All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அவளருகே அமர்ந்து கடந்த கால நினைவு சூழல்களில் சிக்கி சுழன்று கொண்டிருந்தவனை குட்டிகள் இருவருமாய் அவர்கள் ஸ்ரீமாவை தேடி வந்து மீட்டிருந்தார்கள்.
ஸ்ரீனிகாவின் சிறு அசைவிலேயே வேகமாக அருகே வந்தவன் அவள் முன் குனிந்து "ஆர் யூ ஓகே" கன்னம் பற்றி கேட்டான். அரை மயக்ககத்தில் இருந்தவளுக்கு நினைவு அன்று அந்த ஷாப்பிங் மாலில் தன் கன்னத்தில் முத்தமிட்ட பத்தொன்பது வயது கௌதமிடம் சென்று விட அழகிய புன்னகை தவழ அவன் கன்னத்தில் கை வைத்து அவன் முகம் பார்த்தாள்.
கௌதமுக்கு ஒரு கணம் உலகம் நின்று சுழன்றது. எத்தனை வருடங்களின் பின்னர் பார்க்கின்றான் அதே குழந்தைத்தனமான புன்னகை, குண்டு கன்னமும் கன்னக்குழியும் மட்டும் மிஸ்ஸிங். குழந்தைகள் இருப்பதையும் மறந்தவனாய் குனிந்து கன்னத்தில் இதழ் புதைத்தவன் "சாரி... சாரி... சாரி..... ரொம்ப சாரிடி" குரல் கலங்கி கூற கண்ணிலிருந்து ஒரு துளி நீர் கசிந்தது.
குழந்தைகள் இருவரும் அருகே வரவும் சுதாகரித்த கெளதம் மறுபுறம் திரும்பி முழங்கை வளைவில் கண்ணை துடைத்தான். சற்று சிரமத்துடன் எழுந்து அமர்ந்த ஸ்ரீனிகா நிலாவை தூக்கி மடியில் இருத்தினாள். அவள் முகத்தை தன் பிஞ்சு கரங்களால் தடவ ஸ்ரீனிகா நெஞ்சோடு அணைத்து நெற்றியில் முத்தமிட்டு "அத்தைக்கு ஒன்றும் இல்லடா குட்டி சரியா பால் குடிக்கல இல்ல அதான் கொஞ்சம் காய்ச்சல்" என்று சமாதானப்படுத்தினாள். கட்டிலில் ஏறி அமர்ந்த தீப் அவள் கன்னத்தில் முத்தமிட்டு "ஸ்ரீம்மா ஆர் யூ ஓகே? எங்காவது வலிக்குதா?" கவலை நிறைந்த முகத்துடன் விசாரித்தான்.
"எனக்கு ஒன்றும் இல்லைடா கண்ணா" என்றவளிடம் "பால் குடிக்கிறீர்களா?" என்று கேட்டு "எடுத்து வருகிறேன்" என்று ஓட போனவனை தடுத்து "சத்தம் போட கூடாது பக்கத்து அறையில் சித்தப்பா வேலையாக இருப்பார்" வழமையாக அவள் அறையில் இருக்கும் நினைவில் கூற இரு வாண்டுகளுமே சிரித்தனர் "என்னடா சிரிப்பு" என்று செல்லமாய் அதட்டினாள்
இவர்களின் பாசப்பிணைபினை அருகேயிருந்து லேசான பொறாமையுடன் பார்த்ததுக் கொண்டிருந்த கௌதம்
"என்னடா" என்று மீண்டும் செல்லமாய் அதட்டினாள் ஸ்ரீனிகா. இரு வாண்டுகளும் வாயில் கை வைத்து கிளுக்கி சிரித்து "நீங்கள் சித்தப்பாவின் அறையில் தான் படுத்து இருக்கிறீர்கள்" என்றான் தீப்.
"ஹா..." விழி விரித்து அறையை சுற்றி பார்த்தவள் பார்வை அருகே சிறு சிரிப்புடன் பார்த்த கௌதமில் நிலைக்க, அவன் கட்டிலில் சாய்ந்திருந்த தன்னை தானே குனிந்து பார்த்து விட்டு நொடியில் வாரி சுருட்டி கொண்டு எழுந்தாள் ஸ்ரீனிகா.
அவள் எழுந்ததில் பயந்து போன குழந்தைகள் இருவரிடமும் "நீங்கள் இருவரும் போய் நாளை வீட்டுப் பாடத்தினை தயார் செய்யுங்கள் நான் வருகிறேன்" என்று அவர்களை வெளியே அனுப்பி வைத்தாள்.
அவன் முகம் பார்க்காமல் தோளை பார்த்தவாறு "சா... சாரி எப்படி வந்தேன் என்றே தெ.. தெரியவில்லை சாரி சாரி எனக்கு உரிமை இல்லாத இடம்தான். உண்மையாகவே நான் எப்படி வந்தேன் என்று எனக்கே தெரியவில்லை சாரி சா.... சாரி" என்று தடுமாறியவள் முகத்தையே இமை வெட்டாமல் பார்த்திருந்தான் கௌதம்.
கண்களில் பயத்துடன் அவள் முகமும் அதே அச்சத்தை பிரதிபலிக்க அவன் என்ன சொல்வானோ என்று ஒரு கணம் நிமிர்ந்து பார்த்தவள் மறு கணம் அந்த இடத்தை விட்டு வேகமாக வெளியே சென்று விட்டிருந்தாள்.
கௌதமிற்கு நடந்தது புரியவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது. அவள் தன்னிடம் இருந்து பயந்து விலகிச் சென்றாள் என்பதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. இமை தட்டி விழித்தவனுக்கு ஏன் என்றே தெரியாது சீற்றம் எழ வேகமாக அவர்கள் அறையில் இருந்த கதவை திறந்து அவள் அறைக்கு சென்றவன் பிரெஞ்சு விண்டோவில் முகம் புதைத்து நின்ற ஸ்ரீனிகாவின் முழங்கையை பிடித்து தன்னை நோக்கி திருப்பினான்.
"நீ உன் மனதில்......" என்று அவன் ஆரம்பிப்பதற்குள் அவளே கடகடவென ஒப்பித்தால் "எனக்கு நிஜமாகவே நான் அங்கு எப்படி வந்தேன் என்று தெரியாது. எனக்கு அந்த மாதிரி தப்பான எண்ணமும் இல்லை. பிளீஸ் குழந்தைகள் எப்படி வந்தார்கள் என்றும் எனக்கு தெரியாது. நான் திட்டமிட்டு எல்லாம் வரவில்லை அந்த தலைவலி..... அதுக்கு பின் நான்... எனக்கு.... எதுவும் ஞாபகம் இல்ல.... எனக்கே தெரியல.... ப்ளீஸ்.... பிளீஸ்..."
அவன் பேச்சு மறந்து அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். அவள் பேசுவது புரியாமல் சில கணங்கள் விழித்தவனுக்கு அனைத்தும் அவன் வார்த்தைகள் என்று புரிய உள்ளுக்குள் எங்கேயோ வலித்தது.
அவளோ தொடர்ந்து அதையே சொல்லிக் கொண்டிருந்தாள். எனக்கு அந்த மாதிரி எண்ணம் எதுவும் இல்லை ப்ளீஸ் நான் அப்படி நினைத்து வரவில்லை. அ... அ.. அன்று கூட நதியா தான்..... கூட்டிட்டு வந்து... எப்படி உள்ளே வந்தேன் என்றே தெரியாது. உ உங்.... உங்களை மயக்க என்.. என்று எதையும் செய்யல" பைத்தியம் போல சொன்னதே திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டிருந்தாள்.
"ஸ்ரீனி...." அழுத்தி அழைத்தவன் "நான் தான் உன்னை அப்படி எதுவும் சொல்லவே இல்லையே...' என்றவாறு அருகே செல்ல முயல அவனையோ அவன் சொல்வதையோ கவனத்தில் எடுக்கது சுவரோடு ஒட்டிக் கொண்டு விலகிச் சென்றாள். பயம் பயம் மட்டுமே அவள் முன் நிற்க கண்களை இறுக மூடி கைகளை முஸ்டியாக்கி தோளுக்கு மேல் தூக்கி சுவரோடு வைத்து கொண்டு பைத்தியக்காரி போல் சொன்னதையே திருப்பி சொல்லிக் கொண்டிருந்த அவளை பார்க்க ஒரு கண்கள் கலங்கிச் சிவந்தது.
அப்படியே மடங்கி முழங்காலை கட்டி கொண்டவளை காண முடியாமல் முகத்தை திருப்பியவனுக்கு அவளை இப்போது சமாதானப்படுத்துவதே முக்கியமாக பட அவளருகே முட்டி போட்டு "ஷ்.... இல்லடா நான் தான் கூட்டிட்டு வந்தேன். ஒகே ரிலாக்ஸ்... ஒகே நீயா வரல நான்தான் கூட்டிட்டு வந்தேன்" அவள் கைகள் இரண்டையும் சேர்த்து பின்னிருந்து இடையோடு அணைத்து கைகளை வருடி கொடுத்தான். பக்கவாட்டு நெற்றியில் இதழால் அழுத்தி முத்தமிட்டான். சற்று அமைதியாகும் வரை அதையே திருப்பி திருப்பி செய்தவன் "ஸ்ரீனி...." மெல்ல அழைத்தான்.
"ஹ்ம்ம்..." அரை மயக்கத்தில் முனகினாள். போட்ட மருந்தின் வீரியம் இன்னும் குறைந்திருக்கவில்லை.
“ஸ்ரீனி....”
"ஹ்ம்ம்..."
"கேரளாவில் என் பக்கத்தில் தானே உறங்கினாய் ஞாபகம் இருக்கா?" குனிந்து பார்த்து கேட்க மென்மையாய் புன்னகைத்தாள். அவளை பொறுத்த மட்டில் அழகான நாட்கள் அவை. அவன் தன்னிடம் கோபப்படாமல்...... நினைத்தாலே இதழில் புன்னகை தானே வந்து ஒட்டிக்கொண்டது.
"கேரளாவில் என்னுடன் தானே இருந்தாய். நான் உன்னை எதுவும் சொன்னேனா இல்லை தானே. இனிமேல் எதுவும் சொல்ல மாட்டேன் சரியா?" ஒரு கணம் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள் மறுபடியும் குனிந்து கொண்டவள் உடலில் மெல்லிய நடுக்கம் ஓட இன்னும் இறுக்கமாய் அணைத்தான்.
"ஸ்ரீனிம்மா...."
"ம்ம்ம்ம்...."
"மழை பெய்யும் போல் இருக்கு நாம் உள்ளே போவோம் என்னடா" குழந்தையிடம் பேசுவது போல் பேசினான்.
"உனக்கும் மழை பயம் தானே... உள்ளே நிலாவும் தீப்பும் தனியா இருப்பாங்க இல்லையா? ஏற்கனவே உனக்கு என்னவோ என்று இருவரும் பயந்துவிட்டார்கள்" அவன் சொல்வதில் உள்ள உண்மை லேசாய் உறைக்க எழும்ப முயற்சித்தவளை தடுத்து கைகளில் தூக்கி கொண்டான். திடீரென தூக்க அதிர்ந்து கண் விரித்தவள் அவன் அசையது நிற்க குழப்பமாய் பார்த்தாள். கண்ணால் காட்டினான் 'கை' மெதுவாய் அவன் கழுத்தை சுற்றி போட்டவள் "எனக்கு நடக்க முடியும்" வாய்க்குள் முனகினாள்.
"உனக்குத்தான் இது பிடிக்குமே" குறும்பாய் கூறியவனை விழி விரித்து பார்த்தாள். நிச்சயமாய் போட்ட மாத்திரையின் விளைவு தான் இந்த ஹாலுஸ்ட்ரேஷன். தலை இன்னும் பாரமாய் இருக்கவே அவன் தோளில் தானாய் சாய்ந்து கொள்ள இடையில் அவன் பிடி இறுகியது.
பூவை போல் கட்டிலில் படுக்க வைத்து அருகே அமர்ந்து தலையை மடியில் வைத்து கேசம் கோதி கூறினான் "தூங்கு". அவன் மடியில் முகம் புரட்டியவள் எதையோ சொல்ல குனிந்து கேட்டான்.
"நல்ல கனவு" வாய்க்குள் முணுமுணுத்தவாறே ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல உடல் இறுக நிமிர்ந்தவன் மெத்தையில் சரியாய் படுக்க வைத்து கழுத்து வரை போர்த்தி குளிரூட்டியை அளவாய் விட்டவன் அறையை விட்டு வெளியேறினான்.
குழந்தைகளை தேடியவாறே கீழே இறங்கி வர இரு வண்டுகளும் சோபாவில் அமர்ந்திருக்க அவர்களை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்திருந்த கம்பனியன் அவர்களிடம் ஏதோ சொல்லி கொண்டிருந்தாள். இவனை கண்டதும் ஓடி வந்து "ஸ்ரீனிம்மா.." என்று கையை பிடித்தார்கள். அவர்கள் உயரத்திற்கு மண்டியிட்டவன் "ஸ்ரீனிமாவிற்கு காய்ச்சல் அதான் மருந்து போட்டு தூங்றாங்க" இருவர் பார்வையும் அவனை தாண்டி மேலேயே இருக்க "நீங்கள் இருவரும் மேலே போகலாம் ஆனா சத்தம் போட்டு டிஸ்டர்ப் செய்ய கூடாது சரியா?" என்றவனிடம் சமர்த்தாய் தலையாட்டி கலர் அடிக்கும் புத்தகம் கிரயன் கலர் சகிதமாய் காலை தாண்டி தாண்டி படியில் வைத்து மேலே சென்றார்கள்.
போர்டிகோவில் வந்து நின்ற காரிலிருந்து அவன் அப்பா அம்மா இறங்க வேகமாக அவர்களிடம் சென்றான் "மாம் டாட்" என்று அவன் அப்பாவை கட்டிக் கொண்டான். அவன் அணைப்பிலிருந்து வித்தியாசம் சட்டென புரிய "மை பாய்... யூ ஓகே" கேட்க "யா டாட் ஐம் பைன்" என்றவன் "பிரெஷ் ஆகி வாங்க சாப்பாடு தயார்" நேரம் ஒன்றை நெருங்கி கொண்டிருக்க அழைத்தான்.
"என்னடா சாப்பிட நீ கூப்பிடுறா என் மருமகள் எங்கே" யசோதா கேட்க "அவளுக்கு கொஞ்சம் பிவேர் அதான் உறங்குகிறாள்" ஏதோ யோசனையாய் பதிலளித்தான்.
"சரி குளித்து வந்து பார்க்கின்றேன்" என்றவர் "ஈவ்னிங் ஐந்து மணிக்கு நதியா வருகின்றாள் ட்ரைவரை அனுப்ப மறந்து விடாதே" சொல்லி சென்றவரை குழப்பமாய் ஏறிட்டவன் கேட்டான் "ஏன் ஏழாம் மாதம் தானே வளைகாப்பு"
"மாப்பிள்ளையின் அப்பாவுக்கும் இப்போது உடல் நிலை சரியில்லை, அதான் ஐந்தாம் மாதமே வா என்று நான்தான் சொன்னேன். வளைகாப்பு எல்லாம் இங்கேதான். சம்பந்தி அம்மாவிடமும் சொல்லிவிட்டேன். அவர்களுக்கும் கஷ்டம் தானே. வளைகாப்புக்கு நாள் குறித்து சொன்னால் மாப்பிள்ளை வருவார். முடிந்தால் சம்பந்தி அம்மாவும் வருவார்" அவனுக்கு பதில் கூறியவாறே உள்ளே செல்ல "என்னம்மா அவசரம்" ஆச்சரியத்துடன் விசாரித்தான் கௌதம்.
"குளித்து வந்து ஸ்ரீமாவை பார்க்க வேண்டும்" கதவை சாத்தி கொண்டார்.
சோபாவில் அமர்ந்து "என்னடா மகனே" தோளில் தட்டி விசாரித்த அப்பாவிடம் "நத்திங் டாட் ஐ மிஸ் யூ" என்று மடியில் படுத்து கொண்டான்.
அவரிடம் சொல்ல வேண்டும் ஆனால் எப்படி.
முப்பதை எட்டி பிடிக்க போகும் தன் மகன் சிறுவன் போல் தன் மடியில் படுத்திருப்பதை பார்த்தவர் புருவத்தை சுருக்கிப் பார்த்தவர் "கம்பனியில் ஏற்பட்ட விபத்து என்ன மாதிரி" அவனிடம் பேச்சு கொடுத்தார். "பெரிதாக நட்டமில்லை, ஒன் வீக் மேலதிக வேலை வேறு பிரச்சனை இல்லை" என்றவன் சிந்தனை இங்கே இல்லை.
யசோதா வெளியே வரவே ஒரு தரம் அழுத்தமாய் பார்த்துவிட்டு அவர் எழுந்து உள்ளே சென்றார்.
பெயருக்கு சாப்பிட்டு விட்டு வந்து சோபாவில் அமர்ந்தவர் பார்வையில் அவர் முன்னால் சென்று மண்டியிட்டவன் குனிந்த தலையுடன் கூறினான் "என்னை மன்னிச்சிடுங்க அப்பா உங்களுக்கு கொடுத்த சத்தியத்தை என்னால் காப்பற்ற முடியல"
"என்ன சத்தியம்....." குழப்பமாய் கேட்டவர் "ஸ்ரீ... ஸ்ரீமதி.... ஸ்ரீக்கு என்ன நடந்தது" குரல் கம்மியது ஏதோ நடந்திருக்கு இல்லையென்றால் இப்படி இடிந்து போய் இருக்க மட்டான்.
"தாத்தா ஸ்ரீமதி ஸ்ரீ என்றது ஒருவரை அல்ல இருவரும் வேறு வேறு நபர்கள்." கௌதம் சொல்ல சொல்ல பரபரப்பானவர் "அப்படியானால் அப்படியானால் ஸ்ரீ அவள் மகனா மகளா இப்போது எங்கே.... உனக்கு தெரியுமாடா....." ஆர்வம் பொங்க கேட்டவரை பார்த்து தலையசைத்தான்.
எங்கே இருக்கின்றாள். சீக்கிரம் வா போய் கூட்டி வரலாம்" எழுந்தே விட்டார். அசையாமல் இருந்தவன் "அந்த பெண்ணிற்கு உங்களை இந்த வீட்டை நன்றாகவே தெரியும்" என்ற மகனின் கூற்றிலும் அமைதியிலும் மீண்டும் அமர்ந்தவர் கேட்டார் "பின் ஏன் வரவில்லை".
"இல்லை அவர்கள் வந்தார்கள்"
"என்ன.." அதிர்ச்சியடைந்தவர் "கொஞ்சம் தெளிவாய் தான் சொல்லடா" சினந்தார்.
"பத்து வருடத்திற்கு முன்" என்றவன் அம்மாவை பார்த்து விட்டு "தியாவின் பதினாறாவது பிறந்த நாளின் போது" எதையோ சொல்ல தயங்கினான்.
"ஏன் என்னை வந்து சந்திக்கவில்லை. வீட்டினுள் யாரும் விடவில்லையா?" சற்று கன்றி போயிருந்த மகனின முகத்தைப் பார்த்தவர் சற்று சிந்திக்க யாசோதாவிற்கு புரிந்தது "அம்மா..." சிறு குரலில் மெல்லிய குன்றலுடன் கூறினார் யசோதா.
"அத்தையா... அத்தைக்கு இதில் என்ன சம்பந்தம்"
ஸ்ரீமதியின் வாழ்கையில் ராஜாராம் வந்தது பின் அவரை தேடி வந்து மித்திரன் இறந்து விட அவர்கள் கோகுல் ஷர்மாவிடம் இருந்து அசாமிலிருந்து தப்பி வந்தது. சாரதா உதவி செய்தது. பின் யசோதவின் அம்மாவுடன் பேசியது என அனைத்தையும் சொல்லி முடித்தான்.
"இப்போது அவள் எங்கே? நன்றாக இருக்கின்றாளா? பார்க்க வேண்டுமே" துடித்தவரிடம் "அவள் நன்றாகவே இருக்கின்றாள்... இருப்பாள்" புன்னகையுடன் அழுத்தமாய் கூற நிம்மதியாய் மூச்சு விட்டவர் "எங்கே..." ஆர்வமாய் கேட்டார்.
அதற்குள் "வள்ளி பாட்டி ஸ்ரீனிம்மாவுக்கு சாப்பாடு தாங்க" அதிகராமாய் வந்த தீப்பின் குரலுடன் "பூத்ட் ஸ்ரீமா பூத்ட் ...." என்ற மழலை குரலும் கேட்க இரு வாண்டுகளின் பின்னாலேயே அவர்களை தடுக்க முயன்றபடி த்ரி குவட்டர் அணிந்து ஸ்ரீனிகாவும் வந்தாள்.
"சுகமா மாமா? அத்தை பயணம் நன்றாக இருந்ததா?" மரியாதைக்கு இரு வார்தை விசாரித்து விட்டு அகன்ற மருமகளை பார்த்து லேசாய் புன்னகைத்து விட்டு மகனிடம் திரும்பினார். அவனோ அர்த்தம் நிறைந்த சிரிப்புடன் மனைவியை பார்த்திருக்க, அவன் பார்வையில் கண்ணை சுருக்கியவருக்கு பேரனின் 'ஸ்ரீனிம்மா' உறைக்க ஆச்சரியமும் சந்தோசமுமாய் மகனை கேள்வியாய் பார்த்தவருக்கு ஆமோதிப்பாய் தலையாட்டினான் கெளதம்.
"ஸ்ரீம்மா...." அழைத்தவர் சத்தம் தொண்டையை தாண்டி வெளியே வர மறுக்க கெளதமே அழைத்தான். "ஸ்ரீனி... அப்பா கூப்பிடுறார் பார்"
இரண்டு வண்டுகளும் அவள் மேல் ஏறி படுத்திருக்க உறக்கத்திலிருந்து எழுந்தவள் என்ன யோசித்தும் இங்கே எப்படி வந்தேன் என்பதே நினைவு வரவில்லை. கடைசியாக ஸ்ரீராமை சந்திக்க கௌதமுடன் சென்றதை தவிர வேறு எதுவும் நினைவுக்கு வர மறுத்தது. அவள் மண்டையை குடைந்தது கொண்டிருந்தது அந்த கேள்வி எப்படி அவன் அறைக்கு வந்தேன். யோசனையுடனே கீழே இறங்கி வந்தாள். இனி இவன் என்னவெல்லாம் சொல்வானோ? லேசாய் வியர்த்தது.
அப்போது தான் பார்த்தாள் அத்தை மாமா இருவரும் திரும்பி விட்டிருக்க அவர்கள் முன் ஹாலில் மண்டியிட்டு அமர்ந்திருந்தான் அவள் மணாளன். 'ஓ இது தான் காரணமா?' மூளை அவசரமாய் கண்டு பிடித்து சொன்னது 'அவர்கள் வருவதால் தப்பி தவறி நீ எங்கே என்று உன்னை பார்க்க வந்தாலும்... அதுதான் அவன் அறையில் படுக்க வைத்திருக்கின்றான், அவ்வளவு தான்' ஆறுதல் ஆயாசம் இரண்டும் வந்தது. ஆறுதல் அவன் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்க தேவையில்லை. ஆயாசம் இனி மீண்டும் கொஞ்ச நாட்கள் நாள் முழுதும் நடிப்பிலேயே கழியும் அவன் அருகே நெருங்கவும் முடியாது விலகவும் முடியாது. அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க என்ற குரல் போல் அதிகம் நெருங்காமல் அகலாமலும் இனி ஒவ்வெரு கணமும் கவனமாக இருக்க வேண்டும். உறங்கும் நேரம் கூட யாராவது வந்து ஏதாவது கேட்டு விடுவார்களோ என்ற பயம் எப்போதும் இருக்கும். வந்தது தான் வந்தார்கள் ஒரு மூன்று மாதம் கழித்து வந்திருக்க கூடாதா?
'அப்படியானால் நீ நிஜமாகவே போக போகின்றாயா?' மூளை கேட்க 'இங்கே இருப்பதற்கு என்ன இருக்கு' மனம் வெறுமையாய் கேட்டது.
தன் யோசனையில் மூழ்கி இருந்தவளுக்கு கணவனின் அழைப்பு கேட்கவில்லை. "ஸ்ரீம்மா..." கையை பிடித்து இழுத்து நிறுத்தினான் தீப் "சித்தப்பா கூப்பிடுறார்.."
"ஹ.." என்று திரும்பி "சாரி ஏதோ யோசனை சொல்லுங்கள்" என்றவளை யோசனையாய் பார்த்தவன் "நானில்லை அப்பாதான்" என்று கழன்று கொண்டான். என்ன திடிரென்று..... மனம் நினைக்க அவரை பார்த்தாள். அவர்கள் அனைவரிடமும் ஓரடி தள்ளி நின்றே பழகி விட்டிருந்தாள். தயக்கத்துடன் நிற்க அவருக்கோ உணர்ச்சி பெருக்கில் அசைய கூட முடியவில்லை. இத்தனை நாளாக தேடிய பெண் கண் முன்னே.
இருவரின் நிலை புரிந்த கெளதம் எழுந்து ஸ்ரீனிகாவின் தோளை பிடித்து அழைத்து வந்து தந்தை முன் தானும் மண்டியிட்டு அவளையும் இருத்தினான். அவன் பிடியில் லேசாய் நெளிந்தாள். இங்கே அம்மா அப்பாவின் முன் இப்படி நடப்பான் பின் உள்ளே வந்து சாமியாடுவான் திருதிருவென விழித்தாள்.
கண்ணில் மெல்லிய நீர் படலத்துடன் அவளை பார்த்து தலையை தடவி அவள் கைகளை தன் கையில் எடுத்து கொண்டவர் அவள் முகத்தையே இமைக்காது பார்த்து ஸ்ரீமதியின் சாயலை அவளிடம் தேடினார். கடவுள் ஸ்ரீமதியின் மகளுக்கு ராஜராமின் சாயலை கொடுக்கவில்லை. நீ செய்த பாவத்தை மறக்க கூடாது என்று ராஜாராமின் மகளுக்கு ஸ்ரீமதியின் சாயலை கொடுத்திருக்க இத்தனை நாள் பார்க்க மறந்த ஸ்ரீமதியின் முகம் தெரிய "என்னை மன்னிச்சிருடாம்மா.... கண் முன் இருந்தவளை சரியாக கவனி்காமல் இருந்து விட்டேனே" சட்டென உடைந்து அழ தன்னை விட வயதில் மூத்தவர் அப்படி மன்னிப்பு கேட்டு அழுவதை பார்க்க ஸ்ரீனிகாவிற்கு ஏதோ போல் இருந்தது. அதோடு பக்கத்தில் இருப்பவன் எப்போது முருங்கை மரம் ஏறுவான் என்றும் தெரியாது. சற்று பயத்துடனேயே கௌதமை திரும்பிப் பார்த்தாள்.
மன்னிப்பு கேட்பது தன் மாமா என்பதை விட அவனது அப்பா என்பதே நினைவில் நிற்க "வயதில் பெரியவர் என்னிடம் போய்.... பிளீஸ்..," கவனமாக மாமா சொல்வதை தவிர்த்து விட்டிருந்தாள். பின் மீண்டும் அவனிடம் யார் வண்டி வண்டியாக வேண்டி கட்டுவது. அன்றே தையதக்க என்று குதித்தான். எதற்கு வீண் வம்பு. கஷ்டபட்டு உதட்டை இழுத்து பிடித்து புன்னகைத்து அங்கிருந்து போக எழுந்தவளை நிறுத்தியது அவரது குரல். “ஸ்ரீம்மா...”
தன்னுடன் அருகே அமர்ந்திருந்த கெளதமின் சட்டையின் கையை இறுக கொத்தாய் பற்றிக் கொண்டாள். ஸ்ரீனிகா அசோகனை பார்த்த முதல் நாளிலேயே கவர்ந்த விடயம் அவர் பெரிதும் தன் தாத்தா மித்திரனை போல் இருந்தது தான். தோற்றத்திலும் சரி செயலிலும் சரி. இப்போது தாத்தா தன்னை சிறுவயதில் அழைப்பது போல் ஸ்ரீம்மா என்று அழைக்க கட்டு மீற துடித்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருந்தாள்.
"நான் யார் என்று தெரியுமா?" கேட்டவருக்கு பதிலாய் மண்டையை உருட்டியவள் அருகே இருந்த கௌதமை காட்டி "இவரின் அப்பா" என்றாள்.
அவர் மீண்டும் கேட்டார் "உன் அம்மாவிற்கு நான் யார்?"
வெடுக்கென்று திரும்பியதில் கழுத்து லேசாய் வலிக்க அதிர்ந்து போய் அவரைப் பார்த்தாள். அம்மா பற்றி இவருக்கு எப்படி......
"சொல்லுமா..." புன்னகையுடன் ஊக்கினார். அப்போதும் அவள் அமைதியாய் இருக்கவே தொலைபேசியில் சேகரித்து வைத்திருந்த சில படங்களை எடுத்து அவளிடம் காட்ட அனைத்தும் அன்னையும் அவருமாய் சேர்ந்து நின்று எடுத்தது. சிலதில் தாத்தா இருவரும் கூட நின்றார்கள். தன் பதினாறு வயது அன்னை முகத்தில் சந்தோசமும் சிரிப்புமாய் நின்ற படங்களில் இருந்து கண்ணை எடுக்க முடியவில்லை. இப்படி தானே சந்தோசமாய் அவரை பார்த்து கொள்ள நினைத்தாள். சந்தோசம் தூக்கம் இரண்டும் பொங்கி வர ஒரு கைகயால் வாயை மூடி இரண்டையும் அடக்கியவள் கண்ணிலிருந்து சில துளி கண்ணீர் போனில் சிந்தியது. அருகே இருந்த கெளதம் ஆறுதலாய் அவள் தோளை சுற்றி கையை போட்டான்.
மண்டியிட்டு தன் முன் தலை குனிந்து அமர்ந்து இருந்தவளை பார்த்து "நிமிர்ந்து என்னை பார்" என்றார்.
கண்ணை மட்டும் உயர்த்தி பார்க்க "இப்போது சொல்லம்மா உன் அம்மாவுக்கு நான் யார்?"
"அ அ அண்ணா...."
"உனக்கு.......?"
மீண்டும் கண்களை தழைத்து கொண்டவள் "ம....மா... மாமா" தடுமாறினாள்.
நெற்றியில் முத்தமிட்டு, அணைத்து தோளை பிடித்து தூக்கி அருகே அமர்த்தியவர் செல்லமாய் வலிக்காமல் கன்னத்தில் அடித்தார் "ஏன் சொல்லவில்லை உன் அம்மா கௌதமின் அத்தை என்பது அவனைப் பார்த்த நாள் முதலே தெரியும் தானே" தந்தையின் கேள்வியில் தலையை குனிந்தவாறே தெரியும் என்பதைப் போல் தலையாட்டிய மனைவியை அதிர்ந்து போய் வெறித்து பார்த்தான் கெளதம்.
என்னை பார்த்த அன்றே தெரியுமா? அவர்கள் என் அத்தை என்பது இவளுக்கு ஏற்கனவே தெரியுமா? தெரிந்தும் ஒரு வார்தை சொல்லவில்லை. என்ன ஒரு நெஞ்சழுத்தம். அவன் மனசாட்சியோ ‘அப்படியே அவள் சொல்லியிருந்தாலும் நீ நம்பிவிடுவாய்’ என்றது. ஆனாலும் அவனால் ஏற்றுக் கொள்ள தான் முடியவில்லை.
கெளதம் கண்ணில் அதிர்ச்சி, கோபம், இயலாமை வலி என்று கலவையாய் பல்வேறு உணர்ச்சிகள் வெளிப்பட்டு வலி மட்டுமே மிஞ்சியிருக்க அவளை பார்த்தான். தெரிந்திருந்தும் அவர் மரணத்தை பற்றி கூட ஒரு வார்தை.... என்னை வெறுத்தே விட்டாளா? கேரளாவில் இருக்கும் போது ஏதோ கொஞ்சமாய் நெருங்கி வந்தது கூட இங்கே வந்த பின் இல்லாமால் போய்விட்டது போல் இருந்தது. அந்த புயல் மழையில் அவளுடன் இருந்த அந்த கணங்களுக்காய் ஏங்கினான்.
மகனின் கண்ணில் தென்பட்ட வலியை இனங் கண்ட யசோதா "ஏனம்மா எங்களிடம் சொல்லவில்லை" பரிவுடன் கேட்டார்.
"அ அ அது.." என்று விழித்தவள் கணவனை பார்த்தாள். அவன் முகமோ வலியை காட்டாதிருக்க செய்த முயற்சியில் உணர்ச்சியற்று இருந்தது. அவள் இதை பற்றி பேசுவது பிடிக்கமால் தான் அப்படி இருக்கின்றான் என்று நினைத்தவளாய் "அ…அது உங்களுக்கு என்னையும் அம்மாவையும் பிபிடிக்கவில்லை என்று நி..நினைத்தேன்" தடுமாறினாள். "அதோட நான் இங்கே வாரத்துக்கு ஒன்றரை வருடத்திற்கு முன் நடந்த விபத்தொன்றில் அவங்களும் கோமாவில் இருந்தார்கள். விபத்தில் தலையில் அடி பட்டதில் நரம்பு நிறைய சிதைஞ்சு....... பிழைக்க முடி...... சொல்லிட்டாங்க... அதற்கு மேல்.... உங்களிடம் சொல்லி.... உங்களுக்கும் கஷ்டம் தானே..." எப்படியோ சொல்லி முடித்தாள்.
கௌதம் இன்னமும் திகைத்து போனான். அந்த டிடெக்ட்டிவ் இந்த விடயங்கள் எதையுமே கூறவில்லை. அப்படியானால் அன்று முதல் முறை சந்தித்த போது மருத்துவமனை சென்றது. பின்னர் கல்யாணத்தின் போது.... இல்லையே அன்று அவள் அழைத்தாளே நான்தான் மறுத்துவிட்டேனே. தவிப்பு அடங்க மறுத்தது. கௌதமிற்கு எதற்கு யார் மீது என்றே தெரியாமல் சினம் வந்தது.
பெரியவர்கள் இருவரும் எதையோ சிந்தித்தவர்கள் "கோமாவில் இருந்தார்கள்... என்றால் இப்போது..." ஒன்று போல் கேட்டு கௌதம் முகத்தை பார்க்க, கடித்த பற்களினிடையே "உங்கள் மருமகள் தான் தன் கையாலேயே கொள்ளி வைத்தாள் அவளையே கேளுங்கள்" என்றவன் வேகமாக அங்கிருந்து சென்றிருந்தான்.
போனவனையே பரிதாபமாய் பார்த்திருந்தாள் ஸ்ரீனிகா. மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டதோ. அன்று மழையில் நின்றது போல் இங்கும் எதையாவது சாதிப்பானோ!
ஏதோ சொல்ல திரும்பியவள் அதிர்ந்து போயிருந்த பெரியவர்களின் முகத்தை பார்த்து "அன்று நீங்கள் பாரிஸ் போக ரெடியாகி கொண்டிருந்தீர்கள்.... அவருக்கும் இத்தனை நாள் கஷ்டப்பட்டு உழைத்த அந்த கார் டீலர்ஸ் தொடர்பான இறுதி மீட்டிங் இருந்தது" குனிந்து இறுக கோர்த்திருந்த தன் கரத்தை பார்த்து கொண்டே "அம்மா நிலை.... கிட்டத்தட்ட பதினெட்டு மாதத்திற்கும் மேல் கோமாவிலும் துன்பப்பட்ட உடல்...."
மீதியை சொல்லாமல் விட அது புரிந்தாலும் "அதற்கு எவ்வளவு பெரிய விடயம் அதை இப்படியா சொல்லாமல் விடுவாய், உறவுகளை விட பாரிஸா முக்கியம்" மென்மையாய் கடிந்து கொண்ட அத்தையை பார்த்து லேசாய் சிரித்து "அது தனியாக அப்படியே பழகிவிட்டது" சாதாரணாமாய் கூறினாள்.
அவர்களும் உறவாய் நாங்கள் இருக்கின்றோம் என்ற ஒரு ஆதரவை எப்போதுமே கொடுக்கவில்லையே. வந்த புதிதில் அவளும் தான் இரண்டு மூன்று தரம் சொல்வதற்கு முயன்றாள். என்ன யாரும் கேட்கவில்லை. பின்... நடந்த விடயங்கள்.... பெருமூச்சென்றை சத்தமின்றி விட்டாள்.
பூஸ்டுடன் வந்த நிலா அவள் சோர்ந்த முகத்தைப் பார்த்து மடி மீது ஏறி அமர்ந்து நெற்றியில் முத்தமிட்டு "தலைவாழை போச்" என்றாள் (தலைவலி போயிரும்) மழலையில். முகத்தில் பிஞ்சு கைகளால் தட்டி "பூத்ட் குதிங்க" என்று தீப்பின் கையிலிருந்து வாங்கி கொடுக்க மறுக்காமல் குடித்தவள் கண்கள் கணவன் சென்ற வாசல் படியையே பார்த்து கொண்டிருந்தது.
பரிவுடன் தலையை வருடிய யசோதா "போம்மா... போய் சமாதானப்படுத்து" என்றார். அவரும் மகனை பார்த்து கொண்டே தானே இருந்தார். அவன் கண்ணில் தென்பட்ட வலி, இயலாமை கலந்த கோபம். அத்தனைக்கும் மேல் கல்யாணம் என்றாலே காத தூரம் ஓடியவன் பார்த்த ஒரு வாரத்திலேயே மணந்த பெண் இவள் தானே. ஆனாலும் இருவருக்கும் நடுவில் ஏதோ திரை தொங்குவது போலவே ஓர் உணர்வு அவருக்கு. கணவன் மனைவிக்குரிய நெருக்கம் இல்லையோ. இல்லாவிட்டால் இப்படி ஒரு நிலையில் கணவன் தோள் தானே மனைவி தேடும் முதலிடம். கணவனை சமாதானப்படுத்த சென்றவளையே பார்த்திருந்தார் யசோதா.
பெரியவர்கள் இருவரும் யோசனையுடன் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்.
வெளியே தோட்டத்தில் இருந்த ஊஞ்சலில் கைகள் இரண்டையும். நீட்டி, நன்றாக சாய்ந்து அமர்ந்து ஆகாயத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்தான். அவனை அப்படி பார்க்கவே இதயம் துடிக்கும் வேகத்தில் எங்கே வெளியே வந்து விடுமோ என்று பயந்தவள் மெதுவாய் அவன் அருகே அமர்ந்தாள்.
"கௌதம்..." பயம் நிறைந்த அவள் குரலை கேட்டதும் அவன் கோபமெல்லாம் போன வழி தெரியவில்லை அனைவருமே அப்பா அம்மாவையும் சேர்த்து கிருஷ்ணா அல்லது ஜிகே என்று அழைக்க அவள் மட்டும் எப்போதுமே 'கௌதம்' தான்.
"ஹ்ம்ம்....."
கையை பின்னுக்கு காட்டி "உங்கள் அப்பாவிடம்....." என்று தொடங்கியவள் அவன் கண்ணில் தென்பட்ட உக்கிரத்தில் பாதியில் நிறுத்தினாள்.
"இல்ல இப்போது சொல்லி என்ன பயன்..... விட்டு போகும்.... சரி உங்கள் விருப்பம்"
"ஏன் சொல்லவில்லை?"
தன்னை பார்த்து விழித்தவளிடம் "கேரளாவில் இருந்த போது அத்தையை பற்றி என்னிடம் ஏன் சொல்லவில்லை" கேட்டான்.
"அது...." அவனிடம் அனைத்தும் சொல்லி ஆறுதல் தேடத்தான் நினைத்தாள் ஆனால்...... அன்றைய இரவின் பின்னர் அவனின் பேச்சும் உதறலும் பின் அந்த மெயில்... எதுவும் பேசாமல் கைகளையே பார்த்தவளை ஆயாசமாய் பார்த்தான். "ஸ்ரீனி....." அழுத்தமாய் அழைத்து "நிமிர்ந்து என்னை பார்" என்றான்.
தன்னை ஏறிட்டவள் கண்களை ஆழ்ந்து பார்த்துக் கேட்டான் "என்னிடம் ஏதாவது சொல்ல வேண்டுமா?"
அவள் குழப்பத்துடன் பார்க்க "இன்னும் மிச்சம் மீதி ஏதாவது இருக்கா?" கேட்டான்.
மீண்டும் பேச்சின்றி குனிந்து கொள்ள சத்தமின்றி பெருமூச்சை வெளியிட்டவன் சட்டென அவள் மடியில் தலை வைத்துப் படுத்தான். இப்போது அவள் முகம் நன்றாகவே தெரிய இமை வெட்டாது சில நொடிகள் பார்த்து கேட்டான் "எனக்கு கேரளாவில் இருந்த ஸ்ரீனிகா வேணும் அவள் எங்கே?"
அவன் திடிரென அப்படி கேட்டதில் திகைத்து போய் பார்த்தவள் மீன் குஞ்சாய் வாயை திறந்து மூடினாள். அவள் ஒரு கையை எடுத்து தன் தலையில் வைத்து "கோதிவிடு" என்றவன் மறு கையை நெஞ்சோடு சேர்த்து அழுத்தி தவிப்புடன் கேட்டான் "என் மீது வெறுப்பாய் இருக்குதா? என்னை விட்டுப் போய் விடுவாயா?".
அத்தனை நேரம் ஒரு வித திகைப்பில் ஆழ்ந்திருந்தவள் அவன் அமைதியின்றி தவிப்பதை அதற்கு மேல் பார்க்க முடியாமல் இல்லை என்று தலையாட்டியவள் மெதுவே பாட தொடங்கினாள்.
வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான
துணைவி அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
செஞ்சமெனும் வீ....
சற்று குனிந்து அவன் முகம் பார்த்து தலை கோதியபடி அழகாய் கம்பீரமாய் ஆலாபனை செய்து கொண்டிருந்த அவள் குரல் சட்டென நின்றுவிட்டிருந்தது.
அவள் பாட தொடங்கியதுமே மனதிலும் உடலிலும் இருந்த ஏதோ ஒரு தவிப்பு அடங்கி விட கண் மூடி லயித்தவனின் விழியோரம் ஒரு துளி உருண்டோட சட்டென அவள் வயிற்றில் முகத்தைப் புதைத்திருந்தான்.
இடையை சுற்றி இறுக்கி பிடித்த பிடியோடு நிமிடங்கள் கடந்தும் அசையாது இருந்தவனை எப்படி கலைப்பது என்று புரியாமல் கேசத்தை தன் நீண்ட விரல்களால் கோதி கொடுக்க நிமிர்ந்தவனின் நெற்றியில் பட்டு தெறித்தது ஒரு மழைத்துளி. சடசடவென பெருந் துளிகளாய் விழ அவனையும் இழுத்து கொண்டு அவள் வீணை வாசிக்கும் அந்த சிறு மண்டபத்தை நோக்கி ஓடினாள். அவன் தலையில் கைவைத்தவாறே. உள்ளே போவதற்குள் நனைந்து விட்டிருந்தார்கள்
உள்ளே சென்றதும் அவசரமாய் கேட்டாள் "தூவாலா உண்டானு" அவள் முகத்தில் மழைத்துளிகள் முத்துக்களாய் கூடாரமிட்டிருப்பதை ரசனையுடன் பார்த்தவாறே "ஆஹ்... என்றவனுக்கு பதிலாய் "கைக்குட்டை" என்றவளுக்கு பார்வை மாறாமல் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தான்.
துடைக்க கை எடுக்க தடுத்தான் "துடைக்காதே அழகாய் இருக்கிறது" முட்டை கண்ணால் முறைத்தவள் "ஜலதோஷம் பிடிக்குக? கொஞ்சம் குனியுங்கோவேன்" அவன் உயரத்திற்கு எட்ட முடியாமல் எம்பினாள்.
அவனுக்கோ அவளின் அக்கறை இத்தனை நேர வேதனைக்கு மருந்திட்டத்தை போல் இருக்க பாக்கெட்டில் கை நுழைத்து தூணில் சாய்ந்து அண்ணாந்து மழையின் சாரலுடன் தன் மார்பின் அருகே எம்பி கொண்டிருந்த அவளையும் கீழ்க்கண்ணால் ரசித்தான்.
"இது எந்தா சாடியம்.... கொஞ்சம் குனியுங்களேன்" அவனோ அவள் மலையாள வடை கலந்த தமிழில் கண் மூடி லயித்திருந்தான். இங்கே வந்த பின் எப்போதாவது டென்ஷன் ஆகும் போது தான் மலையாள வடை வரும்.
கவலையுடன் மழையையும் அவனையும் பார்த்தவள் "அன்னத்தே போலே பனி வந்தில்லா"
கண் திறக்கமால் சொன்னான் "வரட்டும்.."
"வரட்டுமா.. ஜுரம் வராதில் அக்கரகமா? எந்த பறையனு"
"அப்பத்தான் நீ என் பக்கத்திலேயே இருப்பாய் விட்டுட்டு போகமாட்டாய்" சற்று குனிந்து கண் பார்த்து கூற ஒரு கணம் வாயடைத்து நின்றவள் சட்டென தலையை பற்றி ஈரத்தை துவட்டினாள். அவன் முரண்டு பிடித்து விலக முயலவே ஒரு அதட்டு போட்டாள் "சேட்டா..."
பிரீஸ் பாய் விளையாடும் சிறுவனாய் அசைவின்றி நின்ற கெளதம் கண்களில் ஏதேதோ உணர்ச்சி பொங்க கேட்டான் "எப்படி கூப்பிட்டாய்?"
அவன் கேட்ட பின்னரே அவனை அழைத்த முறை உறைக்க ஒரு கண் மூடி விரல் கடித்தவள் சட்டென திரும்பி நின்றாள். பான்ட் பாக்கெட்டில் கை விட்டு சற்று அசைந்தால் முட்டி விடும் தூரத்தில் பின்னால் நெருங்கி நின்றவன் அவள் காதில் ஆடிய சிறிய தொங்கட்டானை ஊதிவிட்டான். அவள் கழுத்தில் உள்ள முடிகால்கள் சிலிர்த்தது அவன் பார்வைக்கு தெரிய சிறு முறுவலுடன் மீண்டும் கேட்டான் "எப்படி கூப்பிட்டாய்?"
அவனிடமிருந்து விலகி நின்று "அ.. அ அது சேட்டை பண்றீங்க என்று சொன்னேன்" எப்படியே சமாளிப்பதற்குள் முகம் முழுவதும் சிவந்திருந்தது.
"ஹ்ம்கூம்...." அந்த ஒற்றை சொல்லில் இன்னும் சிவந்தவள் "போகலாம்" முனகியவாறே செல்ல முயன்றவள் இடையை பின்னிருந்து பிடித்து நிறுத்தியவன் காதினுள் கூறினான் "ஒன்று மீண்டும் கூப்பிடு இல்லை இங்கே ஒன்று வேண்டும்" காதினுள் வெப்பமாய் கிசுகிசுத்த குரலின் வெப்பம் அந்த குளிரிலும் அவளை உருக்கியது. அவன் ஒரு விரல் மெதுவே அவள் உதடுகளை வருடியது.
"எ என்ன செய்யுறீங்க..."
"ம்ம் சேட்டை.." சொன்னவன் குரல் சிரித்தது.
ஆவென பார்த்தவளுக்கு பதிலாக ஒரு விரலால் கன்னத்தில் கோலமிட்டவன் "நீதானே சொன்ன நான் சேட்டை பண்றேன் என்று" குறும்பு நிறைந்த விழிகளுடன் பதிலளித்தவனை வேற்று கிரகவாசி போல் பார்த்து வைத்தாள்.
சுற்றிலும் அடை மழை பொழிய அடித்த சாரலில இல்லை அவன் நெருக்கத்தில என புரியாமல் உடல் நடுங்க அவனிடமிருந்து விலகினாள் ஸ்ரீனிகா. அவள் மணிக்கட்டை பற்றி நிறுத்தியவன் அவள் உள்ளங்கையில் அழுத்தமாய் ஓர் ஈர முத்தம் ஈந்தான். அனலாய் கொதித்த உதடுகளை உள்ளங்கையில் உணர்ந்தவள் குழப்பத்துடன் பார்த்தாள். ஜூரமா இல்லை...
'என்ன' கண்களால் கேட்க "போகலாம்" கெஞ்சினால் போல் கேட்டாள்.
குனிந்து கேட்டான் "கேட்கல..." பரிதாபமாய் நிமிர்ந்து பார்க்க உதட்டை பிதுக்கி தலையாட்டினான் வேற வழியே இல்லை என்பது போல்.
"சேட்டா..." சற்று சத்தமாய் சொல்ல கன்னம் பிடித்து கண் பார்த்தவனின் கண்ணில் இருந்த உணர்ச்சி அவளை ஏதேதோ செய்தது. அன்று இரவும் மெல்லிய சார்ஜெர் லைட்டின் வெளிச்சத்தில் இப்படித்தான் பார்த்தான். அவன் பார்வை இதுவரை இனம் புரியாத உணர்ச்சியை அறிமுகம் செய்ய விலகப் பார்த்து முடியாமல் அவன் மார்பிலேயே முகத்தை மறைத்து கொண்டாள். அவள் கைகளை எடுத்து தன் இடுப்பை சுற்றிப் போட்டவன் தலையை இருபுறமும் தாங்கி உச்சியில் முத்தமிட்டு சொன்னான் "சாரி..."
"ஆஹ்" நிமிர்ந்து பார்க்க மயக்கண்ணனாய் புன்னகைத்தவன் "இல்ல உனக்கு மழை பயம் இல்ல..." விசாரிக்கவே "இப்ப பயமில்லை" பதிலளித்தாள்.
"ம்ம் அப்படியானால் போகலாம்..." என்றான்.
ஒரு அடி எடுத்து வைத்தவள் அவன் அசையாமல் நிற்பதை பார்த்து "நீங்க வரல" கேட்கவே கைகளை போக்கெட்டினுள் விட்டவன் தோளை தூணில் சாய்ந்து ஒரு காலை கண்ணனைப் போல் மடித்து தோளை குலுக்கியவாறே குரலில் மெல்லிய ராகத்துடன் சொன்னான் "நீதானே போகணும் என்றாய்.. போ"
"நீங்க வரல"
"இல்ல... எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே நிற்கனும் போல இருக்கு" உதட்டினுள் ஒளித்து வைத்த சிரிப்புடன் கண்ணை மூடி மழை சாரலை உள்வாங்கினான்.
"எவ்வளவு நேரம் ஜுரம் வந்தால்...."
"தெரியல.. அது வராது... நீ போகல" அவன் கேள்விக்கு உதட்டை சுழித்தவள் அப்படியே முழங்காலைக் கட்டிக் கொண்டு அமர்ந்தாள். கண் திறந்து அவளை பார்த்தவன் கீழே இறங்கி செல்லும் படியில் அமர்ந்து கை நீட்டி அழைத்தான் "ஸ்ரீனி..."
ஆர்வத்துடன் அருகே வந்தவள் கேட்டாள் "போவோமா...?"
"என்ன அவசரம் இரு" அவனுக்கு கீழே இருந்த படியை காட்ட உதட்டை சுழித்தாள் "அங்கே மழை "
'நான் இருக்கின்றேன்' என்பது போல் கண்களையே பார்க்க சிறிது தயங்கினாலும் வந்து அமர்ந்தாள். அவளை அருகே இழுத்து நெஞ்சுக்குள் தாய் பறவையாய் அடைகாத்து கொள்ள அவன் முழங்காலில் கன்னம் வைத்து மழையை பார்த்தவள் உடலில் மெல்லிய நடுக்கம் ஓட "ஷ்... நான் இருக்கின்றேன்" முதுகை வருடி கூறினான். வசந்த் சொன்னது ஞாபகத்தில் வந்தது 'அவர்கள் வாழ்கையில் நடந்த சில சம்பவங்கள் அம்மாவிற்கும் மகளுக்கும் மட்டும் தான் தெரியும். இப்போதைக்கு அவற்றை உங்கள் மிஸஸ் வாயிலாக மட்டும் தான் அறிந்து கொள்ள முடியும்' அதோடு அவனுக்கும் புரிந்தது ஏதோ ஒரு விதத்தில் அவளின் கடந்த காலத்திற்கு மழையோடு சம்பந்தம் உண்டு. அது நல்ல விதத்தில் இருக்க வாய்ப்பில்லை.
"ஸ்ரீனி....."
"ஹ்ம்ம்"
"உனக்கு ஏன் மழை பயம்"
அந்த கேள்வியிலேயே அவள் உடலில் நடுக்கம் ஓடியது "ஷ்... தைரியமாய் இருக்கணும் பக்கத்தில் தானே இருக்கின்றேன்" முதுகை வருடி தட்டி கொடுத்தான். இந்த பயத்தின் காரணத்தை அவளாக சொன்னால் தான் உண்டு. "ம்... சொல்லும்மா"
"அது அம்மாவும் நானும் கோகுல் மாமாவிடமிருந்து தப்பி வரும் போது" ஆரம்பித்தவள் இடையில் நிறுத்தி "உங்களுக்கு கோகுல் மாமாவை தெரியுமா?" விசாரித்தாள்.
"ம்ம் தெரியும் மேலே சொல்லு" உணர்ச்சியற்ற குரலில் ஊக்கினான்.
"அவரிடமிருந்து தப்பி வரும் போது, எங்களை பிடித்துவிட்டார் என்னை கூட்டி போய் அந்த பைத்தியக்காரனிடம்...." உடல் தூக்கிவாரிப் போட இப்போதும் நடுங்கினாள். "ஷ் அது நடந்து முடிந்தது இப்போது இல்லை நடந்து முடிந்த ஒன்றிற்கு பயப்படுவார்களா? ஹ்ம்ம்" முழங்காலில் கன்னம் சாய்த்து இருந்தவளை திருப்பி நெஞ்சுக்குள் பொதிந்து கொள்ள அவன் உடலின் மெல்லிய கதகதப்பு அவளுக்கு இதமாய் இருக்க இத்தனை காலம் சொல்வதற்கு ஆளின்றி மனதில் அடைத்திருந்த அத்தனையும் வெளி வரத் தொடங்கியது.
எத்தனை துன்பங்களை கடந்து வந்து விட்டார்கள் அம்மாவும் மகளும். பத்து வயதில் தாத்தா மித்திரன் இறந்து விட்டார் என்ற செய்தி கிடைத்த போது மட்டுமே அவள் அம்மா கலங்கி நின்று பார்த்தாள். அதன் பின்பு வந்த அனைத்து பிரச்சனைகளையும் கன் போல் நின்று கண்ணுக்குள் வைத்து காத்தர்.
தாத்தா இறந்தது மூன்று வருடங்களின் பின்னரே அவரது உயிலை கண்டு பிடித்து வாசித்த போது அனைத்து சொத்துகளையும் ஸ்ரீனிகா பெயரில் எழுதி வைத்திருந்தார். இதை அறிந்த அப்போது எம்பியாக இருந்த ஸ்ரீமதியின் அம்மா வழி சகோதரனான கோகுல் ஷர்மா தனது மனநிலை குன்றிய இருபத்தி ஐந்து வயது மகனுக்கு பதின்மூன்றே வயதான ஸ்ரீனிகாவை மணமுடிக்க முயற்சி செய்தார். மனநிலை பாதிப்பு என்றால் சாதாரணமாக இல்லை கையில் கிடைக்கும் பொம்மைகளை தனித்தனியாக உடைத்து எறிவான். மனநிலை காப்பகத்தில் சங்கிலி போட்டு கட்டி வைக்க வேண்டிய நிலை. ஆனால் வீட்டில் வைத்து பார்த்து கொண்டார்.
அவரது பதவியும் பணமும் சட்டத்தையும் பொலிசையும் விலைக்கு வாங்கி விட்டிருக்க எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தார் ஸ்ரீமதி. இரவோடு இரவாக மகள் படித்துக் கொண்டிருந்த ஹாஸ்டலுக்கு வந்து அங்கிருந்து அவளை அழைத்துக் கொண்டு தப்பி வரும் வழியில் கோகுல் ஷர்மாவின் அடியாட்களிடம் மாட்டிக் கொண்டார்.
"அந்த கோகுல் சர்மா என்னை பிடித்து அவன் மகனிடம் நீ விளையாட பொம்மை என்று கொடுத்துவிட்டான். அவன் சில நேரம் அமைதியாய் இருப்பான் சில நேரம் ரொம்ப வயலண்ட நடப்பான். கிட்டத்தட்ட ஒரு நாள் முழுதும் அவனுடன் இருந்தேன்" அவள் சொல்ல சொல்ல உடல் எஃகாய் இறுக இப்போது மட்டும் அவர்களில் ஒருவர் கையில் கிடைத்தாலும் கொன்று விடும் வெறியில் இருந்தவன் ஒரு கையை முஷ்டியாக்கி சமாளித்தான்.
"முதலில் சாதாரணமாக தான் என்னுடன் விளையாடினான். தீடிரென்று இடிஇடித்து மழை பெய்ய தொடங்கவும் எல்லாத்தையும் போட்டு உடைக்க தொடங்கிட்டான். பிறகு என்னையும் அடிக்க வந்தான். அவன் இருந்தது மாடியில் உள்ள அறை, அந்த அறை பூட்டி இருந்தது. நான் ஓடி வந்து பல்கனியில் நின்றுவிட்டேன். அவனை சங்கிலி போட்டு கட்டியிருந்தார்கள் அதனால அவனால வெளிய வர முடியல ஆ.. ஆனா எனக்கு ஓரடி தூரத்தில நின்று என்னை பிடிக்க ட்ரை பண்ணான். மழை அடிச்சு பெய்து கொண்டிருந்தது. மேலெல்லாம் ஊசி போட்ட மாதிரி குத்திச்சு ஆனா உள்ளே போக முடியல அவன் குறுக்... குறுக்...கே நின்றான்" அதற்கு மேல் சொல்ல முடியாமல் விக்கவே தன் கன்னத்தில் வழிந்த சூடான கண்ணீரை அவளறியாது மறைத்தவன் "பிறகு எப்படி தப்பி வந்தாய்?" விசாரித்தான். நடந்ததை அறிந்தே ஆக வேண்டும். அவள் மனதில் அடைத்திருக்கும் அனைத்தும் வெளியே வந்தே ஆக வேண்டும்.
"வி..விடியும் வரை அப்படியே மு..முழங்காலை கட்டிக் கொண்டு இருந்துவிட்டேன். அதுவரை என்னை உள்ளே வர சொல்லி மிரட்டி உள்ளே உள்ள பொருளை எல்லாம் போட்டு உடைத்து... அவனுக்கு காயம் வேற... மழை நின்று வெளிச்சம் வந்த நேரம் அவன் மயங்கி விழுந்திட்டான். அவன் செய்த அட்டகாசத்தில் எப்படியோ கதவு திறந்து கொண்டது. நான் அந்த அறையில் இருந்து வெளிவரும் போது பக்கத்து அறையில் அம்மாவை கட்டி போட்டிருந்தார்கள். அவர்கள் கட்டை அவிழ்த்து விட்டு அங்கிருந்து தப்பி விட்டோம். கிட்டத்தட்ட மூன்று நாட்கள் மேல் இரவு மட்டுமாய் மழையில் நடந்தே வந்தோம். யாரிடமாவது மாட்டிக் கொண்டாலும் என்று பகலில் நடக்கவிடவில்லை அம்மா. அது மலையில் உள்ள ஒரு காட்டு பங்களா. பஸ் எல்லாம் இல்ல. பிறகு கீழே உள்ள வில்லேஜ் வந்து அங்கேயிருந்து பஸ் பிடித்து எங்கள் வீடு இருந்த நகரத்திற்கு வந்தோம். அங்கேயிருந்து சாராதாம்மாவுடன் தப்பி வந்திட்டோம்" சொல்லி முடித்தவள் உடல் அழுகையை அடக்கி வைத்ததில் உதறியது.
பற்களை கடித்து தன் உணர்ச்சியை கட்டுக்குள் கொணர்ந்தவன் மார்பில் புதைந்திருந்த அவளை நிமிர்த்தி கன்னம் இரண்டையும் தாங்கி கண்களை பார்த்து "அழனுமா..." கேட்டவன் நெற்றியில் முத்தமிட்டு பல்லை கடித்தவாறே கூறினான் "அழுடி.."
அவனின் அந்த வார்தைக்காகவே காத்திருந்தது போல் அவன் மார்பில் சாய்ந்து கதறி தீர்த்துவிட்டாள். தன் கண்ணில் பொங்கிய கண்ணீரை தடுக்க முடியாமல் அவளை தன்னோடு இறுக அணைத்து கொண்டு அவள் அழுகை சிறு கோவலாய் மாறும் வரை ஆறுதலாய் தலையை முதுகை என்று வருடிவிட்டான்.
மீட்டிங் போவதற்கு முன் அன்றிரவு தன்னிடம் யாரையாவது அனுப்பச் சொல்லிக் கெஞ்சியதும் பின் நடந்து வந்து வீட்டின் முன் மயங்கி விழுந்ததும் நினைவு வந்தது. கூடவே அன்று மழையில் மழையில் வெளியே தள்ளி கதவை சாற்றியதும், பின்னொரு நாள் நடு வீதியில் விட்டு வந்ததும். அன்று மழையில் தள்ளி விட்ட பின்னர் தான் அவள் தன்னிடமிருந்து அதிகம் ஒதுங்கினாள் என்பது இப்போது தெள்ளத் தெளிவாய் விளங்கியது.
அவள் இருக்கும் மனநிலைக்கு மழையில் அவளைத் தள்ளி விட்ட ஒரு காரணமே போதும் தன்னை வெறுக்க என்பது புரிய கசந்து போய் புன்னகைத்தான்.
சற்று நேரம் கழித்துக் கேட்டான் “பிறகு என்ன நடந்தது?”
அப்படி தப்பி வருவதும் இலகுவாக இருக்கவில்லை. அவர் தப்பி போவதை அறிந்த கோகுல் சில அடியாட்களை விட்டு அவர்களை பிடிக்க முயற்சி செய்ய காலம் தப்பி பெய்து கொண்டிருந்த மழையில் நனைந்தவாறே மகளின் வாயை ஒரு கையால் பொத்தியபடி, இருட்டில் ஸ்ரீனிகாவுடன் ரோட்டில் இருந்த குப்பை தொட்டியின் பின் ஒளிந்திருந்தார்.
அம்மாவின் அருகில் தன் குண்டு கண்களை விரித்துப் பார்த்துக் கொண்டிருந்த சிறுமி ஸ்ரீனிகாவிற்கு அவர்கள் ஏன் தங்களை துரத்துகின்றார்கள் என்று தெரியாவிட்டாலும் அவர்கள் தங்களை ஏதோ ஒரு விதத்தில் துன்புறுத்தவே தேடுகின்றார்கள் என்று புரிந்தவள் பயத்தில் அம்மாவுடன் ஒட்டிவிட்டிருந்தாள்.
அந்த குண்டர்கள் சென்றதும் இந்த பக்கம் வந்த சாரதா அவசரமாக இருவரையும் காரில் ஏற்றி சீட்டிலிருந்து கீழே இறங்கி இருக்க கூறி அங்கிருந்து தப்பி தமிழ்நாட்டிற்கு வந்து சேருவதற்கு உதவி புரிந்தார்.
தமிழ்நாடு வந்தவர் கையோடு கொண்டு வந்திருந்த பணத்தை வைத்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஸ்ரீனிகாவை நல்ல ஆங்கில பள்ளியில் சேர்த்தவர் தானும் ஒரு வேலை தேடிக் கொண்டார். இரண்டிற்கும் எதிர்பாராத வண்ணம் சாரதா முழு மனதுடன் உதவி புரிந்தார்.
தமிழ்நாட்டிற்கு வந்து சில மாதங்களிலேயே ராஜாராம் எங்கே இருக்கின்றார் என்ன செய்கின்றார் என்பது பற்றி அறிந்தார். ஏற்கனவே திருமணமானவர் என்ற செய்தி பெரிய அதிர்ச்சியை அளிக்கவில்லை. இத்தனை காலத்தில் ஓரளவு புரிந்திருந்தது. எதற்காகவும் ராஜாராமிடம் போய் நிற்க அவரது தன்மானம் இடம் கொடுக்கவில்லை.
வருடங்கள் உருண்டோட தன்னால் முடிந்த அளவு ஒரு அண்ணனை போல் பழகிய அசோகனின் விவரங்களை அறிய முயற்சி செய்து கொண்டே இருந்தார். அசாமில் இருந்த ஸ்ரீமதிக்கு தாத்தா இறந்துவிட்டார் என்ற செய்தி மட்டுமே கிடைத்தது. எங்கே எப்போது எப்படி என்பதை சமார்த்தியமாக கோகுல் சர்மா மறைத்து விட்டிருக்க அவரது உடலோ அல்லது வேறு ஏதேனும் தகவல்களோ கிடைக்கவில்லை.
சொந்த அண்ணனைப் போல் அன்பாக நடந்து கொண்ட அசோகனின் வீட்டு விலாசம் தெரியவில்லை. அவருக்கு அசோகனிடமிருந்து பணம் எதுவும் தேவையில்லை ஆனால் ஒரு பாதுகாப்பு தேவைப்பட்டது. கோகுல் சர்மா எப்போது வேண்டுமானாலும் எந்த சூழ்நிலையிலும் தங்களை கண்டு பிடிக்கலாம் என்னும் போது அவனிடம் இருந்து தப்புவதற்கு ஒரு துணை கொஞ்சம் பண பலம் படைத்த பலமான துணை தேவைப்பட்டது.
அப்படி அசோகனை தேடி கொண்டிருந்த போது தான், ஒருநாள் தெரிய வந்தது சாராதா தான் உண்மையில் ராஜாராமின் சட்டபூர்வ மனைவி என்பது. இதை சற்றும் எதிர்பாராத ஸ்ரீமதி அவர்கள் வீட்டிற்கு சென்று நேரடியாக கேட்டு விட்டார் "எதற்காக எனக்கு உதவி செய்தீர்கள் அதுவும் நீங்கள் யார் என்பதை மறைத்து".
அப்போது ராஜாராமின் பெற்றோரும் உடன் இருந்தார்கள். சாரதா கசப்புடன் புன்னகைக்க, வருத்தத்துடன் எழுந்த பெருமூச்சை இழுத்து விட்ட ராஜாராமின் அப்பா சீதாராம் "என்ன செய்வது ஒரே மகன் என்று செல்லம் கொடுத்தது இங்கு வந்து நிற்கின்றது. என் மகன் செய்த பாவம், நாமாவது சரி செய்வோம் என்று தானம்மா மருமகளை உன்னைத்தேடி போகிறேன் என்று சொன்ன போது அனுப்பி வைத்தேன்... உண்மையில் நீ இன்னொரு திருமணம் புரிந்தால் சந்தோஷப்படும் முதல் நபர் நாங்களாகத்தான் இருப்போம்" என்ற மூவரையும் வினோதமாக பார்த்தார் ஸ்ரீமதி.
இன்னும் உலகத்தில் நல்லவர்கள் வாழ்கின்றார்களோ!
சாரதாவின் அருகே சிறிது சங்கடத்துடன் அமர்ந்திருந்தார் ஸ்ரீமதி. அவர் மீது தவறு இல்லையென்றாலும் அவர் கணவரை மணமுடித்தது என்பது இயல்பாக இருக்க முடியாத சங்கடத்தை அளித்தது. அதை அவர் முகத்தை வைத்தே படித்த சாரதா கையை தட்டி கொடுத்தார் சாரதா.
"சங்கடபட தேவையில்லை, சில வருடங்களாக அவரை பற்றி தெரியும். அத்தை மாமாவிடம் சொல்ல திருந்திவிடுவான் கொஞ்சம் பொறுத்துக்கொள் என்றார்கள். கடைசியாக உங்களை பற்றி அறிந்து தான் நானே உங்களை சந்திக்க வந்தேன்" என்றவரை எப்படி என்பது போல் கேள்வியாக பார்க்க "உங்கள் அப்பா உங்களை பற்றி அவரிடம் வந்து பேசிய போது கேட்டேன். அதன் பின் அத்தை மாமாவுக்கு முழுதாக வெறுத்து போய்விட்டது. அதன் பிறகு அவருடன் பேசுவதில்லை" கசப்பான புன்னகையுடன் கூறவே என்ன மனிதன் இவன் ஒருவருக்கு கூட உண்மையாக இல்லை என நினைத்தவர் "அப்படியானால் என் தாத்தாவை நீங்களா...?" என்று இழுக்க "இல்லை அது அசோகன் என்று ஒருவர்" அவர் முடிக்க முன்னர் கேட்டார் ஸ்ரீமதி "அவர் எங்கே இருக்கின்றார் என்று தெரியுமா?". ஆர்வமாக படபடப்புடன் கேட்க அவர் ஆர்வத்தில் வியந்த சாரதா "சென்னையில் தான்" என்று அசோகனின் விலாசத்தை கூறினார்.
"அவர் எனக்கு அண்ணன் முறைதான் நான் அவரை சந்திக்க வேண்டும், ஒரு இரண்டு மணி நேரத்தில் வருகின்றேன். அதோடு இதுவரை நீங்கள் செய்த உதவிக்கு மிக்க நன்றி. ஆனால் அவர் சார்ந்த ஆட்களிடம் இருந்து எந்த உதவியும் பெற்றுக் கொள்ளும் மன நிலையில் நான் இல்லை என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று நாசூக்காய் விலகிவிட்டார் ஸ்ரீமதி.
அதற்கு மேல் அவர்களும் அவளை தொந்தரவு செய்யவில்லை. எப்போது எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய காத்திருக்கின்றோம் என்று மட்டும் கூறி முடித்துக் கொண்டார்கள்.
வாசலை நோக்கி நடக்க வாசலில் வந்து நின்றார் ராஜாராம்.
பதினாறு வருடம் கடந்திருந்தாலும் வெறுப்புடன் முகத்தை திருப்பிய ஸ்ரீமதியை முதல் பார்வையிலேயே அடையாளம் கண்டு கொண்ட ராஜாராம் நின்று பேச முயல அவரை அலட்சியம் செய்து போய்விட்டார் ஸ்ரீமதி.
கேரளாவிலிருந்து ஸ்ரீனிகாவையும் அழைத்து கொண்டு நேரே சாரதாவின் வீட்டிற்கு வந்திருந்தவர் அங்கிருந்து அப்படியே அசோகனை சந்திக்க வந்திருந்தார். ஸ்ரீனிகா புது இடத்தையும் மனிதர்களையும் கண்டு சற்று மிரளவே முதல் முறையாக அவள் பயத்தை ஆச்சரியத்துடன் கவனித்தார் ஸ்ரீமதி.
அசாமிலிருந்து வந்ததிலிருந்து ஹாஸ்டல் வாசமே எங்கே கண்டு பிடித்து விடுவார்களோ என்று ஹாஸ்டல் சென்று மகளை பார்ப்பது கூட குறைவு அதில் அவளது மாற்றங்கள் ஸ்ரீமதியின் பார்வைக்கு வராமலே போய் விட்டிருந்தது.
இவளை சற்று கவனிக்க வேண்டும் என்று நினைத்தவர் ஸ்ரீனிகா வெளியே நின்று அங்கே வேலை செய்தவர்களை வேடிக்கை பார்க்க அவளை அங்கேயே நிற்க விட்டு தான் மட்டுமாக உள்ளே சென்றார். அன்று வீட்டில் ஏதோ விசேஷம் போல் அலங்கரிக்கப்பட்டு இருக்க உள்ளே சென்றவரை வரவேற்றார் அங்கு விஷேசத்திற்கு வந்திருந்த யசோதாவின் அம்மா சௌபக்கியவதி.
அவரிடம் தன்னை அறிமுகப்படுத்திய ஸ்ரீமதி "நான் மித்ரனின் மகள் ஸ்ரீமதி அசோகன் அண்ணாவை பார்க்க முடியுமா?" கேட்டார்.
சந்திரன் மித்திரன் இருவருக்கும் இடையேயான உறவை ஓரளவு அறிந்திருந்தவர் வெளியே நின்ற ஸ்ரீனிகாவை பார்த்து "அது யார்?" என்று விசாரித்தார்.
"என் மகள் தான்" என்று பெருமையுடன் கூறிய ஸ்ரீமதி "அண்ணா எங்கே?" உரிமையுடன் மீண்டும் கேட்க சௌபாக்கியவதியின் யோசனையோ இவளால் என் மகளுக்கு இடைஞ்சல் வருமோ என்று சென்றது. வெளியே பார்க்க இரு மாநிலங்களின் கலப்பில் மலராத மொட்டாய் இருந்த ஸ்ரீனிகா அதித அழகுடன் மிளிர்ந்தாள்.
எல்லாவற்றையும் விட தன் மகன் வயிற்று பேத்திகளை ஏறெடுத்தும் பார்க்காத கௌதம் அவள் அருகே நின்று கை கொடுத்து பேசுவதை பார்க்க உள்ளே எரிந்தது. இவளை உள்ளே விட்டால் என் பேத்திகளில் ஒருவர் கூட இங்கே வர முடியாது என நினைத்தவர் "யார் நீ? எதற்காக என் மருமகனை நீ பார்க்க வேண்டும்?" கேள்வி கடுமையாகவே வந்தது.
"அதுதான் சொன்னேனே நான் அவரின் தங்கை அசாமில் இருந்து வந்திருக்கிறேன் என்று சொன்னால் அவருக்கு தெரியும்" மறுபடியும் புன்னகையுடனே ஸ்ரீமதி கூறினார்.
"ஓ... அந்த இழுத்துட்டு போனவளுடைய மகள் தானே நீ" ஏளனமாய் கேட்டார் சௌபாக்கியவதி. ஸ்ரீமதியின் முகத்தில் இருந்த புன்னகை மெதுவாய் மறைய "உங்கள் வயதுக்கு இந்த பேச்சு அழகாய் இல்லையே அம்மா" நாசுக்காகவே அவரது பேச்சை நிறுத்த முயன்றார்.
"நீ மட்டும் தனியாக வந்திருக்கிறாயே ஏன் உன் புருஷன் வரவில்லையா? முகத்தில் அடித்தது போன்ற அடுத்த கேள்வியில் பதில் சொல்ல முடியாமல் தலை குனிய "ஓ..." என்று ஒரு மாதிரி இழுத்தவர் "நீ விட்டுட்டு வந்துட்டியா இல்ல அவன் உன்னை விட்டு போய் விட்டானா?" மனசாட்சியே இல்லாமல் பேச அவமானத்தில் குறுகிப் போனார் ஸ்ரீமதி.
கடந்த பதினாறு வருடங்களாக உலகத்தை தனியாக எதிர் கொண்ட அனுபவம் உடனே கை கொடுக்க ‘இதில் என் தவறு என்ன?’ என்று நிமிர்ந்தவரை மீண்டுமாக அடிப்பது போல் "ஓ.... அதுதான் உன் மகளை வைத்து சரி செய்ய திட்டமா?" வெளியே நடப்பதை கண்களால் காட்டி மனசாட்சி இரக்கம் எதுவும் இன்றி கேட்டார்.
அவரைப் பார்த்த ஸ்ரீமதிக்கு தெளிவாகவே புரிந்தது அவருக்கு தான் இந்த வீட்டிற்குள் வருவது துளியும் விருப்பமில்லை என்பது. அதற்காக சிறு குழந்தை என்றும் பாராமால பழி போடுவார்கள். இப்படி ஒரு இடத்தில் மகளை எப்படி விட முடியும். உள்ளூர கிளர்ந்த சினத்தில் கோபத்துடன் எழுந்தவர் "இப்போது நான் சத்தமாக அசோக் அண்ணாவை அழைத்து இங்கு நடந்ததை சொல்ல எவ்வளவு நேரமாகும்?" ஒரு கண இடைவெளி விட்டு, சௌபாக்கியவதியின் முகம் கருப்பதை பார்த்தவர் "ஆனால் உங்களை போன்றவர்கள் இருக்கும் இடத்தில் என் மகளை விட நான் தயாரில்லை" ஒரு அரசியின் கம்பிரத்துடன் கூறிவிட்டு வெளியே வந்து ஸ்ரீனிகாவின் கையைப் பிடித்து தன்னுடன் இழுத்தவாறே வெளியேறிவிட்டார்.
இன்னொருவருடன் பேசி கொண்டிருக்கும் மகளை இப்படி இழுத்து வருவது அநாகரீகம் தான் ஆனால் சில இடங்களில் நாகரீகம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என நினைத்து தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டார் ஸ்ரீமதி. அதோடு ஸ்ரீனிகாவை இங்கு அழைத்து வந்ததிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றார். யாருடனும் இலகுவில் கலந்து பழகவில்லை. தங்களை காப்பாற்றிய சாரதாவுடன் பேசும் போது கூட சிறிது தயக்கத்துடனே இருந்தவள், யாரென்றே தெரியாத கௌதமுடன் பேசிய போது அவளது உடல் மொழிகள் இலகுவாகி தயக்கம் அறவேயின்றி இருந்ததை ஸ்ரீமதி அந்தக் சிறிது நேரத்திலேயே ஆச்சரியத்துடன் கவனித்து விட்டார்.
சிலவேளை எதிர்பாராத விதமாக ஈர்ப்பகவோ காதலாகவோ இருந்ததால்..... அசோகனை பார்த்து அவர் ஏற்று அந்த வீட்டில் வசித்து இருந்தால் எப்படியோ ஆனால் இப்போது அது விபரீத ஆசையாக பட்டது. முளையிலேயே கிள்ளி எறியும் போது வலி குறைவாய் இருக்கும் என தனக்குள் எண்ணி கொண்டார். அவருக்குதான் புரியவில்லை முதல் சந்திப்பிலேயே கெளதம் பசுமரத்தாணியாய் ஸ்ரீனிகாவின் ஆழ்னதில் பதிந்துவிட்டான் என்று.
ஸ்ரீனிகாவின் கையை இழுத்து செல்வதை பார்த்து கொண்டிருந்த கெளதம் அவர்கள் கண்ணை விட்டு மறையவும் அருகேயிருந்த பைக்கை உதைத்து கிளப்பி வெளியே வந்தவன் அவர்கள் ஆட்டோவை மறித்து ஏறி செல்வதை பார்த்து அவர்களை பின் தொடர்ந்தான்.
உள்ளே ஏறிய ஸ்ரீனிகாவை கவனிக்காமல் ஸ்ரீமதியை கவனித்த இன்னொரு ஜீப்பும் அவர்களை பின் தொடர்ந்தது. எந்த நேரமும் கோகுல் சர்மா தன்னை தேடி வரலாம் என்ற ஒரு முன் எச்சரிக்கையோடு இருந்து பழகி பின்னால் ஒரு ஜீப் பின் தொடர்வதை அவதானித்துவிட்டார் ஸ்ரீமதி.
இந்த நாளை ஸ்ரீமதி எதிர் பார்த்தே இருந்தமையால் அதிகம் கலங்கி விடவில்லை. வேகமாக தனக்குள் யோசித்தவர் "தம்பி அப்படியே கொஞ்சநேரம் நேராக போய்க் கொண்டே இரு" என்றவர் அந்த குறுகிய நேரத்தில் யோசித்து சாரதவுக்கு அழைத்தார்.
"அவசரம், உங்கள் உதவி தேவை. எங்கே இருக்கின்றீர்கள்?" தந்தி மொழியில் கேட்டார்.
கடற்கரை அருகே இருந்த மாலின் பெயரை கூறி அங்கு இருப்பதாக கூற ஆட்டோவை அங்கே விட சொன்னவர். மகளிடம் திரும்பி "ஸ்ரீனிம்மா கவனி உன் மாமா எங்களை பின் தொடர்ந்து வருகின்றார்." பெரிய கண்கள் இன்னும் விரிய பயத்துடன் பார்த்தவளை "நீ மித்திரனின் பேத்தி ஸ்ரீமதியின் மகள் தைரியமாக இருக்க வேண்டும்" அவளுக்கு தைரியம் கொடுத்தவர் "முதலில் நான் இறங்கி கொண்டு பின் மாலில் உன்னை இறக்கி விட சொல்கின்றேன். நீ என்னுடன் வர முடியாது. தனியாக எப்படியாவது சாரதாவை தேடி அவரிடம் சென்று விட வேண்டும் புரிகிறதா?" என்று கேட்டார். ஸ்ரீனிகாவிற்கு பயமாய் இருந்தாலும் அம்மாவின் சொல்லை கேட்டு நாலா பக்கமும் தலையை உருட்டி வைத்தாள்.
சொன்னபடியே தான் கஃபேயில் இறங்கிக் கொண்டவர் ஸ்ரீனிகாவை அருகில் இருந்த மாலில் இறங்கி செல்லுமாறு ஆட்டோவை பணித்தார். மகளின் முகத்தில் இருந்த பயத்தை பார்த்தவர் பாவமாக இருந்தாலும் மகள் உயிரை விட பெரிதில்லை என எண்ணியவர் "ஸ்ரீனிம்மா.... நீ பயந்தால் பாதகம் இல்லை ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாதே" என்றவர் கஃபேயினுள் நுழைந்தார்.
அந்த கஃபேயின் பெண்கள் கழிப்பறையில் நுழைந்தவர் சாரதாவிற்கு அழைத்தது "ஸ்ரீனிகா உங்களிடம் தான் வருகின்றாள். கோகுல் சர்மா இங்கே என்னை பின் தொடர்கிறான்." இரத்தின சுருக்கமாக கூறியவர் "எனக்கு உங்களிடமிருந்து ஒரு உதவி வேண்டும்" சிறிது தயங்கினாலும் உறுதியாகவே கேட்டார்.
சாரதாவிற்கு ஏற்கனவே நடந்தது அனைத்தும் தெரியுமாகையால் "என்னால் முடிந்த உதவி உங்களுக்கு எப்போதும் உண்டு" போனிலேயே உறுதியளித்தார்.
"கோகுல் என்னை பின் தொடர்கிறான் எப்படியும் அங்கேயும் வருவான். இன்னும் எம்பியாக தான் இருக்கின்றான். பணமும் அதிகாரமும் இன்னும் அவனுக்கு உதவுகின்றது. நேரடியாக எதிர்ப்பது புத்திசாலித்தனம் இல்லை. ஸ்ரீனிகாவும் ஸ்ரீநிஷாவையும் இரட்டையர் என்று கோகுல் சர்மா உங்களிடம் வரும் போது அவனிடம் மட்டுமாய் அறிமுகப்படுத்துங்கள் போதும்" அவசரமாக கூறினார்.
சிறிது யோசித்த சாரதாவுக்கு அவரது திட்டம் லேசாக புரிய "சரி அப்படியே செய்து விடுவோம்" என்றார்.
நிதானமாக முகம் கழுவி வெளியே வந்திருந்து காஃபி ஆர்டர் செய்தார்.
சாரதாவுக்கு ராஜாராமின் பெண்கள் தொடர்பான பழக்கங்கள் தெரிந்த உடனேயே தங்கள் வாழ்கை முறை பிள்ளைகளை பாதிக்கமால் இருக்க மகன் ஸ்ரீராமையும் மகள் ஸ்ரீனிஷாவையும் ஊட்டியில் உள்ள பள்ளியில் சேர்த்துவிட்டிருந்தார். மிக நெருங்கிய சில சொந்தங்களை தவிர வேறு யாரும் சாரதா ராஜாராமின் பிள்ளைகளை நேரில் பார்க்கவில்லை. ஸ்ரீமதி பற்றி அறிந்த பின் கணவரை தன் வாழ்கையிலிருந்து மொத்தமாக ஒதுக்கி வைத்துவிட்டிருந்தார்.
இப்போது உருவ ஒற்றுமையுடன் இருந்த இருவரையும் இரட்டையர் என்று அறிமுகம் செய்தால் யாருக்கும் அது தொடர்பாக எந்த சந்தேகமும் வராது. நல்ல காலமுமோ கெட்ட காலமுமோ ஸ்ரீநிஷாவும் சாரதாவுடன் அந்த மாலுக்கு வந்திருந்தாள்.
ஜீப்பிலிருந்து இறங்கி உள்ளே வந்த கோகுல் ஷர்மாவை தைரியமாகவே எதிர் கொண்ட ஸ்ரீமதி "உங்களுக்கு தேவையானது சொத்து, அது எனக்கு வேண்டாம். அதை நீங்களே வைத்து கொள்ளுங்கள்" என்றுவிட்டார்.
"ஏற்கனவே தப்பி ஓடி வந்தவள் தானே நீ மீண்டும் தப்பி ஓட திட்டம் போடவில்லை என்று எப்படி நம்புவது?" என கடுமையாக கேட்டார் கோகுல். "என் மகளே இப்போது என்னுடன் இல்லை தப்பி போய் என்ன செய்வது." மகளின் உயிரை காப்பாற்ற பொய் கூறிவிட்டார். முழுவதுமான பொய்யும் இல்லையே ஹாஸ்டலில் அல்லவா வந்த நாள் முதலே இருக்கின்றாள். அதோடு இப்போது சாரதாவிடம் கூறியது கூட கிட்டத்தட்ட தத்து கொடுத்தது போல் தானே.
"என்ன சொல்கிறாய்?” அதிர்ந்து போய் கேட்ட கேட்ட கோகுல் சர்மாவுக்கு மௌனத்தையே பதிலளிக்க "அவள் மரண அத்தாட்சி பத்திரம் வேண்டும்" என்று ஸ்ரீமதியையே அதிர வைத்தார் அவர்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.