என் விழியை நீங்கி நீ விலகாதே!
அத்தியாயம் 07
காதல் பேரலைகள் வந்த வழி திரும்பிச்செல்ல உற்பத்தியாகியது பாசத்தின் வற்றாத ஊற்று.
என்னதான் தினமும் செல்போனின் அளவளாவினாலும் பல மாதங்களின் பின் தந்தையை நேரில் கண்டதுமே அவளின் கண்கள் கண்ணீரை விடாமல் சொறிந்தது.
“ப்பா....” கூவலுடன் பாய்ந்தோடியவள் அவர் தோளில் தஞ்சமாக, கதிர்வேலனும் மகளின் நிலைக்கு சற்றும் குறைவில்லாத ஆனந்தக்கண்ணீரோடு வாஞ்சையாக அவள் முகம் வருடி பாசத்தோடு நெற்றியில் முத்தமிட்டார்.
பெண் பிள்ளைகளைப் பெற்ற தந்தையர்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்த்தியல்லவென்று!
ஊருக்குள் கதிர்வேலனை கண்டு அஞ்சி நடுங்குபவர்கள் அதிகம். செல்வாக்கும், ஆதி தொட்டே ஊரை ஆண்டு வருவார்கள் அவர்கள் வம்சாவளியினர் என்பதாலும் சுத்துப்பட்டு ஊருக்குள் அவர்கள் குடும்பத்தவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம்.
வெளியே புலியானாலும் வீட்டினுள் எலி தான் என்பதாகவிருக்கும் அவரின் நடவடிக்கைகள்.
தாயை மதிக்கும் தனயன். சராசரி கணவன். பொறுப்பான அண்ணன். பாசமான தந்தை. குடும்பத்தை பொறுத்தவரை கதிர்வேலனின் அவதாரங்கள் இவை மட்டுமே!
அதற்கேற்றாற்போல் தான் அனைவரும் நடப்பர்.
என்னதான் அனிகா விளையாட்டுப் பிள்ளையாக இருந்தாலும் தந்தையின் சொல்லை ஒரு போதும் மீறாதவள். அவர் சொன்னால் சரியாகவிருக்கும் எனும் நம்பிக்கை அவளுக்குள் அதிகமாகவே உண்டு.
அதனால்தான் பிடிக்கவில்லை என்றாலும் கூட அவரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு படித்துக் கொண்டிருக்கிறாள்.
“என்ன கண்ணம்மா இப்பிடி இளச்சி போய்ட்ட? வேளாவேளைக்கு சாப்பிடுதியா இல்லையா...?” பாசத்துடன் கூடிய அதட்டல் குரலில் அவர்.
“போங்கப்பா, முன்னாடி இருந்தத விட இப்போ வெயிட் போட்டுட்டேன் தெரியுமா... இப்பிடியே போச்சுன்னா அப்புறம் என்னாலேயே என்னைய அடையாளம் காண முடியாம போய்டும்....” சிணுங்கிச் சிரித்தாள்.
மகளின் பேச்சில் வாய்விட்டு நகைத்தவர் “அதுக்காவ பட்டினி கிடக்கிறதா கண்ணம்மா... காலேஜுக்கு போற புள்ள நல்லா சாப்பிட்டு தெம்பா இருந்தா தானே படிக்கிறது மண்டையில ஏறும்...”
“சந்தடி சாக்கில எனக்கு படிப்பு ஏறாதுங்கிறத சொல்லிப்புட்டீங்கல்ல... போங்கப்பா உங்க கூட நானு கா...” முறைப்புடன் தரை அதிர அவள் முன்னேறிச்செல்ல, அவர் சிரிப்பு குறையவேயில்லை.
பல மாதங்கள்... இத்தனை நாட்கள் எல்லாம் மகளை விட்டு பிரிந்திருப்பது இது முதல் தடவை அல்லவா? அவளின் ஒவ்வொரு செய்கையையும் கண்ணாரக்கண்டு ரசித்தவர் பொக்கிஷமாகச் சேமிக்கவும் மறக்கவில்லை.
அன்றைய தினம் அவரைக் கேளாமலே நினைவில் எழுந்து வந்தது.
வீட்டின் ஞாபகமும் ஊரின் நினைவும் ஒன்றாக வாட்டியதில் அனிகா வீட்டுக்கு அழைத்த அத்தினம் தான்.
மகளைப் பாராமலிருக்கும் ஏக்கம் வானளவு உயர்ந்து தாக்க, என்றுமில்லாத வண்ணம் நேரத்தோடு வயக்காட்டில் இருந்து வீடு திரும்பியவர்.... மனைவியின் கலங்கிய குரல் கேட்டு மகளாக இருக்குமோ என்றெண்ணியவராக உள்ளே நுழைய, அவர் எண்ணியது போல மகளே தான் அழைத்திருந்தாள்.
பரவசமாக பேசியவருக்கு ஒருநிலைக்கு மேல் தாள முடியவில்லை.
படிப்பும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் வீட்டுக்கு அழைத்து விடலாம் என்று கூட ஒரு நொடியில் எண்ணிவிட்டார்.
அந்தளவுக்கு அவளில்லாத வீடு மழையின்றி வறண்டுபோன பூமி போலவே இருந்தது அவரை பொறுத்தவரையில்!
உயிர்ப்பின்றி போன இடம் அவளால் மட்டுமே உயிர்ப்படையும்!
மகள் குரல் கேட்டு தாளமுடியாமல் இணைப்பை துண்டித்து அறைக்குள் முடங்கியவருக்கு மனைவியின் அழுகையும் அவளை சமாதனம் செய்யும் தாயின் பேச்சும் தெளிவாகவே கேட்க, நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது.
இதை எப்படி யோசியாமல் போனார்?? படிப்பதற்காக ஊர் விட்டு ஊர் போனதையே தாங்க முடியாமல் இருக்கும் தான், ‘எப்படி திருமணம் செய்து கொடுத்து அவளை அனுப்பி வைப்பேன்? அதற்காக காலம்பூராவும் தன் சிறகுக்கடியிலேயே வைத்திருக்கவும் முடியாதே!’
காலாகாலத்தில் அவளுக்கு ஒரு நல்லது செய்ய வேண்டும் அல்லவா?
இந்த எண்ணம் வந்த பிறகு ஓரளவுக்கு தன்னை சமாதனம் செய்து கொண்டாலும் இடையிடையே ‘வீட்டோடு மாப்பிள்ளை பார்த்து கட்டிக்கொடுத்தால் தான் என்ன!’ என்ற எண்ணம் தோன்றாமலுமில்லை.
காலத்தின் கரங்களில் கவலைகளை ஒப்படைத்தவர் அது செல்லும் வழியிலே பயணிக்க முடிவெடுத்து விட்டார்.
அப்படியே நாட்களைக் கடத்தியவர் மகள் ஊருக்கு வரும் செய்தி கேட்டு அடைந்த மகிழ்விற்கு வார்த்தைகள் இல்லை.
இளந்தாரிப்பிள்ளை போல் நடையில் துள்ளல் அகத்தில் மகிழ்வு என்று நாட்களை எண்ணிக் கொண்டு இருந்தவர், இதோ அவளை அழைத்துக்கொண்டு வீடு நோக்கி செல்கிறார்.
அவரின் மகளோ பார்த்திட ஏங்கிய பச்சைக் கம்பளம் போர்த்திய வயல்வெளிகள் ஆதவன் வருகையில் பரவிய இளவெயிலில் தங்கம் போலே தகதகத்து கண்ணுக்கு குளிர்ச்சி அளித்ததில் தன்னையும் மறந்து இயற்கை அன்னையின் எழிலின் பால் உறைந்து நின்றாள்.
‘ஏய் பச்சை பெண்ணே! உன்னைய பார்க்காம எம்புட்டு வெசனப்பட்டேன் தெரியுமா? இதுக்குத்தேன் எனக்கெல்லாம் படிப்பு ஒத்துவராது நான் இங்கிட்டே இருக்கேன்னு அப்பா கிட்ட எவ்ளோ எடுத்து சொன்னேன்... சரி விடு, நடந்தத மாத்தவா முடியும்? இந்த வாரம் முழுசும் உன்னையே தெனமும் பார்த்து என் கவலையெல்லாம் ஆத்திக்கிறேன்....’
வெயிலோடு விளையாடிய வயல் வரப்பில் லாவகமாக நடைபயின்றவள் அறுவடைக்கு தயாரான கதிர்களை தொட்டு தடவிக் கொடுக்க, “ஏய், யாருல அது? வெளச்சளுக்கு ஆயத்தமான கதிர தொட்டு தடவுறது...?” கோபம் வந்தவராக முறுக்கு மீசைக்காரர் ஒருவர் வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு அவளை நோக்கி வந்தார்.
“அடி ஆத்தி! இத நானும் எங்கிட்டு போய் சொல்றது ஊரு விட்டு ஊரு போன பிள்ள பலநாள் கழிச்சு ஊருக்கு வந்து, வயக்காட்ட பார்க்க வந்தா நீங்க இப்பிடித்தான் வெரட்டுவீகளோ?”
‘தெரிஞ்ச குரலாட்டம் இருக்கே!’ யோசனையுடன் வந்த முறுக்கு மீசைக்காரர் அனிகாவை எதிர்பார்க்கவில்லை என்பதை ஆச்சரியத்தில் மலர்ந்த அவர் முகமே எடுத்துக்காட்டியது.
“அடடா அனி கண்ணு!! எப்போ கண்ணு ஊருக்கு வந்த? வரத சொல்லவுமில்ல... உன் அப்பங்காரன் வரட்டும் அவனுக்கு இருக்கு!” பொய்க்கோபம் பூண்டு மீசையை முறுக்கி விட்டவர் கனிவும் மகிழ்வுமாக அனிகாவின் சிரம் வருடிக்கொடுக்க, அவர் பாசத்தில் நனைந்தவள், “எப்படி இருக்கிய மாமா? ரங்கத்தை, மஞ்சு எல்லாரும் எப்பிடி இருக்காங்க?” அவர் மனைவி மகளான தன் தோழியினதும் அம்மாவினதும் நலம் விசாரித்தாள்.
“அவுகளுக்கு என்ன எல்லாரும் நல்ல சௌக்கியமா இருக்காக கண்ணு. நீதான் வெளியூர் போனதும் இளச்சி தெரியிற!”
“அததாம்ல பாண்டி நானும் கண்ணம்மா கிட்ட சொன்னேன்.” என்றபடி அவர்களோடு ஐக்கியமானார் கதிர்வேலன்.
மனதில் மகள் உடல் ஆரோக்கியம் குறித்த் கவலை மலையளவு எழுந்து அவரை வாட்டியது. தம்பி குடும்பத்தை அவர் என்றைக்கும் குறை சொல்ல மாட்டார். அவர்களுக்கு அனிகா மீது எந்தளவு பாசம் என்பதை அவரும் அறிவாரே!
அவர் கவலை எல்லாம் மகளின் விளையாட்டுத்தனம் குறித்தே! இங்கென்றால் வாசுமதி அவள் பின்னால் அலைந்து திரிந்து எப்படியும் உணவை ஊட்டி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பாள். அங்கு படிக்க போகும் பிள்ளை அவசரத்துக்கு அறையும் குறையுமாக உண்டு விட்டு சென்றிடுவாள். இதற்கேதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டார்.
“அப்பா! மாமா தான் சும்மா சொல்லுறாருன்னா நீங்க வேற... இப்பொல்லாம் முன்னைய விட அதிகமாத்தேன் சாப்புடுதேன். நீங்க கவலைப்பட்டு உடம்புக்கு இழுத்து விட்டுக்காதீங்க.” தகப்பன்சாமியாக மாறி தந்தையை அதட்டியவள்,
“சரி மாமா, சாயங்காலம் மஞ்சுவ பார்க்க வீட்டுக்கு வரேன்னு அவளுக்கிட்ட சொல்லிடுங்க. ஒரே கசகசன்னு இருக்கு நான் வீட்டுக்கு போறேன். அப்பா நீங்களும் சீக்கிரம் வந்திருங்க அம்ஸு காத்துக்கிட்டு இருக்கும்...” வம்படியாக கதிரின் கையிலிருந்த பையை வாங்கிக்கொண்டு ஒரே ஓட்டமாக வீடு நோக்கி ஓடிவிட்டாள் அனிகா.
“பார்த்து போ கண்ணு...” கதிர்வேலனின் காட்டுக்கத்தல் காத்தோடு கரைந்து போனது.
“அவளுக்கு தெரியாதா அதெல்லாம் புள்ள போய்க்கும்... நீ அவள நெனச்சு வெசனப்படுறத நிறுத்து முதல்ல. உடம்பு எதாவது இழுத்துக்கு விட்டுக்க போற?” சிநேகிதனாய் அதட்டியவர், “நல்ல வரன் ஒன்னு கைவசம் இருக்கு புள்ளக்கு பேசி முடிக்கிறியா?”
“இப்போத்தானேடா படிக்க போயிருக்கு... கொஞ்ச காலம் போவட்டும் அப்புறம் பார்த்துக்கலாம்.” என்றவர் நேரம் ஆகியமையால் சரி பாண்டி நான் கிளம்புதேன் கண்ணம்மா நான் பசியோட இருக்கும்.” என்றவர் நண்பனிடம் விடைபெற்று நடையை எட்டிப்போட்டார்.
“ஷா லா லா ஷா லா லா
ரெட்டை வால் வெண்ணிலா
என்னை போல் சுட்டிப்பென் இந்த பூமியிலா
செ செ செ செவ்வந்தி
என் தோழி சாமந்தி
வெற்றிக்கு எப்போதும் நான் தானே முந்தி
ஷா லா லா ஷா லா லா
ரெட்டை வால் வெண்ணிலா
என்னை போல் சுட்டிப்பென் இந்த பூமியிலா”
கருநாகம் போல் நீண்டிருந்த கருங்கூந்தல் அவள் அசைவுகளுக்கேற்ப கதகளி ஆட, பாடலும் ஆடலுமாக வீட்டுக்கு ஓடி வந்த அனிகா முற்றத்தில் அமர்ந்து வெத்திலை குதப்பிக்கொண்டிருந்த தன் கிழவியைக் கண்டு கண்கள் கலங்கிய போதும் காட்டிக்கொள்ளாமல் காத்து அவர் முன் குதித்தவள், “ஏய் கிழவி!” கூவினாள்.
திடீரென கேட்ட குரலில் உள்ளூர அதிர்ந்தாலும் மாதங்கள் பல கழித்து பேத்தியை கண்ணாரக் கண்டதிலும் அவள் குரல் கேட்டதிலும் கண்கள் உடைப்பெடுக்க, அதை அவள் முன் வெளிக்காட்டாமல் முறைப்பெண்ணை முறைப்பது போல முறைத்தவர் “எந்த எடுபட்ட சிறுக்கிடி அது என்னைய கெழவிங்கறது?” வழக்கம்போல் எகிறினார்.
‘அட கிழவிக்கு ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம் போல... அது அழுறத நான் கண்டுபிடிச்சிடக் கூடாதுன்னு என்னம்மா நடிக்குது பாரேன்!’
‘உன்னை நான் அறிவேன்!’ எனும் ரீதியில் பாட்டியை குறுகுறுவென பார்த்தாள்.
பேத்தியின் பார்வையில் அவள் தன்னை கண்டு கொண்டதை அறிந்து கொண்டவர், உள்ளூர அசடு வழிந்தாலும் அவள் முன் காட்டிக்கொள்ளாமலும் “மருமவளே! உன் மவ வந்திருக்கா சீக்கிரம் வாடிம்மா...” வாசுமதிக்கு ஏவல் விடுத்தார்.
மகளுக்கென்று அவளுக்கு பிரியமான உணவுகளை எல்லாம் ஒத்தாசைக்கு கூட யாரையும் அனுமதியாமல் ஒத்தை ஆளாய் சமைத்துக்கொண்டிருந்த வாசுமதி, மாமியாரின் குரல் கேட்டு நெஞ்சம் விம்மித்தணிய மகளைக் காண பாய்ந்தோடி வந்தார்.
அத்தனை துடிப்பும் தவிப்பும் அவரில்!
அவருக்கு சளைக்காத உணர்வுகளின் கலவை அவள் பெறாத மகளிலும்!
கண்கள் நான்கும் கட்டுகடங்கா பல கதைகள் பேச... கன்னம், தாடை, தலை தடவி... வருடி... பாச முத்தங்கள் சில பதித்து, பார்வையால் அவளை அளந்து, நெஞ்சத்தின் கட்டுக்கடங்கா தவிப்பை போக்கியவர் அவளை உள்ளார அழைத்துச்சென்று, “போய் குளிச்சிட்டு வா கண்ணம்மா... சாப்பாடு எடுத்து வைக்கேன், சாப்பிட்டு கொஞ்ச நேரம் தூங்கி எழு, களைப்பெல்லாம் பறந்து போய்டும்!” பரிவாகக் கூறினார்.
தாயின் கரிசனையில் கண்ணீரில் கண்கள் நனைய, “ம்மா!” கதறலோடு கட்டியணைத்தவள் காணாத ஏக்கத்தை எல்லாம் கண்ணீரில் கரைத்தாள்.
“என்ன கண்ணம்மா இது சின்ன குழந்தையாட்டம்! அழுறத நிறுத்துடா.” முதுகை வருடி சமாதனம் செய்தவர் “போ... போய்க் குளிச்சிட்டு வாடாம்மா.” என்றவர் சமையல் கட்டுக்குள் நுழைந்து கொண்டார்.
அவருக்கும் தனிமை தேவைப்பட்டது. சமையல்கட்டுக்குள் நுழைந்தவர் கண்கள் விடாமல் கண்ணீர் சொறிய, சேலை தலைப்பால் துடைத்தும் அது நிற்க மறுத்தது.
அப்போது தான் கதிர்வேலன் வீட்டினுள் நுழைந்திருந்தார். வாசலில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்த தாயைக் கண்டு பதறினாலும் காரணம் அறிந்தமையால் அவரை சமாதானப்படுத்தி கையோடு தன் வசுவையும் தேற்றவே உள்ளே வந்தவர் தான் எண்ணியது போலே கண்ணீரில் கரைந்து கொண்டிருக்கும் மனைவியைக் கண்டு ஆறுதலுடன் கண்ணீர்க்கரை துடைத்து விட்டார்.
“என்ன வசு, நீ இப்பிடி அழுதா கண்ணம்மா வெசனப்படுமா இல்லயா? பிள்ள பல நாளைக்கு பொறகு ஊருக்கு வந்திருக்கு, சந்தோஷமா இருந்திட்டு போவட்டுமே! அம்மாகிட்டயும் இதேதான் சொல்லிட்டு வந்திருக்கேன்.” எனவும் தன் தவறு புரிந்து வலியப் புன்னகையை பூசிக்கொண்டது அவர் முகம்.
“போ! போயி சாப்பாடு எடுத்து வை கண்ணம்மா வரட்டும் சேர்ந்து சாப்பிட்டலாம்.” என்றவர் கைகால் அலம்பச் செல்ல, அவர் முன் ஓர் கை செம்பை நீட்டிக்கொண்டிருந்தது.
வேறு யார் நம் அனிகாவே தான்! தந்தை வரும் நேரத்தை கணித்து அவசர அவசரமாக குளித்து ஓடி வந்திருந்தாள்.
என்னதான் மற்றவர்களை சமாதானம் செய்திருந்தாலும் அவருக்குள்ளும் கவலைகள் உண்டல்லவா...? அக்கைகளுக்கு சொந்தக்காரியான தன் மகளை ஆதூரத்துடன் பார்த்தவர், வழமைபோல் அவள் கையாலே கொடுத்த செம்பிலிருந்த தண்ணீரைக் கொண்டு முகம், கைகால் அலும்பியவர் சாப்பாடு கூடத்திற்கு மகளோடு நுழைந்தார்.
பிரயாணம் செய்த களைப்போடு இருந்தவள் காலையுணவை அளவோடு உண்டு விட்டு உறங்கச் சென்று விட்டாள்.
மகளோடு பல கதைகள் பேச ஆசையிருந்தும் அவள் களைப்பை உணர்ந்து மதியவுணவுக்கான வேலையில் ஈடுபட ஆரம்பித்து விட்டார் வாசுமதி.
கதிர்வேலன் இடையில் ஒரு தரம் வெளியில் சென்று வந்தவர் அதற்கு பின் வீட்டை விட்டு அங்கிங்கு அசையவில்லை.
ரெங்கநாயகி ஆட்களுக்கு வேலை ஏவுவதும் வெத்திலை குதப்புவதும் அடிக்கடி அனிகாவின் அறையை நோட்டம் விடுவதாகவும் பொழுதை போக்கிக் கொண்டிருந்தார்.
இடையில் அனிகா பத்திரமாக வந்து விட்டாளாவென அழைப்பெடுத்த கார்த்திக்கிடம் அவள் பத்திரமாக வந்து விட்டதாகவும் களைப்பில் உறங்குவதாகவும் கூறியவர்கள் பார்வதிக்கும் அழைத்துப் பேச தவறவில்லை.
சும்மாவே கும்பகர்ணியாக உறங்கும் அனிகா, பயணக்களைப்பில் பலமணி நேரம் படுக்கையை விட்டும் எழப் பிரியப்படாமல் படுத்துறங்கியவள், ஒருவழியாக மதியச்சாப்பாட்டு நேரத்துக்கே உறக்கம் களைந்து எழுந்தமர்ந்தாள்.
என்னதான் காலேஜ் செல்ல வேண்டும் என்பதற்காக காயுவின் வற்புறுத்தலின் பேரில் ஆடை அணிகளை மாற்றியிருந்தாலும் ஊருக்கு வந்ததும் தன் ஆஸ்தான தாவணியையே அணிந்து கொண்டாள்.
அதிலெல்லாம் அவள் என்றுமே பெற்றோர் போற்றும் பிள்ளையே!
சோர்வுடன் எழுந்தவள் செல்போனில் நேரம் பார்க்க ஒன்றை தொட ஐந்து நிமிடங்கள் இருந்தது.
‘இவ்வளவு நேரமா தூங்கிட்டேனா? வர வர கும்பகர்ணனுக்கு போட்டியா மாறிக்கிட்டு இருக்கேன்.’ சோம்பல் முறித்த வண்ணம் எண்ணிக்கொண்டவள், காயுவின் ஞாபகம் எழவே உடனே அவளுக்கு அழைப்பெடுத்தாள்.
இவள் அழைப்பிற்காக நெடுநேரமாக காத்திருந்திருப்பாள் போலும்!
முதல் ரிங்கிலே எடுத்தவள், காச்மூச்சென காத்த ஆரம்பித்து விட்டாள்.
‘தொடங்கிட்டா... இது தொல்ல தாங்க முடில!’ காதை தேய்த்துக் கொண்ட அனிகா “எதுக்குடி இந்த கத்து கத்துற?” தாங்கமுடியாமல் கேட்டாள்.
“கத்துறேனா?? உனக்கு இப்போ அப்பிடித்தான்டி இருக்கும். ஊருக்கு போனதும் என்னையும் மறுந்துட்ட, நான் சொன்னதையும் மறந்துட்ட!”
‘அய்யோ என்ன சொன்னா இவ? ஞாபகம் வரமாட்டேங்குதே!’ தலை பிய்க்காத குறையாக யோசித்தும் நினைவுக்கு வரமாட்டேனென்று அதுவேறு அடம்பிடிக்க, இருந்தும் அவளை சமாளிக்க வேண்டி,
“யாரு சொன்னா நான் மறந்துட்டேன்னு, அதெல்லாம் எனக்கு நன்னா ஞாபகம் இருக்கே!” வான்டட்டாக வசமாக சிக்கிக்கொண்டாள் அனிகா.
“அப்போ சொல்லு. நான் என்ன சொன்னேன்?” கிடுக்கிப்பிடி போட்டாள் காயு.
“அது வந்து... அதான்... நீ சொன்னியே. அதாவது...”
“நீ இன்னமும் சொல்லல செல்லம். சொல்லு சொல்லு...”
“ஹிஹி பேபி, என்னைய பத்தி உனக்கு தெரியும்ல. நான்தான் எல்லாத்தையும் மறந்துடுவேனே... ஞாபக படுத்தேன் பேபி.”
“போனா போகுதுன்னு சொல்றேன்! ஊருக்கு போனதும் போன் பண்ணுன்னு சொன்னேன்ல... சரி சரின்னு மண்டைய மண்டைய ஆட்டிட்டு போன் பண்ணியாடி? நல்லா சாப்ட்டு தூங்கி இருப்ப?”
“ஓ... இதானா? நான்கூட என்னவோ ஏதோவொன்னு பயந்துட்டேன்.” என்றவள் சிறு இடைவெளி விட்டு, “ஆமா, அது எப்பிடி உனக்கு தெரியும்? பக்கத்திலிருந்து பார்த்தவளாட்டம் அப்பிடியே சொல்ற?”
“எத?”
“அதான்டி, இப்போ சொன்னியே... நல்லா சாப்ட்டு தூங்கின்னேனு. அத பத்தி கேக்குறேன்.”
“இதுக்கு பேர் தான் போட்டு வாங்குறது.”
‘ச்சே...’ பல்லைக் கடித்தவள், “அப்போ நானாவே உன்கிட்ட உளறிட்டேனா?” சிணுங்கியவள், “ஆனாலும் பேபி, நீ அநியாத்திற்கு என்கூட சேர்ந்து கேட்டுப்போய்ட்ட...” கடுப்படித்தாள்.
“ஏய்! ச்சீ... அசிங்கமா பேசாதடி.”
“அடிங்...” அதட்டியவளுக்கு சிரிப்பு வர, அந்தப்பக்கம் காயுவின் வெடிச்சிரிப்பும் கேட்டது இவளுக்கு!
ஒருவழியாக இணைப்பை துண்டித்த அனிகா வெளியே செல்ல எத்தனிக்கும் போது, அவளை அழைக்கவென்று உள்ளே வந்தார் வாசுமதி.
“நல்லா தூங்கினியா கண்ணம்மா? அப்போவே வந்தேன் அசந்து தூங்கிட்டு இருந்த அதான் எழும்போது எழட்டுன்னு போயிட்டேன்.” கூறியவரின் தோளில் வாகாய் சாய்ந்து கொண்டவள், “ராத்திரி முழுசும் தூக்கம் வரமாட்டேன்ச்சா அதான் நல்லா தூங்கிட்டேன்...” சலுகையாய்க் கூறினாள்.
மகளிற்காக கதிர்வேலனும் கூடத்தில் காத்திருந்தார்.
அவருடன் இணைந்து கொண்டவள் தயங்கிய தாயையும் அருகமர்த்திக் கொண்டாள். ரெங்கநாயகி நேரத்தோடு சாப்பிட்டு முடித்திடுவார் என்பதால் மூவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணத் துவங்கினர்.
பறப்பன, நடப்பன, நீந்துவன எல்லாமும் அடுக்கடுக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
“அம்ஸ், என்ன நினச்சிட்டிருக்க நீ? என்னைய பார்த்தா உனக்கு எப்பிடி தெரிது?” அயிட்டங்களை அலசியவள் கடுப்புடன் கேட்டாள்.
மகள் திடீர் கோபத்தின் காரணம் புரியாத வாசுமதி அவளுக்கு பிடித்த வாத்துக்கறி சமைக்காததாலே கோபம் கொண்டிருக்கிறாள் என்றெண்ணி,
“என்னடா? வாத்துக்கறி வறுவல் இல்லன்னு கோபப்படுதியா? அப்பாகிட்ட எம்புட்டு தூரம் சொன்னேன், மறந்துட்டாரு. நாளைக்கு மொத வேலையா நம்ம வேலுக்கிட்ட சொல்லி வாத்தை வாங்கியாற சொல்லிறேன்.”
தாயின் பேச்சில் அழமாட்டாத குறையாக அமர்ந்திருந்தவள், அடக்கப்பட்ட சிரிப்பில் மீசை துடிக்க தட்டை எடுத்துக் கொண்டிருந்த கதிர்வேலனைக் கண்டதும் பொய்க்கோபம் பூண்டு “அப்பா!!!” அலறியவள் அடுத்த நொடியே தன்னையும் மறந்து பக்கென்று சிரிக்க, இணைந்து கொண்டார் கதிர்வேலன்.
தந்தை மகள் சிரிப்பின் காரணம் அறியாத போதும் வாசுமதியின் முகத்திலும் புன்னகை அரும்பி விரிந்தது.
அப்போது தான் உள்ளே நுழைந்து கொண்டிருந்த ரெங்கநாயகியின் முகத்தில் இவர்கள் மகிழ்வான முகம் தெளிவாக விழ ‘என் குடும்பம் என்னிக்கும் இதே சந்தோஷத்தோட இருக்கனும். எந்த கஷ்டத்தையும் கொடுத்துறாதே கடவுளே!’ இறைவனிடம் வேண்டுதல் வைத்தாலும் அவர் முகமும் சிரிப்பை வாங்கி அணிந்து கொண்டது.
சிரித்த சிரிப்பின் விளைவில் வயிறு வலியெடுக்க இரும தொடங்கியவளுக்கு தண்ணீரை புகட்டி காரணம் கேட்ட வாசுமதியிடம் காலை வரும் போது நடந்த சம்பாஷணைகளை கூற, வாசுமதியும் தன் மடத்தனம் புரிந்து அசட்டு சிரிப்பை உதிர்க்க... கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் ஒருவழியாக அவர்கள் மதியவுணவு இனிதே முடிந்தது.
அன்று மாலை வாசுமதியுடன் அமர்ந்து காலேஜில் நடந்த விஷயங்களை சுவாரஸ்யம் பொங்க கூறி மகிழ்ந்தவள், காயுவுடனும் அவரை பேச வைத்தாள். தன் கிழவியையும் மறக்கவில்லை அவள்.
இடையிடையே அவரையும் வம்பி பண்ணி திரிந்தவள், மஞ்சுவின் வீட்டுக்கு சென்று ரங்கத்தை, மஞ்சுவின் ஊரிலிருந்த வந்திருந்த அண்ணனுடன் அமர்ந்து பேசிவிட்டு தோழியுடன் ஆத்தங்கரைக்கு செல்ல... பல நாட்களுக்கு பின்னர் அவள் வருகையை கொண்டாடும் விதமாக மழை தன் அச்சாரத்தை மண்ணை நோக்கி வீசியது.
இருவருக்கும் அந்நொடி தங்கள் பால்ய காலம் நினைவில் எழ, சொல்லவும் வேண்டுமோ...? மழைப்பாடல்கள் எல்லாம் அவர்கள் வாயில் விழுந்து அரைபட, ஆட்டம் போட்டவர்களை அன்றுபோல் இன்றும் வாசுமதியின் தான் இழுத்துச்செல்லாத அழைத்துச்செல்ல வேண்டி இருந்தது.
“என்ன அனிம்மா? ஊருக்கு வந்த பிள்ளயோட கலகலப்பா இருக்கலாம்னு பார்த்தா நீ ஜூரத்த இழுத்து விட்டுருவ போல...? ஆதங்கமாகக் கூறினார் வாசுமதி.
கதிர்வேலனும் ‘என்ன கண்ணம்மா இது!’ என்பது போல பார்த்துச்செல்ல, அவளுக்குத்தான் கவலையாகி விட்டது.
ரெங்கநாயகியும் “இன்னும் என்ன சின்ன குழந்தையாட்டம்!” அதட்டிச்செல்ல, உம்மென்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்து விட்டாள் அவள்.
அதன்பின் அவளை சமாதானம் செய்வதற்குள் அவர்களுக்கு போதும் போதுமென்றாகி விட்டது.
அன்று மட்டுமல்ல அதன்பின் வந்த நாட்களும் கலகலப்பிற்கும் மகிழ்விற்கும் குறைவில்லாமல் மின்னல் வேகத்தில் கடந்து செல்ல, அவள் கிளம்ப வேண்டிய நேரமும் வந்தது.
இன்றும் ரெயிலில் செல்லவேண்டும் என்று அனிகா அடம்பிடிக்க, பர்ஸ்ட் கிளாஸ் கோச்சில் டிக்கெட்டை எடுத்திருந்தார் கதிர்வேலன்.
தானும் உடன்வந்து விட்டுச்செல்வதாக அவர் எவ்வளவு கூறியும் அவரின் உடல்நலத்தை கருத்தில்கொண்டு அலைச்சல் வேண்டாம் என்று ஒரேயடியாக மறுத்தவள், தான் தனியாகவே சென்று விடுவதாகவும் கார்த்திக் ஸ்டேஷனில் காத்திருப்பான் என்றும் தனக்கு பயம் இல்லை என்றும் கூறி, தன் முடிவை ஸ்திரமாக்கிக் கொண்டாள்.
ஆளாளுக்கு ஆயிரம் பத்திரம் கூற, போதாதற்கு வீட்டு வேலையாட்களும் தங்கள் பங்கிற்கு ‘கவனமாக போய்ட்டு வாங்க சின்னம்மா!’ என்று விடைகொடுத்திருக்க, அனைவரிடமும் கண்கள் கலங்க விடைபெற்று தந்தையுடன் வந்து ரெயிலேறினாள் அனிகா.
இந்த ஐந்து நாட்களும் எப்படிப் போனதென்று கேட்டால் என்ன சொல்வதென யோசித்துப்பார்க்க வேண்டி இருக்கும் அவளுக்கு!
இனிப்போடு காரத்தை உண்ட காலம் இது அவளுக்கு!
இன்பமும் துன்பமும் கலந்துகட்டி அவளை பந்தாடியது!
‘எப்போதடா தன் கல்லூரிக்காலம் முடிவுக்கு வரும்?’ என்ற ஏக்கம் அவளில்!
பெரும் விசில் சத்தம் காதை அடைக்க... வண்டி கிளம்பும் நேரம் வந்ததும் தன்னையே பார்த்து நின்ற தந்தையை வீட்டுக்குச் செல்லுமாறு பணித்துக்கொண்டே கையாட்டி விடை பெற்றவள், ஜன்னல் கண்ணாடியில் தலை சாய்த்துக் கொண்டாள்.
முடிகளின் சில கற்றைகள் கன்னத்தை மறைக்க கண்ணீரின் ஓர் துளி கன்னம் தொட்டு, கழுத்தின் வழி பயணிக்க... கவலையை களவாடிக்கொண்ட அவள் முகம் சோர்ந்து போயிருந்தது.
என்னதான் வெளியில் கலகலப்பாக தைரியசாலியாக காட்டிக்கொண்டாலும் உறவுகளின் மீதான இளக்கம் சொல்லும் அவள் கோழையென்று!
கண்ணீரின் பெருவெள்ளத்தை துடைக்கக்கூட தோன்றாமல் தொலைவானை வெறித்திருந்தாள்!
“செர்ரி!! உன் சோகம் சூறாவளியா என்னையும் தாக்குது! இந்த கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் சிந்தினாலும் என்னால தாங்க முடியாது செர்ரி!” ஆத்மார்த்தமாக அகம் உரைக்கும் சன்னக்குரல் கண்மூடி அமர்ந்திருந்த பாவை காதில்!
சோகத்தின் தாக்கம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போய் அவள் இதயத்தில் காதல் தன் ஸ்வரம் மீட்டியது!
இதே ரெயிலில் அன்று தன் கனவில் வந்த மன்னவன் சொல்லி அழைத்த பேர் செவி தன்னிலே விழுந்த கணம், இவ்வைந்து நாட்களும் இரவுகளின் இனிமையில் நித்தம் தோன்றி தன் இதயத்தை வதைக்கும் வில்லனின் நினைவுகள் எம்பி எழுந்து அவள் நெஞ்சத்தை தாலாட்ட, “என்னால அவங்கள பிரிஞ்சு இருக்க முடியிறதில்ல... நான் அவங்கள ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன், வில்லன்!” அதே சன்னக்குரலில் தன் மனதிள்ளோனிடம் மனதை வெளிப்படுத்தினாள் அவன் மனதிற்கினியவள்!
“வில்லன்!?!” அதிசய ஆர்ப்பரிப்புடனான ஓர் குரல் மீண்டும் அவள் காதுகளில்!
அதே நேரத்தில்...
“வில்லன்!?!” தன் அகத்தில் இருப்பவன் குரல் நிஜத்தில் செவியில் ஒலித்தது கண்டு, கனவென்று எண்ணி கவலை மொழிந்தவள் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன் நிமிர்ந்து நோக்க... அங்கு அவளுக்கெதிரே ஆறடி ஆண்மகன் அவன் அலட்டலின்றி அமர்ந்திருந்தான்!
அவளின் வில்லன்!
அதிர்ந்தே போனாள் அவள்!
அவனொருவன் உள்ளே வந்ததைக் கூட கவனத்தில் கொள்ளாமல் கவலையில் அமர்ந்திருந்தேனே!
உண்மையிலே இங்கு இருக்கிறானா? அல்லது அன்று நிஜம் போலவே கண்ட கனவா?
தான் வில்லன் என்றது செவியில் விழுந்திருக்குமா? என்ன நினைத்திருப்பான்? என்ன சொல்வான்? திட்டுவானோ? சும்மாவே தன்னைக் கண்டால் எடக்குமடக்காக எதையாவது செய்து என்னை குழப்புவான். இன்று என்னோடு ஒரே கோச்சில்!! என்ன நடக்க போகிறதோ?
ஏகப்பட்ட எண்ணங்கள் ஓர் நொடியில்!
அதிர்ச்சி, ஆச்சரியம், ஆசை, ஆவல், காதல், குறுகுறுப்பு, குழப்பம், பயம், பதட்டம், படபடப்பு, எதிர்பார்ப்பு!
இத்தனை உணர்வுகளும் அவள் ஒருத்தியில்!
அதேசமயம், ‘செர்ரி!’ என்று அழைத்ததும் இவனே தானா? இவனுக்கு எப்படி தன் கனவில் வந்த, தான் மட்டுமே அறிந்த பேர் தெரிந்தது? என்ற எண்ணமும் மூளையை வண்டாகக் குடைந்தது.
சொல்லில் வடிக்க முடியாத உணர்வுகள் சொக்கனின் மீனாட்சியை சொட்டு சொட்டாகத் தாக்க சோர்ந்தே போனாள் அனிகா.
“ம்ம்... டேக் இட்!” வாட்டர் பாட்டால் ஒன்றை அவள் புறமாக நீட்டினான் அவன்!
தயங்கித் தயங்கித்தான் வாங்கினாள்.
இப்போதைய அவள் நிலைக்கு இந்த தண்ணீர் அவசியமாகப்பட மறுப்பு தெரிவிக்காமல் தொண்டைக்குள் சரித்தாள்.
நீரின் நுழைவு அகம் நுழைந்த உணர்வுகளை சற்றே போக்க, கனவல்ல நிஜமென்று உணர்ந்து கொண்டவள் குறுகுறுவென பார்வை அவனில் நிலைக்க அறிந்துகொள்ள வேண்டி, “என்னை என்னவோ சொல்லி கூப்ட்டியே? உனக்கு எப்பிடி அந்த பேர் தெரியும்?” அவன் முகத்தை அளந்தபடி கேட்டாள்.
உள்ளத்து படபடப்பை வெளிக்காட்டாமல் மறைத்து அவள் கேட்டாலும் அவளின் அவன் கண்களுக்கு தப்பவில்லை அது!
கருமணிகள் அலைபாயும் அழகும் இதழோரம் துளிர்த்த வியர்வையின் எழிலும் விரல் நகங்கள் ஆராயும் கைகளின் பதட்டமும் ஆண்மை பொருந்தியவன் அவன் கண்களில் விழாமலில்லை.
அவளின் அச்செயல்கள் ஆணின் அகத்தை ஈர்த்துச்செல்ல ரசனையுடன் அளவிட்டான் அவளை!
அவன் முதன் முதலில் பார்த்தது போலே பட்டிக்காட்டின் மொத்த உருவமாக அவள்!
அவள் உடுத்திருந்த உடையின் நிறம் அத்தனை பொருத்தமாகவும் எடுப்பாகவும் அவளின் அழகை தூக்கிக் காட்டியது!
பின்னலிட்ட கூந்தல்! ஒப்பனையற்ற முகம்! இருந்தும் பட்டிக்காட்டு மைனாவின் ஒப்பில்லாத எழிலில் மொத்தமாய் வீழ்ந்து போனான் ஒய்யாரமாய் அமர்ந்திருந்த ஒப்பில்லாதவன்!
அவனின் அவளுமே கேள்விக்கான பதிலை எதிர்பார்த்தபடி கடைக்கண் பார்வையால் ஆளுமையின் அம்சமாய் அமர்ந்திருந்தோன் அழகினை விழிகளினால் இதயம் அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தவள் தன்னை மறந்து அவனில் மூழ்கிப்போய் அகத்தை அடகு வைத்து விட்டாள்.
என்றும் பார்மல் கோட்சூட்டில் ஒபீசியல் லுக் கொடுப்பவன் இன்று அதிசயத்திலும் அதிசயமாக காஸுவல் உடையில் இன்னம் சற்று கவர்ச்சி கூடித்தெரிய தறிகெட்டுத்தான் போனாள் அவளும்!
ஒருவருக்கு ஒருவர் பொருத்தமில்லாத இருவர் மற்றவர் அறியாமல் ஒருவரை ஒருவர் ஒப்பீடு செய்தவர்கள் தங்களின் இதயத்தை தத்தம் இணைகளுக்கு தாரைவார்த்துக் கொண்டிருந்தனர்.
“எதுக்கு இப்போ இப்பிடி பார்க்குற?” உடல் பூராவும் ஊடுருவிச்செல்லும் அவன் பார்வையில் நடுங்கிச் சிலிர்த்த உடலை அடக்கிக்கொண்டு அதட்டலாக கேட்டாள்.
“நீயும் தானே பார்த்த?”
‘நான் பார்த்ததை பார்த்துவிட்டானா? என்ன சொல்லி சமாளிக்கிறது?’ யோசனையுடன், “நீ பார்த்தீல்ல அதத்தான் நான் பார்த்தேன்!”
“அதே தான் நானும் பண்ணேன்! நீ பார்த்த... பதிலுக்கு நானும் பார்த்தேன்!”
‘இதற்கு என்ன சொல்வது?’ தெளிந்திருந்த தன்னை குழப்பி விட்டவனை குழம்பிப்போய் பார்த்தாள் அனிகா.
மங்கையின் மான்விழிப் பார்வையில் மயங்கியவன் மயக்கத்தோடு மாதுவை நோக்கினான்!
காளையின் காதல் பார்வையில் காரிகை காதலாகி காதலோடு காதலனை நோக்கினாள்!
ஒரு நொடி ஒரே நொடி
உன் பார்வை பார்த்தேன்!
அதே கணம் அதே ஷணம்
அடி உயிர் வரை வேர்த்ததே!
அடடா இரு இதயம் இங்கே தடம் புரண்டதே!
மனசுக்குள் கைக்கலப்பு நடக்கின்றதே!
கண்ணுக்குள் சம்திங் சம்திங் நடக்கின்றதே!
ஐயோ இனி ஆரம்பம் ஆச்சு
காதல் சடுகுடு சடுகுடு...!
தொடரும்...
ஹாய் பிரெண்ட்ஸ், 'என் விழியை நீங்கி நீ விலகாதே' கதைக்கான கருத்துக்களை இந்த திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்... அன்புடன், ஶ்ரீகலா :)
www.srikalatamilnovel.com