அது மட்டுந்தேன் எனக்குத் தெரியும். பிறகு ராகவ் தான் உன் கூட வேலை பார்க்கிறதை சொன்னிச்சு!" என்ற அபிராமியின் கூற்றில் ஒட்டுமொத்தமாய் அதிர்ந்து போனாள் ஆருத்ரா.


"ம்மா.. நீ.. நிஜமாகத் தான் சொல்றியா? சும்மா பொய் சொல்லாதே மா!" எனக் குரல் கமறக் கேட்டாள் அவள்.


"இந்த விஷயத்தில் பொய் சொல்லி நான் என்னடி செய்யப் போறேன்?! நீ வேணும்ன்னா அந்த ராகவ் கிட்டேயே கேளு! இமயனின் தம்பிதேன் இந்த ராகவ். இதுவே தெரியலை ஃப்ரெண்டுன்னு சொல்லிக்கிற.." என அவர் சொல்லிவிட, தன்னை ஏமாற்றிய ராகவின் மீது அதீதக் கோபத்தில் அமர்ந்திருந்தாள் ஆருத்ரா.

அன்பாகும்..?
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் டியர்ஸ்..

அன்பின் அதீதங்களில் அடுத்த அத்தியாயம் பதிஞ்சாச்சு.

தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள்.

கருத்துத் திரி:

Post in thread 'சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.' சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதீதம்-8


யானைக்கல்லில் இருந்த அந்தப் பெரிய வீட்டில் ஆருத்ரா கால் பதிக்கும் முன்னே, அந்த வீட்டைச் சுற்றிலும் கூட்டம் கூடி நின்றது.
அந்த ஊரிலேயே அந்த வீடுதான் மிகப் பெரிதாய் இருந்தது.


ஆருத்ராவோ மிரட்சியுடன் பார்த்தபடிடே வாகனத்திலிருந்து இறங்கினாள். சுற்றி நிற்பவர்கள் அனைவருமே இமயவரம்பனின் உறவுக்காரர்கள் என்பதை அவளால் உணர முடிந்தது. கூட்டத்திலிருந்த மூத்த பெண்மணியொருவர் ஆருத்ராவின் முகம் வழித்துக் கொஞ்சி, நெட்டி முறித்து முத்தம் வைத்தார்.


"நல்லா இருக்கியாத்தா? நான்தேன் இமயனுக்கு அப்பத்தா! நீ உன் விருப்பம் போலக் கூப்பிடு, அம்மாச்சின்னு கூப்பிட்டாலும் சரித்தேன். அப்பத்தான்னு கூப்பிட்டாலும் சரித்தேன்.!" எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் செல்லம்மாள்.


"வாம்மா!" என இமயவரம்பனின் அன்னை தனலெட்சுமி அழைத்துப் போக,


"எல்லாரும் பிறகு பேசுங்க! மருமக கொஞ்ச நேரம் உட்காரட்டும்!" எனச் சொன்ன அண்ணாமலை, இமயவரம்பனின் தந்தையாகத்தான் இருக்கும் என்பதை அவளால் உணரமுடிந்தது. இமயன் அதிகமாய்த் தந்தையின் சாயலையும், ராகவ் தன் தாயின் சாயலையும் கொண்டிருக்கிறான் என்பதைப் பார்த்த மாத்திரத்தில் உணர்ந்துக் கொண்டாள் ஆருத்ரா.


அவளை உள்ளே வரவேற்று, அவள் காலை உணவை உண்டு முடிக்கும் வரை, இமயனின் உறவினர்கள் ஒவ்வொருவராய் வந்து அறிமுகம் செய்து கொள்ள, தலையைச் சுற்றியது ஆருத்ராவிற்கு. ஒரே நாளில் அத்தனை பேரும், அறிமுகம் ஆனதில் அவளுக்கு மூளை குழம்பியது.



"முதல் முதலாய் பார்க்குறீல்ல.. அதேன் அப்படி இருக்கு. அங்கண இங்கணன்னு விஷேஷத்தில் பார்க்கும் போதும், விருந்துக்குப் போகும் போதும், யாரு எவருன்னு தெரிஞ்சுரும்!" எனச் சொன்னார் தனலெட்சுமி. என்ன சொல்வதெனத் தெரியாமல் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டாள்.



"என்னத்தா! பொம்மை மாதிரி தலையைத் தலையை ஆட்டுற? நான் என்ன மூணாவது மனுஷியா? சரிங்க அத்தைன்னு வாய் நிறையச் சொல்லுத்தா! என் மனசு நிறைஞ்சு போகும்ல்ல?!" என அவர் சொல்ல,



"சரி அத்தை!" எனத் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள். அவளுக்கு அந்தப் புதிய சூழ்நிலை, ஒரு மாதிரி அசௌகரியமாய் இருக்க, யாரிடமும் பேசவோ பதில் சொல்லவோ பிடிக்கவில்லை. அதோடு எல்லாரிடமும் போலியாய் சிரித்து வைப்பதும், அவளுக்கு ஒரு மாதிரியாய் இருந்தது. தன் அன்னையிடம் பேசலாம் என அவள் தன் குடும்பத்தினரைத் தேட, அவர்கள் இமயன் குடும்பத்தினரோடு கலகலப்பாய் பேசிக் கொண்டிருந்தனர்.



'இங்கே வர்ர வரை, எனக்குமே கல்யாணத்தில் விருப்பமில்லை. சந்தேகமா இருக்கு.. அது இதுன்னு சொல்லிட்டு, இப்போ வந்து இங்கே சிரிச்சு சிரிச்சு பேசுறதைப் பார்! இந்த அம்மா வரட்டும்..!' எனத் தனக்குள் புலம்பியவள்,



"நான் ரூமுக்கு போகலமா அத்தை?!" என வேண்டாவெறுப்பாய் கடைசியில் அந்த அத்தையைச் சேர்துக் கொண்டாள்.



"நீ போம்மா! முதல் மாடியிலே நடுவாப்ல இருக்கிற ரூமுதேன்.. துணைக்குத் தங்கச்சியைக் கூப்பிட்டுக்கோ!" எனச் சொன்னவர்,
உள்ளே அழைத்துப் போய், அவளுக்கான அறையைக் காட்ட, தன் தங்கை மஞ்சரியுடன் அறையிலிருந்த மெத்திருக்கையில் அமர்ந்திருந்தாள் ஆருத்ரா.



"கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தா..! நான் பிறகு வாரேன்!" எனச் சொல்லிவிட்டு, தனலெட்சுமி வெளியே சென்ற பின்னர்த் தான் அவளால் நிம்மதியாய் மூச்சுவிட முடிந்தது.



என்னவோ, அவளால் இந்தச் சூழ்நிலையில் ஒட்டவே முடியவில்லை. கொஞ்சம் பயமாகவும் இருந்தது. அதோடு மனதிற்குள் நிறைய ஓடிக் கொண்டிருந்தது. முக்கியமாய் அவள் இங்கே வந்ததிலிருந்து தேடிக் கொண்டிருப்பது ராகவைத் தான். அவனை என்ன ஏதென்று இரண்டு வார்த்தைகளாவது கேட்டால் தான் மனம் ஆறும். இமயனை விட அதீதக் கோபம் ரராகவின் மீது அவளுக்கு இருந்தது.



"ஆரு! ஏன் டென்ஷனா இருக்கே? எல்லாம் சரியாகிடும்.! உன் முகமே நீ சரியில்லைன்னு காட்டிக் கொடுக்குது. கொஞ்சம் நார்மலா இரு!" என ஆருத்ராவின் முகத்தை வைத்தே சொன்னாள் மஞ்சரி.



"எனக்கு ரொம்ப ப்ரஷரா இருக்கு மஞ்சு! ஐ கான்ட் கன்ட்ரோல் மைசெல்ஃப்! ஒரு பக்கம் இந்தப் பிடிக்காத கல்யாணம். இன்னொரு பக்கம் இந்த ராகவ். என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் தெரியுமா அவன்.இப்படி என்னை நம்ப வச்சு கழுத்தறுப்பான்னு நினைக்கவே இல்லை! கஷ்டமா இருக்கு மஞ்சு!" என்ற ஆருத்ராவின் குரல் உடைந்தது.



ஆருத்ரா முதன் முறையாய் கொஞ்சம் பலவீனமாய் உணர்ந்தாள். எங்குத் திரும்பினாலும் ஏமாற்றம். அவளுக்கு நிரம்பவும் வலித்தது. தன் உணர்ச்சிகளைக் கொட்ட முடியாது, மனதிற்குள் தேக்கி வைத்து தேக்கி வைத்து அதுவே பேரழுத்தமாய் அவள் மனதிற்குள் உருப்பெற்றிருந்தது. கோபம், ஆத்திரம், அழுகை எல்லாமே உணர்வுகளின் வெளிப்பாடு தானே? நம் மன அழுத்தங்களை, உள்ளே தேங்கிக் கிடக்கும் ரணங்களைக் கொட்டித் தீர்க்காவிடில் அது அழுத்தமாய் மாறத்தானே செய்யும்.


ஆருத்ராவிற்கும் அப்படித்தான். ஒருபுறம் விவேக்குடன் காதல் முறிவு.. இன்னொருபுறம் இமயனுடனான திருமண ஏற்பாடு.. இறுதியாய் உயிர் நண்பனாய் நினைத்தவன் ஏமாற்றிவிட்டானே.. என்ற கோபமும் சேர்ந்து அவள் மனதை அழுத்தியது. போதாக்குறைக்கு, இமயன் வீட்டின் புதிய சூழ்நிலையும் சேர்ந்து அவள் மன அழுத்தத்தை இன்னும் கொஞ்சம் கூட்டியது.



'ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது?' என நினைக்காமல் இருக்க முடியவில்லை. சுற்றிலும் இத்தனை பேர் இருந்தும், தனியே இருப்பதாய் உணர்ந்தாள் ஆருத்ரா.


தொண்டைக் குழிக்குள் அடைத்துக் கொண்டு நிற்கும் கோபத்தைக் கொட்டிவிட்டால், அவள் சாதாரணமாய் மாறிவிடுவாளென அவளுக்கே தெரியும். அதுவரை அவளின் இந்த மனநிலை மாறப் போவதில்லை என்பதும் அவளுக்குத் தெரியும். இல்லாத பொறூமையை இழுத்து இழுத்துப் பிடித்தவள், நேரடியாய் கேட்டுவிடலாம் என ராகவிற்கே அழைத்துவிட்டாள்.


முதன் முறை முழு அழைப்பும் சென்று எடுக்கப்படாமல் நின்று போகவும், மீண்டும் கோபத்தோடு அழைத்தாள் ஆருத்ரா. இரண்டாம் முறை அழைத்ததும் அழைப்பை ஏற்றான் ராகவ்.



"எங்கே இருக்க டா?!" குரலிலே அவள் கோபம் அவனுக்குப் புரிந்தது.


"வீட்டில் தான் ஆரு!" என அவன் சொன்ன மாத்திரத்தில்,



"எந்த வீட்டில் டா? எங்க வீட்டில் இருக்கியா? இல்லை உன்னோட சொந்த வீட்டில் இருக்கியா? இமயனோட தம்பிங்கிறதை மறைச்ச உனக்கு வீட்டை மறைக்கிறது ஒண்ணும் பெருசு இல்லையே? என்னை ஏமாத்திட்டல்ல ராகவ்?!" மூச்சு விடாமல் கேள்வி கேட்டாள் ஆருத்ரா.



"ஆரு.. ப்ளீஸ் காம்டௌன்! நானே உன்கிட்டே பேசணும்ன்னு நினைச்சேன். என்னன்னு நான் தெளிவா சொல்றேன். கொஞ்சம் வெய்ட் பண்ணு!"



"எப்போ வரை வெய்ட் பண்ணுறது டா? உன் அண்ணன் என் கழுத்தில் தாலி கட்டும் வரைக்கும் வெய்ட் பண்ணவா?"


"ஆரு!"


"என்னடா ஆரு? உனக்கு உண்மை தெரிஞ்சப்போவே சொல்லியிருக்கலாமே டா? கடைசியில் நீயே சுயநலமா யோசிச்சுட்டே தானே? உனக்கும் அந்த விவேக்கிற்கும் என்ன வித்தியாசம்? அவன் காதல்ன்னு சொல்லி ஏமாத்தினான். நீ நட்புன்னு சொல்லி ஏமாத்திட்டே! இட்ஸ் ஹர்ட் மீ லாட் ராகவ்.!" தொண்டை அடைக்க அவள் சொன்னதில், ராகவிற்கே ஒருமாதிரியாய் இருந்தது.



"ஆரு ப்ளீஸ்..! வீட்டில் எல்லாரும் போகட்டும், நானே உன்னை வந்து மீட் பண்ணுறேன். அதுவரை மட்டும் கொஞ்சம் பொறுமையாய் இரு.!" அவன் சொல்ல வந்ததைக் கேட்காமல், இணைப்பைத் துண்டித்திருந்தாள் ஆருத்ரா.



இப்போதும், அவளுக்குள் இருந்த கோபம் வடிய மறுத்தது. வழி தெரியாத காட்டுக்குள் மாட்டிக் கொண்டதைப் போல் உணர்ந்தவள், கட்டிலில் அமர்ந்த வாக்கிலேயே, கண்கள் மூடி பின்னால் சாய்ந்தாள். கண்கள் கலங்கி அழுகை வரும் போல் இருந்தது அவளுக்கு. யார் தோளிலாவது சாய்ந்து அழுது தீர்த்துவிட்டால், நிம்மதியாய் இருக்குமோ எனத் தோன்றியது. அவளுக்கிருந்த நெருங்கிய தோழிகள் யாரும், இப்போது தொடர்பில் இல்லை. செய்வதறியாது வழி தொலைந்த குழந்தையைப் போல் உணர்ந்தாள் அவள்.



'பேசாமல், அன்னையிடம் அத்தனையும் சொல்லி அழுது தீர்த்துவிடுவோமா?' என மனம் சொன்னாலும், தன் பாரத்தை அவரிடம் இறக்கி வைத்து, அவர் மனதில் பாரமேற்ற வேண்டுமா? இருமனதாய் இருக்க, அன்னையிடம் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தையும் கைவிட்டாள் ஆருத்ரா.



அதே நேரம், அவள் மனம் இன்னொருவிதமாய்ச் சிந்தித்தது.
'என்னை ஏமாற்றியவர்களுக்காக, எனக்குத் துரோகம் செய்தவர்களுக்காக நான் ஏன் யோசிக்க வேண்டும்.? ராகவ் என்னைத் திட்டமிட்டு ஏமாற்றியிருக்கிறான்.


அவன் அண்ணனின் வாழ்க்கைக்காக என் வாழ்க்கையை அழிக்கத் துணிந்தவனுக்காக நான் ஏன் இங்கே இருக்க வேண்டும்? இந்தத் திருமணம் நின்று போனால், ராகவிற்கு வலிக்கும் தானே? எனக்கு வலித்ததைப் போல் அவனுக்கும் வலிக்க வேண்டும்!' என யோசித்தவள், அதற்கு மேல் துளியும் தாமதிக்கவே இல்லை. ஏனோ அவளைச் சுற்றியிருந்த தடைகள் விலகியதைப் போல் உணர்ந்தாள். இனி யாருக்காகவும் யோசிக்கப் போவதில்லை.. என முடிவு செய்து கொண்டவள், தன் பயணத்திற்கான பயணச் சீட்டை பதிவு செய்தாள்.


மாலை நான்கு மணிக்கு பேருந்து குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேரும் என, பேருந்தின் பெயர், எண், நேரம் எல்லாம் அவளுக்குக் குறுஞ்செய்தியாய் வந்தது. குறிப்பிட்ட நேரத்திற்குள் பேருந்து நிலையம் செல்வதற்காய் வாடகை வாகனத்தையும் புக் செய்துவிட்டு, முதலில் உடையை மாற்றினாள். புடவையை அவிழ்த்து வீசிவிட்டு, தனக்கு வசதியாய் சுடிதார் அணிந்துக் கொண்டாள்.



"ஆரு.. என்ன செய்யப் போற? எதுக்கு ட்ரெஸ் மாத்துறே? எங்கே போகப் போற?!" தமக்கையின் செயல்களைப் பார்த்து, பயந்து போய்க் கேள்வி கேட்டாள் மஞ்சரி.


"நான் இங்கிருந்து கிளம்பப் போறேன். யார் கேட்டாலும் சொல்லிடு.!" எனத் தங்கையிடம், மறைக்காமல் உண்மையைச் சொன்னவள், தனக்குத் தேவையான பொருட்களை மட்டும், தனக்கான பெட்டியில் அடுக்கத் துவங்கினாள்.


"ஆரு அம்மா கேட்டால் என்ன சொல்லட்டும்?!"


"அம்மாகிட்டே நான் கிளம்பிட்டேன்னு சொல்லு! அப்பறம், எல்லா ஜுவல்ஸும் அந்த மெரூன் பேக்கில் தான் இருக்கு. நான் எதையும் எடுத்துட்டுப் போகலை! அதையும் சொல்லிடு. நான் கழுத்தில் காதில் போட்டிருக்கிறது எல்லாமே இமிட்டேஷன் ஜுவல்லரிஸ் தான் புரியுதா?!"


"ஆரு.. எனக்குப் பயமா இருக்கு.. நான் இப்போவே அம்மாகிட்டே போய்ச் சொல்லப் போறேன்.!"


"போய்ச் சொல்லு! எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. எல்லாரும் பார்க்க, எல்லாருக்கும் தெரிஞ்சே நான் போறேன். யார் தடுத்தாலும், இந்த முறை நான் கேட்கப் போறது இல்லை. இந்தக் கல்யாணமும் வேணாம். கண்ணராவியும் வேணாம்!" என அவள் சொல்ல, என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பி நின்றாள் மஞ்சரி. ஒருபுறம் தாயிடம் சொல்லி விடலாம் என அவள் மனம் சொன்னாலும், தன் உடன்பிறந்தவளைக் காட்டிக் கொடுக்கவும் அவளுக்கு மனம் வரவில்லை.


"ஆரு.. நாம வேணும்ன்னா யார்கிட்டேயாவது பேசி பார்க்கலாமா?!"


"யார்க்கிட்டே பேசச் சொல்ற? நாம பேசுறதை யார் காதுகொடுத்து கேட்பாங்க? அவங்க அவங்களுக்கு, அவங்க கௌரவம் தான் முக்கியம். இவங்களோட, வெட்டி கௌரவத்திற்கு என் வாழ்க்கையை நான் பலியாக்கணுமா? என்னால் முடியாது.!" என உறுதியாய் சொன்னாள் ஆருத்ரா.
மஞ்சரி சில நிமிடங்கள் யோசித்தபடியே நின்றாள். பின் ஏதோ முடிவெடுத்து நிமிர்ந்தவளாக,


"ஆரு! நீ சென்னை போய்ட்டு, எனக்கு மட்டும் கால் பண்ணி சொல்வியா? நீ பத்திரமா போய்ட்டியா இல்லையான்னு தெரியாமல், எனக்குப் பயமா இருக்கும் ஆரு! உனக்குப் பிடிக்காத விஷயத்தை நீ யாருக்காகவும் ஏத்துக்க வேண்டாம். நீ கிளம்பு! நான் யார்க்கிட்டேயும் சொல்ல மாட்டேன். தோட்டத்துப் பக்கமா இன்னொரு வழி இருக்கு. பேசாமல் அந்த வழியாய் போய்டு!" எனத் தமக்கையைப் புரிந்துக் கொண்டவளாய் மஞ்சரி சொல்ல, தன் தங்கையை இறுக அணைத்துக் கொண்டாள் ஆருத்ரா.


"தேங்க்ஸ் டி மஞ்சு!" நீர் தேங்கிய கண்களோடு சொன்னாள் ஆருத்ரா. யாருமே புரிந்து கொள்ளாத போது, தன் உடன்பிறந்தவளாவது புரிந்துக் கொண்டாளே.. என்ற நிம்மதியும் நெகிழ்ச்சியும் அவள் மனதை நிறைத்திருந்தது.


*******


மதிய உணவிற்குப் பிறகு உறவினர் கூட்டம் வீட்டை விட்டுக் கிளம்பியிருக்க, அந்த வீடு முழுவதும், அமைதியாய் இருந்தது. தன் அறையிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தாள். வெளியே யாரையும் காணோம், கையில் பயணப் பொதியைத் தூக்கிக் கொண்டு மஞ்சரியிடம் மட்டும் தலையசைத்து விடைபெற்றுக் கொண்டு வெளியே கிளம்பியிருந்தாள். அவள் நல்ல நேரமோ என்னவோ வீட்டில் யாரும் அவளைப் பார்க்கவும் இல்லை. அவள் யார் கண்ணிலும் விழவும் இல்லை.


மஞ்சரி சொன்னபடியே, வீட்டின் பின்புறமிருந்த தோட்டத்தின் கதவைத் திறந்து கொண்டு, கண்ணுக்குத் தெரிந்த ஒற்றையடிப் பாதையைப் பிடித்து விறுவிறுவென நடக்கத் தொடங்கிவிட்டாள்.

பின்னால் திரும்பிப் பார்க்காமல் வேகமாக நடந்தவள், பிரதான சாலையை அடைந்த அதே நேரம், அவள் ஏற்கனவே புக் செய்திருந்த வாடகை வாகனமும் வந்து சேரவும், ஏறி அமர்ந்தவள் ஒருபுறம் நிம்மதியாய் உணர்ந்தாலும், அன்று போல், இன்றும் இமயன் வந்துவிடுவானே? என்ற பயமும் அவளுக்குள் இருந்தது.


'எப்படியாவது சென்னை சென்று சேர்ந்துவிட வேண்டும்!' என நினைத்தவளுக்கு, முன்பு இல்லாத அளவிற்கு மனவுறுதி கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் இருந்தது. ஒருவேளை ராகவ் தந்த ஏமாற்றத்தின் வெளிப்பாடு தான் இந்த மனவுறுதியோ என்னவோ? வீட்டுக்குள்ளேயே அமர்ந்து, புழுங்கிக் கொண்டிருக்காமல், தனக்காக யோசித்து, தானாக முடிவெடுத்த பின், தன் மனம் லேசாவதை உணர்ந்தாள் ஆருத்ரா.
மகிழுந்தின் ஜன்னல் வழியே வெளியே வேடிக்கைப் பார்த்தபடி அவள் அமர்ந்திருக்க, அவள் அலைபேசி இசைந்து, அவள் கவனத்தைத் திசை திருப்பியது.


கைப்பைக்குள் தேடி எடுத்து அலைபேசியின் திரையைப் பார்த்தாள். இரண்டு முறை ராகவ் அழைத்திருந்தான். அவனின் அழைப்பை அவள் துளிகூடக் கண்டுக்கொள்ளவில்லை. ராகவின் அழைப்பு மட்டுமல்லாது, இன்னும் சில அழைப்புகள் வந்திருக்க,


'வேற யார் கால் பண்ணினா?!' என எடுத்துப் பார்த்தவளுக்கு, விவேக்கின் எண்ணைக் கண்டு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. என்னதான் அவன் எண்ணை அவள் அலைபேசியிலிருந்தே அழித்திருந்தாலும் கூட, விவேக்கின் எண் அவளுக்கு நன்றாக ஞாபகம் இருந்தது. அவள் கரத்தில் அலைபேசியை வைத்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே, மீண்டும் விவேக்கிடமிருந்து அழைப்பு வந்தது.



"இவன் எதுக்குக் கால் பண்ணுறான்?" என எரிச்சலுடன் முணுமுணுத்தவள், எடுக்காமல் விட்டாலும், திரும்ப அழைப்பான் என்றெண்ணி, அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தாள்.


"இப்போ எதுக்குக் கால் பண்ணுற? உனக்கும் எனக்கும் ஒண்ணும் இல்லைன்னு ஆகிடுச்சே.. அப்பறம் ஏன் கால் பண்ணுற? ஒழுங்கா ஃபோனைக் கட் பண்ணிட்டு ஓடிரு!" எனக் கோபமாகவே சொன்னாள் அவள்.


"முடிஞ்சு போன உறவை புதுப்பிக்கவெல்லாம் நான் கால் பண்ணலை., நீ என்னதான் நிறுத்த முயற்சி பண்ணினாலும், எனக்கும் நந்தினிக்குமான கல்யாணம் நிற்கப் போறதில்லை. நடக்கத்தான் போகுது.!"


"என்னமோ பண்ணித் தொலை! அதுக்கு ஏன் எனக்குக் கால் பண்ணின? போ.. போய் உன் கல்யாண வேலையைப் பாரு!" அவனின் பேச்சு இவளுக்குள் கோபத்தைக் கிளப்ப, நக்கலாகவே பதில் சொன்னாள் ஆருத்ரா.


"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. நானாவது என் குடும்பத்திற்காக, உன்னை விட்டுட்டு நந்தினியைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். ஆனால் நீ.. கேவலம் பணம்.. பணத்திற்காக ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்சுட்ட பார்த்தியா? ஹவ் சீட் யூ ஆர்? நான் துரோகம் பண்ணிட்டேன், அது, இதுன்னு கத்தினே? இப்போ பணத்துக்காக நீ செய்றதுக்குப் பேர் என்ன?!" என அவன் கேட்க, அவளுக்கு அதிதக் கோபம் தலைக்கு மேல் ஏறியது.


"நீ கேட்கிற எந்தக் கேள்விக்கும், நான் பதில் சொல்லப் போறதில்லை. சொல்ல வேண்டிய அவசியமும் எனக்கில்லை.!" எனச் சொன்னவள், அழைப்பைத் துண்டித்துவிட்டு, அப்போது தான் வாகனம் வழிமாறி செல்வதைக் கவனித்தாள். அவள் பயணிக்கும் வாகனம், பேருந்து நிலையம் செல்லாமல், ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்குள் சென்று கொண்டிருப்பதை அவதானித்தாள். பயம் கொஞ்சம் கொஞ்சமாய் அவளை ஆட்கொள்ளத் துவங்கியிருந்தது.


"ஹலோ.. ப்ரோ.. நான் சொன்னதை விட்டுட்டு வேற எங்கேயோ போறீங்க? ஸ்டாப் பண்ணுறீங்களா இல்லையா? நான் பஸ் ஸாண்ட்க்கு போகணும்!"


"எதுக்கும்மா பயப்படுற? இது குறுக்கு வழிம்மா! உனக்குப் பஸ் ஸ்டாண்ட்டுக்கு தானே போகணும்? நான் கூட்டிட்டு போறேன், என அந்த ஓட்டுநர் ஒருமாதிரியான குரலில் சொல்ல, கொஞ்சம் பயந்து போனாள் ஆருத்ரா.


அதே நேரம் சிறிது தூரம் சென்றதும், மகிழுந்து ஓரிடத்தில் நிற்க, அவசரமாய் இறங்கி ஓட முயன்றவளின் இருபுறமும் ஆண்கள் இருவர் ஏறி அவள் பக்கத்தில் அமர, ஒட்டுமொத்தமாய் அதிர்ந்து போய்விட்டாள் அவள்.


"ஹலோ! இப்போ வண்டியை நிறுத்துறீங்களா? இல்லையா? நான் போலீசுக்கு கால் பண்ணிடுவேன். யாரு நீங்க? எதுக்காக இதெல்லாம் பண்ணுறீங்க?!" என அவள் சத்தமாய்க் கத்தியபடி கேள்வி கேட்க, யாருமே அவளுக்குப் பதில் சொல்ல தயாராய் இல்லை.


"இந்தா பாரும்மா பொண்ணு! வாயை முடிட்டு அமைதியாய் உட்கார்ந்தீன்னா, உன்னை ஒப்படைக்க வேண்டிய இடத்தில் ஒப்படைச்சுட்டு, எங்களுக்கு வேண்டியதை வாங்கிட்டு கிளம்பிட்டே இருப்போம். மீறி சத்தம் போட்ட, கழுத்தறுத்து ஹைவேஸில் தூக்கி வீசிட்டு போய்ட்டே இருப்போம்.!" என அவள் பக்கத்தில் அமர்ந்திருந்த நபர்களில் ஒருவன் சொல்ல, உள்ளூற நடுங்கிப் போனாள் ஆருத்ரா. இருந்தாலும், தன்னைத் தானே தேற்றி, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,


"யா.. யார் என்னைக் கடத்திட்டு வரச் சொன்னது?"


"அவங்க பேர் என்ன?!"


"எதுக்காக இதெல்லாம் செய்றாங்க?!" என அவள் கேள்விமேல் கேள்வியாய் கேட்க,


"வாயை மூடிட்டு வர்ரியா? இல்லை சொருவிடவா?!" என அவளுக்கு மறுபுறம் அமர்ந்திருந்தவன் கத்தியை எடுத்து நீட்ட, பயந்து நடுநடுங்கிப் போய்த் தன் கரத்தால் வாயை மூடிக் கொண்டாள் ஆருத்ரா. இதயம் படபடவென வேகமாய்த் துடித்தது. தன் அருகில் கத்தியுடன் அமர்ந்திருப்பவனைப் பார்த்துப் பயம் வந்தது. பயம் தந்த அதிர்வின் விளைவால், மூளை யோசிக்க மறுத்தது.


'எப்படி இங்கிருந்து தப்பிப்பது? யாருக்காக என்னைக் கடத்துகிறார்கள்? எதற்காக? ஏன்? இயக்கத்திலிருக்கும் வாகனத்திலிருந்து தப்பிப்பது அத்தனை எளிதில்லை.. இப்போது நான் என்ன செய்யப் போகிறேன்? அந்தத் திருமணாத்திலிருந்து தப்பிப்பதற்காக, வேறெதிலோ வந்து சிக்கிக் கொண்டோமோ?' என அவளுக்குத் தோன்றியது.


அப்போது தான் அவளுக்குத் தன் கையிலிருந்த அலைபேசி நினைவிற்கு வந்தது. தன் கைப்பேசியை மடியில் வைத்து, அவள், தன் கைப்பையால் மறைத்து வைத்திருந்ததால், பக்கத்தில் அமர்ந்திருந்தவர்களின் கண்ணில் அது படவில்லை. ஆருத்ராவோ, அவர்களின் கருத்தில் படாமல் காவல்துறைக்கு அழைக்க முயன்று கொண்டிருக்க, யாராவது பார்த்துவிடுவார்களோ.. என்ற பயத்தில் அவள் விரல்கள் நடுங்கியது.


அதே நேரம், ஆருத்ராவின் இருபுறமும், அமர்ந்திருந்தவர்களில், ஒருவனுக்கு அழைப்பு வர, அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தவன்,


"நீங்க சொன்ன மாதிரியே துக்கியாச்சு சார்..! நீங்க அனுப்பின ஃபோட்டோவில் இருந்த அதே பொண்ணு தான் சார்! அப்பறம், இவ்வளவு ரிஸ்க் எடுத்து செய்றோம், கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்க சார்..!" என அவன் பேசிக் கொண்டிருக்கும் அதே நேரம், சிரமப்பட்டு அவள் காவல்துறைக்கு அழைத்துவிட, இவர்கள் சென்று கொண்டிருந்த வாகனம் தடுமாறி ஓடி, பின் பெரிய குலுக்கலுடன் நின்றது.


வாகனம் அதிவேகமாய் க்ரீச்சிட்டு, தடுமாறி நின்றிருக்க, தடுமாறி நின்ற வேகத்தில், ஆருத்ராவின் நெற்றி முன்னிருக்கையில் மோதியிருக்க, லேசான காயம்பட்டு உதிரம் கசிந்து கொண்டு இருந்தது.


"ஸ்ஸ்ஸ் ஆஆஆ!" என்ற முனகலுடன் தன் நெற்றியை இடக் கரத்தால் பிடித்துக் கொண்டு, எட்டிப் பார்த்தவள், குறுக்கே நின்றிருந்த இமயவரம்பனின் வாகனத்தைப் பார்த்து ஒருபக்கம் நிம்மதியும், மறுபுறம் அதிர்ச்சியாகவும் இருக்க, தான் அமர்ந்திருந்த வாகனத்தை நோக்கி, கம்பீரமாய் நடந்து வந்து கொண்டிருந்த இமயவரம்பனை இமை சிமிட்டாது பார்த்துக் கொண்டிருந்தாள் ஆருத்ரா.


இனி, தனக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற எண்ணம், அவளறியாமலே அவளுக்குள் எழுந்தது.


இமயவரம்பன் இறங்கி வருவதைப் பார்த்த ஓட்டுநர் உட்பட மூவரும், அவனின் அழுத்தமான பார்வைக்கு பயந்து நடுங்கினர். மயில்ராவணனையே ஆட்டிப் படைக்கும் அவனுக்கு இவர்கள் எம்மாத்திரம்.? இவர்கள் ஓடாமல் எதிர்த்து நின்றிருந்தால் தான் அதிசயம். இவர்கள் மாட்டினால் சகலமும் வெளியே வந்துவிடும் என அவர்களுக்கு தெரியாதா? என்ன?


"இவன் கையில் சிக்குனோம், அவ்வளவு தான். நாம மாட்டிக்கிட்டா யாரு என்னன்னு எல்லாச் சங்கதியும் தெரிஞ்சுரும் இறங்கி ஓடிருவோம்!" எனக் கதவைத் திறந்து கொண்டு, தலைதெறிக்க ஓடியிருக்க,

அழுத்தமான காலடிகளுடன் அவளை நோக்கி வந்தவன், அவள் புறமாய்க் குனிந்து, அவன் கரம் நீட்ட, அவன் கண்களைப் பார்த்தபடியே, அவன் கரம் பிடித்து வெளியே இறங்கினாள். பயத்தில் அவள் முகம் வெளிறிப் போயிருந்தது.

அவள் வாகனத்திலிருந்து இறங்கும் வரை, இழுத்துப் பிடித்த பொறுமையுடன் நின்றவன், அவள் இறங்கிய மறுநொடி, அவளை ஓங்கி அறைந்திருந்தான். அவன் தன்னை அறைவான் என எதிர்பார்த்திராதவள், அதிர்வுடன், கன்னைத்தைப் பிடித்துக் கொண்டு, புரியாமல் நின்றதெல்லாம் சில நொடிகள் தான். அந்தச் சில நொடிகளில், தன்னைச் சமாளித்து, சுதாரித்து நிமிர்ந்தவள், அவனை அறைவதற்காய் கரத்தை ஓங்கியிருக்க, அவள் ஓங்கிய கரத்தை லாவகமாய்ப் பிடித்தவன், அவளைத் தன் வாகனத்தை நோக்கி இழுத்துப் போனான்.

"என்னை விடு! நான் உன்னோட வர மாட்டேன். எனக்கு இந்தக் கல்யாணமும் வேணாம்! ஒண்ணும் வேணாம்.! என்னை விடப் போறியா இல்லையா? நான் போலீஸில் உன் மேல் கம்ப்ளைண்ட் கொடுக்கப் போறேன். விருப்பமில்லாத பொண்ணைக் கட்டாயப்படுத்திக் கல்யாணம் பண்ணுறது சட்டப்படி குற்றம்ன்னு உனக்குத் தெரியாதா?!"

எனக் கத்தியபடியே அவள் தன் கரத்தை விடுவிக்கப் போராடிக் கொண்டிருக்க, அவளைப் பின்னிருக்கையில் தள்ளி, கதவை சாத்தியவன், பதிலேதும் பேசாது வாகனத்தைக் கிளப்பியிருந்தான். யாரிடமிருந்து தப்ப முயற்சி செய்தாளோ, அவனிடமே மீண்டும் சிக்கிக் கொள்ள, தன்னைக் கட்டாயப்படுத்தி இழுத்துப் பிடிக்க நினைக்கும் அவனைச் சுத்தமாய் வெறுத்தாள் அவள்.

"வாழ்வதில் எனக்கொன்றும்


வருத்தங்களோ சிக்கல்களோ

எப்போதும் இருந்ததில்லை..

இப்படித்தான்

வாழ்ந்தாக வேண்டுமென்ற உங்கள்

நியதிகளிலும் நிபந்தனைகளிலும்

நிரம்பியிருக்கிறது

எப்போதும் எனக்கான சிக்கல்."


(படித்ததில் பிடித்தது)

அன்பாகும்..?
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் டியர்ஸ்..!

அன்பின் அதீதங்களில்..! அடுத்த அத்தியாயம் பதிஞ்சாச்சு.

உங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றிகள் ❤

அத்தியாயம் தாமதமா வர்ரதுக்கு மன்னிச்சுடுங்க. பல சொந்த வேலைகள் காரணமா பகலில் எழுத முடியலை. இரவு தான் நேரம் கிடைக்குது. முடிந்தவரை சீக்கிரம் கொடுக்க முயற்சிக்கிறேன்.

கருத்துத் திரி:
Post in thread 'சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.' சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதீதம்-9

அந்தப் பெரிய மகிழுந்தின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த, ஆருத்ராவின் முகம் முழுதும், கோபத்தில் சிவந்திருந்தது. இமயனைப் பார்க்க பார்க்க அவளுக்குக் கோபமாய் வந்தது.

'என்ன செய்து இவனிடமிருந்து தப்பிப்பது?!' என்ற எண்ணமே அவளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் இவள் எங்குச் சென்றாலும், அவன் விடவே போவதில்லை.. என்பது அவளுக்குத் தெரியவில்லை.


"இப்படி என்னைக் கட்டாயப்படுத்திக் கல்யாணம் பண்ணி என்னத்தைச் சாதிக்கப் போற? எதுக்காக இதெல்லாம்? நிம்மதியாய் சென்னையில் இருந்தேன்.. நீ என் வாழ்க்கையில் வந்த நாள் முதல் என் நிம்மதியே போச்சு!" எனக் கேட்டாள் ஆருத்ரா. சாலையில் கவனம் வைத்து வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தவனோ, அவளைத் திரும்பியும் பார்க்கவில்லை.


"நீ எத்தனை தடவை என்னைப் பிடிச்சு வச்சாலும், நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். எனக்கு நீ வேணாம்.!" என அவள் மீண்டும் சொல்ல,


"உன்னால் என்னைத் தாண்டிப் போக முடியாது ஆரா..!" எனச் சொன்னான் அவன். அவனுடைய அழுத்தமான குரல் அவன் சொல்வது பொய்யில்லை என்பதைப் பறைசாற்றியது.


"ஒரு பொண்ணைக் கட்டாயப்படுத்திக் கல்யாணம் பண்ணிக்கிறது தான் ஆண்பிள்ளைத் தனமா? இந்தக் கல்யாணத்தில் நீ மட்டும் சம்மந்தப்பட்டது இல்லை. இதில் நானும் சம்மந்தப்பட்டு இருக்கேன். என் விருப்பம் முக்கியம்ன்னு உனக்குத் தோணவே இல்லையா?!" என அவள் கேட்க,


"அதைப் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. இந்தக் கல்யாணம் நடக்கும் அவ்வளவு தான். யார் நினைச்சாலும் இதைத் தடுக்க முடியாது.!" என அவன் உறுதியாய் சொல்ல,


"உன்னைக் கொன்னுட்டா இந்தக் கல்யாணம் நின்னுடும் தானே? உன்கிட்டே இருந்து தப்பிக்கிறதுக்கு நான் என்ன வேணும்ன்னாலும் செய்வேன். உன்னைக் கொன்னுடுவேன் இமயன்.!" என அவள் சொன்ன நொடியில், அவர்கள் பயணித்துக் கொண்டிருந்த வாகனம், க்ரீச்சிட்டு அதிர்வுகளோடு நின்றது.



வாகனத்தை நிறுத்திவிட்டு, மகிழுந்தின் டேஷ் போர்டைத் திறந்து எதையோ கையில் எடுத்துக் கொண்டவன், அவளை நோக்கிப் போனான். பின் இருக்கையின் கதவைத் திறந்து அவன் உள்ளே ஏற, ஆருத்ராவோ எதையும் கண்டுக்கொள்ளாமல் அமர்ந்திருந்தாள்.


"இப்போ எதுக்கு இங்கே வர்ர? என்னால் உன்னைக் கொல்ல முடியாதுன்னு நினைக்கிறியா? என்னால் முடியும்.!" என அவள் பேச,


"பெஸ்ட் ஆஃப் லக் ஆரா..!" என்றவன் அவளின் வலக்கரத்தைப் பிடித்து இழுத்து, அதில் தன் கையிலிருந்த துப்பாக்கியை வைத்தான். அவள் கரத்தில் துப்பாக்கியைக் கொடுத்துவிட்டு, அதிர்ந்து விரிந்திருந்த அவளின் அகல்விழிகளை நேராய்ப் பார்த்தவன்,


"கில் மீ ஆரா.. உன் தைரியம் எதுவரைன்னு பார்த்திடுவோம்! என்னைக் கொன்னுடு! நேராக என் கண்ணைப் பார்த்து நெற்றிப் பொட்டில் சுடு" எனச் சொன்னான். இவளுக்கோ பேரதிர்ச்சி. முதன்முறையாய் துப்பாக்கியை நேரில் பார்க்கிறாள். கொஞ்சம் பயமாக இருந்தது.


'இவன் துப்பாக்கியெல்லாம் வைத்திருக்கிறானே? ரௌடி துப்பாக்கி தானே வைத்திருப்பான்?' என்ற கேள்வியும் அவளுக்குள் முளைத்தது.
என்னதான் அவள் தைரியமான பெண்ணாக இருந்தாலும் கூட, முதன்முறையாய் தன் கரத்தினில் துப்பாக்கியைப் பார்க்கவும் அவள் மனம் நடுங்கியது. துப்பாக்கியின் கனம் தாங்காது, தன்னால் கீழிறங்கிய தன் வலக்கரத்தை, இடக்கரத்தால் தாங்கிக் கொண்டவள், லேசாக நடுங்கிய கரத்துடனே, துப்பாக்கியை இரு கரங்களால் பிடித்தாள்.


சினிமாவில் மட்டுமே பார்த்திருந்த துப்பாக்கியைத் தன் கரத்தினில் பிடிப்போம் என அவள் இதுவரை நினைத்ததில்லை. கொஞ்சம் பயமும் பதற்றமும், ஒருசேர அவளைத் தடுமாற வைக்க, துப்பாக்கியின் கனம் அவளின் செயலைக் கொஞ்சம் தாமதப்படுத்தியது.


'சினிமாவில் ஒத்தைக் கையில் பிடிச்சு அசால்ட்டா சுடுறாங்க! இவ்வளவு வெய்ட்டா இருக்கு?' எனத் தனக்குள் புலம்பியவள்,


'என்ன நடந்தாலும் பரவாயில்லை! இவன்கிட்டே இருந்து, எனக்கு விடுதலை கிடைக்க, இவனைக் கொன்னால் தான் முடியும்ன்னா, அதையும் நான் செய்யத் தயார்.!' எனத் தன்னைத் தானே தைரியப்படுத்திக் கொண்டவள், துப்பாக்கியைத் தூக்கி அவன் நெற்றிக்கு நேராகப் பிடித்தாள்.


பக்கவாட்டில் திரும்பி, அவனை நோக்கி, அவள் துப்பாக்கியை நீட்டியிருக்க, அவன் நெற்றிக்கும், துப்பாக்கிக்குமான தூரம் மிக மிகக் குறைவாகவே இருந்தது.


"நான் விளையாடலை இமயன்! நிஜமாவே நான் சுட்டுடுவேன்.!"


"நானும் விளையாட்டுக்கு சொல்லலை ஆரா! கம் ஆன்.. ஷூட்!" என அவன் சொல்லவும், அவள் கண்ணை மூடிக்கொண்டு விசையை அழுத்தவும் சரியாக இருந்தது. அதே நேரம், அவள் கரத்தை நகர்த்திப் பிடித்துத் துப்பாக்கியை கரத்தில் வாங்கியிருந்தான் இமயவரம்பன். துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்காது, நிமிர்ந்து பார்த்தவளின் முன், கரத்தில் துப்பாக்கியை வைத்து விளையாடியபடி அவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான்.


"உன் கையில் துப்பாக்கியை அன்லாக் பண்ணி கொடுத்துட்டு, என் உயிரைப் பணயம் வச்சுட்டு, சும்மா உட்கார்ந்திருக்க, நான் ஒண்ணும் முட்டாள் இல்லை ஆரா. சுட மாட்டேன்னு நினைச்சேன். பரவாயில்லை. அரசியல்வாதி பொண்டாட்டியாகப் போறவளுக்குத் தைரியம் இருக்காதா என்ன?!" என நக்கலாய் அவன் சொல்ல, ஏகத்திற்கும் கோபம் எகிறியது இவளுக்கு.


"நான் உன் பொண்டாட்டி ஆகப் போறதே இல்லை! நான் உனக்குக் கழுத்தை நீட்டுவேன்னு கனவு காணாதே! இப்படித்தான் உன் வொய்ஃப்கிட்டே அரெகென்ட்டா இருந்திருப்ப.. அதனால் தான் நீ வேணாம்ன்னு தூக்கிப் போட்டுட்டு போயிருப்பாங்க! உன்னைக் கொல்ல முடியாமல் போனாலும், நான் செத்துப் போயாவது இந்தக் கல்யாணத்தை நிறுத்துவேன்.!" என அவள் சொன்ன நொடி, கோபத்தில் அவன் கண்கள் சிவந்தது.


"ஆரா..!" அவனின் கோபக் குரலில் அதிர்ந்து, அவனை நிமிர்ந்துப் பார்த்தாள் ஆருத்ரா.


"இன்னொரு முறை உன் வாயிலிருந்து இந்த வார்த்தை வந்துச்சு நானே உன்னைக் கொன்னுடுவேன். நான் உயிரோடு இருக்கும் வரை.. என் கண்ணின் கடைசி ஒளி மங்கும் வரை எனக்கு நீ வேணும். உன்னை என் மனசு முழுக்கச் சுமந்துட்டு இருக்கேன்.. நீ என்னடான்னா செத்துப் போகணும்ன்னு சொல்ற? நீ இல்லாமல் நான் என்னடி பண்ணுறது? ஏற்கனவே பாதி வாழ்க்கையைத் தொலைச்சுட்டேன்.. உன்னையும் தொலைச்சுட்டு என்னைப் பைத்தியக்காரனாய் அலைய சொல்லுறியா.? செத்துப் போகணும்ன்னா சொல்லு.. ரெண்டுபேரும் சேர்ந்து செத்துப் போவோம்.! முதலில் உன்னைக் கொன்னுட்டு நானும் செத்துப் போறேன்.!" என அவன் சொன்னதன் பொருள் விளங்காமல், சில நொடிகள் தடுமாறியவள், அவன் சொன்னதன் பொருள் புரிந்ததும், அதிர்ந்து விழித்தாள்.



அவள் முகம் முழுவதும், குழப்ப ரேகைகள் பற்றிப் படர ஆரம்பித்தது.

'என்ன சொல்றான் இவன்? எனக்கு ஒண்ணும் புரியலையே? இவனோட மனசில் நான் இருக்கேனா? இவனை எனக்குத் தெரியும் தான். தாத்தா சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன் தான்.. ஊருக்குள் பெரிய ரௌடி. கட்டப் பஞ்சாயத்து பண்ணுகிறவன், என்பது மட்டும் எனக்குத் தெரியும். ஆனால் என்னை எப்படி அவன் அறிந்து வைத்திருக்கிறான் என்பது தான் புரியவில்லை. இதுவரை நேரடியாய் சந்தித்திராத இவன் மனசில் நான் எப்படி இருக்க முடியும்? ஒண்ணுமே புரியலையே?' ஆயிரம் கேள்விகள் அவள் மனதிற்குள் நொடிப் பொழுதிலே தோன்றி மறைந்தது.


"என்னை உனக்கு முன்னாடியே தெரியுமா?!" முதன்முறையாய் ஒரு தெளிவான கேள்வியை அவனிடம் கேட்டாள் ஆருத்ரா.


"தெரியும்!" என்ற அவனின் பதிலில் குழப்பம் இன்னும் கொஞ்சம் அதிகரித்திருக்க, யோசனையோடு பின்னிருக்கையில் அமர்ந்தவளை ஒருமுறை ஆழ்ந்து நோக்கியவன், முன்னிருக்கையில் ஏறி அமர்ந்து வாகனத்தைக் கிளப்பியிருந்தான்.



'இவனை எங்காவது பார்த்திருக்கிறோமா? வீட்டுக்கு வந்திருக்கிறானா? என்னை விடப் பத்து வயது மூத்தவன், கண்டிப்பாகக் கல்லூரியிலோ பள்ளியிலோ பார்த்திருக்க முடியாது. எங்கே பார்த்திருக்கிறேன்? எனக்கு இவனை நேரில் பார்த்ததாகத் துளி கூட நினைவில்லையே? சாதாரணமாய் அவன் முகத்தை அரசியல் போஸ்டர்களில் சிறியதாகப் பார்த்திருக்கிறேன். மற்றபடி நேரில் பார்த்ததில்லை. அப்படியிருக்கையில் இவன் எப்படி என்னைத் தெரியும் என்கிறான்.?' புரியாமல் இன்னும் தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்தாள் அவள். திரும்பத் திரும்ப அதையே யோசித்து இவளுக்குத் தலையை வலித்தது.


"நீ பொய் தானே சொல்ற? என்னை எப்படி உனக்குத் தெரிஞ்சிருக்கும்? என்னை ஏமாற்றப் பார்க்கிறே தானே.? இப்படிச் சொன்னால் இவள் வாயை முடிருவாள்ன்னு நினைச்சு தானே இதெல்லாம் சொன்ன?!" என அவள் கேட்க,


"உனக்கு வேணும்ன்னா என்னைத் தெரியாமல் இருக்கலாம் ஆரா. ஆனால் எனக்கு உன்னை நல்லா தெரியும். ரொம்ப யோசிக்காதே.. சீக்கிரமே நீ தெரிஞ்சுப்ப!" அவள் மனம் புரியாமல் சொன்னான் அவன்.


"எனக்கு உன்னை யாருன்னே தெரியாது. அதாவது நேரில் சந்திச்சதில்லைன்னு சொல்றேன். ஆனால் உனக்கு என்னைத் தெரியும். வெறும் ஒன் சைட் லவ்வுக்காகவா என்னை இப்படிப் படுத்துறே? யூ ஆர் நாட் மை சாய்ஸ் இமயன். எனக்குன்னு சில ஆசைகள் கனவுகள் எல்லாமே இருக்கு. அதுக்கெல்லாம் நீ செட் ஆகவே மாட்ட. எல்லாத்தைவிட முக்கியமா எனக்கு இந்த அரசியல், உன் கையில் இருக்கிற துப்பாக்கி.. எதுவுமே பிடிக்கலை.!" என அவள் சொல்ல,


"நான் எதுக்குச் செட் ஆவேன்.. மாட்டேன்னு கல்யாணத்திற்கு அப்பறம் விளக்கமா தெரிஞ்சுக்கலாம்! இப்போ கொஞ்சம் அமைதியாய் இரு!" எனச் சொல்லி அவள் வாயை அடைத்திருந்தான் இமயன். அவன் சொன்னதன் பொருள் புரிந்து, திணறி, தன்னைச் சமாளித்து நிமிர்ந்தவள்,


"அப்பறம் நான் டேக்ஸியில் வரும் போது ரெண்டு பேர் கடத்த முயற்சி பண்ணுனாங்களே, அதுவும் உன்னோட ஏற்பாடு தானே? நான் எங்கேயும் போகக் கூடாதுன்னு என்னைப் பயமுறுத்த பார்க்கிறியா?!" எனத் தன்னை இயல்பாய் காட்டிக் கொள்வதற்காய் கேட்டாள் ஆருத்ரா.


"உனக்கு மூளை இருக்கும்ன்னு நினைச்சேன். என் வீட்டிலேயே இருக்கிற உன்னை நான் எதுக்குக் கடத்தணும்.? உன்னைப் பயமுறுத்துவதற்கு, கடத்தணும்ங்கிற அவசியம் எனக்கில்லை. உன்னைச் சுற்றி என்ன நடக்குதுன்னு உனக்குத் தெரியாது. இப்போதைக்கு அமைதியாய் இருக்கிறது தான் உனக்கு நல்லது!" என மயில்ராவணனை மனதில் வைத்துச் சொன்னான் இமயவரம்பன்.


ஆருத்ராவைக் கடத்த முயற்சி செய்தது மயில்ராவணனாகத் தான் இருக்கும் என்பதில் உறுதியாய் இருந்தான் அவன். ஆருத்ராவைப் பகடையாய் வைத்து, காய் நகர்த்திக் காரியம் சாதிக்க வியூகம் அமைத்திருக்கிறார் முதலமைச்சர் என்பது அவனுக்குத் தெரியாதா என்ன? இவளுக்கு ஆபத்து வந்துவிடக் கூடாதென்பதை மனதில் வைத்து தான், தன் விட்டிற்கு அவளை இடம் மாற்றினான்.


தன் முதுகிற்குப் பின்னால் என்னென்ன நடக்கிறது என்பது அவனுக்குத் தெரியும். துரோகிகள் முதுகில் தானே குத்துவார்கள். நன்றி மறந்து முதுகில் குத்தும் நபர்களும், மேலே ஏற்றிவிட்ட ஏணியையே உதைத்துத் தள்ளும் நபர்களும், நிச்சயமாய் நண்பர்களாய் இருக்க முடியாது அல்லவா? தனக்குப் பின்னால் நடக்கும் சதிகளின் வீரியம் அறிந்து தான், அவளைப் பாதுகாப்பாய் தன் வீட்டிலேயே வைத்திருக்கிறான் அவன்.


"நம்ம வழக்கம்ன்னு ஒண்ணு இருக்குதே ராசா? கலியாணத்துக்கு முன்னவே பொண்ணு நம்ம வீட்டில் வந்து உட்கார்ந்திருந்தால் ஊரு என்ன பேசும்?!" என அவனின் அப்பத்தா கேட்ட போது கூட,


"உனக்கு இந்த ஊரு பயலுக முக்கியமா? இல்லை நான் முக்கியமா?" எனக் கேட்டு அவரின் வாயை அடைத்திருந்தான்.



என்னதான் ஆருத்ராவிற்குத் தன்னைச் சுற்றி நடப்பவை தெரியாவிட்டாலும் கூட, இவள் சிறுபிள்ளைத் தனமாய்ப் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வது அவனுக்குக் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது.


*******


இமயன் ஆருத்ராவை தன் வீட்டில் இறக்கிவிடும் போது, வீட்டில் யாருமே இல்லை. ஒட்டுமொத்த வீடும் நிசப்தமாய் இருந்தது. அவள் வெளியே சென்றதும் யாருக்கும் தெரியவில்லை. அவள் வரும்போது யாரும் வீட்டிலும் இல்லை. உள்ளே வந்து தன் குடும்பத்தினரைக் கண்களால் தேடினாள்.


'தனியாக விட்டுட்டு எங்கே போனாங்க?!' என யோசித்தபடிய அவள் நின்றிருக்க,


"எல்லாரும் கோயிலுக்குப் போயிருக்காங்க!" அவள் கேட்காமலே அவன் பதில் சொன்னதிலேயே அவளுக்குத் தெரிந்துவிட்டது. அவர்களாகப் போகவில்லை. இவன் தான் அனுப்பி வைத்திருக்கிறான் என்பது அவளுக்குப் புரிந்தது. அவன் சொன்னதற்கு அவள் பதிலேதும் பேசவில்லை. அமைதியாய் தன் அறையை நோக்கி நகர்ந்தவளை,


"இனியாவது எங்கேயும் ஓடிப் போக முயற்சிக்காதே! ஊரறிய கல்யாணம் பண்ணணூம்ன்னு நினைச்சுட்டு இருக்கேன். யாருக்கும் தெரியாமல், இரகசியமாகத் தாலி கட்ட வச்சிடாதே!" என்ற இமயனின் குரல் தேக்கி நிறுத்தியது.


"உனக்கு ஒண்ணும் தாலி கட்டுறது புதுசு இல்லையே? ஊரறிய கட்டினாலும், இரகசியமா கட்டினாலும், நீ கட்டுற தாலி எனக்கு வேணாம்.!" எனச் சொன்னவள் விறுவிறுவெனப் படிகளில் ஏறிவிட்டாள். படிகளைக் கடந்து அவள் அறையை நோக்கிப் போன நேரம், அவள் முன் வந்து நின்றான் ராகவ்.


ராகவைப் பார்த்ததும், அவள் முகம் கடுகடுவென மாறியது. அவனிடம் நின்று பேசுவதற்குக் கூட, அவளுக்கு மனம் வரவில்லை. நண்பன் என நம்பி ஏமாந்த தன்னையே நொநந்துக் கொண்டவள், அவனைக் கண்டுக்கொள்ளாமல் தாண்டிச் செல்ல முயன்றாள்.


"ஆரு நில்லு! நான் சொல்றதைக் கேளு ஆரு!" அவன் சொன்னது இவள் செவிதனில் விழுந்தாலும் கூட, காது கேட்காதவளைப் போல, அறைக்குள் நுழைந்துவிட்டாள்.



அவள் பின்னலேயே வந்த ராகவோ, கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே வர, அவனைப் பார்வையால் எரித்தாள் ஆருத்ரா.


"ஆரு ப்ளீஸ்..!"


"உன்னை யாருடா இங்கே வரச் சொன்னது? உனக்கும் எனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. ஒழுங்கா ஓடிரு! நீ எத்தனை தடவை ப்ளீஸ் சொன்னாலும், உன்கிட்டே பேச நான் தயாராய் இல்லை.!" தெளிவாகவே சொன்னாள் ஆருத்ரா.


"என் பக்க நியாயத்தைச் சொல்றதுக்குக் கூட, வாய்ப்பு தர மாட்டியா ஆரு?!" என அவன் கேட்க,



"ஓ.. உன் பக்கம் நியாமெல்லாம் இருக்கா ராகவ்? இமயன் தான் உன் அண்ணன்ங்கிறதையே என்கிட்டே மறைச்சு, என்னை ஏமாத்திட்டல்ல? உன் அண்ணனுக்காக எனக்குத் துரோகம் பண்ணிட்டல்ல ராகவ்?!" அவன் கண்ணைப் பார்த்துத் தொண்டை அடைக்கக் கேட்டாள் ஆருத்ரா.


"நான் வேணும்ன்னு பண்ணல ஆரு! நீ அன்னைக்கு என் அண்ணன் பேரைச் சொல்ற வரை, என் அண்ணனுக்குப் பார்த்திருக்கிற பொண்ணு நீ தான்னு எனக்குத் தெரியாது. தெரிஞ்ச பின்னாலும் கூட, நான் உன்னைச் சென்னைக்குத் தான் கூப்பிட்டேன். நல்லா யோசிச்சு பாரு.. நான் அன்றைக்கு உன்கிட்டே சொன்னேன். சென்னை வந்துடு பார்த்துக்கலாம்ன்னு. ஆனால் நீ வரவே இல்லை. உன்கிட்டே இருந்து எந்தத் தகவலும் இல்லை. அதனால் தான் நான் இங்கே கிளம்பி வந்தேன்.! உன்னைக் கூட்டிட்டு போய்டலாம்ன்னு வந்தேன்.ஆனால் என்னால் முடியலை." என அவன் சொல்ல,


"நல்லா கதை சொல்ற ராகவ்! இங்கே வந்த பின்னால் சொல்லியிருக்கலாமே? இங்கே வந்ததும், உன் அண்ணன் பக்கம் உன் மனசு சாய்ஞ்சுடுச்சு அப்படித்தானே? உங்க ரெண்டு பேருக்கும் என் வாழ்க்கை என்னடா விளையாட்டா? ஆளாளுக்கு விளையாடுறீங்க!" என அவள் கேட்க பதில் சொல்ல முடியாது அமைதியாய் நின்றான் ராகவ்.



"வாயைத் திறந்து பேசு டா! நீ பேச மாட்டே.. நீ எப்படிப் பேசுவ? அவங்க அவங்க குடும்பம்ன்னு வரும்போது ஃப்ரெண்ட்ஷிப்பாவது மண்ணாவது.. எல்லாரையும் மாதிரி நீயும் சுயநலவாதியாய் மாறிட்டல்ல? உன் அண்ணனுககாகத் தான் எனக்கும் விவேக்கிற்கும் ப்ரேக் அப் ஆகற மாதிரி செஞ்சியா?!" என அவள் கேட்க,


"ஆரு.. சத்தியமா இல்லை டி! நிஜமாவே உன் நல்லதுக்காகத் தான் அவனுக்குக் கல்யாணம் ஆகப் போற விஷயத்தைச் சொன்னேன்.!" என அவன் பதில் சொன்னதையும் சந்தேகமாய்ப் பார்த்தாள் ஆருத்ரா.


"அப்போ இப்போ நீ எனக்குப் பண்ணுறதுக்குப் பேர் என்னடா?!" என அவள் கேள்வி கேட்க, விக்கி விரைத்துப் போய் நின்றான் ராகவ். அவனால் பதில் சொல்ல முடியவில்லை. அவளின் ஒவ்வொரு கேள்வியும் பொட்டில் அடித்தாற் போல் இருக்க, பதில் சொல்லாது அமைதியாய் நிற்பதைத் தவிர அவனுக்கு வேறு வழியும் இருக்கவில்லை.



"என்னை மன்னிச்சுடு ஆரு! இங்கே நான் சொல்றதெல்லாம் கேட்க மாட்டாங்க டி! நீ எப்போவுமே எனக்கு நல்ல ஃப்ரெண்ட் தான். ஆனால், இந்தக் கல்யாணம் அண்ணன் முடிவு பண்ணின விஷயம். இதை மாற்ற என்னால் முடியாது.!" என அவன் தயங்கி தயங்கி சொல்ல,


"இன்னும் என்னடா ஆறு, ஏழுன்னு கூப்பிடுற? அண்ணின்னு கூப்பிடு! நீயும் உன் அண்ணனும் சேர்ந்து முடிவு பண்ணிட்டீங்களே? யாரு வாழ்க்கை எப்படி நாசமாகப் போனால் உனக்கென்ன? உனக்கு உன் அண்ணன் வாழ்க்கை தானே முக்கியம்? நானெல்லாம் யாரோ தானே? எங்கே உன் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லு, உங்க வீட்டில் ஒரு பொண்ணு இருந்தால், உன் அண்ணன் மாதிரி ஒருத்தனுக்கு ரெண்டாந்தாரமாய்க் கட்டிக் கொடுப்பியா?!" என்ற அவளின் கேள்விக்கு,


"இமயன் ரொம்ப நல்லவன் ஆரு! நீ அவனைத் தப்பா புரிஞ்சுட்டு இருக்க!" என அவன் சொல்ல, வேகமாய் அவன் பக்கத்தில் வந்தவள், அவனை ஓங்கி அறைந்திருந்தாள்.


"என்னடா சர்ட்டிஃபிகேட் கொடுக்கிறியா? உன் அண்ணன் என்ன பெரிய உத்தம புத்திரனா? அவன் நல்லவன்னு நீ சொன்னதும், நான் கண்ணை மூடிட்டு கழுத்தை நீட்டனுமா? நீயெல்லாம் ஃப்ரெண்டா டா? ஃப்ரெண்ட்ன்னு சொல்றதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்கு? தயவு செய்து என் கண்ணு முன்னால் நிற்காதே! போய்டு! உன்னை நான் பார்க்கவே விரும்பலை. இனிமே நீ யாரோ.. நான் யாரோ.. இந்த நிமிஷமே, இங்கேயே, இதோடு முடிச்சுக்கலாம்.!" என அவள் கோபமாய்ச் சொன்னாள்.


அதீத கோபத்தில் அவள் முகம், செக்கச் செவேலெனச் சிவந்திருந்தது. கண்களில் கோபம் அப்பியிருக்க, மனம் முழுதும், ஆற்றாமையும், வெறுமையும் மட்டுமே நிரம்பியிருந்தது. எதிரில் நின்ற ராகவைப் பார்க்கப் பார்க்க அவள் கோபம் இன்னும் அதிகரித்தது.


"அம் ஸாரி ஆரு..! இந்தச் சூழ்நிலையில் என்னால் உனக்கு உதவி செய்ய முடியலையேன்னு வருத்தமா இருக்கு. பட், உன் சூழ்நிலை எப்படியோ, அதே மாதிரி சூழ்நிலையில் தான் நானும் இருக்கேன். நீ என்னை அடிச்சாலும் பரவாயில்லை. என் அண்ணனை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது ஆரு!" கரத்தால் கன்னத்தைத் தாங்கியபடியே அவன் சொல்ல,


"உன் அண்ணன் புராணம் பாடினது போதும் ராகவ். எனக்கு உன்னைப் பார்க்கவே கடுப்பா இருக்கு. பேசாமல் இங்கிருந்து போய்டு!" என எரிச்சலுடன் சொன்னாள் அவள்.
அவன் அமைதியாய் வாடிய முகத்துடன் திரும்பி நடக்கத் துவங்க,


"ஒரு நிமிஷம்..!" எனச் சொல்லி அவனை நிறுத்தினாள்.


"எனக்கு உன் ஆஃபீஸிலேயே வேலை கிடைத்ததற்குப் பின்னாலும் உன் அண்ணன் தான் இருக்கானா?!" எனக் கேட்டாள்.
அவசரமாய் மறுப்பாய் தலையாட்டியவன், "இல்லை!" எனப் பதில் சொன்ன பின்பே அவளுக்கு நிம்மதியாய் இருந்தது.


ராகவ் இமயனின் தம்பி எனத் தெரிந்ததில் இருந்து, ஒருவேளை தன்னைக் கண்காணிப்பதற்காவே, ராகவ் பணிபுரியும் அதே அலுவலகத்தில் தனக்கும் வேலை கிடைத்ததோ என்ற சந்தேகம் அவளுக்கு இருந்தது. இமயன் அவளை முன்பே தெரியும் எனச் சொன்னதும், அந்தச் சந்தேகம் இன்னும் கொஞ்சம் வலுப்பெற்றிருந்தது. ராகவின் வாயிலிருந்து, இல்லை என்ற பதில் வந்ததும் தான் அவளால் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது.
அவன் பதில் சொன்னதும், நகர முயன்றவளை,


"ஆரு..!" என்ற ராகவின் குரல் தேக்கி நிறுத்தியது.


"ராமன் புகழ் பாடும் லக்ஷ்மணன் மாதிரி இன்னும் உன் அண்ணன் புராணம் பாடி முடியலையா? உன் அண்ணன் என்ன கடவுளா? அவனும் சாதாரண மனுஷன் தானே?!" என நக்கலாய் கேட்டவளிடம்,


"நீ நினைக்கிற மாதிரி இல்லை ஆரா.. அவன் அவனோட முதல் வாழ்க்கையில் நிறையக் கஷ்டப்பட்டுட்டான். அதனால் தான் அவன்கிட்டே என்னால் உனக்காகப் பேச முடியலை.!" என நிஜமான வருத்தத்துடன் சொன்னான் ராகவ்.



ஒருபுறம் தோழி, மறுபுறம் சகோதரன்.. யார் பக்கம் நிற்பதெனெ அவனுக்கே தெரியவில்லை. அவனைப் பொருத்தவரை, அவனுக்கு இருவருமே முக்கியம். ஆனால் சில வருடங்கள் முன் கிடைத்த நட்பின் முன், ஒரே தாய் வயிற்றில் பிறந்த சகோதரப் பாசம் வெற்றிக் கண்டது.


"உன் அண்ணன் முதல் வாழ்க்கையில் கஷ்டப்பட்டான். அதனால், நான் ரெண்டாவதாக அவனைக் கட்டிக்கிட்டு கஷ்டப்படணுமா? நல்லா இருக்கு ராகவ் உன் நியாயம். உன்கிட்டே நியாயமெல்லாம் எதிர்பார்க்கலாமா? நீ தான் இமயன் கண்ணுல நேர்மை தெரியுது, மண்ணாங்கட்டி தெரியுதுன்னு சப்போர்ட் பண்ணியவனாச்சே? அப்போ கூட நான் யோசிக்கலை ராகவ். இப்போ தானே தெரியுது.. நீ உன் அண்ணனுக்காகப் பேசியிருக்கேன்னு.!" என அவள் சொன்னதைக் கேட்டவன்,


"ஆரு..!" என இடைநிறுத்த,


"நீ எதுவும் சொல்ல வேண்டாம்.! கண்ணு முன்னால் நின்னு கடுப்பேத்தாமல் போய்டு ராகவ். உன் அண்ணனுக்காக என் எதிரில் நின்னு சண்டைப் போட்டிருந்தால் கூட, நான் நீ சொல்றதைக் காது கொடுத்து கேட்டிருப்பேனோ என்னவோ? இப்படி நீ என் முதுகில் குத்தின பிறகு.. எனக்கு உன்னைப் பார்க்கவே பிடிக்கலை ராகவ். எனக்காகச் செய்யணும்ன்னா ஒண்ணே ஒண்ணு செய்..!" என இடைநிறுத்தி அவள் அவனைப் பார்க்க,


"சொல்லு ஆரு..!" எனக் கேட்டவனிடம்,


"நட்புன்னு சொல்லி யார் முதுகிலும் குத்தாதே.. உன் சுயநலத்திற்கு நட்பை தயவு செய்து யூஸ் பண்ணாதே! நான் உன்னை எவ்வளவு நம்பினேன் தெரியுமா? ரொம்ப வலிக்குது ராகவ். நீ செஞ்ச துரோகத்தை என்னால் மன்னிக்கவே முடியாது! உன்னை மன்னிக்கிற அளவிற்கு எனக்குப் பெரிய மனசெல்லாம் இல்லை.!" எனச் சொன்னவள்,


"முதலில் என் ரூமிலிருந்து வெளியே போ!"


என அவள் வாசலை நோக்கிக் கை காட்ட அமைதியாய் வெளியேறியிருந்தான் ராகவ்.
ராகவ் சென்ற பின் ஓய்ந்து போய்க் கட்டிலில் அமர்ந்தவளுக்கு, மனம் பாரமாய்க் கனத்தது. கதவே இல்லாத அறைக்குள் மூச்சுக் காற்றுக்குத் தவிப்பதைப் போல் உணர்ந்தாள் ஆருத்ரா. இனி எதுவுமே செய்ய முடியாது என்ற ஒருவித கையறு மனநிலைக்கு வந்திருந்தாள்.


அவள் மனமும் உடலும் நிரம்பவே களைத்துப் போயிருந்தது. தான் தோற்றுப் போகிறோம் என்ற உணர்வை அவளைப் பலவீனப்படுத்த, தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தாள் ஆருத்ரா.


"இன்னும் தூக்கம் போகலையா ஆரு? பொழுது போன நேரத்தில், தலையில் கை வச்சு உட்கார்ந்திருக்க?!" என்றபடியே பேத்தியின் நெற்றியில் விபூதியை இட்டுவிட்டார் வள்ளியம்மை.


"ஆரு! நீ என்ன இங்கே இருக்கே? எப்படி வந்த? நீ தூங்கறேன்னு நான் தான் சொல்லி வச்சிருந்தேன்!" எனத் தன் காதுக்குள் கேட்ட மஞ்சரியின் குரலில் விரக்தியாய் சிரித்துக் கொண்டாள் ஆருத்ரா.


"மனதிற்கு மிக நெருக்கமான


ஒருவரால் மட்டுமே..

கணங்கள் தோறும் எனக்கு,

மரணத்தை வழங்க முடியுமென்று நான்..

அறிந்துகொண்ட அந்தத் தருணத்தில்,

நான் எல்லோரிடமிருந்து,

என்னை அந்நியப்படுத்திக் கொண்டேன்..

ஏன் என்னிடமிருந்தே என்னை.."

(படித்ததில் பிடித்தது)




அன்பாகும்..?
 
Last edited:
Status
Not open for further replies.
Top