All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அக்க்ஷரா தேவ் "காலமெல்லாம் உன்னுடன் நான்" கதை திரி

Status
Not open for further replies.

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 1

காலையில் சூரியன் தன் செங்கதிர்களால் வானத்தை நிரப்பிக் கொண்டிருந்தான்.. காலை 6 மணி.. அலாரம் அடித்ததும் அதை நிறுத்தி விட்டு எழும்பி வந்து திரைச்சீலைகளை நீக்கினான் ராம்.. சிறிது நேரம் சூரிய வெளிச்சத்தை உள்வாங்கியவன் செல்போன் சினுங்கவே அதை எடுத்து அதில் ஒளிர்ந்த பெயரை பார்த்தான்..

பெயரை பார்த்தவன் "ஹலோ குட் மார்னிங் நிகிலன்" என்று குரல் கொடுத்தான்..

மறுமுனையில் "குட் மார்னிங் சார் எழும்பின உடனே தொந்தரவு பண்ணிட்டேனா?" என்று குரல் கேட்டது..

"இல்ல.. இல்ல.. என்ன விஷயம் சொல்லுங்க" என்று ராம் குரல் கொடுத்தவுடன்,

"இன்னைக்கு செமினார் அட்டென்ட் பண்ணனுமே சார்.. நீங்க எல்லா பேப்பர்ஸ்ம் ரெடி பண்ணிட்டீங்கன்னா நான் நேரா அங்கயே கிளம்பி வந்துருவேன்" என்று பதில் கூறினான் நிகிலன்..

"அந்த பிரசென்டேஷன் பேப்பர்ஸ் எல்லாம் நேத்து நைட்டே ரெடி பண்ணிட்டேன்.. நான் ஷார்ப்பா 10.30 க்கு அங்கே இருப்பேன்.. நீங்களும் கிளம்பி வந்திடுங்க" என்று ராம் சொன்னவுடன், "சரி சார் நானும் அங்கயே நேரா வந்துடுறேன்.. வைக்கிறேன் சார்" என்று கூறி போனை கட் செய்தான் நிகிலன்..

மணியை பார்த்தான் ராம் 06.05 என காட்டியது "ஐந்து நிமிஷம் பேசுறதுக்குள்ள எவ்வளோ தடவை மூச்சு வாங்குது" என்று சிரித்துக் கொண்டே கல்லூரிக்கு கிளம்ப தயாரானான்..

ராம் ஒரு தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் கம்யூட்டர் சயின்ஸ் பிரிவின் ஹெச்.ஓ.டி. நல்ல இளமையான,சுறுசுறுப்பான எதையும் பாசிட்டிவாக நினைக்கும் ஆண்மகன். எந்த வேலையையும் முகம் சுளிக்காமல் செய்பவன். யாருக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் உடனே உதவுவான். தாயின் மரணத்திற்கு பிறகு ஓய்ந்து கிடக்கும் தந்தையையும் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் தம்பியையும் கண்ணும் கருத்துமாக கவனிப்பவன். தாய் இருக்கும் போதே திருமணத்தைப் பற்றி அடிக்கடி பேச்செடுப்பார். அப்போதெல்லாம் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தவன் தாயின் மரணத்திற்குப் பிறகு குடும்பத்திற்காகவே வாழ்கிறான். இந்த இரண்டு வருடங்களாக அவன் எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்ப்பதில்லை. மாறாக நிறைய பெண்கள் அவன் கடைக்கண் பார்வைக்காக ஏங்கி கொண்டிருந்தனர். பணக்காரன், அழகன் யார் தான் விட்டுக் கொடுப்பார்கள்? ஆனால் அவன் மனதில் அவன் தம்பி, அவன் தந்தை, தம்பியின் படிப்பு என ஒரு வட்டம் போட்டு அதற்குள்ளவே வாழ்ந்து கொண்டிருக்கிறான். (ராம் பற்றி இவ்வளவு அறிமுகம் போதுமென்று நினைக்கிறேன் இனி இந்த 29 வயது இளைஞனின் வாழ்க்கைக்குள்ளே போகலாம்)

அன்றைய கடமைகளை முடித்து விட்டு கையில் லேப்டாப் மற்றும் ஃபைலோடு மாடியிறங்கி வந்தான். ராம்,மணி 8.30 ஆகியிருந்தது லேப்டாப் மற்றும் ஃபைலை அருகிலிருந்த டேபிளில் வைத்துவிட்டு கிச்சனுக்குள் சென்றான். அங்கே அவன் தம்பி அர்ஜீன் கிச்சனை ஒரு வழி பண்ணி வைத்திருந்தான்.

"என்னடா சமையல் ரெடியா?" என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான் ராம்.

"இல்லண்ணா.. இன்னும் கொஞ்சம் இருக்கு.. இரண்டு மணி நேரத்துல ரெடி ஆகிடும்" என்று ஏற்கனவே உருட்டி வைத்திருந்த சப்பாத்தி மாவை மீண்டும் பிசைந்து கொண்டே சொன்னான் அர்ஜீன்..

"இன்னும் 2 அவர்ஸா? அதுக்குள்ள செமினார் ஸ்டார்ட் பண்ணி ஹெச்.ஓ.டி இல்லைனு கம்ப்ளையின்ட் குடுத்து எனக்கு மெமோ வந்துரும்.. அப்புறம் இரண்டு பேருமா சேர்ந்து மாவை உருட்டலாம்" என்று கூறி கையில் இருந்த தட்டை பார்த்தவன் சிரித்தான்.

"ஏன்ணா சிரிக்கிறிங்க? மாவை சரியா பிசையலையா?" என்று அப்பாவியாய் கேட்டான் அர்ஜீன்.

"படிப்புல கெட்டிக்காரன் சமையலை விட்டுட்டியேடா.. இன்னைக்கு நீ சமைச்சு நாங்க சாப்பிட்ட மாதிரிதான் தள்ளு நானே பண்றேன்" என்று அவன் கையில் இருந்ததை வாங்க ராம் முயல அதை தன் முதுகுக்கு பின்னாடி கொண்டு போய் மறைத்த அர்ஜீன்.

"இப்போ எதுக்கு இவ்வளோ சீன் போடுறிங்கண்ணா? தப்பு எதுன்னு சொல்லுங்க.. நான் சரியா பண்றேன்.. அத விட்டுட்டு காலையிலே கலாய்கிறிங்க ஏன்?" என்று கேட்டான்.

"டேய் நீ முதல்ல மாவை குடுடா.. அப்புறம் நான் சொல்றேன்" என்று ராம் மாவு தட்டை பிடுங்க முயல,

"சொன்னாதான் கொடுப்பேன்" என்று அர்ஜீன் தன் பிடியிலேயே நிற்க,

"நீ மாவை காட்னா தான்டா சொல்ல முடியும்... இப்பவே எனக்கு உன்னால அரை மணி நேரம் லேட்.. உனக்கும் காலேஜ் போகனும்னா நீ காட்டு.. நான் சொல்றேன்" என்று ராம் சொல்ல, ஒரு வழியாக தட்டை காட்டினான் அர்ஜீன்.

"சரி இப்போ சொல்லுங்க"

"ஏன்டா உனக்கு கஷ்டம்னு தானே ஏற்கனவே மாவை பிசைஞ்சு உருட்டி வச்சிருந்தேன்..அதை தடவி கல்லில் போட்டு சுடுற வேலையை விட்டுட்டு திரும்பவும் மாவை பிசையுற" என்று சிரித்து விட்டு அவன் தலையில் ஒரு குட்டு வைத்தான் ராம்.

"அட ஆமாம்லா அதான் தண்ணி ஊத்தாமலேயே இப்படி மாவு பிசைஞ்சி இருக்குமானு பார்த்தேன்" என்று அசடு வழிந்து விட்டு "சரிண்ணா சப்பாத்தி தான் வரல.. குருமா கரெக்டா பண்ணேனானு டேஸ்ட் பண்ணி பாருங்க" என்று கரண்டியில் எடுத்துக் காட்டினான்..

கொஞ்சம் ருசி பார்த்த ராம் அவனை கரண்டியாலயே அடிக்க, கையை தடவியவாறே "இப்போ என்ன பண்ணேன்னு அடிச்சிங்க?" என்று கோபத்தோடு கேட்டான்..

"ஏன்டா உப்பை அள்ளி கொட்டிருக்க.. ஏற்கனவே அப்பாக்கு உப்பு கம்மி பண்ணனும்.. நீ என்னடானா ஒரேடியா சொர்க்கம் போற மாதிரி உப்பை கொட்டிருக்க.. இதை நாய்க்கு போட்டா நாயே செத்துரும் டா.. போடா போ.. நானே பாத்துக்குறேன்... நீ குளிச்சிட்டு காலேஜ்க்கு கிளம்புற வழியை பாரு...," என்று விரட்டினான்..

"உங்க டிரஸ்லாம் இப்படி ஆகாதா?"ன்னு அவன் சட்டையில் மிளகாய்தூள், உப்பு,மாவு இப்படி பல கைவரிசை காட்டியிருந்ததை காட்டினான் அர்ஜீன்..

"அட ராமா... இது வேறயா... போடா டேய்.. போய் குளிச்சிட்டு மாத்துடா" என்று ராம் அலுத்துக்கொள்ள "ராம் உங்க பேர் தானே.. அதை நீங்களே ஏன் கூப்பிடுறிங்க?" என்று நின்று கொண்டே கேட்டான் அர்ஜீன்..

"ஏய் நீ இன்னும் போகலையா..? கடவுள் ராமரை கூப்பிட்டேன்டா..." என்று கூற "அவரை ஏன் இப்போ கூப்பிடுறிங்க...?" என்று மீண்டும் அவன் கேள்வி கேட்க, பக்கத்தில் இருந்த கேரட்டை தூக்கி அவன் மேல் எறிந்தான் ராம்..

லாவகமாக கேட்ச் பிடித்தவாறே "இதுக்கு தான் இவ்வளோ நேரம் வெயிட்டிங்" என்று கூறி காரட்டை கடித்துக் கொண்டே உள்ளே சென்றான் அர்ஜீன்..

"சரியான காரட் பைத்தியம்" என்று சிரித்துக் கொண்டே வேலையை பார்த்தான் ராம்..

அவன் வேலையை முடிக்கும் போது மணி 9.30 ஆகியிருந்தது.. ராம் சாப்பாடு எல்லாவற்றையும் டைனிங் டேபிளில் எடுத்து வைத்திருந்தான். குளித்து முடித்துவிட்டு கல்லூரிக்கு போக ரெடியாகி அர்ஜீனும், அவர்களின் தந்தை பிரகாஷ்-ம் வர ராம் அவர்களுக்கு சாப்பாட்டை எடுத்து வைத்துவிட்டு தானும் எடுத்து சாப்பிட்டான்.. சாப்பிடும் போது அவன் தந்தை ராமின் திருமண பேச்சை ஆரம்பித்தார்..

"ஏன்டா ராம் நீ கல்யாணம் பண்ணுற ஐடியால இல்லையா? ஒரு மருமகள் இருந்தா நீ இப்படி சமையல் பண்ணிகிட்டு இருக்க வேண்டாமே...?" என்று பிரகாஷ் கேட்க,

"சமையல் பண்ண மருமகள் தான் வேணும்னு இல்லப்பா.. சமையல் காரம்மா கூட போதும்.. என் சமையல் பிடிக்கலைனா சொல்லுங்க.. சமையலுக்கு ஆள் வச்சிடலாம்" என்று சொன்னான் ராம்..

"அய்யோ வேண்டாம்ணா.. உன் சமையல் தான் பெஸ்ட்" என்று சமயம் புரியாமல் அர்ஜீன் சொல்ல,

"நீயெல்லாம் எப்படிடா ஸ்கூல் பாஸ் ஆன?" என்று கடுப்புடன் கேட்டார் பிரகாஷ்

"எப்படியோ ஆனேன். அதென்ன ஆளாளுக்கு இந்த கேள்வியே கேக்குறிங்க? இத விட்டால் வேற கேள்வியே கிடைக்காதா?" என்று கடுப்புடன் கேட்டான் அர்ஜீன்..

"உன்ன போல ஒரு அதிபுத்திசாலிட்ட இந்த கேள்வி தான் கேட்க முடியும்... அட லூசு.. உன் அண்ணனுக்கு கல்யாணம் ஆனா உன் அண்ணி கையால விதவிதமா சாப்பிடலாம்.. இப்படி தினமும் சப்பாத்தி, குறுமா சாப்பிட்டு நாக்கு செத்து போக வேண்டாம்டா" என்று கூறினார் பிரகாஷ்

"அப்போ சரி அண்ணி தான் வேணும்.. அண்ணா சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ" என்று பெரிய மனுஷன் தோரணையில் அர்ஜீன் கூற அவன் தலையில் குட்டி விட்டு, "அப்பா நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேனு சொல்லல... நம்ம குடும்பத்துக்கு ஏற்ற பொண்ணா, என் மனசுக்கு பிடிச்ச பொண்ணா கிடைச்சா கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்குவேன்.. இப்போதைக்கு இந்த பேச்சு வேண்டாம்.. அர்ஜீன் நீ கார்லயே போ.. பார்த்து பத்திரமா ஓட்டு நான் கிளம்புறேன்" என்று கைகழுவி விட்டு எழுந்தான்..

"அண்ணா நீங்க?" என்று கேட்ட அர்ஜீனிடம் "நம்ம வீட்ல காருக்கா பஞ்சம்?" என்று சிரித்து விட்டுக் கிளம்பினான்..

காரை கிளப்பியவன் மணியை பார்த்தான்.. மணி 10.00.. அங்கு 10.30க்கு இருக்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்டு வேகமாக ஓட்டியவன் கண்ணில் ஒரு பிங்க் கலர் சுடிதார் போட்ட பெண் சாலையை கடப்பது தெரிந்தது.. அவள் முகத்தை அவன் சரியாக பார்க்கவில்லை என்றாலும் அவள் அவனை ஏதோ செய்தாள்.. மனதை ஒருநிலைப் படுத்திக் கொண்டு காரை ஒட்டியவன் சரியாக 10.20க்கு கல்லூரியை அடைந்தான்..

அங்கு நிகிலன் இவன் வரவிற்காக காத்திருக்க, செமினார் அறைக்குள் நுழைந்தான் ராம்.. அவனுக்கு கொடுக்கப்பட்டிருந்தது c++ பிரோகிராமிங்.. அதற்காக அவன் பிரசன்டேசன் செய்து முடித்து மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்து முடித்திருந்த போது ஒரு பிங்க் கலர் சுடிதார் அவன் கண்ணில் பட்டது.. அவன் காலையில் பார்த்த பெண் தானா என்று சரியாக கவனிப்பதற்கு அவன் அவளை சரியாக பார்க்கவில்லையே......!

"சே ஒரு பெண்ணின் சுடிதாரை பார்த்து இப்படி பரவசபடுகிறோமே" என்று தன்னை தானே குட்டி கொண்டு செமினார் ஹாலை விட்டு வெளியேறினான்.. ஆனால் மீண்டும் ஒரு முறை அந்த சுடிதார் பெண்ணை திரும்பி பார்க்கவும் தவறவில்லை.

-------------------------------
மிகவும் பரபரப்புடன் கிளம்பி கொண்டிருந்தாள் கீர்த்தனா.. 4 மணிக்கு இரயில்வே ஸ்டேஷனுக்கு போயாக வேண்டும்.. எல்லா பொருள்களையும் லக்கேஜ் பேக்குக்குள் பேக் பண்ணினாள் கீர்த்தனா.

"என்னம்மா ரெடி ஆயிட்டியா? 4 மணிக்கு இரயில்வே ஸ்டேஷன்ல இருக்கனுமே! லேட் ஆயிருச்சுனா இரயில் கிளம்பிரும்" என்ற படியே வந்தார் கீர்த்தனாவின் தந்தை அருணாசலம்.

"இதோ ரெடிப்பா இந்த பேக் மட்டும் எடுத்து வைக்கனும்.... 5 மினிட்ஸ்ல ரெடியாயிட்டு வாரேன்" என்ற படியே அறையை நோக்கி நடந்தாள் கீர்த்தனா.

ஐந்து நிமிடத்தில் வெளியே வந்தவள் பார்வையில் தந்தை பணத்தை எண்ணுவது பட்டது.. அதே சமயம் அவர் முகத்தில் இருந்த சோகமும் தெரிந்தது..

"என்னப்பா பணம் போதாதாப்பா?" என்று கேட்டாள்..

"ஆமாம்மா.. இன்னும் இருபதாயிரம் வேணும்.. இப்போதைக்கு சமாளிப்போம்.. அப்புறம் உன் அம்மா செயினை வித்தோ, அடகு வைச்சோ பணம் புரட்டிக்கலாம்" என்றார் அருணாசலம்..

"ஏன்பா இப்படி செலவு பண்ணி தான் படிக்கனுமா?"

"நீ ஆசைப்பட்டுட்டல்லமா..? அப்புறம் கண்டிப்பா படிக்கணும்.. நீ படிச்சு வேலை பார்த்து என்னை நல்லா வச்சிருக்க மாட்டியா என்ன..? அதுக்காக நான் எவ்வளவும் கஷ்டப்படுவேன்.. உன் முகத்துல எப்பவும் சந்தோஷம் இருக்கனும்.. சந்தோஷமா என் கீர்த்தி நூறு வருஷம் வாழ்றதை நான் பார்க்கணும்" என்று கூறியவரின் குரலும் கரகரத்தது..

"கண்டிப்பா நான் நல்லா படிச்சு உங்களை சந்தோஷமா வச்சிப்பேன்பா... கீர்த்தி ஒரு வார்த்தை சொன்னா கண்டிப்பா நிறைவேத்துவா.. இப்ப கிளம்பலாமாப்பா? நம்ம செண்டிமென்ட்ஸ் இரயிலுக்கு தெரியாதே...! அது பாட்டுக்கு கிளம்பி போயிரும்" என்று சிரிக்க முயன்று ஒருவாறு சிரித்தாள் கீர்த்தனா..

மகளின் சிரிப்பாலயே சமாதானம் ஆனவராய் "ஆமாம்டா சீக்கிரம் கிளம்பு 5 நிமிஷம்னு சொல்லிட்டு 50 நிமிஷம் பேசிட்டு நின்னுட்டோம்.." என்று கூறி முன்னே நடந்தார் அருணாசலம்..

தந்தையை பின்பற்றி நடந்தாள் கீர்த்தனா...

கீர்த்தனா.. 22 வயது யுவதி... தாய் இல்லை.. தந்தையின் அரவணைப்பிலேயே வளர்ந்தவள். நடுத்தர குடும்பம். தந்தை விவசாயி.... எப்பவுமே கிராமத்துல வாழ்றது தனி சுகம் தான். அதை தன் 22 வயது வரை அனுபவித்தவள் தன் M.E படிப்பிற்காக நகர வாழ்க்கை அனுபவிக்க போகிறாள். B.E எப்படியோ பக்கத்து ஊரில் ஒரு கல்லூரியில் முடித்தவள் M.E நகரத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசையில் தன் தந்தையிடம் கேட்டாள்.. மகள் கேட்டு 'இல்லை' என்று சொல்லி அறியாத தந்தையோ 'சரி' என்று சொல்லி விட்டார். அவரது நிலைமைக்கு அது கொஞ்சம் அதிகப்படி தான்.. காலேஜ் பீஸ், ஹாஸ்டல் பீஸ் என்று பல உண்டே... தன் மகளுக்காக கடனை வாங்கி, நிலத்தை விற்று சாதித்து விட்டார்.. மகள் ஆசைப்பட்ட நகரத்தில் படிக்க அனுப்புகிறார்.

கீர்த்தனாவும்,அருணாசலமும் இரயில்வே ஸ்டேஷனை அடையும் போதே இரயில் வந்திருந்தது.. சீக்கிரம் ஏறி தங்களுக்கான இருக்கையில் அமர்ந்தனர்.

"ஏன்ப்பா நான் சென்னைக்கு போன பிறகு நீங்க எப்படிப்பா தனியா இருப்பிங்க? சமையல் வேற யாரு பண்ணி கொடுப்பா?" என்றி கேட்டாள் கீர்த்தனா.

"உன் சமையல்ல இருந்து விடுதலைன்னு பார்த்தா இப்படி இருக்கிறியேம்மா?" என்றார் அருணாசலம்.

"அப்பா என் சமையல் அவ்வளவு கேவலமாவா இருக்கும்?" என்று கோபத்துடன் கேட்டாள் கீர்த்தனா.

"உண்மையை சொன்னா கோச்சுகிறியேடா?" என்று மெதுவாக கேட்டார்.

"என்ன? உண்மையா" என்று கேட்டு அவரை பார்த்தாள்.

"உண்மையில்லையா? அப்ப என் நாக்கு செத்து போயிருக்கும்."

"போங்கப்பா.. அப்ப உண்மையிலேயா நல்லா இருக்காதாப்பா?" என்று ஒரு வித ஏக்கத்துடன் கேட்டாள் கீர்த்தனா.

அவளின் ஏக்கத்தை புரிந்து கொண்டவராய் "இல்லடா.. உன்னப் போல யாரலையும் ருசியா சமைக்க முடியாது.. இனிமேல் நானும் சாப்பிட முடியாது.. நம்ம பக்கத்து வீட்டு அம்மா சாப்பாடு அனுப்பி வைப்பாங்க.. என்னை பற்றி கவலைபடாதம்மா" என்று ஆறுதலாய் கூறினார்.

"ஆனாலும் நான் ரொம்ப ஆசைப்பட்டுடேனோப்பா? நம்ம ஊரிலேயே படிச்சிருக்கலாம்" என்று குறைப்பட்டாள் கீர்த்தனா.

"சே.. அப்படி இல்லடா.. அங்க நீ படிச்சா நல்ல நிலைமைக்கு சீக்கிரம் வருவ.. அதை நான் கண்குளிர சீக்கிரம் பார்ப்பேன்" என்று கூறினார் அருணாசலம்..

"அதுவும் சரிதான்" என்றவாறு தன் தந்தையின் மடியில் தலை சாய்ந்து கொண்டாள்.. பரிவோடு தன் மகளின் தலையை கோதிவிட்டார் அருணாசலம்..

காலம் அதன் அகோரத்தை நிகழ்த்திட நேரம் பார்த்து கொண்டிருக்க சிறு குருவி கூடாக இருக்கும் இந்த குடும்பத்தை அழிக்க காலன் ரெடியாக இருக்க இவர்களை காப்பவர் தான் யாரும் இல்லை.

கல்லூரிக்கு செல்ல போகிறோம் என்ற பயமும் தந்தை இனி தனியாக எப்படி சமாளிப்பார் என்ற தயக்கமும் வர அவர் மடியிலேயே தலை வைத்து படுத்தவள் சிறிது நேரத்தில் தங்கியும் விட்டாள். அவள் கள்ளம் கபடம் இல்லாத அழகிய முகத்தை பார்த்து கொண்டிருந்த அருணாச்சலமும் சிறிது நேரத்தில் தூங்கி விட்டார். நேரம் யாருக்கும் காத்திராமல் நகர்ந்தது. பாவம் இருவரும் அறியவில்லை வரப்போகும் விதியின் விளையாட்டை...

நீ பார்த்த பார்வையில் விழ துடித்தேனடி
உன் கடைக்கண் பார்வைக்காக நான் ஏங்கி இருக்க
நீ யாரோ என என்னை கவனிக்காமல் செல்வது தான் நியாயமா
தாயின் கருவறையில் இருந்த தூய்மையுடன்
உன் வருகைக்காக காத்திருக்கிறேன்
இன்னும் தாமதிக்காமல் என்னுடன் வந்து சேர்ந்து விடு
என்னுயிரே!
வாழ்நாள் முழுவதும் என் கண்ணிமைக்குள்
உன்னை பொத்தி பாதுகாப்பேன்
என் ஆருயிரே!
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 2

கல்லூரிக்கு முதல்நாள் போக போகிறோம் என்ற சிறு பதட்டத்துடன் தன் தந்தையுடன் நடந்தாள் கீர்த்தனா. கல்லூரியின் கட்டணத்தையும், ஹாஸ்டல் கட்டணத்தையும் கட்டி விட்டு ஹாஸ்டலுக்கு போனார்கள். தன் உடைமைகளை எல்லாம் ரூமில் வைத்துவிட்டு தன் தந்தைக்கு விடையளித்தாள் கீர்த்தனா.. தன் தந்தையை இனி எப்போது பார்க்க போகிறோம் என்ற ஏக்கமும்,தன் மகளை நினைத்த எண்ணமுமாக நடந்த போது இருவர் கண்களிலும் கண்ணீர் நிரம்பியது.

"பார்த்து பத்திரமா இருந்துக்கோடா... ஏதாவது தேவைனா போன் பண்ணு.. உடம்பை பத்திரமா பாத்துக்கோ" என்று கூறினார் அருணாசலம்.

"நீங்களும் பத்திரமா இருங்கப்பா.... ரொம்ப ஸ்டெரெயின் பண்ணி வேலை செய்யாதிங்க... உடம்பை கவனிச்சிக்கோங்க" என்று கீர்த்தனாவும் பதில் கூறி அனுப்பி வைத்தாள்.

தந்தை சென்ற பிறகு ஹாஸ்டலுக்கு வந்து ரூமில் போய் தேம்பி தேம்பி அழுதாள் கீர்த்தனா. ஒருவாறு அழுது முடித்ததும் போய் முகத்தை கழுவிவிட்டு வெளியே வரும் போது அவளது ரூம் மேட் அங்கு இருந்தாள்.

இவளின் அழுது சிவந்த கண்களை பார்த்ததும் "இன்னைக்கு தான் வந்தியா?அப்பாவா கொண்டு வந்து விட்டாங்க?" என்று கேட்டாள்.

ஒன்றும் புரியாமல் கீர்த்தனா தலையை ஆட்டியதும் "என் அப்பா என்னை கொண்டு வந்து விட்டப்பவும் நான் இப்படி தான் அழுதேன்.. என் அம்மா தலைல நாலு குட்டு தந்தாங்க" என்று கூறி சிரித்தாள்.

கீர்த்தனா சற்று சிரித்ததும் "பை தி வே மை நேம் இஸ் அனன்யா... யுவர்ஸ்?" என்று கேட்டாள்.

"கீர்த்தனா" என்று கூறினாள் கீர்த்தனா. "ஓகே கீர்த்தி அழுது முடிச்சிட்டன்னா கிளாஸ்க்கு போகலாமா?"

"ம்ம் ஃபைவ் மினிட்ஸ்" என்ற படியே உள்ளே சென்றவள் ஒரு பிங்க் கலர் சுடிதாரில் வெளியே வந்தாள்.

"ஹே....,நைஸ் டிரஸ்" என்று கூறிய அனன்யா,"சரி வா வெளியே போகலாம் இன்னைக்கு. செகண்ட் ஹவர் கிளாஸ்க்கு போகலாம்"என்று அழைத்தாள்.

"ஃபர்ஸ்ட் நாளே அவுட்டிங்கா... இன்னொரு நாள் போலாமே"என்ற கீர்த்தனாவை "சரி தான் வாம்மா" என்று இழுத்துக் கொண்டு வெளியே போனாள் அனன்யா.

"எப்படியோ ஒரு மணி நேரம் வெளியே ஒரு பார்க்கில் இருந்தவர்கள் செகண்ட் ஹவர்க்கு கிளாஸ்க்கு வரும் போது எதிரே ப்ரொபெசர் வந்தார்.

"குட் மார்னிங் சார்" என்றனர் இருவரும்..

"குட் மார்னிங்... ஆர் யூ ஃபிரெம் ஃபர்ஸ்ட் இயர் M.E?"

"எஸ் சார்"

"விச் டிபார்ட்மெண்ட்?"

"கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்"

"ஓகே குட்.....,கேன் யூ கோ அண்ட் கால் யுவர் ஹெச்.ஓ.டி? ஹி இஸ் இன் தி செமினார் ஹால்..."

"ஸ்யுயர் சார்.. லெட் அஸ் நோ யுவர் நேம் பிளீஸ்"

"ஓ சாரி மை நேம் இஸ் கார்த்திகேயன்"

"ஓகே சார் வி வில் இன்பார்ம்" என்று பதிலளித்து விட்டு செமினார் ஹாலுக்குள் நுழைந்தனர் இருவரும்..

அங்கே M.E இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான செமினார் நடந்து கொண்டிருந்தது.. அவர்கள் ஹெச்.ஓ.டி மேடையில் இருந்தார். செமினார் முடிந்ததும் அனன்யா அவர் அருகில் சென்று விஷயத்தை கூறினாள்.

"அவரும் எஸ் கியூஸ் மீ" என்று கூறி விட்டு மேடையிறங்கி வந்தார்.

அப்போது தான் கீர்த்தனா கவனித்தாள்.. மேடையில் பிரெசன்டேஷன் பண்ணிக் கொண்டு இருப்பவர் தன்னை பார்ப்பதை, 'என்னவோ' என்று மீண்டும் திரும்பி பார்த்தாள்.. அவர் மீண்டும் தன்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

வேகமாக ஹாலில் இருந்து வெளியே வந்தவள் மறைந்து நின்று கவனித்தாள்.. அவர் திரும்பி திரும்பி பார்த்து ஏமாற்றத்துடன் செல்வதை பார்த்தாள்.

என்னவோ புரியாமல் குழம்பி சென்றாள் கீர்த்தனா.

-------------------------------

செமினார் முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த ராமின் மனதில் அந்த பிங்க் கலர் சுடிதார் பெண் நிரம்பியிருந்தாள்.

"சே...முகத்தை பார்க்காம விட்டுட்டோமே” என்ற அலுப்புடன் காரை ஓட்டினான் ராம்.

அவன் தனது கல்லூரிக்கு போய் தன் வேலைகளை முடித்து கொண்டு வீடு திரும்பும் போது மணி 02.30. "சரி இனி வீட்டுக்கு போய் மதிய உணவு சாப்பிடலாம்" என்று கிளம்பினான். வீட்டிற்கு வரும் போது அவன் தம்பி அர்ஜீன் வீட்டில் இருந்தான்.

"என்னடா அர்ஜீன் சீக்கிரமே வீட்டுக்கு வந்துட்ட?" என்று கேட்டவாறே ஹாலுக்குள் நுழைந்தான் ராம்.

"இன்னைக்கு கிளாஸ் போர் அண்ணா.. அதான் சீக்கிரம் கிளம்பிட்டேன்" என்றான் அர்ஜீன்.

"என்ன கிளாஸ் கட் அடிச்சியா? உன்ன..." என்று கையை ஓங்கி கொண்டு அடிக்க வந்தான் ராம்.

"அய்யோ... அய்யோ... ஒரு ஸ்டிரிக்ட்டான ஹெச்.ஓ.டி-கிட்ட போய் இதை சொல்லிட்டேனே.. டேய்...அர்ஜீன் உனக்கு அறிவு கொஞ்சம் கம்மி தான்டா" என்று அர்ஜீன் கூற "அதை அறிவு இருக்குறவன் சொல்லனும்டா" என்று ராம் காலை வாரினான்.

"ஆமா அத உடம்பு ஃபுல்லா அறிவு கொண்டு திரியுறாங்க சொல்ல வந்துட்டாரு" என்று பதிலுக்கு கொடுத்தான் அர்ஜீன்.

"உன்ன..." என்று அடிக்க வந்தாலும் "சரி எதுக்கு கிளாஸ் கட் அடிச்ச?" என்று காரணம் கேட்டான் ராம்.

"மகா கனம் பொருந்திய ஹெச்.ஓ.டி ராம் அவர்களே! இப்படி ஒரு அண்ணன் இருக்கும் போது என்னால் கிளாஸ் கட் அடிக்க முடியுமா என்ன? ஃபிரோபோசர்ஸ் இரண்டு பேரு வரல.. அதான் கிளம்பி வந்துட்டோம்.. அங்க ஃபிரியா இருந்து சாகுறதை விட இங்க வந்தா நாக்குக்கு ருசியா சாப்பாடு கிடைக்கும் அதான் இங்கே வந்தேன்" என்று அர்ஜீன் கூற "டேய் அப்ப இன்னும் சமைக்கலையா?" என்று அதிர்ந்து கேட்டான் ராம்.

"இல்லயே உங்களுக்கு தான் வெயிட்டிங்" என்று சர்வ சாதாரணமாய் சொன்னவன் "சரி லிஸ்ட் கேட்டுக்கோங்க.. அப்பாக்கு சாம்பார், அய்யாவுக்கு சிக்கன், ரசம், முட்டைபொரியல்" என்று அடுக்கிக்கொண்டே போனான்.

ஏற்கனவே பசியில் இருந்தவன் "சமைக்காம இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டு இருந்த? அப்பாக்கு சரியான நேரத்துல சாப்பாடு கொடுக்கனும்னு தெரியாது? இடியட் இது தெரிஞ்சிருந்தா நானாவது வெளியில வாங்கிட்டு வந்திருப்பேனே ஒரு போன் பண்ணி சொல்லி தொலைச்கிருக்க கூடாது?" என்று பொரிய ஆரம்பித்து விட்டான்.

அர்ஜீன் அமைதியாக ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்து கொடுத்தான்.. அவன் கையில் வாங்கியதும் கிச்சனை விட்டு வெளியேறி விட்டான்.

தண்ணீரை குடித்துவிட்டு கிளாஸை மேஜையில் வைத்தவன் டைனிங் டேபிளுக்கு வந்தான்.. அங்கு தட்டுகள் இருந்ததை பார்த்து ஒவ்வொன்றாய் திறந்து பார்த்தான். சாதம், சாம்பார், முட்டை, சிக்கன், ரசம் என்று எல்லாமே இருந்தது.. ஆராய்ந்து பார்க்காமல் திட்டியதற்கு தன்னையே நொந்து கொண்டவன் அர்ஜீனின் அறைக்குச் சென்றான்.

கட்டிலில் உட்கார்ந்திருந்தவன் அருகில் போய் அமர்ந்தான்.. அவன் கையை எடுத்து தன் கை மேல் வைத்து "சாரி அர்ஜீன்.. ரியலி சாரி டா.. பசியில ஏதேதோ பேசிட்டேன் மன்னிச்சிரு டா" என்று மன்னிப்பு கேட்டான்.

அர்ஜீன் முகத்தை திருப்பி கொள்ளவும் "ஹேய் அண்ணன் தான் சாரி சொல்லிடேன்ல பேசுடா" என்று கெஞ்சினான்.

அர்ஜீன் அசையவில்லை!

"டேய் அர்ஜீன் இப்ப பேச போறியா இல்ல நான் வெளிய போகட்டுமா?" என்று கேட்டு பார்த்தான்.

ஹூகூம்.. அசையவே இல்லை.

"சரிடா இனிமேல் நீயே எல்லாம் பாத்துக்கோ.. நான் கிச்சன் பக்கமே வரமாட்டேன்.. நீ தான் நல்லா சமைக்கிறியே.. நான் வெளிலேயே சாப்பிடுகிறேன்" என எழுந்தான் ராம்.

எழுந்து டைனிங் டேபிள் பக்கம் வந்தவன் ஒரு பெருமூச்சுடன் வெளியே போகவும்,

"அண்ணா சாரிண்ணா" என்ற குரல் தடுத்தது.

திரும்பி பார்த்தவன் "எதுக்கு சாரி?" என்று கேட்டான்.

"நீங்க பசியா வந்திருப்பிங்கன்னு தெரியாது.. அதான் கொஞ்சம் விளையாட்டு காட்டினேன்.. இன்னைக்கு நானும் அப்பாவும் தான் சமைச்சோம் சாப்பிடுங்க" என்று தட்டு வைத்து பரிமாறினான்.

தம்பியின் பாசத்தில் நெகிழ்ந்தவாறே உப்பு கொஞ்சம் கூடுதலாக இருந்தாலும் எல்லாவற்றையும் ருசித்து சாப்பிட்டான் ராம்.

சாப்பிட்டு முடித்து விட்டு இருவரும் வீட்டின் வெளியே அமர்ந்திருந்தனர்.

"அப்பா எங்கடா?" என்று கேட்டான் ராம்.

"அப்பா அவங்க ஃபிரெண்ட் ஒருத்தங்களை பார்க்க போயிருக்காங்க.. உங்க செமினார் எப்படி இருந்துச்சு?" என்று கேட்டான் அர்ஜுன்..

"பெர்ஃபெக்ட்..!" என்று பதிலளித்தான் ராம்.

"அதானே நீங்க என்னைக்கு சுமாரா பண்ணிருக்கீங்க" என்று புகழ்ந்து விட்டு "உங்க கிளாஸ் எல்லாம் எப்படி தான் பசங்க தாங்கிக்கிறாங்களோ?" என்று பெருமூச்சு விட்டான் அர்ஜீன்.

"ஏன்டா?" என்று கேட்ட ராமிடம் "சும்மாவே ஸ்டிரிக்ட்.. கிளாஸ்ல வேற பசங்ககிட்ட அறுவை போடுவிங்களே" என்றான்.

"என் கிளாஸ் ஸ்டூடேன்ட்ஸ்ட வந்து கேட்டு பாரு நான் எப்படினு சொல்லுவாங்க" என்றான் ராம்.

"உங்க கிளாஸ் பசங்க உங்களை பத்தி நல்ல விதமாதான் சொல்லுவாங்க" என்றான் அர்ஜீன்.

"அது ஏன்?" என்று கேட்டான் ராம்.

"உங்களை பத்தி தப்பா சொன்னா இன்டர்னல் மார்க்ல கையை வச்சிருவீங்களே அது தான்" என்று எதையோ கண்டு பிடித்தவன் போல அர்ஜூன் கூற, ராம் அவன் முதுகில் ஓர் அடி வைத்தான்.

"வலிக்குதுண்ணா" என்று அர்ஜூனும் "வலிக்கனும்டா" என்று ராமும் கூற, இப்படியே சிரிப்பலையில் அன்றைய நேரம் கழிந்தது.

திடீரென அர்ஜூன் "எனிதிங் ஸ்பெஷல் இன் தி செமினார்?" என்று கேட்க "வாட்?" என்று கேட்டான் ராம்.

"அதுதான்ணா தேவதைகள் யாரவது கண்ணுல பட்டாங்களா? இல்ல யாரவது உங்க மேல கண்ணு வைச்சாங்களா?" என்று கேட்டான் அர்ஜூன்.

ஒரு நிமிடம் ராமின் கண்ணின் முன்னால் அந்த பிங்க் கலர் சுடிதார் பெண் தோன்றினாள்.

"அண்ணா என்ன ட்ரீம்ஸா? யாரந்த லக்கி கேர்ள்?" என்று அவன் கனவை கலைத்தான் அர்ஜூன்.

"நத்திங் லைக் தட்" என்று கூறினான் ராம்.

"சோ...சம்திங் ராங்க்" என்று இழுத்தான் அர்ஜூன்.

"நத்திங்... நீ காலையில பேசினதென்ன? இப்ப இவ்வளவு வாயடிக்குறாயேடா!" என்று மாற்றினான் ராம்.

"டோன்ட் சேன்ஞ்ச் தி டாப்பிக்" என்று கூறினாலும் "காலைல உங்கள கடுப்பாக்க விரும்பல அதான்... இல்லைன்னா சும்மாவே சுமாரா கிளாஸ் எடுக்குற நீங்க படுசுமாரா கிளாஸ் எடுப்பீங்க" என்று அர்ஜூன் கூற, "அடிங்க" என்று கம்பை எடுத்தான் ராம்.

"அய்யோ அர்ஜூன் உனக்கு இது தேவையா ஒழுங்கா படிக்கிற வேலைய பாரு.. இல்ல அடி விழும்" என்று எழும்பினான் அர்ஜூன்.

"அந்த பயம் இருக்கட்டும்... சரி உன் காலேஜ் எப்படி?" என்று ராம் கேட்க "அங்க இருக்கிறவங்க உங்களை பார்க்க முடியலயேன்னு இன்னைக்கு ஃபுல்லா குடம் குடமா கண்ணீர் வடிச்சாங்க" என்று கூறி விட்டு சென்றான் அர்ஜூன்.

"ஒரு நாள் காலேஜ்க்கு கொண்டு விடல்லன்னு என்னலாம் பேசுறான்" என்று சிரித்த படியே உள்ளே சென்றான் ராம்.

தன் அறைக்கு சென்ற ராமிற்கு அந்த சுடிதார் பெண்ணின் நினைவு தான். யார் அவள்? எங்கு இருக்கிறாள்? எதுவும் அவனுக்கு தெரியாது. ஆனால் அவள் தான் தான் எதிர்காலம் என்று அவன் மனது அடித்து சொல்லியது. அவளை கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்து கொண்டான். கண்டு பிடித்து விடுவானா??


என்னவளே!
உன் காதலில் திளைத்து
உன்னோடு நூறு வருஷம்
நிறைவான வாழ்க்கை வாழ்ந்து
உன் மடி சாய்ந்து உயிர் விட தான் ஆசை
என்றாவது ஒரு நாள் என் மனம் புரிந்து
என்னை மணம் புரிந்து
என் ஆசையை நிறைவேற்றுவாயா
என் காதலியே
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 3

ஹாஸ்டல் ரூமில் கீர்த்தனா எதையோ எழுதிக் கொண்டிருந்தாள்.அப்போது அனன்யா எதையோ பார்த்து பயந்தது போல் முகம் வெளுத்து உள்ளே வந்தாள்.

எழுதிக் கொண்டிருந்ததை விட்டு விட்டு அனன்யாவிடம் சென்றாள் கீர்த்தனா.

"என்ன அனு? என்னாச்சு? ஏன் இப்படி பயந்து வர்ற?" என்று கேட்டாள் கீர்த்தனா. "கீர்த்தி... கீர்த்தி... அது..." என்று சொல்ல முடியாமல் அழுதாள் அனன்யா.

"ஏய் அனு.. என்னாச்சு? எதுக்கு இப்படி அழுவுற? முதல்ல அழுகையை நிறுத்து.. நிறுத்துனு சொல்றேன்ல" என்று அதட்டியதும் கொஞ்சம் அழுகை மட்டுப்பட விஷயத்தை சொன்னாள்.

"அது வந்து... அந்த சுரேஷ் இருக்கான்ல அவன் இன்னைக்கு என் கிட்ட வந்து..." என்று சொல்ல முடியாமல் நிறுத்தினாள் அனன்யா.

"சொல்லு..,உன்கிட்ட வந்து" என்று உலுக்கினாள் கீர்த்தனா.

"என்கிட்ட வந்து நான் உன்ன லவ் பண்றேன்.. நீ என்னதான் கல்யாணம் பண்ணிக்கணும் அப்படினு சொல்றான்... பார்க்க ரவுடி மாதிரி இருக்கிறான்.. குடி பழக்கம் வேற இருக்கு.. இவன எல்லாம் நினைக்கவே பிடிக்கல.. அப்புறம் எப்படி காதலிக்கிறது? கல்யாணம் பண்றது? அவனுக்கு நாளைக்கு பதில் சொல்லணுமாம்... பயமா இருக்கு கீர்த்தி" என்று அழுதாள் அனன்யா.

"உன் அண்ணாகிட்ட சொல்லு அவங்க பாத்துப்பாங்க" என்று ஆலோசனை கூறினாள் கீர்த்தனா.

"அருண் அவனை அடிச்சே கொன்னுடுவாங்க.. அப்புறம் என் பேரு ஊரேல்லாம் நாறிடும்... வேண்டாம்.. ஆனா என்ன பண்றதுண்ணே தெரியல" என்று மீண்டும் அழத் தொடங்கினாள் அனன்யா.

"சீ...அழக்கூடாது அனு.. இவனுங்க எல்லாம் பொண்ணுங்களை அடிமைன்னு நினைச்சிடானுங்க.. நீ நாளைக்கு ஒன்னும் அவனுக்கு பதில் சொல்ல வேணாம்.. என்னதான் பண்ணிருவான்னு பார்க்கலாம்... நான் இருக்கேன் உன் கூட.. பயப்படாம படிக்கிற வேலையை பாரு" என்று அவளுக்கு தைரியம் கூறி விட்டு தன் எழுத்து வேலையைத் தொடர்ந்தாள் கீர்த்தனா.

அனன்யாவும் சிறு நம்பிக்கையில் தன் படிப்பைத் தொடர்ந்தாள்.

ஆனால் இது பெரிய பிரச்சனையில் முடியப் போவதையும், அது கீர்த்தனாவை தாக்க போவதையும் எவரும் அறியவில்லை.

-------------------------

"டேய் மச்சான் அங்க பாருடா அனன்யா வர்றா" என்று எதையோ தேடிக்கொண்டிருந்த சுரேஷை தட்டினான் வினய்.

"எங்கடா?" என்று நிமிர்ந்து பார்த்தான் சுரேஷ்.

அங்கே அன்னம் போல் நடந்து வந்துக் கொண்டிருந்தாள் அனன்யா. சுரேஷை பார்த்து கொஞ்சம் பதறிய போதும் நிமிர்வுடனே நடக்க முயன்றாள்.

அவளை பார்த்த சுரேஷ் சந்தோஷத்தில் குதித்தான். "டேய் வினய் அவ எப்டிடா லவ்வ சொல்லுவா? ஐ லவ் யூ சுரேஷ்-னு இல்ல ஐ லவ் யூ மாமா-னு சொல்வாளாடா?" என்று குதித்துக் கொண்டிருந்தான்.

"எப்படியோ அவ உனக்கு லவ்வ சொல்லணும்.. அவ்வளோ தானே மச்சான்.. சூப்பரா ரொமேன்டிக்கா சொல்லுவா பாரு.. இதோ அவ பக்கத்துல வந்துட்டா இனி நாங்க எதுக்கு? பூஜைல கரடி மாதிரி நாங்க கிளம்புறோம்டா" என்று வினய் எழும்பினான்.

"அவ பக்கத்துல வரட்டும்டா.. அது வரை தனியா விடாதிங்கடா" என்று வினயின் கையை பிடித்தான் சுரேஷ்.

"ஏன்டா உனக்குலாம் கூட கையெல்லாம் நடுங்குதே.... காமெடியா இருக்கு மச்சான்" என்று சொல்லிக் கொண்டே "டேய் அனன்யா வர்றா" என்று எழும்பினான் வினய்.

ஆனால் எதையும் காணதவள் போல அனன்யா சுரேஷை தாண்டி வகுப்பறைக்குச் சென்றாள்.

சுரேஷ்க்கு சங்கடமாக இருந்தது. "எவ்வளோ ஆசையா இருந்தேன்.. மச்சான் இவ என்னடானா கண்டுக்கவே மாட்டேங்குறாளே" என்று வினயிடம் முறையிட்டான்.

"ஒரு வேளை நாங்க இருக்கிறதால வெட்கப்பட்டு பேசாம போறாளோ? அதனால தான் அப்பவே நாங்க போறோம்னு சொன்னேன்.. சரி மச்சான் கவலை படாதே.. இப்போ கிளாஸ்-கு தானே போயிருக்கா.. லன்ஞ்ச் டைம்ல பாத்துக்கலாம்" என்று ஆறுதலாக கூறினான் வினய்.

"சரி மச்சான் லன்ஞ்ச் டைம் பாத்துக்கிறேன்.. எப்படி என்னை வேண்டாம்னு சொல்லிட்டு போயிருவானு நான் பாத்துக்கிறேன்" என்று ஆவேசமாக கூறி பாக்கெட்டில் இருந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்து ஒன்றை பற்ற வைத்தான்.

அதுவரை பேசாமல் இருந்த தருண் வாயை திறந்தான் "ஏன் சுரேஷ் உனக்கு இந்த பொண்ணு தான் கிடைச்சாளா? அவ ரொம்ப நல்ல பொண்ணுடா.. அவ வாழ்க்கையில விளையாடாதேடா"

"ஏன் தருண்?" என்று கேட்டான் சுரேஷ்.

"இல்லடா... நீ ரொம்ப நல்லவன்லாம் இல்லை குடி, சிகரெட், போதை பழக்கம் அப்படி நிறைய கெட்டப்பழக்கம் இருக்கு.. அனன்யா உனக்கு ஒத்து வரமாட்டா.. அது மட்டும் இல்ல.. அவ நம்ம அருணோட தங்கச்சிடா.. அதுக்காகவாது அவளை விட்டுறுடா.. அவ படிப்பை பாத்துக்கிட்டு நல்லா வாழட்டும்" என்றான் தருண்.

"ஓ..,ஆமாம்ல.. எனக்கு தான் நிறைய கெட்டப்பழக்கம் இருக்கே... நீ தான் ரொம்ப நல்லவனாச்சே.. ஒரு வேளை நீ அவளை கரக்ட் பண்ண பாக்குறியோ?" என்று இழுத்தான் சுரேஷ்.

"டேய்.." என்று எழும்பி விட்டான் தருண், "அவ எனக்கு தங்கச்சி மாதிரிடா”

"இந்த தங்கச்சி தங்கச்சின்னு சொல்றவனுங்களேயே நம்பவே கூடாது.. கடைசியில கட்டிக்கிட்டு போயிருவானுங்க" என்று ஏளனமாய் சொன்னான் சுரேஷ்.

"சீ... உன் கிட்ட சொல்ல வந்தேன் பாரு.. என்னைய சொல்லனும்,நீ எல்லாம் திருந்தவே மாட்ட.. எங்கயாவது போய் நல்லா வாங்கிக் கட்டும் போது தான் தெரியும்"என்று கோபத்தோடு நடந்தான் தருண்.

"டேய் மச்சான் அவன் அருண்கிட்ட போய் சொல்ல போறான்டா” என்றான் வினய்.

"டேய் தருண்... நீ மட்டும் அருண் கிட்ட சொன்ன இன்னையோட நம்ம பிரெண்ட்ஷிப் கட்" என்று சொன்ன சுரேஷை பார்த்து "உன்னைப் போல ஒரு கேடுகெட்டவனோட பிரண்ட்ஷிப் வைச்சிக்கிறத விட அருணுக்கு நல்ல நண்பனாக இருக்கலாம்.. அனன்யாவுக்கு நல்ல அண்ணனா இருக்கலாம்" என்று கூறிவிட்டு அருணிடம் சொல்ல விரைந்தான்.

ஆனால் அதற்குள் விஷயம் பெரிதாகியது.

மதிய உணவு முடித்து விட்டு வகுப்பறைக்கு திரும்பிய அனன்யாவின் முன் வந்து நின்றான் சுரேஷ்.

"என்ன அனு? நேத்து நான் கேட்டத்துக்கு இன்னும் நீ பதில் சொல்லலையே?" என்று கேட்டான் சுரேஷ்.

"பதில் சொல்லலைன்னா பிடிக்கலைனு அர்த்தம்" என்றாள் அனன்யா.

"அப்படின்னா?"

"உன்ன மாதிரி ஒரு கெட்டவனுக்கு காதல் ஒரு கேடா? நீ அதை தூர இருந்து ரசிக்கலாம் அனுபவிக்க முடியாது.. ஆனாலும் உனக்கு எங்கே ரசிக்க தெரியும்? அதை எப்படிடா கசக்கி எறியலாம்னு தான் நினைப்ப.. உன் கிட்ட பேசுறதே அசிங்கம்" என்று சொல்லி விட்டு நடந்தாள்.

கண்கள் சிவக்க நடந்தான் சுரேஷ்.. என்னவெல்லாம் சொல்லி விட்டாள்.., வந்த கோபத்தில் விடுவிடுவென அவள் வகுப்பறைக்குள் சென்றான்.

அனன்யாவை பார்த்ததும் "யேய்.. அனு... என்னடி பெருசாதான் அலட்டிக்கிற.. நீ இப்போ என்னை லவ் பண்ண முடியுமா? முடியாதா?" என்று கத்தினான்.

"டேய் எதுக்கு இப்போ சத்தம் போடுற? பைத்தியம் பிடிச்சிடுச்சா?" என்று கோபத்துடன் கேட்டாள் அனன்யா.

"பைத்தியமா...? எனக்கா..? ஏய் உன்னை..." என்று கையை ஓங்கி கொண்டு வந்தான் சுரேஷ். அனன்யாவை பின்னுக்கு தள்ளி முன்னே வந்து நின்றாள் கீர்த்தனா.. அதுவரை பேசாமல் பார்த்துக் கொண்டு நின்றவள் அவன் கையை ஓங்கியதும் முன்னே வந்தாள்.

"யாருடி நீ" என்று கோபத்துடன் கேட்டான் சுரேஷ்.

"யாருடா நீ" என்று திருப்பிக் கேட்டாள் கீர்த்தி.

"ஏய் இப்ப நீ எதுக்கு இடையில வர்ற? இது எனக்கும் அனுவுக்கும் உள்ள பிரச்சினை" என்றான் சுரேஷ்.

"அவ தான் உன்னை பிடிக்கலைன்னு சொல்றாளே.. அப்புறம் எதுக்கு டா டார்ச்சர் பண்ற? ஓ காதல் பிச்சை கேக்குறியா?"

"பிச்சையா..? என்னடி ஓவரா பேசுற..?"

"ஆமாம் பிச்சைதான் கிடைக்காத ஒரு விஷயத்தை மேலும் மேலும் கேட்டுக்கிட்டே இருந்தா அது பிச்சை கேட்குற மாதிரி தான் இருக்கும்.. அவளுக்கு தான் உன்ன பிடிக்கலையே.. அப்புறம் ஏன்டா இப்படி பண்ற? ஆம்பளைங்க என்ன சொன்னாலும் பொண்ணுங்க ஏத்துக்கனும்னு நினைப்பீங்களா? அந்த காலம் எப்பவோ மலையேறிப் போச்சு.` இப்போ பொண்ணுங்களுக்கு சுயமரியாதை இருக்கு.., அவங்களும் சொந்த முடிவு எடுக்கலாம். இப்போ அனுவுக்கு உன்னைப் பிடிக்கல ரோஷம் உள்ளவனா இருந்தா 'நீ இல்லைன்னா தான் செத்து போயிட மாட்டேன் வாழ்ந்து காட்டுவேன்'னு போகனும்.. இப்படி டார்ச்சர் பண்ண கூடாது. நீ ஆம்பள தானே? உனக்கு வெட்கம், மானம், சூடு, சுரணை, ரோஷம் எல்லாம் இருக்கு தானே? மரியாதையா வெளியே போ.. இல்லைன்னா பிரின்ஸிபால்ட கம்பளையிண்ட் கொடுத்துருவேன்டா... போடா.. போ.. என்று கத்தினாள் கீர்த்தனா.

அவள் கத்தியதில் ஆத்திரமடைந்த சுரேஷ் "என்னடி ரொம்பதான் கத்துற? சரி அனு தான் இல்லைன்னு ஆயிடுச்சே.. நீ லவ் பண்ணு நீயும் அழகா தான் இருக்க" என்று முன்னே வரும் போதே "ராஸ்கல்" என்று கூறி அவள் கன்னத்தில் அறைந்தாள் கீர்த்தனா.

"வெளியே போடா.. இனிமேல் நீ எந்த பொண்ணுங்க கிட்டயும் இப்படி பேச கூடாது" என்று அவனை பிடித்து வெளியே தள்ளினாள் கீர்த்தனா.

அப்போது அங்கே வந்த அருணும்,தருணும் அவனை பிடித்து அடித்து உதைத்தனர்.

அருண் நேரடியாக அனன்யாவிடம் வந்தான், "லூசாடி நீ ரொம்ப தைரியசாலினு நினைப்போ? என்கிட்ட சொல்லிருக்கலாமே? வா வந்து பிரின்ஸிபால் கிட்ட கம்பிளையிண்ட் கொடு.. உன் பேரு கெட்டுப் போகாம நான் பாத்துக்கிறேன் இனி இவன் எந்த பொண்ணுங்க கிட்டயும் இப்படி நடந்துக்க கூடாது" என்று கையோடு கூட்டி சென்றான்.. பின்னாடியே கீர்த்தனாவும் சென்றாள். கம்பிளையிண்ட் கொடுத்ததும் அவனை ஒரு மாதம் சஸ்பேண்ட் செய்தார் கல்லூரி முதல்வர்.

கீர்த்தனாவை முறைத்துக் கொண்டே வெளியேறினான் சுரேஷ். அவன் மனதில் பழி வாங்கும் எண்ணம் மேலோங்கியது.

---------------------------
மாலையில் வீடு திரும்பிய ராம் தன் தம்பியை தேடினான். எங்கும் இல்லாததால் சோர்வுடன் அமர்ந்தான் ராம். சிறிது நேரத்தில் அர்ஜூன் வந்தான். அவன் முகத்தில் சோகம் படர்ந்திருந்தது.

"ஹேய் அர்ஜூன் எங்கடா போன? உன் பிரண்ட்ஸ் எல்லாம் வந்து கத்திட்டுப் போனாங்க" என்றான் ராம்.

"பிரண்ட்ஸா? எதுக்கு கத்துனாங்க?"

"உன் பிரண்ட்ஸ் உன்னைத் தேடி வராம எங்கடா போவானுங்க? வந்து கத்திட்டு போகுதுங்க" என்றான் ராம்.

"அண்ணா குழப்பாதீங்கண்ணா.. யாரு வந்தது?" என்று சிறு சலிப்புடன் கேட்டான் அர்ஜூன்.

"அதுவா...? அது வந்து" என்று சிரித்து விட்டு "கழுதைங்க இரண்டு இந்த பக்கமாக போச்சுங்க நம்ம வீட்டை பார்த்து கத்துச்சுங்க நான் நீ இல்லைன்னு சொல்லி அனுப்பிட்டேன்" என்று சிரித்தான்.

ஆனால் அவன் சிரிப்பின் எதிரொலி கொஞ்சமும் அர்ஜூனிடம் இல்லை.

"ஆமா நான் கழுதைன்னா கழுதை அண்ணா நீங்களும் அதே இனம் தானே?" என்று மாறி கொடுக்கவாவது செய்வான். ஆனால் இன்று அதுவும் இல்லை ராமிற்கு ஏதோ தவறு பட்டது.

"என்னடா ஆச்சு? எதாவது பிரச்சனையா? காலைல நல்லா தானே இருந்த?" என்று கேட்டான் ராம்.

"ஆமாண்ணா இன்னைக்கு காலேஜ்ல சரியான இன்சல்ட்" என்றான் அர்ஜூன்.

"என்ன இன்சல்ட்? நானும் காலைல உன் கூட தானே வந்தேன். அப்படிண்ணா என் கதையா இருக்காது வேற என்ன?" என்று கேட்டான் ராம்.

சில சமயம் ராம் அர்ஜூனை காலேஜூக்கு கொண்டு போய் விட முடியாது அந்த நேரம் சிலர் அவனை கலாய்ப்பதுண்டு. "என்னடா உன் அண்ணன் இன்னைக்கு எங்களுக்கு தரிசனம் தரலயே? உன் கூட வந்தா நீ டேமேஜ்-ஆ தெரிவேனு கூட்டிக்கிட்டு வரலயா?" இப்படி பல காமெண்டுகள். ஆனால் இதை அண்ணணோடு பகிர்வதோடு சரி வேதனை பட மாட்டான் இப்போது என்ன?

"என்னடா ஆச்சு?" என்று அவனை உலுக்கி கேட்டான் ராம்.

ஒரு பெருமூச்சடன் விஷயத்தை சொல்ல தொடங்கினான் அர்ஜூன்.

அன்று காலையில் தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தான் அர்ஜூன்.
"டேய் கார்த்தி நேத்து காயத்ரி கிட்ட பேசினியா டா? ஓகே சொல்லிட்டாளா?" என்றான் அர்ஜூன்.

"அவன் எங்க மச்சி பேசிருப்பான்.. அவள கண்டதும் கை, கால் உதறி கீழே விழுந்துருப்பான்.. அவ சிரிச்சிக்கிட்டே போயிருப்பா" என்றான் அகிலன்.

"ஹேய் அகில் ரொம்ப ஓவரா ஓட்டாதடா.. உன் மீனாவைப் பார்த்ததும் நீ மயங்கி விழுந்ததை நான் சொல்லக் கூடாதுன்னு இருக்கேன். நீ ஓவரா ஓட்டுனா சொல்லிருவேன்" என்றான் கார்த்திக்.

"ஏய்..,இது எப்படா நடந்துச்சு? எனக்கு தெரியாதே!" என்று ஆச்சரியமா கேட்டான் அர்ஜூன்.

"அட ஹெச்.ஓ.டி தம்பிக்கு இது எல்லாம் பார்க்குறதா வேலை.. படிப்பு.. படிப்பு.. அது மட்டும் தானே தெரியும், ஆனா நாங்க இதை பார்க்குறதையே பிஸினஸா வச்சிருக்கோம்டா" என்று கார்த்திக் கூற அவன் முதுகில் ஓர் அடி வைத்தான் அர்ஜூன்.

"டேய் என்னடா அடிக்கிற? உன் வீட்டுல இது உனக்கு கிடைக்கும்னு நீ காட்டாமலயே எங்களுக்கு தெரியும்டா.. ஹெச்.ஓ.டி இப்படி தானே அடிப்பாரு.." என்று கார்த்திக் கூற, அவனுக்கு ஓர் அடியை கொடுத்து விட்டு "இப்போ சொல்ல போறியா? இல்லயா?" என்று கடுப்புடன் கேட்டான் அர்ஜூன்.

"அய்யோ நீங்க கடுப்பாகாதீங்க சார் அப்புறம் ஹெச்.ஓ.டி எங்க தலையை எடுத்து புலி பசிக்கு போட்டுருவாரு.. இதோ சொல்லிடுறேன்.." என்றான் கார்த்திக்.

"அத முதல்ல சொல்லுடா" என்றான் அர்ஜூன்.

"அது..,அது வந்து.." என்று கார்த்திக் இழுக்க, "டேய்" என்று அடிக்க கையை ஓங்கினான் அர்ஜூன்.

"எப்பா சாமி இனிமேலும் என்னால அடி தாங்க முடியாது.. திஸ் இஸ் வீக் பாடி" என்று மீண்டும் சொல்லாமல் இழுக்க, "டேய் இப்ப சொல்ல போறியா இல்ல இதுனாலயே உன்ன கொல்லவா?" என்று அர்ஜூன் செங்கலை கையில் எடுத்தான்.

"ஏய் ஏய் கொல்லாதடா நான் வீட்டுக்கு ஒரே பிள்ளை.. இதோ இந்த அகிலன் அன்னைக்கு மீனாவை பார்த்ததும் ஏதோ சினிமா நடிகை மீனாவே வந்தது மாதிரி பெரிய பில்டப் காட்டிக்கிட்டு அவகிட்ட பேச போனான்" என்று கார்த்திக் நிறுத்த, அகிலன் அவன் வாயை கைகளால் பொத்தினான்.

அர்ஜூன் "அப்புறம் என்னடா ஆச்சு?" என்று கேட்டான்.

அகிலனின் கைகளை தட்டிவிட்டு "அவகிட்ட போய் டைம் கேட்டுருக்கான். இத்தனைக்கும் இவன் கையிலேயே வாட்ச் கட்டிருக்கான். கையில மொபைல் வேற.. அவ இவன் வாட்ச்ச பாத்திருக்கா.. நம்மாளுக்கு புரிஞ்சி போச்சி.., வாட்ச் ரிப்பேர்னு சொல்லிருக்கான்.. அந்த ரிப்பேர் சொல்ல இவன் பட்ட பாடு இருக்கே அய்யோ தொண்டை தண்ணி வத்தி போயிருக்கும்டா.. அவ இவனை ஒரு பார்வை பார்த்துட்டு ஏழரைன்னு சொல்லிட்டு போயிட்டா" என்று கார்த்திக் நிறுத்தினான்.

"அப்புறம்" என்றான் அர்ஜூன்.

"அப்புறம் என்ன இவனும் 'தேங்ஸ்ங்க'னு சொல்லிட்டு வந்தான்.. இங்க வந்து மணியை பார்க்குறான்.. மணி பதினொன்று.. சார்க்கு மயக்கமே வந்துருச்சு.. செமயான நோஸ்கட் அவ ஏழரை கூட 'சனியன்' சொன்னது இவன் காதுக்கு கேட்கல. அவ்வளவு லூசு தனமா நின்னுருக்கான்" என்று சிரிப்புடன் கூற அர்ஜூனும் சிரித்தான்.

அகிலன், கார்த்திக் தலையில் குட்டு விட்டு "நீ காயத்ரி கிட்ட ஒரு நாள் பேசும் போது தெரியும்டா என் ஃபீலிங்ஸ்" என்று கூறினான்.

அப்போது அங்கு கிருஷ்ணா ஓடி வந்தான்.

"டேய் ஏன்டா இவன் ஓடி வரான்? வீணா கிட்ட ஏதாவது சொல்லி மாட்டிக்கிட்டானா?” என்று அகிலன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே கிருஷ்ணா அருகில் வந்தான்.

வந்தவன் நேரடியாக அர்ஜூனிடம் வந்தான்.

"அர்ஜூன் ஒரு பிராபளத்துல மாட்டிக்கிட்டேன் ஹெல்ப் பண்ணுடா" என்று கெஞ்சினான்.

"என்னடா பிராபளம்?" என்று கேட்டான் அர்ஜூன்.

"அது...,அது" என்று தயங்கியவன், "நான் வீணாவுக்கு எழுதிய லவ் லெட்டரை நோட் மாறி நிஷா நோட்டுக்குள்ள வச்சிடேன்டா.. அத எடுக்கனும்டா" என்று கூறினான் கிருஷ்ணா.

"டேய் கிருஷ் உனக்கு வைக்க வேற நோட்டே கிடைக்கலையா? அந்த ராட்சசி நோட் தான் கிடைச்சதா? அவகிட்ட போய் எப்படிடா கேக்குறது? அவ சும்மாவே பேயாட்டம் ஆடுவா இப்போ மொத்த காலேஜ்-ம் அதிருற மாறி கத்துவாளே என்னால முடியாதுடா" என்று அர்ஜூன் கூற "டேய் பிளீஸ்டா நானே போய் எடுத்திருப்பேன், இப்போ நோட்ஸ் எல்லாம் கலைச்செல்வி மேம்கிட்ட போய்டுச்சு அதான் உன்கிட்ட ஹெல்ப் கேக்குறேன்... நீ ராம் சாரோட தம்பி தானே அதனால அவங்க எப்படியாவது குடுப்பாங்க.. நீ அந்த நோட்டை மட்டும் எடுத்தா போதும் பிளீஸ்டா" என்று கிருஷ் கெஞ்சவும்,

"ஏண்டா ஹெச் ஒ டி தம்பின்னா பெரிய ஆளா? நானும் இங்க உங்கள மாதிரி படிக்க தான்வந்திருக்கேன். சரிடா.. டிரை பன்றேன் என் அண்ணா பெயர் இங்க எதுக்குடா வருது? நானே எப்படியாவது கேக்குறேன் கிடைச்சா உன் லக்.. ஆமா உன் பேர் அல்லது வீணா பேர் ஏதாவது லெட்டர்ல எழுதிருக்கியா?" என்று கேட்டான் அர்ஜூன்.

"இல்லடா ஸ்வீட்டினு அவ பேருக்கு பதிலா போட்டுருக்கேன்.. என் பேருக்கு பதிலா 'உன் அன்பன்'னு போட்டுருக்கேன்.. சோ யார் எழுதினதுன்னு கண்டு பிடிக்கிறது கஷ்டம் தான்" என்று கிருஷ்ணா கூற "இதுல மட்டும் தெளிவா இருங்க எப்படியோ நான் டிரை பன்றேன்" என்று சொல்லிவிட்டு கலைச்செல்வி மேமின் இடத்திற்கு விரைந்தான்.

அங்கு கண்களில் கனல் கக்க நின்று கொண்டிருந்தாள் நிஷா.

என் உயிர் காதலியே
உன் கால் கொலுசாக மாற துடிக்கிறேனடி
அதற்கு நீ அனுமதிக்கா விட்டாலும்
உன் கைவளையில் ஒரு மணியாய் மாறி
காலம் முழுவதும் அதன் ஓசையாக
உன் காதருகில் கிண்கிணிக்க ஆசை
ஒற்றை காவலனாக உன் வாழ்நாள் முழுவதும்
யார் தீங்கும் உன்னை அண்டாமல்
கயவனின் கை உன்மேல் தீண்டாமல்
உன்னை பாதுகாக்கும் உரிமையை எப்போது
தர போகிறாய் என் உயிரே..!
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 4:

வகுப்பறையில் நோட்டில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள் நிஷா. அப்போது தான் ஸ்ரீஷாவும்,வீணாவும் அங்கே வந்தனர்.

"ஹேய் நிஷா, உன்னை கலைச்செல்வி மேம் கூப்பிட சொல்லி நிஷாந்தை அனுப்பி விட்டாங்க. அவன் சொல்லிட்டு போறான். மேம் ரூமுக்கு சீக்கிரம் போகணுமாம்" என்றாள் ஸ்ரீஷா.

"எதுக்கு என்னை கூப்பிட்டாங்க?" என்று கையில் இருந்த நோட்டை மூடி வைத்து விட்டு எழும்பினாள் நிஷா.

"தெரியலப்பா... நீயே போய் கேட்டுக்கோ" என்று கூறிவிட்டு தன் இருக்கையில் போய் அமர்ந்தாள் ஸ்ரீஷா. அவளின் அருகிலேயே அடுத்த இருக்கையில் அமர்ந்தாள் வீணா.

"எதுக்கு கூப்பிட்டுருப்பாங்க? நோட்ஸ் எல்லாம் கரெக்டா சப்மிட் பண்ணிட்டேனே.." என்று யோசித்தவாறே கலைச்செல்வி மேமின் அறைக்குச் சென்றாள் நிஷா.

"குட் மார்னிங் மேம்... மே ஐ கம் இன்?" என்று நிஷா கூறியவுடன் "எஸ் கம் இன்" என்று கலைச்செல்வி மேமின் பதிலில் அறியாத கோபம் இருந்தது.

"மேம் எதுக்காக வரச்சொன்னிங்க?" என்று கேட்டாள் நிஷா.

"டோண்ட் யு நோ? இதுங்க எல்லாம் எதுக்கு தான் காலேஜ்-கு வருதுங்களோ? படிக்கனும்னு நினைப்பே இல்லாம வேற எல்லாத்துலயும் பெர்ஃபெக்டா இருக்காங்க ஸ்டுப்பிட்" என்று கோபத்துடன் திட்டினார் கலைச்செல்வி.

நிஷாவுக்கு ஒன்றுமே புரியாத நிலை எதற்காக திட்டுகிறார் என்று தெரிந்தால் தானே பதில் கூற முடியும் அதுமட்டுமல்லாமல் நிஷாவுக்கு கோபம் வேறு வந்தது. "நான் என்ன தப்பு பன்னேனு சொல்லாம எதுக்கு திட்டிக்கிட்டு இருக்காங்க?" என்று மனதிற்குள் கோபம் கொப்பளிக்க நின்று கொண்டிருந்தாள் நிஷா.

"திட்டிக்கிட்டு இருக்குறேன், ஏதாவது பதில் சொல்றியா நீ?" என்று கலைசெல்வி மேமின் சத்தம் கேட்டவுடன், "இப்போ எதுக்கு மேம் திட்டுறீங்க? எனக்கு எதுவுமே புரியல... நான் என்ன தப்பு பண்ணினேன்?" என்று கேட்டாள் நிஷா.

ஒரு வினாடி அமைதியாக இருந்த மேம் அடுத்த நொடி கையில் இருந்த நோட்டை அவள் முன் எறிந்தார். புரியாமல் எடுத்து பார்த்தவளின் நோட்டிலிருந்து ஒரு காகிதம் கீழே விழுந்தது, எடுத்து பார்த்தவள், கோபத்தில் கண்கள் சிவக்க நின்றாள்.

"இப்போ புரியுதா? நீ எல்லாம் காலேஜ்-கு படிக்க வர்றியா? இல்ல லவ் பண்ண வர்றியா? சரி என்னவோ பண்ற... அதுக்காக லவ் லெட்டரை எங்க வைக்கனும்னு கூடவா அறிவு இல்லை? நீ எல்லாம் என்னதான் படிச்சு கிழிக்க போறியோ?" என்று கத்தினார் மேம்.

"மேம் இது நான் எழுதல" என்றாள் நிஷா.

"நீ எழுதினது இல்ல. உனக்கு யாரோ எழுதினது.. பேர் பாரு ஸ்வீட்டியாம் எழுதினவரு அன்பனாம்.. இத எல்லாம் நோட்புக்குக்கு வெளியே வச்சுக்கோங்க.. போ உன் நோட்டை எடுத்துக்கிட்டு கிளம்பு" என்றார் மேம்.

"மேம் இது எனக்கு இல்ல... தப்பா யாரோ..." என்று சொல்லி முடிக்கும் முன் "கெட் அவுட்.. ஐ ஸெட் கெட் அவுட்" என்று கத்தினார் கலைச்செல்வி மேம்.

வேறு வழியில்லாமல் நோட்டை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள் நிஷா.

"நாம சொல்றதையும் கேட்க மாட்டாங்க... நம்மகிட்ட விசாரிக்கவும் மாட்டாங்க.. அவங்களே ஒரு முடிவு எடுத்துக்கிட்டு நம்மள டார்ச்சர் பண்றது, சரியான ஆளத்தான் பிரோபஸரா போட்டுருக்காங்க.. காலேஜ் உருப்பட்ட மாதிரி தான்" என்று கடுகடுத்தவாறே நடந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த அர்ஜீன் மேல் மோதிக் கொண்டாள்.

"ஹேய் ஸ்டுப்பிட்.. பார்த்து வரத் தெரியாது? கண்ணை என்ன முதுகுலயா வச்சிருக்க.., பொண்ணுங்களை பார்த்தா உடனே இடிக்கிறது.. நான்சென்ஸ்" என்று வாயில் வந்ததையெல்லாம் கூறி திட்டினாள்.

"ஏய் நானா மோதினேன்? நீ தானே எங்கேயோ பார்த்துகிட்டு நடந்து வந்த.. கவனமெல்லாம் நடந்து வர்றதுல இருக்கனும் எங்கேயோ இருந்தா இப்படிதான் தப்பு பண்ணிகிட்டு அடுத்தவங்க மேல பழியை போடத் தோணும்" என்று பதிலுக்கு திட்டினான் அர்ஜூன்.

"ஏய் நான் ஒன்னும்...." என்று தொடங்கியவளுக்கு தான் தவறாக அவன் மீது மோதிவிட்டோம் என்ற எண்ணம் தோன்ற.. "நான் ஒன்னும் வேற நினைப்பில் நடந்து வரல...சாரி" என கூறிவிட்டு நடந்தாள்.

"அய்யோ! இந்த ராட்சஸி கிட்ட லெட்டர் இருக்கானு எப்படி தெரிஞ்சிகிறது?" என்று எண்ணிய படியே "ஹலோ ஒரு நிமிஷம் என்று சொன்னான்.

------------------------------
கிருஷ்ணா சொன்னவுடன் அர்ஜூன் கலைச்செல்வி மேமின் ரூமுக்கு போனான். அங்கே மேம் இல்லை. அதனால் நிஷாவுக்கு விவரம் சொல்லாம் என்று அவள் கிளாஸ்-கு போனான். அங்கே நிஷா இல்லை சரி கிளம்பலாம் என்று திரும்பும் போது ஸ்ரீஷாவை பார்த்தான் அவளிடம் நிஷாவை பற்றி கேட்டான்.

"ஸ்ரீஷா நீ நிஷாவை எங்கயாவது பார்த்தியா?" என்று கேட்டான்.

"இப்போ தானே கலைச்செல்வி மேம் கூப்பிட்டாங்கனு அவங்க ரூமுக்கு போனா” என்று கூறினாள் ஸ்ரீஷா.

"மேம் ரூம்லயே இல்லயே..." என்று இழுத்தான் அர்ஜூன்.

"மேம் இப்போ தான் சஞ்சனா மேம் கிட்ட பேசிட்டு கிளம்புனாங்க இப்போ ரூம்ல இருப்பாங்க" என்று ஸ்ரீஷா கூற "சரி" என்று கிளம்பினான் அர்ஜூன்.

அர்ஜூன் கலைச்செல்வி மேம் ரூமிற்கு போய்க் கொண்டிருக்கும் போது நிஷா வெளியே வருவதைப் பார்த்தான். அவள் கோபத்தில் நின்று கொண்டிருந்தாள். "இவகிட்ட சாதரணமாய் போய்க் கேட்டாள் காலேஜ் அதிருற மாதிரி கத்துவாளே.. கொஞ்சம் சத்தமாதான் கேட்கனும்" என்று நினைத்தபடியே அவளை நோக்கி நடந்தான் அர்ஜூன்.

எதிர்பாராமல் இருவரும் மோதிக் கொள்ளவே, அங்கே சத்தம் தானாக எழும்பியது. ஆனால் நிஷா அடங்கிப் போனதும் அர்ஜூன் குழம்பினான்.

"ஒரு நிமிஷம்" என்ற சத்தம் கேட்டு திரும்பினாள் நிஷா.

எப்படி கேட்பது? என்று தயங்கியவாறே "அது... உன் நோட்ஸ் எனக்கு கொஞ்சம் வேணுமே.., கலைச்செல்வி மேம் உன்கிட்ட வாங்கிக்க சொன்னாங்க.." என்று கூறியவுடன் அவனை சந்தேகமாய் பார்த்தாள் நிஷா.

"என்ன?" என்று அர்ஜூன் கேட்க "இந்த நோட்ஸ் உங்களுக்கு யூஸ் ஆகாதே அப்புறம் எதுக்கு கேட்குறீங்க?" என்று கேட்டாள்.

அர்ஜூன் CSE டிபார்ட்மெண்ட். நிஷா ECE இந்த நோட்ஸ் இவனுக்கு தேவை இல்லைதான். ஆனால் கேட்டாச்சே வாங்கியாகணுமே என்று எண்ணியவாறே, "உங்க டிபார்ட்மெண்ட் பையனுக்கு தான் நோட்ஸ் அவனுக்கு உங்ககிட்ட கேட்க கொஞ்சம் தயக்கம் அதான் என்கிட்ட சொல்லி அனுப்பினான்" என்று சமாளித்தான்.

நிஷாவுக்கு அவன் தயக்கம் என்று சொன்னதுமே புரிந்தது. காலேஜ் முழுவதும் அவளைக் கண்டாலே ஒரு பயம் எதற்கும் தைரியமாக நிற்பாள்.ஆண்கள் நெருங்கவே தயங்குவார்கள்.

புரிந்து கொண்டவளாய் நோட்டை அவனிடம் நீட்டினாள். அப்போது அந்த கடிதம் கீழே விழுந்தது.

"அய்யோ இது இவகிட்ட தான் இருக்குதா?" என்று நினைத்தவாறு குனிந்து எடுக்கும் முன் நிஷா அதை எடுத்தாள்.

"அய்யோ திரும்பவும் இவகிட்ட போயிருச்சே கிருஷ் பாவமாச்சே" என்று நினைத்துக் கொண்டு "என்ன நிஷா இது? லெட்டர் மாதிரி இருக்கே?" என்று கேட்டான்.

உடனே அவள் முகம் கோபத்தில் சிவந்தது "இது லவ் லெட்டர்"என்றாள்.

"அய்யோ படிச்சு பார்த்துட்டாளா? என்று கலங்கியவாறே "யார் கொடுத்தது?" என்று மெதுவாக கேட்டான்.

"யாருக்கு தெரியும்? எவனோ என் நோட்ல வச்சிட்டான்... அவன் மட்டும் என் கையில கிடைச்சான்னா இன்னையாட காலி" என்று கோபத்துடன் கூறினான்.

"எனக்கு தெரியும்" என்று மனதிற்குள் நினைத்ததை வெளியே சொல்லி விட்டு நாக்கை கடித்துக் கொண்டான் அர்ஜுன்.

"என்னது? உனக்கு தெரியுமா? யாரது?" என்று கேட்டாள் நிஷா.

"அது..அது" என்று திணறினான் அர்ஜூன்.

"ஏய் நீ இப்ப சொல்லப் போறியா இல்லையா" என்று கோபத்தின் உச்சியில் கேட்டாள் நிஷா.

"ஹேய் மச்சி லெட்டர் கிடைச்சுதாடா? எப்பவே வாங்க வந்த? கலைச்செல்வி மேம் குடுத்தாங்களா? உனக்கு ஏன்டா இந்த வேண்டாத வேலை?" என்று கூறிய படியே அருகில் வந்தான் கார்த்திக்.

"அட டேய் ஏன்டா?" என்று கூறியவாறே திரும்பி பார்த்தான் அர்ஜூன்.அங்கே நிஷா கொதித்து போய் இருந்தாள்.

"ஏய் நீயா அது? நீ தானா அந்த லெட்டரை வச்சது? ஒன்னும் தெரியாத மாதிரி நோட்ஸ் கேட்டு எடுக்கிறியா? உன்னால நான் மேம் கிட்ட திட்டு வாங்குனேன். உனக்கு ஏன்டா இப்படி புத்தி போயிருக்குது, ஹெச்.ஓ.டி தம்பின்னா நல்லவனா இருப்பேனு பார்த்தால் நீயும் மத்த பசங்க மாதிரி பிகேவ் பண்ற.. சே.. போடா என் கண் முன்னாடி நிற்காதே" என்று கத்தினாள்.

அங்கே நடந்து கொண்டிருந்தவர்கள் நின்று திரும்பி பார்த்தனர், அவமானமாக இருந்தது அர்ஜூனுக்கு, கார்த்திக்கை முறைத்தவாறே திரும்பி நடந்தான். கார்த்திக்கு ஏதோ தவறு செய்த உணர்வு ஆனால் நிஷாவிடம் பேச துணிவு இல்லை. சும்மாவே புரியாமல் கத்திக் கொண்டிருப்பவள் புரிந்து கொள்ள முயற்சி பண்ண மாட்டாள். அர்ஜூன் கூடவே அவனும் நடந்தான்.

"ஏய் இந்த லெட்டருக்கு தானே இவ்வளோ டிராமா போட்ட... இந்தா எடுத்துட்டு போ" என்று அதை வீசி எறிந்தாள் நிஷா.

அர்ஜூன் கையை மூடிக்கொண்டு தன்னை கட்டுப்படுத்த முயல, கார்த்திக் அந்த லெட்டரை எடுத்தான். இருவரும் கிருஷ்ணா இருந்த இடத்திற்கு சென்றனர்.

அர்ஜூன் அதை கார்த்திகிடம் இருந்து பிடுங்கி கிருஷ்ணாவின் முன் எறிந்தான்.

"போதுமாடா இப்ப சந்தோஷமா ஒரு லெட்டரை ஒழுங்கா கொடுக்க தெரியல.. எதுக்குடா லவ் பண்ற? சே போடா" என்று கூறிவிட்டு வீட்டுக்கு கிளம்பினான்.

"என்னடா இது?" என்று கிருஷ்ணா வருத்தத்துடன் கேட்க கார்த்திக் நடந்ததை கூறினான்.

"இந்த நிஷா சரியான ராட்சஸிடா.. விசாரிக்கவே மாட்டாளா? தானவே முடிவு பண்ணிகிட்டா.. அர்ஜூன் தப்பு பண்ணலயே.. இதெல்லாம் உன்னால தான்டா" என்று அகிலன் கிருஷ்ணா மீது பாய, "ஏன்டா எல்லாரும் என் மேல பாயுறீங்க? நான் என்ன தப்பு பண்ணேன்? லவ் பண்ணினது தப்பா?" என்று கேட்டான்.

"லவ் பண்றது தப்பு இல்ல, அப்ப லவ்ல வர பிராபளத்தையும் நீ தான் சால்வ் பண்ணனும், அடுத்தவங்களை தொந்தரவு பண்ண கூடாது" என்று அகிலன் கூறினான்.

"சாரிடா இப்போ அர்ஜூன் கோபமா போறானேடா" என்று கவலைப் பட கார்த்திக்கும், அகிலனும் அவனை தேற்றினர்.

அர்ஜூன் தன் அண்ணிடம் நடந்ததை கூறிவிட்டு பேசாமல் இருந்தான். ராமிற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. என்ன நடந்தது என்று விசாரிக்கலாமலே குறைந்த பட்சமாக கேட்காமலே வாயில் வந்ததை பேசுவதா என்று கோபம் வந்தது. ஆனால் தன் தம்பியை தேற்றுவதில் முனைந்தான்.

"சரிடா..,அந்த நிஷாவை பத்தி தான் உனக்கு தெரியுமே அப்புறம் எதுக்குடா ஃபீல் பண்ற? உன்ன பத்தி தப்பா பேசுனதுக்கு அவ தான்டா வருத்தப்படணும்... நீ ரிலாக்ஸ் ஆகு" என்று கூறினான் ராம்.

"எப்படிண்ணா ரிலாக்ஸா இருக்குறது? எல்லாரும் வேடிக்கை பார்த்தாங்கண்ணா.. அவமானமா இருந்துச்சு... நான் தப்பே பண்ணலயே!" என்று வருத்தப்பட்டான் அர்ஜூன்.

"உன்னை பத்தி எல்லாருக்கும் தெரியும் டா.. உன்னை யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க நிஷா ஒரு நாள் உன்கிட்ட வந்து சாரி கேட்பா அப்போ எல்லாம் சரியாயிடும், சரி இப்போ சாப்பிட வா" என்று அழைத்துச் சென்றான் ராம்.

அரைகுறை மனதுடன் எழுந்து சென்றான் அர்ஜூன். சாப்பாட்டிலும் அரைகுறை தான், ஆனாலும் ராமின் மனம் நோக கூடாதென்று சாப்பிட்டான். அவன் மனதில் இன்னொரு குறையும் இருந்தது. நிஷா 'ஹெச்.ஓ.டி தம்பி' என்று அவன் அண்ணனையும் சம்பந்தபடுத்தியது அர்ஜூனுக்கு கஷ்டமாக இருந்தது.

"ஏன் அண்ணா நீங்க என்னைய நீங்க படிச்ச காலேஜ்-ல சேர்க்கல? அங்கேயே சேர்த்துருக்கலாம் இப்படி அவமான பட தேவையில்லை" என்று கேட்டான் அர்ஜூன்.

சிரித்தக் கொண்டே "அங்கே படிச்சா மட்டும் இப்படி பிராபளம் வராதுன்னு நினைப்பா? எங்கே படிச்சாலும் இப்படி சில நிலைமை வரத்தான் செய்யும்" என்று கூறினான் ராம்.

"ஆனாலும் நீங்க ஏன் சேர்க்கல?" என்று கேட்டான் அர்ஜூன்.

"அது உன் நல்லதுக்கு தாண்டா ஏற்கனவே நான் அங்க படிச்சிருக்கேன்.. இப்போ ஹெச்.ஓ.டி வேற, நீயும் அங்கே படிச்சா ஓவர் கவனிப்பு இருக்கும்.. என் பேரை சொல்லியே உன்னை போரடிக்க வைச்சிருவாங்க.. உன்னால என்ஜாய் பண்ண முடியாது. மொத்தத்துல ஹெச்.ஓ.டி தம்பின்னு அட்லீஸ்ட் ஓல்ட் ஸ்டூடண்ட் பிரதர்னு ஒரு கவனிப்பு இருக்கும். அது உனக்கு கஷ்டமா இருக்கலாம். சோ உனக்கு வேற காலேஜ் தான்னு எப்பவோ முடிவு பண்ணிட்டேன்" என்றான் ராம்.

"அதுவும் சரிதான்.. இப்போ பண்ற மாதிரி வால்தனமெல்லாம் அங்கே பண்ண முடியாதே.. ஆனாலும் ஒரு பொய் சொல்றீங்க" என்றான் அர்ஜூன்.

"என்ன பொய்?"

"எங்க காலேஜ் ஏஞ்சல்ஸ்-ஐ மிஸ் பண்ணிருப்பீங்களே" என்றான் அர்ஜூன்.

"ஆமாம் பெரிய ஏஞ்சல்ஸ் நான் படிச்ச காலேஜ்-ல போய் பாரு, பெஸ்ட் ஏஞ்சல்ஸ் இருக்காங்க, அவங்க பக்கத்துல உன் காலேஜ் ஏஞ்சல்ஸ் நிற்க முடியாது" என்றான் ராம்.

"அப்போ அங்கே இருந்து ஒரு ஏஞ்சல் செலக்ட் பண்ண வேண்டியது தானே.., இன்னும் ஏன் வெயிட்டிங்?" என்று கேட்டான் அர்ஜூன்.

"லைப் பார்ட்னர் செலக்ட் பண்றது அவ்வளோ ஈஸி இல்ல அர்ஜூன். வெறும் வெளியழகு மட்டும் போதாது. மனசு அழகா இருக்கனும். சும்மா மேக்கப் போட்டுக்கிட்டா கூட ஏஞ்சல் மாதிரி தான் இருக்கும். ஆனால் நான் எதிர்பார்க்குறது மனசளவுல ஏஞ்சல். அப்படி ஒரு ஏஞ்சல் கிடைச்சா கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்குவேன் அதுக்காக தான் வெயிட்டிங்" என்றான் ராம்.

"வாவ் சூப்பர்ண்ணா அப்படி ஒரு ஏஞ்சல் கிடைக்க என்னோட வாழ்த்துக்கள்" என்று கை குலுக்கினான் அர்ஜூன்.

சிரித்துக் கொண்டே எழும்பினான் ராம். அவன் மனதில் அவன் பார்த்த ஏஞ்சல் கிடைப்பாள் என்ற நம்பிக்கையுடன் எழும்பினான்.

என்னவளே!
செய்யாத தவறுக்கு தண்டனை அளித்து விட்டாய்..
நீ செய்தது தவறு என்று உணரும் நிலையில்
அந்த தண்டனைக்கு பரிகாரம் இருக்குமா?

உன் மனம் தெரியாமல்
உன் பின்னே அலையும் என் மனதிற்கு
என்ன சொல்லி புரிய வைப்பது?
என் மனம் புரியும் அன்று நீ அதை ஏற்று கொள்வாயா?
இல்லை புறக்கணித்து தண்டனை அளிப்பாயா?
எதுவாக இருந்தாலும் காத்திருக்கிறேன்
அது உன் கையில் இருந்து கிடைக்கும் என்பதால்
ஏமாற்றி விடாதே பெண்ணே!
உன் ஒருத்தியின் மூச்சு காற்றை சுவாசிக்க
என் நாடி நரம்புகள் அனைத்தும்
தவம் கிடக்கின்றன- காத்திருக்கிறேன்
உனது காதலுக்காக..!
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 5

அடுத்த நாள் அர்ஜூனை கல்லூரியில் விட்டுவிட்டு தான் பணியாற்றும் கல்லூரிக்கு சென்றான் ராம்.வழக்கம் போல தனது அறைக்குச் சென்றவன் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வகுப்பறைக்கு கிளம்பிய போது அவன் கைப்பேசி ஒலித்தது.

கைப்பேசியை எடுத்துப் பார்த்தவன், அதில் ஒளிர்ந்த எண்ணை பார்த்ததும் புன்முறுவலுடன் ஆன் செய்தான்.அவன் படித்த கல்லூரியில் இருந்து அவன் டிபார்ட்மெண்ட் ஹெச்.ஓ.டி அழைத்திருந்தார்.

"ஹலோ சார் குட் மார்னிங்"

"ஹலோ ராம் குட் மார்னிங் ஹெள ஆர் யூ"

"ஃபைன் சார் ஹெள ஆர் யூ?"

"ஐ அம் ஃபைன் ராம் பை தி வே நான் உன்னை எங்க டிபார்ட்மெண்ட் ஃபிரஷர்ஸ் டேக்கு சீஃப் ஹெஸ்ட்டா இன்வைட் பண்ண தான் கால் பண்ணினேன் கேன் யூ கம் ஃபார் தட்"

"என்னைக்கு பிரஷர்ஸ் டே சார்?

"கம்மிங் 15th சார் 2'o கிளாக்"

"அன்னைக்கு எனக்கு எந்த அப்பாயிண்ட்மென்ட்ஸ்-ம் இல்ல சார்..., ஐ கேன் கம்.., ஐ வில் பி தெயர் அட் ஷார்ப் 2'0 கிளாக்"

"தேங்க்யூ ராம்.., இது எங்க ஸ்டூடன்ட்ஸ்க்கு நல்லா அனுபவமாக இருக்கும்"

"எனக்கும் தான் சார்"

"ஓகே பை ராம் வி வில் மீட் கியர்"

"பை சார் டேக் கேர்"

கைப்பேசியை அணைத்துவிட்டு வகுப்பறையை நோக்கி நடந்தான் ராம். அவன் மனதில் மீண்டும் ஒரு ஆர்வம் அவன் தேவதையை பார்ப்பானா என்று.



கல்லூரிக்கு சென்று தன் நண்பர்களுக்காக காத்துக் கொண்டிருந்தான் அர்ஜூன். ஏற்கனவே சிலர் வந்து கொண்டிருந்தனர். மாணவர்களின் பார்வை வித்தியாசமாக தென்பட்டது. அர்ஜூனுக்கு தூரத்தில் நிஷா வந்துக் கொண்டிருந்தாள்.

"இவ பார்வையில் வேற படணுமா?" என்று முகத்தை திருப்பியவனுக்கு ஆனந்த் பேசியது அவன் காதில் விழுந்தது, அவன் தன் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தான்.

"டேய் நேத்து நம்ம காலேஜ் குயின் நிஷாவுக்கு அர்ஜூன் லவ் லெட்டர் கொடுத்திருக்காண்டா"

"அப்புறம் என்னாச்சுடா? நிஷா அக்ஸெப்ட் பண்ணிட்டாளா?” என்று கேட்டான் நண்பர்களில் ஒருவனான அகிலேஷ்.

"அவளாடா அக்ஸெப்ட் பண்ணுவா? சும்மாவே பேயாட்டாம் ஆடுவா.. இப்போ என்ன மோகினியாட்டம் ஆடிட்டா.. காலேஜ் ஃபுல்லா இதுதாண்டா ஹெட் லைன் நியூஸ்" என்று ஆனந்த் கிண்டலாய் கூற அர்ஜூன் கையை இறுக மூடி கோபத்தை கட்டு படுத்தினான்.

அந்நேரம் பார்த்து நிஷாவின் கண்களில் அர்ஜூன் பட, விட்டால் எரித்து விடுபவள் போல முறைத்து விட்டு சென்றாள்.

"சே இது வேறயா?" என்று சலித்தவனுக்கு ஆறுதலாக தோளில் ஒரு கை பட்டது.

திரும்பி பார்த்தவன் கிருஷ்ணாவை கண்டதும் கையை உதறி விட்டு திரும்பி நடந்தான். அவனை தொடர்ந்து ஓடி வந்த கிருஷ் "சாரி அர்ஜூன் இப்படியெல்லாம் நடக்கும்னு நான் எதிர் பார்க்கலடா ஐ அம் ரியலி சாரிடா" என்று அவன் கையை பிடித்தான்.

நிஷா செய்த தப்புக்கு அதுவும் அவள் பேசினதுக்கு கிருஷ் என்ன பாவம் செய்தான் என்பது புரிய "சரி விடு கிருஷ் பாத்துக்கலாம்" என்று கூறி விட்டு அவனுடனே வகுப்புக்கு சென்றான் அர்ஜுன்.

-----------------

"கீர்த்தி.. கீர்த்தி.." என்று கத்திக்கொண்டே துணியை மடக்கி வைத்துக் கொண்டிருந்த கீர்த்தனாவிடம் வந்தாள் அனன்யா.

"என்ன அனு? என்னாச்சு? ஏதாவது பிராபளமா? ஏன் இப்படி கத்துற?" என்று பதட்டத்துடன் கேட்டாள் கீர்த்தனா.

"பிராபளமா? எதுக்கு?" என்று புரியாமல் கேட்டாள் அனன்யா.

"அட மக்கு... கத்திக்கிட்டே வர்றியே.. அதான் அடுத்து எவனாவது பிரப்போஸ் பண்ணிட்டானோனு நினைச்சேன்" என்று கீர்த்தனா கூறியவுடன் முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு "இனிமேல் எவனாவது காதல் கீதல்னு வரட்டும்.. அப்புறம் இந்த அனு அணுகுண்டா வெடிச்சிருவா..," என்று கூறினாள் அனு.

"வெடிக்குறதெல்லாம் அப்புறம்.. சரி இப்போ எதுக்கு கத்திட்டு வந்த? அத சொல்லு" என்று கேட்டாள் கீர்த்தனா.

"ஏய் கீர்த்தி.. யாரு கத்துனது? நான் நார்மலா தான் கூப்பிட்டுகிட்டு வந்தேன். அவ்வளவுதான். இதுல எங்கே கத்தினேனாம்?" என்று பொய் கோபத்துடன் அனன்யா சினுங்கினாள்.

"சரி.. சரி.. நீ கத்துன காட்டு கத்துக்கு ஹாஸ்டல் வார்டன் இன்னும் எட்டிப் பார்க்க வரலை.. அப்போ நீ கத்தல.. நான் ஒத்துகிறேன். இப்போ சொல்லு ஏன் கத்துன?" என்று கீர்த்தி அப்பாவியாய் கேட்டாள்.

"ஏய்.. உன்ன.." என்று அனு அடிக்க போனாள்.

"அடிக்கிறியா நீ... எவ்வளவு நேரமா நானும் கேட்டுக்கிட்டு இருக்கிறேன்.. விஷயத்தை சொல்லாம அடிக்க வர்றியா. உன்னை..." என்று ஓர் அடி வைத்தாள் கீர்த்தனா.

"ஏய்.. வலிக்குதப்பா" என்று தடவிக் கொண்டே முறைத்தாள் அனு.

"வலிக்கதான் அடிக்கிறது. நீ விஷயத்தை சொல்லி முடிச்சிட்டேனா நான் என் வேலையை கண்டினியூ பண்ணுவேன்" என்று கீர்த்தி துணி மடிக்கும் வேலையை தொடங்க, அதை பிடுங்கி கீழே எறிந்தாள் கீர்த்தனா.

"ஏய் என்ன?" என்று கீர்த்தி கோவமாக கேட்க,

"நான் ஒருத்தி முக்கியமான விஷயம் சொல்ல ஓடி வந்துருக்கேன்.. அது என்னதுனு கேட்காம நீ துணி மடிச்சுகிட்டு இருக்க" என்று குறைப்பட்டாள் அனு.

"அடிப்பாவி வந்ததில் இருந்தே அதைத் தானே கேட்டுக்கிட்டு இருக்குறேன்.. நீ சொல்லாம என்னைய குற்றம் சொல்றியா? உனக்கெல்லாம் ஒரு அடி போதாது.. பல நூறு அடி கொடுக்கனும்" என்று கூறி அவள் கையில் ஒரு அடி கொடுத்தாள்.

"ஆமாம்ல நான் தான் சொல்லல" என்று மீண்டும் அனு பாதியில் நிறுத்த, கீர்த்தி சீரியசானாள்.

"ஏதாவது முக்கியமான விஷயம்னா சீக்கிரம் சொல்லு அனு... எனக்கு நிறைய வேலைகள் இருக்கு" என்று கீர்த்தி கூறினாள்.

"ஆமாம் பெரிய வேலை.." என்று கூறினாள் அனு.

"பெரிய வேலை தான் ஆனா உன்கிட்ட எதுவும் முக்கியமா இல்ல போல" என்றாள் கீர்த்தி.

"ம்க்கும் நான் முக்கியமான விஷயம் தான் கொண்டு வந்தேன்" என்றாள் அனு.

"சரி நீ சீக்கிரம் சொல்ல போறியா? இல்லயா?" என்று கீர்த்தி மிரட்ட,
"ஏய் சொல்லிடுறேன். அதுக்கு அடிக்காத... கம்மிங் 15 நமக்கு ஃபிரஷர்ஸ் டே.. சீஃப் ஹெஸ்ட் ராம் சார்" என்றாள் அனு.

"இருக்கட்டும் ஃபிரெஷர்ஸ் டே வழக்கமா உள்ளது தானே?" என்று அசுவாரசியமாய் கூறினாள் கீர்த்தி.

"அது வழக்கம் தான் பட் இங்கே ஸ்பெஷல் ராம் சார்" என்றாள் அனு.

"ராம் சாரா? இதுல என்னடி ஸ்பெஷல் இருக்கு?" என்று கேட்டாள் கீர்த்தி.

"ஹேய்.. நீ ராம் சாரை பார்த்ததில்லையா? அவங்க நம்ம காலேஜ் ஓல்டு ஸ்டூடன்ட். இப்போ ஒரு காலேஜ்ல CSE டிபான்ட்மெண்ட் ஹெச்.ஓ.டி யா இருக்காங்க.." என்று தனக்கு தெரிந்ததை சொன்னாள் அனு.

"சரி இதுல என்ன இருக்கு? அவர் வர்றதுல எனக்கு எந்த ஸ்பெஷலும் தோனல.. அதுவும் இல்லாம நான் அவரை பார்த்தது கூட இல்லை" என்றாள் கீர்த்தி.

"ஹேய் கீர்த்தி.., அவர் ஸ்பெஷல் இல்லைனு சொன்னா கூட ஒத்துக்கிடுவேன்.. ஆனா அவங்களை பார்த்தது இல்லைனு பொய் சொல்லாதே." என்றாள் அனு.

"நானா? நான்அவரை பார்த்ததே இல்ல" என்று கூறினாள் கீர்த்தி.

"ஹேய் கீர்த்தி நீ அவரை பாத்துருக்க.. நாம பர்ஸ்ட் டே செமினார் ஹாலுக்கு ஹெச்.ஓ.டி-யை கூப்பிட போனோமே"

"ஆமா"

"அங்கே ஹெஸ்ட் லெட்சர் கொடுத்ததே ராம் சார் தான்"

"என்ன?" என்று சற்று திகைத்தாள் கீர்த்தி.

"ஆமா கீர்த்தி, அதுதான் ராம் சார்.. நம்ம டிபார்ட்மெண்ட் ஓல்டு ஸ்டூடண்ட்" என்று அனு கூற "அந்த சாரா?" என்று கீர்த்தி கேட்டாள்.

"அந்த சாரே தான்"

"ம்ம்ம்"

"ஸ்மார்ட்டா இல்ல?"

"ம்ம்ம்"

"பாதி பொண்ணுங்க அவர் பின்னாடி தான்"

"ம்ம்ம்"

"என்ன கீர்த்தி? ம்ம்ம் போடுற அட நீயும் ஃப்ளாட்டா?” என்று அனு கிண்டலாய் கேட்க அதுக்கு "ம்ம்ம்" போட்டாள் கீர்த்தி.

"என்ன ம்ம் ஆ?" என்று அனு அதிர, எதற்கு என்ன சொன்னோம் என்று புரியாமல் நின்றாள் கீர்த்தி.

"அன்றைக்கே கண்களால் தேடியவர் கண் முன்னே நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட போகிறதே" என்று யோசித்துக் கொண்டிருந்தவள் முன் சொடக்கு போட்டாள் அனு.

கனவிலிருந்து விழித்தவள் போல அவளை பார்க்க "என்ன ம்ம்?" என்று கேட்டாள் அனு.

"எதற்கு ம்ம்" என்று யோசித்தவள் அவள் கேட்ட கேள்வி நினைவுக்கு வந்தவளாய், "சே சே நான் எல்லாம் அப்படி இல்ல.. நீ இப்போ போறியா? எனக்கு வேலை இருக்கு" என்று கூறிக்கொண்டே நழுவினாள் கீர்த்தி.

"ஏதோ சரியில்லை" என்று முணுமுணுத்துக் கொண்டே வெளியே போனாள் அனு.

"நான் ஏன் இப்படி அவரையே நினைக்கிறேன்?" என்று நினைத்தவாறே மடக்கி வைத்திருந்த துணிகளை கலைத்துப் போட்டுக் கொண்டிருந்தாள் கீர்த்தனா.


பதினைந்தாம் தேதி காலையிலேயே ரொம்ப பரபரப்பாக இருந்தான் ராம். எல்லா வேலைகளையும் துரிதமாக முடித்தான் ராம். அவன் வேகத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டான் அர்ஜூன்.

"என்னடா இது ஸ்டிரிக்ட் ஆபிஸர் சரியில்லையே" என்று எண்ணிக் கொண்டே ராமின் அறைக்குள் நுழைந்தான் அர்ஜூன்.

ஃபார்மல் டிரஸில் ஸ்மார்ட் மேனாக இருந்தான் ராம். அதாவது பார்க்கும் பெண்கள் கிளீன் போல்ட் ஆகும் அளவிற்கு ஸ்மார்ட்.

"என்ன அண்ணா சூப்பரா டிரஸ் பண்ணிக்கிட்டு எங்கே கிளம்பிட்டிங்க?" என்று கேட்டான் அர்ஜூன்.

"காலேஜ்-கு" என்று ஒற்றை வார்த்தையில் பதில் வந்தது.

"காலேஜ்க்கா? அதுவும் இந்த டிரஸிலயா? என்று ஆச்சரியப்பட்டான் அர்ஜூன்.

அதுவரை கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொண்டிருந்தவன் திரும்பி "ஏன்டா இவ்வளவு ஆச்சரியம்?" என்று கேட்டான் ராம்.

"நல்லா டிரஸ் பண்ணிருக்கீங்களே அதான் கேட்டான்" என்றான் அர்ஜூன்.

"அப்போ நான் இதுக்கு முன்னாடி நல்லா டிரஸ் பண்ண மாட்டேனா?" என்று கேட்டான் ராம்.

"அதை நான் வேற என் வாயால சொல்லணுமா அண்ணா? இப்படி கேட்குறது உங்களுக்கே ஓவரா தெரியல" என்று கிண்டலாய் கேட்டான் அர்ஜூன்.

"ஏய் நான் இன்னைக்கு ரொம்ப நல்ல மூடுல இருக்கேன்.. ஸோ ஓவரா ஓட்டாம இடத்தை காலி பண்ணு இல்ல உன்னை காலேஜ்ல விடாம போயிடுவேன்" என்று மிரட்டினான் ராம்.

"அய்யோ ஏன் அண்ணா இந்த கொலை வெறி? நீங்க வரதுனால தான் என் இமேஜ் கொஞ்சம் அடிபடாம இருக்கு.. நீங்க வரலைன்னா மொத்த மோகினி பிசாசுங்களும் என்னை காலி பண்ணிடும்" என்று அப்பாவியாய் அர்ஜூன் கூற ராம் சிரித்தான்.

"குட் அண்ணா.., ஆனாலும் ஏதோ ஸ்பெஷல் இருக்கே.. இல்லனா நான் படுத்துற பாட்டுக்கு அட்லீஸ்ட் இரண்டு அடியாவது விழுந்துருக்கணுமே?" என்று வாய்விட்டே யோசித்தான் அர்ஜூன்.

"அடி தானே தந்துட்டா போச்சு" என்று கையை உயர்த்தவும், இரண்டு அடி பின்னாடி தள்ளி நின்று கொண்டு "மேட்டரை சொல்லிட்டு அடிங்க சார்" என்றான் அர்ஜூன்.

அதற்கும் சிரித்தான் ராம்.

"அண்ணா ஏதாவது ஏஞ்சலை மீட் பண்ண போறீங்களா?" என்று கேட்டான் அர்ஜூன்.

சிரிப்பே பதிலாக கிடைத்தது.

"எல்லாத்துக்கும் சிரிக்கிறிங்க.. சரி எங்க போறீங்கணு கேட்கக் கூடாது, அட்லீஸ்ட் எங்க போய்டு வருவீங்கனு சொல்லிட்டு போகலாமே? என்று கேட்டான் அர்ஜூன்.

"VMR காலேஜ்க்கு போயிட்டு வருவேன் இன்னைக்கு CSE டிபார்ட்மெண்ட்ல M.E. ஸ்டூடண்ட்ஸ்க்கு ஃபிரெஷர்ஸ் டே.. நான் தான் சீஃப் ஹெஸ்ட்" என்று ராம் விவரம் தெரிவிக்க ஏகத்திற்கும் அதிசயப்பட்டான் அர்ஜூன்.

"நீங்க இப்படியெல்லாம் போக மாட்டிங்களே.. பொம்மை மாதிரி பசங்க முன்னாடி உட்கார பிடிக்காதுனு சொல்லுவீங்களே.. இப்போ எப்படி ஒத்துக்கிட்டிங்க?" என்று தன் கேள்வி படலத்தை தொடங்கினான் அர்ஜூன்.

"ஹெச்.ஓ.டி இன்வைட் பண்ணாங்க அதான்" என்று சமாளித்த ராமை பார்த்து,

"இதுக்கு முன்னாடி கூப்பிட்டவங்க எல்லாம் ஹெச்.ஓ.டி இல்லயா? ஒரு வேளை பக்கத்து வீட்டுக்காரன் கூப்பிட்டானோ?" என்று யோசித்தான் அர்ஜூன்.

"ஏன்டா இப்ப பக்கத்து வீட்டுக்காரனை இழுக்குற? இப்ப உனக்கு என்ன தெரியனும்?" என்று கேட்டான் ராம்.

"நீங்க இப்ப எதுக்கு அங்க போக ஒத்துக்கிட்டிங்க? ஏதாவது ஏஞ்சல்?" என்று கேட்டான் அர்ஜூன்.

"ஆமான்னு சொன்ன என்ன பண்ணுவ?" என்றான் ராம்.

"எனக்கு தெரிஞ்ச ஐடியாவை கொஞ்சம் அள்ளி வீசத் தான்" என்றான் அர்ஜூன்.

"எனக்கு ஐடியா சொல்ற அளவுக்கு நீ இன்னும் வளரல டா" என்று ராம் கூற, "நானா? உங்களை விட இரண்டு அடி கம்மியா இருந்தா வளரலனு அர்த்தமா? நான் நல்லா ஐடியா சொல்லுவேன். என் ஃபிரண்ட்ஸ்க்கு கூட நான் தான் ஐடியா சொல்லுவேன்" என்று அர்ஜூன் பெருமை பட்டான்.

"உன் ஃபிரண்ட்ஸ் ஏன் முன்னேறாம இருக்காங்கனு இப்போ தான் டா புரியுது" என்று ராம் கூற, "என்ன அண்ணா கலாய்கிறீங்களா? சரி அதை விடுங்க... யார் அந்த ஏஞ்சல்? பேர் என்ன? ஊர் என்ன? என்ன படிக்குறாங்க?" என்று வரிசையாய் கேள்விகளை அடுக்கினான் அர்ஜூன்.

"தெரியாது" என்ற ஒற்றை வரி பதிலாய் வர திகைத்தான் அர்ஜூன்.

"என்ன அண்ணா? எதுவும் தெரியாதா? அப்புறம் எப்படி லவ் பண்றீங்க?" என்று கேட்டான் அர்ஜூன்.

"எல்லாமே தெரிஞ்சிட்டு வர்றது பேரு காதல் இல்ல அர்ஜூன்.. அவளை இன்னும் சரியாய் பார்த்தது கூட இல்லை. ஆனா அவளை பார்த்த நாள்ல இருந்து இதுவரை ஒருநாள் கூட நான் அவளை பத்தி நினைக்காமல் இருந்ததில்லை.. மேக்கப் போட்டுக்கிட்டு அழகை காட்டுகின்ற பெண்களுக்கு மத்தியில் மேக்கப் இல்லாமல் இருக்குற அவ அழகு எனக்கு பிடிச்சிருக்கு.. இன்னைக்கு சான்ஸ் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன்.. கிடைச்சா மீதியை வந்து சொல்றேன்" என்று ராம் கிளம்ப எத்தனிக்க,

"அப்பா.., அண்ணா.., லவ்" என்று திணறினான் அர்ஜூன்.

ஒரு புன்னகையுடன் "அப்பாவுக்கு லவ் மேல வெறுப்பு இல்ல அர்ஜூன்.. அவங்களை மீறி பண்ணினாதான் கோவம்.. அதுவே அவங்க சம்மதத்தோட பண்ணினா சந்தோஷம் தான்.. நான் அப்பா சம்மதத்தோடத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்" என்று கூற அர்ஜூன் நிம்மதியடைந்தான்.

ராம் அர்ஜூனை காலேஜ்-ல் விட்டான்.. "ஆல் தி பெஸ்ட் அண்ணா" என்று சொன்னவாறே உள்ளே நடந்தான் அர்ஜூன்

என் இனிய தேவதையே!
உன்னை காணும் ஆவல் கண்டு
உன்னையே தடர்ந்து வரும் எனக்கு
இன்றாவது உன் தரிசனம் கிடைக்குமா?
கோவிலில் கடவுளை பார்க்க காத்து கிடக்கும் பக்தனை போல
உன் திரு விழிகள் என்னை காண
தவம் கிடக்கிறேன்
இன்றேனும் தரிசனம் தந்து
என் ஆசை நிறைவேற்றி விடு என்னவளே..!
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 6

ஹாஸ்டல் ரூமில் அனன்யா கத்தி கொண்டிருந்தாள். “ஏய் கீர்த்தி அப்பவே ரெடி ஆகிட்டேன்னு சொன்னே.. இதுவரைக்கும் அங்க என்ன தான் பண்ணிக்கிட்டு இருக்கே” அனு கூப்பிட கீர்த்தி உள்ளே இருந்து குரல் கொடுத்தாள்.

“இதோ ரெண்டு நிமிஷம் தான்.. வந்துடுறேன் அனு” என்றவள் வெளியே வந்த போது பிங்க் கலர் சுடிதாரில் தேவதையாய் மிளிர்ந்தாள்.

அவள் வெளியே வந்தவுடன் “அப்பாடா” என்று பெருமூச்சை வெளியேற்றிய அனு அவள் பக்கத்தில் போய் மேலும் கீழும் பார்த்தாள்.

“என்ன அனு இப்படி பாக்குற?”

“இல்லை தேவலோகத்து ரம்பை ஊர்வசி மேனகா மூணு பேருல ஒருத்தியை நகர்வலம் போக இந்திரன் அனுப்பிடாரோன்னு பார்த்தேன்”

“ரொம்ப ஓட்டிடாத அனு.. அப்புறம் அந்த தேவலோகத்து தேவதை கையால் அடி வாங்குற பாக்கியம் கிடைச்சிடும்” என்று கீர்த்தி கூற

“அய்யோ அப்படி எல்லாம் அடிச்சு வச்சிடாத தாயே.. அனு பாவம்” என்று அவள் பயந்த மாதிரி நடிக்க கீர்த்தி சிரித்தாள்.

“நல்லா சிரி.. உன்கிட்ட பிங்க் கலர் தவிர வேற கலர் டிரஸ் இல்லையா? எப்பவும் பிங்க்லையே ஜொலிக்குற?”

“அது தான் ஜொலிக்குறேன்னு சொல்லிட்டியே.. அதுக்காக தான்..” என்று கீர்த்தி கூற அனு முறைத்தாள்.

“முறைக்காத அனு பயமா இருக்குல..” என்று கீர்த்தி கிண்டலாக கூறினாலும் “அப்பாவுக்கு பிங்க் பிடிக்கும் அனு.. சோ என்கிட்டே நிறைய பிங்க் டிரஸ் இருக்கும்” என்று அதன் காரணத்தை கூறினாள்..

“ஆனா இந்த டிரஸ் நீ ஏற்கனவே போட்ருக்கியா? அன்னைக்கு முதல் நாள் காலேஜ்க்கு இது தானே போட்ருந்த?” என்று சந்தேகமாக கேட்கவும் கீர்த்தி உடனடியாக “அது வேற டிசைன் இது வேற டிசைன்.. அப்பவே டைம் ஆச்சுன்னு சொன்ன.. இங்க நின்னுகிட்டு கதை அளக்குற” என்று அவளை திசை திருப்ப

உடனே அனுவும் “சரி சீக்கிரம் போகலாம் வா” என்று கிளம்பினாள்..

கீர்த்தி மனதில் சிரித்தாள். “கரெக்டா கண்டு பிடிச்சிட்டாளே.. ஆனாலும் சமாளிச்சிட கீர்த்தி” என்று தனக்கு தானே சபாஷ் போட்டு கொண்டாள். அப்புறம் அன்னைக்கு போட்ட டிரஸ் தான்னு உண்மைய சொல்ல முடியுமா என்ன? (யாருக்காக போட்டாளோ?)

கல்லூரி முடிந்தவுடன் கிளம்பினால் டைம் ஆகும்.. எனவே அரைநாள் விடுப்பு எடுத்துக் கொண்டு ஃபிரெஷர்ஸ் டேக்கு கிளம்பினான் ராம்.

எப்பவுமே உள்ள வழக்கப்படி கரெக்ட் டைம்க்கு போய் சேர்ந்து விட்டான். ஹெச்.ஓ.டி-யுடன் அவன் ஆடிட்டோரியம் போன போது அங்கே மாணவர்கள் ஏற்கனவே வந்திருந்தனர். ராமின் கண்கள் அங்குமிங்கும் அலை பாய்ந்தன. ஆனால் கீர்த்தனா அனுவிற்கு பின்னால் குனிந்து இருந்ததால் அவனால் அவளைப் பார்க்க முடியவில்லை.

ஃபிரெஷர்ஸ் டே ஆரம்பித்து ராம் பேசும் போது கூட தேடினான். ஆனால் சிக்கவில்லை அவன் கண்களில். "ஒரு வேளை இந்த டிபார்ட்மெண்ட் இல்லையோ?" என்று நினைத்தான் ராம்.

ஃபிரெஷர்ஸ் டே முடிவில் பாடல் பாடும் நிகழ்வு நடத்தப்பட்டது. பாடல் என்றவுடன் கீர்த்தனாவின் தலை நிமிர்ந்தது. அது ராமின் கண்களில் பட்டது.ஆனந்த அதிர்ச்சி ராமிற்கு.. "இவள் இந்த டிபார்ட்மெண்ட் தானா?" என்று சந்தோஷ கூச்சலிட்டது மனது.. ராம் நல்லா பாடுவான் என்பதால் மைக் முதலில் அவன் கையில் கொடுக்கப்பட்டது.

எழும்பி பாடத் தொடங்கினான் ராம்.

"விழி மூடி யோசித்தால். அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே..
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழை காலம் என் வாழ்வில் வருமா?
மழை கிளியே மழை கிளியே உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே செந்தேனே..."

என்று பாடினான்.அவன் கண்கள் அவளையே நோக்கின.

"அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்" என்பதற்கிணங்க அவள் கண்களும் அவன் கண்களை சந்தித்தது. அவன் பார்வை அவளுக்குள் தாக்கி ஏதோ செய்தது தலையை குனிந்துக் கொண்டாள் கீர்த்தி.

அன்று ஆடிட்டோரியத்தில் பார்த்திருந்தாலும் அவளை ராம் சரியாக பார்க்கவில்லை, ஆனால் அதே சுடிதாரில் ஒரு பெண்ணை கண்டதும் "அவளோ" என்று நினைத்திருந்தான். அவன் அவளை பார்க்காவிட்டாலும் அவளுடைய கண்களை சந்தித்திருந்தான். ஆனால் இப்போது இங்கு அவள் குனிந்திருந்தாள். பாடல் என்றவுடன் அவள் நிமிர்ந்தாள். அதே கண்கள்.. அவன் மனம் கவர்ந்தவளின் அதே கண்கள்.. ஆனந்தமாய் உணர்ந்தான் ராம். இனி அவள் பெயரை அறிய வேண்டும்.

கடவுளே அவன் பக்கம் என்பது போல "அடுத்து கீர்த்தி பாடு" என்று அனு குரல் கொடுத்தாள்.. "யாரந்த கீர்த்தி?" என்று ராம் நினைக்க அவன் தேவதை எழுந்து வந்தாள்.

"ஓ இவள் பெயர் கீர்த்தியா? முழுப்பெயர் என்னவா இருக்கும்?" என்று ராம் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவள் பாடத் தொடங்கி விட்டாள்.

ஏதாவது காதல் பாட்டு பாடுவாள் என்று எல்லாரும் எதிர்பார்த்தால் அவள் பாடியதோ நா.முத்துக்குமாரின் அற்புத வரிகளை ஏந்தியிருந்த தந்தைக்கான பாடல்...

"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே
தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா
மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா
காயங்கள் கண்ட பின்பே உன்னைக் கண்டேன்.."

கீர்த்தனா உருகி பாட, அதில் அனைவரும் கரைந்துக் கொண்டிருந்தனர். ராம் மட்டும் அதில் ஒரு விஷயத்தை உன்னிப்பாக கவனித்தான். அந்த வரி "தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை" என்பது அவள் எவ்வளவு தன் தந்தையை நேசிக்கிறாள், மதிப்புக் கொடுக்கிறாள் என்பதை உணர்த்தியது.

"கீர்த்தியை சம்மதிக்க வைக்கும் முன் அவள் அப்பாவை சந்தித்தே ஆக வேண்டும்" என்று முடிவு எடுத்தான் ராம்.

ராம் முடிவெடுத்த அதே சமயம் அங்கே வேறு ஒரு ஜோடிக் கண்களும் அவளையே அளவெடுத்தன. அது வேறு யாருமல்ல.. அனன்யாவின் அண்ணன் அருண் தான்.

"ஹேய் மச்சி சூப்பரா பாடுறாடா?" என்று புகழ்ந்துக் கொண்டிருந்தான் அருண்.

"ஆமாடா நல்லாதான் பாடுறா" என்றான் தருண்.

"அன்னைக்கு சுரேஷைப் பற்றி கம்ப்ளெய்ண்ட் கொடுக்க வந்தப்போ கூட சரியா நான் இவளை கவனிக்கல.. ஆனா இப்போ வாய்சும் சூப்பர். கீர்த்தியும் சூப்பர்" என்றான் அருண்.

"என்ன அருண் ஒரே புகழாரமா இருக்கே.. கிளீன் போல்டா?" என்று கேட்டான் தருண்.

"பிடிச்சிருக்குடா.. ஆனா இதை அவகிட்ட சொன்னா எப்படி ரியாக்ட் பண்ணுவானு தான் பயமா இருக்கு" என்றான் அருண்.

"பயப்பட்டால் எப்படி மச்சான்? உனக்கு பிடிச்சிருந்தால் போய் சொல்லு... நீ நல்லவன் தானே உன்னை பிடிக்காம போகுமா?" என்று தருண் கேட்க,

"பார்த்த உடனே எப்படிடா போய் சொல்றது? முதல்ல அவளை இம்ப்பிரஸ் பண்ணனும் அப்புறமா சொல்லிக்கலாம்" என்றான் அருண்.

"ரொம்ப லேட் பண்ணிடாதே மச்சான்.. அப்புறம் வேற எவனாவது தூக்கிட்டு போயிடுவான்.." என்று தருண் எச்சரிக்க,

"அவளை பார்த்தால் யாரையும் லவ் பண்ற மாதிரி இல்லடா.. சோ கண்டிப்பா என்னை அக்செப்ட் பண்ணிக்குவா.. எடுத்தோம்,கவிழ்த்தோம்னு செய்யுற வேலை இல்லடா இது. பொறுமையா தான் கையாளணும். அவ எனக்கு தான்" என்றான் மகிழ்ச்சியுடன் அருண்.

பாவம் அருண் கொஞ்சம் நேரம் முன்னாடி நடந்த பார்வை பரிமாற்றத்தை கவனிக்கவில்லை. பார்த்திருந்தால் புரிந்திருக்கும் அவள் கண்கள் சொன்ன செய்தி.. பொறுமையாய் இருந்து சாதிக்கிறானா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.


ப்ரெஷர்ஸ் டே நல்லா படியாக நடந்து முடிந்தது. கீர்த்தனா நிம்மதியாக உணர்ந்தாள். பின்னே எவ்வளவு நேரம் தான் ராமின் பார்வையை சமாளிப்பது? ராமிற்கு சந்தோஷத்தில் ஆடி பாட வேண்டும் போலிருந்தது. வீட்டிற்கு சென்றால் தான் அது முடியும். ஆனால் ஹெச்.ஓ.டி அழைத்ததால் வேறு வேறு வழியின்றி அவருடன் அவர் அறைக்குச் சென்றான். அங்கு அவனுக்கு பல பரிசுகள் காத்துக் கொண்டிருந்தது.

கீர்த்தனாவிற்கும் மனது குழப்பமாகவே இருந்தது. எனவே ரூமிற்கு சீக்கீரம் போக வேண்டும் போலிருந்தது. அனன்யாவை கூட அழைக்காமல் நடந்துக் கொண்டிருந்தாள். அப்போது தான் ஒரு சார் அவளிடம் ஒரு கவரை கொடுத்து அதை ஹெச்.ஓ.டி யிடம் கொடுக்க சொன்னார். "இது வேறு சோதனையா?" என்று நினைத்துக் கொண்டு அங்கே சென்றாள்.

அங்கு ராம் ஹெச்.ஓ.டி யிடம் பேசிக்கொண்டிருந்தான். "இங்கேயுமா?" என்று மனது நினைத்தாலும், அதை ஒதுக்கி வைத்துவிட்டு "மே ஐ கம் இன் சார்?" என்றாள்.

"யெஸ் கம் இன்" என்று ஹெச்.ஓ.டி சொல்ல ராம் திரும்பி பார்த்தான். அங்கே அவன் தேவதை நின்றுக் கொண்டிருந்தாள்.

ஒரு வினாடி இருவரின் பார்வைகளும் பரிமாறின.. மறுநிமிடம் "என்ன கீர்த்தனா?" என்று ஹெச்.ஓ.டி கேட்க விழிப்புற்றாள் கீர்த்தி.

"ஓ மேடம் நேம் கீர்த்தனாவா?" என்று ராம் நினைத்துக் கொண்டிருக்க

"இந்த கவரை உங்ககிட்ட கொடுக்க சொல்லி K.R சார் கொடுத்தாங்க" என்று கவரை நீட்டினாள்.

வாங்கிய ஹெச்.ஓ.டி "தேங்க்ஸ் கீர்த்தனா" என்றவுடன், "ஓகே சார் நான் வரேன்"என்று கிளம்பினாள்.

ராமிற்கு "அய்யோ போறாளே" என்று இருந்தது.

அப்போது தான் நினைவு வந்தவராக ஹெச்.ஓ.டி "ராம் திஸ் இஸ் கீர்த்தனா, M.E. பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்" என்று ராமிற்கு அறிமுகப் படுத்தியதுடன், "கீர்த்தனா திஸ் இஸ் ராம். ஹெச்.ஓ.டி ப்ரம் நியரஸ்ட் காலேஜ். ஹி இஸ் அவர் ஓல்டு ஸ்டூடன்ட்" என்று அறிமுகப் படுத்தினார்.

இருவரும் ஒரு 'ஹாய்' சொல்லிக் கொண்டனர்.

"என்ன ராம்? பொதுவாக யாரையுமே ஞாபகம் வச்சிருக்காத தான் கீர்த்தனாவை எப்படி ஞாபகம் வச்சிருக்கேனு யோசிக்கிறியா?" என்று அவன் யோசனையை பார்த்துக் கேட்டார்.

அவள் டிடெய்ல்ஸ் அறிய வேண்டுமே என்று நினைத்துக் கொண்டிருந்தவன் அவரது கேள்வியில் ஏதாவது விடை கிடைக்கும் என்றெண்ணி "எஸ் சார்" என்றான்.

"இங்கே சுரேஷ்னு ஒரு பையன் படிச்சான். எல்லா கெட்டப் பழக்கங்களும் அவனுக்கு உண்டு. பொண்ணுங்க அவனுக்கு விளையாட்டுப் பொருள்.. அவன் அனன்யானு ஒரு பொண்ணு கிட்ட பிரச்சினை பண்ணினப்போ கீர்த்தனா தான் அவனை தட்டிக் கேட்டாள். இவ கொடுத்த புகார்ல அவனை ஒரு மாசம் சஸ்பெண்ட் பண்ணிருக்காங்க" என்று விளக்கம் சொன்னார்.

"ஓ அப்படியா சார். கிரேட். ரொம்ப தைரியசாலி தான். எந்த ஊரு கீர்த்தனா?" என்று அவளைப் பார்த்து கேட்டான்.

"வத்தலகுண்டு சார்" என்று அவனைப் பார்த்துக் கொண்டே சொன்னாள் கீர்த்தனா.

அந்த பார்வையை ரசித்தவன் "ஆம்" என்று பதில் அளித்து விட்டு "வத்தலகுண்டு பொண்ணு ரொம்ப தைரியசாலி தான் சார்.. ஆனா சென்னைக்கு படிக்க வந்திருக்கிற ரீஸன் தான் புரியல?" என்று கேட்டான் ஹெச்.ஓ.டி யை பார்த்த படி,

"ஷி வாண்ட்ஸ் டூ ஸ்டடி இன் சிட்டி. ஷி காட் குட் பர்செண்டேஜ் இன் B.E.," என்று விவரம் தெரிவித்தார் ஹெச்.ஓ.டி.

"ஓ தட்ஸ் நைஸ் கீர்த்தனா. ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் ஃப்யூச்சர்" என்று கூறினான் ராம்.

"தேங்க்யூ சார்" என்று ராமிடம் கூறி விட்டு ஹெச்.ஓ.டி யிடம் ஒரு தலை அசைப்புடன் விடை பெற்றவள் நேராக ரூமிற்கு வந்தாள். இது சரியா என மனம் கேட்ட போதும் இனிய நினைவுகளுடன் வலம் வந்தாள் கீர்த்தனா.


ராம் ஹெச்.ஓ.டி யிடம் விடைப் பெற்று வீட்டிற்கு விரைந்தான். அவனுடைய மனம் முழுவதும் அவன் மனம் நிறைந்தவள் ஆக்கிரமித்திருந்தாள். வீட்டின் வாசலிலேயே காத்திருந்தான் அர்ஜூன். ராம் காரை போர்டிகோவில் நிறுத்தி விட்டு வந்ததும் அவன் முன்னே வந்து நின்றான் அர்ஜூன்.

"என்ன?" என்பது போல ராம் பார்வையால் வினவியதும், "உங்களுக்கு சொல்லனும்னு தோணலயா அண்ணா?" என்று கேட்டான் அர்ஜூன்.

"என்ன சொல்லனும்?" என்று கேட்டான் ராம்.

"இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல? உங்க ஏஞ்சலை பார்த்தீங்களா? பேசினீங்களா?" என்று ஆர்வமாய் கேட்டான் அர்ஜூன்.

அவனது ஆர்வத்தை பார்த்த ராமிற்கு விளையாட்டு காட்ட மனம் வரவில்லை.. சிறு புன்னகையுடன் "பார்த்தேன் பேசினேன்" என்றான்.

அர்ஜூன் பரபரப்பாகினான். "அவங்க பேர் என்ன? என்ன படிக்கிறாங்க?" என்று கேள்வியாய் அடுக்கினான்.

"ஹேய் ரிலாக்ஸ் அர்ஜூன். என்னை விட பயங்கரமாய் எக்சைட் ஆகுறியே? என் சமையல் போரடிச்சிடுச்சா என்ன?" என்று ராம் கேட்க,

"அப்படி கூட வச்சுக்கலாம்.. இப்போ நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க" என்று அர்ஜூன் கேட்டான்.

"ஓகே.. ஓகே.. அவ பெயர் கீர்த்தனா. ஊரு வத்தலகுண்டு,இங்கே M.E. பர்ஸ்ட் இயர் படிக்கிறா.. ரொம்ப தைரியசாலியான பொண்ணாம்.." என்று கூறி கல்லூரியில் நடந்த நிகழ்வுகளை விவரித்தான்.

"ஓகோ அப்ப உங்களுக்கு அடி தர ஆளு ரெடினு சொல்லுங்க. இந்த ஒரு காரணத்துக்காகவே அவங்க தான் எனக்கு அண்ணியா வரனும்" என்று அர்ஜூன் கூறினான்.

"என்னை காலி பண்றதுல உனக்கு அவ்வளவு சந்தோஷமா?" என்று சோகமாய் கேட்டான் ராம்.

"பின்னே இருக்காதா? தினமும் அடி வாங்குறது நான் தானே.." என்றான் அர்ஜூன்.

"சரி முடிவு பண்ணிட்ட நடைமுறைப்படுத்து" என்றான் ராம்.

"சரி அண்ணா.. எப்போ அவங்ககிட்ட சொல்ல போறீங்க?" என்று அர்ஜூன் கேட்டான்.

"அவகிட்ட சம்மதம் வாங்குறதுக்கு முன்னாடி அவ ஃபேமிலி கிட்ட பேசனும்.. அதுவும் அவங்க அப்பா கிட்ட கண்டிப்பா சம்மதம் வாங்கனும்.. அவளுக்கு அவ அப்பா மேல அவ்வளவு மரியாதை.. அதுவும் இல்லாம நல்லா படிக்கிற பொண்ணு. அவ படிப்பையும் பாதிக்க கூடாது. சோ அவ பேமிலி மூலமாதான் அவளை சம்மதிக்க வைக்கனும். சீக்கிரமா அதை பண்ணிடுவேன். இனி அவ பேமிலி பத்தி அறியனும். கொஞ்சம் லேட் ஆகும். எப்படியும் அவ தான் உனக்கு அண்ணி" என்று உறுதி பட கூறினான் ராம்.

"சரி அண்ணா.. நீங்க இவ்வளவு உறுதியா இருக்கும் போது அது கண்டிப்பா நடக்கும்.இப்போ அப்பாவை எப்படி சமாளிக்கிறது?" என்று கேட்டான் அர்ஜூன்.

சரியாக அந்த நேரம் அவர்கள் தந்தை பிரகாஷ் வீட்டிற்கு வந்தார்.

"என்னடா அண்ணனும் தம்பியும் ரகசிய திட்டம் போடுறீங்க? யாரை கவிழ்க்க திட்டம் போடுறீங்க?" என்று கேட்டார்.

"உங்களை தான்" என்று பட்டென சொன்னான் அர்ஜூன்.

"என்னையா? என்ன விஷயம்?" என்று கூர்மையாக பார்த்தபடி கேட்டார்.

ராம் அர்ஜூனை திட்டிய படியே "இல்லப்பா ஒரு பொண்ணு..." என்று தடுமாறினான்.

"என்னது பொண்ணா? காதலா? நீயுமா?" என்று கோபமாக கேட்டார் பிரகாஷ்.

"அப்பா உங்களை மீறி எதுவும் பண்ண மாட்டேன். கீர்த்தனா அவ பேரு. ஊர் வத்தலகுண்டு. V.M.R காலேஜ்-ல M.E. ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறா.. எனக்கு அவளை பார்த்த நிமிஷத்துல இருந்தே பிடிச்சிருக்கு. நான் இன்னும் அவகிட்ட சொல்லலை. அவளும் அவங்க அப்பாவை மதிக்கிறவ. நானும் உங்க சம்மதத்தோட தான் அவளை மட்டும் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்" என்று அந்த 'மட்டும்' என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து சொன்னான்.

பிரகாஷிற்கு தன் மகன் சொன்னது நிம்மதியே தந்தது. தன்னை தன் மகன் மதிக்கிறான் என்ற நிம்மதியுடன் ஒரு புன்னகையை சிந்திவிட்டு உள்ளே சென்றார்.

அவர் புன்னகையே சம்மதத்தை தெரிவித்து விட ராமிற்கு சந்தோஷம் பொங்கியது. ஆனாலும் தம்பியை முறைத்தான்.

"எப்படியும் ஒரு நாள் தெரிய வேண்டிய விஷயம் தானே.. இப்பவே தெரிஞ்சிடுச்சு அவ்வளவுதான்.. இனிமேல் சந்தோஷமா அடுத்த ஸ்டெப் எடுத்து வைங்க" என்று சொல்லிவிட்டு அர்ஜூன் நழுவினான்.

அவன் சொன்னது உண்மையே என்பதால் மனநிறைவுடன் உள்ளே சென்றான். ஆனால் அவர் தந்தையே ஒரு நாள் எதிர்க்கப் போகிறார் என்பதை ஒருவரும் அறியவில்லை.


என் அன்பு காதலியே
உன் கண்களை சந்தித்த அந்த நொடி
என் உடம்பின் நாடி நரம்பு முழுவதும்
மின்சாரம் பாயுதடி
உன் கண்களில் எனக்கான தேடலை கண்ட அந்த நொடி
என் மேனி சிலிர்க்குதடி
நமக்கான நேரம் தொடங்கி விட்டதடி
என் கண்மணியே
உன்னை தேடி வருகிறேன்
உன் சம்மதத்தோடு உன்னை கொள்ளையிட
இனியும் காத்திருக்க வைக்காதே
உன்னவன் நான் என்பதை புரிந்து கொள்
என்னுடன் இணைந்து விடு என் தேவதையே..!
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 7

அன்று மதிய உணவு இடைவெளியில் ஸ்ரீஷாவும் நிஷாவும் பேசிக் கொண்டே நடந்துக் கொண்டிருந்தனர்.

"இன்னைக்கு இன்டர்னல் டெஸ்ட் கொஞ்சம் டஃப் இல்ல நிஷா?"

"எனக்கு அப்படி தோணல ஸ்ரீ. நான் இன்னைக்கு நல்லா எழுதிருக்கேன். நல்ல மார்க் எக்ஸ்பெக்ட் பண்றேன்" என்று நிஷா கூறினாள்.

"நீ எப்போ நிஷா கம்மியா மார்க் வாங்குற மாதிரி எழுதிருக்க? நீ எப்படி தான் எல்லாத்தையும் படிக்கிறியோ? நான் இரண்டு கேள்வி படிக்கிறதுக்கு முன்னாடியே தூங்கிருவேன்" என்றாள் ஸ்ரீஷா.

"வீட்டு நிலைமை அப்படி ஸ்ரீ.. நல்லா படிச்சி நல்ல வேலைக்கு போகணும்.. அட சொல்ல மறந்துட்டேனே.. இன்னைக்கு என் அக்காவை மறுவீட்டுக்கு கூட்டிக்கிட்டு வராங்க.. எனக்கு டெஸ்ட்னு நான் காலேஜ் வந்துட்டேன். அம்மா ஸ்பெஷல் சாப்பாடு கொடுத்து விட்டாங்க வா சாப்பிடுவோம்" என்று சொல்லிக் கொண்டே முன்னே நடந்தாள்.

நடந்தவள் திடீரென யாரோ மோதியதில் கையில் இருந்த எல்லாவற்றையும் கீழே போட்டு விட்டாள். அவள் மதிய உணவும் வீணாகியது.

"ஹேய்" என்று கோபத்தோடு நிமிர்ந்தவள் அங்கே அர்ஜூன் நிற்பதை பார்த்து கொதித்தாள்.

"ஏய் இதுவே உனக்கு வேலையா போச்சா? எப்பவும் என் மேலயே மோதுற? அன்னைக்கு லவ் லெட்டர் கொடுத்த.. இப்போ என் லஞ்ச் பாக்ஸ் காலி.. இனி நான் எப்படி சாப்பிடுறது? உன்ன மாதிரி வித விதமா கொண்டு வருவேன்னு நினைச்சியா?" என்று கத்தினாள்.

அர்ஜூன் அகிலனை முறைத்துக் கொண்டே "சாரி" என்றான். பின்னே அவனை தள்ளி விட்டதே அகிலன் தானே. "ஹேய் அர்ஜூன் உன் நிஷா டா" என்று தோளில் இடித்தான். அர்ஜூன் தடுமாறி நிஷா மேல் மோதினான்.

அர்ஜூன் 'சாரி' சொன்னதும் "யாருக்கு வேணும் உன் சாரி? சாப்பாட்டை தட்டி விட்டுட்டு சாரி சொல்றான் சாரி?" என்று முணுமுணுத்து விட்டு நடந்தாள்.

"ஏண்டா இப்படி?" என்று அகிலனிடம் ஒரு பார்வையை செலுத்தி விட்டு "ஹேய் நிஷா ஒரு நிமிஷம் நில்லு..." என்றவன் அவள் நின்றதும் அவள் அருகில் சென்று மணி பர்ஸில் இருந்து ரூபாய் நோட்டுகளை எடுத்தான். நூறு ரூபாயை எடுத்து அவளிடம் நீட்டினான்.

"சாரி தெரியாமல் மோதிட்டேன்.. இந்தா வாங்கிக்கோ.. கேண்டின்ல போய் சாப்பிடு" என்றான்.

"உன் காசு ஒன்னும் எனக்கு தேவையில்லை நீ கிளம்பு" என்றவள் விறுவிறுவென நடந்தாள்.

ஸ்ரீஷா அவனிடம் "ஏன் அர்ஜூன் இப்படி பண்ணின? இன்னைக்கு அவ அம்மா ஸ்பெஷலா பிரியாணி கொடுத்து விட்டுருந்தாங்க.. பாவம் அவள் அதை சாப்பிட விடலையே" என்று கூறி விட்டு நகர்ந்தாள்.

அர்ஜூன் சோகமாக திரும்பி வந்தான். "என்ன அர்ஜூன் ஆச்சு?" என்று கேட்ட கார்த்திகிடம் நடந்ததை கூறினான்.

"சரி விடு அர்ஜூன்.., அவளுக்கும் உனக்கும் ராசி பொருத்தம் சரியே இல்ல.. நீ வா சாப்பிடலாம்" என்று அழைத்துச் சென்றான்.

அர்ஜூனிற்கு சாப்பாடு தொண்டை குழிக்குள் இறங்கவே இல்லை. அவள் சொன்ன வித வித சாப்பாடு எல்லாம் அவனிடம் இல்லை.. வெறும் தயிர் சாதம் தான். ஆனால் அதுவே அவனுக்கு பிடித்தமானது இருந்தாலும் அவள் கொண்டு வந்த ஸ்பெஷல் உணவை தட்டி விட்டதற்காக வருந்தினான். ஒரு முடிவுடன் எழும்பி கைகழுவ சென்றான்.

--------------------------

அருணுக்கு கீர்த்தனாவை எப்படி இம்பிரஸ் பண்ணுவது என்ற யோசனையே நடந்துக் கொண்டிருந்தது.

யோசித்துக் கொண்டிருந்தவன் தோளில் தருண் தொட்டதும் திரும்பினான்.

"என்ன மச்சான்? ஒரே யோசனையா இருக்கு" என்று கேட்டான் தருண்.

"கீர்த்தியை பற்றி தான்" என்றான் அருண்.

"கீர்த்திக்கு என்ன?"

"அவளுக்கு ஒன்னும் இல்லை அவளை எப்படி இம்ப்ரெஸ் பண்றதுன்னுதான் யோசிச்சுட்டு இருக்கேன்" என்றான் அருண்.

"காதல் வர நீ அவளை இம்ப்ரெஸ் பண்ண எல்லாம் தேவையே இல்ல மச்சான். உன் சாதரண ஆட்டிட்யூட் அவளை கவர்ந்தாலே போதும். செயற்கை விஷயங்களினால் அவ உன்னை விரும்புறத விட உன்னோட இயற்கை குணத்திலேயே அவள் கவர படனும்"என்றான் தருண்.

"அது எப்படி தருண்?"

"அது தானா வரும்.. நீ முதல்ல அவகிட்ட போய் சொல்லு"

"பயமா இருக்கு மச்சி. இப்போ வேண்டாம். கொஞ்சமாவது அவ மனசில இடம் பிடிச்சிட்டு சொல்றேன். வேலண்டைன்ஸ் டே க்கு சொல்றேன்"

"திரும்பவும் சொல்றேன்.. ரொம்ப டைம் வேஸ்ட் பண்ணாத.. அப்புறம் அவ உனக்கு இல்லை" என்று எச்சரித்து விட்டு தருண் கிளம்பினான்.

அருண் கீர்த்தியின் மனதில் இடம் பிடிக்கும் வேலையில் இறங்கினான். ஏற்கனவே அவள் மனம் அவளிடம் இல்லை என்பதை அறியாமல்.....

மாலை கீர்த்தியை ரெஸ்டாரண்டுக்கு அழைத்தாள் அனு. வெளியில் சென்றால் மனது கொஞ்சம் அலை பாயாமல் இருக்கும் என்பதால் அனன்யாவுடன் கிளம்பினாள்.

இவர்கள் ரெஸ்டாரண்டுக்கு பக்கத்தில் செல்லும் போது அங்கே அருண் வந்தான்.

"ஹேய் அனு...என்ன இந்த பக்கம்?"

"போர் அடிச்சது அருண். அதான் வெளியில கிளம்பினோம்"என்றாள் அனு.

"வெளியில தானே போறீங்க எனக்கும் போர் அடிக்குது. நானும் உங்க கூட ஜாயின் பண்ணிகிட்டுமா?" என்று கேட்டான்.

"ஹேய் கண்டிப்பா" என்றாள் அனு.

அருண் கீர்த்தனாவை பார்த்தான். அவள் அமைதியாய் நின்று கொண்டிருந்தாள்.

"உன் ஃபிரெண்டுக்கு விருப்பம் இல்லை போல அவங்க ஒன்னுமே சொல்லலையே" என்று அருண் கீர்த்தியை பார்த்தவாறே கூறினான்.

"கீர்த்தி அங்க என்ன பார்வை?" என்று கேட்டு தட்டினாள் அனு. ஏனெனில் கீர்த்தனா அந்த ரெஸ்டாரண்ட் பக்கத்தில் யாருடனோ பேசிக் கொண்டிருந்த ராமை பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் ராம் இவளை பார்க்கவில்லை.

அனுவின் சத்தத்தில் திரும்பி பார்த்தவள், "ஒன்னும் இல்ல அனு உங்க அண்ணா தாராளமா வரலாம்"என்றாள்.

"சரி அருண் என்ன பண்ணலாம்? எங்கே போகலாம்?" என்றாள் அனு.

"இந்த ஈவினிங் டைம் எங்கே வெளியில போக முடியும்? அந்த காஃபி ஷாப் போகலாம் கொஞ்சம் டைம் பாஸ் ஆகும்" என்றான் அருண்.

"சரி வா கீர்த்தி" என்று கீர்த்தனா கை பிடித்துக் கொண்டு கூட்டிச் சென்றாள் அனு.

காபி ஷாப் போய் மூன்று கோல்ட் காஃபி ஆர்டர் செய்து வி்ட்டு வந்த அருண், "என்ன அனு? என்னைலாம் உன் ஃபிரெண்ட்ஸ்க்கு இன்ட்ரடியூஸ் பண்ணி வைக்க மாட்டியா?" என்று தங்கையிடம் கேட்டான்.

"என்னடா இவன் நாமளே இண்ட்ரடியூஸ் பண்ணி வைச்சாலும் 'இவங்களை பத்தி தெரிஞ்சி நான் என்ன பண்ண போறேன்?' என்று கேட்கிறவன், இன்று என்னை தானாக அறிமுகம் பண்ணி வைக்க சொல்றான்? ஏதோ சம்திங் சம்திங்" என்று எண்ணிய படியே,

"கீர்த்தி இது என்னோட அண்ணன் அருண். நம்ம காலேஜ்ல தான் M.E., 2nd இயர் படிக்கிறான். சரியான கோவக்காரன். நல்லா படம் வரைவான்.. பொண்ணுங்க பக்கமே போக மாட்டான். பிரோபசர்ட்ட எல்லாம் நல்ல பேரு. நல்லவன் வல்லவன்" என்று முடித்தவள், அருணை பார்த்து “போதுமா?" என்று கேட்டாள்.

சும்மா அறிமுகம் பண்ணி வைக்க சொன்னால் "ஓவரா பண்றாளே" என்று எண்ணிய படியே "ஹாய் கீர்த்தி" என தனது வலது கையை நீட்டினான். மரியாதைக்காக கீர்த்தி தன் கையை நீட்டி "ஹாய்" சொன்னாள். ஆனால் அருண் கைபட்ட அனுபவத்தை ரசித்துக் கொண்டிருந்தான். இப்போது "ஓவரா பண்றானே" என நினைப்பது கீர்த்தியின் முறையாயிற்று... அதே நேரம் இந்த நிகழ்வு பேச்சை முடித்துவிட்டு திரும்பிய ராமின் கண்களில் பட்டது.

"யார் இவன்?" என்று யோசித்தவன் "ஒருவேளை நண்பனாக இருக்கலாம் ஆனாலும் நம்ம ரூட்ல கிராஸ் ஆகாமல் இருந்தா சரி" என்று நினைத்தான். கீர்த்திகிட்ட பேச வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த ராமிற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவள் பெற்றோர் பற்றி அறியலாம் என தோன்றியது. ஆனால் அவள் நண்பர்கள் முன் போய் பேசி அவளை சங்கடப்படுத்த விரும்பவில்லை. எனவே அவள் தனியாக நிற்பாளா? என்று காத்துக் கொண்டிருந்தான். அதே நேரம் கீர்த்தியும் ராமை பார்த்தாள். அப்படியே நின்று விட்டாள்.

அனன்யா கீர்த்தியிடம் "கீர்த்தி கொஞ்சம் நீ இங்கேயே இரு. நானும் அருணும் பக்கத்தில இருக்கிற கிப்ட் சென்டருக்கு போய் எங்க அம்மா பிறந்த நாளுக்கு கொடுக்க கிப்ட் வாங்கிட்டு வாரோம்" என்று கூறி அருணை இழுத்துச் சென்றாள்.

அருணுக்கு அனு மேல் கோபமாக வந்தது. 'நல்ல சான்ஸ் இப்படி கெடுத்துட்டாளே' என்று நினைத்தவன் ஒன்றும் பேசாமல் அவளுடன் சென்றான்.

ராமிற்கு மிகவும் சந்தோஷம் "கீர்த்தனா தனியா தான் நிற்கிறாள் போய் பேசுவோம்" என்று அவளை நோக்கி வந்தான்.

"ஹாய் கீர்த்தனா"

"ஹலோ சார்"

"என்ன இங்க தனியா நிக்குற கீர்த்தி?"

"என் பிரெண்ட் அனு கூட வந்தேன் சார். அவ அவங்க அம்மாக்கு பர்த்டே கிப்ட் வாங்க போயிருக்கா.. அதான் வெயிட் பண்றேன்.."

"ஓகே கீர்த்தி.. நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனுமே பேசலாமா?" என்று கேட்டான் ராம்.

"இப்போ என்ன பேச போறாரோ" என்று ஒரு சிறு தயக்கம் இருந்தாலும் "பேசலாம் சார்" என்றாள்.

"இந்த சாரை விட மாட்டேங்குறாளே?" என்று எண்ணிய படியே "உன் அப்பா பேரு என்ன?" என்று கேட்டான்.

"எதுக்கு என் அப்பா பேரு?" என்று திரும்பி கேட்டாள் கீர்த்தி.

கிப்ட் வாங்க போனவர்கள் வருகிறார்களா என்று பார்த்து விட்டு அவளிடம் திரும்பி "நான் உன் ஊர், முகவரியெல்லாம் வச்சு மிஸ் யூஸ் பண்ண மாட்டேன். ஐ பிராமிஸ் யூ.. உன் ஊர்ல எனக்கு தெரிஞ்ச ஒருத்தரை தேடனும் பார்த்து ரொம்ப வருஷமாச்சு. கடைசியாக அவங்க அந்த ஊருக்கு தான் வந்தாங்க. நீயும் அதே ஊரு. உன்னை மட்டும் தான் எனக்கு இப்போ தெரியும். நீ உன் அட்ரஸ் கொடுத்தா உன் அப்பா வழியாக நான் அவங்களை தேட உதவியா இருக்குமே. அதுக்கு தான் கேட்டேன் இப்போவாது சொல்லுவியா?" என்று கேட்டான் ராம்.

"நான் உங்களை எப்படி நம்புறது?"

"வேணும்னா நீ என் கூடவே அங்கே வர்றியா?"

"இப்போ வர முடியாதே.." என்று இழுத்தாள் கீர்த்தனா.

"தெரிஞ்சுதானே இப்போ அட்ரஸ் கேக்குறேன்" என்று நினைத்து கொண்டே "இப்போ நீ அட்ரஸ் கொடு.. உன் வீட்டுக்கு போன் பண்ணி இந்த விஷயத்தை சொல்லிடு" என்றான்.

"சரி உங்களை நம்புறேன். நீங்க ஏமாத்தினாலும் சட்டம்,போலீஸ் எல்லாம் எதுக்கு இருக்காங்க?" என்று கூறி விட்டு தன் தந்தை பெயர் மற்றும் முகவரியை கொடுத்தாள்.

'ஆமா போலீஸ்க்கு இவ குடுக்குற ஒரு கம்பிளையிண்ட் பின்னாடி போறதுதான் வேலை.. பேசுறா பேச்சு.. ஆனாலும் இப்படி நம்பி உடனே அட்ரெஸ் தாராளே.. சரியில்லையே.. பின்னாடி திருத்திக்கலாம் அவளை ஆனாலும் அவ சொன்னதுக்கு நன்றி சொல்லாம குறை கண்டுபிடிக்கிறியே ராம்' என்று எண்ணிய படியே, "ஓகே தேங்க்ஸ் கீர்த்தி. நீ மறக்காம உன் வீட்டுக்கு இன்பார்ம் பண்ணிடு. பை டேக் கேர்" என்று கூறிவிட்டு நகர்ந்தான்.

சிறிது நேரத்தில் ஒரு கிப்டுடன் அனு மற்றும் அருண் வரவே மூவரும் கிளம்பினர்.

---------------------------

அர்ஜுன் வீட்டில் சோகமாக அமர்ந்திருந்தான். பிரகாஷ் அவன் அருகில் வந்து "ஏன் இப்படி டல்லா இருக்குற அர்ஜுன் ? " என்று கேட்டார்.

"காலேஜ்-ல பிரண்ட் கூட சண்டைப்பா" என்று கூறிவிட்டு நழுவினான். அவன் தந்தையிடம் பகிர்ந்து கொள்ளாத விசயங்களை எல்லாம் அண்ணனிடம் தான் பகிர்வான். இதையும் தந்தையிடம் சொல்லலாம் ஆனால் 'பெண்' என்றால் அவர் கொஞ்சம் கோபப் படுவார். அதனாலேயே அண்ணனுக்காக காத்திருந்தான்.

ராம் மிகவும் சந்தோசமாக வீட்டிற்கு வந்தான். அர்ஜீனின் கவலை தோய்ந்த முகத்தை அவன் காணவில்லை. ஆனால் அர்ஜுன் தன் அண்ணனின் சந்தோசத்தை கண்டு தானும் உற்சாகமாகினான்.

"என்னண்னா ரொம்ப சந்தோசமா இருகீங்க உங்க கீர்த்திய மீட் பண்ணிங்களா?" என்று கேட்டான்.

"மீட் மட்டுமா பண்ணினேன் அவ அட்ரஸ் கூட வாங்கிட்டேன் டா. ஐம் சோ ஹேப்பி" என்றான் ராம்.

"அட்ரா சக்க இது தான் அண்ணன். நினைச்ச காரியத்த தள்ளி போடாம உடனே முடிச்சுருவீங்க. சரி இனி எப்போ அவங்க பெற்றோரை மீட் பண்ண போறீங்க ?" என்று உற்ச்சாகமாக கேட்டான் அர்ஜுன்.

"இந்த வீக் ல போக வேண்டியது தான். வேற ஒரு வேலையும் இல்ல" என்று கூறியவன் விசிலடித்துக் கொண்டே உள்ளே சென்றான். அர்ஜுன் சந்தோசமாக தன் தந்தையிடம் இதை பகிர்ந்து கொள்ள சென்றான்.

அடுத்த நாள் காலையில் ராம் சமையல் அறையில் காய்களை வெட்டிக் கொண்டிருந்தான்.

"இன்னைக்கு என்னண்ணா சமையல்?" என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான் அர்ஜுன்.

"இது என்னடா புதுசா கேட்குற?. இன்னைக்கு காரக் குழம்பும் பொறியலும் தான் . ஏன்? " என்று ஆச்சரியமாக கேட்டான் ராம். ஏனெனில் இப்படி அர்ஜுன் வந்து கேட்டதே இல்லை. கொடுத்ததை காலேஜ்க்கு கொண்டு போவான்.

"இன்னைக்கு வெஜிடபிள் பிரியாணி பண்ணுறீங்களா அண்ணா?"

"இன்னைக்கா? எனக்கு டைம் ஆச்சே. நாளைக்கு பண்ணி தரவா"என்று கேட்டான் ராம்.

"இல்லண்ணா. இன்னைக்கே வேணும். நான் ஹெல்ப் பண்ணி தரேன் ப்ளீஸ்" என்று கெஞ்சினான் அர்ஜுன்.

"ஹேய் எதுக்கு ப்ளீஸ் எல்லாம் போடுற. சரி நான் பண்ணி தரேன். ஆனால் என்ன விசயம்? எதாவது ஸ்பெஷலா?" என்று கேட்டான் ராம்.

"ஸ்பெஷல் எல்லாம் இல்லண்ணா. நான் நேத்து ஒரு தப்பு பண்ணிட்டேன் அதான்" என்று நிஷாவின் உணவை தட்டியதையும் அப்புறம் நடந்ததையும் சொன்னான்.

"ஓ அதுவா விசயம். சரி நான் பண்ணி தரேன். ஆனாலும் எப்பவும் நிஷா உன் கிட்டயே சண்டை போடுறாளே. அது ஏன்? "என்று கேட்டான் ராம்.

"அதுவா? என் தலை விதி. விடுங்க நான் ஹெல்ப் பண்ணுரேண்ணா. டைம் ஆச்சுன்னு சொன்னீங்களே" என்று ராமிற்கு உதவினான்.

"சரி தான் நடத்து நடத்து" என்று கேலியாக சொன்னாலும் அவன் கேட்ட வெஜிடபிள் பிரியாணியை சமைத்துக் கொடுத்தான்.

"என்னடா ஸ்பெஷலா பிரியாணி" என்று கேட்ட பிரகாஷிடம் "பண்ணனும்னு தோனுச்சு அதான்ப்பா " என்று கூறிவிட்டு சாப்பிட்டுக் கிளம்பினான் ராம். அர்ஜுனை அவன் கல்லூரியில் இறக்கி விட்டு விட அவன் கல்லூரிக்கு கிளம்பினான்.

அர்ஜுன் கொண்டுவந்த சாப்பாட்டை எப்படி நிஷாவிடம் கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான். அப்போது கார்த்திக் அகிலன் மற்றும் கிருஷ்ணா அவன் அருகில் வந்தனர்.

"என்ன அர்ஜுன் யோசனை எல்லாம் பலமா இருக்கு? எதாவது புதுசா கண்டுபிடிக்க போறியா?" என்று கேட்டவாறே அவன் அருகில் அமர்ந்தான் கார்த்திக்.

"இல்ல கார்த்திக். நேத்து நிஷா சாப்பாட்டை தட்டி விட்டுட்டேனே.. அது தான் சாப்பாடு கொண்டு வந்தேன். அவகிட்ட எப்படி கொடுக்கிறதுன்னு தெரியல அதான் யோசிச்சுட்டு இருக்கேன்" என்றான்.

"அவ்வளவு தானா? இது கூடவா தெரியல கையால தான் கொடுக்கனும்" என்றான் கார்த்திக்.

அவனை முறைத்தான் அர்ஜுன். "அய்யோ முறைக்காதடா.. பயமா இருக்கு " என்றவன் சுற்றும் முற்றும் பார்த்தான். அப்போது காயத்ரி வந்து கொண்டிருந்தாள்.

"ஹேய் மச்சான் அந்த சாப்பாட்டு கேரியர என் கிட்ட கொடுடா" என்று கேட்டான் கார்த்திக்.

"ஏன் டா நீ சாப்பிட போறியா?" என்று அர்ஜுன் கேட்க

“ஆமா இத சாப்பிட்டு தான் நான் உயிர் வாழணுமாக்கும். அட போடா. நானே என் காயத்ரி கிட்ட பேச சான்ஸ் கிடைக்குமேன்னு கேட்டேன்." என்றான் கார்த்திக்.

"ஓஹோ அதான் மேட்டரா? அர்ஜுன் அத அவன் கிட்ட கொடுடா. காயத்ரி நிஷா க்ளாஸ் மேட் தான். அவ கொடுத்திடுவா." என்று அகிலன் சொல்லி முடிப்பதற்குள் அதை எடுத்துக் கொண்டு சென்றான் கார்த்திக்.

"சரியான அவசரகுடுக்கை" என்று திட்டினாலும் கார்த்திக்கை பார்த்து கொண்டு நின்றான். அவன் மொக்கை வாங்குவதை காணும் பாக்கியம் இனியொரு முறை கிடைக்குமா என்ன?

கார்த்திக் காயத்ரியிடம் டிபன் பாக்ஸை நீட்டினான்.

"என்ன இது ?" என்று கேட்டாள் காயத்ரி.

"லஞ்ச்" - கார்த்திக்

"லஞ்சா? எனக்கு வேண்டாம். நான் ஏற்கனவே கொண்டு வந்திருக்கேன்" - காயத்ரி.

"உனக்கு யாரு கொடுத்தது. நிஷாவுக்கு அர்ஜுன் கொடுத்தான். இத அவ கிட்ட கொடுத்துடு" என்று அவளிடம் நீட்டினான்.

"இத நீங்களே அவகிட்ட நேரடியாக கொடுக்கலாமே" என்று கேட்டாள் காயத்ரி.

அப்புறம் உன் கிட்ட பேசுற சான்ஸ் எப்படி கிடைக்கும் என்று மனதில் நினைத்தவாறே "நீ அவ கிளாஸ் மெட் தானே. ஈஸியா வேலை முடியும்னு நினைச்சேன். சரி விடு நானே கொடுத்துடுறேன்" என்று கூறி விட்ட நகல எத்தனித்தான் கார்த்திக்.

"ஒரு நிமிஷம்.. நானே அத கொடுத்துடுரேன்" என்று கூறி விட்டு வாங்கிச் சென்றாள் அவள்.

வெற்றிப் புன்னகையுடன் வந்தான் கார்த்திக். ஆனால் சுவற்றில் அடித்த பந்தாய் அந்த சாப்பாடு திரும்பி வந்தது.

"நீ சாப்பாடு தந்து தான் நான் சாப்டனும் என்கிற நிலைமை வரல. இந்த வேலைய இதோட நிறுத்திடு" என்று பேப்பரில் ஒரு வாசகத்துடன்..

கார்த்திக் "இன்னைக்கு அவளுக்கு கொடுத்து வைக்கலடா. நாம சாப்பிடலாம். " என்று உண்ண ஆரம்பித்தான்.

அர்ஜுன் கையில் இருந்த பேப்பரை தூர தூக்கி எறிந்தான். மிதமிஞ்சிய கோபத்தில்.....


என்னவளே..!
உன் கரும் கூந்தல் என் கைகளில்
தவழ்ந்து விளையாட ஆசையாக தான் இருக்கிறது
ஆனாலும் உன் ஒற்றை வார்த்தை சம்மதத்திற்க்காக
காத்திருக்கிறேன் என் ஆருயிரே!


நீ கோப படும் பொழுதெல்லாம்
அதை ரசிக்கவே தோன்றுகிறது
நீ காய படுத்தும் அந்த நொடி
என்னை விட உன் மனம் அதிகம் காயப்படும் என
உன் ஒற்றை விழிநீரில் அறிந்து கொண்டேன்
மன்னித்து விடு
இனியும் உன் கண்ணீரை காணும் சக்தி எனக்கில்லை
என்னை புரிந்து கொள்
உனக்கானவனாக இருப்பேன் என் அன்பே..!
 
Status
Not open for further replies.
Top