'என் விழியை நீங்கி நீ விலகாதே'
அத்தியாயம் 04
‘அவன் எதுக்கு என்னைய திடீர்னு சிஸ்டர்னு சொன்னான்.... பியூன் கூப்பிட்டு போனதுக்கு அப்றோமாத்தேன் அவன் சிஸ்டர்னு சொன்னான்... ஒருவேளை யாராவது சிஸ்டர்னு சொல்லுன்னு மிரட்டியிருப்பாய்ங்களோ அப்பிடியே மிரட்டி இருந்தாலும் யாரா இருக்கும்... அதயும்விட இவனுங்க மிரட்டி சொல்ல வைக்கிறளவுக்கெல்லாம் நானு வெர்த்தில்லியே...’
கல்லூரி துவங்கிய முதல் நாள் தலையை பிய்த்துக் கொண்டவள் தான் இன்னும் அதற்கான பதில் தான் அவளுக்கு கிடைக்கவே இல்லை.
முதல் நாள் பேராசிரியர்கள் அறிமுகபடலத்துடனே வகுப்பை ஆரம்பித்திருக்க சீனியர்களிடமிருந்து விடுபட்டு வகுப்பறையை அடைந்தவள் காலியாக இருந்த இடத்தில் அமர்ந்து கொண்டாள்.
அருகில் இருந்த இளம் பெண் புதிய கல்லூரியின் பயத்தில் பேந்த பேந்த விழித்துக் கொண்டிருக்க அவளை பார்த்து பாவப்பட்ட அனிகா “ஹாய்... ஐ அம் அனிகா... ஷார்ட் அன்ட் ஸ்வீட்டா அனி...” தன்னை தானே அறிமுகபடுத்திக் கொண்டாள்.
அனிகாவின் இலகுவான பேச்சில் புன்னகையில் விரிந்தது அவள் இதழ்கள்.
“என் பெயர் காயத்திரி....”
ஏனோ அனிகாவிற்கு அப்பெண்ணை பார்த்தும் பிடித்து விட்டது. சில உறவுகள் விதியின் வசத்தில் வரமாய் அமையும். சில உறவுகள் சாபமாய் அமைந்துவிடும். அனிகாவிற்கு காயத்திரியின் நட்பு வரமாய் அமைந்தது.
“வாவ்... ஸ்வீட் நேம் உன்னை மாதிரியே... ஆனா ரொம்ப நீளமா இருக்கே... ஆ... எஸ்.... நான் இனிமே உன்ன காயுன்னு தான் கூப்பிடுவேன் ஓகேவா....”
இயல்பாய் கூறி கை நீட்ட அவளின் பேச்சு மனதிற்கு ஆறுதலளிக்க கரம் பற்றி கை குலுக்கினாள் காயத்திரி சரி எனும் தலையாட்டலுடன்.
ஒரு வழியாக முதல் நாளை நெட்டி தள்ளி முறித்தவர்கள் வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமாக மீண்டும் காலையில் நடந்த நிகழ்வுகள் அவள் மனதில் வலம் வந்தது. ஒரு வித யோசனையுடன் அனிகா வெளியேற அவளுடன் காயுவும் வெளியேறினாள்.
அனிகா எல்லோருடனும் சட்டென்று பழகினாலும் அவள் வகுப்பிலுள்ளவர்கள் விலகல் தன்மையுடன் ஒட்டியும் ஒட்டாமலும் உறவாடிக்கொள்ள அதை உணர்ந்து கொண்டவள் அதற்குமேல் யாரிடமும் வலிய சென்று பேசிக்கொள்ளவில்லை. காயத்திரி மட்டுமே அவளுக்கு போதுமாய் இருந்தது. மற்றவர்களிடம் புன்சிரிப்புடன் கடந்து விடுவாள். அதை யாரும் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. அவள் தங்களிடமிருந்து விலகி இருப்பதே தங்களுக்கு நல்லது எனும் வகையில் ஒதுங்கிக்கொண்டனர். அவளை பற்றி அறிந்ததினாலோ என்னவோ....
அன்று வீட்டிற்கு வந்தவள் முதல் நாள் கல்லூரி அனுபவத்தை சுவாரஸ்யம் பொங்க கூறி விழுந்து விழுந்து சிரிக்க மாலதியும் அவளின் நாடக பாணியான பேச்சில் அடக்க மாட்டாமல் சிரிக்க அனிகாவின் அன்றைய நாள் சில சுவாரஷ்யங்களுடன் நல்லவிதமாகவே கழிந்தது.
கல்லூரி செல்வது காயுவுடன் அரட்டை அடிப்பது வீட்டிற்கு வந்தால் சித்தியை வம்பிழுத்து அன்றைய பொழுதை ஓட்டுவது கார்த்திக்குடன் வெளியே செல்வது சித்தப்பாவுடன் வாக்கிங் என அவளின் நாட்கள் குறுகிய வட்டத்தினுள் இன்பகரமாய் சென்றது.
அன்று ஞாயிற்றுகிழமை... கல்லூரி விடுமுறை என்பதால் கனவில் அல்லு அர்ஜுனுடன் டூயட் பாடிக் கொண்டிருந்தவள் சோம்பலுடன் சற்று தாமதமாகவே எழுந்தமர்ந்தாள்.
கண்களை கசக்கி நீண்ட கொட்டாவியை வெளியேற்றியவள் முகத்தை மறைத்திருந்த கூந்தலை தலை சொரிந்து ஒதுக்கி மெத்தையில் கிடந்த மொபலை எடுத்து உதட்டை குவித்து செல்பி எடுத்தாள்.
‘பார்ரா தூங்கியெழுந்தும் அனி குட்டி எம்புட்டு அழகா இருக்கிறத...’ மொபைலில் மிளிர்ந்த நிழற்படத்தை பார்த்து தனக்கு தானே முத்தமிட்டுக் கொண்டவள் ‘நீயி அழகி தான்டி...’ கன்னத்தை பிடித்து கொஞ்சிக் கொண்டே வெட்க சிரிப்புடன் குளியறைக்குள் புகுந்தாள்.
தலைக்கு குளித்து தலை துவட்டிக் கொண்டு வெளியே வந்தவளுக்கு திடீரென ஊரின் ஞாபகமும் கூடவே தன் வீட்டின் எண்ணமும் எழ அத்தனை நேர உற்சாகமும் வடிந்து தான் போனது.
“அனிம்மா அசையாம ஒரெடத்தில நில்லுடா... தலைய துவட்டனும் இல்லன்னா சளி பிடிச்சிக்கும்...” தலை துவட்டும் அலுப்பில் வீட்டை சுற்றி ஓடும் அனிகாவை பார்த்து தலையில் அடித்துக்கொண்டு அவள் பின்னோடு ஓடுவார் வாசுமதி.
மூச்சு வாங்கிக் கொண்டு ஓடும் மருமகள் மீது பரிதாபமும் அவளை ஆட்டம் காட்டும் பேத்தியின் மீது கோபமும் வருவதில் வெற்றிலையை வாய்க்குள் குதப்பும் ரெங்கநாயகி,
“ஏழு கழுத வயசாகுது உருப்படியா ஒரு வேலை செய்யதெரியல...” கழுத்தை நொடித்துக் கொள்வார்.
அதை கேட்டு வாயை மூடிக்கொண்டால் அது அனிகா அல்லவே.
“ஏய் கெழவி... வாயிருக்குன்னு எட்டூருக்கு கேக்கிற மாதிரி கத்தாத சொல்லிப்புட்டேன்...”
“என்வாயி நான் கத்துறேன் உனக்கென்னடியம்மா”
“பாரு கெழவி ஒரு நாள் இல்ல ஒரு நாள் உன்வாய தக்கிறேனா இல்லையான்னு....”
“அது மட்டுக்கும் என்கையி வெத்தில போட்டுக்கு இருக்குமாக்கும்... வெளக்கமாத்தால விளாசு விளாசிட மாட்டேன்...”
“அதமட்டுக்கும் நான் வேடிக்கை பார்ப்பேன்னு கனவுல கூட நினச்சிடாத அம்புட்டுந்தேன் சொல்லிப்புட்டேன்...”
இதையெல்லாம் கண்டும் காணாமலும் கடந்து செல்வார் கதிர்வேலன். கோபப்படவே தெரியாதவர். அப்பிடியே வந்தாலும் மகளை கை நீட்டி ஒரு சொல் சொல்லிவிடமாட்டார். அந்தளவு அவள் மீது பாசம்.
அவர் அவள் மீது வைத்திருக்கும் பாசத்திற்கு சற்றும் குறைவில்லாதது தான் அவர் மேல் அவள் வைத்திருக்கும் பாசமும். அவள் வாலை சுருட்டிக்கொண்டு அடங்குவது அவரிடத்தில் தான்.
சடுதியில் நினைவுகள் பின்னோக்கி ஓடியதில் மனதின் கணம் தாங்காமல் தலையில் இருந்த துண்டு தரையில் நழுவி விழுந்தது.
சோர்வு எனும் ஒன்றே இல்லாதவர் போன்று காலை எழுந்தது முதல் பரபரப்பாய் வேலை செய்யும் அன்னையின் வாசமும் வயலில் இருந்து வீட்டுக்கு வரும் தந்தையின் ‘கண்ணம்மா’ என்ற அழைப்பும் காலை நேர பால் அபிஷேகத்தில் இருந்து காக்கும் அவளின் செல்ல பாட்டியின் நினைவும் சூரிய உதயத்தில் பொற்கதிர்களாய் மின்னும் வயல்வெளியின் பசுமையும் நினைவில் எழுந்து ஊர் நினைவை அதிகப்படுத்தியது.
பசுமையான நினைவுகள் கொடுத்த தாக்கத்தில் விழி கலங்க சோர்ந்து போய் கட்டிலில் அமர்ந்தவள், மறுகணமே உற்சாகத்துடன் வீட்டு எண்ணிற்கு அழைத்தாள்.
சமையல்வேலையில் ஈடுபட்டிருந்த வாசுமதி திண்ணையில் இருந்த தொலைபேசி இசைக்கவும் ‘இந்த நேரத்தில யாரா இருக்கும்..’ எண்ணியவாறு சேலை முந்தானையில் ஈரக்கைகளை துடைத்தவர் அழைப்பை ஏற்க வரும் முன்னமே திண்ணையில் அமர்ந்திருந்த ரெங்கநாயகி ரிசீவரை எடுத்து காதில் வைத்திருந்தார்.
“ஹல்லோ யாரு...” கணீர் குரல் அனிகாவின் செவியை ஙொய்யென தாக்கியது.
காதை குடைந்தவள் “எட்டூருக்கு கேக்கிற மாதிரி எதுக்கு இந்த கத்து கத்துற கிழவி...”
அந்த குரலிலே அது தன் பேத்தி என்பதை கண்டு கொண்ட ரெங்கநாயகியின் மனது பேத்தியின் குரலில் நெகிழ்ந்து போனது. காட்டிக்கொள்ளவில்லை.
“எவடி அவ என்னைய பார்த்து கிழவிங்கிறது... நீயி மட்டும் எங்கண்ணுல பட்ட தோலை உரிச்சுப்புடுவேன் உரிச்சு...”
“அதுமட்டுக்கும் எங்கையி மாட்டுக்கு வைத்தியம் பார்க்குமாக்கும்... நான் உன்னைய உரிச்சிடமாட்டேன்...”
“அடியேய் ராங்கி... இன்னும் உன் வாயி கொறயலையா...”
“அதெல்லாம் இந்த ஜென்மத்தில குறையாது அடுத்தவொரு ஜென்மம்னு ஒன்னு இருந்தா அப்போ பார்த்திக்கலாம்... நீ லொள்ளுதனமா பேசினது காணும் முதல்ல அம்ஸுகிட்ட போனை கொடு...”
சமையலறை வாசலில் நின்று ஆவலுடன் தன் முகம் பார்த்த மருமகளின் மனநிலையை புரிந்துகொண்ட ரெங்கநாயகி கண்கள் பனிக்க ‘வாம்மா’ கண்களால் அவரை அழைத்தார்.
மாமியாரின் பேச்சிலே அழைத்தது தன் கண்ணம்மா என்பதை கண்டுகொண்ட வாசுமதி; மாமியார் அழைக்கவும் தன் வயதையும் மறந்து கலங்கிய விழிகளுடன் அவரருகில் வந்தவர் ரிசீவரை தன் காதில் வைத்துக்கொண்டார்.
அம்மாவுக்கும் மகளுக்கு தனிமை கொடுக்க எண்ணி அங்கிருந்து நகர்ந்தார் அவர்.
சேலை முந்தானையில் கண்களை துடைத்த வாசுமதிக்கு பேசுவதற்கு வாய் வரவில்லை. மகளின் பிரிவினை எண்ணிய துக்கத்தில் தொண்டைக்குள் வார்த்தைகள் சிக்கிக்கொண்டது.
“அம்ஸ்...” தாயினை தேடும் கன்றுக்குட்டியாய் ஏக்கத்தினை சுமந்து வந்தது அனிகாவின் குரல்.
“கண்ணாம்மா...” மகளின் ஏக்கத்திற்கு சற்றும் குறைவில்லா ஏக்கத்துடன் ஒலித்தது தாயுள்ளத்தின் குரல்.
அருகிலிருந்து செல்லம் கொஞ்சிய மகள் இன்று பல மைல் தூரத்திலிருந்து தொலைபேசியில் பேசுவதை எண்ணி குபுக்கென்று கண்களில் நீர் நிறைய சேலை முந்தானையில் ஒற்றிக்கொண்டவருக்கு சந்தோசமிகுதியில் பேச்சு வரவில்லை போலும்... ஏகத்துக்கும் தடுமாறினார்.
“அம்ஸ் எப்பிடி இருக்க...”
“எனக்கென்ன கண்ணம்மா நான் நல்லாத்தேன் இருக்கேன்... நீ எப்புடி இருக்க... வேளாவேளைக்கு நல்லா சாப்பிடு கண்ணு... உடம்ப நல்லா பார்த்துக்கோ....” பாசத்தால் குளிப்பாட்டினார்.
விடாது கேள்விக்கணைகளை தொடுத்த தாயினது உள்ளத்தின் ஏக்கத்தை புரிந்து கொண்டவளின் மனதும் தாயின் அரவணைப்பிற்காய் ஏங்கியது. குரல் பிசிறியது. அடைத்துக்கொண்ட தொண்டையை சரி செய்து கொண்டாள்.
“எனக்கென்ன நான் நல்லா ஜம்முன்னுதேன் இருக்கேன்... என்னிக்கு நான் சாப்பாட்டு பங்கம் வச்சிருக்கேன் அதெல்லாம் நல்லா தின்னுகிட்டுதேன் இருக்கேன்... அதவிடு அம்ஸ்... அப்பா எங்க வயலுக்கு போயிட்டாரா... அதென்ன எப்போ பாரு எந்நேரமும் வயலு வயலுன்னு வயலே கதின்னு கெடக்கிறது நீ இதெல்லாம் என்னன்னு கேக்க மாட்டியா... இதோ பாரு அம்ஸ் இனிமே கொண்டு நீதேன் போகவிடாம அப்பாவ வீட்டிலேயே வச்சிக்கனும்...”
தந்தையின் உடல் உறுதியை அவள் அறிவாள் தான், இருந்தும் தான் உடன் இல்லா நேரத்தில் ஏதாவது ஆகிவிட்டால்... உதவிக்கு பலபேர் இருக்கிறார்கள் தான் இருந்தாலும் அவள் மனம் கேட்கவில்லை. அவளுக்கு வயலையும் விட தன் தந்தையின் உடல்நிலையே முக்கியமாய் பட்டது.
“கண்ணம்மா எப்பிடிடாம்மா இருக்க....” சிந்தையை தடை செய்தது தந்தையின் பாசமான குரல்.
“அப்பா....” அவரின் குரல் கேட்டு வற்றாத ஜீவ நதியாய் கண்ணீர் கண்களில் சூழ தேம்பியவள் அதை அவர் கண்டுகொள்ளாதவண்ணம் சாமர்த்தியமாய் மறைத்துக்கொண்டாள்.
“சாப்பிட்டியா கண்ணம்மா...”
“இப்போத்தேன் எழுந்தேன் இனிமே தான் கீழ போகனும்...” கரகரப்பாய் ஒலித்த கண்ணீர் கறைபடிந்த குரலில் மகளின் தேம்பலை உணர்ந்து கொண்டவர் “முதல்ல போய் சாப்பிடு கண்ணம்மா அப்பறம் நிதானமா பேசிக்கலாம்...”
“இல்லப்பா நான் பேசிட்டு அப்பறமா சாப்பிடுகிறேன்...”
“அதெல்லாம் ஒன்னுவேணாம் முதல்ல போய் சாப்பிடு கண்ணம்மா...” மீற முடியாத குரல். அதை மீற அவளாலும் முடியவில்லை.
“ம்ம்ம்...” விம்மலை அடக்கிக்கொண்டு கூறியவள் செல்போனை துண்டித்து கட்டிலில் வீசினாள். தந்தையின் அதட்டலின் காரணம் அவளுக்கு புரியாமலில்லை. இதற்குமேல் பேசினால் தன்னாலும் தாங்கமுடியாது தந்தையாலும் தாங்கமுடியாது என்பதால் தான் அவர் இப்படி கூறுகிறார் என்பதினை உணர்ந்து கொண்டவள் தண்ணீரில் முகத்தை அலசி கீழிறங்கி சென்றாள்.
மகளின் அழைப்பு துண்டிக்கப்படவும் கனத்த மனதுடன் அறைக்குள் நுழைந்து கொண்டவர் சாய்வு நாற்காலியில் அமர்ந்து விட்டத்தை வெறித்துப் பார்த்தார்.
வெளியுலகம் உணர மகளை வெளியூருக்கு அனுப்பிவைத்தவர் இப்போது மகளின் பிரிவினை தாங்கிக்கொள்ள முடியாமல் கலங்கிய கண்களுடன் விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்தார்.
சமையல் அறைக்குள் நுழைந்த வாசுமதிக்கு அழுகையை அடக்கமுடியவில்லை. இப்போதே மகளை தங்களுடன் அழைத்து வரவேண்டும் போல் இருந்தது.
மருமகளின் நிலையை அறிந்தது போலவே சமையல் அறைக்குள் நுழைந்த ரெங்கநாயகி அழுது கொண்டிருப்பவரை வாரி அணைத்துக்கொண்டார்.
“அசடு இப்பிடித்தான் அழுவியா... இதுக்கே இப்பிடி அழுதீன்னா அவளை கல்யாணம் கட்டிகொடுக்கும் போது என்ன பண்ண போற... பொண்ண பெத்தா இதயெல்லாம் தாங்கித்தானாவணும்... இப்பிடியே விடிய விடிய அழுதிட்டு இருக்காம கண்ணா தொடச்சிட்டு வேலைய பாரு...” அதட்டினாலும் அதில் பாசமே மிகையாய் இருந்தது.
மாமியாரின் கூற்றில் நிதர்சனம் புத்தியில் உறைக்க கனத்த மனதுடன் கண்களை துடைத்துக்கொண்டவர் மகளின் நினைவுடனே தன் வேலையில் ஆழ்ந்து போனார்.
முழு துயரத்தையும் குத்தகைக்கு எடுத்துவள் போன்ற தோற்றத்தில் படியிறங்கி சாப்பாட்டு மேசையில் அமர்ந்தவள் இடது கையினை மேசையில் ஊன்றி முகத்தினை தாங்கிக்கொண்டாள். முகம் வேதனையில் கசங்கியிருந்தது.
காலையுணவை முடித்து மேசையில் அடுக்குவதற்காய் வெளியில் வந்த மாலதி சோகத்தில் முக்கியெடுத்தது போலிருந்த அனிகாவின் முகத்தை பார்த்து பதறிப்போனார்.
“அனிம்மா என்னடா... ஏன் முகமெல்லாம் வாடி இருக்கு என்னாச்சு...”
தனக்குள் உழன்று கொண்டிருந்தவள் சித்தியின் குரலோசையில் அவரை நிமிர்ந்து பார்த்தாள்.
“என்னடா...”
வாஞ்சையாய் முடிகோதிய மாலதியின் செயல், அன்னையை நினைவூட்ட அவரின் இடையோடு கட்டிக்கொண்டவளின் விழிகள் கண்ணீரில் நனைந்தது.
“நான் ஊருக்கு போகட்டுமா சித்ஸ்...” பரிதவிப்புடன் அழுகையை கட்டுப்படுத்தி நிமிர்ந்து பார்த்தவளின் செய்கையில் அவர் மனம் உருகித்தான் போயிற்று.
“என்னடா அம்மா அப்பாவ பார்க்கணும் போல இருக்கா...”
“ம்ம்...” முனகலுடன் மீண்டுமாய் அவர் இடையில் முகம் புதைத்தாள்.
“இன்னும் ஒரு வாரத்தில ஹாலிடே வருது நல்லா ஊர் சுத்தனும்னு சொன்ன... இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு நீ நிம்மதியா ஊருக்கு போயிட்டு வரலாம் என்ன சரியா... இப்போ சாப்பிடு... உனக்கு பிடிச்ச மசால் தோசை ஊத்திருக்கேன்... இல்லன்னா கொஞ்ச நேரம் வெளிய போயிட்டு வரியா...”
பேச்சோடு பேச்சாக மசால் தோசையை அவள் வாயில் ஊட்டி விட பசியில் இருந்தவள் நன்றாக ஒரு கட்டு கட்டினாலும், சித்தியின் பேச்சை மனதினுள் குறித்துக் கொண்டாள்.
‘இன்னும் ஒருவாரந்தேன் அதுக்கப்பறம் ஊருக்கு போய் ஒரு கலக்கு கலக்கனும்...’ மனம் கவலையையும் மீறி உல்லாசமாய் பட்டியலிட செல்போனில் காயுவின் எண்ணை ஒற்றினாள்.
முதல் நாளை காட்டிலும் இப்போது இருவரிடையிலும் நெருக்கம் ஏற்பட்டிருக்க, காயத்திரி தன் தயக்கத்தை உடைத்து அனிகாவுடன் சகஜமாய் பழகும் அளவுக்கு முன்னேறி இருந்தாள்.
இன்னும் சில நாட்களில் கலை நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் பர்சேஸ் பண்ணுவதாய் ஏற்கனவே திட்டம் தீட்டிருக்க, இன்னும் சில மாணவர்களும் உடன் வருவதாக கூறியிருந்தனர்... அதை கேட்டு ஏனோ தானோவென தலையை கூட ஆட்டிருந்த அனிகா, வீட்டிலே இருந்தால் ஊரின் நினைவுகள் வாட்டுவதால் சித்தியின் சொற்படி வீட்டிலிருக்க முடியாமல் வெளியில் செல்ல காயுவை அழைத்தாள்.
“காயு ஷாப்பிங் போலாமா...” கெஞ்சலாய் கேட்டவள் காயு கூற வருவதை காதில் வாங்காமல் போனிக்ஸ் அழைத்து வந்தாள்.
கார்த்திக்கு அரசாங்க டென்டர் கிடைத்ததிலிருந்து வேலைகள் நேரத்தை முழுமையாய் ஆக்கிரமித்து கொள்ள, தினமும் அனிகாவை காலேஜ் அழைத்து செல்வது சிரமம் என்பதால் அவளுக்கென ஸ்கூட்டி ஒன்றை வாங்கி கொடுத்திருந்தான். அத்துடன் புது மாடல் செல்போன் ஒன்றும். அவளின் அவசர தேவைகளுக்கென.
முதலில் ஸ்கூட்டி ஓட்ட தெரியாதென அடம்பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தவளை அதட்டி மிரட்டி ஓட்ட கத்துக் கொடுத்திருந்தான். இப்போதெல்லாம் பிங்கியும் அவளின் இன்றியமையாதவைகளில் ஒன்றாகிவிட அதில்தான் எங்கும் செல்வது. ‘பிங்கி’ என்பது அவள் தன் ஸ்கூட்டிக்கு வைத்த செல்லப்பெயர்.
உள்ளே நுழையவும் சில்லென தாக்கிய ஏசியின் குளுமை; அதை அனுபவித்தபடி ஒவ்வொரு பிரிவையும் புரட்டி போட்டவள் ஒன்றை கூட இதுவரை வாங்கியிருக்கவில்லை.
காயு தனக்கு தேவையானவற்றை வாங்கிக் கொள்ள, அதில் ஆயிரம் குறை சொல்லி அவற்றை எல்லாம் புறம் தள்ளிக் கொண்டிருந்தாள் அனிகா. காலையில் வந்தவர்கள் மதியத்தை நெருங்கிக் கொண்டிருக்க பசியில் அவளை சுரண்டினாள் காயு.
“இன்னும் எவ்வளவு நேரம் அனி...”
“காலைல சாப்பிட்டதுக்கு பச்ச தண்ணி கூட பல்லுல படல... இப்போவாச்சும் போவோமா இன்னும் கொஞ்ச நேரம் இங்கயே நின்னேன் மயக்கம் போட்டு விழுந்திடுவேன்...”
“பேபி... ட்ரெஸ் எல்லாம் ரொம்ப சுலபமா எடுக்க கூடியதுன்னு நினைச்சிட்டியா... ம்ஹூம்... அதெல்லாம் நின்னு நிதானமா எடுக்கணும் பேபி... எங்க வீட்டில எல்லாம் துணி கடைக்கு போனா ஒரு நாளு முழுக்க கடையிலயே இருந்து துணிமணியெல்லாம் பார்த்து பார்த்து எடுத்திட்டுதேன் வருவோம் அந்த ரத்தம் என் உடம்புலயும் ஓடுதில்ல அதேன்...”
காயுவிற்கு விளக்கம் கொடுத்தபடியே சேல்ஸ்மேனிடம்,
“அந்த டாப் எடுங்க.. இல்ல அந்த ரெட் கலர்.. ப்ச்... இது நல்லாவே இல்ல.. இது வேணாம் ப்ளூல எடுத்து போடுங்க.. ரெண்டாவதா இருக்கு பாருங்க.... அதான்... பேபி இது நல்லா இருக்கா... ஆனா டார்க் ப்ளூ மாதிரி இருக்கில்ல... இல்லயில்ல இது வேணாம்... வேறது எடுங்க...” கடையை இரண்டாக்கிக் கொண்டிருந்தாள்.
ஊழியர்கள் முழி பிதுங்கிப் போய் மொத்தத்தையும் அவள் முன்பு குவித்து வைத்திருக்க அதில் இருந்த ஒன்று கூட அவளுக்கு பிடிக்கவில்லை. உதட்டை பிதுக்கி தலையசைத்து அங்கிருந்து வெளியேறி விட்டாள்.
“ஒன்னு கூடவா பிடிக்கல...”
“நல்ல கடைன்னு சொன்னாய்ங்க ஆனா ஒன்னு கூட நல்லாவே இல்லை...” அசட்டையாய் உதடு பிதுக்கியவள் அங்கிருந்த ஐஸ் கிரீம் பார்லரை பார்த்து நாக்கை சப்பு கொட்டினாள்.
“காயு ஐஸ் கிரீம்டி... சாப்பிடாம போனா சாமி கண்ண குத்திடும்... வா வா...”
இழுத்துக்கொண்டு போனவள் அவளை அங்கிருந்த இருக்கையில் அமர்த்தி விட்டு ஆர்டர் கொடுக்க போனாள்.
“ஒன் க்ரஞ்சி பெரேரோ அண்ட் காரமெல் க்ரஞ்ச்” (one crunchy ferrero and caramel crunch)
ஆர்டர் கொடுத்தவள் காயுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தாள்.
“காயு ஒரு குட் நியூஸ் சொல்லட்டுமா...” முகத்தில் சந்தோஷ வர்ணஜாலங்கள் தெறிக்க கண்களை விரித்தாள்.
“ம்ம்..” பசி மயக்கத்தில் இருந்தவள் சோம்பலாய் முனக,
“என்ன காயு நீ... நான் எம்புட்டு சந்தோஷமான சமாச்சாரத்த சொல்லவர்றேன்... நீ என்னடான்னா ‘ம்ம்ம்’ன்னு அரத்தூக்கத்தில இருக்கிறவளாட்டம் முனுங்கிற இதெல்லாம் சரியேயில்ல சொல்லிப்புட்டேன்...”
“உன்னை பத்தி தெரிஞ்சும் ஷாப்பிங் வந்தேன்ல நீ இதுவும் சொல்லுவ இதுக்கு மேலயும் சொல்லுவ...”
“சரி.. சரி.. கோவிச்சுக்காத காயு அதேன் ஷாப்பிங் பண்ணி முடிச்சிட்டோமே மறுபடியும் எதுக்கு அத ஆரம்பிக்கிற...”
“நான் மட்டும் பண்ணேன்னு சொல்லு கூட உன்னையும் சேர்த்துக்காத.. அதகூட விடு வந்தது தான் வந்த அட்லீஸ்ட் ஒரு கர்சீபாவது எடுத்திருக்கலாமில்ல...”
“நான் என்ன வேணும்னேவா எடுக்காம வந்தேன் ஒன்னு கூட நல்லாவேயில்லை அதேன் நான் எதுவும் எடுக்கல...”
“அப்பிடியா... அப்போ நான் எடுத்ததெல்லாம் கேவலமா இருக்குன்னு சொல்லாம சொல்ற...”
“சீச்சி... நான் அப்பிடியெல்லாம் சொல்லுவேனா காயு...” முகத்தை தொங்கப்போட்டுக் கொண்டாள் அனிகா.
“சரி.. சரி அதுக்கெதுக்கு முகத்த ஹைவே நீளத்துக்கு தொங்கபோட்டிருக்க பார்க்க சகிக்கல...”
அதில் பல்லை கடித்த அனிகா காயுவை முறைத்துப் பார்க்க குறு நகை ஓடியது அவளிதழில்.
தோழிகளின் உரையாடல் பேரரின் வரவில் தடைப்பட, ஐஸ்கிரீமை கண்டதும் எச்சில் ஊற நாவை சப்புக்கொட்டிய அனிகா தோழியை மறந்து ஐஸ்கிரீமில் மூழ்கினாள்.
பசியில் இருந்த காயுவும் அதை சுவைக்க ஆரம்பிக்க கிண்ணத்தில் படிந்து மீண்ட கரண்டியின் மெல்லிய ஓசையை தவிர வேறு சப்தமின்றி மயான அமைதியில் இருந்தது அவர்கள் இருந்த இடம்.
திறந்த வெளியில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு அதில் மரத்தினாலான வட்டவடிவ மேசையும் கதிரையும் போடப்பட்டிருக்க அதில் தான் அவர்கள் அமர்ந்திருந்தனர்.... அவர்களை போன்று பலரும் அங்கமர்ந்து தங்களுக்கு தேவையானவற்றை சுவைத்துக்கொண்டிருந்தனர்.
சற்று தள்ளியிருந்த நடைபாதையில் மக்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது.... வாகனங்கள் ஒருபக்கம் ஊர்ந்து செல்ல, சாலையை கடக்கும் மக்கள் ஒருபுறம் அக்கம்பக்கம் பார்த்து சென்று கொண்டிருக்க சாலையின் இருபுறமும் ஓங்கி வளர்ந்திருந்த ராட்ஷத மரங்கள் காற்றை வாரியிறைத்துக் கொண்டிருந்தது.
இடையிடையே பின்னணி இசையாய் ஹாரன் ஒலிகளும் மக்களின் சலசலப்பும் சிறார்களின் அழுகையொலி சிரிப்பொலியின் கலவைகளும் இன்ப ராகம் மீட்ட மக்கள் பரபரப்பாய் கடந்து சென்ற இடம் நொடியில் மாறுபட்டுப் போனது; சீறிக்கொண்டு வரும் சிறுத்தை போல் சுழன்றடித்த காற்றை கிழித்துக் கொண்டு உடலை அதிரச்செய்து புத்தியை மழுங்கச் செய்து புழுதி பறக்க பெரும் இரைச்சலுடன் சீரான வேகத்தில் ஒரே நேரத்தில் ஒன்று போல் சர்சர்ரென வந்து நின்ற பி.எம்.டபுள்யூ கார்களின் அசுர வேகத்தில்.
சூறாவளி போல் மொத்த புழுதிகளையும் சுருட்டிக்கொண்டு வந்த கார்களின் இரைச்சலில் சர்வாங்கமும் ஆட்டம் காண நடைபாதையில் கூட்டம் கூட்டமாகவும் தனி தனியாகவும் நடந்து கொண்டிருந்த பொது மக்களும், வேடிக்கை பார்த்து நின்ற இளைஞர்கள் கூட்டமும், ஓய்வுக்காய் வெளியில் வந்த ஊழியர்களும் அதிர்ந்து திரும்பிப் பார்க்க, பெரும் இரைச்சலுடன் இயக்கத்தை நிறுத்தி இருந்தது அக்கார்கள்.
ஐஸ் கிரீமை சுவைத்த அனிகா காலி கப்பை குப்பை கூடையில் போட்டு நிமிர்ந்தவள் அசுர வேகத்தில் முகத்தில் அறைந்த புழிதியின் நெடி நாசியில் நுழைந்து அசௌகரியத்தை ஏற்படுத்த மூக்கு விடைக்க கண்களில் கனல் தெறிக்க நிமிர்ந்தவள், ஒரே நேரத்தில் ராட்ஷத வேகத்தில் உறுமலுடன் இயக்கத்தை நிறுத்திய கார்களின் வேகத்தில் மிரண்டு ஓரடி பின்னால் நகர்ந்தாள்.
முன்னும் பின்னுமாய் நின்ற பி.எம்.டபுள்யூ கார்களில் இருந்து பாதுகாவலர்கள் இறங்கிய அடுத்த நிமிடம் நடுவில் நடுநாயகமாய் இயக்கத்தை நிறுத்தியிருந்த ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் (rolls-royce phantom) காரிலிருந்து அலட்சியத்துடன் தலைகோதியபடி இறங்கினான் ஷௌர்யா.
வரிசையாய் அணிவகுத்த கார்களின் வேகத்திலே வந்தது யாரென தெரிந்தாலும் ஒருமுறையேனும் அவன் முகம்பார்த்திட பிரயத்தனம்பட்ட மக்கள் நகரும் பாவனையில் அவன் முகம் காண முயல, அதற்கு தடைவிதிப்பதுபோல் அவனை சுற்றி வளைத்துக்கொண்ட அவனின் பாதுகாப்பு படையினர் அவனுடனே அங்கிருந்த ரிசார்ட்டினுள் நுழைந்தனர்.....
விழிகளை கூர்மையாக்கி ‘எவன் அவன்’ எனும் ரீதியில் காரிலிருந்து இறங்கும் அப்பாட்டக்கரையே கூர்ந்து பார்த்திருந்த அனிகா அதிலிருந்து இறங்கியவனை கண்டு புருவங்கள் சுருங்க யோசனை செய்தவளுக்கு மின்னல் போல் ஓடிமறைந்தது அவனை முதல் முதலாய் பார்த்த நாளின் நினைவுகள்.....
அன்றைய தினத்தின் நினைவெழவே மனதுக்குள் வெகுண்டாள்.
‘இவன் ஒருத்தனுக்கு எதுக்காம் இம்புட்டு காரும் துப்பாக்கி பிடிச்சவனுங்களும்... இருந்தாலும் இந்த திமிரு பிடிச்சவனுக்கு எடுப்பு ஜாஸ்திதான்....’
இதழ் சுழித்து வசைபாடிகொண்டே அவன் முகத்தின் மீது பார்வையை தொடுத்து அவன் செல்லும் வழியே எதிர்திசையினில் முன்னோக்கி நகர்ந்தவள் திடீரென தன் கண்பார்வையிலிருந்து மறைந்தவனை கண்டு அதிர்ந்து விழித்தாள்....
‘எங்கே போய் தொலைஞ்சான்னு தெரியலே.... சரியாத்தானே பாலோ பண்ணேன்.... எப்பிடி மாயாம மறைஞ்சான்.....’ பல்லை கடித்து சுற்றுப்புறத்தில் பார்வையால் அலசியவளின் மேனியில் எதுவோ ஊர்வது போன்றிருக்க பயத்துடன் திரும்பியவள் எதிலோ மோதி நெற்றியை தேய்த்துக்கொண்டு அண்ணார்ந்து பார்த்தாள்....
விழிகள் ஸாசர் போல் அகல விரிந்து நெஞ்சுக்குழிக்குள் படபடப்பு அதிகமானதில் உள்ளுக்குள் நடுக்கம் ஓடிமறைந்து சிறிதாய் எட்டிப்பார்த்த அச்சத்தில் முதுகுத்தண்டுவம் சில்லிட வைரத்துளியாய் அரும்பிய வியர்வையில் உறைந்து நின்றாலும் இயல்பான அசட்டுத்தனம் தலை தூக்கியதில் ஒருசேர தாக்கிய உணர்வுகள் அத்தனையும் வடிய அவனை முறைத்துப்பார்த்தாள் அனிகா.
அவள் தன்னை தொடர்ந்து வந்தது முதல் தன்னை காணாது தேடியது தன்னை கண்டதும் அவள் முகத்தினில் வந்து போன உணர்ச்சி என அத்தனையையும் கூர்விழிகள் படம் பிடிக்க, கால்களை அகற்றி பேன்ட் பாக்கட்டில் கைவிட்டு தோரணையாய் அவள் முகம் பார்த்து நின்றான் ஷௌர்யா...
“யாரையோ காணாம தேடிக்கிட்டு இருக்கபோல... யாருன்னு சொன்னா நானும் தேடிப்பார்க்கிறேன்...” இயல்பையும் மீறி சில்மிஷம் இளையோடியதோ என எண்ணிப்பார்க்கும் குரல்....
தன் முகம் பார்த்து நின்றவளின் தோள் மேல் கரம் பதித்து மறுபுறம் திருப்பியவன் அவள் தோள் வளைவிலே முகம் புதைத்து அவளைப்போன்றே நாலாபுறமும் பார்வையை அலையவிட, சவரம் செய்த தாடியின் சொரசொரப்பான அரும்புகள் அவளின் காதுமடல் தீண்டி சிலிர்க்க வைக்க அவனிதழோரம் தீண்டிய கன்னக்கதுப்போ தீப்பற்றி எரிந்தது...
சொல்ல முடியா உணர்வுப்பிரவாகத்துக்குள் மூழ்கியவளின் கண்ணிமைகள் ஒன்றையொன்று கவ்விக்கொள்ள தோள்சந்தில் படிந்த அவன் கரம், பெண்ணவளின் சிற்றிடை நோக்கி பயணித்தது....
முதல் பார்வையிலே என் இயல்பையும் மீறி கோபம் கொள்ள செய்தவன்... அப்பாவியொருத்தனை கருணையேயின்றி அடித்துக்கொல்லப் பார்த்தவன்... இதோ இப்போதும் பொதுமக்கள் கூடியிருக்கும் இடத்தில் ராட்சஷன் போன்று புடைசூழ காரில் வந்து இறங்கி அசௌகரியம் ஏற்படுத்தியவன் என ஏதேதோ சொல்லி ஏனென்றே அறியாமல் வெறுப்பையும் கோபத்தையும் அவன்மேல் வளர்த்திருந்தவள், இப்போது அவனது தொடுகையில் தன்வசமின்றி தடுமாறிப்போனாள்....
அவளிடையில் ஊர்ந்த அவன் விரல்களின் மாயாஜாலத்தில் மூடிக்கொண்ட விழிகள் மேலும் இறுக அதன் அவஸ்தை தாளாமல் கொழுகொம்பின்றி தடுமாறும் கொடிபோல் தள்ளாடித் தவித்தவள் அவனின் பரந்த மார்பில் தலைசாய்த்துக்கொண்டாள்....
தன்னில் சாய்ந்தவளின் இடையழுத்தி தன்னுள் இறுக்கிக்கொண்டவன் மேலும் ஒன்றி அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்... அவனது செயலில் மொத்த சக்தியும் வடிய காய்ந்த சருகாய் துவண்டவளை தன்புறம் திருப்பி தன்னுள் புதைத்தவன் அவளின் செவ்விதழ் வனப்பில் தன்னிலை பிறழ அவள் முகம்நோக்கி குனிந்தவன் அழுத்தமாய் ஆழமாய் தன்னிதழ் கொண்டு மெல்லிதழை கவ்விக்கொண்டான்.
சடுதியில் நடந்தேறிய நிகழ்வுகள், கண்மூடிக் கிறங்கியவளின் மூளையில் ஒளிபரப்பானதில் பெண்மை விழித்துக்கொள்ள பதட்டத்துடன் அவனிடத்திலிருந்து விலகியவளின் மொத்த சக்தியும் வடிந்திருக்க நிற்க முடியாமல் கண்கள் சுழல போதையுண்டவள் போன்று தள்ளாடியவள் அங்கிருந்த சுவரில் சாய்ந்து நிதானித்துக்கொண்டு கோபத்துடன் நிமிர்ந்து பார்க்க, கைகளை மார்புக்கு குறுக்காய் கட்டிக்கொண்டு கண்களை சுருக்கி கோபத்துடன் அவளையே முறைத்துப் பார்த்திருந்தாள் காயு....
தன் முன்னே அவனின்றி தோழி நின்றிருக்கவும் பெரிதும் குழம்பியவள் தலை சொறிந்துகொண்டு அவளை பார்த்திருக்க அனிகாவின் செயலில் கடுப்பான காயு அவளை வெட்டவா குத்தவா எனும் ரீதியில் முறைத்துக்கொண்டிருந்தாள்..
“இங்க என்ன பண்ற அனி... உன்னை எங்கெல்லாம் தேடுறது... இப்பிடித்தான் சொல்லாமகொள்ளாம வரதா...” திட்டியவளின் குரலில் இருந்த படபடப்பே அவள் தன்னை காணாமல் பயந்திருக்கிறாள் என்பதை சொல்லாமல் சொல்ல தன் உணர்வுகளை சாதூர்யமாய் மறைத்துக்கொண்டு அவளை பார்த்து கண்சிமிட்டி சிரித்தாள்.
“ஹா... ஹா நல்லா பயந்தியா... என்னைய காணோம்னதும் உன்னோட ரியாக்சன் எப்புடி இருக்கும்னு டெஸ்ட் பண்ணி பார்த்தேன் பேபி... இதுக்கெல்லாம் யாராச்சும் பீல் பண்ணுவாய்ங்களா...” குறும்பாய் சிரித்தவளை ஏகத்துக்கும் முறைத்தவள் “போடி லூஸு...” திட்டிக்கொண்டே முன்னே செல்ல பின்தங்கிய அனிகாவின் பார்வை என்னவோ அந்த இடத்தை வெகுவாய் அலசியது....
இன்னமும் மிச்சம் இருந்தது போல் அவனிதழ் உரசிய கன்னம் குறுகுறுக்க அவனிதழ் படிந்த கழுத்து வளைவு சிலிர்த்துக்கொண்டிருந்தது.... அவன் கொடுத்த முத்தத்தின் ஈரம் காயாமல் இதழில் ஒட்டியிருக்க நாவினால் அதரங்களை தடவிகொடுத்தாள்....
அவனது நெருக்கத்தில் உணர்ந்த படபடப்பை மீண்டும் இதயம் உணர, முகத்தில் அறைந்த காற்றை தாண்டி அவள் பார்வை இண்டுஇடுக்கு விடாமல் ஒவ்வொன்றையும் அலசியது....
அவனின் மீதிருந்த கோபமும் வெறுப்பும் பனிக்கட்டியாய் உருகிக்கரைந்து செல்ல... அவன் வந்தானா? முத்தம் கொடுத்தானா? எனும் எண்ணமே ஓங்கி வளர்ந்து அவளை முழுமையாய் ஆக்கிரமிக்க, சித்தம் தடுமாற தேங்கி நின்றவளின் கரம் பற்றியிழுத்துச் சென்ற காயுவின் இழுவையில் அவளோடு சென்றாலுமே அனிகாவின் நினைவுகள் முழுதும் அவனிடத்திலே சங்கமித்திருந்தது....
அங்கிருந்த பிரபல்யமான ரிசார்ட்டின் மூன்றாம் மாடியின் கண்ணாடியால் அடைக்கபட்ட அறையினுள் இருந்து, பார்வை சுழன்றோட தள்ளாட்டத்துடன் சென்று கொண்டிருந்தவளையே பார்த்திருந்தான் ஷௌர்யா வர்மா....
அவளை பார்க்கும் கணமெல்லாம் அவனிதழில் தோன்றும் அதே பிரித்தறிய முடியாத வளைவுப் புன்னகை இக்கணமும் அதில் நெளிய, சிலுப்பிக்கொண்டிருந்த முடியை வலதுகை விரல்களால் அழுந்தக் கோடிழுத்தான்... ஏதோவொரு நினைவில் இதழ்கள் மேலும் விரிய கண்களில் குறும்பு கூத்தாடியது...
தொடரும்......
எல்லாரும் ரொம்பநாளா வெயிட் பண்றதால போஸ்ட் பண்ணிட்டேன் பிரெண்ட்ஸ்... சோ கண்டிப்பா கமெண்ட்ஸ் லைக்ஸ் பண்ணனும்...
ஷம்லாவின் "என் விழியை நீங்கி நீ விலகாதே" - கருத்துத் திரி