All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.​

நிலா ஶ்ரீதரின் "உன்...
 
Notifications
Clear all

நிலா ஶ்ரீதரின் "உன்னில் சரணடைந்தேன்...!" - கதை திரி

Page 1 / 2
 

(@nila-sridhar)
Eminent Member Author
Joined: 3 months ago
Posts: 30
Topic starter  

ஹாய் ப்ரண்ட்ஸ்,

எல்லாரும் எப்படி இருக்கீங்க..? முதலில் அனைவருக்கும் என் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இதோ அடுத்த கதையோடு வந்துவிட்டேன். யதார்த்தமான இன்னொரு கதை. கதையோட நாயகன் நாயகி ரொம்ப ஜாலியான ஜோடி. டாம் ஜெர்ரி லவ். மை ஃபேவேரேட். உங்களுக்கும் பிடிக்கும்னு நம்பறேன்.

கதையை படித்து  உங்கள் பிடித்தங்களையும் கமென்ட்களையும் பகிர்ந்து என்னை ஊக்குவியுங்கள் ப்ரண்ட்ஸ்.

நன்றி,

நிலா ஶ்ரீதர்✒️

This topic was modified 2 months ago 4 times by Nila Sridhar

   
Joedeepan and megala reacted
Quote
(@nila-sridhar)
Eminent Member Author
Joined: 3 months ago
Posts: 30
Topic starter  
அத்தியாயம் - 1

அந்த வணிக வளாகத்திற்குள் நுழைந்தவன் சுற்றும் முற்றும் பார்த்தான். உடனிருந்த பெண்ணிற்கு சிறு புன்னகையை கொடுத்தவன், கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக எந்தவொரு சேதமும் இல்லாமல் பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கும் தன் கைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தான்.

அழைப்பு ஏற்க பட்டதும் “எங்கடா இருக்க?” என்று கேட்க, எதிர்முனையில் இருந்தவன் என்ன பதில் தந்தானோ, முகத்தில் தோன்றிய எரிச்சலை அடக்கி கைபேசியை அணைத்தவன் “நாம அங்க வெயிட் பண்ணலாம்” என்று அப்பெண்ணை அழைத்துக் கொண்டு சென்றான்.
 
இருவரும் அங்கிருந்த உணவு கூடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, அப்போது அங்கே வந்தவன் “சாரிடா மச்சான். கொஞ்சம் லேட்டாயிடுச்சு” என்று குழைய, பதிலுக்கு இவன் அவனை முறைக்க, அருகில் இருந்தவளும் முறைத்தாள்.
 
நண்பன் கோபமாகி விட்டானோ என்று மீண்டும் மன்னிப்பு கேட்டு அவன் தோளில் கைப் போட “உதை விழ போகுதுடா உனக்கு. எங்க அக்கா நிச்சய வேலை தலைக்கு மேல இருக்கு. நீ என்னனா புரிஞ்சிக்காம வெளில வர சொல்ற” என்று சிடுசிடுத்தான்.
 
“எதுவா இருந்தாலும் அங்க கேளு..” என்று அவன் நண்பனோ எதிரில் இருந்தவளை கை காட்ட..
 
“சாரி அண்ணா. எங்க வீட்டுல உன் கூட வெளில வர்றதுனா விட்டுடுவாங்க. இவன் வேற ஊருக்கு போறான். அப்புறம் இவனை எப்ப பார்ப்பேனோ.. அதான் ண்ணா..” என்றாள் தயக்கம் கொண்ட குரலில்.
 
“அம்மா தாயே.. எனக்கு இருக்க அக்காவே போதும்.. நீ அண்ணானு கூப்பிடறதும் போதும். என்னை இப்படி உங்க வீட்டுக்கு துரோகம் பண்ண வைக்கறதும் போதும். உங்க லவ்வ வீட்டுல தான் சொல்லி தொலைங்களேன் டா” என்று எரிச்சலின் மிகுதியில் சொன்னான்.
 
“டேய், இப்ப தான் எனக்கு ஐதராபாத்ல வேலை கிடைச்சிருக்கு. லைஃப்ல கொஞ்சமாவது செட்டிலான பிறகு தான்டா விஷயத்தை வீட்டுல ஓபன் பண்ண முடியும்” என்றான் நண்பன்.
 
“அப்போ அதுவரைக்கும் ஃபோன்ல மட்டும் லவ் பண்ணிக்கோங்க. அப்புறம் தயவு செஞ்சு உங்க திருட்டுத்தனத்துல என்னை கூட்டு சேர்க்காதீங்க” என்று கோபமாக சொல்ல, இருவரும் ஐயோ பாவம் என்று முகத்தை வைத்துக் கொண்டு அவனை பார்த்திருந்தனர்.
அதில் தன்னை நிதானித்தவன், தன் தலையை அழுந்த ஒருமுறை கோதி கொண்டு “சரி, முகத்தை இப்படி வச்சி தொலைக்காதீங்க.. நான் அங்க வெயிட் பண்றேன். சீக்கிரம் பேசிட்டு வாங்க” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். அவன் சரண்..
 
மூவரும் ஒரே கல்லூரியில் தான் எம்சிஏ படித்தனர். அதில் சரணது நண்பர்கள் வினோத்தும் கமலியும் ஒருவரை ஒருவர் நேசிக்க தொடங்கினர். கமலியின் வீட்டில் சரணின் மீது நல்ல அபிப்ராயமும், பெரும் நம்பிக்கையும் உண்டு. அதனால் எப்போது வெளியில் சந்திக்க வேண்டுமென்றாலும் சரணை காக்கா பிடித்து கமலியை வெளியே அழைத்து வர வைத்துவிடுவான் வினோத்.
இது தன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் கமலியின் பெற்றோருக்கு செய்யும் துரோகமாகவே சரண் கருதுவதால் அவனுக்கு குற்றவுணர்ச்சியாக இருக்கும். அதே நேரத்தில் நண்பர்களையும் விட்டு தரமுடியாத இக்கட்டான நிலை.
 
சரண் அங்கிருந்த கிளாஸ் ரயிலில்(Glass Rail) கைபிடித்து நின்று அந்த வணிக வளாகம் முழுவதையும் கண்களால் அளவெடுத்துக் கொண்டிருந்தான். ஆங்காங்கே தத்தம் துணையோடு வந்து காதல் செய்துக் கொண்டிருக்கும் காதலர்களாலும், பை பையாக வாங்கி குவிக்கும் ஆடவர்களாலும் பெண்களாலும், வீட்டில் அடைந்திருக்க பிடிக்காமல் இங்கே குடும்பத்தையே அழைத்து வந்து விண்டோ ஷாப்பிங் என்ற பெயரில் பொழுதை கழித்து கொண்டிருப்பவர்களாலும் வணிக வளாகம் நிரம்பி வழிந்தது.
 
அனைத்தையும் இருந்த இடத்தில் இருந்தே பார்வையிட்டு கொண்டிருந்தவனின் கண்ணில் பட்டது அவனுக்கு நேர் எதிரில் இருந்த லெஹங்கா, சோளி போன்ற ஆடைகளை விற்பனை செய்யும் பெண்கள் ஆடையகம். அதிலும் அவன் கண்கள் நிலைகுத்தி நின்றது அவளிடத்தில்.
 
ஐந்தரை அடிக்கும் மேல் உயரம் இருப்பாள். நீல நிற ஜூன்ஸும், மின்ட் க்ரீன் நிற க்ராப் டாப்ஸும் அணிந்திருந்தாள். காலில் வெள்ளை நிற ஸ்னீக்கர்ஸ். அது தவிர கழுத்து, கை, காது என எங்கும் பொட்டு நகையும் இல்லை. நெற்றியிலும் பொட்டு இல்லையா, இல்லை தூரத்தில் இருந்து இவனுக்கு தெரியவில்லையா என்று தெரியவில்லை. நவ நாகரீக யுவதியாகவே இருந்தாள் அவள்.
 
நடுத்தர வயது பெண்மணி, அவளது அன்னையாக இருக்குமென்று இவன் எண்ணி கொண்டான். அவர் ஒரு வைன் நிற லெஹங்காவை ஏந்தி வந்து இவளிடத்தில் காண்பித்தார். இவளுக்கோ அது பிடித்தமில்லை போல், முகத்தை சுளித்தாள்.
 
பின் அங்கு பணி செய்யும் பெண் வான் நீல நிறத்தில், மங்கலான ஆப்ரிகாட் நிறத்தில், பீச் நிறத்தில், மோவ் நிறத்தில் (Mauve), பழுப்பு வெள்ளை நிறத்தில் என பல்வேறு நிறங்களிலும் வேலைப்பாடுகளிலும் லெஹங்காக்களை காட்ட, இவளோ மோவ் நிறத்தில் கற்கள் மட்டும் கட்டானா வேலைப்பாடுகள் நிறைந்த லெஹங்காவையே தேர்வு செய்ய, அதை அவளுக்கு அணிவித்து பார்க்க ஆள் உயர கண்ணாடிக்கு அருகில் அழைத்து வந்தார் அப்பணிப்பெண்.
 
லெஹங்காவை அவள் இடுப்பை சுற்றி பின்(Pin) செய்தவர், நெட் துப்பட்டாவை எடுத்து அவள் இடையில் சொருகி மார்பின் மீது போட்டு கண்ணாடியில் காண்பிக்க இவளோ தேவதை போல் மிளிர்ந்தாள்.
அவளை இவன் இமைக்க மறந்து ரசித்திருக்க, அவள் தன்னை ஒரு சுற்று சுற்றிய போது அவளோடு சேர்ந்து இவன் மனமும் அவள் பின்னால் சுற்றியது.
 
அதிலும் நடிகைகள் பெரும்பாலும் விரும்பும் சைஸ் ஜீரோ என்னும் சைஸிலேயே அவளிருக்க, அவளிடையில் இருந்த லெஹங்கா எங்கே கீழே நழுவி விடுமோ என்னும் அளவிற்கு அவள் இடை மிகவும் மெல்லியதாக இருந்தது. அவள் தன்னை தானே சுற்றிய போது அவளுக்கு இன்னும் அழகு சேர்த்தது இயற்கையாக அவளுக்கு இருக்கும் சுருட்டை முடி. அது சுருள் சுருளாக அவள் தோள்களில் விளையாடி கொண்டிருந்தது.
 
சிறு வயதிலிருந்தே சரண் மிகவும் பொறுப்பானவன். பெண்பிள்ளையோடு பிறந்தவன் என்பதால் பெண்கள் விசயத்தில் கண்ணியம் காப்பவன். அவன் குடும்ப சூழ்நிலையும் அவனை காதல் போன்ற விசயங்களில் ஈடுபட விட்டதில்லை. தாய், தந்தை, அக்காவென மூவரும் வேலைக்கு சென்று வருவதாலே இவன் குடும்பம் பிரச்சனை இல்லாமல் ஓடுகிறது.
 
எம்சிஏ முடித்து நான்கு மாதங்கள் ஆகியிருந்தும் இன்னும் வேலை கிடைக்காததால் ஒவ்வொரு பைசாவும் பார்த்து பார்த்தே செலவு செய்வான். எம்சிஏ சேருவதற்கு முன் தந்தை வாங்கி கொடுத்த கைபேசியை இன்னமும் பத்திரமாகவே வைத்திருக்கிறான். அவன் வைத்திருக்கும் இருசக்கர வாகனமும் செகண்ட் ஹேண்ட் வண்டியே.
 
இன்றோ யாரென்று தெரியாத ஒரு பெண்ணை வைத்த கண் வாங்காமல் தான் பார்த்திருந்தான். அதோடு அவளுடன் சேர்ந்து டூயட் எல்லாம் பாடும் அளவிற்கு தான் காதலில் முன்னேறி இருந்தான்.
 
ஆம், காதலென்றே தெரியாத காதல் வயப்பட்டுவிட்டான் அந்த ஆறேகால் அடி உயிரம் கொண்ட இருப்பத்தைந்து வயது நடந்து கொண்டிருக்கும் ஆண்மகன்.
 
“காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை.. உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்..” என்று பாடி எதிரிலிருப்பவளை எண்ணி மனதில் மழை காலம் கொண்டாடி கொண்டிருக்க, கனவு கலைந்து கண்களை திறந்து பார்த்தால் எதிர் கடையில் இருந்தவளை காணவில்லை.
 
இவன் முழு பாடலையும் கனவு கண்டு முடிப்பதற்குள் அவர்களோ எடுத்த துணிமணிகளுக்கு பில்லை போட்டு பணத்தை செலுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பியிருந்தனர்.
 
அவளை காணவில்லை என்பதில் பதறிவிட்டவன் அத்தளம் முழுவதும் ஒரு இடம் விடாமல் தேடினான். அவள் கிடைத்தாற்பாடில்லை. பின் மற்ற தளங்களிலும் தேடினான். அங்கும் அவளில்லை.
 
அதற்குள் எங்கு போய்விட்டாள் என்று விடாமல் அவனும் தேட அவனது அலைபேசி தொல்லைபேசியாக அலறியது. எடுத்து பார்த்தால் வினோத் தான் அழைத்திருந்தான். அழைப்பை துண்டித்து விட்டு தன் தேடுதலை தொடர, அவன் நண்பனும் விடாமல் அழைத்து தொல்லை செய்தான்.
 
இதற்கிடையில் அக்காவின் நிச்சய வேலைகள் வேறு நினைவிற்கு வர, மீண்டும் ஒரு முறை கண்களை மூடி அவளை எண்ணிக் கொண்டவன் அவள் உருவத்தை மனதில் நிறைத்துக் கொண்டு நண்பனின் அழைப்பை ஏற்று “வரேன்டா” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தான்.
 
நேராக நண்பர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றவன், யார் இருக்கிறார்கள் என்றும் பாராமல் நண்பனை இறுக அணைத்துக் கொண்டு “தேங்க்ஸ் டா. தேங்க் யு சோ மச்” என்று அப்படியே அவனை மேலே தூக்கி இறக்கிவிட்டு “எல்லாம் உன்னால தான்டா” என்று அவனை கொஞ்ச வேறு செய்தான்.
 
“என்னடா பண்ற?” என்று வினோத் ஒருபுறம் பதற, அருகில் இருந்த கமலியோ “அவனுங்களாடா நீங்க..” என்று வாய்விட்டு சிரித்தாள்.
 
“உன்னால இவ என்னை தப்பா நினைக்கிறா பாரு.. அப்புறம் இவங்க அப்பா பொண்ணு தரலைனா..” என்று வினோத் பயப்படுவது போல் படபடக்க
 
“கேளு டா” என்ற சரண் அவளை எதிர்கடையில் பார்த்ததை பற்றி ஆர்வமாக நண்பர்களிடம் பகிர்ந்தான்.
அதை கேட்ட வினோத் “என்ன மச்சான்… லவ்ஸா..?” என்று கேட்க, இவனுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. ஆனால் இவனது பளிச்சிட்ட முகம் நண்பனுக்கான பதிலை அப்பட்டமாக எடுத்துரைக்க
 
“கமலி… நான் கும்பிட்ட கடவுள் கை விடல.. சரணுக்கும் காதல் பூ பூத்திடுச்சு.. இனி நான் எப்போ ஐதராபாத்ல இருந்து வந்தாலும், நாம மீட் பண்ண இவனே உங்க வீட்டுல பொய் சொல்லி கூட்டிட்டு வந்திடுவான்” என்று தன் காரியத்தில் குறியாக, வாயெல்லாம் பல்லாக சொன்னான் வினோத்.
 
சரண் அவனை முறைக்க.. “சரி வாடா.. உன் ஆளு எப்படி இருக்காங்கனு பார்ப்போம்.. அப்படியே பேச்சு கொடுத்து நம்பர் உஷார் பண்ணிடலாம்” என்று வினோத் பேச்சை மாற்ற இவனது முகம் விழுந்துப் போனது.
 
“அது நான்.. நான் அவளை மிஸ் பண்ணிட்டேன் டா” என்றான் உள்ளே போன குரலில்.
அதை கேட்ட இருவரும் அவனை அதிர்ந்துப் பார்க்க.. “அது.. ஃபுல் பாட்டும் கனவு கண்டு முடிச்சிட்டு பார்க்கறேன், அவ அங்க இல்லடா” என்று அசடு வழிய சொன்னான்.
 
உடனே வினோத் “ஏன்டா ஃபோன் நம்பர் வாங்கிட்டு கனவுக்குள்ள போக வேண்டியது தானே. இப்ப பாரு பாட்டு முடியவும் கிளைமாக்ஸும் முடிச்சி போச்சு” என்று சத்தமாக சிரித்து வைக்க, கமலியோ தன் சரண் அண்ணன் வருந்தி நிற்பதை பார்த்து தன்னவனின் தோளில் ஒரு அடி வைத்தாள்.
 
போனவளை இதற்கு மேல் தேடவா முடியும், அவ்வளவு தான் என்றே வினோத்திற்கு தோன்ற “சரி விடுடா. நம்ம கிளாஸ்ல இருந்த நாலஞ்சு அழகான பசங்கள்ல நீயும் ஒருத்தன். நீயா யாரையும் பார்த்ததும் இல்ல. உன்னை பார்த்த பொண்ணுங்களையும் கண்டுகிட்டது இல்ல. இப்ப எதுக்கு இந்த ஃபீலிங். விடு, நெக்ஸ்ட் டைம் நானும் கமலியும் மாலுக்கு வரப்போ வேற பொண்ண பார்த்துக்கலாம்” என்று நண்பனை தேற்றுவதாய் எண்ணி அவனை கடுப்பேற்ற
 
“நான் என்ன சைட்டா அடிச்சேன், அடுத்த தடவை வேற பொண்ண பார்த்துக்கலாம்னு சொல்றதுக்கு” என்று கோபத்தில் பற்களை நறநறத்தான் சரண்.
 
“அந்த பொண்ணு என்ன அவ்ளோ அழகா..? இவ்ளோ ஃபீல் பண்ற?” என்று பொங்கிவிட்ட வினோத்தின் கேள்விக்கு மனதில் பொத்தி வைத்திருந்தவளை கண் முன் கொண்டு வந்தான்.
சரண் அவன் அம்மாவை போல் நல்ல நிறம். தனியாக உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடம்பை ஏற்றவில்லை என்றாலும் அருகிலிருக்கும் மைதானத்தை தினமும் பத்து சுற்று சுற்றுவதாலும், தண்டால் எடுப்பதாலும், அங்கே இருக்கும் கம்பிகளை பிடித்து புல் அப்ஸ் போடுவதாலும் கட்டுக்கோப்பாவே இருந்தான். அதுவும் கல்லூரி வாலி பால் அணியிலும் தொடர்ந்து விளையாடி வந்ததால் ஆணழகன் போட்டிக்கு சென்றால் பரிசு வெல்லும் அனைத்து தகுதியும் அவனுக்குண்டு.
அவளோ அவனுக்கு ஏற்ற உயரம் தான். ஆனால், எங்கும் துளி சதை வெளியில் தெரியாத அளவிற்கு மெலிதாக இருந்தாள். அதிலும் அவள் மாநிறத்திற்கும் சற்று குறைவே. இருந்தும் என்ன, சரணுக்கு அவளை தானே பிடித்திருக்கிறது. அவள் தானே அவன் அனுமதியின்றி அவன் மனதில் நிறைந்து விட்டவள்.
 
இக்கணம் அவனுக்கு அவளை விட அழகி இவ்வுலகில் இல்லை என்றே தோன்றியது. அவள் நினைப்பில் தன்னை தொலைத்து நின்றிருத்தவனை உலுக்கிய கமலி  “அண்ணா, இவன் எதாவது லூசு மாதிரி பேசிட்டே இருப்பான். வா நாம போய் அந்த பொண்ண தேடலாம்” என்று அவன் கைப்பிடித்து இழுத்தாள்.
 
“நான் ஏற்கனவே ஃபுல்லா தேடிட்டேன் கமலி.. அவ எங்க போனானே தெரியல” என்று இவன் உதட்டை பிதுக்க..
 
“மச்சான்.. சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத.. நீ ஒரு பாட்டுக்கு டூயட் பாடி முடிக்கிறதுக்குள்ள டிரஸ் செலக்ட் பண்ணிட்டு கிளம்பிட்டாங்கனு சொல்ற.. இப்படி ஒரு விஷயம் பொண்ணுங்க லைஃப்ல நடக்க வாய்ப்பே இல்ல” என்று சிரித்து வைத்து கமலியின் முறைப்பை வாங்கிய வினோத், சரணும் முறைப்பதை பொருட்படுத்தாது,
 
“செகண்ட், ஒருவேளை அவ உனக்கு அக்காவா இருந்தா..?” என்றும் கேட்டு வைத்தான்.
அதில் கடுப்பான சரண் “டேய் கடுப்பு காண்டமிருகம்.. நல்ல வார்த்தையே பேச மாட்டீயாடா?” என்றவனுக்கு எரிக்கும் சக்தி மட்டும் இருந்திருந்தால் கண்களாலேயே நண்பனை பொசுக்கி இருப்பான்.
 
“சரி.. சுபச் செய்தியே சொல்றேன்.. அவ லெஹங்கா எடுத்தானு சொல்ற.. அவ ஏன் லெஹங்கா எடுக்க போறா.. ஏன்னா அவளுக்கு கல்யாணம். பொண்ணுங்க அதுக்கு தானே அந்த டிரஸ் எடுப்பாங்க.. அதனால மனசை போட்டு குழப்பாம கிளம்புடா” என்று துளிர்விட்ட சரணது காதலை வேரிலேயே பிய்த்தெறிந்து போட்டான் அவனது நண்பன் வினோத்.
 
அவன் என்னமோ நண்பனின் மீதுள்ள அக்கறையில், அவன் ஏமாந்து விட கூடாது என்ற நல்லெண்ணத்தில் தான் அவ்வாறு சொன்னான். ஆனால் உண்மையில் அவள் தன் திருமணத்திற்கு தான் துணியெடுக்க வந்தாளோ என்ற கேள்வி சரணின் மனதில் வீறுக்கொண்டு சென்றமர்ந்தது.
 
வினோத் சொன்னதை கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் வாழ்க்கையில் நிதர்சனங்களோடே பயணப்பட்டவனுக்கு, ஆம் அவள் யாருக்கோ நிச்சயிக்கப்பட்டவளாகவும் இருக்க கூடும் என்ற உண்மை உறைக்க தான் செய்தது.
 
இருப்பினும் அவன் மனம் அவளை விட மனமில்லாமல் தவிக்க, தன் நெஞ்சை நீவி கொடுத்தவன், தன்னை சமாதானம் செய்ய கைப்பிடித்த கமலியின் தலையை வருடி கொடுத்து “அவ எனக்கானவளா இருந்தா, கண்டிப்பா நான் அவளை திரும்ப பார்ப்பேன்” என்று சிறுமுறுவலோடு அழுத்தமான குரலில் இருவரையும் பார்த்துச் சொன்னான் சரண்.
 
பின் “வா கமலி.. வீட்டுல விட்டிடுறேன்.. நிச்சயத்தார்த்த வேலை தலைக்கு மேல இருக்கு” என்று நண்பனிடமிருந்து விடைபெற்று கமலியுடன் கிளம்பினான்.
 
உண்மையில் அவள் யாரென்று அறியும் நாளில் அவன் மனதில் அவளுக்கான அதே காதல் இருக்குமா? சரண் சரணடைவானா? இல்லை அவள் தான் சரணை அடைவாளா?


தொடரும்..

   
Joedeepan reacted
ReplyQuote
(@nila-sridhar)
Eminent Member Author
Joined: 3 months ago
Posts: 30
Topic starter  

முதல் அத்தியாயம் எப்படி இருந்தது நண்பர்களே..?

உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..

https://srikalatamilnovel.com/community/topicid/9/


   
megala reacted
ReplyQuote
(@nila-sridhar)
Eminent Member Author
Joined: 3 months ago
Posts: 30
Topic starter  
அத்தியாயம் - 2

விமானத்தில், வணிக வகுப்பில் அமர்ந்திருந்த ரகுவரனை எண்ணற்ற சிந்தனைகள் ஆட்கொண்டிருந்தது. இத்தனை ஆண்டுகளாக அணிந்திருந்த கோபம் என்ற முக மூடியை தூக்கி தூர வீசிவிட்டு இந்தியா கிளம்பியிருக்கிறார்.


அவர் லண்டனில் குடியமர்ந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிறது. அதற்கு முன்னும் மும்பையில் தான் வாசம். சென்னைக்கு வந்தே இருபத்தேழு ஆண்டுகள் இருக்கும்.

சோலையப்பனுக்கும் முனியம்மாளுக்கும் மூத்த மகனாக பிறந்தவர் தான் ரகுவரன். அவருக்கு பின் கனிமொழி. ஒரு நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றும் சோலையப்பனுக்கு மகனும் மகளும் தான் உயிர்.


சோலைக்கு பின் பிறந்த அனைத்தும் பெண் பிள்ளைகள். ஆம், அவருக்கு ஐந்து தங்கைகள். ஐந்து பெண்ணை பெற்றால் அரசனும் ஆண்டி என்பார்கள். சோலையின் தந்தை மட்டும் விதிவிலக்கா என்ன. அவரால் முடிந்ததெல்லாம் அவர்கள் வயிற்றுக்கு உணவு மட்டுமே. அதனால் தங்கள் வசதிக்கு சோலைக்கும், முதல் இரண்டு மகள்களுக்கும் திருமணமும் செய்து வைத்துவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் அவரது தந்தை.


மற்ற தங்கைகளின் திருமண பொறுப்பிற்கும், தங்கை பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய சீருக்கே சோலையின் வருமானம் பெரும்பாலும் சென்றுவிடும். முனியாம்மாளும் நான்கைந்து தெருக்களுக்கு முறைவாசல் செய்ய அவர்கள் குடும்பம் மற்றவரிடம் கையேந்தாமல் ஓடி கொண்டிருந்தது.

இரண்டு பிள்ளைகளையும் ஆங்கில வழி பள்ளியில் சேர்க்க போதுமான பண வசதி இல்லாததால், ரகுவரனை தனியார் பள்ளியிலும், கனிமொழியை அரசு பள்ளியிலும் சேர்த்திருந்தனர்.

ரகுவரன் நன்றாக படிப்பார். பள்ளி படிப்பில் நன்மதிப்பெண்கள் பெற்று அக்காலத்திலேயே பொறியியல் படிப்பில் சேர்ந்தார். இருந்தும் அவர் வீட்டுக்கும் கல்லூரிக்கும் வெகுதூரம். வந்து போக என்று தினமும் மூன்றில் இருந்து நான்கு மணிநேரம் ஆகும். அதனால் கல்லூரி விடுதியில் தங்கி படித்தார்.

கனிமொழியும் நன்றாக படித்தாலும் ஒருகட்டத்தில் ரகுவரனின் விடுதி கட்டணத்திற்கும் இதர செலவிற்கும் பணம் தேவைப்பட்டதால் எட்டாவதோடு படிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு இரண்டு மூன்று வீடுகளில் பாத்திரம் கழுவும் மற்றும் துணி துவைக்கும் வேலைக்கு சென்றுவிட்டார்.

ஒருவழியாக படிப்பை முடித்த ரகுவரன் ஒரு நல்ல வேலையில் சென்றமர்ந்தார். அதன் மூலம் குடும்ப நிதிநிலை உயர்ந்ததை எண்ணி சோலை நிம்மதியடைந்திருந்த நேரத்தில் தான் கனிக்கு ஒரு வரன் தானாக வந்தது.

அன்றிரவு நால்வரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி கொண்டிருக்க.. “நம்ப கனியை கேட்டு வந்த இடத்துல பிடிச்சிருக்குனு சொல்லிருக்காங்க ரகு” என்றார் சோலை.

“நல்லது ப்பா. மாப்பிள்ளை வீடு நம்மள விட ரொம்ப வசதி. அவங்க கேக்கறதுக்கு முன்ன நம்ம கனிக்கு எல்லாமே சிறப்பா பண்ணிடனும் ப்பா” தங்கையின் தலையை வாஞ்சையாக வருடி கொடுத்து சொன்ன மகனை பெருமிதமாக பார்த்தார்கள் சோலையும் முனியம்மாளும்.

மேலும் தங்கையின் திருமண ஏற்பாடுகளை பற்றி ரகு ஆர்வமாக விவரித்து கொண்டிருக்க.. “மாப்ள வீட்டுல பெருசா எதுவும் எதிர்பார்க்கல ரகு. மாப்பிள்ளைக்கு அக்கா ஒருத்தங்க கல்யாணமாகாம இருக்காங்க. அவங்கள உனக்கு முடிச்சி பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கணும்னு மட்டும் பார்க்கறாங்க” என்ற சோலை,

“நம்ப கனிய பொண்ணு பார்த்தன்னைக்கே உன்னையும் பார்த்துட்டாங்களாம். அவங்களுக்கு திருப்தியாம். உனக்கும் சரின்னா அவங்க வீட்டுக்கு வந்து பொண்ணு பார்க்க சொன்னாங்க” என்றும் சொன்னதும் அதுவரை தங்கையின் திருமணத்தை பற்றி ஆரவாரமாக பேசிக் கொண்டிருந்த ரகுவின் முகம் வாடி போனது.

அமைதியாக உண்டு முடித்து வந்தமர்ந்த மகனிடம், “ரொம்ப வருஷமா எந்த வரனும் பொருந்தலையாம். என்னமோ உன்னை பார்த்ததும் மனசுக்கு புடிச்சி சோசியரை கேட்க, உங்க பேர் பொருத்தமும் நல்லா இருக்காம். நீ என்ன ரகு சொல்ற?” என்று தந்தை கேட்க..

“அப்பா, இத நான் முன்னாடியே சொல்லிருக்கனும்” என்று நெற்றியை தேய்த்தவர், “நான் என் கூட படிச்ச பொண்ண விரும்பறேன் ப்பா. அவங்க வீட்டுல எல்லாருக்கும் சம்மதம். நம்ம வீட்டுல வந்து பேச தயாரா இருக்காங்க. நானும் அவளும் நம்ப கனி கல்யாணத்துக்காக தான் காத்திருக்கோம்” என்றதும் தாய், தந்தை இருவரின் முகத்திலும் அதிர்ச்சி.

“என்ன ரகு சொல்ற? இதெல்லாம் நம்மள மாதிரி ஏழை பாலைக்கு தேவையா? நம்ம வீட்டை பத்தி நீ யோசிக்கவே இல்லையா?” என்று சோலை கொதித்தெழ

“யோசிச்சதுனால தான்ப்பா கல்யாண வயசாகியும் அவ எனக்காக பொறுமையா காத்திட்டிருக்கா” என்று ரகுவும் சொன்னதும் சட்டென்று எழுந்து வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார் சோலை.

இரண்டு மூன்று நாட்கள் தந்தைக்கும் மகனுக்கும் பேச்சு வார்த்தையே இல்லாமல் இருந்தது. மாப்பிள்ளை வீட்டிலிருந்து தரகர் மூலமாக தகவல் கேட்டு அனுப்பியிருக்க, இதற்கு மேல் தள்ள முடியாதென்று தந்தை, மகன் இருவரும் ஒரே போல் முடிவு செய்தனர்.

அதன் விளைவு சோலை அடுத்து மகனிடம் பேச வருவதற்கு முன்னே தந்தையின் பிடிவாத குணத்தை நன்கு அறிந்த ரகு, தான் நேசித்த மைதிலியை திருமணம் செய்தே அழைத்து வந்துவிட்டிருந்தார்.

மாலையும் கழுத்துமாக வீட்டினுள்ளே வரவிருந்த ரகுவையும் மைதிலியையும் “அங்கேயே நில்லுங்க” என்றவர், “நான் அவ்ளோ சொல்லியும் உன் தங்கச்சி வாழ்க்கையை கெடுக்கற மாதிரி ஒரு காரியத்தை பண்ணிட்டு வந்து நிக்கிறீயேடா” என்று சோலை ஆவேசப்பட

“உங்க பிடிவாதத்தை பத்தி தெரியும் ப்பா” என்றார் ரகு.

“ஓ.. இப்போ மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிட்ட நான் என்னடா பதில் சொல்லுவேன். உனக்காக தன் படிப்பை விட்டுட்டு வேலைக்கு போன அவளுக்கு நீ செஞ்சது இதுதானா? இனி யாருடா என் பொண்ண கட்டுவாங்க?” என்று மகனின் சட்டையை பிடித்து உலுக்க

“அங்கிள் ப்ளீஸ்.. ரகு மேல எந்த தப்பும் இல்ல” என்று குறுக்கே வந்த மைதிலியை கண்கள் தெறிக்க பார்த்தவர்..

“நான் என் புள்ளைய தான் கேட்க முடியும்” என்றார்.

அதோடு மைதிலியின் வாய் பூட்டு போட, ரகுவோ “அப்பா, என்னை மன்னிச்சிடுங்க. நான் பண்ணது தப்பு தான். அதுக்காக கனி வாழ்க்கையை அழிய விட்டுட மாட்டேன். மாப்பிள்ளை வீட்டுல பேசிப் பார்க்கலாம். அப்பவும் அவங்களுக்கு சம்மதம் இல்லைனா, நானே நம்ப கனிக்கு வேற நல்ல மாப்பிள்ளைய பார்க்கிறேன்” என்றார்.

“எப்படிடா பார்ப்ப.. எப்படி பார்ப்ப? நமக்கு வசதியும் இல்ல. உன்னால என் பொண்ணு படிக்கவும் இல்ல. இந்த சம்மந்தமே பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்குற நோக்கத்துல தான், வசதி, படிப்புனு எதையும் பார்க்காம வந்தது. அதையும் கெடுத்துட்டியே டா” ஓர் தந்தையாக மகளின் வாழ்க்கையை எண்ணி தொண்டையை அடைந்த துக்கத்தை அடக்கி கொண்டு..

“இதுக்கு மேல என் பொண்ணு வாழ்க்கைய எனக்கு பார்க்க தெரியும். இனி எனக்கு பொண்ணு மட்டும் தான், பையன் செத்து போயிட்டான். வெளிய போ” என்று வாசலை காண்பித்தார். முனியம்மாளும் கனியும் அவரின் பேச்சை மீறி பேச முடியாமல் நடப்பதை கலங்கி பார்த்திருந்தனர்.

ரகுவும் மைதிலியும் வீட்டை விட்டு வெளியே வந்தவர்கள், ஒருவாரம் மைதிலியின் சொந்தக்காரர் வீட்டில் தங்கியிருந்தனர். அங்கிருந்து தான் மைதிலி கல்லூரி படிப்பை படித்தார். மற்றபடி அவர் குடும்பமெல்லாம் மும்பையில் வசிக்கின்றனர். அதற்குள் கனிக்கு வந்த வரனும் முறிந்து விட, தந்தையின் மனம் கரைய வாய்ப்பில்லை என்பதை புரிந்த ரகு, மனைவியுடன் மும்பை சென்றுவிட்டார்.

இரண்டு வருடம் ஓடிவிட்டிருக்க, ரகுவரனுக்கும் மைதிலிக்கும் ஒரு வயதில் மகன் இருக்கிறான். ரகுவும் இப்போது மாமனாரின் குடும்ப தொழிலை பார்த்துக் கொண்டிருந்தார். சொல்லப்போனால் மகனை காட்டிலும் மருமகனை அதிகம் நம்பினார் அவரது மாமனார்.

அப்போது கனிக்கு ஒரு நல்ல வரன் வர, அதை குறித்து பேச அவர் மட்டும் தனியாக வீட்டிற்கு வந்திருந்தார்.

வழக்கம் போல் மகனை வீட்டிற்குள் விடாமல் சோலை முறைத்திருக்க, “உங்க கோவம் என்னோட போகட்டும் ப்பா. நம்ம கனிக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு. உங்க எல்லாருக்கும் விருப்பம்ன்னா பேசி முடிச்சிடலாம்” என்றார் ரகு.

“பேசி முடிக்க தான் போறேன். ஆனா, நான் பார்த்த வரனை. பையன் பேரு பாலமுருகன். நான் வாட்ச்மேனா இருக்க ஃபேக்டரில டெம்பரரி ஸ்டாஃப்பா இருக்காரு. சீக்கிரம் பெர்மனெண்ட் பண்ணிடுவாங்க. பிக்கல், பிடுங்கல் இல்லாத எங்களுக்கு ஏத்த இடம்” என்று அழுத்தமாக கூறினார்.

“என்னது ஃபேக்டரில வேலை செய்யறவனா? அதுவும் பெர்மனெண்ட் கூட இல்ல”

“எங்க வசதிக்கு என்னமோ அத தானப்பா நாங்க பார்த்துக்க முடியும். ஒரு தடவை புள்ளைனு நம்பி அகலக்கால் வச்சி அவமானப்பட்டது போதாதா?”

“ஐயோ.. அப்போ என்னால எதுவும் பண்ணமுடியாத நிலை. இப்போ நான் என் மாமனார் கம்பெனிக்கு எம்.டி. என்னால என் தங்கச்சிக்கு பெரிய சம்மந்தத்தை கூட முடிக்க முடியும்”

“அது உன் காசு இல்லயே பா, உன் மாமனார் காசு. அடுத்தவங்க காசுல பொண்ணுக்கு கல்யாணம் பண்ணுற அளவுக்கு சோலை தாழ்ந்து போய்டல. நாங்க பார்த்துகிறோம், நீ கிளம்பு”

“இது எப்படிப்பா நம்ம கனிக்கு நல்ல இடமா இருக்கும்?” ரகு மீண்டும் அதிலே நிற்க..

“என்ன பண்றது, பிள்ளை படிச்சி தலை தூக்கினா, அவன் இந்த குடும்ப பாரத்தை சுமப்பான்னு பார்த்தோம். அது இல்லங்கிற போது எங்க வசதிக்கு என்னமோ அத தான பார்த்துக்கணும். அதுக்குன்னு என் பொண்ணுக்கு ஏதோ ஒரு வரனை பார்த்திடல. பையன் தங்கம். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. என் பொண்ணுக்கு மட்டுமில்ல, இந்த வீட்டுக்கும் மகனுக்கு மகனா இருப்பாரு. இவ்ளோ ஏன், நாளைக்கு நாங்க செத்தா கூட நீ வர கூடாது. எங்களுக்கு எங்க மாப்பிள்ளை தான் கொள்ளி போடுவாரு” தந்தை பேசியதை கேட்டு ரகுவரன் அதிர்ந்து தாயையும் தங்கையையும் திரும்பி பார்த்தார்.

இருவரும் கண்ணீர் விட்டு கொண்டிருந்தார்களே தவிர மறுத்து ஒரு வார்த்தையும் பேசவில்லை.

“கனி.. அண்ணன் உனக்கு நல்ல வாழ்க்கைய தான் அமைச்சு தர பார்க்கறேன். அப்பா சொல்ற வரன் உனக்கு வேண்டாம் டா” தங்கையிடம் பரிவாக சொல்ல, அவர் பதிலேதும் சொல்லாது தலைகுனிந்து நின்றிருந்தார்.

“என் பொண்ணு யார் பேச்சையும் கேட்க மாட்டா. திரும்பி இந்த வீட்டு பக்கம் வந்துடாத” என்று கதவை அறைந்து சாற்றிவிட்டார்.

பெருத்த மனவேதனையுடனும் அவமானத்துடனும் ரகுவரன் அங்கிருந்து கிளம்ப, பின்வாசல் வழியாக ஓடி வந்த கனி அண்ணனின் காரின் குறுக்கே கையை போட்டார்.

தங்கையை பார்த்ததும் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி வந்த ரகு “கனி.. அண்ணன் உன் மேல வச்சிருக்க பாசம் பொய் இல்லடா. அப்பா பார்த்திருக்க மாப்ள உனக்கு வேண்டாம்” தன் கோட்டின் உட்புறமிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்தவர், “இங்க பாரு. நான் உனக்காக பார்த்த மாப்பிள்ளை. உன்னை நல்லா பார்த்துப்பார் கனி. சரின்னு சொல்லு, அப்பாவை எதிர்த்து நான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கறேன்” என்றார்.

“எனக்கு நீ வேணும் ண்ணா. ஆனா இந்த கல்யாண விஷயத்தை அப்பா போக்குல விட்டுடேன்” என்று கலங்கி கேட்க, ஏனோ ரகுவிற்கு கோபம் தான் வந்தது.

“அப்போ நீ, அம்மா எல்லாரும் அவரோட சேர்ந்து என்னை ஒதுக்கிட்டீங்கல?”

“அப்படி இல்லண்ணா.. என் கல்யாணம் நம்ம அப்பா இஷ்ட..”

“இஷ்டபடியே நடக்கட்டும், நீ தலையிடாதடானு சொல்ற. அப்படி தான? சரி, இனி உனக்கு அண்ணன் இல்லைனு நினைச்சிக்கோ” கோபமாக பொரிந்துவிட்டு, கனி கண்ணீரோடு நிற்பதையும் பொறுப்படுத்தாது வேகமாக காரில் ஏறி கிளம்பிவிட்டார்.

அதன்பின் தொழில் சம்மந்தமாக கூட சென்னை வரவில்லை. இருபத்தியேழு ஆண்டுகளுக்கு பிறகு இன்று தான் சென்னையில் காலெடுத்து வைக்கிறார்.

ஏனோ சிலவருடங்களாக தங்கை மற்றும் குடும்பத்தின் நினைவு அதிகமாக வர, அவர்கள் இருந்த பழைய வீட்டிற்கு ஆள் அனுப்பி பார்க்க சொல்ல, அங்கே யாருமில்லை, மாறி சென்றுவிட்டார்கள் என்று தகவல் வந்தது. தந்தையும் தங்கை கணவரும் வேலை செய்யும் தொழிற்சாலையை பற்றி விசாரித்த போது, அது இருபது ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டதாக தெரியவர, தன் குடும்பத்தையும் தங்கை குடும்பத்தையும் வலை வீசி தேடிய பலன், இரண்டு நாட்களுக்கு முன் தாய், தந்தை இறந்து ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், தங்கையின் குடும்பம் மட்டும் சென்னையில் தான் வசிப்பதாகவும் செய்தி வர, உடனே சென்னை கிளம்பிவிட்டார்.

தங்கையின் வீட்டு வாசலில் வந்து நின்றவரை பிரமித்து பார்த்த கனி, அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து ஓடிவந்து “அண்ணா.. இப்போ தான் இந்த தங்கச்சிய ஞாபகம் வந்துசா ண்ணா?” என்று அவர் தோளில் சாய்ந்து அழ, ரகுவும் உணர்ச்சி பெருக்கில் ஒன்றும் பேசாமல் தங்கையின் தலையை வருடி கொடுத்து கொண்டிருந்தார்.

சில நிமிட பாச பிணைப்பிற்கு பிறகே அண்ணனை இன்னும் வாசலிலேயே நிறுத்தி வைத்திருக்கிறோம் என்பதை உணர்ந்தவர் “நான் பாரு. உள்ள வா ண்ணா” என்று அங்கிருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அமர சொன்னவர், “என்னங்க.. யார் வந்திருக்காங்கனு பாருங்களேன்” என்று அறையிலிருந்த கணவரை அழைத்தார்.

பாலமுருகனும் எழுந்து வெளியே வர, அதற்குள் அண்ணனுக்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தவர் “என் வீட்டுக்காரர் ண்ணா. நீ தான் கல்யாணத்துல இல்லாம போய்ட்டியே. இந்த நேரத்துல கடையில தான் இருப்பார். இன்னைக்கு உடம்பு முடியலன்னு வீட்டுல இருக்கார்” என்று கணவரை பற்றி கனி சொல்ல..

‘கடையா?’ என்று ரகு புருவம் சுருக்க.. “அது ஃபேக்டரிய மூடிட்டாங்க ண்ணா. அதுல அப்பாவுக்கும் இவருக்கும் வேலை போய்டுச்சு. வேற இடத்துலயெல்லாம் அப்பாவுக்கு வயசாகிடுச்சுனு வேலை தரல. இவரும் டெம்பரரி தான. குடும்ப பொருளாதாரம் ரொம்ப இறங்கி போச்சு. அந்த கவலையிலேயே அப்பா முன்னயும், அவருக்கு பின்ன அம்மாவும் போய்ட்டாங்க” என்றவர் நெஞ்சை அடைத்த துக்கத்தை இழுத்து பிடித்து,

“உனக்கு சொல்லலாம்னா, நீ எங்க இருக்கனு எதுவும் விவரம் தெரியல. இவர் தான் எல்லாம் பண்ணார். நாங்க பசியோட இருக்கலாம், பசங்களால இருக்க முடியாதுல. அதான் இவரே ரோட்டுல கடை போட்டுட்டார். நானும் ஒரு வீட்டுல சமையல் பண்ணி, பாத்திரம் கழுவி, கூட்டி பெருக்குறதுனு மொத்த வேலையும் பார்த்துக்கிறேன். அது தவிர இன்னும் மூணு வீடுங்கள்ல பாத்திரம் துலக்கி, வீடு பெருக்கி, தொடைச்சி சுத்தம் செஞ்சி தருவேன். பொண்ணும் வேலைக்கு போறா. பையன் காலேஜ் முடிஞ்சதும் சாயந்திரத்துல அவன் அப்பாவுக்கு உதவி பண்ணுவான்” தன் குடும்பத்தை பற்றிய அனைத்தையும் எந்தவொரு சஞ்சலமும் இன்றி சொல்லியிருந்த தங்கையை தான் இமைக்காது பார்த்திருந்தார் ரகு.

“கடைன்னா?” அமைதியை உடைத்து அவர் கேட்க..

“அது சீசனுக்கு ஏத்த மாதிரி. வெயில் காலத்துல லெமன் ஜூஸ், ரோஸ் மில்க், சர்பத்.. குளிர் காலத்துல சூப் அப்படினு போடுவோம் ண்ணா. நான் தான் எல்லாம் போட்டு கேன்ல ஊத்தி கொடுத்து விடுவேன். அவர் கொண்டு போய் வித்துட்டு வந்திடுவார்” என்றார்.

அந்நேரம் மாடியிலிருந்து காய்ந்த துணிகளை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்த மகளை காட்டி “இதோ. என் பொண்ணு சுசி.. சுசித்ரா” என்று மகளை அண்ணனுக்கு அறிமுகப்படுத்தியவர் “சுசி, மாமா. சின்ன வயசுல கோச்சிக்கிட்டு போய்டுச்சுன்னு சொன்னேன்ல என் அண்ணன். இப்ப தான் திரும்ப வந்திருக்கு” என்று மகளிடம் பெருமிதமாக சொன்னார்.

அவரும் மருமகளை பார்த்து புன்னகைக்க, சுசிக்கு தான் என்ன செய்யவேண்டும் என்று புரியாமல் திகைத்து விழித்திருந்தாள்.

“ஏங்க, அண்ணனுக்கு கசகசன்னு இருக்கும். நீங்க மெத்தை வீட்டு அக்காகிட்ட கூலர் வாங்கிட்டு வர்றீங்களா. கொஞ்ச நேரத்துல தந்திடுறோம்னு சொல்லுங்க” என்று சொல்ல, மனைவி பேச்சுக்கு மறுப்பு சொல்லாமல் பாலமுருகனும் சென்றார்.

“சுசி, மாமாக்கு குளிர்ச்சியா ஏதாவது கலந்து கொண்டு வா” என்று மகளையும் விரட்ட, தங்கையின் தோற்றத்தையும், அவரின் குடும்பத்தின் நிலையையும் தான் ஒன்றும் பேசாமல் அமைதியாக பார்த்திருந்தார் ரகு.

தன் வசதியென்ன.. கடல் போல் அங்கிருக்கும் வீடு என்ன.. இங்கு தங்கை இருக்கும் நிலை தான் என்ன.. இந்த வயதிலும் ஆரோக்கியமான உணவாலும், செல்வ செழிப்பாலும் அவருக்கு ஐம்பத்திநான்கு வயது என்று சொல்ல முடியாத இளம் தோற்றத்தில் இருந்தார். ஆனால், தன்னை விட ஐந்து வயதிற்கும் சிறியவரான தன் தங்கையின் தோற்றமோ பின் ஐம்பதுகளில் இருப்பவர் போல் முகமெல்லாம் களையிழந்து பொலிவில்லாமல் இருந்தார்.

சுசியையும் பார்த்தார். அந்த வயதிற்குரிய அழகியே அவள். இருந்தும் மிகவும் ஒடிசலாக சோர்ந்த முகத்துடன் தெரிந்தாள். அங்கே தன் பிள்ளைகள் செல்வந்தர் வீட்டு வாரிசாக செழுமையோடு மிளிர்ந்துக் கொண்டு தானே இருக்கிறார்கள்.

ஒரு தாய் வயிற்று பிள்ளைகளான தனக்கும் தன் தங்கை வீட்டுக்கும் இடையே எத்தனை பெரிய எட்டமுடியாத இடைவெளி. எங்கோ தான் சரியென்று நினைத்தது, இங்கு தவறாக முடிந்துவிட்டதோ என்று யோசித்திருந்தவரால் எதுவும் பேச முடியாமல் போக, அந்த வீட்டையும் அங்கிருந்தவர்களையும் அமைதியாக பார்த்திருந்தார்.


தொடரும்..

This post was modified 1 month ago 4 times by Nila Sridhar

   
ReplyQuote
(@nila-sridhar)
Eminent Member Author
Joined: 3 months ago
Posts: 30
Topic starter  

உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..

https://srikalatamilnovel.com/community/topicid/9/


   
ReplyQuote
(@nila-sridhar)
Eminent Member Author
Joined: 3 months ago
Posts: 30
Topic starter  
அத்தியாயம் - 3

வீடே கல்யாண களை கட்டி இருந்தது. காலில் சக்கரத்தை கட்டி கொண்டு இங்கும் அங்கும் ஓடியாடி வேலை செய்துக் கொண்டிருக்கும் கனியின் மனம் முழுவதும் மகிழ்ச்சியே. அதற்கு நேர்மாறாக பாலமுருகனோ மிகவும் மன குழப்பத்துடன் காணப்பட்டார்.
 
“ஏங்க.. வந்தவங்களுக்கு குளிச்சி தயாராக தண்ணி பிடிச்சி கொடுக்க சொன்னா, என்னமோ நீங்க வாங்கின கப்பல் கடல்ல மூழ்கிட்டா மாதிரி உட்காந்துட்டு இருக்கீங்க” என்று கணவரை சாட, மனைவியை நிமிர்ந்து பார்த்தவர் மீண்டும் தலை கவிழ்ந்துக் கொண்டார்.
 
தன் ஈரக்கைகளை முந்தானையில் துடைத்துக் கொண்டே கணவரிடம் வந்தவர், அவர் தோளில் கைவைத்து “என்னாச்சுங்க. இன்னைக்கு எவ்ளோ முக்கியமான நாள்..” என்று கேட்க

“நம்ப சுசி கல்யாணமாகி அவ்ளோ தொலைவு போக போகுது. அத நினைச்சாலே துக்கம் தொண்டையை அடைக்குது” என்றவர் “நம்மளால நினைச்சதும் பொண்ண போய் பார்த்துட்டு வர முடியுமா.. நாமெல்லாம் தமிழ்நாட்டை கூட தாண்டினது இல்ல. நம்ப சுசி என்னன்னா அவ்ளோ தொலைவு வாக்கப்பட்டு போகுது. ஏரோபிளைன் காசெல்லாம் எவ்ளோ ஆகும் தெரியுமா” என்று மகளை பிரிய போகும் வேதனையில் மனிதர் புலம்பி கொண்டிருந்தார்.


“அட.. நிச்சயம் தான ஆக போகுது. இதுக்கு நேத்தே அக்காவும் தம்பியும் அழுது தீர்த்துட்டாங்க. இன்னைக்கு நீங்களா..” என்று நொந்துக் கொண்ட கனி..

“நான் எவ்ளோ சந்தோசமா இருக்கேன் தெரியுமா. நம்ப சுசி வாழ்க்கைய பத்தி என்னென்ன கனவு கண்டிருப்போம். என் பொண்ணு என் அண்ணனுக்கு மருமகளாக போறா. நான் பொறந்த வீட்டுக்கு என் பொண்ணு போக போறான்னு நினைச்சாலே மனசுக்கு அவ்ளோ நிறைவா இருக்கு” என்று உளமகிழ்ந்து சொன்னார்.

தங்கையையும் அவர் வீட்டையும் பார்த்த ரகுவரனுக்கு அனைத்தும் தன்னால் நிகழ்ந்ததென்ற குற்றவுணர்வு. அன்று தன் காதல் திருமணத்தால் திசை மாறிப் போன தங்கையின் வாழ்க்கைக்கு ஏதேனும் செய்யமுடியுமென்றால், அது அவர் மகளை தன் மகனுக்கு திருமணம் முடித்து மருமகளாக இல்லாமல் மகளாக பார்த்து கொள்வதே ஆகும் என்றெண்ணினார்.

அதை தங்கையிடமும் சொல்ல, தான் உயிரையே வைத்திருக்கும் அண்ணனுக்கும் தனக்குமான உறவு முறிந்தே விட்டதென எண்ணியிருந்த நேரத்தில், இன்று அண்ணனுக்கு சம்மந்தகாரி ஆகும் பாக்கியம் கிடைக்கும் போது விடவா செய்வார். உடனே சம்மதம் தெரிவித்துவிட்டார்.

இதுவரை மனைவி பேச்சுக்கு மறு பேச்சு பேசாத பாலமுருகனும் சரியென்று தலையாட்டி விட, இப்போது விஷேசம் நெருங்க நெருங்க, மகளை அத்தனை தூரத்தில் கட்டி கொடுத்துவிட்டு எப்படி இருப்பதென்று விசனப்பட்டு கொண்டு இருக்கிறார்.

கனிக்கு அதுபோல் எந்த வருத்தமும் இல்லை. பெண்பிள்ளையை பெறும் போதே என்றைக்கானாலும் இன்னொரு வீட்டிற்கு செல்ல தான் போகிறாள் என்று மனதை திட படுத்திவிட்டவருக்கு, இன்றோ அண்ணன் வீட்டிற்கே செல்வதில் அளவுக்கடந்த மகிழ்ச்சி தான்.

இருந்தும் “விடியறவரைக்கும் ரெண்டு பேரும் தூங்கல. அக்கா போய்டுவானு இவனும், எல்லாரையும் விட்டுட்டு அவ்ளோ தூரம் போறோமேனு அவளும் சமையல் கட்டுல உட்காந்துட்டு ஒரே அழுகை” மகளையும் மகனையும் பற்றி பகிர்ந்தார்.
 
நிச்சயத்திற்காக வந்த சொந்தங்கள் அந்த சிறிய வீட்டை முழுவதுமாக ஆக்கரமித்து விட, அக்காவிற்கும் தம்பிக்கும் கிடைத்ததென்னவோ சமையலறை தான். அங்கே இருவரும் ஒருவர் மீது இன்னொருவர் சாய்ந்தமர்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பதை பார்த்த கனிக்கும் மனதை பிசைய தான் செய்தது. அதை இப்போது கணவரிடம் சொல்லும்போதும் தன்னை மீறி துளிர்ந்துவிட்ட கண்ணீரை அவருக்கு தெரியாமல் துடைத்தார்.

“இப்போ தான் நம்ப குமுதாவை கூப்பிட்டுக்கிட்டு இவ பார்லருக்கு போனா, அவன் சமையலுக்கு தேவையான காய்கறி, மளிகை பொருளை மண்டபத்துல இறக்க போயிருக்கான்” என்று மனைவி சொன்னதை அமைதியாக கேட்டிருந்தார் பாலன்.

“உங்க பையனுக்கு என்ன கோவம் வருதுங்க. எங்க அண்ணன் வந்து மனோஜுக்கு நம்ப சுசியை கேட்டார்னு சொன்னதுல இருந்து அவன் முகத்துல எள்ளும் கொள்ளும் வெடிக்குது. இத்தனை வருஷம் வராதவரு, இப்போ மட்டும் எதுக்கு வந்தார்னு கேக்கறான். காதல் கல்யாணம் பண்றதென்ன அவ்ளோ பெரிய தப்பா. இத்தனைக்கும் என் கல்யாணத்துக்காக அண்ணன், அண்ணி ரெண்டு பேரும் காத்திட்டு தான் இருந்திருக்காங்க.  அத எங்க அப்பா தான் புரிஞ்சிக்காம பெத்த புள்ளையவே ஒதுக்கி வச்சாருன்னா, இவன் தாத்தனுக்கு தப்பாம இருக்கான். சின்ன வயசுல அவர் கூட அதிகம் இருந்து அவர் குணம் வந்திடுச்சி போல” அப்போதும் தன் அண்ணனை விட்டு கொடுக்காமல் பேசினார் கனி.

“அவனுக்கு மாமாவை பிடிக்காதுனுயெல்லாம் இல்ல. அந்த நேரத்துக்கு பேசிட்டு இருப்பான்” பாலனோ மகனுக்கு பரிந்து பேச

“அட, இவர் தான் தாய்மாமானு ஒண்ணும் செஞ்சதில்ல. நான் எங்க அக்காவுக்கும், அவ குழந்தைகளுக்கும் செய்யலாம்னு பார்த்தா, அதையும் பண்ணவிடாம லண்டன் கூட்டிட்டு போறேன்னு சொல்றாருனு ஒரே கலாட்டா பண்ணிட்டான்” என்று கனி புலம்ப, அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டார் பாலன். இன்னுமே மகள் செல்லும் கவலையில் தான் இருந்தார். பின் இருவரும் வீட்டில் இருப்பவர்களை கவனிக்க சென்றனர்.

நிச்சயம் நடக்கவிருக்கும் மண்டபத்தில் பொறுப்பான தம்பியாக வேலைகளை செய்திருந்தவனை அவனது நண்பனின் குரல் கலைத்தது.

“மச்சான், நாங்க வந்துட்டோம்” என்று கமலியுடன் நின்றிருந்த வினோத் சொல்ல, அவர்களை திரும்பி பார்த்தான் சரண்.

“வா டா. வா கமலி” என்று நண்பர்களை உபசரித்தவன் “நீங்க ரெண்டு பேரும் அங்க உட்காருங்க. கொஞ்சம் வேலை இருக்கு. முடிச்சிட்டு வந்திடறேன்” என்று அங்கே போடப்பட்டிருத்த நாற்காலியை காட்ட

“அடேய்.. நாங்க கெஸ்ட் இல்ல. உன்னோட ப்ரண்ட்ஸ்.. என்ன வேலை செய்யணும்னு சொல்லு, செய்யறோம்” என்றான் வினோத்.

“அதெல்லாம் வேண்டாம் டா” என்றவனை அவன் நண்பனும் தோழியும் முறைக்க..

“சரி, நீ என் கூட இரு. கமலி, நீ சுசி கூட இருக்கியா? ரூம்ல ரெடி பண்ணிட்டு இருக்காங்க. அம்மா வேற அவங்க அண்ணன் பேமிலிய கவனிக்க மாப்ள ரூம்ல இருக்காங்க” என்று கேட்டு கொள்ள, அவர்களும் அதையே செய்தனர்.

ஒருபுறம் உறவினர்கள் வர தொடங்க, பாலனும் வீட்டிலிருந்த உறவினர்களை ஆம்னி வண்டியில் அழைத்து வந்திருந்தார். அவர் அவர்களை கவனிப்பதில் மும்முரமாகி விட, சரண் சொன்னது போல், கனி மாப்பிள்ளை அறையில் அவர் அண்ணன் குடும்பத்திற்கு உபச்சரணை செய்துக் கொண்டிருந்தார்.

நண்பர்கள் இருவரும் வந்த விருந்தினர்களுக்கு குடிக்க ஜூஸ் கொடுத்துக் கொண்டிருக்க, அப்போது தான் சரணின் கண்ணில் அது பட்டது.
 
உடனே நண்பனிடம் சென்றவன், அவனை ஒட்டி நின்று அவன் தோளில் சாய “அடேய்.. கையில ஜுஸ் இருக்கு. எதுக்குடா கிலுகிலுப்பு பண்ற” என்று வினோத் கடுப்பாக

“டேய்.. அந்த பொண்ணுடா” என்றான் உற்சாக குரலில் சரண்.

“எந்த பொண்ணு?” என்று கடமையே கண்ணாக வேலையில் மூழ்கியிருந்த வினோத் கேட்க

“அவ டா. அன்னைக்கு மால்ல பார்த்தேனே. அவளை இங்க பார்த்தேன்டா” என்று மலர்ந்த முகமாக தன்னவளை கண்டுவிட்ட மகிழ்ச்சியில் சொன்னான் சரண்.

“டேய் என்ன சொல்ற.. எங்க?” என்று வினோத்தும் தன் பார்வையை சுழலவிட

“அங்க டா” என்று அவளை நோக்கி சரண் கையை காட்ட, அவள் அங்கே இல்லை.

வினோத்தும் யாரை சொல்கிறான் என்று தேடிவிட்டு நண்பனை பார்க்க “காணோம் டா” என்றவனின் முகம் விழுந்துப் போனது.

நண்பனை ஏற இறங்க பார்த்த வினோத் “பகல் கனவு காணறதே தப்பு. அதுலயும் அக்கா நிச்சயதார்த்தத்தை வச்சிக்கிட்டு கனவு காணறியே” என்று கடுப்படித்தான்.

அதில் கடுப்பான சரண் “நான் பொய் சொல்லல. எத்தனை பேர் இருந்தாலும் அவளை எனக்கு தெரியும். அவ இந்த நிச்சயத்துக்கு வந்திருக்கா” என்று அழுத்தமான குரலில் சொல்ல

நண்பனை ஆழ்ந்து பார்த்தவனுக்கு, உண்மைதானோ என்று தோன்ற “அவ இங்க இருக்கானா, ஒண்ணு உங்க சொந்தமா இருக்கணும். இல்ல, உங்க மாமா சைடா இருக்கலாம். அந்த ட்ரேவ இங்க கொடு. நீ போய் அவளை தேடு” என்று சொல்லி சரணை அனுப்பி வைக்க, அவனும் வினோத்தை பின்னிருந்து அணைத்துக் கொண்டான்.

“அட இவன் ஒருத்தன். ஆனா ஓனா தோஸ்தானா பண்ணிடுவான். கமலி அப்பா வர்றாருடா. என் வாழ்க்கையே உன் கையில தான் இருக்கு” என்று பாவமாக சொல்ல

அதை சிறிதும் கண்டுக் கொள்ளாதவன் “தேங்க் யூ டா. நான் சட்டுனு போய் அவளை கண்டுபிடிச்சிட்டு வந்திடுறேன். அதுவரைக்கும் நீ தனியா கஷ்டப்பட வேண்டாம். இரு என் அத்தை பையன் உனக்கு ஹெல்ப் பண்ணுவான்” என்று வாயெல்லாம் பல்லாக சொன்னான்.
 
“வழியுது, தொட..” என்று அசடு வழிந்தவனை நொந்துக் கொண்டவன் “போ போ.. உன் மனம் கவர் கனவு கன்னியை நாங்களும் பார்க்கணும். சீக்கிரம் கண்டுபிடிச்சி கூட்டிட்டு வா. ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணா முடிச்சிடலாம். ஆல் தி பெஸ்ட் மச்சான்” நண்பனுக்கு வாழ்த்தும் கூறி அனுப்பிவிட்டான்.

மாப்பிள்ளை வீட்டார் இருந்த அறையை விடுத்து மற்ற இடங்களில் ஒன்று விடாமல் சரண் அவளை தேடினான். இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் தேடினால் அவள் கிடைத்துவிடுவாளா என்ன. அவனது மாமன் மகளான அவள், மாப்பிள்ளை வீட்டிற்கென்று ஒதுக்கியிருந்த அறையில் தான் இருந்தாள்.

தேடி களைத்தவனுக்கு வழக்கம் போல் தமக்கையின் நிச்சய வேலை அழைக்க, கீழே செல்ல மாப்பிள்ளை வீட்டார் இருந்த அறையின் வழியாக செல்லவும், அவள் அறையை விட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது.

லாவெண்டர் நிற இண்டோ வெஸ்டன் உடையணிந்து, லாவெண்டர் மலராகவே அவனை வருடி சென்றவளை பார்த்த திகைப்பில் சரண் அங்கேயே உறைந்து நின்றுவிட, அவனை கவனிக்காதவளோ அங்கிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்துக் கொண்டாள்.

அவளை தொடர்ந்து அவளது அண்ணனும் மாப்பிள்ளையுமாகிய மனோஜும், அன்னை மைதிலியும் வெளியே வந்தனர். வந்தவர்கள் யாரும் சரணை கவனிக்கவில்லை. அவனுக்கு எதிர்புறமாக அமர்ந்தும் விட்டனர். அவன் மனம் கவர்ந்தவள் அவன் வீட்டிற்கு வந்ததில்லை என்றாலும், ரகுவும் மைதிலியும் வந்த போது அவன் வீட்டிலில்லை என்றாலும், உடன் இருக்கும் மனோஜை அவனுக்கு நன்கு தெரியுமே. சுசித்ராவை காண ரகுவுடன் அவன் வீட்டிற்கு வந்த போது பார்த்திருக்கின்றானே.

அவள் யாரென்று மனம் உணர்த்தினாலும், அதை பெரிதுபடுத்தும் எண்ணமில்லாமல் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தவனின் சிந்தையை அவளது குரலே கலைத்தது.

“வாட் தி ஹெல் இஸ் திஸ், மாம்?” சொன்னவளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது.

“வாட் ஹேப்பன்ட், டியர்?” என்று மைதிலி மகளின் தலை வருடி கேட்க

“ரூம்ல ஏசி இருக்குனு சொல்றாங்க. ஐ டோன்ட் திங்க் இட்ஸ் ஒர்கிங். இட்ஸ் வெரி ஹாட் மாம்” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க, அவள் முகத்தில் பூத்திருந்த வியர்வை துளிகளை கண்டு துடித்துப் போனவன், பெண் வீட்டுக்காரனாக அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு செய்ய இரண்டடி முன்னெடுத்து வைக்க..

“ஐ டோன்ட் லைக் திஸ் கண்ட்ரி, மாம். ஆல் ஆஃப் எ சடன், எங்க இருந்து ஒரு தங்கச்சி குடும்பம் இந்த டேட்க்கு வந்தாங்க. ஐயம் கோய்ங் பேக் டூமார்ரோ” தன் கையிலிருந்த அண்ணனின் நிச்சய அழைப்பிதழை வைத்து விசிறி கொண்டே சொன்னாள். அவள் வர்ணிகா..

அதை கேட்டவனின் கால்கள் அதற்கு மேல் செல்லாமல் அங்கேயே வேரூன்றி நின்றுவிட்டது.
 
“வரு. இன்னும் ஃபிஃப்டீன் டேஸ்ல மனு மேரேஜ் இருக்கு. நீ இப்போ போறேங்கிற. அப்பா ஃபீல் பண்ணுவார்டா” மைதிலி மகளுக்கு இலகுவாக பேசி புரியவைத்து கொண்டிருக்க

“பெரிய கல்யாணம். அவனை பாருங்க. டிட் யு சி எனி ஹேப்பினஸ் ஆன் ஹிஸ் ஃபேஸ்?” தன் அண்ணனை காட்டி அன்னையிடம் சொன்னவள், மனோஜை பார்த்து “இஃப் யு டோன்ட் லைக் திஸ் மேரேஜ், யு சுட் ஸ்பீக் அவுட். வை டு யு ஸ்பாயில் யுவர் லைஃப்?” என்று கைகளை உயர்த்தி அதிருப்தியாக கேட்டாள்.

அத்தோடு விட்டாளா.. அவள் அடுத்து பேசிய வார்த்தைகள் சரணின் மனதில் நீங்காத ரணமாகவே பதிந்து விட்டது.

“ஐயம் டெல்லிங் யு திஸ். இன்னும் என்கேஜ்மெண்ட் ஆகல. ஸ்டில், யு ஹேவ் டைம். பிடிக்கலனு வாய திறந்து சொல்லு. வி வில் கால் ஆஃப் திஸ் என்கேஜ்மெண்ட் அண்ட் கோ பேக் டூ லண்டன்” என்றது தான், அதுவரை அனைத்தையும் ஸ்தம்பித்து கேட்டிருந்தவன்

“என்ன சொன்னீங்க? ஃபங்க்ஷனை நிறுத்துவீங்களா?” என்றவனின் குரலில் மூவரும் அது வந்த திசை நோக்கி திரும்ப, அதற்குள் அவன் அவர்களை நோக்கி வந்திருந்தான்.

நேராக வர்ணிகாவின் எதிரில் வந்து நின்ற சரண் “அக்காக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும்னு தான் இதெல்லாம். உங்க அப்பா கூட கல்யாண செலவை மொத்தமா அவரே ஏத்துகிறதா சொன்னாரு. அப்படி கல்யாணம் பண்ண எங்களுக்கு விருப்பம் இல்ல. அதுக்காக எங்க அப்பாம்மா வட்டிக்கு காசு வாங்கி தான் இந்த நிச்சயத்தை பண்ணிட்டு இருக்காங்க. நீ என்னனா கொஞ்சம் கூட யோசிக்காம நிச்சயத்தை நிறுத்திடலாம்னு சொல்ற” என்று அவளிடம் சீறி பாய, அவளோ திகைத்து அவனையே பார்த்திருந்தாள். உடனிருந்தவர்களின் நிலையும் அதுவே.

“நாங்க ஒண்ணும் கேக்கல, உங்க அண்ணனுக்கு எங்க அக்காவை கல்யாணம் பண்ணிக்கோங்கனு. உங்க அப்பா தான் சொன்னாரு. அவரை நம்பி இவ்ளோ பெரிய காரியத்துல இறங்கின இந்த அம்மாவை சொல்லணும். குடும்பமா என்ன விளையாட்டு காட்டிட்டு இருக்கீங்களா?” சரண் அவன் பாட்டிற்கு வர்ணிகாவிடம் சத்தமிட்டு கொண்டிருக்க, முதலில் சுதாரித்தது என்னவோ மனோஜ் தான்.

“சரண். சரண்.. கோபப்படாத. அவ சொன்னா என்கேஜ்மென்ட்டை நிறுத்திடுவோமா. அவ பிறந்துல இருந்தே லண்டன்ல தான் இருக்கா. இந்த மாதிரி வெதரெல்லாம் அவளுக்கு புதுசு. அந்த டென்ஷன்ல பேசிட்டா” மனோஜ் மைத்துனனை சமாதானம் செய்ய, அவனும் நிச்சயம் வரை வந்துவிட்ட தன் அக்காவின் வாழ்க்கையை நினைவில் வைத்து தன்னை நிதானப்படுத்தினான்.

அதற்குள் மைதிலியும் “சாரி சரண். வரு அத மீன் பண்ணல. இதை பெருசு பண்ணாத. உங்க மாமாவுக்கு தெரிஞ்சா கோபப்படுவார்” என்று சொல்ல, அவன் பார்வை என்னமோ இன்னும் வர்ணிகாவிடம் தான் இருந்தது.

தான் பேசியதற்கு வருத்தப்பட்டது போல் இல்லை. சொல்லப்போனால் இப்போது அவளும் அவனை முறைத்து கொண்டு தான் இருந்தாள்.

மைதிலியும் மனோஜும் பேசியதில் சற்று தணிந்திருந்தாலும், தன் மனம் முழுக்க நிறைந்திருந்தவள் தந்த ஏமாற்றத்தில் உள்ளுக்குள் கலங்கியிருந்தவன், அதுவும் தன் அக்காவின் நிச்சயத்தை நிறுத்துவதை பற்றி பேசிவிட்டாளே என்று கோபம் இன்னமும் இருக்க, “நாங்க ஒண்ணும் இல்லாதவங்களா இருக்கலாம். ஆனா, பிடிக்காத இடத்துல பணமிருக்குனு பொண்ணை கட்டி கொடுக்கறவங்க இல்ல. உங்க அண்ணனும் அப்பாவும் என் அக்காவை பார்த்து பிடிச்சிருக்குனு சொன்னதால தான், இதுக்கு சம்மதமே சொன்னோம். ஒரு பொண்ணா இருந்துட்டு இன்னொரு பொண்ணோட கல்யாணத்தை நிறுத்த பார்க்கற. இது தான் நீ வளர்ந்த கலாச்சாரமா?” என்று அவளிடம் கேட்டவன், அவளுடைய பதிலுக்கும் காத்திருக்காமல் வேகமாக அங்கிருந்து அகன்றுவிட்டான்.

சரண் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதுவும் தன் மனம் கவர்ந்தவளிடம் இருந்து. உடைந்து போனவனாய், இறுகிய முகமும் தளர்ந்த நடையுமாய் கீழே இறங்கி வர, அவனை அங்கேயே பிடித்துக் கொண்டனர் வினோத்தும் கமலியும்.

“எங்கண்ணா போயிருந்த? அக்கா உன்னை பார்க்கணும்னு சொல்லிட்டே இருக்காங்க” என்று கமலி சரணை பிடித்திழுக்க
 
“இருடி, அதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என்ற வினோத் “என்னடா, அந்த பொண்ண பார்த்தியா?” என்று ஆர்வமாக கேட்டான்.

அவன் கேட்டதிலிருந்தே தானும் புரிந்து கொண்ட கமலி “நிஜமாவா ண்ணா?. அவங்களை பார்த்தியா?” என்று ஆவலாக அவளும் கேட்க, இவனோ அவர்களை நேராக பார்க்காமல் இல்லையென்று தலையாட்டினான்.

அதை கேட்டு வினோத் அதிருப்தியாக தலையாட்ட, கமலியோ “சரி வா, நாம இன்னொரு டைம் தேடி பார்க்கலாம். வினு, நீ போய் வந்தவங்கள பாரு” என்று சரணை இழுத்து செல்ல, கால்கள் வேரூன்றி போனவன் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை.

அவன் வராததை பார்த்து கமலியும் வினோத்தும் புரியாமல் விழிக்க “நீ சொன்னது கரெக்ட் தான் டா. பகல் கனவு காண்றது தப்பு. கனவு கலைஞ்சு போச்சு” என்றுவிட்டு “நீங்க போங்க. நான் சுசியை பார்த்துட்டு வரேன்” என்று நண்பர்களை அங்கிருந்து அனுப்பினான்.

அவர்கள் சென்றதும் அங்கிருந்த சமையற்கூடத்திற்கு சென்றவன், தன் கலங்கிய கண்களை அழுந்த துடைத்து “எனக்கானவ என் அக்கா வாழ்க்கை கெடுற மாதிரி பேசமாட்டா. நீ எனக்கானவ இல்ல. வேண்டாம், நீ எனக்கு வேண்டாம்” என்று திடமாக ஒரு முடிவை எடுத்தான்.

அத்தோடு அங்கிருந்த குழாயில் தண்ணீர் பிடித்து தன் முகத்தை கழுவியவன், தலையை கோதி சரி செய்துக் கொண்டு தமக்கையை காண அவளறை நோக்கி சென்றான்.

தொடரும்..

This post was modified 1 month ago 5 times by Nila Sridhar

   
ReplyQuote
(@nila-sridhar)
Eminent Member Author
Joined: 3 months ago
Posts: 30
Topic starter  

உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..

https://srikalatamilnovel.com/community/topicid/9/


   
ReplyQuote
(@nila-sridhar)
Eminent Member Author
Joined: 3 months ago
Posts: 30
Topic starter  
அத்தியாயம் - 4

இதோ சுசி, மனோஜின் வரவேற்பு நடந்துக் கொண்டிருக்கிறது. ரகுவரன் எவ்வளவு சொல்லியும் திருமண செலவை தாங்கள் தான் ஏற்போம் என்று விடாப்பிடியாக சொல்லிவிட்டார்கள் கனியும் அவரது கணவர் பாலனும்.

வழக்கம் போல் சரணை திருமண வேலைகள் பிடித்துக் கொள்ள, வர்ணிகா அன்று அவன் வணிக வளாகத்தில் பார்த்த மோவ் நிற லெஹெங்கா அணிந்து, அழகு பதுமையாக வலம் வந்து கொண்டிருந்தாள். அவள் கைதேர்ந்த சிற்பி செதுக்கிய சிற்பமென இருக்க, சரண் தான் அவளை பார்ப்பதை அறவே தவிர்த்தான்.

“ஏன்டா, இப்படி ஒரு மாமா பொண்ண வச்சிக்கிட்டா எதோ ஒரு பொண்ண மால், கல்யாண மண்டபம்னு தேடிக்கிட்டு இருந்த? உங்க மாமாவுக்கு நம்ப அக்காவை பையனுக்கு கட்டுற மாதிரி, பொண்ண உனக்கு கட்டுற ஐடியா இல்லாமலா இருக்கும்” என்ற வினோத், என்னமோ தனக்கே தன் மாமன் மகள் தயாராக இருப்பது போல் வெட்கத்தில் சிணுங்கிக் கொண்டிருந்தான்.

சரணோ எதற்கும் எதிர் வினையாற்றாமல் “வரவங்களுக்கு தாம்பூல பை கொடுக்கணும். அந்த தேங்காய் மூட்டையை வாசல்ல கொண்டு போய் வைக்கலாம் வா” என்றான்.

“இவனை வச்சிக்கிட்டு” என்று தலையில் அடிக்காத குறையாக வினோத் நண்பனுடன் சென்றான்.

மணமக்கள் மேடையில் நின்றிருக்க, உறவினர்களும் நண்பர்களும் பரிசு பொருட்களோடு மேடையேறி வந்து அவர்களை வாழ்த்தி விட்டு சென்றிருந்தனர். இத்திருமணத்தை நினைத்து அனைவருக்கும் மகிழ்ச்சி என்றாலும், தங்கைக்கு ஏதோ ஒரு வகையில் நியாயம் செய்து விட்டதாக ரகுவரனும், அண்ணனுக்கும் தனக்குமான உறவு வாழையடி வாழையாக தொடர போகும் மகிழ்ச்சியில் கனிமொழியும் பூரித்து தான் போயிருந்தனர்.

அப்போது முப்பது வயதிற்குரியவன் மேடையேறி சுசித்ராவிடம் செல்ல, “வாங்க சார். வாங்க..” என்று அவனை மரியாதையுடன் வரவேற்று, அருகில் இருந்த மனோஜிடமும் “மாமா.. இது எங்க மேனேஜர்” என்று சிரித்த முகமாக அறிமுகம் செய்தாள் சுசித்ரா.

அதை கேட்ட மனோஜும் மரியாதை நிமித்தமாக தலையசைத்து “ஹலோ.. ஐ ஆம் மனோஜ்” என்று கை கொடுத்து புன்னகைக்க, பதிலுக்கு அவனும் “பார்த்திபன்” என்று கை கொடுத்து புன்னகைத்தான்.

“அம்மா, அப்பாவை கூட்டிட்டு வரலையா சார்?” சுசி பார்த்திபனிடம் கேட்க

“முஹுர்த்தத்துக்கு வருவாங்க” என்று மென்னகைத்தவன், பரிசை இருவரிடமும் கொடுத்துவிட்டு..

“கங்கிரஜுலேஷன்ஸ்” என்று மனோஜிடம் சொல்லிவிட்டு “பெஸ்ட் விஷஸ் சுசித்ரா” என்று அருகில் இருந்தவளிடமும் சொல்லிவிட்டு அங்கிருந்து நகரப் பார்த்தான்.

“தேங்க் யு சார். கண்டிப்பா சாப்பிட்டுட்டு தான் போகணும்” என்றவள் தன் தம்பியை தேடி கண்களை சுழல விட, சரண் மேடையில் நின்று தாயிடம் எதுவோ பேசி கொண்டிருந்தான்.

“சரண்” என்று அருகில் அழைத்தவள், “எங்க மேனேஜர். அவரை கிட்ட இருந்து சாப்பிட வச்சி தான் அனுப்பனும்” என்று தம்பியிடம் சொல்ல..

அவனும் “வாங்க சார்” என்று பார்த்திபனை கையோடு அழைத்து சென்றான்.

“ரகுவரா.. பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு.. எங்களை எல்லாம் ஞாபகம் இருக்கா?” என்றார் கனி அழைத்து திருமணத்திற்கு வந்திருந்த ரகுவரன் மற்றும் கனியின் தூரத்து சொந்த பெரியம்மா.

“பெரியம்மா, எப்படி இருக்கீங்க?” என்று நலம் விசாரிக்க, அவரும் நன்றாக இருக்கிறேன் என்று சொன்னதும், “என்ன பண்றது பெரியம்மா, அப்பாவோட குணம் தான் உங்களுக்கு தெரியுமே. எங்களை அவர் சுத்தமா ஏத்துக்கல. நானும் எவ்ளோ நாள் தான் அவர் சம்மதத்துக்காக காத்திருக்கிறது” என்று இன்றும் வேதனை நிரம்பிய குரலில் சொன்னார்.

“எது எப்படியோ, கூட பொறந்தவள பார்க்காம விட்டுட்டியேனு எனக்கு உன்மேல வருத்தம் தான். இப்போ அவ பொண்ண உன் வீட்டு மருமகளா எடுத்து என் மனசை தணிச்சிட்ட” என்று மனம் குளிர்ந்து சொல்ல, ரகுவரன் மனதும் இப்போது தானே குளிர்ந்திருக்கிறது, அவரும் ஆமோதிப்பாக தலையசைத்து புன்னகைத்துக் கொண்டார்.

“அங்க முதல் வரிசைல உட்கார்ந்துட்டு இருக்கறது உன் பொண்ணுன்னு கனி சொன்னா”

“ஆமா பெரியம்மா. வரு.. வர்ணிகா.. லண்டன் பிசினஸ் ஸ்கூல்ல மேனேஜ்மெண்ட் முடிச்சிருக்கா” என்று தானும் மகளை பற்றி கண்களில் பெருமிதத்தோடு சொல்ல..

பதிலுக்கு பெரியம்மாவும் “லக்‌ஷனமா இருக்கா” என்றவர் “தங்கச்சி பொண்ண பையனுக்கு முடிச்சிக்கிட்ட. நம்ப கனி பையனும் ஏதோ கம்ப்யூட்டருக்கு படிச்சிட்டு வேலை தேடிட்டு இருக்கானாமே.. ஆளும் நல்லா இருக்கான். பொண்ண அவனுக்கு முடிச்சா என்ன ரகு” என்று தன் ஆசையை சொன்னார்.

அதை கேட்டு சிரித்த ரகுவரன் “என் பையன் மாதிரி பொண்ணு இல்ல பெரியம்மா. மனு நான் என்ன சொன்னாலும் கேட்டுப்பான். வருவுக்கு அவ இஷ்டம் தான். இப்படி தான் இருக்கணும், இத தான் படிக்கணும்னு எல்லாம் அவ இஷ்டப்படி தான். இவ்ளோ ஏன், பையனை வற்புறுத்தி பிசினஸுக்கு கூப்பிட்டேன். பொண்ணு, அவளாவே கம்பெனில ஜாயின் பண்ணி எனக்கு ஹெல்ப்பும் பண்ணிட்டு இருக்கா. ஆபீஸ்ல அவளை கேக்காம ஒரு டெஸிஷன் எடுத்துட்டேன்னு மூணு மாசம் வீட்டுல தங்காம வெளில தங்கி இருந்தா. இப்போ கூட அவளுக்கு இந்த ஊரு சுத்தமா பிடிக்கல. எனக்காகவும் மனுக்காகவும் தான் பல்லை கடிச்சிட்டு இருக்கா” என்று மகளின் குணத்தை பற்றி சொன்னவர்,

“என் பொண்ண கட்டி கொடுத்தா தான் என் தங்கச்சி பையனுக்கு செய்யணும்னு இல்ல. அவன் இப்பவே என் பையன் தான்” என்று மனதிலிருந்தும் சொன்னார்.

“அதுவும் சரி தான். ஒத்து வராதவங்கள கட்டி வச்சிட்டு நாளைக்கு நாமளா கஷ்டப்பட போறோம். அவங்க தானே. சரி ரகு, நீ பாரு. தங்கச்சிய மட்டும் என்னைக்கும் விட்டுடாதப்பா. அவ நிறைய கஷ்டப்பட்டுட்டா” பெரியம்மா சொல்ல, ரகுவும் ஆமோதிப்பாய் தலையாட்டினார்.

அதன்பின் இருவரும் அவரவர் குடும்ப சமாச்சாரங்களை பேசியிருந்தனர். பின் ரகுவே உடனிருந்து அவரை சாப்பிட வைத்து அழைத்து வந்து, மகளுக்கும் அவரை அறிமுகம் செய்து அவளருகில் அமரவைத்துவிட்டு சென்றார்.

நேரம் இரவை நெருங்க, கூட்டம் சற்று குறைந்திருந்தது. சரணுக்கும் அவனது மற்ற நண்பர்களுடன் அமர்ந்து பேச சற்று நேரம் கிடைக்க, அவர்கள் அவனை ஆடச் சொன்னார்கள். அதற்கேற்றாற் போல் முதலில் மெல்லிசைகளாக பாடி கொண்டிருந்த இன்னிசை குழுவும் இப்போது வேக மெட்டுகளை பாட ஆரம்பித்திருக்க, நண்பர்கள் ஒருபுறம் ஆடி பாடி விழாவை களைகட்ட செய்ய, என்ன தான் நண்பர்கள் வற்புறுத்தியது ஓருபுறம் இருந்தாலும் தமக்கைக்கு திருமணமாக போகும் சந்தோசத்தில் தானாகவே அவர்களுடன் இணைந்துக் கொண்டான் சரண்.

ஆஹா ஆஹா கல்யாணம்..
ஆஹா ஆஹா கல்யாணம்.. ஆச நூறு..
ஆஹா ஆஹா கல்யாணம்
ஆஹா ஆஹா கல்யாணம்.. கூத்த பாரு..

பொண்ணு மாப்பிள்ளை ஜோரூ
ஒண்ணா சேருது ஊரு
மைக் செட்டுல பாட்டு
சேருது மனசு மாலையை போட்டு
மைய பூசுன கண்ணு
வெட்கம் பேசுது நின்னு
பையன் பாக்குற பார்வை
உள்ள இருக்கு ஏதோ ஒன்னு

ஆஹா ஆஹா கல்யாணம்..
ஆஹா ஆஹா கல்யாணம்.. ஆச நூறு..
ஆஹா ஆஹா கல்யாணம்
ஆஹா ஆஹா கல்யாணம்.. கூத்த பாரு..

முதலில் மிதமாக ஆரம்பித்தவன் பின் யாரும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு ஆர்ப்பரித்து ஆடி கொண்டிருந்தான். முதல் வரிசையில் அமர்ந்து அமைதியாக விழாவை பார்த்திருந்த வர்ணிகா, ஓர் திசையிலிருந்து அதீத சத்தம் வரவே அனிச்சை செயலாக திரும்பி பார்க்க, அங்கே சரண் தன் நண்பர்களுக்கு மத்தியில் நடுநாயகமாக ஆடிக் கொண்டிருந்தான்.

அவனை சிலநிமிடங்கள் எந்தவொரு உணர்வுமின்றி வெறித்து கொண்டிருந்தவள் பின் மணமேடையின் பக்கம் தன் பார்வையை திருப்பி கொண்டாள்.

வரவேற்பு அனைவரின் மனதிலும் நல்ல நினைவுகளை கொடுத்துவிட்டு இனிதே முடிவடைந்திருக்க, நேரம் இப்போது அதிகாலை நான்கு இருக்கும்.

வரவேற்பிற்கு பின் பெண், மாப்பிள்ளையை வைத்து புகைப்பதிவாளர்கள் பிரத்யேக புகைப்படங்களை எடுக்க, அது முடியும் வரை தம்பியை உடனிருக்க சொல்லிவிட்டிருந்தாள் சுசி. அவனும் தமக்கை சொல்லை கேட்டு நள்ளிரவு ஒன்றரை மணி வரை அவளுடன் இருந்துவிட்டு பின் மணமேடை ஜோடிப்பவர்களுடன் இருந்து மேற்பார்வையும் பார்த்தான்.

அதற்குள் மணி நாலரையாகிவிட காலை உணவுக்கான சமையல் வேலையை மேற்பார்வை பார்க்க சென்றான்.

அப்போது ஏனோ தூக்கம் வராமல் தவித்திருந்த வர்ணிகா கீழே இறங்கி வந்தாள்.

அந்நேரம் அடுப்படியில் இருந்து வெளியே வந்த சரணும் அவளை கண்டான். பாக்ஸர் ஷார்ட்ஸ் நைட் சூட்டில் காட்சி தந்தவள் அவனை கண்டும் காணாதது போல் கடந்து சென்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துவிட, இந்நேரத்தில் இவள் எதற்கு இங்கு வந்திருக்கிறாள் என்று புருவம் சுருக்கியவன் மீண்டும் அடுப்படிக்கு சென்றுவிட்டான்.

அவளோ அதை பொருட்படுத்தாதவளாய் மேடை அலங்காரங்களையும், நாற்காலிகளை ஒழுங்கு படுத்தி போடுவதையும் ஒரு வித யோசனையோடு பார்த்திருந்தாள்.

அப்போது ஒரு கை அவள் முன் பால் குவளையை நீட்டியது. என்னவென்று நிமிர்ந்து பார்க்க, சரண் தான் கையில் பாலோடு நின்றிருந்தான்.

“இந்த ஊரு உனக்கு பிடிக்கலனு புரியுது. இன்னும் ஒரு நாள் தான். பால் குடிச்சிட்டு போய் தூங்கு. முஹுர்த்தத்துக்கு இன்னும் டைம் இருக்கு” என்றான்.

இவனால் எப்படி தன்னை புரிந்துக் கொள்ள முடிந்தது என்ற ஆச்சர்யத்துடன் புருவங்கள் இடுங்க அவளும் அதை வாங்கி கொள்ள “எல்லாரும் தூங்கிட்டு இருக்க நேரத்துல இப்படி தனியா வராத. சேஃப் இல்ல” என்றுவிட்டு தன் வேலை முடிந்ததென அவள் பதிலுக்கும் காத்திருக்காது அங்கிருந்து நகர்ந்தான்.

திருமண நாளன்று காலை அழகாக விடிந்திருக்க, சுசியை மணமகள் அறையில் தயார் செய்துக் கொண்டிருந்தனர். வர்ணிகாவும் தயாராகி வந்து வழக்கம் போல் முன் இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள். அவளை பார்த்த சரண், தான் அவளை வெறுத்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து ரசித்தான்.

பின்னே அவன் தேர்ந்தெடுத்த புடவையில் அவள் தான் ஒளிரும் நட்சத்திரமாகவே ஜொலித்தாளே.

ஆம், திருமணத்திற்கு புடவை எடுக்க கனி, சுசி மற்றும் சரண் காஞ்சிபுரம் சென்றிருந்த போது மகளுக்கு அனைத்தையும் வாங்கிவிட்ட கனி “சரண், இன்னொரு புடவை செலக்ட் பண்ணேன். சுசியை விட நீ நல்லா தேர்ந்தேடுக்கிற” என்று மகனிடம் சொன்னார்.

“சுசிக்கு எல்லாம் எடுத்தாச்சுனு சொன்னீங்களே ம்மா. இது உங்களுக்கா? இருங்க செலக்ட் பண்றேன்” என்றவன் அங்கிருப்பவரிடம் சொல்லி புடவைகளை எடுத்துக் காட்ட சொல்ல..

“எனக்கில்ல சரண், வருவுக்கு” என்றார்.

அதை கேட்டவன், ஆர்வம் அனைத்தும் வடிந்துவிட்டவனாக “அவளுக்கு நாம எதுக்கு எடுத்து தரணும். அவ அப்பா தான் பெரிய பணக்காரராச்சே. அதெல்லாம் தேவைன்னா கடையவே கொண்டு வந்து இறக்குவார் அவ அப்பா” என்று முரண்டு பிடித்தான்.

“அண்ணன் எடுத்து கொடுக்கலைனு யார் சொன்னா. இது என் மருமகளுக்கு நான் எடுத்து தரணும்னு ஆசைப்படறது. நல்லா செலக்ட் பண்றேன்னு சொன்னா பிகு பண்ணிக்கிற”

“ஆமா ஆமா, நான் பிகு பண்றேன். ஊருல இருக்க மொத்த சீனும் இவங்க அண்ணன் பொண்ணு தான் போடுறா” என்று பல்லை கடித்துக் கொண்டு தேர்வு செய்தாலும் அவள் மீதிருக்கும் நேசம் மனதின் ஏதோ ஒரு மூலையில் இன்னும் அகற்றப்படாமல் இருக்க, பீச்(Peach) நிறத்தில் இளஞ்பச்சை கரை கொண்ட புடவையை அவளுக்கு தேர்வு செய்தான்.

அதை அண்ணன் இப்போது தற்காலிகமாக தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்ற போது கனி தன் அண்ணியிடம் கொடுக்க, “அவ புடவையெல்லாம் கட்டமாட்டா கனி. நான் வற்புறுத்தினதால தான் முஹுர்த்தத்துக்கு மட்டும் சாரீ எடுத்திருக்கா” மகளின் குணமறிந்து வேண்டாம் என்பதை நேரடியாக சொல்ல முடியாமல் நாசுக்காக சொன்னார்.

அதை கேட்ட கனியின் மனம் சுணக்கம் கொள்ள, அருகில் இருந்த சரண் தன் தாயை முறைத்தான்.

“இருக்கட்டும் அண்ணி. அத்தைனு எதுவும் செஞ்சதில்ல. வரு சடங்காகி இருக்கிறப்போ புடவை, வரிசையெல்லாம் வச்சிருப்பேன் தான. அப்படி இருக்கட்டும். என்னைக்கு வருவுக்கு பிடிக்குதோ, அப்போ கட்டிக்கட்டும்” என்று அவர் புடவையை திரும்ப வாங்க மறுக்க, மைதிலிக்கு மகளை என்ன அவர்கள் அன்றாடம் பார்க்க போகிறார்களா, அவர்களது மனதிருப்திக்காகவாவது மகளுக்கு தெரியாமல் புடவை இங்கேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டார்.

கனியும் சரணும் கிளம்பியிருக்க, அதுவரை அலுவலக காணொளி அழைப்பில் இருந்துவிட்டு கீழிறங்கி வந்த வர்ணிகாவின் கண்களில் அப்புடவை படவும், அதை கையில் எடுத்து பார்த்தவள்

“இத வாங்கினீங்களா மாம்?” என்று கேட்டாள்.

அவரும் “இல்ல வரு” என்று நிகழ்ந்ததை கூற “டேட் சிஸ்டருக்கு இவ்ளோ நல்ல டேஸ்ட்டா. மாம், இந்த சாரீ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இதையே நான் மனு மேரேஜ்ல வேர் பண்ணிக்கிறேன்” என்றவள் “ப்ளௌஸ் ஸ்டிட்ச் பண்ண கொடுத்த இடத்துல இந்த சாரீயோட ப்ளௌஸை பர்ஸ்ட் ஸ்டிட்ச் பண்ண சொல்லுங்க மாம்” என்று விட்டிருந்தாள். 

இப்போது அந்த புடவையில் அவள் தேவதையாய் மிளிர, சரணின் மனம் மீண்டும் அவள் பால் சாய துடிக்க, அன்று அவள் பேசியதை நினைவுப்படுத்தி அவள் தனக்கானவள் இல்லை என்பதை மனதில் நிறுத்தி கடிவாளமிட்டு, வந்தவர்களை கவனிக்கும் வேலையில் இறங்கினான்.

முஹுர்த்தத்திற்கு நேரமாவதை சுட்டிக்காட்டி புரோகிதர் மாப்பிள்ளையை வர சொல்ல, அப்போது பதற்றமாக அங்கே வந்த மைதிலி கணவரிடம் எதையோ சொன்னார். அதை கேட்டவரின் முகம் அதிர்ச்சியில் இறுகியது. பின் சுதாரித்தவராய் மனைவியிடம் எதையோ கேட்க, அதற்கு அவர் கலங்கிய கண்களாக இல்லையென்று தலையாட்டினார்.

இப்போது என்ன செய்வதென்று புரியாத ரகு தன் நெற்றியை நீவி கொண்டிருக்கவும், சரியாக அவரது கைபேசி தன் இருப்பை காட்டும் வண்ணமாக அதிர்ந்தது. அதையெடுத்து பார்த்தவரின் கண்கள் சிவப்பை தத்தெடுக்கவும், கால்கள் ஆட்டம் கண்டு அங்கிருந்த தூணை பிடிக்க, அவரது முகமாற்றங்களை கவனித்த கனியின் குடும்பத்தினர் எதுவோ சரியில்லை என்பதை உணர்ந்தனர்.

பதற்றமடைந்த தாய், தந்தையை அமைதி காக்க சொல்லிவிட்டு “ஏதாவது பிரச்சனையா? ஏன் மாமா இன்னும் மணமேடைக்கு வரல..” என்று ரகுவரனை பார்த்து சரண் கேட்க, அவனது பார்வையின் திண்மையை தாளமுடியாதவராய் தலை கவிழ்ந்தவர்,

“அது.. அது மனு.. மனோஜ்” என்று தன் கைபேசியை அவனிடம் நீட்டினார்.

அதை வாங்கி பார்த்தவனுக்கு உலகமே கை நழுவி விட்டது போல் இருந்தது.

மண்டபத்தை விட்டு வெளியேறி இருந்த மனோஜ் தான் ‘ஐ ஆம் நாட் இன்ட்ரெஸ்ட்டெட் இன் திஸ் மேரேஜ் டேட். ஐ லவ் மித்ரா. ஐ ஆம் கோயிங் பேக் டூ லண்டன். சாரி ஃபார் எவரிதிங் டேட்’ என்று தந்தைக்கு செய்தி அனுப்பியிருந்தான்.

அதே சமயம் தாய், தந்தையின் முகமாற்றத்தை கவனித்து கீழே அமர்ந்திருந்த வர்ணிகா மேடையேறி அவர்கள் அருகில் வரவும் மேள வாத்தியத்தை கை காட்டி நிறுத்தியிருந்த சரண் “உங்க பையன் போய்ட்டார். இப்ப எங்க அக்காவுக்கு என்ன வழி?” என்று உரக்க கத்தியிருந்தான்.

அதை கேட்டு அதிர்ந்துவிட்ட கனி “என்ன சொல்ற சரண்?” என்று தழுதழுத்த குரலில் கேட்க, பாலனும் “பையன் போயிட்டார்னா என்ன அர்த்தம் சரண்? எனக்கு படபடப்பா வருது” என்று பதறினார்.

“கனி.. பாலா.. பதற்றப்படாதீங்க ப்ளீஸ். நான் ஃபோன் பண்ணி அவனை உடனே வர சொல்றேன்” என்று சரணிடமிருந்து கைபேசியை வாங்கி ரகு மகனுக்கு அழைக்க போக..

“அவர் வந்தா மட்டும். இன்னைக்கு ஓடி போனவர் நாளைக்கு கல்யாணத்துக்கு அப்புறம் ஓடி போகமாட்டாருன்னு என்ன நிச்சயம்” என்று ஆவேசப்பட்டவன் தலையை பிடித்துக் கொண்டான்.

“கஷ்டமோ, நஷ்டமோ நாங்க எங்க வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருந்தோம். உங்க பையனுக்கு எங்க அக்காவை முடிக்கிறேன்னு வந்து இப்ப என் அக்கா மணக்கோலத்துல நிக்கிறாளே. அவளுக்கு என்ன பதில் சொல்ல. அண்ணன் அண்ணன்னு எங்க அம்மா உங்க மேல உயிரா இருந்ததுக்கு இப்படி நம்ப வச்சி கழுத்தை அறுத்துட்டீங்களே” சரண் ரகுவரன் முன்பு விஷ்வரூபம் எடுத்து நின்று சத்தமிட்டு கொண்டிருந்தான்.

கனிக்கோ மகளின் திருமணம் நின்றுவிட்ட வேதனையோடு மகன் அண்ணனிடம் வழக்காடி கொண்டிருக்கிறான் என்ற பயமும் சேர்ந்து கொள்ள, கண்களில் இருந்து கண்ணீர் சரசரவென வழிந்து கொண்டிருந்தது. பாலனுக்கோ மகளது வாழ்க்கையை எண்ணி மனிதர் ஸ்தம்பித்தே விட்டார்.

அந்நேரத்தில் “என் டேட் மேல எந்த மிஸ்டேட்க்கும் இல்ல. அவரை எதுவும் சொல்லாத” என்று அவன் முன் விரல் நீட்டியிருந்தாள் வர்ணிகா.

அதில் உச்சஸ்தான கோபத்திற்கு சென்றிருந்தவனுக்கு முகம் இறுக, மூக்கு விடைக்க “அவர் மேல தப்பு இல்லன்னா, அப்போ நீ தான் காரணமா?” புருவம் உயர்த்தி அவளிடம் கூர்மையாக கேட்டவன், தன் நெற்றியை தேய்த்து “உனக்கு வேற இந்த கல்யாணத்துல முதல்ல இருந்தே விருப்பம் இல்லல. நீ தான் உன் அண்ணனை அனுப்பி வச்சியா?” என்றிருந்தான் கண்களில் கனல் தெறிக்க சரண்.

அதை கேட்டு வர்ணிகா உட்பட அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் விழி விரித்திருந்தனர்.

தொருடம்..

 
This post was modified 3 weeks ago by Nila Sridhar

   
ReplyQuote
(@nila-sridhar)
Eminent Member Author
Joined: 3 months ago
Posts: 30
Topic starter  

உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..

https://srikalatamilnovel.com/community/topicid/9/

This post was modified 3 weeks ago 3 times by Nila Sridhar

   
ReplyQuote
(@nila-sridhar)
Eminent Member Author
Joined: 3 months ago
Posts: 30
Topic starter  
அத்தியாயம் - 5
 
சரண் வர்ணிகாவை உக்கிரமாக முறைத்திருக்க, அந்நேரம் மணக்கோலத்தில் மணப்பெண் அறையிலிருந்து கண்கள் கலங்கிய படி வெளியே வந்தாள் சுசித்ரா.
 
மகளை பார்த்த கனி, தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு “சுசிம்மா, நீ ஏன்டா வெளில வந்த. உள்ள போம்மா” என்று சமாதானம் சொல்ல, மகளை பார்க்கவும் முடியாமல் தலை குனிந்தார் பாலன்.
 
சரணின் நிலையும் அது தான். தன் அக்காவை அவனால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை.
 
சுசியோ தன் தோழியை காட்டி “இவ என்னென்னமோ சொல்றாளே ம்மா. மாமா போய்ட்டாரா என்ன?” என்று தாயை கேட்க, என்ன பதில் சொல்வதென்று புரியாமல் வாய் பொத்தி அவர் அழுது கரைந்தார்
 
சரண் தான் சுதாரித்தவனாக “நீ உள்ள போ சுசி. நான் கொஞ்ச நேரத்துல உள்ள வந்து சொல்றேன்” என்று அவள் தோழியிடம் கண்ணை காட்டி தமக்கையை உள்ளே அழைத்து செல்ல சொன்னான்.
 
சுசி செல்ல காத்திருந்தவன் மீண்டும் தன் பார்வையை வர்ணிகாவின் பக்கம் திருப்ப, அவன் அடுத்து பேசுவதற்குள் இடையில் வந்த ரகுவரன் “வருவுக்கு எதுவும் தெரியாது சரண். இன்ஃபேக்ட், மனோஜ் என் மச்சான் பொண்ணை லவ் பண்றான்ங்கற விஷயம் என் வைஃப் உட்பட எங்க யாருக்குமே தெரியாது. அவ சின்ன பொண்ணு, ஏதோ பேசிட்டா..” என்று மகளுக்கு ஆதரவாக பேச
 
“டேட், லெட் மீ டாக் டு ஹிம்” என்று தந்தைக்கு சொன்ன வர்ணிகா, சரண் பக்கம் திரும்பி “வாட் டூ யு திங்க் ஆஃபி மீ? என்னை அக்யூஸ் பண்ண உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு? இந்த மாதிரி ஒன்னு நடந்திட கூடாதுனு தான் அப்பவே இந்த மேரேஜை கால் ஆஃப் பண்ண சொன்னேன். அன்னைக்கு நீ அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கல. நவ், யு ஆர் பேயிங் ஃபார் இட்” என்று தோளை குலுக்கிவிட்டு கைகளை கட்டி கொண்டாள்.
 
அவள் சொல்வதும் சரி தானே. அன்றே அண்ணனின் முகத்தில் எந்த தேஜஸும் இல்லையென்பதை கண்டறிந்து, இந்த திருமணத்தை நிறுத்த சொன்னாளே. அப்போதே நிறுத்தியிருந்தால் இன்று மணமேடை வரை வந்து தன் அக்காவின் வாழ்க்கை பாழாகியிருக்காதே என்று யோசித்தவனுக்கு இனி ரகுவரனையோ, வர்ணிகாவையோ, ஏன் மனோஜை பேசியும் என்னவாக போகிறது என்றே தோன்றியது.
 
இந்த நிமிடம் அவன் மனதில் இருந்ததெல்லாம் சுசித்ராவின் வாழ்க்கையை குறித்த சஞ்சலமே. உள்ளே சென்று அவளிடம் என்ன சொல்வது. மணமேடை வரை வந்து திருமணம் நின்ற பெண்ணை இந்த சமுதாயம் எப்படி பார்க்கும் என்று எண்ணியவனுக்கு அதுவரை ஆத்திரத்தில் சிவந்திருந்த கண்களில் இப்போது கண்ணீரை உகுத்தது.
 
கலங்கிய கண்களோடு தன் முன் நிற்பவனை பார்த்தவளுக்கு ஏனோ மனதை பிசைந்தது. ஒரு குடும்பமே தன் அண்ணனின் செயலால் இன்று வேதனை கொள்கிறார்களே என்று தானும் வேதனை கொண்டவள் அதற்கு மேல் அங்கிருக்க முடியாதவளாய்,
 
“டேட், நான் ரூமுக்கு போறேன்” என்று அங்கிருந்து நகர முடிவெடுத்தாள். அவள் கடைசியாக செல்லும் போது கூட சரணின் கசிந்த கண்களை தான் பார்த்துக் கொண்டே அங்கிருந்து அகன்றாள்.
 
இப்போது ரகுவிற்கு இந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது என்று புரியாமல் “கனி.. மனோஜ் லவ் பண்ற விஷயம் எங்களுக்கே தெரியாதுங்கறது தான் உண்மை. எது எப்படியோ, அவன் செஞ்ச தப்பை அவனை பெத்தவனா நான் சரி பண்றேன். இந்த கல்யாணத்துனால உங்களுக்கு ஏற்பட்ட மொத்த செலவையும் நான் தந்திடுறேன். அது மட்டுமில்ல சுசிக்கு மனோஜ் என்ன, அவனை விட நல்ல குணமான பையனை நான் பார்த்து வைக்கறேன்” என்று தங்கையிடம் அவர் கையை பிடித்து இறைஞ்சிய குரலில் வாக்குறுதிகளை கொடுத்து கொண்டிருந்தார்.
 
இதற்கிடையில், மேடையில் நடக்கும் விஷயம் காட்டு தீயாக மண்டபத்தில் இருக்கும் மொத்த கூட்டத்திற்கும் பரவியிருக்க, சில முக்கிய சொந்தங்கள் மேடையேறி வந்து கனியின் குடும்பத்தை ஆறுதல் படுத்திக் கொண்டிருக்க, சிலர் மேடைக்கு கீழ் கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தனர். மற்றவர்கள், இன்னமும் இந்த திருமணம் நடக்க வாய்ப்பிருக்கிறதா, இல்லை தாங்கள் கிளம்பலாமா என்று யோசித்திருந்தனர்.
 
அப்போது மேடையேறி வந்த பார்த்திபன், என்ன தான் விஷயம் தெரிந்திருந்தாலும் இனி மனோஜும் வரப்போவதில்லை, இந்த திருமணமும் நடக்க போவதில்லை என்பதை அவர்கள் மூலமே இன்னொரு முறை உறுதி படுத்திக் கொண்டு “நான் உங்க மூணு பேர்கிட்ட கொஞ்சம் தனியா பேசலாமா?” என்று தயங்கி கேட்டான்.
 
கனியும் பாலனும் முழுதாக உடைந்திருக்க, சரண் தான் எதைப்பற்றி என்பதாய் புருவம் சுருக்கினான்.
 
அதை புரிந்த பார்த்தி “அத பேச தான் கூப்பிடறேன்” என்று சொல்ல, நால்வரும் மணமகள் அறைக்குள் செல்லப்போக, ரகுவும் மைதிலியும் தனித்து விடப்பட்டிருந்தனர்.
 
தலை குனிந்து, அவமானத்தில் முகம் கன்றி நிற்கும் தன் அண்ணனை பார்த்த கனி “நீயும் வாண்ணே” என்றார்.
 
அதை கேட்ட அடுத்த நொடி சரண் தன் தாயை உக்கிரமாய் முறைக்க, அவரோ மகனை பொருட்படுத்தாவராய் தானே அண்ணனிடம் சென்று, அவர் கைப்பிடித்து உடன் அழைத்து சென்றார்.
 
அறையினுள்ளே, சுசி தன் எதிர்காலத்தை எண்ணி கண்ணீரும் கம்பளையுமாய் மெத்தையில் தலைகவிழ்ந்து அமர்ந்திருக்க, அங்கே கனி, பாலன், சரண், ரகு என நால்வரும் தீவிரமான முகத்துடன் பார்த்திபனை பார்த்திருந்தனர்.
 
அப்போது பார்த்தி தன் கைகளை பிசைந்துக் கொண்டே “நான் சுசித்ராவோட மேனேஜர். எல்லார்கிட்டயும் இயல்பா பழகுற குணம், அவங்களுடைய பொறுமை, எதையும் நிதானமா கையாளுறது, இது எல்லாம் உங்க பொண்ணை எனக்கு பிடிக்க வச்சது. அத அவங்க கிட்ட சொல்றத விட, ஒருநாள் உங்க வீட்டுக்கு என் அப்பா, அம்மாவோட வந்து வரன் பேசணும்னு எங்க வீட்டுல கூட சுசித்ராவை பத்தி சொல்லி வைச்சுட்டேன். அப்போ தான் சுசித்ரா அவங்களுக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகியிருக்குனு லீவ் கேட்டாங்க” என்று நிறுத்தியவன்..
 
“கல்யாணமே முடிவான பிறகு என்ன பேசமுடியும்னு நானும் என் உணர்வுகளை மறைச்சிட்டேன். இப்போ என் அம்மா தான் நல்ல பொண்ணுன்னு சொன்ன, ஏன் அது வாழ்க்கை இப்படி கெடனும்னு என்னை பேசி பார்க்க சொன்னாங்க. எனக்கும், எங்க அப்பாவுக்குமே அதே கருத்து இருக்கத்தான், உங்ககிட்ட பேச வந்தேன். நாங்க இப்போ பார்த்த மாப்பிள்ளை அளவுக்கு வசதி இல்ல. தங்கச்சியை கட்டி கொடுத்துட்டோம். இப்போதைக்கு நான், அப்பா, அம்மா தான். இருக்குறதும் சொந்த வீடு தான். நான் வாங்கிற சம்பளத்துல என் பொண்டாட்டிய நல்லா வச்சிப்பேன். சுசித்ராவுக்கும் உங்களுக்கும் இதுல விருப்பம் இருந்தா, இதே முஹுர்த்தத்துல நான் சுசியை கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றான்.
 
அதை கேட்டதும் தான் கனிக்கும் பாலனுக்கும் நின்ற உலகம் மீண்டும் சுழல்வது போல் இருக்க, சரணோ பார்த்திபன் பேச்சை கேட்டு அதிர்ந்து நிமிர்ந்த தன் அக்காவை தான் கவனித்திருந்தான்.
 
மாமன் மகன் என்பதாலும், தாயும் மாமனும் விருப்பப்படுவதாலும் மனோஜிற்கு சரியென்று சொல்லியிருந்தாலும், திருமணமாகும் வரை அவனிடம் எந்தவித ஆசையும் உண்டாக்கி கொள்ளாமல் இருந்ததால், அவளும் தம்பியின் மனதை புரிந்து தனக்கும் இதில் சம்மதம் என்று லேசாக தலையாட்ட, அதை பார்த்த சரணுக்கு அப்போதே மூச்சு விட முடிந்தது.
 
அக்காவின் சம்மதம் கிடைத்த மறுநொடி, பார்த்தி முன் கைகூப்பி மண்டியிட்டிருந்தான் சரண். அதேநேரம் ரகுவரனும் தங்கை மகளின் தலையசைப்பை கவனித்திருந்தவர், தன் மகன் செய்த தவறை சரி செய்ய வந்த பார்த்தி முன் கை கூப்பி நின்றிருந்தார்.
 
தன் அருகில் அரவம் தெரிய சரண் நிமிர்ந்து பார்க்க, அவரும் அக்காவிற்காக மண்டியிட்டு இருக்கும் சரணை தான் மெச்சுதலாக பார்த்திருந்தார்.
 
தாய், தந்தையிடம் சொல்ல பார்த்திபன் முன்னே செல்ல, நின்ற திருமண வேலைகளை மீண்டும் தொடங்க அவனுக்கு பின்னால் பாலனும் செல்ல, வாசல் வரை சென்றுவிட்ட ரகுவரனை “ஒரு நிமிஷம்” என்று நிறுத்திய சரண்
 
“நீங்க எங்களுக்கு செஞ்ச நல்லதெல்லாம் போதும். உங்க குடும்பத்தை கூப்பிட்டுட்டு இங்க இருந்து கிளம்புங்க” என்றான் நிர்தாட்சயன்யமாய்.
 
அதை கேட்டு அவர் அமைதியாக நிற்க, “சரண், மாமாகிட்ட என்ன பேச்சு இது. சம்மந்தம் பண்றோமோ இல்லையோ அவர் என் அண்ணன் தான், உங்களுக்கும் தாய் மாமா தான். அவர் இந்த கல்யாணம் முடியற வரை நிச்சயம் இங்க தான் இருப்பார்” என்று அண்ணனை கையோடு அழைத்து சென்றுவிட்டார் கனி. சரணும் வேறு வழியின்றி அவர்களுக்கு பின்னால் பல்லை கடித்துக் கொண்டு சென்றான்.
 
அனைவரின் வாழ்த்துகளோடு, இருவீட்டு குடும்பத்தின் முன்னிலையில் பார்த்திபன் சுசித்ராவின் கழுத்தில் மங்கல நாணை பூட்டி, அவளை தன் சரிபாதி ஆக்கிக்கொண்டான். அதனை தொடர்ந்து மணமக்கள் பெரியவர்களிடம் ஆசீர்வாதமும் வாங்கினர்.
 
என்ன தான் தங்கை தன் இருப்பை விரும்பினாலும், இனி தான் அங்கே இருப்பது உசிதமல்ல என்றே ரகுவரனுக்கு தோன்ற, மனைவியை அழைத்து கொண்டு மேடையிலிருந்து கீழே இறங்க போனார்.
 
அந்நேரம் அவரிடம் ஓடி வந்த கனி “அண்ணா.. நம்ப சுசியை உன் வீட்டுல கொடுத்து நம்ப உறவை காலத்துக்கும் நிலைக்க வைக்கலாம்னு பார்த்தேன். இன்னொரு முறை என் அண்ணன் உறவை நான் இழந்திட்டேன்ல. இனி உன்னை நான் என்னைக்கும் பார்க்கமுடியாதுல” அண்ணனின் மனதை சரியாக படித்தவராக அவர் முன் கதறி கொண்டிருந்தார்.
 
ஆம், என்ன தான் தங்கை தன் பேச்சை கேளாமல் தந்தை பார்ப்பவரை திருமணம் செய்ய தயாராக இருக்கிறாள் என்ற கோபம் இருந்தாலும், அவர் தங்கையை விட்டு விலகி நின்றதற்கு முக்கிய காரணம் தங்கைக்கு தன்னால் நியாயம் செய்யமுடியவில்லையே என்ற குற்றவுணர்வு தானே.
 
இன்றும் தங்கைக்கு நியாயம் செய்வதில் மகனால் தோற்று தானே நிற்கிறார். இனி தங்கை முகத்தை அவரால் எப்படி பார்க்கமுடியும். அதனால் தங்கைக்கு தேவையான உதவிகளை செய்தாலும், இனி அவருக்கு தன் முகத்தை என்றுமே காட்டக் கூடாது என்ற தீட்சண்யமான முடிவுடன் தானே அன்பு தங்கையை கடைசியாக ஒருமுறை பார்த்து, அவர் முகத்தை ஆயுளுக்கும் தன் மனதில் நிரப்பி கொண்டு மேடையை விட்டு இறங்க போனார்.
 
அண்ணனின் மனதை அறியாதவரா அவர் தங்கை. இனி அண்ணனை என்றுமே பார்க்க முடியாதென்ற விசனத்தில் தானே அவரை தடுத்து நிறுத்தி அழுதுக் கொண்டிருக்கிறார்.
 
“உன்னை எப்பவும் பிரிஞ்சி இருக்கறது தான் இந்த வாழ்க்கையில நான் வாங்கிட்டு வந்த வரமா ண்ணா” அவர் நெஞ்சில் சாய்ந்து கதறி அழுதார் கனி.
 
தங்கையை சமாதானம் செய்தவர், அவரை பாலனிடம் விட்டு, நேராக ஐயரிடம் வந்து அவரிடம் எதையோ கேட்க, அவரும் தன் கை கடிகாரத்தை பார்த்துவிட்டு பதில் தந்தார்.
 
அதை கேட்டுவிட்டு மீண்டும் தங்கையிடம் வந்தவர் “கனி, பாலா.. வருவை சரணுக்கு கொடுக்கலாம்னு ஆசைப்படறேன். உங்களுக்கு இதுல சம்மதமா? ஐயர்கிட்ட கூட பேசிட்டேன். இன்னைக்கே வர இன்னொரு முஹுர்த்தத்துல கல்யாணத்தை வச்சிக்கலாம். நானும் என் தங்கச்சியை பிரிய வேண்டாம்” என்று தன் மனதில் எண்ணியதை கேட்டார்.
 
அதை கேட்டதும் கனி கணவரின் அனுமதியையும் எதிர்பாராது “எங்களுக்கு சம்மதம்ண்ணேன். தங்கமா என் மருமகளை பார்த்துப்பேன்” என்று பாலனை பார்க்க, அவரும் ஆமோதிப்பாய் தலையசைத்தார்.
 
சரண், வர்ணிகாவின் திருமணத்தை அவர்கள் இல்லாமலே முடிவு செய்திருந்தனர். வர்ணிகாவோ மேலறையிலேயே இருக்க, சுசி கழுத்தில் தாலி ஏறியதும் பந்தியை பார்க்க சென்றுவிட்டிருந்தான் சரண்.
 
இவையனைத்தும் அக்னியை கணவரோடு வலம் வந்து கொண்டிருக்கும் சுசியின் காதில் அரைகுறையாக விழுந்தாலும் அவளால் உடனே அங்கு சென்று எதையும் தடுக்க முடியாத நிலை. மைதிலிக்கோ இன்னும் நடப்பதை கிரகிக்க முடியவில்லை.
 
ஒருவழியாக அக்னியை வலம் வந்து முடித்தவள், அடுத்த சம்பிரதாயத்தை செய்ய சொல்லும் முன்னே, வேண்டாம் என்று தடுத்துவிட்டு, போட்டிருந்த திருமண முடிச்சி கூட அவிழ்க்கப்படாமல் இருக்க கணவனையும் உடன் இழுத்துக் கொண்டு அன்னை முன் நின்றாள் சுசி.
 
“என்னம்மா பண்ணிட்டு இருக்கீங்க? சரணுக்கும் வருவுக்கும் கல்யாணமா. இதுக்கு அவங்களுக்கு சம்மதமா கூட தெரியாம எதுக்கு இப்படியொரு அவசர கல்யாணம்” என்று தாயை காய்ச்சியவள்,
 
“நீங்க என்னப்பா சும்மா இருக்கீங்க? என் தம்பிய கேட்காமலே கல்யாணத்துக்கு முடிவு பண்றாங்க. நீங்களும் கையை கட்டிட்டு நிக்கிறீங்க” என்று தந்தையிடமும் பாய்ந்தாள்.
 
அதற்கு மனிதரோ “இதுவரைக்கும் கனி எடுத்த எந்த முடிவும் தப்பா போனதில்ல. இன்னைக்கும் அவ யோசிச்சி தான் முடிவெடுத்திருப்பா” என்றாரே பார்க்கலாம். கேட்டிருந்த சுசிக்கு தான் எங்காவது போய் முட்டி கொள்ளலாம் என்றிருந்தது.
 
அதுவரை கணவரின் முடிவில் ஸ்தம்பித்திருந்த மைதிலி “ரகு, உங்ககிட்ட நான் பேசணும்” என்று அங்கிருந்து சற்று தள்ளி செல்ல, ஒருவேளை அண்ணிக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லையோ என கனியின் முகம் வாடிவிட, ரகுவோ நெற்றி சுருங்க மனைவியை பின் தொடர்ந்தார்.
 
“வருவை பத்தி நல்லா தெரிஞ்சும் எதுக்கு இப்படி ஒரு வார்த்தையை விட்டீங்க ரகு. இன்ஃபேக்ட் எனக்கே இதுல இஷ்டம் இல்ல. மனுக்கு சுசியை பேசினப்பவும் என்கிட்ட ஒரு வார்த்தையும் கேக்காம தான் உங்க தங்கச்சி கிட்ட சொல்லிட்டு வந்தீங்க. இப்பவும் அவளை பெத்தவனு என்கிட்ட ஒருவார்த்தை கேக்கணும்னு உங்களுக்கு தோணலையா?” மைதிலி கணவரை ஒரு பிடி பிடித்துவிட்டார்.
 
அதற்கு சிறிதும் அசராதவர் “என் தங்கச்சியையும் அவ குடும்பத்தையும் பார்த்தல.. யாரால அவளுக்கு இந்த நிலைமை. இது எல்லாம் நம்ப கல்யாணத்துல இருந்து தான் ஆரம்பிச்சது. வசதி இல்லாத எனக்கு எதுக்கு இந்த காதல். இன்னைக்கு அதுக்கு பிராயசித்தம் செய்யணும்னு நினைக்கிறேன். என் கடன்ல என் பொண்டாட்டிக்கும் பங்கிருக்கு, என் பொண்ணுக்கும் பங்கிருக்குனு நம்பி தான் உன்னை கேக்காம நானே முடிவு பண்ணேன்” என்று தீர்க்கமாக சொல்ல, மைதிலிக்கு மனம் விட்டுப் போனது.
 
“உங்க தங்கச்சி நிலைமை என் நிலைமையை விட ஒண்ணும் மோசமில்ல ரகு. அவ வசதியில்லாதவளா இருக்கலாம். ஆனா, அவ புருஷன் அவ முடிவுக்கு பதில் பேசாம சம்மதிக்கிறார். ஆனா நான்..” என்று நிறுத்தியவர் “அந்த விஷயத்துல உங்க தங்கச்சி என்னைவிட பலமடங்கு பணக்காரி” என்றுவிட்டு கீழே சென்று நாற்காலியில் ஆற்றாமையாக அமர்ந்துக் கொண்டார்.
 
நேராக மகனை காண உணவு பந்திக்கு வந்தார் கனி. ரகுவரனும் தன் பெண்ணை காண மேலறைக்கு சென்றார்.
 
“சரண், இங்க என்ன பண்ணிட்டு இருக்க? அதான் ஆளுங்க இருக்காங்கல” மகன் யாருக்கு என்ன வேண்டும், ஏது வேண்டும் என்று கேட்டு கவனித்துக் கொண்டிருப்பதை பார்த்து கேட்டார் கனி.
 
“என்ன தான் ஆளுங்க பரிமாறினாலும் நாம தான் கிட்ட இருந்து யாருக்கு என்ன வேணும்னு கேக்கணும்” என்றான் சரணும்.
 
“சரி வா, நான் உங்கிட்ட பேசணும்”
 
“என்னமா அவசரம், வீட்டுக்கு போய் பொறுமையா பேசிக்கலாம்”
 
“எனக்கு இப்போ தான் பேசணும்”
 
“நீ போய்ட்டு வா மச்சான், நான் பார்த்துக்கிறேன்” என்ற வினோத் “இங்க சாம்பார் கேக்கறாங்க பாருங்க” என்று வேலையில் மும்முரமானான்.
 
தாயுடன் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வந்தவன் “என்னமா, உங்க நொண்ணன் கிளம்பிட்டாரா?” என்று கேட்க, மகனை முறைத்தார் கனி.
 
அவனோ அதை பொருட்படுத்தாதவனாய் “அப்புறம் அந்த ராங்கி கிளம்பிட்டாளா..?” என்றவன் தாயின் கையை பிடித்து மற்றொரு கையால் அழுத்திக் கொடுத்து “இப்போ தான்ம்மா மனசு ரொம்ப நிம்மதியா இருக்கு. அந்த மனோஜுக்கு கல்யாணம் பண்ணியிருந்தா கூட இவ்ளோ சந்தோசப்பட்டிருப்பேனானு தெரியல. நம்ப சுசி வாழ்க்கை ஒரு நல்ல கையில போய் சேர்ந்திடுச்சி. அதுவும் நாம போய் பார்க்கற தூரத்திலேயே சுசி இருக்க போகுது” மனதிலிருந்த பாரங்கள் அனைத்தும் பனி போல் விலகி இருக்க, தன் போக்கில் பேசியிருந்தான்.
 
இங்கே ரகுவரன் அறைக்குள் நுழைய, கையில் சிட்னி ஷெல்டன் புத்தகத்தோடு அமர்ந்திருந்தாள் வர்ணிகா.
 
தந்தையை கண்டதும் “என்ன டேட், ப்ராப்ளம்ஸ் எல்லாம் சால்வ்ட்டா?” என்று கேட்க, அவரும் கீழே நடந்த சுசியின் திருமணத்தை பற்றி கூறினார்.
 
“நைஸ் டூ ஹியர் டேட். பாருங்க, இப்ப சுசிக்கு அவங்கள லவ் பண்றவர் கிடைச்சிட்டார்” என்றவள் “ப்ச்.. நான் தான் மிஸ் பண்ணிட்டேன். யு நோ வாட் டேட், அந்த இடியட் ஃபைட் பண்ணி தான் பார்த்திருக்கேன். இன்னைக்கு அழுதுட்டான். தட்ஸ் வை ஐ டோன்ட் வான்ட் டூ ஸ்டே தேர்” என்று சரணை பற்றி வருந்தி சொல்ல, இது தான் தக்க சமயமென எண்ணியிருந்த ரகு, மகளிடம் அவள் திருமணத்தை பற்றி பேச நினைக்க..
 
“டேட், நம்மளால ஏற்பட்ட பிரச்சனைக்கு அவங்க என்ன காம்பென்சேஷன் கேட்டாலும் கொடுத்திடலாம்” என்று சட்டென சொல்லிவிட்டவள் “தேங்க் காட், சுசித்ரா மேரேஜ் ஓவர். இனி நமக்கு இங்க என்ன வேலை. ஷெல் வி லீவ், டேட்?” என்றும் கேட்டாள்.
 
மகளின் பேச்சில் அதிர்ந்துவிட்ட ரகு “உன் அப்பா உயிருக்கும் காம்பென்சேஷன் கொடுப்பியா வரு?” என்று அழுத்தமாக கேட்க..
 
“டேட்..” என்று கூச்சலிட்டவள், அதிர்ந்து அவரை பார்த்தாள்.
 
கீழே சரணோ “நல்லவேளை ம்மா, நம்ப சுசி அந்த குடும்பத்துல போய் மாட்டல” என்றுவிட்டு தான் தான் அங்கு மாட்டப்போவதை அறியாதவனாக சத்தமாய் சிரித்தான்.
 
மகனருகில் வந்து அவன் கன்னத்தை தாங்கியவர் “அம்மா எது செஞ்சாலும் உன் நல்லத்துக்கு தான் செய்வேன்னு உனக்கு தெரியும் தானே சரண். உனக்கும் வர்ணிகாவுக்கும் கல்யாணம் பேசியிருக்கோம். இன்னும் ஒரு மணிநேரத்துல ஒரு முஹூர்த்தம் இருக்காம். அதுல உங்க கல்யாணத்தை முடிச்சிடலாம்னு இருக்கோம்” என்று நிதானமாக கனிமொழி சரணின் தலையில் இடியை இறக்க, சிலநிமிடங்கள் கல்லென சமைந்து போனவன் அடுத்த க்ஷனம் “நானும் அவளும்.. முடியாது ம்மா” என்றிருந்தான் அழுத்தமான குரலில்.
 
அதே நேரத்தில் மேலே ரகுவரனும் தன் மகளிடம் சொல்லியிருக்க, “வாட், எனக்கு மேரேஜா? அதுவும் அவன் கூட” என்று அதிருப்தியாய் தலையாட்டிவள் “நோ வே டேட்” என்றிருந்தாள் ஆணித்தரமாக.
 
 
தொடரும்...

   
ReplyQuote
(@nila-sridhar)
Eminent Member Author
Joined: 3 months ago
Posts: 30
Topic starter  

உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..

https://srikalatamilnovel.com/community/topicid/9/


   
ReplyQuote
(@nila-sridhar)
Eminent Member Author
Joined: 3 months ago
Posts: 30
Topic starter  
அத்தியாயம் - 6
 
தாய் கேட்டதற்கு முடியாது என்று பதிலளித்தவன், தன் வேலை முடிந்ததென அங்கிருந்து நகர, “சரண், அம்மா சொல்றத கேளுப்பா” என்று மகனிடம் மன்றாடினார் கனி.
 
“புரிஞ்சிக்கோங்க ம்மா. எனக்கு அவளை பிடிக்கவே பிடிக்காது. அவயெல்லாம் பிரிட்ஜ்ல வாழறவ. நம்மளயெல்லாம் கேவலமா பார்ப்பா. அதோட நம்ம வீட்டை செங்கல் சூலைனு சொல்லுவா. நமக்கும் அவளுக்கும் எந்த காலத்துலயும் செட் ஆகாது” என்று காரணங்களை அடுக்கிக் கொண்டே போனான் சரண்.
 
“அப்படியெல்லாம் இல்ல சரண், வரு படபடன்னு பேசினாலும் தங்கமான பொண்ணு. நீ பார்த்த தான, நாம எடுத்து கொடுத்த புடவைய தான் கட்டிகிட்டு இருக்கு” என்று மகனுக்கு புரிய வைக்க எண்ணினார்.
 
அன்னை சொன்ன நொடி தான் தேர்ந்தெடுத்த புடவையில் அவள் வலம் வந்தது தன் கண் முன் வர, வேகமாக தலையசைத்து தன்னை அந்நினைவுகளிருந்து மீட்டவன் “அவ உங்களுக்காக அத கட்டிருக்க மாட்டா, அந்த புடவைய பிடிச்சதனால கட்டிருப்பா” என்று சரியாக சொன்னான்.
 
“எதுவா இருந்தா என்ன சரண். நீ வருவை கல்யாணம் பண்ணிக்கோ. அம்மாக்காக. எனக்கு நம்பிக்கை இருக்கு, உன் வாழ்க்கை நல்லா இருக்கும்”
 
“நான் சொல்றது புரியுதா இல்லையா ம்மா. எனக்கு அவளை பிடிக்காது ம்மா. அப்புறம் எப்படி இந்த கல்யாணம், வாழ்க்கையெல்லாம்..” தனக்கானவள் என்று ஒரு காலத்தில் பாராயணம் செய்திருந்தவன், இன்று பிடிக்கவில்லை என்று மீண்டும் மீண்டும் சொன்னான்.
 
இங்கே வர்ணிகா “உங்க உயிருக்கு காம்பென்சேஷன் உங்க பொண்ணு லைஃப்பா, டேட்?” என்று நிறுத்தி நிதானமாக தந்தையை குறி பார்த்து அடித்தாள்.
 
அதை கேட்ட ரகுவால் பேசமுடியாமல் போக “அது.. அது வரு..” என்று இழுக்க, அவரை மேலே பேசவிடாமல் கை நீட்டி தடுத்தவள்
 
“எனக்கு இந்த கன்ட்ரியே பிடிக்கல. யு நோ வாட், ஃப்ரம் தி டே ஐ கேம் ஹியர், ஐ ஆம் லிட்ரலி கொண்டிங் தி டேஸ் டு கோ பேக். ஆனா, நீங்க என்னை இங்கயே செட்டில் பண்ண பார்க்கறீங்க” என்று ஆயாசமாக கேட்டாள்.
 
அங்கே “அப்படியெல்லாம் இல்ல சரண். நீ என்ன அவளை ரெண்டு மூணு முறை பார்த்திருப்பியா. அதுக்குள்ள எப்படி ஒருத்தரை பிடிக்குது பிடிக்கலனு தெரியும். வாழ்ந்து பார்த்தா தானப்பா புரியும்” கீழே மகனுக்கு புரியவைக்கிறேன் என்று மீண்டும் ஆரம்பித்தார் கனி.
 
“நான் சொல்றதை சொல்லிட்டேன். இதுக்கு மேல இதுல பேச ஒண்ணுமில்ல. நம்ப சுசி கல்யாணம் பல போராட்டத்துக்கு அப்புறம் நடந்திருக்கு. நான் போய் வந்தவங்களை கவனிக்கணும்” என்று அங்கிருந்து நகரப் போனான்.
 
“நில்லு சரண்.. சுசி கல்யாணம் நடந்து முடிஞ்சிடுச்சி. இப்ப எனக்கு உன் கூட வரு கல்யாணம் நடக்கறது தான் ரொம்ப முக்கியம்” என்று கனி ஆவேசமாக கத்த, தாயை அதிர்ந்து பார்த்தான் சரண்.
 
மகனின் பார்வை புரிந்தவராக “அம்மா இவ்ளோ கெட்டவளானு தோணுதா சரண். எனக்கு வேற வழி தெரியலப்பா. முதல் முறை என் அப்பாவுக்காக என் அண்ணனை இருபத்தொன்பது வருஷம் பிரிஞ்சி இருந்துட்டேன். இப்ப மறுபடியும் என் அண்ணனை விட்டுட்டா, அதுக்கப்புறம் அது முகத்தை கூட நான் பார்க்க முடியாது. ஒரு பிரிவுக்கே என் வாழ்க்கையில முக்கால்வாசி போயிடுச்சி. இன்னொரு பிரிவை பார்க்கறதுக்கு இந்த உடம்பை விட்டு உயிர் போயிடட்டும்” என்று கோபமாக சுவற்றில் முட்ட போனவரை..
 
“அம்மா..” என்று தன் கையை குறுக்கே கொண்டு போய் தடுத்தான் சரண்.
 
அன்னை செய்ய வந்ததை எண்ணி அவன் உடல் நடுங்க, அவரோ மகன் கையை பிடித்து “நீ வருவை கல்யாணம் பண்ணிக்கோ சரண். மாட்டேன்னு சொல்லாத. எனக்கு என் அண்ணன் உறவு வேணும். உன் காலுல கூட விழறேன்” என்று மகனென்றும் பாராமல் அவன் காலில் விழ போனவரை ஒரு நிமிடம் நின்று துடித்த இதயத்துடன் பிடித்து நிறுத்தியவன்..
 
“என்னமா பண்றீங்க..” என்று கண்களை மூடி திறந்து “பண்ணிக்கிறேன்” என்றுவிட்டு வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டான்.
 
வரு தன் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்க, “வருமா, உன் அப்பாவுடைய ஸ்டோரி உனக்கு தெரியும் தானே. இருந்தும் இன்னொரு தடவை ஞாபகப்படுத்த வேண்டியது என் கடமை. இன்னைக்கு வேணா நான் பெரிய பிசினஸ் மேக்னட், பிக் ஷாட், உங்களுக்கு எல்லாம் தர முடிஞ்ச ஒரு நல்ல டேட்ஆ இருக்கலாம். ஆனா ஒருகாலத்துல என் படிப்பா, கனி படிப்பானு வந்தப்போ, எனக்காக கனி வீட்டு வேலைக்கு போனா. பெத்தவங்க நமக்காக செய்ற தியாகத்தை விட பலமடங்கு உயர்ந்தது நம்ம கூட பொறந்தவங்க நமக்காக செய்யறது” என்ற ரகு,
 
“என் கனி, எனக்காக ஒவ்வொரு இடத்துலயும் விட்டு கொடுத்திருக்கா. இப்பவும் என் உறவுக்காக மட்டும் தான் துடிக்கிறா. ஏற்கனவே அவளுக்கு நியாயம் செய்ய முடியாம தான் என் இருபத்தொன்பது வருஷம் ஓடுச்சு. திரும்ப அப்படி ஒண்ணு நடந்தா, உன் அப்பா உயிர் வாழ்ந்தாலும் நடைப்பிணம் தான்” என்றதும் அதிர்ந்துவிட்டவள்
 
“டேட், என்ன பேசறீங்க” என்று அவரிடம் வந்து அவர் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்.
 
“இந்த மேரேஜுக்கு யெஸ் சொல்லுடா. ஐ ஆம் டூயிங் திஸ் நாட் ஒன்லி ஃபார் தி சேக் ஆஃப் மை சிஸ்டர். நான் சரணை இங்க வந்த நாள்ல இருந்து கவனிச்சிட்டு தான் இருக்கேன். சுசி கல்யாணத்துக்கான அவனோட பாடு ரொம்ப ஜாஸ்தி. தன் குடும்பத்து மேல இவ்ளோ பாசம் வச்சிருக்கிறவன் தன் பொண்டாட்டியையும் அப்படி தான் பார்த்துப்பான்” சரணின் மேல் தனக்கிருக்கும் அபிப்ராயத்தையும் கூறினார்.
 
அதோடு “நாம செஞ்ச தப்புக்கு இந்த கல்யாணம் ஒரு பிராயச்சித்தமா இருக்கும்டா” என்று மகளை ஆழ்ந்து பார்த்து சொல்ல, அவர் கண்கள் எதை உணர்த்தியதோ, மூச்சை உள்ளிழுத்து வெளியிட்டவள் “ஐ வில் மேரி ஹிம், டேட்” என்றுவிட்டு தன் தந்தையை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
 
சரண், வர்ணிகாவின் திருமண வேலைகள் வெகுவிரைவாக நடந்துக் கொண்டிருக்க, ஒரு துணி பையுடன் அண்ணனிடம் வந்த கனி “அண்ணா, இது எங்க சின்ன மாமியார் பையனுக்காக வாங்கின வேட்டி சட்டை. அவனும் சரணை மாதிரி தான் இருப்பான். சரண் இதையே கல்யாணத்துல போட்டுக்கிட்டும்” என்றவர் “அப்புறம் வரு கட்டிருக்க புடவை நாங்க எடுத்து தந்தது தான். அவ அதுலயே இருக்கட்டும்” என்றிருந்தார்.
 
அதோடு கணவரையும் அவர்கள் முறை மாங்கல்யத்தை வாங்கி வரச் சொல்லி குடும்ப ஆசாரியின் வீட்டிற்கே அனுப்பியிருந்தார்.
 
தான் சொல்லவேண்டியதை சொல்லிவிட்டு நகர்ந்த தங்கையை நிறுத்திய ரகு, அவரிடம் எதையோ சொன்னார். அதில் கனியின் முகம் மாறி, கண்கள் கலங்கினாலும், அண்ணன் சொல்வதை ஏற்று சரியென்று தலையாட்டிவிட்டு மற்ற வேலைகளை பார்க்கலானார்.
 
அமைதியாக அறையில் அமர்ந்திருந்த சரணிடம் அவர் கொண்டு வந்த வேட்டி சட்டையை கனி கொடுக்க, அவன் அதை வாங்காமல் தரையை வெறித்துக் கொண்டிருந்தான். அவனுடன் இருந்த வினோத் தான் “நீங்க போங்கம்மா. நான் இவனை ரெடி பண்ணி கூட்டிட்டு வரேன்” என்று துணியை வாங்கி வைத்தான்.
 
தயாராகி வந்த சரண் மணமேடைக்கு செல்ல, வழியில் சுசியும் பார்த்தியும் நின்றிருந்தனர். தம்பியை கண்டதும் கலங்கிய கண்களை கட்டுப்படுத்த முயன்றும் தோற்றுப் போன சுசி, வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டாள்.
 
பார்த்தி தான் மைத்துனனின் தோளில் கைவைத்து “உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் தானே சரண்?” என்று கேட்டான்.
 
அதற்கு உணர்வுகள் துடைத்த வெற்று புன்னகையை கொடுத்துவிட்டு மணமேடையில் சென்று அமர்ந்தான் சரண்.
 
அடுத்து வருவும் அமைதியாக அவனருகில் வந்தமர, அதுவரை ஒருவர் மற்றொருவரிடமிருந்து நிச்சயம் எதிர்ப்பு கிளப்பியிருக்கும், அதனால் இத்திருமணம் நடக்க வாய்ப்பில்லை என்று மனதிற்கு சொல்லி வைத்திருந்ததெல்லாம் வீணாகி போக, இது நடக்கத் தான் போகிறது என்பதை இருவரும் புரிந்துக் கொண்டனர்.
 
மந்திரங்களை ஓதிய ஐயர், கங்கன கயிற்றை அவள் கரத்தில் கட்ட சொன்ன நேரம் “இந்த கல்யாணம் நடக்கணும்னா எனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு” என்றான் சரண்.
 
அனைவரும் என்ன என்பதாய் அவனிடம் பார்வையை நிறுத்தியிருக்க “இனி, இவளுக்கும் இவ அண்ணனுக்கும் எந்த சம்பந்தமும் இருக்க கூடாது. இதுக்கு சரிங்கற பட்சத்துல தான் இந்த கல்யாணம் நடக்கும்” என்றிருந்தான்.
 
அதை கேட்ட வரு அவனை முறைத்துவிட்டு, எதுவோ சொல்ல வர “இல்ல சரண். வருவுக்கு மட்டும் இல்ல, இனி என் குடும்பத்துல இருக்கிற யாருக்குமே மனோஜ் கூட எந்த சம்பந்தமும் இருக்காது” என்று வருவை முந்திக் கொண்டு ரகுவரன் பதிலளிக்க, தந்தையை நிமிர்ந்து பார்த்த வரு, தன் கீழுதட்டை பற்களால் அழுத்திக் கொண்டு அமைதி காத்தாள்.  
 
அனைத்திற்கும் எதிர்வாதம் புரிபவள் அமைதியாக இருந்ததிலேயே அவளுக்கும் இதில் சம்மதம் என்பதை புரிந்தவன், ரகுவை பார்த்து “நான் என் பொண்டாட்டி கிட்ட தான் சொல்லமுடியும்” என்று அவருக்கு எதிர்வாதம் புரிந்துவிட்டே அவள் கையில் கங்கன கயிற்றை கட்டினான்.
 
தன் தந்தையின் குணத்தை கொண்டு பிறந்திருக்கும் மருமகனை மெச்சுதலாக பார்த்ததோடு, இனி தன் மகளை அவன் எப்போதும் விடமாட்டான் என்ற நம்பிக்கையும் கொண்டார் ரகு.
 
அனைத்து சம்பிரதாயங்களும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து முடிந்து, வர்ணிகா கழுத்தில் சரண் மங்கள நாணை கட்ட, இருவரும் கணவன் மனைவி என்ற பந்தத்திற்குள்  இணைந்தனர். சுசி தான் பின்னிருந்து நாத்தனார் முடிச்சு போட்டாள்.
 
அவள் நெற்றியில் குங்குமம் வைக்க சொன்ன நேரத்தில் “நான் நேசிச்ச ஒருத்தினா அது நீ தான்டி. ஏன்டி என் வாழ்க்கைல எனக்கு பிடிக்காத சூழ்நிலையில, அதுவும் எனக்கு பிடிக்காத குடும்பத்துல இருந்து வந்த. இனி நமக்குள்ள எதுவுமே இருக்க போறதில்லையே” என்று தன் மனத்தாங்கலை மனதிற்குள் புலம்பிக் கொண்டே மாங்கல்யத்திற்கும் அவள் வகிட்டிலும் குங்குமத்தை வைத்தான்.
 
இதை பார்த்திருந்த கமலி “டேய் என்னடா இப்படியாகி போச்சு. சரண் அண்ணன் யாரையோ லவ் பண்ணிட்டு இருந்தானேடா” வினோத் காதில் மட்டும் விழ சொன்னாள்.
 
அதை கேட்டு பதறிய வினோத் “சும்மா இருடி. அவன் சொன்ன லவ் கதை இன்னும் கனவா நிஜமானே தெரியல. அதுக்காக வலிய வர வாழ்க்கைய விடுவாங்களா. சரணுடைய மாமா எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா. இப்போ அவன் மேரேஜ், கரியர் ரெண்டும் செட்டிலாகிடுச்சு” நண்பன் காதலித்த பெண்ணை தான் மணமுடித்திருக்கிறான் என்பதை அறியாது, முகம் கொள்ளா புன்னகையுடன் சொன்னான்.
 
தன் மகளின் திருமணமும் இப்போது நடந்திருப்பதால், திருமணத்திற்கு ஆன செலவை தாங்கள் ஏற்று கொள்வதாக ரகு சொல்லியும், கனியும் பாலனும் அதற்கு ஏற்று கொள்ளவில்லை. ஏன், சரணும் தான். அதனால் அங்கிருந்தவர்களுக்கு சிறப்பு மதிய உணவை மட்டும் ஏற்பாடு செய்திருந்தார் ரகு.
 
அனைத்தும் முடிந்து சுசித்ரா மற்றும் பார்த்திபன், பார்த்திபனின் வீட்டிற்கு அடி மிதிக்க செல்ல, சரணையும் வர்ணிகாவையும் தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார் கனி.
 
அந்த அடுக்குமாடி குடியிருப்பின் முகப்பை, வரு தன் கண்களால் அளவெடுத்து கொண்டிருக்க, அவர்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றனர்.
 
உள்ளே வந்ததும் மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுக்க, மருமகளுக்கு இதுவெல்லாம் பிடிக்குமோ என்றோசித்த கனி, எச்சில் படாத பாலையும் துளி பழத்தையும் மருமகளிடம் கொடுத்துவிட்டு, அதன் மீதியையே மகனிடம் கொடுத்தார்.
 
மண்டபத்திலும் சரி இங்கும் சரி, அனைத்தையும் கணக்கு பார்த்து பைசல் பண்ண வேண்டிய வேலைகளில் சரண் மூழ்கிவிட்டான். அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த வர்ணிகாவிற்கு அந்த வீட்டையும், அதிலிருந்து வெளிவரும் உஷ்ண காற்றையும் பார்க்க பார்க்க தந்தையின் மீது கோபம் கோபமாக வந்தது.
 
சிறிதும் தாமதிக்காது தன் கைபேசியை எடுத்தவள் “நான் கஷ்டப்படணும்னு தான என்னை இந்த மேட்ச் பாக்ஸ் சைஸ் வீட்டுல மாட்டிவிட்டிங்க. ஐ ஹேட் யு டேட்” என்று வேகமாக வேகமாக கண்களில் அனல் பறக்க தன் ராஜினாமா மின்னஞ்சலை டைப் செய்து தந்தைக்கு அனுப்பியிருந்தாள்.
 
ரகுவரனின் கைபேசி தன் இருப்பை சொல்வதாக ஒலியெழுப்பியது. அதையெடுத்து பார்க்க, மகளின் ராஜினாமா மின்னஞ்சல் இருந்தது. அவர் எதிர்பார்த்தது தான். அவருக்கு முன்னமே தெரியுமே. அலுவலகத்தில் தன்னை கேட்காமல் ஒரு முடிவு எடுத்தாலே தன்னிடமும் பேசாமல், வீட்டிலிருந்தும் தள்ளியிருப்பவள், இன்று அவள் வாழ்வின் மிகப்பெரிய முடிவையே அவளை கேட்காமல் எடுத்தால் அமைதியாகவா இருப்பாள்.
 
அதிலும் அவள் இறுதியாக அனுப்பியிருந்த ‘வர்ணிகா சரண்’ என்ற சிக்னேச்சரில், தன் மீது மகள் எத்தனை கோபமாக இருக்கிறாள் என்பது புலப்பட்டாலும், மகள் இந்த திருமணத்தை ஒருநாள் ஏற்றுக்கொள்வாள் என்ற நம்பிக்கையும் வர சிரித்துக் கொண்டார்.
 
அன்றிரவு அலங்கரிக்கப்பட்ட முதலிரவு அறையில் பார்த்திபன் அமர்ந்திருக்க, முகத்தில் வியர்வை பூத்திருக்க, கைகள் இரண்டும் நடுங்க, தடதடத்த நடையுடன் உள்ளே நுழைந்தாள் சுசி. தழைய தழைய பட்டு புடவையும் நகைகளும் அணிந்திருந்தவள், அவன் மனதை கொள்ளை கொள்ளும் படியாக, சரம் சரமாக மல்லிகை பூவையும் கூந்தலில் சூட்டியிருந்தாள்.
 
அவள் கையில் இருந்த பாலை கணவனிடம் கொடுத்துவிட்டு, அவன் காலில் விழ போக, அவளை தடுத்து நிறுத்தி கட்டிலுக்கு அழைத்து சென்றவன், அவளை ஆசுவாசப்படுத்துவதற்கு பாலையும் குடிக்க வைத்து படுக்கவும் சொன்னான்.
 
என்னவென்று புரியாமல் சுசி பார்த்தியை பார்க்க, “நம்ப கல்யாணம் மத்தவங்க கல்யாணம் போல நடக்கல. இதெல்லாம் இன்னைக்கே நடக்கணும்னு ஒண்ணுமில்ல. லைஃப்ப லவ்வோட ஆரம்பிக்கலாம். தூங்கு” என்றான். கணவனின் புரிதலை எண்ணி மெய் சிலிர்த்த சுசியும் அந்நாளின் களைப்பில் கண்ணயர்ந்திருந்தாள்.
 
இங்கே ஏழு நட்சத்திர விடுதியின் ஐந்தாம் தளத்தில் இருக்கும் ஹனிமூன் சூட் ரூமில் இருந்தனர் சரணும் வர்ணிகாவும். ரகு தான் மகளுக்கும் மருமகனுக்கும் இங்கே முதலிரவு ஏற்பாடு செய்ய சொல்லியிருந்தார்.
 
அந்த அறை முழுவதும் வாசனை திரவியத்தாலும், அழகிய மெழுகுவர்த்திகளாலும், உயர் ரக பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தரையிலும் இதயவடிவில் பூக்களால் வடிவமைக்கப்பட்டு, அதனருகில் மிஸ்டர் & மிஸஸ் என்றும் பூக்களால் அலங்காரமாய் எழுதப்பட்டிருந்தது.
 
கட்டிலின் ஒரு பக்கத்தில் வர்ணிகா அணிந்திருந்த புடவையும் ரவிக்கையும் தரையில் விழுந்து கிடக்க, அங்கிருந்த மேசையில் சரணின் ஆடைகள் மடித்து வைக்கப்பட்டிருந்தது.
 
ஆனால் அவ்வறையில் அவனையும் காணவில்லை, அவளையும் காணவில்லை.
 
குளித்து முடித்து இரவு உடைக்கு மாறியிருந்த சரண், பால்கனி வழியாக வெகுநேரமாய் நீல வானத்தை வெறித்துக் கொண்டிருந்தான். எதுவும் தன்னை சமன் செய்ய முடியாமல் தோற்றுப் போக, அமைதியாக வந்து கட்டிலில் கால் நீட்டி அமர்ந்துவிட்டான்.
 
அந்நேரம் குளித்து முடித்து வெளியே வந்தாள் வர்ணிகா. அவன் கட்டிய தாலியை தவிர கழுத்திலோ, காதிலோ, கைகளிலோ எதுவும் இல்லாமல் விடியற்காலை மண்டபத்தில் அவன் பார்த்தது போல், சொல்லபோனால் அதற்கு இன்னும் மேலேறிய, ஃப்ளோரல் ஸ்டைல் கையில்லாத காட்டன் டாப்ஸ் மற்றும் ஷார்ட்ஸில் இருந்தாள்.
 
‘அடிப்பாவி.. எப்படி நிக்கறா. ஒரு கன்னி பையன் முன்னாடி இப்படி நிக்கறோமேன்னு இருக்கானு பாரு’ என்று மூளை அதன் பாட்டிற்கு வசைப்பாடி கொண்டிருந்தாலும், மனது பார்க்கமாட்டேன் பார்க்கமாட்டேன் என்று அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தது.
 
இவனது மனம், சலனத்திற்கும் வீராப்பிற்கும் நடுவே அலைபாய்ந்துக் கொண்டிருக்க, இவனெதிரே வந்தவளோ “ஹேய் கெட் அப். போய் கௌச்ல தூங்கு” வெகு சாதாரணமாக சொல்லிவிட்டு கட்டிலின் மறுபக்கம் போய் படுத்தாள்.
 
அதை கேட்ட சரணுக்கோ சலனம் எல்லாம் சக்கரை பொங்கல் சாப்பிட சென்றுவிட “நான் ஏன்டி போகணும்? இது என்ன ரூம் தெரியுமா, ஹனிமூன் சூட் ரூம். ரெண்டு பேர் இருந்தா தான் ஹனிமூன். இங்க தனி மூன் கொண்டாட முடியாது” என்றான் குரலில் நக்கலுக்கு பஞ்சமில்லாமல்.
 
“ஹேய், வாட் டூ யு மீன்?” என்று அவள் எகிற
 
“உனக்கு அவ்ளோ சீன் இல்லைன்னு அர்த்தம். சொல்றத உன் அப்பன் கிட்ட சொல்ல வேண்டியது தானே. நான் இங்க தான் படுப்பேன். காத்து நல்லா தான் வருது, மூடிட்டு தூங்குடி” அவளை ஒருமுறை மேலிருந்து கீழ் பார்த்து சொன்னான்.
 
“ஹேய், யூ இடியட். ஹவ் டேர் யூ டாக் அபௌட் மை டாட்?” என்று அவள் சத்தமிட்டு கொண்டிருக்க, அதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் தன் பக்க விளக்கை அணைத்துவிட்டு திரும்பி படுத்துக் கொண்டான்.
 
இப்படியே இரண்டு நாட்கள் சென்றிருக்க, வர்ணிகா தன் புத்தகத்தில் மூழ்கியிருந்தாள். சரணோ அந்த விசாலமான அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்துக் கொண்டிருந்தான்.
 
“ஒண்ணு இந்த அம்மாவோட நொண்ணன் எங்களை அவர் வீட்டுக்கு கூட்டிட்டு போயிருக்கணும், இல்ல எங்க வீட்டுக்கு அனுப்பிருக்கணும். அதைவிட்டுட்டு இந்த ரூம்லயே இருக்கோம். இந்த அம்மாவுக்கு ஃபோன் பண்ணா, நீயா இங்க வர கூடாது, நாங்களா உங்களை ஆள் வச்சி அழைச்சிப்போம்னு சொல்றாங்க” என்று யோசித்தவன்..
 
“சுசி கூட இன்னைக்கு ஃபோன் பண்ணி பார்த்தி மாமாவோட தங்கச்சியும் அவங்க வீட்டுக்காரரும் வந்து, சுசியையும் மாமாவையும் அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டதா சொல்லுச்சு. நம்பள யார் வந்து கூட்டிட்டு போவாங்க..” வர்ணிகாவை திரும்பி பார்க்க, அவள் இன்னும் புத்தகமே கண்ணாக இருந்தாள்.
 
“ஒருவேளை சுசி அது மாமியார் வீட்டுக்கு போயிட்டு, நாளைக்கு மாதிரி சுசியும் மாமாவும் வந்து எங்களை கூட்டிட்டு போவாங்களோ என்னமோ” என்று தானே ஒரு முடிவிற்கும் வந்தான்.
அப்போது “ஹலோ, ப்ளீஸ் சென்ட் எ கப் ஆஃப் மில்க் டு மை ரூம்” என்று ரிசெப்ஷனுக்கு அழைத்து சொல்லிக் கொண்டிருந்தாள் வர்ணிகா.
 
அவள் பேசியதை கவனித்தவன் “கொஞ்சமாச்சும் வீட்டுக்கு போகணும்னு கவலை இருக்கா பாரு. எப்போ பாரு அந்த புக்குக்குள்ள தலைய விட்டுக்க வேண்டியது. இல்ல, லேப்டாப்ல எதாவது இங்கிலீஷ் படத்தை போட்டு பைத்தியம் மாதிரி சிரிக்க வேண்டியது” என்று தலையில் அடித்துக் கொண்டான்.
 
வர்ணிகா அதை கவனித்து இருந்தால் தானே, வழக்கம் போல் தொடை அளவு ட்ரொஸரும் இடை அளவு டாப்ஸும் அணிந்து, கால் மேல் கால் போட்டு கொண்டு புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள். அவளது சுருண்ட கேசம் அவள் தோள்களில் விளையாட, அவன் கட்டிய தாலியை தவிர வேறெதுவும் இல்லாமல் மாடர்ன் மங்கையாக தன் உலகில் மூழ்கியிருந்தாள்.
 
“மணி அஞ்சாச்சு. இந்த டைம்ல ரெண்டு தெரு தள்ளியிருக்கிற டீ கடைல சுட சுட மசால் வடையும் மிளகாய் பஜ்ஜும் போடுவான். ஒரு டீ அடிச்சிட்டு, வடை சாப்பிட்டு வருவோம். இந்த அம்மாவோட நொண்ணன் இங்க ரூம் போட்டதுல இது ஒண்ணு தான் வசதி” என தனக்குள்ளேயே பேசிக் கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
 
 
தொடரும்..

   
Joedeepan reacted
ReplyQuote
(@nila-sridhar)
Eminent Member Author
Joined: 3 months ago
Posts: 30
Topic starter  

உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்  
https://srikalatamilnovel.com/community/topicid/9/


   
ReplyQuote
(@nila-sridhar)
Eminent Member Author
Joined: 3 months ago
Posts: 30
Topic starter  
அத்தியாயம் - 7

திருமணம் முடிந்து ஐந்து நாட்கள் ஆகியிருந்தது. இதுவரை யாரும் சரணையும் வருவையும் அழைக்க வரவில்லை.

 
சுசியிடம் அழைத்து கேட்டதற்கு ‘அம்மா அப்படி எதுவும் சொல்லவில்லை’ என்று சொல்லிவிட்டாள்.
 
குழம்பி தவித்த சரண் அடுத்தநாள் காலையிலேயே தன் தாயிற்கு அழைத்தான். அவர் அழைப்பை ஏற்று, “சரண், எப்படிப்பா இருக்க. நீ அம்மா கண்ணுக்குள்ளேயே நிக்கற” என்று மகனிடம் உருகிக் கொண்டிருந்தார் கனிமொழி.
 
“நான் நம்ம வீட்டுக்கு பக்கத்துல இருக்குற கோவில்ல தான் இருக்கேன். உடனே அங்க கிளம்பி வாங்க. இல்ல, நான் நம்ம வீட்டுக்கு வந்திடுவேன்..” என்று அன்னையை கிடுக்கு பிடி பிடிக்க, அவரும் மகன் சொன்னது போல் அருகிலிருக்கும் ஆலயத்திற்கு வந்தார்.
 
தாய் தன்னை நோக்கி வருவதை கூர்மையாக பார்த்திருந்தான் சரண். அவரோ இவனருகில் வந்து கன்னத்தை வருடவும், அதை தட்டி விட்டவன் “என்னை எப்போமா நம்ம வீட்டுக்கு அழைச்சிக்க போறீங்க?” என்று கடுகடுத்து கேட்டான்.
 
“அது சரண்.. அது.. அது.. நானே உங்கிட்ட பேசணும்னு தான் இருந்தேன்..” என்று இழுத்தவர், தன் நெற்றியில் பூத்திருந்த வியர்வை துளிகளை தன் சேலை முந்தானையால் துடைத்துக் கொண்டு, “அது.. வரு வெளிநாட்டுல வளர்ந்த பொண்ணு. அதுக்கு நம்ம வீடு செட்டாகுமா..” என்று மென்று முழுங்க, ‘மேலே சொல்லுங்கள்’ என்பதாய் பார்த்து நின்றான் சரண்.
 
அவரோ “அதான்.. அண்ணன் உங்களுக்கு ஒரு பிளாட் வாங்கி வச்சிடுறேன்னு சொல்லுச்சு..” என்று மறுபடியும் மகனின் தலையில் இடியை இறக்கினார்.
 
விசயத்தை கிரகிக்க சரணுக்கு சிலநொடிகள் தேவைப்பட்டது. அதை தனக்கு சாதகமாக்கி கொண்ட கனி, “அண்ணன் பிளாட் எல்லாம் பார்த்திடுச்சு.. என்னை கூட கூட்டிட்டு போய் காட்டுச்சு. நாமெல்லாம் போய் இருப்போமான்னு கனவுல கூட நினைச்சி பார்க்க முடியாத இடம் அது. அங்க இருக்க பில்டிங்கெல்லாம் அம்மாம் பெருசு. உங்களுக்கு வாங்க போற வீடு இருபத்தைஞ்சாவது மாடியில இருக்கு. அங்க இருந்து மொத்த ஊரே தெரியுது சரண்” என்று அண்ணன் வாங்க போகும் குடியிருப்பை பற்றி அளந்துக் கொண்டே போனார்.
 
அதை கேட்டவனுக்கு எரிச்சல் மேலோங்க “அப்போ அவ அவங்க அப்பா வாங்கின வீட்டுலயும், நான் நம்ப வீட்டுலயும் இருக்க போறோம். ரொம்ப நல்லதும்மா. நான் கூட இவ கூட எப்படி குப்பை கொட்டறதுனு யோசிச்சிட்டு இருந்தேன். உங்க வரு அங்கேயே இருக்கட்டும்..” என்றுவிட்டு கோவிலை விட்டு கிளம்பப் போனான்.
 
மகனது வேகத்திற்கு அவனை தன் இருகைகளாலும் இழுத்து நிறுத்தியவர், “என்ன சரண் பேசற? புருஷன் பொண்டாட்டி ஒரே இடத்துல தான இருக்கணும்” என்று அழாத குறையாக கேட்க,
 
“அதே தான் நானும் சொல்றேன். புருஷன் எங்க இருக்கானோ அங்க தான பொண்டாட்டியும் இருக்கணும். அவளுக்கு நம்ம வீட்டுல இருக்க முடியலைன்னா அவங்க அப்பா அவளுக்கு எங்க இருக்க முடியுதோ அந்த மாதிரி மாப்பிள்ளையை தான பார்த்திருக்கணும். அதைவிட்டுட்டு என்னை நம்ம வீட்டுல இருந்து பிரிக்கிறது என்ன விதத்ததுல நியாயம்?” அது கோவில் என்றும் பாராமல் தாம் தூமென்று குதித்தான்.
 
“எல்லாரும் பார்க்கறாங்க சரண். கொஞ்சம் பொறுமையா பேசேன். இங்க பாரு, அம்மா உன் நல்லத்துக்காக தானே செய்வேன். நாங்க தான் கடைசி வரைக்கும் அந்த சின்ன வீட்டுலயே இருந்துட்டோம். எங்க புள்ள பெரிய வீட்டுல வசதியா, நல்லா காத்தோட்டமா இருக்கறது எங்களுக்கும் சந்தோசம் தானே. அண்ணன் அந்த வீட்டை உன் பேருலயும் வரு பேருலயும் வாங்கணும்னு இருக்கு. நாளன்னைக்கு ரெஜிஸ்ரேஷன். நானே நைட் உங்கிட்ட பேசனும் தான் இருந்தேன். அதுக்குள்ள நீயே வந்துட்ட” பிசிறு தட்டாமல் அனைத்தையும் சொல்லி மகனை சமாதானம் செய்ய முயன்றார்.
 
“நீங்க என்ன சொன்னாலும் நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்ம்மா. ஒத்த புள்ளைய பெத்து வச்சிருக்கீங்க. நான் உங்கள பக்கத்துல இருந்து பார்க்க வேண்டாமா?” அப்போதும் சரண் பிடி கொடுக்காமல் பேச,
 
“ஏன் சரண் சொல்றதையே புரிஞ்சிக்க மாட்டற. இதுக்கா உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சோம். இப்போ அம்மா என்ன பண்ணா இதுக்கு சம்மதிப்ப?” என்று கண்ணீரும் கம்பளையுமாய் கேட்டாலும், அவர் குரலில் அப்படி ஓர் பிடிவாதம்.
 
அதை பார்த்தவன் தன் கண்களை அழுந்த மூடி திறந்து, “என்ன வேணா பண்ணுவீங்கல ம்மா. உங்க அண்ணனுக்காக கோவில்னு கூட பார்க்காம உங்க புள்ள காலுல கூட விழுவீங்கல..” என்று உணர்ச்சி துடைத்த குரலில் கேட்டவன் “போய் தொலைக்கறேன்..” என்றுவிட்டு விறுவிறுவென நான்கு அடிகளை எடுத்து வைத்தவன், சட்டென திரும்பி,
 
“ரெஜிஸ்ரேஷன் அன்னைக்கு, என் பையன் சரணை என் அண்ணனுக்கு தத்து கொடுத்துட்டேன்னு இன்னொரு பத்திரத்தையும் ரெடி பண்ண சொல்லி சைன் போட்டு கொடுத்திடுங்க” கோப மூச்சுகள் வாங்க, பற்களை கடித்து கொண்டு ஆவேசமாக சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
 
கனிக்கும் அண்ணன் முதலில் சொன்னபோது இதில் உடன்பாடில்லை தான். பின் யோசித்து பார்த்தவர், கட்டாய திருமணத்தை செய்திருக்கும் இருவருக்கும் தனிமை கொடுத்தாலே ஒழிய அவர்களுக்குள் நெருக்கம் பிறக்காது என்ற எண்ணத்தில் தான் சரியென்று சம்மதித்தார். அதை புரிந்து கொள்ளாமல், கோபமாக செல்லும் மகனை கலங்கிய கண்களோடு பார்த்திருந்தார்.
 
அவர்கள் திருமணமான எட்டாம் நாளன்று காலை, அனைவரும் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்தனர். தந்தை மீது கோபமாக இருக்கும் வர்ணிகாவிற்கும், அவர் வாங்கி தரும் வீட்டில் உடன்பாடில்லை என்றாலும், அவளால் நிச்சயம் உஷ்ண காற்றை வெளியேற்றும் அந்த தீப்பெட்டி அளவு வீட்டில் இருக்கமுடியாது என்றே தோன்றியது. அதனால், அவளும் இதற்கு சம்மதித்தாள்.
 
வீட்டின் கிரயமும் முடிந்து, அடுத்த இரண்டு நாட்களில் வீட்டிற்கு தேவையான இன்டீரியர் வேலைபாடுகளும் முடிந்து, வீட்டிற்கு தேவையான பொருட்களையும் வாங்கி போட்டிருந்தனர். சரணும் வர்ணிகாவும், நட்சத்திர விடுதியிலிருந்து நேராக இங்கே தான் வந்தனர். உடன் ரகு, மைதிலி, கனி மற்றும் பாலனும் இருந்தனர்.
 
விடியற்காலையிலேயே பால் காய்ச்ச திட்டமிட்டிருக்க, சுசித்ராவும் தன் மாமியார் வீட்டோடு வந்திருந்தாள்.
 
கனி, வருவை முன்னே நிறுத்தி பால் காய்ச்ச வைத்தார். அதுவும், மண்ணடுப்பில் செய்வது தான் சிறப்பு என்று சொல்லி, சுள்ளிகளை வைத்து அடுப்பில் பால் காய்ச்ச சொல்ல, அதிலிருந்து வந்த புகையில் வருவிற்கோ கண்கள் சிவந்து எரிய தொடங்கிவிட்டது.
 
பாலை குடித்துவிட்டு அங்கிருந்த அறையில் போய் படுத்தவள் தான், மதிய உணவிற்கு கூட எழவில்லை. மதிய உணவை ரகுவரன் வெளியில் ஏற்பாடு செய்திருக்க, எல்லோரும் சாப்பிட்டு விட்டு கதை பேசியிருந்தனர். சரண் மட்டும் அமைதியே ரூபமாக காட்சியளித்தான். மாலை வரை இங்கயே இருந்து விட்டு அனைவரும் தத்தம் வீடுகளுக்கு கிளம்பினர்.
 
முதலில் சுசியின் குடும்பம் கிளம்பிவிட, அடுத்தநாள் அவர்கள் லண்டன் கிளம்புவதால் மகளை பிரிவதை எண்ணி கண் கலங்கினார் மைதிலி. ரகு, தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி கொண்டு நின்றிருந்தார்.
 
மைதிலி, “பார்த்து இருந்துக்கோ வரு. வி ஆர் லீவிங் டுமாரோ. எதுனாலும் ஃபோன் பண்ணு. வி வில் மிஸ் யு டியர்..” என்றுவிட்டு மகளின் நெற்றியில் முத்தமிட்டார். வருவிற்கும் ஒரே நாளில் மாறிப்போன தன் வாழ்க்கையை எண்ணி ஆயாசமாக இருந்தது. இருந்தும் தந்தை மீதிருந்த கோபத்தில், தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி கொண்டு நின்றிருந்தாள்.
 
அடுத்து ரகுவரன், மகளருகில் வர, அவரிடமிருந்து விலகி சென்றவள், வேகமாக அறைக்குள் சென்று கதவை அறைந்து சாற்றி கொண்டாள். மகளின் குணமறிந்தவர், ‘அவளை பார்த்து கொள்’ என்று சரணை பார்க்க, அவனோ அவரை துளியும் கண்டுகொள்ளாது முகத்தை திருப்பிக் கொண்டான்.
 
ரகுவும் மைதிலியும் கிளம்பியிருக்க, அடுத்து கனி “வருவை பார்த்துக்கோ சரண். நீயும் நல்லா சாப்பிடு. உடம்பை பார்த்துக்கோ..” என்று மகனின் தலையை வருடி கொடுக்க, அவன் கண்களும் கலங்கிவிட்டது.
 
“இதெல்லாம் தேவையாம்மா. நீங்களாவது சொல்ல கூடாதாப்பா…” என்று சரண் இருவரையும் பார்க்க, அவர்கள் அதற்கு தயாராக இல்லை என்பதை அவர்களது முகமே சொல்லியது. ஆயாசமாக தலையாட்டியவன், “ரெண்டு பேரும் உடம்பை பார்த்துக்கோங்க. அப்பப்போ வந்து பார்க்கறேன்..” என்று இருவரையும் சேர்ந்தாற்போல் அணைத்துக் கொண்டான்.
 
தாய், தந்தையை அனுப்பிவிட்டு வந்தவன் தொம் என்று சோபாவில் அமர்ந்து விட்டான். தந்தையிடம் இருந்த கோபத்தில் கதவை அடைத்துக் கொண்ட வருவும் அமைதியாக வந்து அவனருகில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்துக் கொண்டாள்.
 
எவ்வளவு நேரம் இருவரும் அப்படியே அமர்ந்திருந்தார்கள் என்று தெரியவில்லை. முதலில் எழுந்த வரு, அப்போதே அந்த வீட்டை சுற்றி பார்த்தாள். மிகப்பெரிய வரவேற்பறை. அதிலிருந்து வலப்பக்கம் பார்த்தால் சமையலறையும் உணவு மேசையும் இருந்தது. எதிர்ப்புறம் குளியலறை இருந்தது. சமையலறைக்கு பக்கத்தில் ஒரு பால்கனி. அங்கே போய் நின்றவள், சிறிது நேரம் வேடிக்கை பார்த்திருந்தாள்.
 
பால்கனியை அடைத்து விட்டு மீண்டும் உள்ளே வந்தவள் சுற்றி முற்றி பார்க்க, அப்போதே அவள் கண்ணுக்கு அது தென்பட்டது.
 
மீண்டும் ஒரு முறை வீட்டை வலம் வந்தவள், தன் நெற்றியை தேய்த்துக் கொண்டு நின்றாள். அவளது செய்கையை பார்த்திருந்த சரண், என்ன என்பதாய் புருவம் உயர்த்த, “இல்ல.. நான் இந்த ரூம்ல தூங்கினேன்” என்று, தான் படுத்திருந்த அறையை காட்டியவள், “நீ எந்த ரூம்ல தூங்கின?” தன் சந்தேகத்தை அவனிடம் கேள்வியாய் கேட்டாள்.
 
ஆம், அந்த பெரிய வீட்டில் இருந்தது என்னமோ ஒரே ஒரு அறை தான்.
 
“என்னை என்ன உன்னை மாதிரி தூங்கு மூஞ்சின்னு நினைச்சியா. இனிமேல் தான் தூங்கணும்..” என்றவன் அங்கிருந்து எழுந்து அறைக்குள் நுழைய போக,
 
“ஹேய், ஸ்டாப். நீ எங்க இங்க வர. திஸ் இஸ் மை ரூம்” என்று அவனை முறைத்து கொண்டு தள்ளிவிட்டாள்.
 
‘இவ அப்பன் ஒரு இம்சைன்னா, இவ ஒரு இம்சை’ என்று எண்ணியவன், “ஏற்கனவே ஹோட்டல்ல கட்டில் சண்டை போட்டாச்சு. இப்ப உன் ரூம்னா, அப்போ நான் எங்க இருப்பேன். உன்னை கல்யாணம் பண்ணதால தான் எனக்கு என் வீடு போச்சு. இப்போ இந்த ரூமையும் தரமாட்டேன்னு அலுச்சாட்டியமா பண்ற?” என்று எரிந்து விழுந்தான்.
 
“ஓ! உன் மேட்ச் பாக்ஸ் வீட்டுல ரூமெல்லாம் இருக்கா. ஹா ஹா ஹா.. சோ ஃபன்னி” என்று அவனுக்கு கடுப்பை கிளப்பியிருந்தவள், “எனக்கு ரூம்ல இருந்து தான் பழக்கம். நீ சோஃபால படு” என்றுவிட்டு, அவன் அசந்த நேரத்தில் கதவை அடைக்க பார்த்தாள்.
 
நொடி நேரத்தில் சுதாரித்தவனோ, சரியாக அவள் கதவை மூடும் நேரத்தில், தன் பாதி உடலை குறுக்கே விட்டு அவளை சாற்றவிடாமல் செய்து “எவ்ளோ கேடி நீ” என்று தம் கட்டி பேசியவன், அழுத்தம் கொடுத்து திறந்துக் கொண்டு உள்ளே வந்து கதவை தாளிட்டான்.
 
“இடியட். எதுக்குடா என் ரூம்குள்ள வந்த?”
 
“கையெழுத்து போட்டிருக்கேன். இந்த வீட்டுலயும் இந்த ரூம்லயும் பாதி ஷேர் எனக்கும் இருக்கு. எல்லாம், கிட்னியை வித்து ஐபோன் வாங்குவாங்க. நான் என் வாழ்க்கைய வித்து இந்த வீட்டை வாங்கியிருக்கேன். ஒழுங்கா கட்டில்ல ஒரு பக்கத்தை ஒதுக்கி வச்சிட்டு படு”
 
“கட்டில்ல வேற படுப்பியா?” என்று அவனை முறைத்தவள், “காட், ஏன் இந்த டேட் இப்படி பண்ணார்?” என்று தலையை பிடித்துக் கொண்டாள்.
 
“எல்லாம் நீயும் நானும் இப்படி இப்படி நடக்கணும்னு தான் உன் அப்பன் இப்படி பண்ணிருக்காரு” என்று எரிச்சலின் மிகுதியில் சொன்னவன்..
 
“இந்த வீட்டுக்கு மூணு கோடியாம். இதுல பெட்ரூம் பால்கனில இருந்து பார்த்தா பீச் வியூ வேற இருக்காம். எந்த மடையனாவது பீச்சை பால்கனியில இருந்து ரசிப்பானா? பீச்னா அலை கூட ஓடி பிடிச்சி விளையாடனும், கடல்ல கால் நனைக்கணும், மணல் நம்ம காலுல ஒட்டணும்” ரசித்து கூறுகிறேன் என்று அவள் தந்தையை மடையன் என்று சொல்ல, அவள் அவனை உக்கிரமாக முறைத்துக் கொண்டிருந்தாள்.
 
அன்றிரவு இருவருமே சாப்பிடவில்லை. வர்ணிகாவிற்கு பசித்தாலும், எங்கே அவள் வெளியே செல்லும் நேரத்தில், இவன் கதவடைத்து கொண்டு படுத்துவிடுவானோ என்ற எண்ணம். சரணுக்கோ மதியம் சாப்பிட்டது ஒருபுறம், அங்கே தாய், தந்தை என்ன செய்கிறார்களோ என்ற எண்ணம் இன்னொருபுறம் பசியை மறக்க செய்திருந்தது.
 
இருவரும் சமையலறை பக்கம் சென்றிருந்தால், அந்த அண்ணனும் தங்கையும் இவர்களுக்கு செய்து வைத்துவிட்டு சென்றிருக்கும் அடுத்த நல்லது என்னவென்று தெரிந்திருக்கும்.
 
அடுத்தநாள் காலை முதலில் எழுந்த சரணுக்கு பசி வயிற்றை கிள்ளியது. எழுந்து பல் துலக்கிவிட்டு வெளியே வந்தவன், என்ன இருக்கிறது என்று பார்க்க சமையலறைக்கு செல்ல, அங்கே சமையலறை மட்டும் தான் இருந்தது. உடனே குளிர்சாதனப் பெட்டியை திறந்து பார்த்தான். அங்கும் ஒன்றுமில்லை. சொல்லப்போனால் நேற்று காய்ச்சிய பாலை கூட குடித்துவிட்டு, பாத்திரத்தை கழுவி கவிழ்த்திருந்தார் கனி.
 
ரகுவரனும் கனியும் தான், உணவு அத்தியாவசியம். வீட்டில் ஒன்றுமில்லை என்றால் இருவரும் ஒன்றாக வாங்க கொள்ள என வெளியே செல்வார்கள். வீட்டிலும் ஒற்றுமையாக இருப்பார்கள் என்று திட்டம் தீட்டி மளிகை பொருட்களோ, காய்கனிகளோ வாங்கி வைக்கவில்லை. அங்கே ஒரு பால் பாக்கெட் கூட இல்லை.
 
அதிருப்தியில் நெற்றியை நீவிக் கொண்ட சரண், வேகமாக அறைக்குள் வந்து தன் வாலட்டை திறந்து பார்க்க, பணம் என்று பார்த்தால் இருநூறு ரூபாய் மட்டுமே இருந்தது. அதுவும் அவன் வண்டிக்கு பெட்ரோல் போட வைத்திருப்பது.
 
“ச்சே.. இருந்த பணத்துல சுசிக்கு மோதிரம் எடுத்தாச்சு. இப்ப என்ன பண்றது..” என்று தலையை இடதும் வலதுமாக ஆட்டிக் கொண்டவன், அமைதியாக வந்து சோபாவில் அமர்ந்துக் கொண்டான்.
அவன் அமைதியாக இருந்தாலும், அவனது வயிறு அமைதியாக இல்லாமல், ‘எனக்கு ஏதாவது கொடு’ என்று குரல் கொடுத்துக் கொண்டே இருந்தது.
 
வர்ணிகாவிடம் கேட்கலாம் என்று அறைக்குள் வந்தால், அவள் நிம்மதியாக துயில் கொண்டிருந்தாள்.
“இங்க இவ அப்பாவும் என் அம்மாவும் எவ்ளோ பெரிய வேலை பார்த்துட்டு போயிருக்காங்க. இவ என்னன்னா பெரிய இங்கிலாந்து மகாராணி, அங்க விடிஞ்சா தான் இங்க எழுந்துப்பா போல” என்று பற்களை கடித்தவன்..
 
“வ.. வர்.. வர்ணி.. வர்ணிகா..” என்று தயங்கி தயங்கி அவள் பெயரை உச்சரித்து எழுப்பினான். அவளோ எழுந்தாற்பாடில்லை.
 
அறைக்குள் இருந்த சோபாவிற்கு எதிரே இருந்த டீபாயில் அவளது கைப்பை இருந்தது.
 
“ஒருவேளை சாப்பாட்டுக்காக என்ன வேணா பண்ணலாம்” என்று கள்ள சிரிப்பு சிரித்துக் கொண்டே அவள் கைப்பையை எடுத்தவன், அதிலிருந்த அவளது வாலட்டை எடுத்தான்.
 
அதை திறந்தவன் பார்த்ததெல்லாம் அந்நாட்டு பணமே, “என்ன இது, எலிசபெத் ராணி இருக்காங்க, காந்தி தாத்தாவ காணோம்” என்று ஏக்கப்பட்டு கொண்டு அடுத்த ரேக்கை திறக்க, அதில் இந்திய பணம் இருந்தது. தேசத்தந்தைக்கு நிகராக தானும் சிரித்துக் கொண்டவன், அதை எண்ணி பார்க்க, அதிர்ந்து தான் போனான்.
 
“ஐயோ.. ஐயோ.. அப்பா அப்பா...” என்று வாயில் அடித்துக் கொண்டவன், “ஒரு இந்திய பிரஜை என்கிட்ட வெறும் இருநூறு ரூபாய் தான் இருக்கு. இங்கிலாந்து துரையம்மா, இவ கையில எட்டாயிரத்து சில்லரை வச்சிருக்கா. என்னடா சரண், உன் நிலைமை ஃபாரின் பிகர்கிட்டயெல்லாம் திருடுற மாதிரி ஆயிடுச்சு” என்று பொருமிக் கொண்டே அப்பணத்தை எடுத்து சட்டைப்பையில் வைத்து கொண்டவன்,
 
“அடிக்கடி துரையம்மா பர்ஸ்ல கைவைக்க முடியாது. ஒரு மாசத்துக்கு தேவையான மளிகை பொருளும், ஒருவாரத்துக்கு காய்கறி, பழமெல்லாம் வாங்கி வச்சிடணும்” என்றுவிட்டு வீட்டை பூட்டிக் கொண்டு கடைக்கு சென்றான்.
 
மளிகை பொருட்களும், காய்கனிகளும் வாங்கி வந்தவன், அதை வைத்து சமைத்தும் முடித்திருந்தான்.
 
குழம்பை கையில் ஊற்றி ருசி பார்த்தவன், “வாவ்.. சூப்பர் டா சரண். உன்னை கட்டிக்க போறவ கொடுத்து வச்சவ..” என்றுவிட்டு “ச்சே.. டங் ஆஃப் தி ஸ்லிப்.. ஒரே கசகசன்னு இருக்கு. சரி, ஒரு குளியலை போட்டுட்டு வந்து சாப்பிடுவோம்” என்றெண்ணி அறைக்குள் நுழைந்தால், வர்ணிகா அங்கே விழித்துக் கொண்டிருந்தாள்.
 
பல் துலக்கி பிரெஷாகி இருந்தவள் தன் கைபேசியில் மூழ்கியிருக்க, அவளை பார்த்தவன், ‘ஐயோ.. இவளை எப்படி மறந்தோம். சரி விடு, ஆர்டர் போட்டு சாப்பிட்டுப்பா’ என்றெண்ணி தன் துண்டோடு குளியலறைக்குள் நுழைந்தான்.
 
குளித்து முடித்து இலகுவான உடைக்கு மாறி, அறைக்கு வெளியே வந்து பார்த்தால், அவன் செய்து வைத்ததை வக்கணையாக சாப்பிட்டு முடித்திருந்தாள் அவனது தர்மபத்தினி.
 
இறுதியாக தட்டிலிருக்கும் கடைசி பருக்கையை அவள் உண்பதை பார்த்துவிட்டு அதிர்ந்துப் போனவன் “ஹேய், நீ ஏன் என் சாப்பாட்டை எடுத்து சாப்பிட்ட?” என்று அழாத குறையாக கேட்டான்.
 
“உன் சாப்பாடா..? இங்க பேர் எதுவும் இல்லையே” என்றாள்.
 
“திமிரு பிடிச்சவளே, நைட்ல இருந்து சாப்பிடலடி. காலையில எழுந்து பார்த்தா, ஒரு சாமான் இல்ல. மளிகை சாமான், காய்கறியெல்லாம் வாங்கி போட்டு சமைச்சு வச்சா, நீ பாட்டுக்கு நோகாம நோம்பு கும்பிடுவியா?”
 
“நீ நைட்ல இருந்து தான் சாப்பிடல, நான் ஆஃப்டர்நூன்ல இருந்தே சாப்பிடல”
 
“உன்னை யார் போய் தூங்க சொன்னா.. எனக்கு தெரியாது, எனக்கு இப்போ சாப்பாடு வேணும்” என்று அடம் பிடித்தான்.
 
“சாப்பாடு வேணும்ன்னா எங்க போறது. ஐ டோன்ட் நோ குக்கிங். பரவாயில்ல, எங்க வீட்டுல இருக்கிற இந்தியன் குக்கை விட நீ நல்லா குக் பண்ணியிருந்த. யு மேட் மீ ஹேப்பி. நீயும் பாவம் தான். ஐ ஹேவ் இந்தியன் ரூபீஸ். நீ போய் செவன் ஸ்டார் ஹோட்டல்லேயே சாப்பிடலாம்” என்று தன் கைப்பையை எடுக்க போக, அவன் திருதிருவென விழித்தான்.
 
அதிலிருந்து தன் வாலட்டை எடுத்தவள், “இங்க தான வச்சேன்” என்று தனக்கு தானே பேசிக் கொண்டே பணத்தை தேட..
 
“அங்க இருக்காது. அத எடுத்துட்டு போய் தானே எல்லாமே வாங்கினேன். ஐநூறு ரூபா மிச்சம் இருக்கு, அப்புறம் தரேன்” என்று அசடு வழிய சொல்ல..
 
“யு இடியட்.. என் மணியை எடுத்து குக் பண்ணிட்டு, நான் ஏன் சாப்பிட்டேனா கேக்குற?” என்று அவனை துரத்த, அவனும் அந்த வீடு முழுவதும் ஓட, இருவரும் தங்களை மறந்து ஓடி பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
 
அப்படியே அறைக்குள் ஓடியவன் கட்டிலில் விழ, அவளும் அவனருகில் விழ, இருவரும் சத்தமாக வேறு சிரித்திருந்தனர். அந்நேரம் அவள் கழுத்தில் இருந்த தாலி அவளது மேல் சட்டையிலிருந்து வெளியே வந்து விழவுமே, அவனுக்கு நிஜம் புரிய, அமைதியாக எழுந்து அங்கிருந்து சென்றுவிட்டான்.
 
அவளுக்கும் தனக்கு நிகழ்ந்த விருப்பமில்லாத திருமணம் மனதை அரிக்க, கண்களும் கலங்க குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
 
 
தொடரும்...
 

   
Joedeepan reacted
ReplyQuote
(@nila-sridhar)
Eminent Member Author
Joined: 3 months ago
Posts: 30
Topic starter  

உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்  
https://srikalatamilnovel.com/community/topicid/9/


   
ReplyQuote
Page 1 / 2
Scroll to Top