Kavi chandra
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி – 19
மித்துவை தூக்கி வைத்தபடி ஆடிக் கொண்டிருந்த மதுவின் கன்னத்தைப் பற்றித் தன்னை நோக்கி திருப்பியவன் “ம்மா...” என என்னைக் கவனி என்பது போல உரிமையாக அழைக்கவும், அங்கிருந்த அனைவரும் ஒவ்வொரு வகையில் ஸ்தம்பித்து இருந்தனர்.
லலிதா அம்மா தன் மனதில் என்ன எண்ணி கொண்டு மதுவை பார்த்துக் கொண்டிருந்தாரோ அதையே தன் பேரனும் தன் வாய் வார்த்தைகளில் உடனே கூறியதை எண்ணியவர் கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணனே வாக்களித்தது போல நினைத்து சந்தோஷத்தில் ஸ்தம்பித்து இருந்தார்.
மற்ற வேலையாட்களும் கூட அப்படித்தான் மது மித்துவை கவனித்துக் கொள்வதிலும் அவனோடு பழகும் பாங்கிலும் இதுவரை குழந்தையைப் பார்த்துக் கொள்ள வந்தவர்களிடம் இருந்து இவள் எவ்வகையில் வேறுபட்டு இருக்கிறாள் என்பதைக் கண்ணார கண்டு கொண்டிருந்ததால் ‘இப்படியும் நடந்தால் நன்றாக இருக்குமே..!!!’ என்று அந்த நிமிடம் தோன்ற ஒரு எதிர்பார்ப்போடு பார்த்திருந்தனர்.
ஆனால் அறைக்குள் இருந்தபடி இங்கு நடந்துக் கொண்டிருக்கும் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தவன் ஒருவிதமான அதிர்வில் அப்படியே ஸ்தம்பித்து நின்றிருந்தான்.
தன் மனதில் என்ன எண்ணம் தோன்றி வாட்டி வதைக்கிறதோ, எதிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகளைத் தேடி தேடிக் களைத்து இருக்கிறானோ, அப்படி இருக்கையில் மித்துவின் இத்தகு வார்த்தைகளைக் கேட்டவனுக்கு இன்பம் துன்பம் இரண்டும் சேர்ந்த ஒரு கலவையான மனநிலையே இருந்தது.
மித்துவின் வார்த்தைகளைத் தேவ்வின் மனம் ஒரு பக்கம் விரும்பி ரசித்தது என்றால் அதற்கு ஒரு சதவிகிதம் கூடக் குறையாமல் தேவ்வின் மூளை அதை மறுப்பதும் என இப்படியான ஒரு கலவையான மனநிலையில் ஸ்தம்பித்து நின்று இருந்தவனுக்கு மதுவின் வார்த்தைகள் கவனத்தைக் கலைக்க அங்குப் பார்வையைச் செலுத்தினான்.
தன்னை அம்மா என்று அழைத்தவனைக் கொஞ்சி கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவள் “செல்ல குட்டி... என் பட்டு குட்டி...” என்று கூறியவாறே “அம்மா இல்லடா கண்ணா... அக்கா... அக்கா சொல்லு...” எனச் சொல்ல, அந்தக் குட்டி கண்ணனோ, முடியாது என்பது போல அவசரமாகத் தலையை அசைத்து “ம்மா...” என்றான் மீண்டும் அழுத்தம் திருத்தமாக.
“அக்கா சொல்லு...” என மீண்டும் சொல்லிக் கொடுக்க முயல, அவன் நீ சொல்வதை நான் கேட்கவே மாட்டேன் என்பது போலத் தலையை மிக வேகமாக ஆட்டியபடி அவளின் கன்னத்தில் தன் நெற்றியை கொண்டு ஒரு இடி இடித்து விட்டு “ம்மா...” என மீண்டும் அழுத்தம் திருத்தமாக உச்சரித்தான்.
அவனின் செய்கையில் பொங்கிய சிரிப்போடு மதுவும் “சரி உனக்கு அப்படிச் சொல்ல தான் பிடிச்சிருக்குனா அப்படியே கூப்பிடு...” என்று கூறினாள். மது மறுப்புக் கூற தொடங்கியதுமே சற்று முகம் சுருங்க அமர்ந்திருந்த லலிதா அம்மாவிற்கு, அதைத் தன் பேரன் மறுத்து மீண்டும் மீண்டும் அம்மா என்று அழைத்தது ரொம்பவே பிடித்து இருந்தது.
மதுவும் அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டது அவர் முகத்தில் சந்தோஷத்தை மீண்டு வர செய்திருந்தது. ஆனால் உள்ளிருந்து பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு மது மறுத்ததையே ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவள் ஏதோ தன்னையே வேண்டாம் என்று மறுப்பது போலத் தோன்றியது.
அந்த வார்த்தைக்கான அர்த்தம் அது தானே என்று எண்ணியதோடு மதுவை வெறித்துக் கொண்டு இருக்க, மீண்டும் மீண்டும் மது மறுக்க மறுக்கத் தேவ்வின் கோபத்தின் அளவு கூடிக் கொண்டே சென்றது.
அந்த நிமிடம் அவன் ஒன்றை எளிதாக மறந்து போனான் சற்று முன் மதுவின் வார்த்தைகளைக் கேட்ட போது தன் மூளையே ‘அது வேண்டாம் இது சரி வராது...’ என மறுத்தததை.
மித்துவிடம் தன்னை அம்மா என்று அழைக்கும்படி கூறியவள் அவனை இறுகப் பற்றித் தட்டாமாலை சுற்றுவது போல இரண்டு சுற்று சுற்றவும், கலகலத்து சிரித்தவனின் உற்சாகத்தைக் கண்டு மீண்டும் அதே போலச் சுற்றிக் கொண்டே தேவ் இருந்த அறை வாயிலில் வந்த போதே உள்ளே கண்கள் சிவக்க தன்னை முறைத்துக் கொண்டு நின்றிருந்தவனைக் கண்டு அதிர்ந்து போய் அப்படியே நின்று இருந்தாள்.
மது அதிர்ந்து நிற்க இரண்டு காரணங்கள் இருந்தது, ஒன்று எப்போது வீட்டிற்கு தேவ் வந்தான் என்று தெரியாமல் இவ்வளவு நேரம் இயல்பான கொண்டாட்டத்தோடு இருந்ததை எண்ணி ஒரு பயம் மனதை கவ்விய அதே நேரம் தன்னை மித்து அம்மா என்று அழைத்தது அவருக்குப் பிடிக்கவில்லை எனக் கண்கள் சிவக்க நின்றிருந்தவனைக் கண்டு எண்ணி கொண்டவள், அதனாலேயே தேவ் தன்னைக் கோபமாகப் பார்ப்பதாக நினைத்துக் கொண்டாள்.
ஆனால் அந்த நிமிடம் தன் மனதில் இருக்கும் எதையும் வெளிக்காட்டாமல் தேவ் சென்றுவிட்டாலும் அதன் பிறகும் மதுவிடம் அளவுக்கதிகமாகவே கடுமையையும், கோபத்தையும், சிடுசிடுப்பையும் காண்பிக்கத் தொடங்கினான். காட்டாற்று வெள்ளம் போல எப்போதும் பொங்கிப் பெருகும் தேவ்வின் கோபம் மதுவின் மீது வேறு வகையில் பாய்ந்து கொண்டு இருந்தது.
அதைத் தாங்க முடியாமல் புயலில் சிக்கிய சிறு செடியை போல ஆனாள் மது.
தேவ்வை பொருத்தவரை மது மித்துவிடம் உதிர்த்த வார்த்தைகளைத் தன்னையும் தன்னுடன் ஆனா உறவையும் வேண்டாமென்று மறுத்ததாக எண்ணிக் கொண்டு செயல்பட...
மித்துத் தன்னை அம்மா என்று அழைப்பது கொஞ்சமும் பிடிக்காமல் தான் இத்தனை கடுமையைக் காண்பிப்பதாக எண்ணிக் கொண்டு அதை மாற்ற எவ்வளவோ முயற்சிகள் எடுத்து பார்த்தும், அத்தனை முயற்சிகளையும் தோல்வி அடைய செய்து கொண்டிருந்தான் அந்த வீட்டின் செல்ல பிள்ளை.
இப்படியே நாட்கள் செல்ல... இதற்கிடையில் கதிர் மதுவுக்கு இடையே அழகான ஒரு சகோதர உறவு மென்மையான இளங்காலை காற்றைப் போல ரசிக்கக் கூடியதாக வேருன்றி வளர்ந்துக் கொண்டு இருந்தது.
நினைவு தெரிந்த நாளில் இருந்தே ஆஸ்ரமத்தில் வளர்ந்து தன் முயற்சியில் படித்து ஒரு வேலையில் அமர்ந்திருந்தவனுக்கு உறவு என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லாமல் இருந்த நிலையை மாற்றி எப்போதும் சிரித்த முகத்தோடு தன்னை வரவேற்று அண்ணா என்று அழைக்கும் மதுவை உடன்பிறந்த தங்கையாகவே எண்ணி பாசம் காட்ட தொடங்கியிருந்தான் கதிர்.
மது தேவ்வின் வீட்டிற்குள் இருப்பதால் இருவரும் அடிக்கடி பார்த்து பேசிக் கொள்ளவெல்லாம் முடிந்ததில்லை, எப்போதாவது ஒரு முறை வரும் போது ஒரு சிறிய பாச பார்வை பரிமாற்றமும் சில வார்த்தைகளும் மட்டுமே இருக்கும் இருவருக்கும்.
ஆனால் மதுவின் மீது அளவுக்கு அதிகமாகவே அக்கறையும், அன்பும் கதிருக்கு வரத் தொடங்கி இருந்தது. இந்த நிலையில் தான் மது தேவ்வின் வீட்டில் இருப்பதை எண்ணி கதிருக்கு மனம் முழுவதும் கவலை மேகம் சூழ தொடங்கியது.
அவளோடு பேச கிடைத்த சந்தர்ப்பங்களில் எந்த அளவிற்கு உலகம் அறியாத அப்பாவித்தனமும் அன்பும் கலந்து சிறு பெண் அவள் என்பது புரிந்த போது தான் தேவ் பெண்களுடன் பழகும் விதத்தைப் பல வருடங்களாக அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பவன் என்ற முறையில் மதுவின் வாழ்க்கையை எண்ணி கவலைப்படத் தொடங்கியிருந்தான்.
நிச்சயம் விருப்பமில்லாத பெண்ணைத் தொட மாட்டான் தேவ் என்பது தெரிந்திருந்தாலும் ஏனோ இதுவரை தோன்றாத ஒரு உணர்வு தன் தங்கை என்ற இடத்தில் மதுவை வைத்துப் பார்க்கும் போது அவளின் வாழ்க்கையை எண்ணி தோன்றத்தான் செய்தது.
ஆனால் எப்போதாவது மதுவை சந்திக்கக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அவளின் நலனை கேட்டு அறிவதோடு நிறுத்திக் கொள்பவனுக்கு இதைப்பற்றி அவளிடம் பேசி புரிய வைக்க நான் எழவில்லை.
அதற்குக் காரணம் அவனின் எஜமான விசுவாசம் தான். தேவ்விடம் வேலைக்குச் சேர்ந்த நாள் முதலாக அவனின் ஆளுமையும் திறமையையும் எதிரிகளை அவர்களுக்கே தெரியாமல் அடித்து வீழ்த்தும் பாங்கையும் கண்டு மலைத்து நின்று இருப்பவனுக்கு ஒரே குறையாக இருந்தது தேவ்வின் இத்தகைய நடவடிக்கைகள் தான்.
ஆனால் அதைப் பற்றிப் பேசவோ எடுத்துக் கூறி தடுக்கவோ தைரியம் இல்லை. அதே போலத்தான் இப்போதும் என்னத்தான் மதுவை உடன்பிறந்தவளாக ஏற்றுக் கொண்டிருந்தாலும் தன் முதலாளியை பற்றி அவளிடம் குறை கூற மனம் வராமல் தவித்துத் தடுமாறிக் கொண்டிருந்தான்.
இதே நினைவுகள் அவனைத் தினம் தினம் பாடாய்படுத்தவும் இதற்கு ஒரு முடிவு கட்டியே தீரவேண்டும் என்ற எண்ணத்தோடு தேவ்வின் முன்சென்று நின்றிருந்தான்.
தன் வேலைகளில் மூழ்கி இருந்தவன் தன் முன் வந்து நிற்கும் கதிரை என்ன என்பது போல மடி கணினியில் இருந்து கண்களை மற்றும் உயர்த்திக் பார்க்க...
“கொஞ்சம் பேசணும் சார்...” என ஒரு தடுமாற்றத்தோடு கதிர் பதிலளித்தான். தன் எதிரில் இருந்த இருக்கையைச் சைகையில் காட்டி அமருமாறு சொன்னவன் தான் செய்துக் கொண்டிருந்த வேலையைத் தள்ளி வைத்துவிட்டு தன் இருக்கையில் சாய்ந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்துக் கொண்டு இரு கைகளையும் கோர்த்தபடி கதிரின் முகத்தைப் பார்க்கவும்...
‘நீ சொல்ல வந்ததைச் சொல்...’ என்று சொல்லாமல் தேவ் சொல்வது புரிய, எச்சிலை கூட்டி விழுங்கியவனுக்கு வார்த்தைகள் வரவில்லை. அவனைச் சில நொடிகள் கூர்ந்துக் கொண்டிருந்தவன் எந்தக் கேள்வியும் கேட்காமல் இருக்க, இரண்டு முறை பேசத் துவங்கியவன் தடுமாற்றத்துடன் நிறுத்தவும்,
இதுவரை கதிரை தன் மேலுள்ள மரியாதையோடும் பயத்தோடும் தொழில் பக்தியோடும் ஈடுபாட்டோடும் வேலைகளைச் செய்யக் கூடியவனாகவும் பார்த்தவனுக்கு இந்தத் தவிப்பும் தடுமாற்றமும் சற்று வித்தியாசமாகத் தோன்ற ‘அப்படி என்ன பேசப் போகிறான்’ என்று மனதிற்குள் எண்ணியபடியே, தன் முன் இருந்த தண்ணீர் கிளாஸ் சற்று நகர்த்தி அவன் முன் வைத்தான்.
இந்தச் சைகை கதிரை மேலும் உள்ளுக்குள் நடுங்க வைத்தது. தேவ்வின் அந்த அதீத அமைதியே அவனுக்கு நடுக்கத்தை அதிகரிக்கப் போதுமானதாக இருக்க... இருந்தாலும் இன்று இதைப் பேசிய ஆக வேண்டும் என்று இருந்த உத்வேகத்தோடு தண்ணீரை எடுத்து மடமடவெனக் குடித்தவன் குரலை செருமிக் கொண்டு,
“மது... மது...” என அடுத்து என்ன கூறுவது என ஒரு தயக்கத்தோடு தேவ்வின் முகம் பார்க்க... கதிர் உதிர்த்த மது என்ற பெயரில் புருவங்களைச் சுருக்கியவன் மதுவிற்கு என்ன என்பது போலக் கதிரை பார்க்கவும்,
“மது உலகம் அறியா அப்பாவியா இருக்கா..” எனவும் எந்த ஒரு பதிலும் தடையும் இல்லாமல் நீ சொல்ல வந்ததைச் சொல் என்பது போல அமர்ந்திருந்தான் தேவ்.
மீண்டும் அவன் முகத்தைப் பார்த்தபடியே உள்ளுக்குள் இருக்கும் நடுக்கத்தை முயன்று மறைத்துக் கொண்டு, “நீங்க... நீங்க... உங்க கூட... பழகுற பெண்கள் போல... மதுவை...” என்று தொடர்ச்சியாகப் பேச முடியாமல் தட்டுத் தடுமாறி தான் சொல்ல வந்ததை முடிப்பதற்குள் தான் அமர்ந்திருந்த நாற்காலியை பின்னுக்கு உதைத்து விட்டு எழுந்து நின்றிருந்தான் தேவ்.
அதில் உடலும் மனதும் உதறல் எடுக்க எழுந்து நின்ற கதிரின் நடுக்கம் வெளிப்படையாகத் தெரியும் அளவுக்கு இருந்தது.
“வாட் ஆர் யூ திங்க் அபவுட் மீ...” என்று தொடர்ந்து ஏதோ சொல்ல முயன்றவனைக் கண்களாலேயே எரித்து விட்டு, மேலும் ஏதோ சொல்லத் தொடங்கி விட்டுக் கூறாமல் விறுவிறுவென அறையிலிருந்து வெளியேற முயன்றவன் கதவருகில் சென்று நின்று கதிரை திரும்பிப் பார்க்கவும்,
ஏற்கனவே தான் பேச வந்த விஷயத்திலேயே பயந்து கொண்டிருந்தவன் பின் இந்த ருத்ர தாண்டவத்தைக் கண்டு நடுங்கிக் கொண்டிருக்க... தேவவின் இந்தப் பார்வை மேலும் அவனை நடுங்கச் செய்தது. அதில் பயத்தோடு தேவ்வை ஏறிட்டுப் பார்க்க...
“தங்கை பாசம் இருக்கலாம்... ஆனா அதற்காக அடுத்தவன் எல்லாரையும் வில்லனா பார்க்கணும்னு எந்த அவசியமும் இல்லை...” என்று விட்டு சென்று விட,
தொப்பெனத் தன் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்த கதிருக்கு ‘தான் மிகப்பெரிய தவறு செய்து விட்டோமோ’ என்றே தோன்றியது. இத்தனை வருடங்களாகத் தனக்குத் தெரிந்திருந்த வரை தேவ்வின் குணாதிசயங்களைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்த தான் இப்படிப் பேசியிருக்கக் கூடாது என்று எண்ணுகையிலேயே மதுவின் முகம் மனதில் தோன்றவும்
‘அவ பாவம் யாரும் இல்லாத பொண்ணு... என்னைப் போலவே நான் பேசினது சரிதான்...’ என்று இன்னொரு மனம் எண்ணியது.
தேவ்வின் மனம் கொதித்துக் கொண்டிருந்தது ஏற்கனவே தன் மனதோடு போராடி கொண்டிருப்பவன், ஒவ்வொரு முறையும் மித்து மதுவை அம்மா என்று அழைக்கும் போது தன்னுள் இருக்கும் போராட்டம் பலமடங்கு அதிகரிப்பதை கண்டு அவளின் மேலுள்ள தன் விருப்பத்தைத் தானே அறியாமல் எங்கு வெளிகாட்டி விடுவோமோ என்ற பயமும் அவள் அதை மறுத்து கூறிய வார்த்தைகளும் நினைவு வர... கோபம் என்னும் முகமூடியை கொண்டு தன் மனதை அவளிடமிருந்து மறைத்துக் கொண்டு இருப்பவன்,
இப்பொழுது மதுவின் வாழ்க்கையின் மேல் உள்ள அக்கறையில் கதிர் பேசிய வார்த்தைகளும் அதனோடு சேர... தன்னை அனைவரும் ஏதோ வில்லன், ராவணன், ராட்சஸன் எனப் பார்ப்பது போலவே தோன்றியது.
அப்படித் தன்னைப் பார்க்க வேண்டும் என்று ஒரு காலத்தில் முயன்று தன்னை இப்படி மாற்றிக் கொண்டது தான்தான் என வசதியாக மறந்து போனான் தேவ்.
இதன் பிறகு முடிந்தவரை வீட்டில் அதிகம் இருப்பதை மேலும் குறைத்துக் கொண்டான். இந்த நிலையில் தான் வழக்கமாக நள்ளிரவில் வீடு திரும்புபவன், ஒரு நாள் இரவு பிசினஸ் டின்னரை முடித்துக் கொண்டு பத்து மணியளவில் வீடு திரும்பி இருந்தான்.
தன் கையோடு கொண்டு வந்திருந்த சில கோப்புகளை ஸ்டுடி ரூமில் வைத்து விட்டு மேலே செல்ல முயன்றவனுக்கு மது மாடியில் இருந்து இறங்கி வருவது தெரிந்தது.
அந்த இரவின் இருளில் சுற்றும் முற்றும் பார்த்தபடியே தன்னை யாராவது கவனிக்கிறார்களா...? யாராவது பின் தொடர்கிறார்கள்...? எனப் பார்வையால் அலசிக் கொண்டே சென்று கொண்டிருந்த மதுவை ஸ்டடி ரூம் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தான் தேவ்.
இந்த இரவு நேரத்தில் தேவ் இங்கு இருக்கக் கூடும் எனக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை மது. தன் போக்கில் ஒரு பதட்டத்தோடு யாருமற்ற இருட்டான இடத்தை நோக்கி நடந்தவளை முதலில் சாதாரணமாகப் பார்க்க தொடங்கியவன் பின் அவளின் நடவடிக்கைகளின் காரணமாக நெற்றி சுருங்க பார்த்துக் கொண்டிருந்தான்.
இருளின் தனிமையில் அந்த மரத்துக்குப் பின்னால் சென்று நின்ற மது தன் கையில் இருந்த அலைபேசியில் அவசரமாக ஒரு எண்ணை அழுத்தி அழைப்பு விடுத்துவிட்டு படபடப்போடு காத்திருக்க... அந்தப் பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டது.
“ஹலோ...” எனும் போதே கண்கள் கலங்க கரகரப்பான குரலில் அதைச் சரி செய்து கொண்டவள் அந்தப் பக்கம் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மெல்லிய குரலில் பதில் அளிக்கத் தொடங்கினாள்.
“ம்ம்... நன்னா இருக்கேன்...”
“.......”
“நேக்கு இங்க ஒண்ணும் பிரச்னை இல்லை...”
“.....”
ம்ம்... பாத்துக்கறேன்...”
“.....”
“குழந்தை தூங்கிண்டு இருக்கான்... அதான் உங்களாண்ட பேசிட்டு போய்டலாம்னு வந்தேன்...”
“.......”
“இல்ல... யாருக்கும் என் மேல எந்தச் சந்தேகமும் வரல...”
“........”
“அதெல்லாம் கவனமா தான் இருக்கேன்...’
“........”
“நீங்கோ எனக்கு அழைக்காதீங்கோ... நானே இது போலச் சந்தர்ப்பம் பார்த்து கூப்பிடறேன்...”
“........”
“நீங்கோ கவனமா இருங்கோ....” எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மதுவின் கைகளிலிருந்த அலைபேசி பறிக்கப்படவும் திடுக்கிட்டுத் திரும்பியவள் அங்கு ஆத்திரத்தோடு நின்றிருந்த தேவ்வை கண்டாள்.
தேவ் இந்த நேரத்தில் வீட்டில் இருப்பதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத மது அவன் இல்லை என்ற தைரியத்தோடே தனிமையில் தன் காரியத்தைச் சாதித்துக் கொள்ள இங்கு வந்தாள். இங்கு எதிர்பாராமல் அவனைக் கண்டதும் பயத்தில் கை கால்கள் வெடவெடவென நடுங்க அரண்டு போய் நின்றிருந்தாள்.
மதுவை முறைத்தபடியே அலைபேசியைக் காதிற்குத் தேவ் கொடுக்க... அந்தப் பக்கம் இருந்து “ஹலோ... ஹலோ...” எனப் பதட்டத்தோடும் படபடப்போடும் அழைக்கும் ஒரு ஆண் குரல் கேட்டது.
அந்தக் குரல் காதில் விழவும் குத்தீட்டியாகத் துளைக்கும் பார்வையோடு மதுவை பார்க்க... அந்தப் பார்வை மதுவின் கண்கள் வழியே சென்று இதயத்தையும் குத்திக் கிழித்தது.
இந்தப் பக்கம் இருந்து எந்தச் சத்தமும் வராமல் போக... மீண்டும் மீண்டும் அந்தப் பக்கமிருந்து “ஹலோ... ஹலோ...” என்ற குரல் கேட்டுக் கொண்டே இருக்க...
“ஹலோ...” என்ற தன் கம்பீரக் குரலில் பதிலளித்தான் தேவ். அதில் சில நொடிகள் அந்தப்பக்கம் அமைதி நிலவ... “யார்... யார் பேசறது...?” எனச் சிறு அதட்டலோடு அந்தப் பக்கம் இருந்து கேட்கப்படவும்,
“ம்ம்... உனக்கு வில்லன்...” என்றபடி போனை அணைத்து தன் பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு இரு கரங்களையும் பேண்ட் பாக்கெட்டில் நுழைத்தபடி கால்களை அகற்றி நின்று மதுவை ஒரு அளவிடும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் தேவ்.
இங்கே நிறைய பேருக்கு நான் எப்போ எபி போடறேன்னு தெரியலைன்னு சொல்லி இருக்கீங்க.. அதே போல நான் லீவ் சொல்றதும் அடுத்த கதை எப்போன்னு அறிவிக்கறதும் தெரிய வரலைன்னு சொல்லி இருக்கீங்க..
கீழே என் வாட்ஸ்அப் சேனல் லிங்க் கொடுக்கறேன்.. அதில் ஜாயின் செஞ்சுக்கோங்க.. நான் அங்கே மெசேஜ் போட்டதும் உங்களுக்கு நோடிபிகேஷன் வரும்.. எந்த இடையூறும் இல்லாம என் கதைகளை தொடரலாம்..
Kavi Chandra Novels | WhatsApp Channel
Kavi Chandra Novels WhatsApp Channel. Kavi Chandra Novels official whatsapp channel ❤️ Stay tuned for updates😍. 1.3K followers
whatsapp.com
தொடரும்..
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
Last edited: