All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அன்பின் அதீதங்களில்..!" - கதைத் திரி.

Status
Not open for further replies.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம்! வணக்கம் டியர்ஸ்..!

எல்லாரும் எப்படி இருக்கீங்க? நீண்ட இடைவெளிக்குப் பிறகுபுதுக் கதையோடு வந்தாச்சு. "அன்பின் அதீதங்களில்!" கதைக்கான அத்தியாயங்கள் இங்கே பதியப்படும். உங்களுடைய தொடர் ஆதரவை எப்போதும் போல் எதிர்நோக்குகிறேன்.

அன்புடன்,

சுசி கிருஷ்ணன்.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பின் அதீதங்களில்..!

1000009952.jpg

அதீதம்-1

அந்தி சாயக் காத்திருந்த மாலைப்பொழுது. கொஞ்சம் கொஞ்சமாய் வெளிச்சம் மறைந்து, இருள் சூழ ஆரம்பித்திருந்தது. தான் பணிபுரியும் அலுவலக வளாகத்திலிருந்த குளம்பியகத்தில், கையில் காஃபி கோப்பையுடன் அமர்ந்திருந்தாள் அவள்.


"ஆரு.. நான்..!" என அவன் ஏதோ பேச வர, கை நீட்டித் தடுத்து, தன் எதிரே அமர்ந்திருந்தவனைக் கோபம் வழியும் விழிகளுடன் பார்த்தாள்.

"ஆரு! நான் சொல்ல வந்ததை சொல்லிட்டேன். இனிமே நீ தான் சொல்லணும்.!"


"நான் என்ன சொல்லணும் விவேக்.? நீ எதிர்பார்க்கிற உனக்கு சாதகமான பதிலை நான் சொல்லணும் அப்படித்தானே?" நேராய் அவனை நிமிர்ந்து பார்த்து, அவன் கண்பார்த்துக் கேட்டாள் அவள்.


"ம்ப்ச்! என் சூழ்நிலையைப் புரிஞ்சுக்கோ ஆரு..!" என விவேக் சொல்ல,


"ஆருத்ரா! ஐ அம் ஆருத்ரா!" என அவள் அழுத்தமாய் அவனைத் திருத்திய விதத்திலேயே அவள் மனம் அவனுக்குப் புரிந்தது.


"ஏன்டா! இந்தச் சூழ்நிலை மண்ணாங்கட்டியெல்லாம், என் முன்னால் முட்டிப் போட்டு ப்ரபோஸ் பண்ணும் போது எங்கேடா போச்சு?!" என மீண்டும் அவளே கேள்வி கேட்டாள்.


"என் வீட்டில் இவ்வளவு எதிர்ப்பு வரும்ன்னு நான் நினைக்கலை!"


"லவ் பண்ணினால், எல்லா வீட்டிலும் எதிர்க்கத்தான் செய்வாங்க விவேக்! நீ என்ன நினைச்சுட்டு இருக்கே? எங்க வீட்டில் மட்டும் மடியில் தூக்கி வச்சு கொஞ்சுவாங்களா? நானே பயப்படாமல் இருக்கேன். உனக்கு என்னடா.?!"


"உன்னைக் கல்யாணம் பண்ணினால், எங்க அம்மா செத்துடுவேன்னு சொல்லுது! என்னை என்ன பண்ண சொல்லுற?!"

"ஓ! அவங்க செத்துடுவேன்னு சொன்னதும் நீ பயந்துட்ட அப்படித்தானே? என்னை லவ் பண்ணும் போதும், என் பின்னால் சுத்தும் போதும், உன் அம்மா, தம்பி, அண்ணன், தங்கச்சின்னு யாரும் நினைவுக்கு வரவே இல்லையா?!"


"இங்கே பாரு ஆரு! ஸாரி, ஆருத்ரா! நாம பேசிக்கிட்டே இருந்தால், இது வளர்ந்துக்கிட்டே தான் போகும். கல்யாணம்ங்கிறது நம்ம இரண்டு பேர் மட்டும் சம்மந்தப்பட்ட விஷயம் இல்லை. அது இரண்டு குடும்பங்கள் சம்மந்தப்பட்டது. போதும் இதோடு முடிச்சுக்கலாம். லெட்ஸ் ப்ரேக் அப்!"


"அதெப்படி டா, காதல் மட்டும் இரண்டு பேர் சம்மந்தப்பட்ட விஷயம். கல்யாணம் மட்டும் குடும்பம் சம்மந்தப்பட்ட விஷயமா?! என்னை லவ் பண்ணும் முன்னால், இது ரெண்டு குடும்பங்கள் சம்மந்தப்பட்ட விஷயம் என்பது உனக்குத் தெரியாதா?" என அவள் கேட்க, அவனால் அவள் கேள்விக்கு பதில் சொல்லவே முடியவில்லை.


"இப்போ நான் என்ன செய்யணும்?" புரியாமல் அவளையே திரும்பக் கேட்டான் விவேக்.


"இப்போ என்ன செய்யணும்ன்னு நீ தான்டா முடிவெடுக்கணும். நான் உன் கூட, இப்போவே இப்படியே வர தயார். பேசாமல் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமா?!"


"உடனே எப்படி? உடனே கல்யாணம் பண்ணுறதெல்லாம் சாத்தியமில்லை ஆரு! எனக்கு கொஞ்சம் யோசிக்க டைம் வேணும்!" அவளைப் பார்க்காமல் எங்கோ பார்த்தபடி பதில் சொன்னான் விவேக்.
"என்னைப் பார்த்து, என் கண்ணைப் பார்த்து பதில் சொல்லுடா! நான் உன் முன்னால் தானே உட்கார்ந்திருக்கேன். நீ எங்கேயோ பார்த்து பேசிட்டு இருக்க? உனக்கு என்ன? யோசிக்க டைம் வேணும் அவ்வளவு தானே? ஒன் வீக் டைம் போதுமா? ஏன்னா அதுக்குள்ளே உன் கல்யாணம் முடிஞ்சுடும் தானே?" என ஆருத்ரா கேட்க, தூக்கிவாரிப் போட நிமிர்ந்தான் விவேக்.


"ஆ.. ஆருத்ரா!" அவன் வார்த்தைகள் தடுமாறியது.


"ஏன்டா, என்னைப் பார்த்தால் உனக்கு எப்படி இருக்கு? என்னைத் தவிர ஆஃபீஸில் இருக்கிற எல்லாருக்கும், பர்ஸ்னலா இன்விடேஷன் கொடுத்தால் எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா? நீயா வந்து ப்ரபோஸ் பண்ணுவ, டைம் பாஸுக்கு லவ் பண்ணுவ. கல்யாணம்ன்னு வந்தால் மட்டும், வேறப் பொண்ணைத் தேடிட்டு ஓடிடுவ.. இதெல்லாம் என்னடா நியாயம்.?"


"ஆமா! எல்லாரையுமே இன்வைட் பண்ணினேன். இப்போ அதுக்கு என்ன? உனக்கு எப்படியும் தெரிஞ்சுடும்ன்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் பரவாயில்லை, ஸ்மூத்தா ப்ரேக் அப் பண்ணிடலாம்ன்னு தான் நினைச்சேன். பட், நீயே வெளிப்படையாய் பேசும் போது, எனக்கென்ன பயம்?!" எனக் கேட்டபடியே அவளை நிமிர்ந்து பார்த்தவன்,


"உன்னை எனக்குப் பிடிச்சிருந்தது ஆரு. ஆனால், உன்னை மாதிரி சிந்தனை, செயல், நடை, உடைன்னு எல்லா விஷயத்திலும், நவீனமா இருக்கிற பொண்ணு, என் குடும்பத்திற்கு செட் ஆகவே மாட்டாள்ன்னு எனக்கு நல்லா தெரியும். அப்பறம் ஏன் என்கிட்டே ப்ரபோஸ் பண்ணினன்னு நீ என்னைப் பார்த்துக் கேட்கலாம். என்ன செய்ய? வொர்க் ப்ளேஸில் ஒரு குட்டி டைம் பாஸ் வேணுமே.. அதுக்குத்தான் உன்னை யூஸ் பண்ணிக்கிட்டேன். போதுமா? உண்மை தெரிஞ்சுடுச்சா? இப்போ நான் போகலாம் தானே?" கொஞ்சமும், உறுத்தலோ, குற்றவுணர்வோ இல்லாமல் பதில் சொன்னான்.


"யூ ஆர் அ சீட்டர் விவேக்!" பொறுமையிழந்து கொஞ்சமாய் குரலுயர்த்தினாள் ஆருத்ரா.


"யெஸ் அஃப்கோர்ஸ்! நீ சொன்னது சரிதான். நான் ஏமாற்றுக்காரன் தான். உன்னை மாதிரி அழகான பொண்ணை நான் லவ் பண்ணுறேன்னு சொல்றதே ஒரு இமேஜூக்குத்தான். இதெல்லாம் நம்ம வொர்க் பண்ணுற ஐ.டி ஃபீல்டில் ரொம்பச் சாதாரண விஷயம். குழந்தை மாதிரி இதுக்குப் போய் ஃபீல் பண்ணாமல், போய் வேலையைப் பாரு.!" ரொம்பவே நக்கலானக் குரலில் அவன் சொல்ல, அவன் மீது எழுந்தக் கோபத்தை முயன்று அடக்கியடி,


"நீ எனக்கு மட்டுமல்ல, உன்னை நம்பி வரப் போற இன்னொரு பொண்ணுக்கும் சேர்த்து துரோகம் பண்ணுற விவேக்.! ஒருவேளை அந்தப் பொண்ணுக்கு இந்த விஷயம் தெரிந்தால்?" எனக் கேள்வியாய் அவள் இடைநிறுத்த,


"முடிஞ்சுப் போன இந்தக் கதையெல்லாம் அவளிடம் போய் சொல்ல நான் ஒண்ணும் முட்டாள் இல்லை. என் வாழ்க்கையைப் பத்தின அக்கறை உனக்குத் தேவையில்லை. என் வாழ்க்கையைப் பார்த்துக்க எனக்குத் தெரியும்.!"

திமிராகவே விவேக் பதில் சொல்ல,


"ஒருவேளை அவங்களே நேரில் வந்தாலும் இதையே தான் சொல்லுவியா?" என ஆருத்ரா சொன்ன அந்த நொடி, ஆருத்ராவின் பின்னாலிருந்து எழுந்தாள் அந்தப் பெண். விவேக்குடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த அதே பெண் நந்தினி.



"நந்தினி! நீ எப்படி இங்கே? அது வந்து நான்..!" என எழுந்து நின்று, அவளிடம் விளக்க முயன்ற அதே நேரம், விவேக்கின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள். அவன் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு நிற்க, அவனைத் துளியும் கண்டுகொள்ளாமல், லேசாய் கலங்கிய கண்களோடு, அவனைத் தாண்டி வெளியே சென்றிருந்தாள்.



நந்தினியின் கைவண்ணத்தில், கன்னத்தைப் பிடித்தபடியே, தன் எதிரே கால் மேல் கால் போட்டு, இதழ்களில் நக்கல் புன்னகையுடன் அமர்ந்திருந்த ஆருத்ராவைக் கோபமாய்ப் பார்த்தான் விவேக்.


"இதெல்லாம் உன் வேலை தானா? இப்படியெல்லாம் பண்ணிட்டா நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்குவேன்னு நினைச்சியா?" எனத் திமிராய் அவன் கேட்க,
"இன்னுமும் உன்னைக் காதலிச்சுட்டு இருக்க, நான் ஒண்ணும் பைத்தியம் இல்லை மிஸ்டர் விவேக். எங்கிருந்தாலும், வாழ்கன்னு வாழ்த்திட்டு போற அளவிற்கு எனக்கு பெரிய மனசெல்லாம் இல்லை. அதனால் தான்.. நான் ஏமாந்த மாதிரி இன்னொரு பொண்ணு ஏமாந்திடக் கூடாதேன்னு, சும்மா ஒரு பொது சேவை..!" என அவனுக்குக் குறையாத திமிருடன் பதில் சொன்னாள் அவள்.



"இந்த நந்தினி இல்லைன்னா, எனக்கு வேற பொண்ணே கிடைக்காதா என்ன? நான் ஆம்பிள்ளை, எனக்கு ஆயிரம் பொண்ணுங்க கிடைக்கும்.! "


"உனக்கு ஆயிரம் பொண்ணுங்கக் கிடைச்சாலும், இப்போ நடந்த இந்த விஷயங்கள் உன் மனசுக்குள்ளிருந்து உறுத்திட்டே தான் இருக்கும். அது போதும் எனக்கு. இனிமே நீ எந்தப் பொண்ணை ஏமாத்தணும்ன்னு நினைச்சாலும், இதெல்லாம் ஞாபகத்தில் வரும் தானே?!" என அவள் கேட்ட கேள்விக்கு, அவன் பதில் சொல்லாமல் நின்றிருக்க, கைப்பையை எடுத்துக்கொண்டு வெளியேறியிருந்தாள் ஆருத்ரா.


*******


என்னதான் அவனிடம் தைரியமாய் பேசிவிட்டு வந்திருந்தாலும், அவளுக்கு வலித்தது. கலங்கியக் கண்களிலிருந்து வழியத் துடித்த கண்ணீரை அடக்க பெரும்பாடு பட்டாள். இது அவளின் முதல் காதல்.! முதல் தோல்வி! முதல் ஏமாற்றம்! நிரம்பவும் வலித்தது. அவனின் திருமண அழைப்பிதழை பார்த்த நாள் முதல், அவள் கண்களில் துளி உறக்கம் இல்லை. முதலில் பொய்யாக இருக்குமென்று தான் நம்பினாள். ஆனால் அவள் நம்பிக்கை தான் பொய்யாய்ப் போனது. அவள் நம்பிக்கையோடு சேர்ந்து அவள் காதலும் பொய்த்துப் போனது.


'என்னை ஏமாற்ற அவனுக்கு எப்படி மனது வந்தது? நான் என்ன தவறு செய்தேன்?' என ஆற்றாமை மட்டுமே அவளுள் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், தன்னைப் போல் ஒருபெண் ஏமாற்றப்படக் கூடாதென்ற எண்ணமே, அவளை இப்படியொரு முடிவு எடுக்க வைத்தது.
ஒருவேளை அவனே, அவளிடம் வந்து, தன் பெற்றோர்களின் கட்டாயத்தால் திருமணத்திற்கு சம்மதித்ததாகச் சொல்லியிருந்தால் கூட, போய்த் தொலையட்டும் என விட்டிருப்பாள் தான். ஆனால், தன்னை அவன் ஏமாற்றியதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவன் வேண்டுமானால், நேரப் போக்கிற்கு காதலித்திருக்கலாம். ஆனால் அவள் உண்மையாகத் தானே காதலித்தாள். கண்ணுக்குத் தெரியாத காதல் வந்து, தன்னை இப்படி வேதனைப்படுத்துமென அவள் கனவிலும் நினைத்ததில்லை. காயமே இல்லாமல் வலியை உணர்வது அவளுக்கு முதல்முறை. என்னதான் வெளியே தைரியமாய் காட்டிக் கொண்டாலும், விரல் சொடுக்கும் நேரத்தில், அனைத்தையும் மறப்பதற்கு இயந்திரம் ஒன்றும் இல்லையே? தனக்குள்ளேயே தன் மனப் போராட்டங்களை மறைத்தவள், கைப்பையை அழுந்தப் பற்றியபடி தன் நடையைத் தொடர்ந்தாள்.


"ஆரு! ஏய் ஆரு! நில்லு!"


"ஏய் ஆரு..!" எனத் தனக்குப் பின்னால் கேட்டக் குரலில், தன் நடையை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தாள் ஆருத்ரா.


"நானும் வர்ரேன்னு சொன்னேன்ல்ல?" அவளுடன் நடந்தபடியே கேட்ட நண்பனுக்கு பதில் சொல்லாமலே நடந்தாள் அவள்.


"கோபமா இருக்கியா? அவன் ரொம்ப ஹர்ட் பண்ணிட்டானோ? அவன் இன்விடேஷன் கொடுத்த விஷயத்தை நான் சொல்லாமல் இருந்திருக்கலாம்!" உண்மையான வருத்தத்துடன் சொன்னான் ராகவ்.


"நீ சொல்லலைன்னா எனக்குத் தெரியாமலே போய்டும்ன்னு நினைச்சியா டா?"


"ஏய்! அப்படி இல்லை டி! இதோட தொடக்கப்புள்ளி நான் தானே?" எனக் கேட்ட ராகவை மேலும், கீழும், ஒருமாதிரியாய் பார்த்து வைத்தவள்,


"பைத்தியாமாடா நீ? எல்லாம் தெரிஞ்சு தான் பேசுறியா? அவனை விரும்பினது நான் தான். அவன் என்கிட்டே வந்து ப்ரபோஸ் பண்ணும் போது ஓகே சொன்னதும் நான் தான். ஜஸ்ட், அவனை இன்ட்ரோ கொடுத்த ஒரே காரணத்திற்காக நீ தான் காரணம்ன்னு சொல்லுவியா? ஏதோ இப்போவே அவனோட உண்மையான குணம் தெரிஞ்சுடுச்சுன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்.! நீ அறிமுகப்படுத்தின ஒரே காரணத்திற்காக அவனை லவ் பண்ண நான் ஒண்ணும் குழந்தை இல்லை புரிஞ்சுக்கோ.!"


"பாய்ஸ் எப்போவுமே அப்படித்தான். சிலர் மட்டும் தான் ரிஸ்க் எடுப்பாங்க! மோஸ்ட்லி ரிஸ்க் எடுக்க பயந்துக்கிட்டு எது நம்மளுக்கு ஸேஃப்ன்னு தான் பார்ப்பாங்க!"


"ஓ! அந்த பாய்ஸில் நீயும் ஒருத்தன் தானே? அது எப்படிடா, லவ் பண்ணும் போது மட்டும், ஜாதி, மதம், இனம், குடும்பம்ன்னு எதுவுமே உங்கக் கண்ணுக்குத் தெரிய மாட்டேங்குது? அதுவே கல்யாணம்ன்னு வந்துட்டா சின்ன சின்ன விஷயங்கள் கூட உங்கக் கண்ணுக்குப் பெருசா தெரியுது. அப்பறம் என்ன விளக்கெண்ணெய்க்கு லவ் பண்ணுறீங்க? ஸேஃபா உங்க அம்மா பார்க்கிற பொண்ணையே கட்டிக்கலாம் தானே?" கொஞ்சம் குரலுயர்த்தி, உடன் நடந்த நண்பனைப் பார்த்துக் கேட்டாள் அவள்.


"ஏய்! நான் விவேக் இல்லைம்மா! நான் ராகவ்! நீ விவேக்குன்னு நினைச்சு என்கிட்டே பேசிட்டு இருக்க! ஐ அம் ஆல்வேஸ் சிங்கிள் அண்ட் யங்!"


"எப்படி இருந்தாலும், நீயும் ஆம்பிள்ளை தானே டா? நீயெல்லாம் இந்த விவேக் மாதிரி எதாவது பண்ணின, நானே உன்னைக் கொன்னுடுவேன்!" தன் விரல் நீட்டி மிரட்டினாள் ஆருத்ரா.


"மிஸ்.ஆருத்ரா! கொஞ்சம் அந்தக் கோப மனநிலையில் இருந்து வெளியே வாங்க! இப்படி கோபமா உன்னைப் பக்கத்தில் பார்க்கவே பயமா இருக்கு! இப்போ நாம எங்கே போலாம்? சாட் ஐட்டம் எதாச்சு சாப்பிடுவோமா? இல்லைன்னா டீ குடிக்கப் போகலாமா?" அவள் மனநிலையை மாற்றுவதற்காய் அவன் கேட்க,


"ம்ம்ம்.. போகலாம்! ஆனால் அங்கெல்லாம் வேணாம்! நான் சொல்ற இடத்துக்குக் கூட்டிட்டு போவியா? உனக்கு நான் ட்ரீட் தர்ரேன். இந்த விவேக்கை ப்ரேக்-அப் பண்ணினதை செலிப்ரேட் பண்ணலாம்!"


"நீ ஒத்த சொல்லு சொல்லு.. அந்த ஆகாயத்தையும், நீரு நிலத்தையும், காத்தையும், நெருப்பையும் கொண்டார்ந்து தாரேன் பரிசா?!" பாடலையே பாடி பதிலைக் கேட்டான் ராகவ்.


"பாருக்கு போலாம் டா! என்னை ஒரேயொரு முறை அங்கே கூட்டிட்டு போயேன்.. ப்ளீஸ்..!"


"எம்மா தாயே.. நான் இந்த விளையாட்டுக்கு வரலை. ஐடியில் இத்தனை வருஷமா வேலை பார்க்கிறேன். இவனுங்க பார்ட்டின்னு கூப்பிட்டாலே நான் போக மாட்டேன். நீ என்னடான்னா அசால்ட்டா ஊருக்கு போற மாதிரி, பாருக்கு கூப்பிடுறே? ஐ அம் எ டீடோட்லர் யூ க்நோ?"


"ஏய் சும்மா ஒரேயொரு தடவை டா! அங்கே எப்படி இருக்கு? என்னவெல்லாம் பண்ணுறாங்கன்னு நான் பார்க்கணும்.!"


"அங்கே தேவையில்லாத எல்லாமே பண்ணுவானுங்க! நமக்கு அது தேவையில்லை. நீ முதலில் கிளம்பு! நான் உன்னை ஹாஸ்டலில் ட்ராப் பண்ணிட்டு வீட்டுக்குப் போறேன்.!"



"ஏன்டா சும்மா ஒரு பேச்சுக்குக் கூட, பொண்ணுங்க இதெல்லாம் சொல்லக் கூடாதா? அப்படியே பதறுற? பசங்களெல்லாம் லவ் ஃபெய்லியர்ன்னா பாருக்கு போறீங்களே? அதான், நானும் போகலாமேன்னு கேட்டேன்.!" அவள் சிரித்துக்கொண்டே சொல்ல,



"ம்க்கும்! இதெல்லாம் செஞ்சு தான், நீ லவ் ஃபெய்லியர்ன்னு நிரூபிக்கணுமா? வேணும்னா வா, இங்கே கண்ணெதிரில் தெரியுது பார், ஒயின் ஷாப். இங்கே வேணும்ன்னா கூட்டிட்டு போறேன். உனக்கு என்ன வேணும்ன்னாலும் வாங்கிக்கலாம்!" அவள் கரம் பிடித்தபடி அவன் வேகமாய் நடக்க,


"டேய்! வேணாம் டா! நான் சும்மா விளையாட்டுக்குக் கேட்டேன் டா! டேய் எருமை! கையை விடு டா! ஃப்ரெண்ட்ன்னு பார்க்க மாட்டேன். என்னைக் கடத்திட்டு போறான், இந்தப் பையன்னு கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன் பார்த்துக்கோ!" என அவனைத் திட்டியபடியே அவனுடன் நடந்தாள் ஆருத்ரா. அந்த மதுபானக் கடையை நெருங்க, நெருங்க அவள் மனதை பயம் சூழ்ந்துக் கொண்டது.


'நிஜமாகவே அழைத்துப் போய்விடுவானே?' என்ற பதற்றமும், குழப்பமும் அவள் முகத்தில் படர்ந்திருக்க,


"டேய்! இடியட்! விடுடா! விளையாட்டுக்கு தானே கேட்டேன்.!" எனக் கரத்தை உதறியவள், அவனைப் பார்த்து முறைத்தாள்.


"இவ்வளவு பயம் இருக்குல்ல? அப்பறம் என்னத்துக்கு இதெல்லாம்?!" என ராகவ் புருவம் உயர்த்த,


"சும்மா ஃபன்னுக்கு தான். சரி வா! நாம வழக்கம் போல, சாட் ஐட்டம் எதையாவது சாப்பிட்டு, மசாலா டீ குடிக்கலாம்!" என அவள் அழைத்துப் போனாள்.
தங்களுக்குப் பிடித்த சாட் வகைகளை உண்டுவிட்டு, மசாலா தேநீரைப் பருகியபடியே யோசனையோடு அமர்ந்திருந்தாள் அவள்..


"இன்னும் அந்த வீணாய்ப் போன விவேக்கையே நினைச்சுட்டு இருக்கியா?"


"ம்ம்.! மறக்கணும்ன்னு நினைக்கிறேன். அதனால் தான் அவன் நினைப்பு வந்துடுச்சு!"


"அவன் இதுக்கெல்லாம் சுத்தமா ஒர்த்தே இல்லாதவன் ஆரு. நம்மளை அவங்களோட சுயநலத்திற்காக பயன்படுத்திக்கிட்டவங்களை நினைச்சுக்கிட்டே டைம் வேஸ்ட் பண்ணணும்ன்னு எந்த அவசியமும் இல்லை ஆரு. ஜஸ்ட் பாஸிங் க்ளௌவ்ட்ன்னு நினைச்சு அவனை மறந்துடு.!"


"ஹீ யூஸ்ட் மீ! அது எனக்கு நல்லா தெரியும் ராகவ். பட், நான் அவனை உண்மையாய் விரும்பினேன். ஜஸ்ட் லைக் தட் மறந்துட்டு போக முடியலை. உண்மையாய் இருந்ததாலோ என்னவோ ரொம்ப வலிக்குது ராகவ். எனக்குத் தெரியும், நான் யோசிக்கும் ஒருநொடிக்கு கூட அவன் தகுதி இல்லாதவன்னு.. பட் முடியலை. என் வாழ்க்கையோட முதல் ஏமாற்றம். ஸோ, நான் இதை கடந்து வர்ரதும் கொஞ்சம் கஷ்டம் தான் டா!" தன் மனதில் ஓடிக்கொண்டிருந்ததை அப்படியே சொன்னாள் ஆருத்ரா.


"அதுக்குன்னு இப்படியே இருக்கப் போறியா? சோகமா அழுது வடிஞ்ச மூஞ்சியோட அவனை நினைச்சுட்டே இருக்கப் போறியா? அவன் ஜாலியாய் கல்யாணம் பண்ணிக்கப் போறான். நீ அவனை நினைச்சு அழுதுட்டே இரு.!"


"அவன் கல்யாணம் பண்ணிக்கட்டும், என்னமோ பண்ணிக்கட்டும். அது எனக்குத் தேவையில்லை. என்னோட கோபமும் ஆற்றாமையும், என்னை நினைச்சு மட்டும் தான். அவன் என்னை யூஸ் பண்ணிக்கிறான்னு தெரியாமல் இருந்திருக்கேனே? அதை நினைச்சு மட்டும் தான் வருத்தமா இருக்கு.!"


"ஃபர்ஸ்ட் ஃபெய்லியர் இல்லையா.? அதனால் தான் வருத்தமா இருக்கு. இன்னும் ரெண்டு மூணு ஃபெய்லியர் வந்துச்சுன்னா எல்லாம் பழகிடும்.!"


"டேய்! எருமைமாடு! ரெண்டு மூணா? என்னைப் பார்த்தால் உனக்கு எப்படி தெரியுது ஹான்?!"


"சும்மா கோபப்படாதே ஆரு! நம்ம டீமில் இருக்கிறவங்க, நம்ம கூட வொர்க் பண்ணுறவங்க, எல்லாரையும் யோசிச்சு பாரு. ஆஃபீஸுக்குள்ளே நுழைஞ்சாலே, நம்ம கண்ணுக்கு நிறைய தெரியுதே! இந்தக் காலத்திலெல்லாம் லவ் ஒருமுறை தான் வரும். ஒரு செடியில் ஒரு பூ மட்டும் தான் பூக்கும்ன்னு சொல்றதெல்லாம் சாத்தியமில்லை. இப்போ உன் விஷயத்தையே எடுத்துக்கோ, உன்னை ஏமாத்தினது விவேக். தப்பு அவன் தான் செஞ்சான். அவனை நினைச்சுட்டே காலம் முழுசும் மேரேஜ் பண்ணிக்காமல் இருப்பியா? உன் வீட்டில் இருக்கவங்க தான் உன்னை கடைசி வரை தனியா இருக்க விடுவாங்களா? நல்லா யோசிச்சு பாரு, நான் சொல்றது உனக்குப் புரியும்!"


"எப்பா சாமி! போதும் டா! இப்படி லெக்சர் எடுத்தால் உனக்கு எந்த பொண்ணு டா செட் ஆகும்? ஏதோ ஃப்ரெண்டா போன பாவத்துக்கு நான் உன் கூட சுத்திக்கிட்டு திரியறேன். ப்ரைமெரி ஸ்கூலில் பாடம் எடுக்கிறவனையெல்லாம் எப்படிடா ஐடியில் வேலைக்கு எடுத்தாங்க? முடியலை டா! அந்த விவேக் என்னை ஏமாத்தினது கூட வலிக்கலை டா! உன் அட்வைஸை கேட்டு காது வலியே வந்துடுச்சு.!" என அவள் சொல்ல,


"எப்படியோ அந்த விவேக்கை மறந்துட்டியே அது போதும் எனக்கு.!" என அவன் சிரிக்க நண்பனோடு சேர்ந்து சிரித்தாள் ஆருத்ரா.


தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும், ஆருத்ராவும், ராகவும் நெருங்கிய நண்பர்கள். நட்பிற்கு ஆண், பெண் உண்டா என்ன? முதன்முதலில் சென்னைக்கு பணி நிமித்தமாய் வந்த ஆருத்ரா, ராகவின் குழுவின் கீழ் தான் பணியாற்றினாள். பணி நிமித்தமாய் அனைத்து விபரங்களையும், நெளிவு சுளிவுகளையும் கற்றுத் தந்தவன் ராகவ் மட்டுமே.. ஒரு குழு தலைவர் மற்றும் பணியாளர், என்ற முறையில் துவங்கிய அவர்களின் உறவு, அவள் தன் நிலையை உயர்த்தி, துணை மேலாளராய் உயர்ந்த பின்பும் கூட, சுயநலமில்லா நட்பாகத் தொடர்கிறது.


"சரிடா! என்னை ட்ராப் செய்றியா? இல்லை நானே கிளம்பட்டுமா?!" அந்த சிற்றுண்டியகத்தில், தாங்கள் உண்டதற்கான தொகையை செலுத்தியபடியே கேட்டாள் அவள்.


"நானே ட்ராப் செய்யறேன்.! முதலில் ஹாஸ்டலில் இருந்து மாறித் தொலை. நீயெல்லாம் அஸிஸ்டென்ட் மேனேஜர்ன்னு சொல்லிக்காதே! இன்னுமும் ஹாஸ்டலில் தங்கிக்கிட்டு, கார் நிறுத்த இடமில்லாமல், இதெல்லாம் தேவையா உனக்கு?" என்றபடியே அவள் முன்னிருக்கையில் அமரவும், தன் மகிழுந்தைக் கிளப்பினான் ராகவ்.



"ம்ப்ச்! எங்க வீட்டில் நான் கார் வாங்கியிருக்கேன்னு தெரியாது டா! நான் இப்போ ஹாஸ்டலில் இருந்து மாறினால், ஏன் எதுக்குன்னு கேள்வி வரும். அவங்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. அதைவிட முக்கியமான விஷயம், தனியா தங்கறதெல்லாம் எனக்கு செட் ஆகாது!" என அவள் சொல்ல,


"எப்போ தான் இந்த பயத்தை விடப் போறியோ?" எனக் கேட்டான் அவன்.


"பயமெல்லாம் இல்லை டா! தன்னந்தனியாய் ஒரு வீட்டில் நான் மட்டும் உட்கார்ந்துட்டு என்ன செய்ய? எனக்கு சண்டை போடவாவது என் கூட யாராச்சும் வேணும். ஹாஸ்டலில் பிரச்சனையே இல்லை. யாராவது கூட இருந்துட்டே இருப்பாங்க!" என அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவள் அலைபேசி இசைந்து தன் இருப்பை தெரிவித்தது.


"ஐயய்யோ! அம்மா டா! வீட்டிலிருந்து கால் பண்ணுறாங்க டா!" பயந்தபடியே அலைபேசியின் திரையைப் பார்த்தாள் அவள்.


"ஏய்! உங்க அம்மா தானே? அதுக்கு ஏன் இவ்வளவு பயப்படுறே?" என அவன் புரியாமல் வினவ,


"இந்நேரத்தில் கால் பண்ண மாட்டாங்கடா! எதுக்கு கூப்பிடுறாங்கன்னு தெரியலையே? நீ ஊடால எதுவும் பேசிடாதே ராகவ்.!" என அவனிடம் சொல்லிவிட்டு, அவள் அழைப்பை ஏற்க முயல,


"ஆமா, ஊடால பேசாதேன்னா என்னடி அர்த்தம்?" என முக்கியமான கேள்வியை அவன் கேட்க, தலையில் அடித்தபடியே அழைப்பை எற்றாள் அவள்.


"ம்மா!"


"தங்கம்! எங்கம்மா இருக்கிறே?!" என்ற அவள் அன்னை அபிராமியின் குரலில், எச்சில் கூட்டி விழுங்கிவிட்டு,


"ஆஃபீஸில் இருக்கிறேன்ம்மா!" எனப் பதில் சொன்னாள் அவள்.


"இம்புட்டு நேரம் ஆஃபீஸில் உட்கார்ந்துகிட்டு என்ன செய்றே? இந்நேரத்திற்கு வேலை முடிஞ்சுருக்குமே! இங்கண ரூமுக்கும் வரக் காணோம்! அப்படி என்ன வேலை இம்புட்டு நேரமா?" என அபிராமி கேட்கவும்,


'நான் இன்னும் ரூமுக்கு போகலைன்னு அம்மாவுக்கு எப்படி தெரியும்? எல்லாரும் சென்னைக்கு கிளம்பி வந்துட்டாங்களோ?' என அவள் தனக்குள் யோசித்துக் கொண்டிருக்க,


"ஆரும்மா! என்ன பேச்சையே காணோம்? உங்க தாத்தா, உங்க அப்பத்தா, நானு, உங்க அப்பாரு, உங்க பெரியம்மா, பெரியப்பா அம்புட்டு பேரும் உனக்காகத்தேன் இங்கண காத்து கிடக்கிறோம்! வெரசா வந்து சேரு தங்கம்!" எனச் சொல்லிவிட்டு அபிராமி அலைபேசியை அணைத்துவிட, அழைப்பு துண்டிக்கப்பட்டதைக் கூட உணராமல், அலைபேசியைக் காதில் வைத்தபடியே அமர்ந்திருந்தாள் ஆருத்ரா.


"ஏய் ஆரு! என்ன ஆச்சு?"


"நான் தொலைஞ்சேன். போச்சு! போச்சு!" என அவள் தன்னைப் போல் புலம்ப,


"ஏய் என்னடி ஆச்சு? லூசு மாதிரி புலம்பிட்டு இருக்கே?" என வாகனத்தை ஒற்றைக் கரத்தால் செலுத்தியபடியே, மறு கரத்தால் அவளை உலுக்கினான் அவன்.


"ஒட்டுமொத்தக் குடும்பமும், கிளம்பி இங்கே வந்துருக்காங்க டா! என்னத்துக்குன்னு தெரியலையே?" எனப் புலம்பியவள், தன்னைக் குனிந்து பார்த்தாள். கையில்லாத வெளிர் மஞ்சள் நிற க்ராப் டாப்பும் அடர் நீல நிற ஜீன்சும் அணிந்திருந்தாள்.


"ராகவ்! ராகவ்! எதாவது மால், இல்லைன்னா துணிக்கடை எங்கேயாவது நிறுத்துடா! இந்த ட்ரெஸ்ஸோட போனேன். அவ்வளவு தான்..!" எனப் பதற்றமாய் புலம்பிய ஆருத்ராவை, புதிராய்ப் பார்த்தபடியே வாகனத்தைச் செலுத்தினான் ராகவ். அதே நேரம், தன் வீட்டினர் சென்னை வந்திருப்பதே அவளுக்கு அதிர்ச்சியாய் இருக்க, அதைவிட பேரதிர்ச்சி ஒன்று அவளுக்கு காத்திருக்கிறதென்பதை அவள் அப்போதைக்கு அறிந்திருக்கவில்லை.


அன்பாகும்...?
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் டியர்ஸ்..!

அன்பின் அதீதங்களில்..! முதல் அத்தியாயம் பதிந்துவிட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்.

அன்புடன்,
சுசி கிருஷ்ணன்.
 
புதுக்கதைக்கு வாழ்த்துகள் சிஸ் 😍😍ஆருத்ரா விவேக் பார்த்து கேட்ட கேள்விகள் அதிரடி ஆருத்ரா வீட்டினர் மாப்பிள்ளை பற்றி பேச வந்துருக்காங்களோ 🤔🤔
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புதுக்கதைக்கு வாழ்த்துகள் சிஸ் 😍😍ஆருத்ரா விவேக் பார்த்து கேட்ட கேள்விகள் அதிரடி ஆருத்ரா வீட்டினர் மாப்பிள்ளை பற்றி பேச வந்துருக்காங்களோ 🤔🤔
இருக்குமோ? மிக்க நன்றி டியர் மா ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதீதம்-2

பழனிவேல் - வள்ளியம்மை தம்பதிகளுக்கு இரு மகவுகள். மூத்தவர் இராஜன். அவர் மனைவி பொன்னி. இவர்களின் ஒரே மகன் தர்ஷன். இளையவர் பரமசிவம். அவர் மனைவி அபிராமி. இவர்களுக்கு இரு பெண் மகவுகள். மூத்தவள் நம் நாயகி ஆருத்ரா. இளையவள் மஞ்சரி. தர்ஷனையும், மஞ்சரியையும் தவிர, மொத்தக் குடும்பமும் ஆருத்ராவைக் காண, மதுரையிலிருந்து சென்னைக்குக் கிளம்பி வந்திருந்தனர்.


"என்னத்தா! பிடிச்சுருக்கா? உனக்கு பிடிச்சா போல டிசைனெல்லாம் இருக்கா?!" எனக் கேட்டார் ஆருத்ராவின் தாத்தா பழனிவேல்.


"எம்புட்டு நேரமா தான்டி இங்கணையே காத்துக் கிடக்குறது? அந்த வார்டன் பொம்பளை வேற உள்ளேயே விட மாட்டேங்குது!" இது அவளின் பெரியம்மா பொன்னி.


"ஏய்! என்னத்துக்கு இப்படி வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கிறவ? என்ன ஏதுன்னு சொன்னால் தானே, அடுத்த வேலையைப் பார்க்க முடியும்! வேலை மெனக்கெட்டு நாங்க இங்கண வந்து உட்கார்ந்து கிடக்கோம்! நீ உத்து உத்து பார்த்துக்கிட்டே நிற்கிறியே?" இருவரின் கேள்விக்கும் பதில் சொல்லாமல் அவள் விழித்துக்கொண்டு நிற்க, கொஞ்சமாய் குரலுயர்த்தினார் அவளின் அன்னை அபிராமி.


"அபிராமி! என்னத்துக்கு புள்ளையை வையுறவ? பொறுமையாய் பார்த்து சொல்லட்டும். அவ விருப்பந்தானே நமக்கு முக்கியம்!" என்றபடியே தன் மகளைப் பார்த்தார் பரமசிவம்.


"ஏன்டி இத்தனை பேரும் உன்கிட்டே தானே கேட்குறாங்க? எதுக்கும் பதில் சொல்லாமல் குத்துக்கல்லு மாதிரி நிற்கிறவ? காத்து கருப்பு எதுவும் அடிச்சுருச்சா?" எனக் கேட்டார் அவளின் அப்பத்தா வள்ளியம்மை.


"அப்பத்தா! இப்போ எதுக்கு அவசரம்?" என அவள் கேட்ட கேள்வி அவள் செவியைத் தாண்டி வேறு யார் காதிலும் விழவே இல்லை.



"ப்பா! கொஞ்ச நாள் போகட்டுமே.. இப்போ என்ன அவசரம்?" வேறு வழியில்லாமல் தந்தையைத் துணைக்கழைத்தாள் ஆருத்ரா.


"வயசு போய்ட்டே இருக்குது தங்கம்! அந்தந்த வயசில் செய்ய வேண்டியதெல்லாம் செஞ்சுடணும். அது மட்டுமில்லாமல், நீ சோலியைப் பார்க்கிறேன்னு கண்ணுக்கு தெரியாத ஊரில் வந்து உட்கார்ந்துக்கிட்டே.. நினைச்சதும் உன்னை வந்து பார்க்க முடியுதா? கொள்ள முடியுதா? அதேன்.. உனக்கொரு கல்யாணத்தை முடிச்சுப்புட்டா நாங்க நிம்மதியாய் இருப்போம் பாரு..!" எனத் தந்தை சொன்னதை நம்ப முடியாமல், விழியகல தந்தையை அவள் பார்க்க,



"என் தம்பி.. சொல்றது சரி தானே ஆரும்மா! நாங்க உனக்கு கெடுதலா செஞ்சுடப் போறோம்? சந்தோஷமா சம்மதிக்கணும் டா!" எனப் பெரியப்பா ராஜன் சொல்ல, பதில் சொல்ல முடியாமல் அமைதியாய் நின்றாள் பெண்ணவள்.
அவள் மனம் முழுவதும், கருமேகங்களாய் குழப்பம் மட்டுமே சூழ்ந்திருந்தது.


கொஞ்ச நாட்களாகவே திருமணம் என அவள் வீட்டில் பேசிக் கொண்டிருந்தார்கள் தான். ஆனால் சட்டென இப்படி கையில் அழைப்பிதழுடன் வந்து நிற்பார்கள் என அவள் எதிர்பார்க்கவே இல்லை.



"இல்லை.. நான் எதிர்பார்க்கலை..! அவங்க பொண்ணு பார்க்கவெல்லாம் வரவே இல்லையே?" என்ன சொல்லி நிறுத்துவதெனத் தெரியாமல், வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டினாள் பெண்.



"ஆரும்மா! உனக்கு இன்னும் தெரியாதா.? உன் ஆத்தாளும் உன்கிட்டே சொல்லலையா? மாப்பிள்ளையெல்லாம் ஒருமாசம் முந்தியே உன்னைப் பார்த்துப்புட்டு போய்ட்டாக! உன்னை ரொம்பப் பிடிச்சுருக்குன்னு சொல்லிட்டாகளே?" என அவளின் அப்பத்தா வள்ளியம்மை சொல்ல,


"அப்பத்தா! அவங்க பார்த்தால் மட்டும் போதுமா? நான் பார்க்க வேணாமா? எனக்கு பிடிச்சுருக்கான்னு யாருமே கேட்கலையே?!" தன்னைக் கேட்காமலே இத்தனை தூரம் வந்து நிறுத்திவிட்டார்களே? என்றக் கோபத்தில் கொஞ்சமாய் உயர்ந்தது அவள் குரல்.


"நீ என்னடி கூறுகெட்டத்தனமா பேசிக்கிட்டு திரியறவ? உன்னைக் கேட்காமல் நம்ம வீட்டில் ஒரு துரும்பாவது அசையுமா? கல்யாணம் எம்புட்டு பெரிய விஷயம்? உன்னைக் கேட்காமல் எப்படிச் செய்வோம்? போன வட்டம் நீ ஊர்ப் பொங்கலுக்கு வந்தப்போ அந்தப் பையன் ஃபோட்டோவைக் காமிச்சு கேட்டேனா இல்லையா? நீ புடிச்சுருக்குன்னு சொல்லப் போய்த்தேன் மேற்கொண்டு, எல்லா ஏற்பாட்டையும் செஞ்சுருக்கோம். சும்மா இங்கண நின்னு பேசிக்கிட்டு இருக்காமல், வெரசா புறப்படும் வழியைப் பாரு!" கேள்வியே கேட்க முடியாத அளவிற்கு பதில் சொல்லி அவள் வாயை அடைத்துவிட்டார் அபிராமி.



போன முறை ஊருக்குச் சென்ற போது, சரியாய் புகைப்படத்தைப் பார்க்காமல், ஏதோவொரு நினைப்பில், தலையாட்டி வைத்தது அவள் நினைவிற்கு வந்தது. கூடவே வெள்ளை வேட்டி சட்டையில், ஏதோவொரு மரத்தின் மீது சாய்ந்தபடி சிரித்துக் கொண்டிருந்த அவன் முகமும் மங்கலாய் அவள் மனதிற்குள் ஓடியது.


'ஐயய்யோ! யாரு என்னன்னு ஒழுங்கா பார்க்கலையே? வேட்டியும் சட்டையுமா, நின்ன உருவம் மட்டும்தான் ஞாபகத்திற்கு வருது. சரியான பட்டிக்காட்டானா இருப்பானோ?' என தனக்குள் புலம்பியபடி தன்னைத் தானே நொந்துக் கொண்டாள் ஆருத்ரா.


"ம்மா! நான் இப்போவெல்லாம் வர முடியாது. நீங்க கிளம்புங்க! நான் கல்யாணத்திற்கு முதல் நாள் வர்ரேன்.!" வேறு வழியில்லாமல் அடுத்த ஆயுதத்தைக் கையில் எடுத்தாள்.



"இந்தாரு டி! இந்தக் கதையெல்லாம் வேணாம். இன்னும் பதினைந்து நாளில் கல்யாணத்தை வச்சிக்கிட்டு, உன்னை இங்கே ஒத்தையில் விட முடியாது. நீ எங்களோடவே புறப்படு!" என உறுதியாய் சொல்லிவிட்டார் வள்ளியம்மை.



"என்னது பதினைந்து நாளில் கல்யாணமா?" அடுத்த அதிர்வுடன் ஸ்தம்பித்து நின்றாள் அவள். அழைப்பிதழைப் பார்த்ததுமே அவள் மூளை இயக்கத்தை நிறுத்தியிருக்க, மற்ற விபரங்களை அவள் பார்க்க மறந்திருந்தாள். அந்த விவேக்குடனான பிரிவு நிகழ்ந்து முழுதாய் சிலமணி நேரங்கள் கூட, முடியாத நிலையில், அவளும் என்னதான் செய்வாள் பாவம்?



"தாத்தா! எடுத்தோம், கவிழ்த்தோம்ன்னு உடனே கல்யாணம்ன்னு சொன்னால், நான் கிளம்பி வரணுமா? நீங்க பார்த்து வச்ச அந்த மன்மத மாப்பிள்ளை மட்டும் என்னைப் பார்த்தால் போதுமா? நான் பார்க்க வேணாமா? அது வந்து ஃபோட்டோவில் பார்த்ததெல்லாம் எனக்கு ஞாபகமில்லை. நான் நேரில் பார்க்கணும். மாப்பிள்ளைக்கிட்டே பேசணும்!"



"என்னடி இப்படி சொல்லிப்புட்டு கிடக்கிறவ? நீதேன் ஃபோட்டோவில் பார்த்தியே.. பிறகு என்ன?! நேரில் பார்த்து அப்படி என்னத்தை பேசப் போற? எல்லாம் கல்யாணத்திற்கு பிறகு ஆற அமர பேசிக்கலாம்!" என அவளின் அப்பத்தா வள்ளியம்மை சொன்னது, அவளுக்குள் எரிச்சலைக் கிளப்பியது.



"அப்பத்தா! கல்யாணம் எனக்குத் தானே? உனக்கு இல்லையே? நான் மாப்பிள்ளைக்கிட்டே பேசாமல் கல்யாணத்திற்கு சம்மதிக்க மாட்டேன். அவன் எனக்கு ஒத்து வருவானா? இல்லையான்னு எனக்குத் தெரியணும். உங்களால் அது முடியாதுன்னா சொல்லுங்க! இந்தக் கல்யாணத்தை நிறுத்திடலாம்!"



"ஏய்! அபிராமி! பார்த்தியா உன் மக என்னவெல்லாம் பேசுறாள்ன்னு? வயசில் பெரியவங்கன்னு ஒரு மட்டு மரியாதை இல்லை.?" என்ற வள்ளியம்மையின் கேள்வியில்,



"இந்தாருடி உன் இஷ்டக் கழுதைக்கெல்லாம் விட முடியாது. தேதி குறிச்சு பத்திரிக்கையெல்லாம் அடிச்சாச்சு. அதைவிட முக்கியமா, உன் கல்யாணம்தேன், நம்ம வீட்டில் முதல் கல்யாணம். இதில் எதாவது சிக்கல் வந்துச்சு.. தொலைச்சுப்புடுவேன் பார்த்துக்கோ!" என மகளை மிரட்டினார் அபிராமி. அவள் அன்னை அபிராமியின் மிரட்டலுக்குக் கூட அவள் அஞ்சவில்லை.



"பேசாமல், எனக்கு பதில் மஞ்சரிக்கு கல்யாணம் பண்ணி வைங்க! என்னை விட்டுடுங்க!" எனத் தன் தங்கையின் பெயரை அவள் இழுக்க,


"ம்க்கும்! இம்புட்டு வயசு ஆகுது.. நீயே கல்யாணாம் வேணாம்ங்கிற? காலேஜ் படிக்கிற புள்ளைக்குப் போய் கல்யாணம் பண்ண சொல்லுறியே? உனக்கு அறிவு இருக்கா? இல்லையா?" என்ற தாயின் கேள்விக்கு,


"பின்னே என்னம்மா? எதுவுமே என்கிட்டே சொல்லாமல் ஏற்பாடு செஞ்சு வச்சுட்டு, திடீர்ன்னு கல்யாணத்திற்கு வரச் சொன்னால் நான் என்ன செய்ய முடியும்? இங்கே ஆஃபிஸில் நினைச்ச உடனே எல்லாம் லீவு போட முடியாது!" எனத் தன் நிலையைப் புரியவைக்க முயன்றாள் அவள்.



"இதெல்லாம் ஒரு பிரச்சனையா? நாங்கதேன் இத்தனை பேர் வந்திருக்கோமே? கல்யாணப் பத்திரிக்கையைக் காட்டி லீவு கொடுங்கன்னு சொன்னால் தரப் போறாங்க! நாம என்ன பொய்யா சொல்லப் போறோம்.? வெரசா கிளம்பு, லீவு கேட்டுட்டு வந்துட்டு ஊருக்கு புறப்படுவோம்!" என அவளின் பெரியம்மா பொன்னி சொல்ல, அவளுக்கு அப்படியே தலையில் அடித்துக்கொள்ளலாம் போலிருந்தது.



"ஐயோ! பெரியம்மா! நான் ஒண்ணும் ஸ்கூல் படிக்கிற பொண்ணு இல்லை.. பேரண்ட்ஸ் வந்து லீவ் கேட்கிறதுக்கு.. எனக்குன்னு கொடுத்த வேலையை முடிக்கணும். அதோட லீவெல்லாம் முன்னாடியே அப்ளை பண்ணணும்!"



"அது என்னமோ இருந்துட்டு போவட்டும்! சட்டுபுட்டுன்னு அந்தக் கழுதையை அப்ளை பண்ணி தொலைச்சுட்டு வா!" அவள் சொன்னதைக் காதில் வாங்காமல் இடையிட்டு அபிராமி பேச,



"ம்மா! இப்போ உடனே எல்லாம் எதுவும் பண்ண முடியாது. நீங்க என்கிட்டே சொல்லிட்டா வந்தீங்க? திடீர்ன்னு வந்து நின்னுட்டு, கிளம்புன்னு சொன்னால், உடனே கிளம்ப முடியுமா? நீங்க எல்லாரும் கிளம்பிப் போங்க! நான் பின்னாடியே வர்ரேன். எனக்கு இங்கே கொஞ்சம் வேலை இருக்கு!" என இறுதியாய் உறுதியாய் சொல்லிவிட்டாள் ஆருத்ரா.



"பின்னாடியே வாரேன்னு சொல்றவ, எங்களோடவே வந்தால் என்ன? உன்னை விட்டுட்டு ஒத்தையில் போறதுக்கு ஒண்ணும், நாங்க இம்புட்டு தூரம் வரலை. உன் வேலையை முடிச்சுட்டு பொறுமையாய் வா! நாங்க அதுவரை இங்கணையே இருக்கோம்.!" என அவளுக்குத் துளியும் குறையாத உறுதியுடன் பழனிவேல் சொல்லிவிட, செய்வதறியாது திணறிப் போனாள் ஆருத்ரா.



தான் மனதை முழுதாய் உடைத்தும் அவளால் சொல்ல முடியவில்லை. அந்த விவேக் தந்துவிட்டுப் போனக் காயங்கள் பச்சை இரணமாய் அவள் மனதை அரித்துக் கொண்டிருந்தது. ஒருவேளை விவேக்குடனான பிரிவு நிகழாமல் இருந்திருந்தால், தைரியமாய் அவனை விரும்புவதை சொல்லியிருப்பாள் தான். ஆனால், அது காதலாகவே இருந்தாலும் கூட, நான் தோற்றுவிட்டேன்.. என தன் குடும்பத்தினர் முன் ஒப்புக்கொள்ள அவளால் முடியவில்லை.



ஏதோவொன்று அவளைச் சொல்ல விடாமல் தடுத்து நிறுத்தியது. அதற்காக, விவேக்குடனான காதலை மறந்துவிட்டு, இந்தத் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவும் அவளுக்கு மனம் வரவில்லை. இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்து தடுமாறி நின்றாள் பெண்.
அவளுக்கு இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. தன் குடும்பத்தினர் சொல்வதைக் கேட்டு, அவர்களுடன் கிளம்புவதைத் தவிர அவளுக்கு வேறு வழியும் இருக்கவில்லை. ஆனால் கிளம்பி அவர்களுடன் செல்ல அவளுக்கு மனமும் இல்லை. ஆனாலும் இன்னும் பதினைந்து நாட்கள் இருக்கிறது. அதற்குள் திருமணத்தை நிறுத்திவிடலாம் என்ற குருட்டு நம்பிக்கையும் தைரியமும் அவளிடம் இருந்தது. தனக்குள் ஏதோவொன்றை யோசித்துக்கொண்டு பதில் சொல்லாமல் நின்றவளை,



"என்னடி! பொசுக்கு பொசுக்குன்னு கனா கண்டுக்கிட்டே நிக்கிறவ? என்ன ஏதுன்னு சொன்னால் தானே தெரியும்? நீ என்னதேன் கோக்கு மாக்கு வேலை செஞ்சாலும், இந்தக் கல்யாணம் நடந்தே தீரும். கல்யாணத்திற்கு இன்னும் பதினைஞ்சு நாள் இருக்கே, அதுக்குள்ளே ஏதாவது பெருசா பண்ணலாம்ன்னு நினைச்சுட்டு இருந்தால், சுத்தமா இங்கணையே அழிச்சுப்புடு. என்னத்தையாவது திட்டம் போட்டு வச்சுக்கிட்டு எங்களுக்கே ரூட்டைக் கொடுக்கலாம்ன்னு நினைச்ச, அம்புட்டுதேன் சொல்லிப்புட்டேன்.!" என விரல் நீட்டி எச்சரித்தார் அபிராமி.


அவளுக்கு விவரம் தெரிந்ததிலிருந்தே, இப்படி கடுமையாய் அவள் அன்னை அவளிடம் பேசியதே இல்லை. அவளுக்கு தன் அன்னை பேசுவது அதிர்ச்சியாய் இருந்தாலும் கூட, இந்தத் திருமணத்தை நிறுத்துவதில் நிரம்பவும் உறுதியாய் இருந்தாள் ஆருத்ரா.


******


ஒருவழியாய் ராகவ் உதவியுடன், விடுப்பை விண்ணப்பித்து, விடுப்பு எடுத்துக்கொண்டு, பெற்றோர் ஏற்பாடு செய்திருந்த அந்தப் பெரிய மகிழுந்தில், சென்னையிலிருந்து மதுரை வந்து சேர்வதற்கே மறுநாள் அதிகாலை ஆகியிருந்தது.



அதிகாலை வந்ததும், அசதியில் அனைவரும் தூங்கப் போய்விட, துளி உறக்கம் வராமல், கண்கள் திகுதிகுவெனக் காந்தியதையும் மீறி, விழித்துக்கிடந்தாள் ஆருத்ரா. மனம் ஒருபக்கம், விவேக்குடனான காதல் முவிற்கும், திடுதிடுப்பென ஏற்பாடு செய்திருந்த திருமணத்திற்கும் நடுவே நின்று தவியாய் தவித்துக் கொண்டிருந்தது.


இதை மறக்கவும் முடியவில்லை. அதை ஏற்கவும் முடியவில்லை. எதாவது நடந்து இந்தத் திருமணம் நின்றுவிடாதா? அவள் மனம் ஆவலாய் எதிர்பார்த்தது. திரும்பத் திரும்ப யோசித்து தலையை வலிக்கவே, அதிகாலை என்றும் பாராது, தன் நண்பன் ராகவிற்கு அழைப்பெடுத்தாள். முதன்முறை அழைப்பு எடுக்கப்படாமல், இரண்டாம் முறை அழைப்பை ஏற்றிருந்தான் ராகவ்.



"என்ன கல்யாணப் பொண்ணு! ஊருக்குப் போயாச்சா? ஒரே ஜாலி தான்..!" என ராகவ் சொல்ல,



"நேரில் வந்தேன்னு வச்சுக்கோ! கொன்னுடுவேன் டா உன்னை!" கோபமாய் எரிந்து விழுந்தாள்.



"என்ன ஆச்சு டி?" நிதானமாய் கேட்டான் அவன்.



"உன்னை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா? தூங்கிட்டு இருந்தியா?" எனக் கேட்ட அவள் குரலிலும் நிதானம் வந்திருந்தது.



"ஏய் லூசு! எனக்கு நைட் ஷிஃப்ட்! நேத்தே சொன்னேனே.. மறந்துட்டியா?" என அவன் கேட்ட பிறகே அவளுக்கு ஞாபகம் வந்தது. அவள் மனதிற்குள்ளேயே ஆயிரம் குழப்பங்கள் ஓடிக்கொண்டிருக்க, அவன் சொன்னதெல்லாம் அவளுக்கு சுத்தமாய் நினைவே இல்லை.


"ஸாரிடா! மறந்துட்டேன்!" என அவள் சொல்ல, அவள் குரலில் தெரிந்தக் குழப்பத்திலேயே,



"இப்போ என்ன உன் பிரச்சனை? ஏன் இவ்வளவு குழப்பம்?" எனக் கேட்டான் ராகவ்.



"இந்தக் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்தணும் டா! என்னால் சுத்தமா முடியலை. மனசே சரியில்லை. அந்த விவேக் செஞ்சுட்டு போன துரோகத்தில் இருந்தே நான் இன்னும் வெளியே வரலை. அதுக்குள்ளே கல்யாணம்ன்னு சொல்லும் போது, ரொம்ப இரிடேட்டிங்கா இருக்கு டா!"



"பேசாமல் உங்க வீட்டில் சொல்லிடேன் ஆரு!"



"நிறைய ட்ரை பண்ணிட்டேன் டா! என்ன காரணம் சொல்றது? உண்மையும் சொல்ல முடியலை. பொய்யும் சொல்ல முடியலை.!"



"பேசாமல் உண்மையைச் சொல்லி, கொஞ்சம் டைம் கேட்டுப் பாரேன் ஆரு?"


"எங்க வீட்டில் இருக்கிறவங்களைப் பத்தி உனக்குத் தெரியாது டா! என்னை கன்வீன்ஸ் பண்ண மட்டும் தான் ட்ரை பண்ணுவாங்களே ஒழிய, கல்யாணத்தை நிறுத்த மாட்டாங்க! அவங்களைப் பொறுத்தவரை, இது அவங்களோட கௌரவம்.!" தன் வீட்டினரின் மனதைக் கணித்து சரியாகவே சொன்னாள் ஆருத்ரா.



"ஏதாவது ஒண்ணு செஞ்சு தானே ஆகணும்! உனக்கு விருப்பமில்லைன்னா கல்யாணத்தை நிறுத்திடு. ஏன்னா, வாழப் போறது நீ நான். முடிவு உன் கையில் தான் இருக்கு. நீ எடுக்கிற முடிவில் தான் உன் சந்தோஷம், கஷ்டம் இரண்டுமே இருக்கு. அதோட எந்த முடிவு எடுக்கும் முன்னாடி, நல்லா யோசிச்சுக்கோ. இந்தக் கல்யாணத்தை நீ நிறுத்தினால், உன் குடும்பத்தையும் நீ பகைச்சுக்க வேண்டி வரலாம்.!" தெளிவாகவே சொன்னான் ராகவ்.



"அதுக்குத்தான் டா, நானும் யோசிக்கிறேன்.!"


"நீயாக கல்யாணத்தை நிறுத்தினால் தானே பிரச்சனை.. அந்த மாப்பிள்ளையே நிறுத்தினால், எந்தப் பிரச்சனையும் இல்லை தானே? பேசாமல், நேரடியாய் அந்த மாப்பிள்ளைக்கிட்டேயே பேசிடு ஆரு.!"



"ஐடியா நல்லாத்தான் இருக்கு. ஆனால் அவன் யாருன்னே எனக்குத் தெரியாதே?"



"ஏய் லூசு! உன் மூளை என்ன மழுங்கிப் போச்சா? அவன் பேர் கூடத் தெரியாதா? உங்க வீட்டில் இன்விடேஷன் கொண்டு வாந்தாங்களே.. பேரைக் கூட நீ பார்க்கலையா?!"


"பார்த்தேன் டா! ஏதோ பட்டிக்காட்டான் பேரு தான் போட்டிருந்தது. ஆனால், என்ன பேருன்னு மறந்து போச்சு.!"



"ரொம்ப நல்லது மா! பேசாமல் ஃபோனை வச்சிட்டு போய்த் தூங்கு.!" எனப் பொறுமையின்றி ராகவ் சொல்ல,



"ரொம்ப ஓவரா பண்ணாதே டா! இரு! நானே பார்த்துச் சொல்றேன்.!" என அலைபேசியைக் காதில் வைத்தபடியே அழைப்பிதழைத் தேடினாள் அவள். சில நிமிடங்களின் தேடலின் பின், தங்க நிறத்தில் தகதகத்த அந்த அழைப்பிதழைத் தேடி எடுத்துப் பிரித்தாள். அவளின் விரல் நுனி உணர்ந்த வழுவழுப்பிலேயே ஒரு அழைப்பிதழின் விலையே அதிகமாக இருக்கும் என அவளுக்குப் புரிந்தது. அவசரமாய் அழைப்பிதழைப் பிரித்து அவன் பெயரை உற்று நோக்கியவள் மின்சாரம் தாக்கியதைப் போல், அதிர்ந்து அசையாமல் நின்றிருந்தாள்.

"ஆரு!"

"ஆருத்ரா!"

"இவ்வளவு நேரமாவா தேடுற?"

"ஏய் எருமை! எதாவது பேசு! அங்கே என்ன தொல்பொருள் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கியா? அவன் பேரு என்ன அவ்வளவு பெருசாவா இருக்கு?!" என ராகவ் அலைபேசியின் அந்தப்பக்கம் கத்திக் கொண்டிருக்க,



"ரா.. ராகவ்..!" என்ற அவளின் குரல் தடுமாறியது.


"என்ன ஆச்சு ஆரு? அவன் பேரை வாசிக்கத் தெரியலையா?" எனக் கிண்டலாக அவன் கேட்க,


"இ.. இமயவரம்பன்..!" எனச் சொன்னாள் அவள்.


"இந்தப் பேரைச் சொல்லத்தான் இவ்வளவு நேரமா? ஏதோ பழைய காலத்து பேர் மாதிரி இருக்கு. இந்தப் பேரைச் சொல்றதுக்கு ஏன்டி உன் குரல் தேயுது?!" என அவன் புரியாமல் வினவ,



"இந்தாளு சரியான ரௌடி டா..! இவனைப் போய் எனக்கு மாப்பிள்ளையாய் பார்த்து வச்சிருக்காங்க! ஐயோ..!" கோபமும், ஆத்திரமுமாய் புலம்பிக் கொண்டிருந்தாள் ஆருத்ரா.



"என்ன சொல்ற ஆரூ? எனக்கு ஒண்ணுமே புரியலை.!"


"இவனை நான் ஏற்கனவே பார்த்திருக்கேன். இவனை எனக்குத் தெரியும்!" என ராகவின் கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்த, அவளின் மென் விரல்கள் சுமந்திருந்த கூரான நகக் கிரீடங்கள், அழைப்பிதழில் கோட்டோவியமாய் வரையப்பட்டிருந்த அவன் உருவத்தைச் சுரண்டியது.


"இங்கே பாரு ஆரு! உனக்குத் தெரிஞ்சவங்கன்னு சொல்ற.. அப்போ பேசுறது ஈஸி தானே? இதற்கு ஏன் இவ்வளவு கவலைப்படுற? பொறுமையாய் பேசு! இப்போதைக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லு!" எனப் பொறுமையாய் சொன்னான் ராகவ்.



"அது முடியாது ராகவ்! இனி இந்தக் கல்யாணத்தை நிறுத்த முடியும்ன்னு எனக்குத் தோணலை!" என அவள் சொன்னதைக் கேட்டு, இந்த முறை அதிர்ந்ததென்னவோ ராகவ் தான்.



"எம்மா ஆருத்ரா! நீ பேசுறதை வச்சு பார்த்தால், இது தீர்க்கவே முடியாத இடியாப்ப சிக்கல் மாதிரி இருக்கு. அவனைத் தெரியும்ங்கிற! இந்தக் கல்யாணத்தை நிறுத்தவே முடியாதுங்கிற.. என்ன தான் உன் பிரச்சனை? ஒண்ணு முழுசா என்ன பிரச்சனைன்னு சொல்லு. இல்லையா.. ஃபோனை வச்சிட்டு போய் தூங்கு! நியூஸ் பேப்பரில் வர்ர ஆறு வித்தியாசம் கண்டு பிடிக்கவே நான் அரைநாள் யோசிப்பேன். இதில் உன் பிரச்சனையை கண்டுபிடிக்கணும்ன்னா என் ஆயுசு போதாதும்மா!" இதுவரை இருந்த பொறுமையெல்லாம் தீர்ந்து போக, சலிப்பாய் சொன்னான் ராகவ்.


"இட்ஸ் அ செகெண்ட் மேரேஜ் ராகவ்! இது முதல் கல்யாணம் இல்லை.! இது எல்லாமே தாத்தாவோட ஏற்பாடு தான். நான் தாத்தாக்கிட்டே உடனடியா பேசியே ஆகணும்.!" அவளிடம் தெரிந்த பரபரப்பு, அலைபேசியின் அந்தப்பக்கம் பேசிக்கொண்டிருந்த ராகவையும் தொற்றிக் கொண்டது.


"ஏய்! என்னடி சொல்ற? செக்கெண்ட் மேரேஜா? எதுக்காக? உன் தாத்தாவுக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா? உனக்கு ஒண்ணும் கிழவி வயசு ஆகலை. உங்க வீட்டிலேயும் வசதி வாய்ப்புக்கெல்லாம் குறைவில்லை தானே? பிறகு ஏன் இந்த முடிவு? இது சரியில்லை ஆரு. நீ யார்க்கிட்டேயும் பேச வேண்டாம். பேசாமல், திரும்பவும் சென்னை கிளம்பி வந்துடு ஆரு.!" ஒரு நல்ல நண்பனாய், அவள் மீது அக்கறை உள்ளவனாய் சொன்னான் ராகவ்.



"இட்ஸ் டூ லேட் ராகவ்! நான் தான் யோசிச்சுருக்கணும்! அவன் ஃபோட்டோவைக் கூடப் பார்க்காமல், ஓகே சொன்னது என் தப்புத்தான். அப்போதைக்கு அவங்க வாயை அடைக்கிறதுக்காக சரின்னு சொல்லித் தொலைச்சுட்டேன். நான் சம்மதிச்சது தான் பெரிய தப்பாகிடுச்சு. வழியே இல்லாத கானகத்தில் மாட்டிக்கிட்டேனோன்னு தோணுது.!" தோழியின் குரலில் தெரிந்தக் கலக்கம், ராகவை ஆட்டிப் பார்த்தது.



"ஏய்! லூசு! மனசை விட்டுடாதே! அதெல்லாம் கல்யாணத்தை நிறுத்திடலாம். அவன் என்ன அவ்வளவு பெரிய ஆளா? ஆள் யாருன்னு சொல்லு! நம்ம பசங்களை வச்சு தூக்கிடலாம். மாப்பிள்ளை வந்தால் தானே கல்யாணம் நடக்கும்.!" அவளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாய் சொன்னான் அவன்.



"கல்யாணத்தைத் தலைமை தாங்கி நடத்தப் போறது யாருன்னு தெரிஞ்சால் நீ இப்படி பேச மாட்ட ராகவ்!"



"ஆமா! பேரே பட்டிக்காட்டான் மாதிரி தான் இருக்கு. இவரு கல்யாணத்திற்கு, முதலமைச்சரா வந்து தலைமை தாங்கப் போறார்.?"


"எஸ் ராகவ்! மாண்புமிகு முதல்வர். மயில்ராவணன் தான் தலைமைத் தாங்கி, இந்தக் கல்யாணத்தை நடத்தப் போறார்.நான் சென்னைக்கு வந்துட்டா மட்டும், என்னை விட்டுடுவாங்கன்னு நினைக்கிறியா ராகவ்?" என அவள் கேட்க,


"முதலமைச்சர் வந்து தலைமை தாங்கும் அளவிற்கு பெரிய ஆளா அவன்? ஐ அம் ஸாரி அவர்?" எனக் கேட்டு பின் தடுமாற்றத்துடன் திருத்தினான் ராகவ்.



"முதலமைச்சரோட முன்னாள் மருமகனுக்கு, அவரே முன்னால் நின்னு இரண்டாவது கல்யாணமும் பண்ணி வைக்கிறார். எவ்வளவு பெரிய மனசு பார்த்தியா அவருக்கு?!" எரிச்சலும் கோபமும் போட்டி போட கேட்டாள் அவள்.


"ஆரு! போதும்! இது ஒண்ணும் விளையாட்டு விஷயமில்லை. இது உன் வாழ்க்கை. அதனால், நீ முதலில் கிளம்பி வா! நாம பார்த்துக்கலாம். உன்னோட சர்டிஃபிகேட்ஸ், டாக்குமெண்ட்ஸ், பாஸ்போர்ட் இதெல்லாம் மட்டும் எடுத்துட்டு வந்துடு. நான் ஏதாவது ஏற்பாடு செய்றேன். நாம ஏதாவது பண்ணலாம் ஆரு. மனசை விட்டுடாதே!"



"தேங்க்ஸ் ராகவ்! நான் முதலில் தாத்தாகிட்டே பேசறேன். பேசிட்டு உனக்கு சொல்றேன்.!" எனச் சொல்லிவிட்டு அலைபேசியை அணைத்திருந்தாள் ஆருத்ரா.



மனதில் என்னென்னவோ ஓடிக்கொண்டே இருந்தது. இதை நிறுத்த முடியாது என்பது அவளுக்கு உறுதியாய் தெரிந்தது. ஏனென்றால், அவள் தாத்தா முன்னாள் அரசியல்வாதி. நகர்மன்ற உறுப்பினராக அதாவது வார்டு கவுன்சிலராக இருந்தவர். அவருக்கு அரசியலில் ஆர்வமும் அதிகம். தான் பெற்ற பிள்ளைகளான ராஜனையும் சரி, ஆருத்ராவின் தந்தையான பரமசிவத்தையும் சரி, அரசியலில் நுழைக்க எவ்வளவோ பாடுபட்டார். ஆனால், அதெல்லாம் கைக்கூடாமல் போக, இறுதியாய் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்பதை அவளால் புரிந்துக்கொள்ள முடிந்தது.


அவள் போன முறை ஊருக்கு வந்த போதே, அவளின் பெரியப்பா மகன், தர்ஷனுக்கும் அவளின் தாத்தாவிற்கும் நடந்த வாக்குவாதத்தை அவள் அறிவாளே? அவனையும் அரசியலில் கொண்டு வர அவர் செய்த முயற்சிகள் அத்தனையையும் மீறி, தாத்தாவிடம் சண்டைப் போட்டுக்கொண்டு நாடுவிட்டு நாடு சென்றுவிட்டான் தர்ஷன். அவனை நம்பி கோட்டை விட்டதை தன்னை வைத்துப் பிடிக்கப் பார்க்கிறார் என்பது அவளுக்குப் பிரிந்தது.


இது திருமணம் அல்ல, அரசியல் விளையாட்டு. மனிதர்கள் கண்ணுக்குத் தெரியாத முகமுடிகள் அணிந்துக் கொண்டு, ஆடப்போகும் விளையாட்டு. இந்த விளையாட்டிலிருந்து விடுபட வழித் தெரியாத விட்டில் பூச்சியாய் நின்றிருந்தாள் ஆருத்ரா. தனக்குள் யோசித்தபடி தன் அறையின் ஜன்னலோரமாய் அவள் நின்றிருக்க, மேஜை மீது விரிந்துக் கிடந்த அழைப்பிதழில், வரி வடிவமாய் சிரித்துக் கொண்டிருந்தான் இமயவரம்பன்.


அன்பு என்ற பெயர் சொல்லி, நம் மீது திணிக்கப்படும் அதீதங்களில், சில நேரங்களில் நாமே தொலைந்து கண்ணுக்குத் தெரியாமல் காணாமல் போய்விடுகிறோம். "உன் நல்லதுக்குத்தான்!" என நம் செவி நுழையும் வார்த்தைகளுக்குப் பின்னால், சுயநலமும் இருக்கலாம் இல்லையா? சில நேரங்களில், அன்பும் கூட ஆபத்தானது தானோ?


அன்பாகும்..??
 
Last edited:

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் டியர்ஸ்..!

அன்பின் அதீதங்களில்..! அடுத்த அத்தியாயம் பதிஞ்சாச்சு.

படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்.

தொடர் ஆதரவிற்கும், அன்பிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ❤

கருத்துத் திரி;

Thread 'சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.' சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதீதம்-3


காலை நேரப் பரபரப்பில் குடும்பத்தினர் அனைவரும், உணவு மேஜையில் அமர்ந்திருக்க, தயாராய் இருந்த உணவுப் பதார்த்தங்களை மேஜையில் அடுக்கிக் கொண்டிருந்தார் பொன்னி.
"மஞ்சு! ஏய் மஞ்சு! காலேஜுக்கு நேரம் ஆகலையா? வெரசா இறங்கி வாடி!" அபிராமியின் குரல் சத்தமாய் எதிரொலித்தது.



"அபி! அப்படியே ஆருவையும் கூப்பிடு! காலையில் காபி கூட வேணாம்ன்னு சொல்லிட்டா!" எனப் பொன்னி சொல்லவும்,



"நானும் கூப்பிட்டுப் பார்த்துட்டேன்க்கா! என்னமோ, மூஞ்சியை மூணு முழத்திற்குத் தூக்கி வச்சிட்டே திரியுறா.. என்ன பஞ்சாயத்தைக் கூட்டப் போறாள்ன்னு தெரியலை. மாமா வேற இந்தக் கல்யாணத்தை நடத்தியே தீரணும்ன்னு குறிக்கோளா இருக்காக! யாருக்குன்னு பேசன்னு எனக்குப் புரியவே இல்லைக்கா!" எனப் புலம்பினார் அபிராமி.



"நான் கூட, என் வீட்டுக்காரர் கிட்டே கேட்டுப் பார்த்தேன். மாப்பிள்ளை நல்ல மாதிரின்னு தான் சொல்றாக! நல்ல சொத்து, சுகம், வசதின்னு எல்லாமே இருக்கும் போது, நீ என்னத்துக்கு விசனப்படுற?"



"என்ன வேணும்னாலும் இருக்கட்டும்க்கா! நாம ஒண்ணும் வசதியில் குறைஞ்சவக இல்லை தானே? இல்லை நம்ம பிள்ளைக்கு எதாவது குறை இருக்கா? நம்ம ஆருவுக்கு அழகு இல்லையா? அறிவு இல்லையா? என்ன குறைச்சல் அவளுக்கு?" எனக் கொஞ்சம் ஆற்றாமையாய் கேட்டார் அபிராமி.



"உனக்குப் பிடிக்கலைன்னா, நேரடியாய் மாமாகிட்டேயே சொல்லியிருக்கலாம் தானே அபி? இப்படி மனசுக்குள்ளே வச்சு மருகிறதுக்குப் பதில், நேரடியாய்ப் பேசுறது நல்லது இல்லையா?" எனப் பொன்னி கேட்க,



"இம்புட்டு வருசமா இந்த வீட்டில் குடும்பம் நடத்தியிருக்கீங்க, இந்த வீட்டு நடைமுறையைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா என்ன? எல்லாமே நம்மக்கிட்டே கேட்டு செய்ற மாதிரிதேன் செய்வாக. ஆனால், நம்ம விருப்பத்தைச் சொல்ல முடியுமா? எல்லாம் மாமா விருப்பந்தேன். என்னதேன் நம்மக்கிட்டே கேட்டு எடுத்து செஞ்சாலும், அவங்க எதிர்பார்க்கிற பதிலை மட்டுந்தேன் நாம சொல்லணும். இதேன், இந்த வீட்டோட எழுதப்படாத விதி.!" எனச் சலிப்பாய் பதில் சொன்னார் அபிராமி.



"நாமதேன் நேரடியாய் பேச முடியாது. நீ உன் புருஷன் கிட்டே சொல்லி பேசச் சொல்ல வேண்டியது தானே? நாமதேன் இந்த வீட்டு மருமகளுங்க! வேற வீட்டிலிருந்து வந்தவங்க! நாம சொன்னால் கேட்க மாட்டாக. அவங்க புள்ளைங்க சொன்னாலும் கேட்க மாட்டாகளா?" எனப் பொன்னி கேட்க,


"ம்க்கும்! அப்படியே என்னைக் கட்டினவர் சொல்லி, மாமா கேட்டுட்டாலும்.. நானாச்சும், மனசு கேட்காமல், கோவத்தில் ரெண்டு வார்த்தை மாமாகிட்டே பேசிப்புடுவேன். ஆனால், என் புருஷன் வாயைத் திறக்கறதுக்குக் கூட, அவங்க அப்பா அனுமதி தந்தால்தேன் திறப்பாரு. அவருக்கிட்டே போய்ச் சொல்ல சொல்றீங்க பார்த்தீங்களா? பெத்த பொண்ணுக்கு ரெண்டாந்தாரமா கல்யாணம் ஏற்பாடு பண்ணிருக்காகளேன்னு கொஞ்சமும் உறுத்தல் இல்லை. அவரு பெத்த பொண்ணு தானே? பொண்ணுக்காக ஒத்தை வார்த்தை பேச மாட்டேங்கிறார். இந்த மனுஷன் கிட்டேயெல்லாம் பேசவே முடியாதுக்கா!" எனச் சொன்ன அபிராமியின் குரலில், எதுவும் செய்ய முடியாத இயலாமை தெரிந்தது.



"ஏய்.. சாப்பாட்டை எடுத்து வைக்காமல், என்னத்தை முணுமுணுன்னு பேசிக்கிட்டு நிற்க்கிறீக? பொழுதுக்கும் பேச்சுதேன்.. அப்படி என்னத்தைதேன் பேசுவீகளோ ரெண்டுபேரும்?" என்ற வள்ளியம்மையின் குரலில் உணவு மேஜையை நோக்கிப் போனார் அபிராமி.



"ஏம்மா! அபிராமி.. ஆரு எங்கே? சாப்பிட இன்னும் வரக் காணும்?" எனப் பழனிவேல் வினவ,



"இராத்திரி உறக்கமில்லாமல் பயணப்பட்டது என்னமோ போல இருக்குதாம் மாமா! பிறகு சாப்பிடுறேன்னு சொன்னா. நீங்க சாப்பிடுங்க மாமா! அவ பொறுமையாய் சாப்பிடட்டும்!" எனச் சொன்னார் அபிராமி.



"முதலில் இந்த வீட்டுக்குப் பெரிய மனுஷனா நான் நல்லதுதேன் செய்வேன்னு, பெரியவங்க நம்பணும் மருமகளே..! பெரியவங்க நல்லதுன்னு நினைச்சால் தான் சின்னப் புள்ளைங்க நல்லதுன்னு நினைப்பாங்க! ஆருத்ரா என்னோட பேத்தி. அவளுக்கு நான் கெட்டது நினைப்பேன்னு நீ நினைக்கிறியாம்மா?" எனப் பழனிவேல் கேட்க,



"நல்லதாவே இருக்கட்டும் மாமா! அதுக்குன்னு ரெண்டாந்தாரமா புள்ளையைக் கொடுக்கணுமான்னு யோசனையா கிடக்கு. நீங்க நல்லதுதேன் செய்வீகன்னு ஒருபக்கம் இருந்தாலும், பெத்த மனசு பதறுது.!" எனக் குரலுயர்த்தாமல் பதில் சொன்னார் அபிராமி.



"ஏய்! கிறுக்குத்தனமா பேசிட்டு கிடக்காதடி! அவிங்க எம்புட்டு பெரிய ஆளுங்கன்னு உனக்குத் தெரியுமா? ஊரு மொத்தமும் அவிங்களோடதுதேன். அவிங்க தகுதிக்கு, நம்ம வீட்டு வாசலை மிதிக்கிறதே பெரிய விஷயம். அதிலேயும், முதலமைச்சரே முன்னே நின்னு நடத்துற கல்யாணம். ரெண்டாந்தாரம்ன்னா இப்போ என்ன குறைஞ்சு போச்சு? இந்தக் காலத்தில் அவனவன் வீட்டுக்குத் தெரிஞ்சு ஒண்ணு, தெரியாமல் ஒண்ணுன்னு வச்சிக்கிட்டுத் திரியறான். நீ என்னடான்னா புலம்பிட்டு நிற்கிறவ.. அங்கெல்லாம் போய் வாழ உன் பொண்ணுக்கு குடுத்து வச்சிருக்கணும்." எனப் பரமசிவம் சொல்லிக்கொண்டிருக்க,



"எனக்கு அப்படியொரு வாழ்க்கை வேண்டாம்ப்பா! அப்படியொரு வாழ்க்கை வாழவும் எனக்கு விருப்பமில்லை.!" என்றபடியே மாடிப்படிகளில் இறங்கி வந்தாள் ஆருத்ரா.


"ஆரு!" என்ற தந்தையின் அதட்டல் அவள் செவிகளில் விழவே இல்லை.



"எனக்காகப் பேசினதுக்குத் தேங்க்ஸ் மா! ஆனாலும் உன்மேல் கோபம் எனக்கு இன்னும் இருக்கு. இது தான் விஷயம்ன்னு என்கிட்டே முன்னவே சொல்லியிருந்தால், நான் இங்கே வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. என்னைத் தேவையில்லாமல் கூட்டி வந்து.. இதெல்லாம் எதுக்கு மா? நான் நீ பெத்த பொண்ணு தானே?!" எனக் கோபமாய்த் தன் அன்னையிடம் அவள் கேட்க, அபிராமி பதில் பேச முடியாமல் தன் கணவரைப் பார்த்தார்.



"பதில் சொல்லும்மா! இதில் இன்விடேஷன் டிஸைன் பிடிச்சுருக்கான்னு கேள்வி வேற? எனக்கு இந்தக் கல்யாணம் வேணாம் அவ்வளவு தான்!" என உறுதியாய் சொன்னாள் ஆருத்ரா.


"இந்த வீட்டில், உன் விஷயமா இருக்கட்டும், உன் தங்கச்சி விஷயமா இருக்குட்டும், எதிலேயுமே முடிவெடுக்கும் உரிமை எனக்கு இல்லையே ஆரு.! நான் சொல்ற எதுவுமே யார் காதிலும் விழாது ஆரு!" என அபிராமி சொல்ல,



"நீ எனக்காக எதுவும் பேச வேண்டாம்மா.. அட்லீஸ்ட், இதுதான் உண்மைன்னு சொல்லிருக்கலாமே?" என அவள் கேட்ட கேள்விக்கு அபிராமியிடம் பதில் இல்லை.



"என்னத்துக்கு நடுவீட்டில் நின்னுக்கிட்டு, நாட்டாமை பண்ணிக்கிட்டு திரியறவ? நாங்க ஒண்ணும் பாழுங்கிணத்தில் பிடிச்சு தள்ளிப்புட மாட்டோம். என்னமோ கொலைக்குத்தம் செஞ்சுப்புட்ட மாதிரி பேசுறவ.. ஆத்தாளும் மகளும், கூடிப் பேசிப்புட்டு வந்து அரங்கேற்றம் பண்ணுறிகளாக்கும்?!" என வள்ளியம்மை கேட்கவும், கண்டிப்பாய் மகளை முறைத்தார் அபிராமி.



"யாரு என்ன சொன்னாலும், இந்தக் கல்யாணம் நடந்தே தீரும். ஊரு முழுக்கப் பத்திரிக்கை அடிச்சு குடுத்தாச்சு. என்னைப் பொருத்தமட்டும், இது கல்யாணம் இல்லை. இன்வெஸ்ட்மென்ட். உன் மொத்த தலைமுறைக்குமான இன்வெஸ்ட்மென்ட். இதெல்லாம் உனக்குப் புரியாது. ஒழுங்கா நாங்க சொல்றதைக் கேட்டுக் கல்யாணம் பண்ணிட்டு போற வழியைப் பாரு!" எனப் பழனிவேல் அழுத்தமாய்ச் சொல்ல,



"நீங்க என்ன சொன்னாலும் என்னால் ஒத்துக்க முடியாது தாத்தா! இந்தக் கல்யாணம் எனக்கு வேணாம். இதையும் மீறி நீங்க கல்யாணத்தை ஏற்பாடு செஞ்சீங்கன்னா, அத்தனை பேர் கூடியிருக்கச் சபையில், எல்லார் முன்னாடியும் இந்தக் கல்யாணத்தில் விருப்பமில்லை. என்னைக் கட்டாயப்படுத்துறீங்கன்னு சொல்லுவேன்.!" என அவள் சொன்ன அந்தநொடி, விருட்டென எழுந்து ஆருத்ராவின் முன்னால் வந்த பழனிவேல் அவளை ஓங்கி அறைந்திருந்தார்.



"என்ன திண்ணக்கம் இருந்தால், பதிலுக்குப் பதில் பேசிக்கிட்டே இருப்ப ராஸ்கல்? படிச்சு முடிச்சு வேலைக்குப் போய், நாலு காசு பார்க்கவும் கொழுப்பு கூடிப் போச்சோ? வாயைத் திறக்கவே யோசிக்கிறவ எதிர்த்து பேசுற அளவுக்கு வளர்ந்துட்ட..? இந்தத் தைரியமெல்லாம் மெட்ராஸில் ஒரு பையன் கூடச் சுத்துறியே.. அவன் கொடுத்ததா?" எனக் குரலுயத்தி அவளைப் பார்த்துக் கேட்டார்.
பழனிவேல் அறைந்ததில், கன்னம் திகுதிகுவெனக் காந்த, தன் இடக்கரத்தால், கன்னத்தைத் தாங்கியபடி, தன் தாத்தா சொன்ன விஷயத்தில் அதிர்ந்து நின்றாள் ஆருத்ரா.



"என்ன எப்படித் தெரியும்ன்னு பார்க்கிறியாக்கும்? நான் இங்கணக் கிடந்தாலும், உன் சங்கதியெல்லாம் என் காதுக்கு வந்துரும். உன் தாத்தன் இங்கணச் சும்மா உட்கார்ந்திருக்கேன்னு நினைச்சியாக்கும்? மதுரையிலேயே இருந்தாலும், எங்கே என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியும். இந்தக் கல்யாணத்தில் உங்க அம்மாவுக்கும் விருப்பம் இல்லைன்னு கூட எனக்குத் தெரியும். ஆனாலும், இந்தக் கல்யாணத்திற்கு உன்கிட்டே சம்மதம் வாங்கினது உன்னைப் பெத்தவதேன்.. அவளைச் சம்மதம் வாங்க வச்சவன் நான்.. ஏன்னா இந்த வீட்டில் நான் சொல்றது மட்டுந்தேன் நடக்கணும்.!" என அவர் அடிக்குரலில் சீற,


"அவன் என் ஃப்ரெண்ட்! அவனைப் போய் என்னவெல்லாம் பேசுறீங்க?" எனக் கோபமாய்க் கேட்டாள் ஆருத்ரா.



"பொட்டப்புள்ளைக்கு என்னத்துக்கு ஆம்பிளைப்பிள்ளை சவகாசம்ன்னு கேட்கிறேன்? உன்னை நம்பி அனுப்பினால், நீ கண்டவன் கூட ஊர் சுத்திக்கிட்டு திரியுற?" அதற்கும் அவள் மீதே பழனிவேல் குற்றம் சொல்ல, அவரின் வார்த்தைகளில் அருவருத்துப் போனாள் ஆருத்ரா.



"ம்மா! அவரு என்னவெல்லாம் சொல்றாரு பாருங்க? ஒத்தை வார்த்தை கூடக் கேட்க மாட்டியாம்ம்மா? ஏம்ப்பா நீங்களும் கல்லு மாதிரி நிற்கிறீங்க.. நான் உங்க பொண்ணு தானேப்பா?!" எனப் பரமசிவத்தையும், அபிராமியையும் பார்த்துக் கேட்டாள் அவள்.



"ஆரும்மா! நீ இப்படியெல்லாம் பேச மாட்டியேடா.. ஏன்டா தங்கம் இப்படியெல்லாம் பேசுறே? என்ன ஆச்சு உனக்கு?" எனப் பரமசிவம் அவள் பக்கத்தில் வர,


"வேணாம்ப்பா! வேணாம்! யாரும் எனக்காகப் பேச வேணாம்! என் வழியை நான் பார்த்துக்கிறேன். நீங்க யாரும் எனக்கு வேணாம். என்னைப் புரிஞ்சுக்காத யாருமே எனக்கு வேணாம்!" இமை தாண்டத் துடித்த விழிநீரை உள்ளிழுத்து, கண்ணீர் வராமல் கட்டுப்படுத்தி, நிமிர்ந்து நின்று சொன்னவள், விறுவிறுவென அறையை நோக்கி சென்றிருந்தாள்.



"நாளைக்குக் காலையிலேயே எல்லாரும் கிளம்பணும்ன்னு ஞாபகம் இருக்குல்ல? ஆருவை பார்த்துக்கோங்க! கல்யாணத்திற்கு முன்னே ஏதாவது ஏடாகூடமாய் நடந்துச்சு தொலைச்சுடுவேன்.!" எனப் பழனிவேல் குடும்பத்தினரை மிரட்டியதும் கூடக் கதவை அடைக்கும் முன் அவள் செவிகளில் விழத்தான் செய்தது.
ஆருத்ராவின் தரப்பை காது கொடுத்து கேட்காத பழனிவேலின் செயல், அவள் தனக்குள் எடுத்திருந்த முடிவை உறுதியாக்கியது. தன் விருப்பத்தைத் தன் குடும்பத்தினரே கேட்காத போது, அவர்களின் குடும்பக் கௌரவத்திற்கு நான் ஏன் முக்கியத்துவம் தர வேண்டும்? என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தாள் ஆருத்ரா.


கண்கள் கலங்கியது. ஆனாலும் அழக்கூடாதென வைராக்கியமாய் இருந்தாள் பெண். வெறும் இரண்டு நாளில், இரண்டே நாளில், இத்தனை மாற்றங்கள் நிகழும் என அவள் கனவிலும் நினைக்கவில்லை. விவேக்குடனான பிரிவை விட, தன் குடும்பத்தினரே தன்னைப் புரிந்துக்கொள்ளாதது நிரம்பவே வலித்தது அவளுக்கு. உடல் வலியைக் கூட மருந்தால் ஆற்றிவிடலாம். ஆனால் மனவலிக்கு மருந்து இல்லை. நமக்குப் பிடித்தவர்களே, நாம் நேசிப்பவர்களே நம்மைப் புரிந்துக்கொள்ளாத போது வேறு யாரால் நம்மைப் புரிந்துக்கொள்ள முடியும்? அப்படியொரு கையறு நிலையில் இருந்தாள் ஆருத்ரா.


******


"ஆரு.! ஆரு..! என்ன ஆச்சு டி?"


"எதாவது பேசு? கால் பண்ணிட்டு அமைதியாய் இருந்தால் நான் என்ன நினைக்கட்டும்?"


"நீ எங்கே இருக்கே? ஒரே சத்தமா இருக்கு?!" என அந்தப்பக்கம் கத்திக்கொண்டிருந்தான் ராகவ்.


"ஸாரி.. ஸாரி.. ராகவ்! ஒரு முக்கியமான விஷயமா போய்ட்டு இருக்கேன். அதான் சத்தமா இருக்கு!"


"நீ எங்கே போற? வீட்டில் பேசினியா?"


"பேசிட்டேன் டா. நோ யூஸ்.. கல்யாணம் கண்டிப்பா நடக்கணும்ன்னு தாத்தா சொல்றார். என்னால் இந்தக் கல்யாணத்தை அக்ஸெப்ட் பண்ணிக்க முடியாது ராகவ்.!"


"சரி! அதெல்லாம் இருக்கட்டும்! இப்போ நீ என்ன செய்யப் போற?"


"சென்னைக்கு டிக்கெட் புக் பண்ணுறதுக்காக வந்திருக்கேன்.!"



"லூசா நீ? பைத்தியம்! என்கிட்டே சொன்னால் நான் டிக்கெட் போட மாட்டேனா? கால் பண்ணி சொல்றதை விட்டுட்டு, நீ ஏன் அங்கேயும், இங்கேயும் அலைஞ்சுட்டு இருக்க?!" எனக் கோபமாய்க் கேட்டான் ராகவ்.



"எனக்குத் தெரியும் டா. நீ சொன்னால் நீ செய்வன்னு எனக்குத் தெரியும். ஆனால் நான் அதுக்கு மட்டும் வரலை டா. நான் அவனை மீட் பண்ணப் போறேன் ராகவ்.!" எனச் சொன்னாள் ஆருத்ரா.


"யாரை டி?"


"அவன் தான்.. இமயவரம்பன் அவனைத்தான் பார்க்கப் போறேன்.!"


"அவன் எங்கே இருக்கான்னு உனக்குத் தெரியுமா? எங்கேயாவது போய் மாட்டிக்காதே ஆரு! அவனைப் பார்க்கணும்ன்னு இப்போ என்ன அவசியம்? இந்த மேரேஜ் வேணாம்ன்னு டிஸைட் பண்ணின பிறகு, நீ ஏன் இன்னும் அங்கே இருக்கணும்? பேசாமல் இங்கே கிளம்பி வந்துடு!" எனச் சொல்லிப் பார்த்தான் ராகவ்.


"நோ! நான் அவனைப் பார்த்து ரெண்டு கேள்வி கேட்காமல் வர மாட்டேன்.! போய்ட்டு வந்து கூப்பிடுறேன் டா.! ஒருவேளை என்கிட்டே இருந்து எந்தத் தகவலும் வரலைன்னா, நீ கிளம்பி இங்கே வந்துடு ராகவ்.!" எனச் சொல்லிவிட்டு அலைபேசி இணைப்பை அவள் துண்டித்துவிட, அதீத குழப்பத்துடன் அமர்ந்திருந்தான் ராகவ்.


*****


இமயவரம்பனை சந்திக்க வேண்டுமென முடிவு செய்த பின் அவள் ரொம்பவெல்லாம் மெனக்கெடவில்லை. சொல்லப் போனால், மெனக்கெட்டு அவனைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் அவளுக்கு ஏற்படவில்லை. அவள் அறைக்குச் சென்று கதவடைத்ததும், அவள் அன்னை அபிராமியே அவளிடம் வந்தார்.



"இந்தாரு டி! நான் என்னால் முடிஞ்ச மட்டும் போராடிப் பார்த்துட்டேன். ஆனாலும் என்னால் முடியலை. உன் தாத்தாவை மீறி, நானோ, உங்க அப்பனோ ஒண்ணும் செய்ய முடியாது. இன்னொருபக்கம் யோசிச்சு பார்த்தால், இம்புட்டு வருஷமும் தாத்தா நம்ம குடும்பத்துக்கு நல்லதுதேன் செஞ்சுருக்காக. நீ கேட்ட எதையாவது இல்லைன்னு சொல்லிருக்காகளா? உன் பெரியப்பா மயனைக் கூட வைவாக. உன்னையும் உன் தங்கச்சியையும் ஒத்தை வார்த்தை பேசினது கிடையாது. அதனால், எம் மனசு ரெண்டுங்கட்டானா நட்ட நடுவில் நிக்கிது. வாழப் போறவ நீதேன். உன் விருப்பத்தையும் பெத்தவளா நான் யோசிக்கணும் தானே? உனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பமில்லை. நீ தாராளமா இங்கிருந்து போ! ஆனால் போகும் முன்னே, ஒரேயொரு முறை அந்தப் பையனைப் பார்த்து பேசிப்புடு. அப்போவும் உனக்குச் சரி வராதுன்னு தோணிச்சுன்னா நீ தாராளமா கிளம்பு.!"


எனச் சொல்லிவிட்டு, அவனின் அலைபேசி எண்ணையும், அவன் எங்கே இருப்பான் என்பதையும் தெரிவித்துவிட்டுப் போனார்.


எப்படியும் அவள் இங்கே இருக்கப் போவதில்லை. இந்தத் திருமணத்தை ஏற்றுக்கொள்ளப் போவதும் இல்லை. ஆனால் போகும் முன், தன் அன்னையின் மனத் திருப்திக்காக அவனைச் சந்தித்துவிட்டு பிறகு போகலாம். என முடிவு செய்த பின் தான், வாடகை வாகனத்தை ஏற்பாடு செய்துக்கொண்டு கிளம்பியிருந்தாள்.


அவள் பயணித்துக் கொண்டிருந்த அந்த மகிழுந்து, மதுரை புறநகரைத் தாண்டியிருந்த ஆளரவமில்லாத ஒரு பெரிய கட்டடத்தின் முன் நின்றது. இரண்டு மாடிக் கட்டிடமாக இருந்த அந்தக் கட்டிடத்தில், இன்னும் கட்டுமான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவள் அந்தக் கட்டிடத்தின் கேட் பொருத்தப்படாத நுழைவாயிலில் இறங்கி மெதுவாக உள்ளே நடந்தாள். வாகனத் தரிப்பிடமாக உபயோகிப்பதற்காகத் தரைத்தளம் காலியாக விடப்பட்டிருந்து. மின்தூக்கியினுள்ளும் பணிகள் நடந்து கொண்டிருக்க, நாசியைத் துளைத்த சிமெண்டின் மணத்தினூடே, படிகளைத் தேடினாள். அவள் படிகளைத் தேடியபடி நின்றிருக்க,



"மேடம்! வாங்க மேடம்! அண்ணே மேலே இருக்காரு. நீங்க வந்து வெய்ட் பண்ணுங்க!" என்றபடி அழைக்க, திடீரென அழைத்ததில் பயந்து போனவள்,



"என்னை உங்களுக்குத் தெரியுமா?" எனக் கேட்டாள்.


"என்ன மேடம், உங்களைத் தெரியாதா? உங்களை ஊருக்கே தெரியும் மேடம். நீங்க வாங்க! வந்து உள்ளே உட்காருங்க!" என வாகனத் தரிப்பிடத்தை ஒட்டியபடியே வெளியே தெரியாதவாறு அமைக்கப்பட்டிருந்த அந்த அறைக்கு அழைத்துப் போனான். கதவைத் திறந்து உள்ளே அழைத்துப் போய், அங்கே போடப்பட்டிருந்த சொகுசு மெத்திருக்கையில் அமர வவைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டான்.



ஆருத்ராவோ அந்த அறையைப் பார்வையால் அளந்தபடியே அமர்ந்திருந்தாள். இன்னும் கட்டுமானப் பணிகள் பாதிக்குமேலே முடியாத நிலையில், இந்த ஒரு அறை மட்டும், குளிர்பதன வசதி செய்யப்பட்டு, சகல வசதிகளோடும் இருப்பதைக் கண்டு அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை.



கிட்டத்தட்ட அரைமணி நேரம் கடந்திருந்தது. திரும்பத் திரும்ப அந்த அறையையும், சுவரையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருப்பது அவளுக்குச் சலிப்பைத் தந்தது.


"எவ்வளவு நேரம் வெய்ட் பண்ணுறது? இவன் வருவானா? வர மாட்டானா?!" என எரிச்சலாக இருந்தது. அரைமணி நேரத்தில், ஒருமுறை பழச்சாறும், ஒருமுறை காபியும் வந்துவிட்டது. ஆனால் அவன் மட்டும் வரவில்லை.



"மேடம்! ஜூஸ் எடுத்துக்கோங்க மேடம்!" என அதே நபர் மீண்டும் நச்சரிக்க,


"பழக்கமில்லாத இடத்தில் நான் எதுவும் சாப்பிடறது இல்லை.!" என வேண்டுமென்றே சொன்னாள் அவள்.


"என்ன மேடம்! நீங்க இப்படிச் சொல்றீங்க? அண்ணனுக்குத் தெரிஞ்சால் ரொம்ப வருத்தப்படுவாரு!' என அந்த நபர் சொல்ல,


"முதலில் உங்க அண்ணே வரட்டும். அப்பறம் பொறுமையாய் வருத்தப்படட்டும்!" என எரிச்சலும் கோபமுமாய் அவள் சொன்ன அதேநேரம் கதவைத் திறந்துக்கொண்டு வந்து நின்றான் அவன்.


"ஜோசஃப் நான் பார்த்துக்கிறேன் நீ போ!" என அதிகாரமாய் உத்தரவிட்டவன், நிதான நடையுடன் அவள் முன் வந்து நின்றான். நிஜமாகவே இவனுக்கு இரண்டாம் திருமணமா.? என ஐயம் கொள்ளும் வண்ணம் மிகவும் இளமையாக இருந்தான். துளி சுருக்கமால்லாத வெள்ளை முழுக்கை சட்டையும், வேட்டியும் அணிந்திருந்தான். திருத்தமான தாடி மீசையோட, திண்ணிய உடல்வாகும் அவனை இன்னும் கொஞ்சம் அழகனாய் காட்ட, கண்ணெடுக்காமல் அவனையே பார்த்திருந்தாள் ஆருத்ரா.


சுற்றம் மறந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவளின், முகத்தின் முன் சொடக்கிட்டு அவளை நடப்பிற்குக் கொண்டுவந்தான் இமயவரம்பன்.


"நான்.. அது வந்து..!"
"நீ ஆருத்ரா! ஆருத்ரா பரமசிவம். இன்னும் கொஞ்ச நாளில், ஆருத்ரா இமயவரம்பனாய் மாறப் போற.. ரைட்?!" எனக் கேள்வி கேட்டான் அவன்.


"எனக்கு இந்தக் கல்யாணம்..!" என அவள் சொல்ல வர,


"உனக்கு இந்தக் கல்யாணம் வேணாம்! இன்னைக்கு ராத்திரியே நீ இந்த ஊரை விட்டுப் போகப் போற! அதுக்கு முன்னாடி, நானே இந்தக் கல்யாணத்தை நிறுத்தனும் அதானே?" என அவன் கேட்க மேலும் கீழுமாய்த் தலையாட்டினாள் ஆருத்ரா.


"அது முடியாதே ஆருத்ரா! ஏன்னா உன்னைத் தேர்ந்தெடுத்தது நான். நானே உன்னை எப்படி வேணாம்ன்னு சொல்வேன்? இந்தக் கல்யாணம் கண்டிப்பா நடக்கும். இப்போ நீ வீட்டுக்குக் கிளம்பு!" என அவன் சொல்ல, அவன் சாதாரணத் தோரணையில் பேசினாலும், வெளியே தெரியாத மிரட்டல் அவன் குரலில் ஒளிந்திருந்தது.


"உனக்கு ஊரு உலகத்தில் வேற பொண்ணே கிடைக்கலையா? நான் தான் கிடைச்சேனா? பண்ணப்போறது ரெண்டாம் கல்யாணம் அதுக்கு ஊரைக்கூட்டி இன்விடேஷன் வேற? ஒழுங்கா இந்தக் கல்யாணத்தை நிறுத்திடு. எனக்கு உன்னைச் சுத்தமா பிடிக்கவே இல்லை.!"


"உன்னை மாதிரி எந்தப் பொண்ணும் கிடைக்கலையே..! உனக்குப் பிடிச்சிருக்கா.. பிடிக்கலையா? அது எனக்கு முக்கியமே இல்லை. எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. அவ்வளவு தான்.!" என அவன் சொல்ல, திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள் ஆருத்ரா.


"உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?" அதீத கோபத்தில் அவன் முன் எழுந்து நின்று கேள்வி கேட்டாள் அவள்.


"என்கிட்டே மனசாட்சியை எதிர்பார்த்தது உன் தப்பு மா!"


"ஆம்பிள்ளைங்கிற திமிரில் தானே இதெல்லாம் செய்ற? உன் மனைவிக்குத் துரோகம் செய்றோம்ன்னு உனக்கு உறுத்தவே இல்லையா?!"


"அது எனக்கும், என் மனைவிக்கும் நடுவில் உள்ளது. அதைப் பற்றிய கவலை உனக்குத் தேவையில்லை. எதைப் பத்தியும் யோசிக்காமல், கல்யாணத்திற்குத் தயாராகும் வேலையைப் பாரு!" என அவன் சொல்ல, இவளுக்குள் எரிச்சல் மூண்டது.


"நாளைக்குக் காலையில் நான் மதுரையிலேயே இருக்க மாட்டேன். இந்தக் கல்யாணம் எப்படி நடக்குதுன்னு நானும் பார்க்கிறேன். நீயா நிறுத்திட்டால் உனக்கு நல்லது. இல்லை உன் கௌரவம் காற்றில் பறக்கணும்ன்னு நீ முடிவு பண்ணிட்டா நான் ஒண்ணும் பண்ண முடியாது.!" என மிரட்டலாய் சொன்னாள் ஆருத்ரா.


"கட்டப் பஞ்சாயத்து பண்ணுறவனுக்குக் கௌரவத்தைப் பத்தி கவலை இல்லை ஆரா.!"எனக் காதோரம் உரசிய அவன் குரலில் அவள் திடுக்கிட்டு நகர, அவள் பக்கத்தில் நெருங்கி வந்தவன்,


"இப்போவே இதுக்கெல்லாம் பழகிக்கோ! பக்கத்தில் வர்ரதுக்கெல்லாம் பயந்தால், இன்னும் நிறையப் பார்க்க வேண்டியது இருக்கே? என்னைப் பற்றி உனக்குத் தெரியாது ஆரா, நான் ஒரு விஷயத்தை வேணும்ன்னு முடிவு பண்ணிட்டேன்னா, அதை யாராலும் என்கிட்டே இருந்து பிரிக்க முடியாது. பிரிக்க விடவும் மாட்டேன்.!" மீசைக்கிடையில் விரிந்த இதழ்களுடன் அவன் சொல்ல, அந்தச் சிரிப்பே அவளுக்குள் பயத்தைப் படரவிட்டது.


"இல்லை.. நீ என்ன சொன்னாலும் இந்தக் கல்யாணம் நடக்காது.!"


"நடக்கும்! நீ இந்த உலகத்தோட மறுபாதிக்கே போய் ஒளிஞ்சாலும் கூட, இந்தக் கல்யாணம் நடக்கும். நடத்திக் காட்டுவேன். இதை யாராலும் தடுக்க முடியாது. ஏன் உன்னலேயும் தடுக்க முடியாது!" என அவன் ஒருமாதிரியான குரலில் சொல்ல, அவனை முறைத்தபடியே நகர்ந்தவள், மெத்திருக்கையில் கிடந்த கைப்யை எடுத்து மாட்டிக்கொண்டு, கதவை நோக்கி நடந்தாள்.


"ஆல் தி பெஸ்ட் ஆரா..!" என நக்கலாய் அவன் சொல்ல, கோபமும் எரிச்சலுமாய் அவனை முறைத்தபடியே வெளியேறினாள் அவள்.

'இவன் ஏன் என்னைத் தேர்ந்தெடுத்தான்? இவனுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்? தாத்தா மட்டும் இல்லை, இவனும் இந்தக் கல்யாணத்தை நடத்துவதில் உறுதியாய் இருக்கான்? இந்தக் கல்யாணத்திற்குப் பின்னாடி என்ன இருக்கு? ஒண்ணும் புரியலையே.?!" என மனதிற்குள் புலம்பியபடியே வீடு நோக்கி பயணமானாள் ஆருத்ரா. மனதிற்குள் இமயனும் அவன் பேசிய வார்த்தைகளுமே திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டிருந்தது.

அன்பாகும்..?
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் டியர்ஸ்..

#அன்பின் அதீதங்களில்..! அடுத்த அத்தியாயம் பதிஞ்சாச்சு.

உங்களின் தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள்.

கருத்துத் திரி
Post in thread 'சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.' சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதீதம்-4

அதீத வழுவழுப்புடன் இழைத்துச் செய்யப்பட்டிருந்த அந்த உயர் ரக, உயர் தர உணவு மேஜையில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார் மயில்ராவணன்.

நடுத்தர உயரம், சிவந்த நிறம், முன் வழுக்கை விழுந்த தலை, கொஞ்சம் கனமான உடல்வாகோடு இருந்தார் மயில்ராவணன். தன் வயதைக் குறைத்துக் காட்ட, மீசையை மழித்துவிட்டு, தலைமுடிக்குச் செயற்கை சாயம் பூசியிருந்தார். ஃப்ரேம்லெஸ் கண்ணாடியுடன் தோரணையும் மிடுக்குமாகத்தான் இருந்தார் அவர்.


பிரண்டைத் துவையலோடு திணையரிசி தோசையும், கொஞ்சம் பழக்கலவையும் மட்டும் தான் அவரின் காலை உணவு. சர்க்கரை நோயும், உயர் இரத்த அழுத்தமும் பாடாய்ப் படுத்துவதால் மட்டுமே இந்த ஏற்பாடு. மற்றபடி மயில்ராவணன் ஒரு உணவுப் பிரியர். ஆனாலும், அவர் சேர்த்து வைத்திருக்கும் பணத்திற்கு நிகராக உடலில் சர்க்கரையையும் சேர்த்து வைத்திருப்பதால், மாநில முதலமைச்சராய் இருந்தாலும் கூட, அவருக்கும் உணவுக்கட்டுப்பாடுகள் இருந்தது.


"என்னதான் மாப்பிள்ளையாய் இருந்தாலும், அந்தப் பையன் சொல்றதுக்கெல்லாம் நீங்க ஆடறது எனக்குச் சுத்தமா பிடிக்கலை.!" என அவர் உணவருந்தி முடிக்கும் வரை காத்திருந்து பின் பேச்சைத் துவக்கினார் மயில்ராவணனின் மனைவி ராதிகா.


"ம்ப்ச்! இதெல்லாம் அரசியல் விஷயம். உனக்கு இதெல்லாம் புரியாது!" என முறைப்புடன் பதில் சொன்னார் அவர்.


"அப்படி என்ன அவசியம்ன்னு கேட்கிறேன். எல்லாத்தையும் அரசியலில் சேர்க்காதீங்க! இது குடும்பம். நம்ம பொண்ணு கல்யாணத்தையும் கூட அரசியல் ஆதாயத்திற்காகத்தான் செஞ்சீங்க! இப்போ என்ன ஆச்சு? நம்ம பொண்ணு நல்லா வாழ்ந்துட்டாளா? இப்போ என்னடான்னா அந்தப் பையனுக்கு, நீங்களே முன்னே நின்னு கல்யாணம் நடத்தி வைக்கிறீங்க.. இதெல்லாம் எனக்குக் கொஞ்சமும் பிடிக்கலை.!" கணவரின் கோபத்தையும் மீறி பேசினார் ராதிகா.


"முடிஞ்சு போனதை விடு! நான் என்ன செஞ்சாலும் ஒரு காரணம் இருக்கும். அதை மட்டும் மனசில் வச்சிக்கோ!"


"நீங்க ஆயிரம் தான் சொல்லுங்க! ஆனால் என்னால் இதை ஏத்துக்கவே முடியலை. நம்ம பொண்ணு கல்யாணத்திற்குச் செஞ்சதைவிட, இவனுக்கு நீங்க நிறையச் செய்றதைப் பார்த்து என்னால் ஜீரணிக்கவே முடியலை!" கணவர் என்ன சொன்னாலும், சமாதானம் ஆகாமல், ஆற்றாமையோடு பேசினார் ராதிகா.



"இங்கே பாரு ராதிகா! இமயவரம்பன் மத்தவங்க மாதிரி இல்லை. அவனுக்குச் செய்யற ஒவ்வொரு பைசாவும், ஆயிரம் ஆயிரமாய் நம்மக்கிட்டேயே திரும்பி வரும். என்னதான் அவன் கட்சிக்கு சம்மந்தமில்லாதவனாய் இருந்தாலும், இந்தக் கட்சிக்கு அவன் ரொம்ப அவசியம். இதுவரை எத்தனை லேண்ட் விஷயத்தில் நான் மாட்டியிருக்க வேண்டியது தெரியுமா? அதைவிடு, உன் பேரில் ஆரம்பிச்சோமே, ரதி மினரல்ஸ்... அதற்காக ஏற்கனவே மினரல் கம்பெனி வச்சிருக்கனுங்க கிட்டே இருந்து, பிடுங்கிக் கொடுத்தது அவன் தான். இப்போ தமிழ்நாட்டில் எல்லா இடத்திலேயும் ரதி மினரல்ஸ் இருக்குன்னா அதுக்குக் காரணம் இமயன் தான். வெளியிலிருந்து பார்க்கிறதுக்கு அவன் கட்டப்பஞ்சாயத்து பண்ணுற மாதிரி தான் இருக்கும். ஆனால் அவன் பண்ணுற முக்கால்வாசி வேலை நம்ம கட்சிக்காக மட்டும்தான். எல்லாத்துக்கும் மேலே, சொந்த ஊருக்காரன், தள்ளி நில்லுன்னு சொல்ல முடியாதும்மா.. புரிஞ்சுக்கோ!"


"உங்க சொந்த ஊர்ப் பாசத்தால் தான் என் பொண்ணு வாழ்க்கை நாசமா போச்சு. எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான்!" எனச் சொல்லிவிட்டு, அவர் கோபமாய்ச் சென்றுவிட, நீண்ட பெருமூச்சுடன் எழுந்து நின்று, தன் பணிகளைப் பார்க்கத் துவங்கினார் மயில்ராவணன்.


அவர் கிளம்பி தயாராகிக் கீழே இறங்கி வர, மயில்ராவணனுக்காகத் தயாராய்க் காத்திருந்தார் அவரின் அந்தரங்க செயலாளர் மணிகண்டன்.



"மணி எல்லாம் ரெடியா.? இன்னைக்கு என்ன ப்ரோக்ராம்ன்னு பார்த்தாச்சு தானே? ஈவ்னிங் ஆறுமணிக்கு மேலே எந்த அப்பாய்ன்மெண்ட்ஸ்ஸும் கொடுக்காதே!" எனச் சொல்விட்டு தன் செருப்புக்கால் பதிய, பளபளப்பான பளிங்குத்தரையில் நடந்து வந்து, தன் வாகனத்தில் ஏறினார். அவருக்கான பாதுகாவலர்கள் புடை சூழ, பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுக்கத் தன் பயணத்தைத் துவக்கினார்.



கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாய் தமிழ்நாட்டின் முதல்வராய் இருக்கும் மயில்ராவணனுக்கு, இந்தப் பதவி மிக மிக அத்தியாவசியம். இந்த முறை மயில்ராவணனின் கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை, எனச் சொல்லப்பட்ட அத்தனை கருத்துக்கணிப்புகளையும் பொய்யாக்கி, தொடர்ந்து மூன்றாம் முறையாய் ஆட்சி அமைத்திருக்கிறார். சிறு வயதிலிருந்தே கட்சி பணியிலிருந்த இவருக்கு, அரசியல் அனுபவம் கொஞ்சம் அதிகம் தான்.
தன் சொகுசு வாகனத்தில் பயணித்தபடியே,


"இமயனோட கல்யாண வேலையெல்லாம் சரியா நடக்குதா? எந்த அப்டேட்ஸும் எனக்கு வர்ரதில்லையே? என்ன விஷயம்?" கூரான பார்வையோடு மணிகண்டனிடம் கேட்டார் அவர்.


"அதெல்லாம் இமயன் சாரே பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டார் சார்!"


"அவன் பார்த்துக்கிறதெல்லாம் இருக்கட்டும். அப்டேட்ஸ் ஏன் எனக்கு வரலை?!"


"சார்.. இமயன் சார் தான், உங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். நானே எல்லாம் டீல் பண்ணிக்கிறேன்னு சொன்னார் சார்..!"


"நீ எனக்கு அஸிஸ்டென்டா.? இல்லை அவனுக்கா? உன் மனசில் என்ன நினைச்சுட்டு இருக்கே? இனிமே இப்படி நடந்துச்சு.. எனக்கு அஸிஸ்டென்டா நீ இருக்க மாட்டே!" எனக் கோபமாய்க் கத்தினார் மயில்ராவணன்.


"சார்.. மன்னிச்சுடுங்க சார்! இனிமே இப்படி நடக்காது!"


"இமயன் சம்மந்தமான சின்னச் சின்ன அப்டேட்ஸ் கூட எனக்கு வந்தாகனும்!" என உறுதியாய் சொன்னார் அவர். அவர் முகம் கோபத்தில் தகதகத்தது. தன் அலுவலகத்திற்கு வந்து சேரவும், மணிகண்டனை வெளியே அனுப்பிவிட்டு, இமயவரம்பனுக்குத்தான் அழைத்தார்.



"உன் மனசில் என்ன நினைச்சுட்டு இருக்கே?!" எனக் கோபமாய் அவர் அலைபேசியில் கத்த,


"என்னத்துக்கு மாமா கோபப்படுறீங்க? ஏற்கனவே ப்ரஷர் இருக்குதுங்க! கொஞ்சம் பொறுமையாய் பேசுங்க! ஒரேடியாய் போய்ச் சேர்ந்துடப் போறீங்க!" என நக்கலாய் அதே நேரம், நிதானமாய்ப் பேசினான் இமயவரம்பன்.


"ஏய்.. மாமான்னு சொன்னே உன்னைத் தொலைச்சுடுவேன் பர்த்துக்கோ!"


"பொண்டாட்டியோட அப்பாவை மாமான்னு தானே மாமா கூப்பிடனும்?"


"உன்னோட நக்கல் பேச்சையெல்லாம் என்கிட்டே வச்சுக்காதே! நான் நினைச்சால், சொடக்குப் போடுற நேரத்தில் உன்னை இல்லாமல் ஆக்கிட முடியும். என்னைப் பற்றித் தெரியாமல் என்கிட்டே விளையாடிக்கிட்டு இருக்க..!" என அவர் சொல்ல,



"உங்களைப் பற்றி முழுசா தெரிஞ்சு தான் மாமா விளையாடுறேன். நீங்க ஆடும் வரை ஆடிட்டீங்க! நான் பதில் ஆட்டம் ஆட வேண்டாம்?! திஸ் இஸ் மை டேர்ன் மாமா!"


"இமயன்..!"


"நான் இமயன் தான்.. இமயவரம்பன்.!" அதற்கும் பதில் சொன்னான் இமயவரம்பன்.


"நீ இப்போ இமயவரம்பனாக இருக்கலாம். வெறும் கூழாங்கல்லாகக் கிடந்த உன்னை இமயமாக உயர்த்தினது நான் தான். பழசெல்லாம் மறந்துட்டியா இமயன்? நன்றி மறப்பது நன்றன்று ஞாபகம் வச்சிக்கோ இமயன்.!"


"நன்றி எனக்கு மட்டும் தான் இருக்கணுமா மாமா? இத்தனை வருஷமா நன்றியோடத்தான் இருந்தேன். நான் நன்றியோட இருந்ததுக்குத்தான் நீங்க வகையா செஞ்சுவிட்டீங்களே? அப்பறம் நன்றியாவது மண்ணாங்கட்டியாவது.. நீங்க உங்க தேவைக்கு என்னை யூஸ் பண்ணிக்கிட்டீங்க! இப்போ நானும் அதையே தானே செய்றேன். நாம என்ன செய்றோமோ, அது தானே நமக்குத் திரும்பக் கிடைக்கும். நீங்க செஞ்சது உங்களுக்கே திரும்பக் கிடைக்குது.. என்ஜாய் பண்ணுங்க மாமா!"


"வார்த்தைக்கு வார்த்தை மாமான்னு கூப்பிடாதே இமையன். இப்போ நான் என்ன செய்யணும்? எத்தனை நாளைக்கு என்னை நீ டார்ச்சர் பண்ணப் போற? நான் ஒண்ணும் உன் வீட்டு வேலைக்காரன் இல்லை. நான் இந்த மாநிலத்தோட முதலமைச்சர், அதை முதலில் ஞாபகம் வச்சிக்கோ.!"


"மாநிலத்தோட முதலமைச்சர்..? அந்தத் தகுதி இருக்கா உங்களுக்கு? பத்து வருஷம் தாண்டியும் நீங்க ஆட்சியில் இருக்கிறதால், பழசை எல்லாம் மறந்துட்டீங்க போல.. உங்களுக்கு விழுந்த ஓட்டு எல்லாம் நேர்மையாய் விழுந்த ஓட்டா? மக்களை ஏமாத்தி வாங்கினது. உங்க முடி முதல், அடி வரை எனக்கு எல்லாம் தெரியும் மாமா. எனக்கு நீங்க மாமா மட்டும் தான். அப்படித்தானே மாமா?" என அவன் வேண்டுமென்றே வெறுப்பேற்ற,


"இமயன் எல்லாத்துக்குமே ஒரு எல்லை இருக்கு. நீ எல்லை தாண்டி போற.. அதனால் ஏற்படப் போற பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை சொல்லிட்டேன்..!"
என உறுமினார் மயில்ராவணன்.



"எந்த விளைவு வந்தாலும் அதைப் பத்தி நான் கவலைப்படப் போறதில்லை. இனிமே உங்களுக்கு ஆப்ஷனே இல்லை மாமா! நான் சொவ்றதைத் தான் நீங்க செய்யணும்.!"


"நீ கேட்கிறதெல்லாம் செஞ்சுட்டு தானே இருக்கேன்? இன்னும் உனக்கு என்ன செய்யணும்? நீ நினைச்சே பார்க்க முடியாத அளவிற்கான ஒரு கல்யாணத்தை ஏற்பாடு பண்ணியிருக்கேன். என் பொண்ணு கல்யாணத்திற்குக் கூட, கூப்பிடாத அத்தனை பிரபலங்களையும், நானே பர்ஸ்னலா அழைச்சுட்டேன். இன்னும் என்ன செய்யணும்?!"


"இன்னும் ஒண்ணே ஒண்ணு நீங்க எனக்காகச் செய்யணும்! உங்க தமிழ்நாடு அரசோட அமைச்சரவையில் எனக்கு ஒரு பதவி வேணும்.!" என அவன் கேட்க அதிர்ந்து போனார் மயில்ராவணன்.



"இ.. இமயன்.. இது ஒண்ணும் விளையாட்டு இல்லை. அரசியல் ஒண்ணும் நீ பண்ற கட்டப்பஞ்சாயத்து மாதிரி ஈஸி இல்லை இமயன். அதோடு, இப்போதான் தேர்தல் நடந்து முடிஞ்சிருக்கு. எல்லாத் துறை அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொஞ்சநாள் தான் ஆகுது. இதில் உன்னை எப்படி..? அரசியலுக்கு உள்ளே வரணும்னா முதலில் தேர்தலில் நின்னு ஜெய்க்கணும் இமயன்.. உனக்குப் புரியும்ன்னு நினைக்கிறேன்.!" என அவர் சொல்ல,


"கட்டப்பஞ்சாயத்தே ஈஸியா பண்ணிட்டேன். அதைவிட, அரசியல் பண்ணுறது ஒண்ணும் கஷ்டமில்லை மாமா! எத்தனையோ முறை நீயும் கட்சிக்கு உள்ளே வந்துருன்னு சொல்லி இருக்கீங்க! அப்போவெல்லாம் பதவி வேணும்ன்னு எனக்குத் தோணலை. இப்போ வேணும்ன்னு தோணுது. என்னோட பத்து வருஷ உழைப்பிற்குப் பலன் வேணுமே..!" எனக் கேட்டான் இமயவரம்பன்.


அவன் திடீரென இப்படிக் கேட்பான் என அவர் நிச்சயமாய் எதிர்பார்க்கவில்லை. கட்சிக்கு வெளியில் இருக்கும் போதே, இவனைச் சமாளிக்க முடியவில்லை. கட்சிக்குள் வந்துவிட்டால்..? யோசனை அவருக்குள் ஓடியது.


"யோசிச்சுட்டு சொல்றேன்." எனப் பொதுவாய் சொல்லிவிட்டு, அழைப்பை துண்டித்திருந்தார் மயில்ராவணன்.


'இனி இவனை விடக் கூடாது! இவனை இப்படியே விட்டால், கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொரிந்த மாதிரி ஆகிடும். இவனை இல்லாமல் பண்ணினால் மட்டும் தான் நான் அரசியல் பண்ண முடியும்.' என யோசித்தவர், தனது இரகசிய அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தார்.


"டேய் மாரி! நம்ம கிருபா எங்கே இருக்கான்?"


"தொழில் விஷயமா போயிருக்கான் சார்! எதாவது முக்கியமான விஷயமா சார்? என்கிட்டேயே சொல்லு, நான் கிருபாகிட்டே சொல்றேன்!" என அந்தப்பக்கமிருந்து பதில் வர,


"தடையமே இல்லாமல், ஒரு சம்பவம் பண்ணணும்! அவன் வந்ததும், என்னை வந்து பார்க்கச் சொல்லு!" எனச் சொன்னவரின் உதடுகளில், குரூர புன்னகை நெளிந்தது.


**-*****


அந்த இரவுநேரப் பொழுதில், தன் படுக்கையில் படுத்தபடி, நடந்தவற்றையெல்லாம் அசைபோட்டுக் கொண்டிருந்தாள் ஆருத்ரா. இப்பொழுது என்ன செய்வதென்று அவளுக்குச் சுத்தமாய்த் தெரியவில்லை. நாளை காலையிலேயே முகூர்த்தப்புடவை எடுப்பதற்குச் செல்ல வேண்டுமென அவள் வீட்டில் பேசியது அவள் செவிகளில் விழத்தான் செய்தது. திருமணம் இமயவரம்பனின் கிராமத்தில் நடைபெற இருப்பதால், சில வாரங்கள் முன்னதாகவே அங்கே செல்ல வேண்டும். ஆனால், அதற்கு முன் அவள் இங்கிருந்து சென்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். இமயனை சந்தித்த பிறகு, அவள் எடுத்த முடிவில் இன்னும் கொஞ்சம் உறுதி கூடியிருந்தது. அதனால், நள்ளிரவு பேருந்திற்கு, பயணச் சீட்டை வாங்கிக்கொண்டு, அப்படியே ராகவிற்கும், தகவல் தெரிவித்துவிட்டுத்தான் வந்திருந்தாள்.


படுக்கையிலிருந்து தலையை நிமிர்த்தி, கடிகாரத்தைப் பார்த்தாள். நேரம் பத்தை தொட்டு நின்றது. இப்போது அவள் செய்ய வேண்டியதெல்லாம், அனைவரும் உறங்கும் வரை காத்திருப்பது மட்டும் தான். அவள் அறையின் படுக்கை மீது அமர்ந்து படித்துக் கொண்டிருந்த அவள் தங்கை மஞ்சரியின் மீது அவள் பார்வை சென்றது.


"இவள் எப்போ படிச்சுட்டு எப்போ தூங்கறது? நாம எப்போ போறது?" என முணுமுணுத்தபடியே, கட்டிலின் கீழே பயணப் பொதிகள் தயாராய் இருக்கிறதா? என்பதையும் சரிபார்த்துக் கொண்டாள்.


"மஞ்சு! எவ்வளவு நேரம் உட்கார்ந்தே இருப்ப? லைட் ஆஃ பண்ணுடி தலையை வலிக்குது.!"


"அக்கா! நாளைக்கு இன்டர்னல்ஸ் இருக்குக்கா! ப்ளீஸ் இன்னைக்கு ஒருநாள் மட்டும்!"


"பேசாமல் காலையில் எழுந்து படி டி!"


"நான் படிச்சுட்டே துங்கறேன்! காலையில் எழுறதெல்லாம் கஷ்டம்!" என அவள் சொல்லிவிட,


"நான் எழுப்பி விடறேன். நீ தூங்கு..!" எனத் தங்கையைச் சமாதானப்படுத்தி உறங்கா வைத்தவள் கொட்ட கொட்ட விழித்துக் கிடந்தாள். அனைவரும் உறக்கத்திற்குள் சென்று வீடு நிசப்தமாகிப் போகவும், சத்தமே இல்லாமல் எழுந்து, தன் பயணபபொதியைத் தூக்கிக்கொண்டு கீழே இறங்கினாள். அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு, விடி விளக்குகள் மட்டும் மங்கலான் வெளிச்சத்தை உமிழ்ந்துக்கொண்டிருக்க, அவளின் கண்கள் இருளுக்குப் பழக, கொஞ்சம் நேரம் பிடித்தது.


படிகளில் மெதுவாய் பாதம் பதித்து, துளி அரவமில்லாமல், இறங்கி வந்தவள், முன் வாசலை அடைந்திருந்தாள். கதவைத் திறக்கக் கொஞ்சம் பயமாக இருந்தது. படபடக்கும் மனதை திடப்படுத்திக்கொண்டு, முடிந்தவரை ஒலியெழுப்பாமல், கதவைத் திறந்து, சத்தமே கேட்காமல் கதவை அடைத்துவிட்டு வெளியே வந்தவளுக்கு, முன்புற தோட்டத்தையும், வாகனத் தரிப்பிடத்தையும் கடந்து சென்று இரும்புகேட்டைத் திறந்து, காவலாளியின் உறக்கத்தைக் கலைக்காமல் செல்ல வேண்டுமே என்ற படபடப்புக் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.


சத்தமெழுப்பாமல், நடப்பது வேறு, மிகச் சிரமமாக இருந்தது. அதோடு கரத்தில் பிடித்திருந்த பயணப்பொதி வேறு பாரமாய்க் கனத்தது.


'நிறையப் பேக் பண்ணி எடுத்துட்டு வந்துட்டோமோ? காலையில் பார்க்கும் போது, நாலு எட்டில் போற மாதிரி இருந்துச்சு. இப்போ என்னடான்னா இம்புட்டு தூரமா இருக்கு!' எனத் தனக்குள் புலம்ப மட்டுமே அவளால் முடிந்தது. ஒருவழியாய் கேட்டின் பக்கத்தில் வந்து நின்று, மிக மிகக் கவனமாக, பெரிய கேட்டின் அருகில் இருந்த சிறிய நுழைவாயிலின் கதவைத் திறந்துக்கொண்டு வெளியேறியவள், திரும்பிப் பார்க்காமல், விறுவிறுவென நடக்கத் துவங்கியிருந்தாள்.



எங்கே பின்னால் திரும்பினால், யாராவது வந்துவிடுவார்களோ, என்ற பயம் அவள் மனம் முழுதையும் ஆட்கொண்டிருந்தது. அவள் வீடு இருக்கும் தெருமுனையைத் தாண்டி வந்ததும், எதிலிருந்தோ விடுதலை பெற்ற உணர்வு மட்டுமே அவளை ஆட்கொண்டிருந்தது.


விருப்பமில்லாத இந்தத் திருமணம், அவள் பிறந்து வளர்ந்த அவளின் சொந்த வீட்டையே கதவில்லா சிறையாய் மாற்றியிருந்ததென்னவோ நிஜம்.



நாம் பார்த்த நமக்குத் தெரிந்த, இன்னும் பல பெண்களுக்கு, இன்றும் இதே நிலை நீடிக்கத்தான் செய்கிறது. தாங்கள் வசிக்கும் சொந்த வீடே, கதவில்லா சிறையாய் மாறிப் போயிருக்க, திறந்திருக்கும் கதவு இருந்தாலும், ஒருவேளை கதவு பூட்டியிருந்து அதற்கான சாவி அவர்கள் கரத்தில் இருந்தாலும் கூட, நேசம், பாசம், காதல் எனும் காரணங்கள் தங்கள் எல்லையைத் தாண்டி அன்பின் அதீதங்களாய் மாறி, கண்ணுக்குத் தெரியாத சிறைக்குள் அவர்களைப் பூட்டி வைக்கத்தான் முயற்சிக்கிறது. சிறகு விரித்துப் பறக்க ஆகாயம் கண்ணெதிரே தெரிந்தாலும் கூட, சின்ன வீட்டிற்குள் தங்கள் உலகத்தைச் சுருக்கிக்கொண்டு, வானம் தலையைத் தட்டுகிறது எண்றெண்ணி அண்ணாந்து பார்க்காமலே வாழ்த்து முடித்துவிடுகிறார்கள்.


வேகவேகமாய் அவசரமாய் நடந்து வந்து, மூச்சுவாங்க நின்று திரும்பிப் பார்த்தாள் ஆருத்ரா. இரண்டு நாட்களுக்குப் பின் நிம்மதியாய் சுவாசிப்பதைப் போல் உணர்ந்தாள் அவள். மணிக்கட்டைத் திருப்பிக் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி நள்ளிரவு பனிரெண்டு.


'இந்த நேரத்திற்குக் கேப் வந்திருக்கணுமே?' என அவள் மூளைக்குள் சிந்தனை ஓடிய அதே நொடி, அவள் முன் வந்து நின்றது அந்த வாகனம். அதே நேரம், தூரத்தில் யாரோ வருவது போல் தெரிய, தன் வீட்டைச் சேர்ந்த ஆட்களாய் இருப்பார்களோ என்றெண்ணி, அவசரமாய் வாகனத்தில் ஏறி அமர்ந்தாள் ஆருத்ரா.


"சீக்கிரம்! சீக்கிரம்! கிளம்புங்க! " என அவள் அவசரமாய்ச் சொல்ல, அந்த வாகனமும் கிளம்பியது. அந்த இடத்திலிருந்து அந்த மகிழுந்து கிளம்பிய பிறகு தான் அவளுக்கு நிம்மதியாய் மூச்சுவிட முடிந்தது.


'நீ நினைச்சபடி இந்தக் கல்யாணம் நடக்காது இமயன்.! நான் எப்படியும் உன் கண்ணில் அகப்படாத இடத்திற்குப் போய்டுவேன்.!' என மனதிற்குள் பேசியபடி பின்னால் சாய்ந்து அமர்ந்தாள். கண்களை மெதுவாக மூடிக்கொண்டாள்.


அந்தச் சூழ்நிலையின் அமைதியை ஆழ்ந்து அனுபவித்தாள். கண்களுக்குள் இமயவரம்பனின் முகம் வந்து போனது. திருமணம் நின்ற பின் அவன் முகம் எப்படி இருக்கும்? கோபமாக இருக்குமா? ஏமாற்றம் சூழ்ந்து இருக்குமா? என யோசித்துப் பார்த்து தனக்குள் சிரித்துக்கொண்டாள்.


"எங்கே போகணும் மேடம்? ஒண்ணுமே சொல்லலியே?" எனத் தன் செவிக்குள் கேட்ட குரலுக்கு,


"பஸ் ஸ்டாண்ட் போங்க! சென்னை போறதுக்காக ஆம்னி பஸ் நிற்குமே, அங்கே இறக்கிவிடுங்க!" அவசரமாய்ச் சொல்லிவிட்டு, திரும்பப் பின்னுக்குச் சாய்ந்தவளுக்கு, இந்தக் குரல், எங்கோ கேட்டது போல் இருந்தது.


'ச்சே! இருக்காது! அவனையே நினைச்சுட்டு இருக்கிறதால், அவன் குரல் மாதிரி இருக்குதோ? நான் ரொம்ப ஓவர் திங்க் பண்ணுறேனோ?' என அவள் யோசித்துக்கொண்டிருக்க, அவள் அலைபேசி சிணுங்கி அவள் கவனத்தைத் திசை திருப்பியது.
கைப்பைக்குள்ளிருந்து அலைபேசியை எடுத்துப் பார்த்தவள், ஒட்டுமொத்தமாய் அதிர்ந்து போனாள்.


அவள் முன்பதிவு செய்திருந்த வாகன நிறுவனத்தின் பெயர் திரையில் மிளிர்ந்தது. முன் இருக்கையில் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருப்பவனின் முதுகை வெறித்தபடியே அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தாள்.


"என்ன மேடம்! அர்த்த ராத்திரியில் கே புக் பண்ணிட்டு ஆளையே காணோம்?! இப்படி நடுராத்திரியில் வர்ரதே பெருசு. எங்க மேடம் இருக்கீங்க?" என அந்தப்பக்கம் குரல் கேட்க, ஒட்டுமொத்தமாய் அதிர்ந்து போனவள்,


"ஸாரி.. ஸாரிங்க!" எனச் சொல்ல,

"இப்போ கேன்சல் பண்ணுறீங்களா?!" என அந்த நபர் கேட்க,


"ம்ம்!" என வேறு வழியில்லாமல் பதிலளித்தவளின் பார்வை, மகிழுந்தைச் செலுத்திக் கொண்டிருந்தவனின் புறமுதுகைத் துளைப்பதை நிறுத்தவே இல்லை.


என்னதான் தன்னைத் தானே தைரியப்படுத்திக்கொள்ள முயன்றாலும், கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது அவளுக்கு. சற்று முன் இருந்த மனநிம்மதி, துளி மிச்சமில்லாமல், சுத்தமாய் வடிந்து போக,


"இமயன்!" என அழைத்தாள் அவள். அவள் அழைப்பதற்காகவே காத்திருந்ததைப் போல் புன்னகையோடு திரும்பினான் இமயவரம்பன்.


"நான் தான் சொன்னேனே ஆரா.. நீ என்னைத் தாண்டிப் போக முடியாது!" அவன் குரலில் தெரிந்த அழுத்தமும் உறுதியும், அவளைக் கொஞ்சம் ஆட்டிப்பார்த்தது.


"இப்படி என்னைக் கட்டாயப்படுத்திக் கல்யாணம் பண்ணி, நீ எதைச் சாதிக்கப் போற! இதெல்லாம் டோட்டல் வேஸ்ட்! காலம் நேரத்தோட, உன் வாழ்க்கையும் வீணாப் போய்டும்.! எனக்கு வாட்ச்மேன் வேலை பார்க்கிறதை விட்டுட்டு போய் உன் பிழைப்பைப் பாரு." கொஞ்சம் நக்கலாகவே சொன்னாள் ஆருத்ரா.


"எப்படியும் வீணாய்ப் போகப் போற வாழ்க்கை தானே? உனக்காக வீணாகப் போய்ட்டுப் போகுது.!" என அவன் சொல்ல, அவன் சொன்னதன் சாராம்சம் புரியாமல் விலுக்கென நிமிர்ந்து பார்த்தாள்.


"உன் வாழ்க்கை எப்படியோ வீணாப் போகட்டும். எனக்கு என் வாழ்க்கை ரொம்ப முக்கியம். கல்யாணம்ங்கிறது பிடிச்சவங்களோட வாழறதுக்குத்தான். இப்படிக் கட்டாயப்படுத்தி வாழறதுக்கு இல்லை. நீ அப்படியே கட்டாயப்படுத்தி என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும், நீ கட்டுற தாலியை மதிச்சு உன்னோட வாழுறதெல்லாம் நடக்காத விஷயம்.!" தெள்ளத்தெளிவாய் சொன்னாள் அவள்.


"கல்யாணம் பிடிச்சவங்களோட, பிடிச்ச மாதிரி வாழறதுக்குத்தான். போகப் போக என்னை உனக்குப் பிடிக்கும் ஆரா.!"


"போகப் போகப் பிடிக்கும், பார்க்கப் பார்க்கப் பிடிக்கும்ன்னு சினிமா டையலாக் மாதிரி பேசுறே? எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எனக்கு உன்னைப் பிடிக்கவே பிடிக்காது!" என அவள் சொல்ல, சத்தமாய்ச் சிரித்தான் இமயவரம்பன்.


"இப்போ எதுக்குப் பேய் மாதிரி சிரிக்கிறே? என்னைப் போக விடாமல் பண்ணிட்டதால் சிரிக்கிறியா? உன்னைப் பார்த்தால் எனக்குத்தான் சிரிப்பா வருது. உன்னோட ஒட்டுமொத்த வேலையையும் விட்டுட்டு, என்னைக் கண்காணிக்கிறதையே வேலையாய் வச்சிருக்கியே.. அதை நினைச்சால் எனக்குச் சிரிப்புத்தான் வருது.!" என வேண்டுமென்றே அவனைச் சீண்டினாள் அவள்.


"நான் சொல்றது நடக்குதா? இல்லை, நீ சொல்றது நடக்குதான்னு பார்க்கலாம் ஆரா. என்னைப் பிடிச்சுருக்குன்னு நீ சொல்ற காலமும் வரத்தான் போகுது. நீ அதைப் பார்க்கத்தான் போற!"



"பகல் கனவு காணாதே இமயன்! ரெண்டாவது கல்யாணத்திற்கு இம்புட்டு ஃபீலிங் எல்லாம் தேவையே இல்லை. உன்னோட பேச்சுக்கெல்லாம் மயங்குற ஆள் நான் கிடையாது ஞாபகம் வச்சிக்கோ.!" என அவள் சொல்ல, அவன் எந்தப் பதிலும் பேசவே இல்லை. அவனின் இறுகியிருந்த பக்கவாட்டுத் தோற்றத்தைக் கண்டும் காணாமலும் அமர்ந்துக்கொண்டாள் ஆருத்ரா.



அதேநேரம், ஆருத்ராவின் வீடு வந்துவிட, மகிழுந்தின் ஒலிப்பானை ஒலிக்கவிடௌடான் அவன். அந்தப் பெரிய இரும்புகேட் திறக்கப்படவும், வாகனத்தை உள்ளே நிறுத்திவிட்டு, அவளைக் கரம் பிடித்து அழைத்துப் போனான் அவன்.


"என் கையை விடு! கையை விடுன்னு சொல்றேன்ல்ல? எனக்குப் போகத் தெரியும்! நீ ஒண்ணும் என் வீட்டுக்கு வழிகாட்ட வேணாம்!" அவளின் குரல், தன் செவிதனில் விழாதது போலவே அவளுடன் நடந்தான். அதற்குள் வாகனம் வந்து நிற்கும் சத்தம் கேட்டு அனைவரும் விழித்திருக்க, என்ன சொல்வதெனத் தெரியாமல், சிறு பயத்துடனே உள்ளே நுழைந்தாள். குடும்பத்தினர் அனைவரும் கூடத்தில் கூடி நின்றிருந்தனர்.


இமயன் வேறு, பிடித்த கரத்தை விடாது பற்றியிருக்க, ஒருவித அவஸ்தையான மனநிலையுடன், அவர்கள் முன் நின்றாள்.



"இந்நேரத்தில் என்ன மாப்பிள்ளை இங்கண வந்திருக்கீக? நடுச்சாமம் தாண்டியாச்சே?" எனப் பழனிவேல் கேட்க,


"ஒண்ணுமில்லை தாத்தா! ஆருத்ராவைப் பார்க்கணும்ன்னு தோணிச்சு, அதான் நேரிலேயே வந்துட்டேன். இவளை ஃபோட்டோவில் பார்த்த நாளில் இருந்து, இவளை மட்டுமே தான் நினைச்சுட்டு இருக்கேன். கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம். நேரம் தாண்டிடுச்சே அதனால் வீட்டிலேயே விட்டுடுட்டுப் போகலாம்ன்னு வந்தேன்!" துளி பிசகாமல் அவன் பொய் சொல்ல, தன் பயணப் பொதியை அவன் வாகனத்திலேயே மறந்து வைத்துவிட்டு வந்ததைத் தனக்குள் நொந்தபடி, அண்ணாந்து அவனையே பார்த்திருந்தாள் ஆருத்ரா.


"என்ன ஆரா.. நான் சொல்றது சரி தானே?" என அவளையும் அவன் துணைக்கழைக்க, அவள் மறுத்துப் பேச வாய் திறக்கும் முன்,


"நீ ரொம்ப டயர்டா இருக்க. போய்த் தூங்கு ஆரா..! காலையில் புடவை எடுக்கப் போகணும் ஞாபகம் இருக்குல்ல?" என அவளைப் பேசவிடாமல் செய்தவன், அதே வேகத்தில் அனைவரிடமும் விடைபெற்றுக் கிளம்பியிருந்தான். என்ன சொல்வதெனப் புரியாமல் விழித்துக்கொண்டு நின்றிருந்தாள் ஆருத்ரா.


"ஏம்மா எங்கே போறதாக இருந்தாலும் சொல்லிட்டுப் போக வேண்டியது தானே? கல்யாணம் பிடிக்கலைன்னு சொல்றீக! பிறகு சாமத்தில் போய் ஊர் சுத்திக்கிட்டு திரியிறீக! என்ன பிள்ளைகளோ?"


என்ற வள்ளியம்மையின் குரல், வாயிலைக் கடந்து சென்ற இமயனின் செவிகளில் விழ, இதழ்விரித்துச் சிரித்தபடி வாகனத்தைக் கிளப்பினான் இமயவரம்பன்.


அன்பாகும்..?
 
Status
Not open for further replies.
Top