ஆதி – 13
சரியாக எட்டு மாதங்களுக்கு முன்பு...
அந்த அதிகாலை வேளையில் கையிலிருந்த செய்தித்தாளை இறுகப் பற்றியபடி தோளில் ஒரு சிறு பையுடன் செய்தித்தாளையும் எதிரிலிருந்த பிரம்மாண்ட மாளிகையையும் மாறி மாறி பய பார்வை பார்த்தபடி நின்றிருந்தாள் மது.
மீண்டும் ஒருமுறை தனக்குத் தானே உறுதிப்படுத்திக் கொள்ளச் செய்தித்தாளில் இருந்த விலாசத்தோடு வீட்டின் முகவரியை ஒப்பிட்டுப் பார்த்தவள் தயங்கியபடியே அந்த மாளிகையை ஏறிட்டு பார்க்க...
மது வந்ததில் இருந்து அவளின் அத்தனை செய்கைகளையும் வாயிற்காவலர் அவர் அறையில் இருந்த சிறிய திறப்பின் வழியே பார்த்துக் கொண்டிருந்தவர் “யாருமா... என்ன வேணும்..?” எனக் குரல் கொடுக்க...
திடீரெனப் பக்கவாட்டில் இருந்து இப்படி ஒரு குரல் வரும் எனக் கொஞ்சமும் எதிர்பார்த்திராதவள் அந்த ஓய்வு பெற்ற ராணுவத்தில் பணிபுரிந்தவரின் கட்டையும் அதட்டலுமான குரலில் தூக்கிவாரிப் போட தன் கையிலிருந்த செய்தித்தாளை தவறவிட்டாள்.
பயத்தோடு திரும்பி அவரை மருண்ட பார்வை பார்க்க... தன் குரலில் மது எந்த அளவிற்குப் பயந்திருக்கிறாள் எனப் பார்த்தவர் எழுந்து கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்தபடியே “பயந்துட்டியாமா... என் குரலே அப்படித்தான்...! என்ன வேணும் உனக்கு...?” எனச் சற்றுத் தன்மையாகப் பேச...
“நேக்கு... வேலை... பேப்பர்... இது..” எனக் கோர்வையாகப் பேசாமல் வார்த்தைகள் தந்தியடிக்கப் பதட்டத்தோடு உளறியவளை கண்டு அவள் கீழே தவற விட்ட பேப்பரை குனிந்து எடுத்து பார்த்தவர் அதில் இருந்த விளம்பரத்தைக் கண்டு “ஓ... இந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு இந்த வேலைக்கு வந்து இருக்கியா மா...” எனக் கேட்க “ஆம்” எனப் பூம்பூம் மாடு போல அவசரமாகத் தலையசைத்தாள்.
“அச்சச்சோ... ஐயா வேற ஊர்ல இல்லை மா... நீ ஒரு நாலு நாளுக்கு அப்புறம் வரியா...!” என அவர் எங்கே குரலை உயர்த்திப் பேசினால் பயந்து அழுது விடுவாளோ என்ற தோற்றத்தில் நின்றிருந்தவளை கண்டு ரொம்பவே முயன்று அமைதியான குரலில் கூறினார்.
“இல்ல... நேக்கு... வேற... இப்போ... வேலை...” எனக் கண்கள் கலங்க மீண்டும் அதே போல ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் பேசியவளை கண்டவர், மதுவை அப்போதே முழுமையாகக் கவனத்தார்.
பழைய வெளுத்துப் போன ஒரு காட்டன் சுடிதார், பல வருடங்களாக உனக்கு உழைத்துவிட்டேன்... இதற்கு மேல் என்னைவிடேன் எனக் கெஞ்சும் அளவிற்கான தேய்ந்து போன ஒரு செருப்பும் அணிந்து, காதில் ஒரு பிளாஸ்டிக் தோடு, வெறும் கழுத்து, கைகளில் பெயருக்கு இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கண்ணாடி வளையல், வலது தோளில் ஒரு சிறிய நகை கடைகளில் இலவசமாகக் கொடுக்கும் பை, என்ற தோற்றத்தில் நின்றிருந்தவளை கண்டவருக்கும் பாவமாகத்தான் இருந்தது.
ஆனால் இதில் அவர் செய்வதற்கு எதுவும் இல்லையே, வேலை சம்பந்தப்பட்ட விளம்பரத்தை கொடுத்து இருப்பது முதலாளி அவர் ஊரில் இல்லாத சமயம் இவரால் மதுவிற்கு எப்படி உதவ முடியும்.
“ஐயாதான் மா எல்லாம் முடிவு செய்வார்... அவர் ஊரிலிருந்து வந்த பிறகு நீ வா...” என்று கூறியவரை கண்கள் கலங்க கண்டவள் சுற்றுமுற்றும் பார்க்க...
அந்தப் பகுதியில் அது தான் கடைசி வீடு என்பதால் அதற்கு அடுத்து இருந்த சுவரின் ஓரமாக இருந்த மர நிழலை நோக்கி நகர்ந்தவளை தடுத்து நிறுத்தியவர் “இங்கே எங்க போற மா...” எனக் கேட்டார்.
பொங்கி வரும் அழுகையை அடக்கப் போராடியதால் உதடு பிதுங்க மெல்லிய குரலில் “அவா வர வரைக்கும் இங்கே இருந்துக்கறேன்...” என மது அந்த மரத்தை சுட்டிக்காட்ட...
‘என்னது... நாலு நாளா...! இங்கேயா...?’ என மனதிற்குள் அதிர்ந்தவர் ‘ஐயோ என்னோட வேலைக்கு உலை வெச்சிடுவா போலேயே...’ எனப் பதறி “அங்கெல்லாம் உட்காரக் கூடாது... இது ரொம்பப் பெரிய மனுஷங்க இருக்கற பகுதி... இந்த மாதிரி எல்லாம் யாரும் இங்கே இருக்க விட மாட்டாங்க...” என அவளுக்குப் புரியும் வகையில் பொறுமையாக எடுத்துச் சொன்னார்.
எந்தப் பதிலும் அவருக்கு அளிக்காமல் கண்ணீர் வழியும் விழிகளோடு அவரைப் பார்த்தபடி நின்றிருந்தாள் மது.
அந்த பின் நாற்பதுகளில் இருந்த மனிதருக்கு ஏனோ மதுவின் இந்தத் தோற்றம் ஆதரவற்ற ஒரு குழந்தையின் பரிதவிப்பு போலத் தோன்ற... ‘உனக்கு என்ன பிரச்சினை மா...’ எனக் கேட்க மனது நினைத்தாலும் கேட்டுத் தெரிந்து மட்டும் தான் எந்த வகையில் உதவ முடியும் அவளுக்கு என்று அவருக்குப் புரியவில்லை.
அவருமே தன் குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டு அவர்களுக்காக இங்கே உழைத்துக் கொண்டிருப்பவர் தான். ஒரு இளம் பெண்ணிற்கு எத்தனையோ பிரச்சினைகள் இன்றைய சமூகத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது, அதில் இந்தப் பெண்ணிற்கு என்ன தான் பிரச்சனை, வேலையும் வருமானமும் தான் பிரச்சினை என்றால் நான்கு நாட்கள் கழித்து வரச் சொன்னபோது சரி என்று இங்கிருந்து சென்று இருப்பாளே...!!
அதையும் கடந்து ‘நாலு நாள் ஆனாலும் பரவாயில்லை, இங்கு அமர்ந்திருக்கிறேன்...’ என இத்தனை அழகான ஒரு வயது பெண் சொல்லும் போது அவளின் நிலையை எண்ணி இரு பெண்களின் தகப்பனாக அவருக்கும் மனம் பதறத்தான் செய்தது.
மதுவின் இடத்தில் சில நொடிகள் தன் பெண்ணை நிறுத்தி பார்த்தவருக்கு ‘எந்த வகையிலாவது இவளுக்கு உதவ முடியுமா...?!’ என யோசனை செல்ல, ‘கடைசி முயற்சியாக ஒரு முறை முதலாளி அம்மாவிடம் பேசிப் பார்க்கலாமா...!’ என எழுந்த எண்ணத்தைச் செயல்படுத்த நினைத்தவர் “கொஞ்சம் இரும்மா... அம்மாகிட்ட கேட்டுப் பார்க்கிறேன்...” எனச் சொல்லிவிட்டு அவருக்கு என ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து இன்டர்காமின் உதவியோடு அனுமதி கேட்க... சில நிமிடங்களில் மதுவை உள்ளே அனுப்புமாறு அவருக்கு அனுமதி கிடைத்தது.
“உன் நல்ல நேரம் மா... அம்மா உன்னை உள்ளே வரச் சொல்லி இருக்காங்க... போய்ப் பாரு...” எனச் சொல்லவும், இருட்டில் துழாவிக் கொண்டிருந்தவளுக்கு ஒரு சிறு துளி வெளிச்சம் கண்டதைப் போலத் தோன்ற, அவரை நன்றியோடு பார்த்து கையெடுத்துக் கும்பிட்டவள் வார்த்தைகள் வராமல் கண்ணீரோடு பார்த்தாள்.
“எனக்கும் உன் வயசில் பொண்ணுங்க இருக்குமா...! என்னால் இவ்வளவுதான் உதவ முடியும் இனி நீ தான் பார்த்துக்கனும்...” எனச் சொல்லி உள்ளே அனுப்ப, இவ்வளவு பெரிய மாளிகையை இது வரை வாழ்க்கையில் கண்டிராதவள் அந்தப் பெரிய கேட்டின் வழியே மருண்ட பார்வைகளோடு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே அதன் பிரம்மாண்டத்தைக் கண்டு மனதில் எழுந்த பயத்தோடு அந்த மாளிகையின் பிரதான வாயிலுக்குள் வலது காலை எடுத்து வைத்து நுழைந்தாள்.
இந்த மாளிகையும் இதிலிருந்து ஆட்சி செய்பவனும் தன் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றப் போவதை அறியாமலேயே...!!!
மது உள்ளே நுழைவதற்காகவே காத்திருந்தது போல் ஒரு பணிப்பெண் வந்து அவளை அழைத்துக் கொண்டு கீழ்தளத்தில் இருந்த ஒரு பிரம்மாண்டமான அறைக்குள் செல்ல...
அங்குக் கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தார் லலிதா. அவரைக் கண்டு கையெடுத்து வணங்கியவளை பார்த்து “வா” என்பது போல் தலையசைத்தவர், தன் அருகில் இருந்த இருக்கையைக் கண்களால் காண்பித்து அமரும்படி சொல்லவும், “இல்ல நான் நிற்கறேன்...” எனப் பதில் அளித்த மதுவிற்கு உள்ளே நுழைந்த நொடிகளில் மனதில் இருந்த பயமும் பதட்டமும் லலிதாவின் அமைதியும் சாந்தமும் தவழும் முகத்தைக் கண்ட நொடியில் காணாமல் சென்று ஒரு அமைதி பரவியது.
“என்ன விஷயமா வந்திருக்க மா...?” என லலிதா கேட்கவும், “இந்த...” எனத் தொடங்கியவள் அப்போதே தன் கைகளில் இருந்த செய்தித்தாளை வெளியிலேயே விட்டுவிட்டு வந்தது புரிய, ”நான்... பேப்பர்... நேக்கு... வேலை...” என மீண்டும் தடுமாற,
“முதலில் அமைதியா பயப்படாமல் உட்கார்ந்து என்ன சொல்லணுமோ சொல்லு... என்ன பார்த்தா அவ்வளவு கொடுமைக்காரி போலவா இருக்கு... நீ இவ்வளவு பயபடறதுக்கு...” என லலிதா அவளின் பயத்தைக் குறைக்க எண்ணி இலகுவாகப் பேசவும்,
‘எங்கே தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டாரோ...’ என எண்ணி பதறியவள் இல்லையில்லை... நீங்க அப்படியே மகாலட்சுமி மாதிரி இருக்கறேள்...” எனப் படபடப்பாகப் பதில் அளிக்கவும் அதில் லலிதாவின் முகத்தில் புன்னகை அரும்பியது.
தான் விளையாட்டிற்குப் பேசியது கூடப் புரியாமல் குழந்தை தனத்தோடு பதிலளித்தவளை லலிதாவிற்குப் பார்த்ததுமே பிடித்துவிட்டது. அடுத்து அவர் மதுவிடம் ஏதோ கேட்கத் துவங்கவும், அறை கதவை திறந்துக் கொண்டு வீட்டில் வேலை செய்யும் பெண்மணி நுழைய... அவர் தோளில் இருந்து முரண்டு பிடித்தப்படி அழுது அழுது சிவந்து போன முகமும் கத்தி கத்தி வரண்டுப் போன தொண்டையுமாக மித்து வந்து கொண்டிருந்தான்.
அவரிடம் திரும்பி என்னவென்று லலிதா கேட்பதற்குள், வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாகச் செயல்பட்டு மது அவரை நெருங்கி மித்துவை கைகளில் வாங்கியிருந்தாள். அழும் குழந்தையை அணைத்துப் பிடித்துத் தோளில் கிடத்தி முதுகை தடவிக் கொடுத்துச் சமாதானம் செய்ய முயன்றவாரே...
“கண்ணா எதுக்கு அழறீங்க...? குட்டிக் கண்ணாவுக்கு என்ன வேணும்...? என்னமா என்ன ஆச்சு...? எதுக்கு இந்த அழுகை...? இப்படி அழலாமா...! அப்புறம் குட்டி செல்லத்துக்குத் தொண்டை எல்லாம் வலிக்குமே...! என்ன ஆச்சு...? உம்மாச்சியா... வலிக்கிறதா கண்ணாக்கு...?” எனக் கொஞ்சலோடு கேட்டபடியே மித்துவை இடது கைகளில் திருப்பித் தன் நெஞ்சோடு அணைத்துப் பிடித்துக் கொண்டு வலது கையால் வயிறு கழுத்துக் கை கால்களில் தடவி ஏதாவது அடிபட்டு இருக்கிறதா...? பூச்சிகடி ஏதாவது இருக்கிறதா...? என ஆராய்ந்துக் கொண்டே பேசியவள்,
“கண்ணாக்கு மம்மு வேணுமா...? மம்மு சாப்டிங்களா... என்ன சாப்டிங்க...? இந்தக் குட்டி தொப்பையில் மம்மு இல்லையே...! மம்மு சாப்பிடுவோமா...?” எனக் கேட்டபடியே மித்துவை தூக்கி வந்தவரை நிமிர்ந்து பார்க்க...
அவரும் திரும்பி அங்கிருந்த மேஜையில் இருந்து குழந்தைக்குக் கொடுக்கும் பால் பாட்டிலை எடுத்துக் கொடுத்தார்.
அதை வாங்கிக் கொண்டவள் இன்னும் அழுது கொண்டிருந்தாலும் முன்பு அவர்கள் கையில் இருந்தது போல் வீறிட்டு கத்திக் கொண்டும் இறக்கிவிடச் சொல்லிக் கொண்டும் இல்லாமல் தேம்பியவாறே அழுது கொண்டிருந்தவனை மது அணைத்துப் பிடித்துக் கொஞ்சியபடியே தன் கையில் இருந்த பாலை புகட்ட முயன்றாள்.
முதலில் இரண்டு மூன்று முறை அதைத் தள்ளி விட்டு வேண்டாம் என்பது போல் கால்களால் உதைத்தவன், பிறகு அவளின் அன்பான அனுசரணையான கவனிப்பில் பாலைக் குடிக்கத் தொடங்கினான்.
அப்படியே இருக்கையில் அமர்ந்துக் கொண்டு ஒரு கையால் பாலை புகட்டியவாறே மற்றொரு கையால் மித்துவின் தலையைக் கலைத்து அன்பாக வருடிக் கொடுக்கத் தொடங்கவும், அந்த வருடலும் மதுவின் மார்பு சூடும் உள்ளே சென்ற பாலும் சேர்ந்து இரவு முழுவதும் அழுது கொண்டிருந்த மித்துவை உறக்கத்தில் தள்ளியது.
கொஞ்சம் கொஞ்சமாக உறக்கத்தின் பிடியில் சென்றுக் கொண்டிருந்தவன் வாயில் இருந்து விலகிய பால் பாட்டிலை மீண்டும் சரியாகப் பொருத்திப் முழுவதையும் குடிக்க வைத்த பிறகே அதை விலக்கினாள் மது.
மித்து உறங்கிவிட்டது தெரிந்தாலும் மீண்டும் உறக்கம் கலைந்து விழித்து விடாமல் இருக்க, அவன் ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்லும் வரை தட்டிக் கொடுத்துக் கொண்டும் தடவிக் கொடுத்துக் கொண்டும் அமர்ந்திருந்தவள் நன்றாக உறங்கி விட்டான் என்று உறுதியான பிறகே தன் தலையை நிமிர்த்தியவள் அப்போதே தன்னைச் சுற்றி இருந்தவர்கள் அத்தனை பேரும் வித்தியாசமாகப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாள் மது.
அப்போதே மதுவிற்குத் தான் அதிகப்படியாக உரிமை எடுத்துக் கொண்ட தன் தவறு புரிந்தது. அவள் எழ முயன்றவாறே “மன்னிச்சுக்கோங்கோ குழந்தை அழறதைப் பார்த்ததும் வேறு எதுவும் நினைவில் இல்லை...” எனத் தன்னிலை விளக்கம் கொடுக்க முயல,
அவளை அமைதிப்படுத்திய லலிதா “குழந்தையை மடியில வெச்சு இருக்கும் போது எழுந்தக்காத உட்கார்...” எனச் சொல்ல, ‘எங்கே தான் எழுந்தால் பிள்ளையின் உறக்கம் கலைந்து விடுமோ...’ என எண்ணியபடியே அமர்ந்து கொண்டவள்,
பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு லலிதாவைப் பார்த்தவாறு “நான் வேணும்னு எதுவும் செய்யல...” என மீண்டும் தொடங்க, “இப்போ நீ செஞ்சது தப்புன்னு யாரு சொன்னா...?” என்ற லலிதாவின் கேள்விக்கு, தயக்கமாகத் தங்களைச் சுற்றி இருந்தவர்களை மது ஒரு பார்வை பார்க்க...
“அவர்களின் பார்வையில் இருந்தது குற்றச்சாட்டு இல்லை... ஆச்சரியம்...” என்பதை விளக்கிய லலிதா “நைட்ல இருந்து அழுது அமர்க்களம் செய்து கொண்டிருந்தான்... ஒரு சொட்டு கூடத் தூங்கலை... அத்தனை பேரும் எவ்வளவோ முயற்சி செய்தும் ஒன்றும் நடக்கலை... இப்போ ஐந்து நிமிஷத்துல அவன் அழுகையை அடக்கி நீ தூங்க வச்சிருக்கே... அதைத்தான் எல்லாரும் ஆச்சரியமா பார்த்துட்டு இருக்காங்க...” என விளக்கினார்.
‘இந்தப் பார்வைக்கு அர்த்தம் அது தானா...?’ என நினைத்தவள் “அதெல்லாம் ஓண்ணும் இல்ல மாமீஈஈ...” எனத் தொடங்கி “மன்னிச்சுக்கோங்க... மேடம் பிள்ளை வயிறு காலியா இருக்கு, அதான் பிள்ளையால தூங்க முடியல...” எனத் தான் செய்தது பெரிதாக ஒன்றும் இல்லை என்று குரலில் பதில் அளித்தவளை கண்டு சிரித்தவர்,
“இத்தனை வயசாச்சு... குழந்தை பசிக்கு அழுறானா இல்லையானு கூட என்னால கண்டுபிடிக்க முடியாதா என்ன...? அவன் அழ பசியும் ஒரு காரணம்னு நல்லாவே தெரியும்...! ஆனா அவன் தான் பாலை ஒரு வாய் கூடக் குடிக்கவில்லையே...!” எனச் சிறு பெருமூச்சோடு சொல்லவும் தான் அதற்கு மேல் என்ன பதிலளிப்பது எனத் தெரியாமல் மது நிறுத்தினாள்.
தூங்கிக் கொண்டிருந்த மித்துவை தொட்டிலில் கிடத்துவதற்காக வாங்கிக் கொள்ள வந்த பணிப்பெண்ணைத் தடுத்தவள் “இல்ல வேண்டாம் இப்படியே இருக்கட்டும்... நீங்கோ சொல்றதை பார்த்தா பிள்ளை ராத்திரியெல்லாம் தூங்காம இருந்து இருக்கான்...! கொஞ்ச நேரம் நல்லா தூங்கட்டும்...” என மது சொல்லவும்,
அவரவர் வேலையைக் கவனிக்கக் கலைந்து சென்றனர், அனைவரும் விலகிச் சென்ற பிறகு லலிதா மதுவை பார்த்து “இப்போ சொல்லு மா... நீ என்ன விஷயமா வந்தே...? பேப்பர்ல கொடுத்த விளம்பரத்தை பார்த்து குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் வேலை கேட்டு வந்தியா...” எனக் கேட்கவும் “ஆம்” எனத் தலை அசைத்து பதிலளித்தாள்.
சற்று யோசித்த லலிதாவிற்கும் மது மித்துவை கையாண்ட விதம் மிகவும் பிடித்திருக்கவே அவளுக்கு அந்த வேலையைக் கொடுக்க எண்ணியவர் மனதில் கடுகடுவென்ற முகத்துடன் தன் மகன் வந்து போனான்.
‘நிச்சயம் அவன் அனுமதி இல்லாமல் மதுவை இந்த வேலையில் நியமித்தால் தன்னைக் கடித்துக் குதறி விடுவான்..’ எனத் தெரிந்து இருந்தாலும் இப்போது இருக்கும் நிலையில் நிச்சயம் மது போல ஒருத்தி அவனைக் கவனித்துக் கொள்ள அவசியம் தேவை...!
தேவ் திரும்பி வர இன்னும் நான்கு நாட்கள் ஆகும்...! அப்படி இருக்கையில் அவனும் இல்லாமல் சரியாகக் கவனித்துக் கொள்ள ஆளும் இல்லாமல் இருந்தால் மித்து அழுதழுது உடம்பிற்கு எதையாவது வரவழைத்து கொள்வான் என்ற நிதர்சனம் விளங்க, தன் மகனை சமாளித்துக் கொள்ளலாம் என மனதிற்குள் முடிவெடுத்தவர்,
“சரி சொல்லுமா... இந்த வேலைக்கு நீ என்ன எதிர்பார்க்கிற...” எனவும் மெல்ல அவரை ஏறிட்டுப் பார்த்தவள் தயக்கத்தோடு “நேக்கு தங்க இடமும் சாப்பாடும் கொடுத்தா போதும் மாம்...” எனத் தொடங்கி மீண்டும் “மேடம்...” என மாற்ற அதில் லலிதாவின் முகத்தில் புன்னகை அரும்பியது.
“என் மகன் என்னை நல்லா வசதியாத்தான் வாழ வைக்கிறான்... ஆனா அதற்காகத் தங்க இடத்துக்கு நான் எங்க போவேன்...” எனக் கவலை குரலில் கூறியவரை புரியாமல் பார்த்தவள்,
‘இத்தனை பெரிய மாளிகையில் தான் தங்கிக் கொள்ள ஒரு ஓரமாகக் கூட வா இடமில்லை...’ என மனதில் எண்ணியவாறு திருதிருவென விழிக்க, அவளுக்கு தான் சொல்ல வந்தது புரியவில்லை என்று உணர்ந்த லலிதா “தங்க இடம் என்றால் கோல்ட் பிளேஸ் தானே மா கேட்கிற...” எனவும் தான் அவர் சொல்ல வந்தது புரிந்தது.
“அச்சச்சோ.... இல்ல மாம்... மேடம்... நான் தங்கிக்கக் கொஞ்சம் இடம் கொடுத்தா போதும்... வேறு எதுவும் நான் எதிர்பார்க்கல...” எனத் தான் என்ன சொல்ல நினைத்தோம் என்பதை விம் போட்டு விளக்கவும்,
சற்று யோசிப்பது போலப் பாவனைச் செய்தவர், “அப்போ குளிக்கலாம் மாட்டியா...?” எனக் கேட்க, பாவமாக முழித்துக் கொண்டிருந்தாள் மது.
ஆனால் இவற்றையெல்லாம் அந்த அறையின் ஒரு ஓரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த லலிதாவின் கேர் டேக்கர் ராஜிக்கு இந்த லலிதா ரொம்பவே புதிதாகத் தெரிந்தார்.
கடந்த நான்கு மாதமாக அவர் படுக்கையில் விழுந்த பிறகு அவரை நான்கு மணி நேரமும் கூடவே இருந்து கவனித்துக் கொள்பவர் ராஜி தான். இத்தனை நாட்களில் இது போன்ற குறும்பு பேச்சை ஒருநாளும் அவர் லலிதாவிடம் இருந்து கேட்கவில்லை.
இவ்வளவு இயல்பாக இருப்பது போலப் பேசிக் கொண்டிருந்ததை ஆச்சரியமாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் அவர். ஏனோ மதுவை உள்ளே நுழைந்த போது பார்த்த நிமிடத்திலேயே, கலைந்த தலையும் பழைய உடையுமாக இருந்தாலும் துடைத்து வைத்த குத்து விளக்கு போல் இருந்தவளை லலிதாவிற்கு ரொம்பவே பிடித்துப் போனது.
அதன் பிறகு மித்துவை கையாண்ட விதம், தன்னோடு தயங்கி தயங்கி பேசுவது, அதிலிருந்த அவள் அப்பாவித்தனம், தன்னை எப்படிக் கூப்பிடுவது எனத் தெரியாமல் ஒவ்வொரு முறையும் தடுமாறுவது, வேலைக்கு என்ன சம்பளம் வேண்டும் எனக் கேட்ட கேள்விக்குக் கூட அதைச் சரியாகக் கணித்துச் சொல்ல முடியாமல் குழந்தை தனத்தோடு பதிலளித்தது என அனைத்துமே மதுவின் விஷயத்தில் லலிதாவின் மனதை கவர,
இதற்கு முன் இந்தப் பெண் எங்கேயும் யாரிடமும் வேலை செய்யவில்லை என்பது அவருக்குத் தெளிவாக விளங்கியது. எந்தக் காரணத்திற்காகவோ இவளுக்கு இப்போது வேலை அவசியம் என்பது புரிய... கொஞ்சமும் தயங்காமல் அந்த முடிவை எடுத்தார்.
ஆனால் அவர் நினைத்தது போலவே அவரின் ஒரே செல்ல மகன் காலில் சலங்கை கட்டாத குறையாக இந்த விஷயம் கேள்விப்பட்ட நொடியில் எகிறி எகிறி குதிக்கத் தொடங்கினான்.
“அம்மா எத்தனை முறை பட்டாலும் நீங்க திருந்தவே மாட்டீங்களா...! ஏன்மா இப்படி அப்பாவியாக இருக்கீங்க...? அப்படி என்ன அவசரம் இன்னும் மூணு நாளில் நான் வந்துடுவேன் இல்லையா...! அதுக்குள்ள யார் எவர் என்றே தெரியாத யாரோ ஒருத்தியை ஏன் வீட்டுக்குள்ள சேர்த்தீங்க....? இவ என்ன திட்டத்தோட உள்ள வந்திருக்கான்னு தெரியலையே...?” என இடைவெளி விடாது பொறிந்து தள்ள...
“அவ நல்ல பொண்ணு விக்ரமா...” என லலிதா சாந்தப்படுத்த முயல, அது இன்னும் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல ஆகியது அந்தப் பக்கம் இருந்தவனுக்கு... ‘வந்த அரைநாளில் இப்படி மயக்கி வைத்திருக்கிறாள் என்றால் எப்படிப்பட்டவளாக இருப்பாள்...! வந்து கவனிச்சிக்கிறேன்டி உன்னை...’ என மனதிற்குள் நினைத்தபடி அலைபேசியை அணைத்திருந்தான் தேவ்.
தொடரும்..
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா