All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.​

நிலா ஶ்ரீதரின் "உன்...
 
Notifications
Clear all

நிலா ஶ்ரீதரின் "உன்னில் சரணடைந்தேன்...!" - கதை திரி

Page 2 / 2
 

(@nila-sridhar)
Eminent Member Author
Joined: 3 months ago
Posts: 30
Topic starter  
அத்தியாயம் - 8
 
இன்னும் ஒரு பத்து நாட்கள் சென்றிருந்தது. பெரும்பாலான வீட்டில் ஆண் வீட்டு செலவிற்கு பணம் தருவான், பெண் அதை வைத்து குடும்பம் நடத்துவாள்.
 
இங்கோ வித்தியாசம். வர்ணிகா பணம் கொடுக்க, சரண் அதை வைத்து வீட்டு பொறுப்பை பார்த்துக் கொண்டான்.
 
சரணுக்கு இதில் ஒருமாதிரி இருந்தாலும் அவனுக்கு வேறு வழியில்லை. அதற்காக அவன் அமைதியாகவும் இருந்து விடவில்லை. காலையிலேயே சமைத்து வைத்துவிட்டு தினமும் ஏதாவது ஒரு வாக் இன்னிற்கு சென்று கொண்டு தான் இருந்தான்.
 
சில நேரங்களில் தந்தைக்கு உதவ அவர் கடைக்கும் செல்வான். அவரோ மகன் வீட்டிற்கு கிளம்பும் நேரம், அவன் கேட்காமலே சில நூறு ரூபாய்களை அவன் சட்டை பையில் வைத்துவிட்டு “வச்சிக்கோ.. பெட்ரோல் போட தேவைப்படும்” என்பார்.
 
அதனால் கடைக்கு செல்வதையே குறைத்துவிட்டான்.
 
சுசியை பார்த்துவிட்டு வரலாம் என்று அவள் வீட்டிற்கு சென்றால் அவளும் அதையே தான் செய்வாள்.
 
“வேலை கிடைக்கிற மாதிரி தெரியல சுசி. நான் தான் வண்டி வச்சிருக்கேனே. ஃபுட் டெலிவரி கம்பெனில கூப்பிடுறாங்க. மாசம் பத்தாயிரம் பிளஸ் இன்சென்டிவ் தர்றாங்களாம். ஒரு டச் ஃபோன் வாங்குனா போதும். போகட்டுமா?” என்று அக்காவிடம் சிறுபிள்ளை போல் கேட்டான்.
 
“இதுக்கா சரண் உன்னை கஷ்டப்பட்டு எம்சிஏ படிக்க வச்சேன்?” என்று அவள் தம்பியை முறைத்தாள்.
 
சுசி தான் தன் இளங்கலை படிப்பை முடித்தவுடன் வேலைக்கு சென்று சரணின் இளங்கலை படிப்பின் பின் இரண்டு வருடமும், முதுகலை படிப்பிற்கான முழுபொறுப்பையும் ஏற்றுக் கொண்டாள்.
 
இல்லையென்றால் அவர்கள் வீட்டு நிதிநிலைக்கு சரண் ஒரு டிகிரியுடன் நிறுத்தி கொண்டு வேலைக்கு சென்றிருப்பான்.
 
அமைதியாக தலை கவிழ்ந்து அமர்ந்திருந்த தம்பியின் தலையை வருடி, “எதோ ஒரு வேலைக்கு போய் காசு பார்த்துட்டேனா, அப்புறம் அதுவே பழகிடும். கொஞ்சம் பொறுமையா ட்ரை பண்ணு, நிச்சயம் நல்ல ஐடி கம்பெனியிலேயே நல்ல சம்பளத்துக்கே வேலை கிடைக்கும்” என்று அறிவுறுத்தினாள்.
 
அத்தோடு தன் கைப்பையில் இருந்த பணத்தை எடுத்து தம்பி கையிலும் திணித்தாள்.
 
அவன் வேண்டாம் என்று மறுக்க “வாங்கிக்கோ. மாமா என் சம்பளத்தை நீயே வச்சிக்கோனு சொல்லிட்டார். வட்டி கட்ட அம்மாவுக்கு கொடுத்தது போக, மீதியை நான் தான் வச்சிருக்கேன். கொஞ்சம் கொஞ்சமா அசலும் கொடுக்க ஆரம்பிச்சிடலாம்” இன்னொரு வீட்டிற்கு வாக்கப்பட்டு சென்றிருந்தாலும் பொறுப்பான தலைமகளாக சொல்லிக் கொண்டே போனாள்.
 
ஏற்கனவே வீட்டின் ஆண் பிள்ளையாக தாய், தந்தையை உடனிருந்து பார்த்துக் கொள்ள முடியவில்லை. இதில் அவர்களது பணத்திற்கான ஓட்டத்திலும் பங்குபெற முடியவில்லையே என்று கண்கள் கலங்கிவிட்டே அங்கிருந்து கிளம்பினான்.
 
நண்பன் வினோத்திடம் அது போன்ற தயக்கம் இல்லாமல் இருக்க, அவனை சந்தித்த போது கடனாக பணம் கேட்கலாம் என்று தான் எண்ணியிருந்தான்.
 
அவனோ “பெரியவீட்டு மாப்பிள்ளை ஆயிட்ட. இனி எனக்கு எதாவது பணம் தேவைப்பட்டா உன்னை தான் கேட்கணும் மச்சான்” என்று இவனை புகழ்ந்து சொல்ல, அதற்கு மேல் அவனிடம் பணம் கேட்பதற்கு தன் தன்மானம் இடம் கொடுக்காமல் போக, அம்முடிவை கைவிட்டான்.
 
வர்ணிகாவிற்கு சரணின் நிதி நிலைமை அவர்கள் தனியாக வந்த அடுத்த நாளே புரிந்துவிட்டது.
 
அவன் கேட்காமலே வீட்டு செலவிற்கு பணம் தருபவள் “டோன்ட் வொர்ரி சரண், இந்தியன் கரென்சி இல்லனா என்ன. என்கிட்ட பௌண்ட்ஸ் இருக்கு. மணி எக்ஸ்சேஞ் பண்ணிக்கலாம். அப்படி இல்லனாலும் ஐ ஹேவ் இன்டர்நேஷனல் டெபிட் கார்டு. வி கேன் யூஸ் இட்” என்பாள்.
 
இவ்வாறே பெண் சிங்கமும் ஆண் சிங்கமும் சேர்ந்து அந்த வீட்டை நடத்தி கொண்டிருந்தது.
 
மகளுக்கு பலமுறை அழைத்து பார்த்த ரகுவரன் அவள் தனது ஒரு அழைப்பையும் ஏற்காத வருத்தத்தில் இருந்தார்.
 
பொறுத்து பொறுத்து பார்த்தவர் அவளது உடமைகளை எடுத்து வந்து தருகிறேன் என்று மனைவியையும் அழைத்துக் கொண்டு இந்தியா புறப்பட்டார்.
 
நேராக மகளது வீட்டிற்கு வந்தவர் “வரு.. எப்படிடா இருக்க? அப்பா கூட பேசமாட்டியா?” என்று மகளின் தலையை வருட, அவளோ எதிர்செயலாற்றாமல் கல் போல் நின்றிருந்தாள்.
 
இருவரையும் அமருங்கள் என்று கூட சொல்லாமல் தங்களறைக்கு போக போனவளை “உன் திங்ஸ்ஸெல்லாம் கொண்டு வந்திருக்கோம் வரு. உன் செர்டிஃபிகேட்ஸும்” என்று மூன்று பெரிய டிராலியை காட்டியவர், தன் பையில் இருந்த அவளது சான்றிதழ்களை எடுத்து மேசையில் வைத்தார்.
 
“அண்ட் யுவர் ஃபேவரேட் டெடி. இது இல்லாம என் பிரின்சஸ் தூங்கமாட்டாளே..” என்று அவளது கரடி பொம்மையை அவள் முன் நீட்ட..
 
“எனக்கு எதுவும் வேண்டாம். எல்லாத்தையும் திரும்ப கொண்டு போங்க. நான் கஷ்டப்படணும்னு தானே எனக்கு சரணை கல்யாணம் பண்ணி வச்சீங்க. போங்க.. நான் கஷ்டப்பட்டுக்கிறேன்” என்று அடிக்குரலில் சத்தமிட்டு விட்டு திரும்ப, சரண் வாசலில் காய்கறி பையோடு உணர்வுகள் துடைத்த முகத்தோடு நின்றிருந்தான்.
 
அவனை பார்த்தும் பார்க்காதது போல் தந்தை கையிலிருந்த கரடி பொம்மையை பிடுங்கிக் கொண்டு, தங்களறைக்குள் சென்று கதவை அடைத்தாள்.
 
மகள் சென்ற பின்னே காய்கறி பையுடன் உள்ளே வந்த சரணை இருவரும் கவனித்தனர். வரு பேசியதை கேட்டிருப்பானோ என்று திகைத்துவிட்டவர்கள், தயங்கி கொண்டே அங்கிருந்து கிளம்பப் பார்த்தனர்.
 
செல்லும் அவர்களை “ஒரு நிமிஷம்" என்று நிறுத்தியவன், “ப்ளீஸ் உட்காருங்க” என்றான்.
 
இருவரையும் உட்கார வைத்து, அவர்களுக்கு குடிக்க கொண்டு வந்து கொடுத்தவன், நேராக அவர்கள் அறைக்குள் செல்ல, அங்கே வர்ணிகா தன் பொம்மையை கட்டிப்பிடித்து கொண்டு கோபமாக அமர்ந்திருந்தாள்.
 
“இப்போ என்னாச்சுன்னு இவ்ளோ சீன் போடுற? எனக்கும் தான் உன்னை கட்டிக்கிறது பிடிக்கல. எங்க அம்மா காலுல விழாத குறையா தான் சம்மதிக்க வச்சாங்க. அதுக்காக அம்மாகிட்ட சண்டையா போடறேன். டெய்லி ஃபோன்ல பேசறேன். ரெண்டு நாளைக்கு ஒருமுறை போய் பார்த்துட்டும் வரேன்” என்று சர்வசாதாரணமாக சொல்ல, அவள் அவனை முறைத்திருந்தாள்.
 
“வா, வந்தவங்களை வாங்கனு கூப்பிட்டு பேசு” என்றான்.
 
அவன் பேசியது பிடிக்காமல் போக “டேய்.. வெஜிடெப்ல்ஸ் வாங்கிட்டு வந்துட்டல, போய் சமைக்கிற வேலைய பாரு” என்று எரிச்சலாக பதிலளித்தாள்.
 
“ஏத்தம்டி உனக்கு” என்றெண்ணியவன், முகத்தில் கடுமை குறைக்காது “இது சரி இல்ல வர்ணிகா. எங்களுக்கு அவர் நல்லவரா இல்லாம இருக்கலாம், உன்னை பொறுத்தவரைக்கும் நல்ல அப்பா. உனக்காக இவ்ளோ தூரம் வந்திருக்கவங்களை இப்படி நடத்தறது சரி இல்ல” என்று அழுத்தமாகவே பதிவு செய்தான்.
 
அதற்கும் வீம்பாக இருந்தவள் “சொன்னா புரியாதா? கெட் அவுட் ஆஃப் மை சைட்” என்று கத்த ஆரம்பித்து பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் படபடவென பொரிந்து தள்ளினாள்.
 
அவள் பேசியதனைத்தையும் பொறுமையாக கேட்டவன், காதை குடைந்துவிட்டு “ஹி ஹி.. வழக்கம் போல ஒன்னும் புரியல” என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு அவ்வறையைவிட்டு வெளியேறினான்.
 
இது இந்த பத்து நாட்களாக நடக்கும் ஒன்று தான். கோபம் வந்தால் அவள் ஆங்கிலத்தில் சத்தமிடுவதும், இவனும் புரியாததால் துடைத்து போட்டுவிட்டு செல்வதும் அவர்களுக்குள் சகஜம். ஆனால் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு அப்படி இல்லையே. மைதிலி உங்களால் தான் என்று ரகுவை சாடினார். ரகுவும் மகளை எண்ணி மன குழப்பத்தில் உழன்றார்.
 
வெளியே வந்த சரணோ “இருங்க சமைச்சிடுறேன்” இருவரையும் எந்த உறவுமுறை வைத்தும் கூப்பிடாமல், பொதுவாக சொல்லிவிட்டு தன் சமையல் வேலையை துவங்கினான்.
 
மைதிலிக்கு, போய் உதவி செய்யலாம் என்று இருந்தாலும் சரணுடன் அத்தனை பழக்கம் இல்லாததால் அமைதியாக அமர்ந்துக் கொண்டார்.
 
சிறிது நேரத்தில் சமையலறையிலிருந்து நல்ல வாசம் கிளம்ப, அடுத்த கால் மணிநேரத்தில் அனைத்தையும் எடுத்து வந்து உணவு மேசையில் வைத்தவன் தங்களறை கதவை திறந்து “வர்ணிகா” என்று குரல் கொடுத்தான்.
 
அவளும் அவனை புரிந்தவள் போல் நாற்காலியில் வந்தமர்ந்து, தனக்கு தேவையானதை எடுத்து வைத்து சாப்பிட துவங்க, அவளை முறைத்துவிட்டு ரகுவையும் மைதிலியையும் அழைத்து உணவை பரிமாறினான் சரண்.
 
தன்னெதிரே அமர்ந்திருப்பவர்களை சிறிதும் கண்டு கொள்ளாது “சரண் வா, நீயும் உட்கார்ந்து சாப்பிடு” என்றாள் ஓரக்கண்களால் தந்தையை பார்த்து கொண்டே.
 
அதுமட்டுமா அவனுக்கு பரிமாறுகிறேன் என்று வேறு கொடுமை செய்தாள்.
 
நால்வரும் சாப்பிட்டு கொண்டிருக்க “அப்புறம் சரண், மிஸ்டர் அண்ட் மிஸஸ். ரகுவரன் கிளம்பிடுவாங்க தானே..” என்றதும் மூவரும் ஒரே நேரத்தில் அவளை நிமிர்ந்து பார்க்க, “நம்ம வீட்டுல ஸ்டே பண்ணலாம் தான். ஆனா இங்க இருக்குறதே ஒரு ரூம் தான” என்று பாவமாக மிச்சு கொட்டி சொல்லிவிட்டு கைகழுவ எழுந்து சென்றுவிட்டாள்.
 
அதை பார்த்திருந்த சரணோ ‘அடங்க மாட்டேங்கறாளே’ என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் எண்ணிக் கொண்டான்.
 
மகளின் செயலில் அவளுக்கு தன் மேலிருக்கும் கோபம் வெளிப்படையாக தெரிந்தாலும், அவர்கள் இருவருக்குள் இருக்கும் நெருக்கமும் புரிய புன்னகையை அடக்கி கொண்டு ரகுவரனும் அங்கிருந்து நகர்ந்தார்.
 
மகள் வீட்டிலிருந்து நேராக தங்கை வீட்டிற்கு வந்து, தாங்கள் பயந்தது போல் இல்லை என்று இருவருக்குள்ளும் இருக்கும் நெருக்கத்தை பற்றி சொல்லி சந்தோசமும் பட்டு கொண்டார். அண்ணன் சொன்னதை கேட்டு கனியும் உள்ளம் குளிர்ந்து தான் போனார். அதற்கு ஆயுட்காலம் மூன்று மாதம் என்பதை தான் அவர் அப்போது அறியாமல் போனார்.
 
அன்றிரவு சரண் சமையலறையில் அனைத்தையும் ஒதுக்கிவைத்து விட்டு படுக்கையறைக்கு வந்து பார்த்தால், வர்ணிகா தன் கரடி பொம்மையை கட்டிப்பிடித்து கொண்டு சுகமாக உறங்கிக் கொண்டிருந்தாள்.
 
அதை பார்த்தவனுக்கு கோபம் கோபமாக வர, அறையிலிருந்து வேகமாக வெளியேறிவிட்டான். வெளியே வந்தும் மனது நிலை கொள்ளாமல் தவிக்க, வரவேற்பறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்துக் கொண்டிருந்தான்.
 
“இந்த அம்மாவோட நொண்ணன் அவர் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்காரு. வற்புறுத்தி கல்யாணமும் பண்ணி வைக்கறாரு. இப்ப என் பிரின்சஸ் அவ ஃபேவரேட் டெடி இல்லாம தூங்கமாட்டானு அவ்ளோ தொலைவுல இருந்து எடுத்துட்டு வந்தும் கொடுக்கறாரு. அதுவும் ப்ளைட்ல. ச்சே, இவர் என்ன தான் எதிர்பார்க்கிறார்னே தெரியல” என்று மனதாறாமல் பொருமிக் கொண்டிருந்தான்.
 
அப்போது ‘எனக்கும் நீ என்ன எதிர்பார்க்கிறனு தான் புரியல?’ அவனுள் இருந்து எகிறி குதித்து வெளியே வந்த அவனது மனசாட்சி, எதிரிலிருந்த சோஃபாவில் அமர்ந்தப்படியே அவனை எள்ளி நகையாட..
 
‘இப்போ நீ எதுக்குடா வெளிய வந்த?’ என்று சரண் அதை முறைத்தான்.
 
‘என்ன சரணு, எல்லார் வாழ்க்கையிலயும் கரடி போல எவனாவது வருவான். உனக்கோ கரடி பொம்மையே குறுக்க வந்திடுச்சா..?’ என்று கைக்கொட்டி சிரிக்க, சரண் பல்லை கடித்தான்.
 
‘வர்ணி பொம்மையை கட்டுபிடிச்சி தூங்கிறத பார்த்தா, நீ இருக்க வேண்டிய இடத்துல அது இருக்கேனு பொறாமையா இருக்கா?’ என்று குரலில் நக்கல் தோய்த்து வேறு கேட்டது.
 
‘அடி செருப்பால. நானே அவளை வர்ணினு கூப்பிடறதில்ல. மனசாட்சி நீ, கொஞ்சிட்டா இருக்க. அவ எத கட்டிபிடிச்சி தூங்கினா எனக்கென்ன’
 
‘எல்லாம் நீ மனசுக்குள்ள சொல்றது தான்’ என்று அது சொல்லவும், சரண் அதை முறைக்க ‘சரி சரி, அப்ப நீ வர்ணிகா மேல லவ்ல குறுக்கும் மடுக்கும் நடக்கல. அப்படி தான?’ என்று மீண்டும் அவனை சீண்டியது.
 
‘அந்த லவ்வெல்லாம் என்னைக்கு என் அக்கா நிச்சயத்தை நிறுத்த அவ அண்ணன்கிட்ட பேசிட்டு இருந்தாளோ அப்பவே போச்சு’
 
‘அதுல அவ தப்பு இல்லன்னு தெரிஞ்சிடுச்சில. சொல்லப்போனா, அவ சொன்னமாதிரி நிச்சயத்தன்னைக்கே நிறுத்தியிருந்தா, கல்யாணம் வரைக்கும் வந்து அவ்ளோ களேபரம் நடந்திருக்காதே’
 
‘கரெக்ட் தான். இருந்தாலும் அத என்னால அவ்ளோ ஈசியா எடுத்துக்க முடியல’
 
‘அப்புறம் எதுக்கு நடந்திட்டு இருக்க. போய் அவ பொம்மையை கட்டிப்பிடிச்சு தூங்கிற அழகை ரசிச்சிக்கிட்டே ஒரு ஓரமா கட்டைய சாய்’ என்று அவனை வம்பிழுக்க, சரணுக்கு கோபத்தில் கண்கள் சிவந்தது.
 
‘இப்போ போறியா, இல்ல வர்ணிகாவை இங்கிலீஷ்ல திட்ட சொல்லவா?’ என்றதும்
 
‘ஆத்தி’ என்று நியாயம் கேட்க வந்த மனசாட்சி ஓடியேவிட்டது.
 
‘வர்ணியாம் வர்ணி.. இவளால இந்த மனசாட்சியெல்லாம் என்னை கேள்வி கேக்குது. இரு, அந்த கரடியை தூக்கி தூரம் வீசுறேன்’ என்று வேகமாக அறைக்குள் வந்தவன், அவள் அணைத்திருக்கும் கரடி பொம்மையை அசைவு தராமல் அவளிடமிருந்து பிரித்தெடுத்து, காலால் எட்டி உதைத்தான்.
 
பின் இதுவே தினசரி கதையாகி போனது. அவள் தூங்கும் வரை உறங்காமல் காத்திருப்பவன், அலுங்காமல் அவள் அணைத்திருக்கும் பொம்மையை எடுத்து கீழே போட்டு விடுவான். காலையில் எழும் வர்ணிகாவும் இதுவரை தனியாக உறங்கியவள் இப்போது சரணும் உடன் உறங்குவதால், இடப்பற்றாகுறையால் தான் தான் தூக்கத்தில் பொம்மையை கீழே தள்ளிவிட்டு விடுகிறோம் என்று நினைத்துக் கொள்வாள்.  
 
தந்தை முன் அவரை வெறுப்பேற்ற தங்களுக்குள் நெருக்கம் இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் உண்மையில் அப்படி ஒன்றுமில்லையே. இன்னமும் இது அவளுக்கு பிடிக்காத திருமணம் தானே. ஒரே வீட்டில் இருக்கிறார்கள். இவள் பணம் தருகிறாள், அவன் சமைத்து போடுகிறான். இது தானே இருவருக்குள் இருக்கும் சம்மந்தம்.
 
தன் வாழ்க்கையை பற்றி எண்ண எண்ண வர்ணிகாவிற்கு பெரிதாக தோற்றுவிட்டதாகவே தோன்றியது.
 
மனதை திசை திருப்ப ஒரு பேட்மிண்டன் கிளப்பில் சேர்ந்தாள். அத்தோடு நீச்சல் பயிற்சிக்கும், ஜூம்பா வகுப்பிற்கும் சென்றாள். இதற்கெல்லாம் முதலில் வாடகை வண்டியில் சென்று வந்திருந்தவள், தன்னிடமிருந்த சேமிப்பை வைத்து ஒரு காரையும் வாங்கினாள்.
 
இப்படியே தன் போக்கில் சுற்றிக் கொண்டிருந்தவளுக்கு மனம் இருப்பு கொண்டதோ என்னவோ, கையிலிருந்த பணமிருப்பு குறைந்துப் போனது.
 
இனியும் பொழுது போக்கில் நிம்மதி தேடுவது முட்டாள்தனம் என்பதை புரிந்தவள், மீண்டும் வேலையில் மூழ்க முடிவு செய்தாள். அதேநேரம் தந்தையின் அலுவலகத்தில் சேரவும் மனமில்லை. அன்று ரகுவரன் கொண்டு வந்து கொடுத்த அவளது சான்றிதழ்கள் இங்கே தான் இருக்க, வெளியில் வேலைக்கு செல்லும் முடிவை எடுத்தாள்.
 
இவள் ஒரு பக்கம் என்றால், சரண் இன்னொரு பக்கம். அவனால் இவளை போல் பணம் கட்டி நிம்மதி தேடமுடியாதே.. அதனால் வர்ணிகா இப்படி சென்றவுடன், இவனும் தன் அம்மா வீட்டிற்கு அருகில் இருக்கும் மைதானத்திற்கு சென்றுவிடுவான். அங்கே வொர்க் அவுட் செய்து, தன் உடம்பையும் மெருகேற்றி, மனதையும் திசை திருப்பிக் கொண்டிருந்தான்.
 
அதுபோல் அவனும் எத்தனை நாள் தான் வர்ணிகாவின் பணத்தில் சாப்பிடுவது. வெளியிலும் வேலை தேடிக் கொண்டு தான் இருக்கிறான். அவனது நேரம், வேலை தான் கிடைத்தபாடில்லை.
 
ஒருநாள் சரண் தன்னிடம் இருக்கும் விசை அட்டையை கொண்டு வீட்டை திறந்து கொண்டு உள்ளே வர, இவனை நோக்கி ஓடி வந்தாள் வரு.
 
இது அவள் வழக்கமாக ஜூம்பா வகுப்பிற்கு செல்லும் நேரம். தப்பி தவறி சரண் வீட்டிலிருந்து விட்டாலும், உடலை பிடித்திருக்கும் டிராக்ஸ் மற்றும் டி-ஷர்ட்டை அணிந்தே அவனுக்கு முன் வலம் வருவாள். இன்றோ பார்மல் பழுப்பு நிற ஷர்ட் மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்திருந்தாள்.
 
வேகமாக வாசல் வரை வந்து, “வா சரண்” என்று கணவனை வரவேற்றவள், “ஆஃப்டர் அவர் மேரேஜ், மை மைன்ட் காட் ஸ்டெக் வித் தட் இன்சிடென்ட். தட்ஸ் வை, எனக்கு எது சந்தோஷம் கொடுக்கும்னு கூட தெரியாம, ஐ வாஸ் வான்டெரிங் தி ஸ்ட்ரீட்ஸ் ஆஃப் சென்னை” என்றவள், அவன் எதிர்பாராத நேரத்தில் அவனை அணைத்து விடுத்து “ஐ காட் எ ஜாப் ஆஸ் கஸ்டமர் சக்ஸஸ் மேனேஜர். பேஸ்கேல்(Payscale) கம்மி தான். பட் வி கேன் மேனேஜ் அவர் எக்ஸ்பென்டீசர்ஸ்” என்று கடகடவென அனைத்தையும் மகிழ்ந்து கூறினாள்.
 
அதை கேட்டவனோ “எங்கயாவது எட்டாயிரத்துக்கோ பத்தாயிரத்துக்கோ வேலையில சேர்ந்துட்டாளோ..” என்று நெற்றியை நீவி கொண்டிருந்தவன் நல்லவேளையாக அதை அவளிடம் கேட்கவில்லை.
 
அவளே “மன்திலி இந்தியன் கரென்சில 80K தரேன்னு சொன்னாங்க. கம்மி தான். பட், தட்ஸ் அப்சலூட்லி ஓகே” இயல்பாக தன் சுருட்ட கேசம் தோள் தொட்டு நடனமாட, தலையை ஆட்டி பேசிக் கொண்டிருந்தாள்.
 
அவள் சொன்னதை கேட்டு அதிர்ந்த சரண் ‘எண்பதாயிரம் ரூபாயா..? ஏன்டா நானும் தானே எட்டு மாசமா வேலை தேடிட்டு இருக்கேன். ஒருத்தன் கொடுத்தானா? அது என்ன இவ தேடினதும் கிடைச்சிடுச்சு. எல்லாம் வெள்ளை தோலை பார்த்து மயங்கிருப்பாங்க. ஐயோ.. இவகிட்ட அதுவும் இல்லயே’ என்று தனக்கு தானே புலம்பியிருந்தான்.
 
“சரண்.. சரண்” அவன் தோளை தொட்டசைத்தவள், “வாட் ஆர் யு திங்கிங்?” என்று கேட்க,
 
“ஹாங்.. அது எப்படி, நானும் தான் எட்டு மாசமா வேலை தேடிட்டு இருக்கேன். நீ ரெண்டு நாள் முன்னாடி தான தேடப்போறேன்னு சொன்ன. இன்னைக்கு வேலையே கிடைச்சிடுச்சுனு சொல்ற. அதுவும் எண்பதாயிரம் ரூவா. எனக்கு தெரியாதுன்னு கதை விடுறீயா?” தன் மனதிலிருந்த அனைத்தையும் கேட்டுவிட்டான்.
 
அவன் பேச்சில் அவளுக்கிருந்த நல்ல மனநிலையெல்லாம் அடியோடு போய்விட, “நான் என்ன உன்னை மாதிரி தட்டி தட்டி பாஸ் ஆனேனா.. ஐ ஹோல்ட் மை மாஸ்டர் டிகிரி ஃப்ரம் தி பிரெஸ்டீஜியஸ் லண்டன் பிசினஸ் ஸ்கூல்” என்றாள் அவனை முறைத்து கொண்டே.
 
அவள் பேசியது தன் தன்மானத்தை தீண்டி பார்க்க “நான் தட்டி தட்டி பாஸ் ஆனதை நீ பார்த்தியா? நானும் டிஸ்டிங்ஷன்ல தான் பாஸ் ஆனேன். என்ன பண்றது உங்கிட்டலாம் பேச்சு வாங்கறதா இருக்கு” என்று கோபமாக ஆரம்பித்தவன், தன் இயலாமையை சொல்லி முடித்தான்.
 
“ஹேய் சரண்.. சாரி.. டோன்ட் டேக் இட் ராங். சில். கம், லெட்ஸ் கோ அவுட். டூடே இஸ் மை ட்ரீட்” என்று அவனை இழுத்து சென்றாள். சரணுக்கு தான் அவள் பேசியதில் மனதிற்கு இன்னமும் என்னவோ போல் இருந்தது.
 
ஒருநாள் கணவர் இல்லாத நேரத்தில் மகனை வீட்டிற்கு அழைத்திருந்த கனி, “இன்னைக்கு வருவை பார்க்க வீட்டுக்கு வந்திருந்தேன் சரண். மூணாம் மாசம் தாலி பிரிச்சி கோர்க்கலாம்னு கேட்டா, எனக்கு நானே தாலி பிரிச்சி கோர்த்துக்கிட்டேன்னு சொல்லிடுச்சு பா” என்று அழாத குறையாக சொன்னவர்,
 
“அது என்ன பேசுதுன்னு புரியாம பார்த்தா, கழுத்துல மெல்லிசா ஒரு செயின் போட்டிருக்கு. அதுல தங்க கம்பில தாலிய போட்டு முடுக்கி வச்சிருக்கு" என்றவருக்கு இப்போதும் அவர் கண்ட காட்சியை எண்ணி மயக்கம் வருவது போல் இருந்தது.
 
அதை கேட்டு ஒரு விரக்தி புன்னகையை உதிர்த்த சரண், “நீங்க எதிர்பார்க்கற மாதிரி அவ இல்லம்மா. வீட்டுல உரிச்சி வச்ச கோழி மாதிரி தான் இருப்பா. அந்த தாலியை மட்டும் அவங்க அப்பாவுக்காக போட்டிருக்காளா, இல்ல எனக்காக போட்டிருக்காளானு தெரியல. ஆனா போட்டுட்டு தான் இருக்கா” தங்கள் வீட்டு கடைக்குட்டி பெரிய மனிதன் போல் பேசுவதை வியந்து பார்த்த கனி, முதல் முறையாக அக்கேள்வியை கேட்டார்.
 
மகனின் கன்னம் தாங்கி, “நீ சந்தோஷமா இருக்கியா சரண்” என்று குழப்பமாக கேட்டார்.
 
சரணும் வர்ணிகாவும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள் என்று அண்ணன் சொன்ன திருப்தியில் இருந்த கனிக்கு, இது தான் முதல் அடி. இப்போது மகனின் வாழ்க்கை குறித்த கலவையான எண்ணத்தில் அவ்வாறு கேட்டார்.
 
அவனோ “அண்ணன் உறவு தான் கிடைச்சிடுச்சே. இனி என் வாழ்க்கையை பத்தி என்ன” என்று விட்டேற்றியாக பதிலளித்தான்.
 
“ஏன் சரண் இப்படியெல்லாம் பேசற.. அம்மாவுக்கு உன்மேல பாசம் இல்லையா.. நல்லா இருப்பீங்கனு தான கல்யாணம் பண்ணிவைச்சோம்” மகனின் வார்த்தைகளை தாளமுடியாமல் கதறி விட,
 
“உங்கள குத்தி காட்ட சொல்லல. வேலைக்கு போற பொண்ணு, மஞ்சள் கயிறு அசிங்கமா இருக்கும்னு கூட மாத்தியிருக்கலாம். தாலியை கழட்டி வச்சிடலயே. அதோட நீங்க ஒண்ணு புரிஞ்சிக்கணும். இது எங்களுக்கு பிடிக்காத கல்யாணம். இதுக்கப்புறம் விருப்பம் வரலாம். இல்ல, வர்றாம இப்படியே கூட போய்டலாம். எது எப்படியோ, ரெண்டு பேரும் ஒண்ணா சண்டை போடாம இருக்கோம். அதுவே பெருசு” என்று எந்த நேரத்தில் சொன்னானோ, இருவருக்கும் சண்டையை உண்டு செய்ய அந்த நாளும் வரத்தான் இருந்தது.
 
 
தொடரும்...

   
Joedeepan reacted
ReplyQuote
(@nila-sridhar)
Eminent Member Author
Joined: 3 months ago
Posts: 30
Topic starter  

உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..

https://srikalatamilnovel.com/community/topicid/9/


   
ReplyQuote
Page 2 / 2
Scroll to Top