மாமியாரும் மீன்வறுவலும்...
"ச்சீ... என்னடி இது... உன் மாமியாரு இப்படிப்பட்ட ஆளா இருக்காங்க... நான் இதை கொஞ்சம்கூட எதிர்பார்க்கல...தெரியாத்தனமா உன்னை இந்த வீட்டுல கல்யாணம் பண்ணிக் கொடுத்திட்டேன்... உங்க மாமியார் இப்படிப்பட்ட ஆளுன்னு எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சே இருக்கமாட்டேன்... இவ்ளோ 'சீப்'பா நடந்துக்கறாங்க..." என தன் மகள் அனிஸ்ரீ யிடம் அவளின் மாமியாரைப் பற்றி அவளிடமே குறைபட்டுக் கொண்டிருந்தார் மல்லிகா....
திருமணம் முடிந்த மறுநாளே தேன்நிலவிற்கு சிம்லா சென்றுவிட்டு பதினைந்து நாட்கள் கழித்து தன் மாமியார் வீட்டிற்கு அன்றுதான் வந்திருந்தாள் அனிஸ்ரீ... தன் சம்பந்தியின் அழைப்பின்பேரில் அவ்வீட்டிற்கு வந்து விருந்து உண்டுவிட்டு தன் மகளை மறுவீட்டிற்கு அழைத்துச் செல்லவந்த மல்லிகாதான் இவ்வாறு பேசிக்கொண்டிருப்பது...
அனிஸ்ரீ தன் வீட்டிற்கு ஒரே செல்ல, செல்வமகள்...
அனிஸ்ரீயின் மாமியார் மரகதம் தன் கணவனை இழந்துவிட்டாலும் தன் ஒரே மகனை நல்ல முறையில் படிக்கவைத்தார்... இயற்கைமுறையில் விவசாயம் செய்யப்பட்ட காய்கறிகள், பழங்கள், பூக்கள் மற்றும் கீரை வகைகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்றுமதி செய்து நல்ல லாபத்துடன் நடத்தி வருகிறான் நம் நாயகன் யுவனேஷ்....
அழகும் அறிவும் பணிவும் நிறைந்தவனுக்கு அவனைப் போன்றே இருந்த அனிஸ்ரீ மனைவியாக கிடைத்தது அவன் பெற்றவர் செய்த புண்ணியமே...
"அம்மா... சும்மா இருங்க... சத்தமா பேசாதீங்க... அவங்க காதுல விழப் போகுது..." என்று பதறினாள் அனி...
"அவங்க என்ன பண்ணினாங்கன்னு இப்படி பேசிக்கிட்டிருக்கீங்க? மொதல்ல அதை சொல்லுங்க..." என்றாள் அனி...
"இல்லடி... நான் வர்றதுக்கு முன்னாடியே நீ ஒத்த ஆளா நின்னு எல்லாருக்கும் சமச்சி முடிச்சிருக்க... உங்க மாமியார் வெங்காயம் தக்காளி நறுக்கி கொடுத்ததோட சரி... வேற ஒண்ணும் பண்ணல... தண்ணி எடுக்கலாம்னு 'கிச்சன்' பக்கம் போனேன்... அங்க என்னடான்னா... உங்க மாமியாரு... மீன் வறுவல், மீன் கொழம்பு, இறால் தொக்கு, சிக்கன் லாலிபாப், ஸ்வீட் னு எல்லாத்துலயும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து சின்ன சின்ன 'பாக்ஸ்'ல போட்டு எடுத்து அலமாரியில மேல் அறையில வெச்சி மூடி ஔிச்சி வெக்கறாங்க... அப்படி என்ன யாருக்கும் தெரியாம ஔிச்சிவெச்சி திங்கணும் அவங்களுக்கு... என்ன புத்தியோ போ... எனக்கு சுத்தமா புடிக்கல..." என முகத்தை சுளித்தார் மல்லிகா...
அதை கேட்டு சிறிது அதிர்ச்சியாக இருந்தாலும், தன்னை சமாளித்துக்கொண்டு, "சரி விடுங்கம்மா... அவங்க ஏதாவது பண்ணிட்டுப் போகட்டும்..." என்று அந்த விஷயத்தை ஒதுக்கி வைத்துவிட்டாள் அனி...
நெருங்கிய சொந்தங்கள் அனைவரும் வரவே அவர்களை கவனிக்க ஆரம்பித்துவிட்டனர்...
அனைவருக்கும் உணவு பரிமாறும் நேரம், சொந்தக்காரர் ஒருவர், "யுவன்தான் முக்கியமான வேலையா வெளியில போய்ட்டான்... நீயாவது எங்ககூட ஒண்ணா உக்கார்ந்து சாப்பிடும்மா" என்றார்...
"சரி" என்று தன் மகளை மல்லிகா அமரவைக்கப் போக., "அதெல்லாம் ஒண்ணும் வேணாம்... அவ அப்புறமா சாப்டுக்குவா... நீங்க மொதல்ல சாப்டுங்க... அவ சாப்பிட இப்ப என்ன அவசரம் வந்துச்சி?" என்று கேள்வி கேட்ட மரகதம், தன் மருமகளை பார்த்து, "ஏம்மா நின்னுக்கிட்டு இருக்க? எல்லாருக்கும் பரிமாறு... உங்க அப்பாவுக்கு மீன் வறுவல் வைக்கல பாரு... அம்மாவுக்கு அந்த மட்டன் கிரேவி வை..." என அதட்டினார்...
இதைப் பார்த்த மல்லிகாவோ மனதில், "ச்ச... என்ன மனுஷங்க இவங்க? பொண்ண சாப்பிட விடாம, இப்படி வெரட்றாங்க... எங்களை வெச்சிக்கிட்டே எங்க பொண்ணை இப்படி வேலை வாங்கறாங்க... என் பொண்ணு என்ன பாடு பட போறாளோ?" என புலம்பிக் கொண்டிருந்தார்...
அவர் கணவன் லட்சுமணன்தான் தன் மனைவியின் கரங்களை அழுத்தி சமாதானம் செய்தார்...
தன் கண் முன்னேயே தன் மகளை இப்படி விரட்டினால் எந்த தாயுள்ளம்தான் தாங்கும்? மனதினுள் தன் சம்பந்தியை நினைத்துப் புலம்பிக் கொண்டிருந்தார் மல்லிகா...
லட்சுமணனுக்கோ, 'இத்தனை பேர் மத்தியில என் பொண்ணை இப்படி பேசுறாங்க... 'அப்புறமா சாப்டுக்கோ'ன்னு கூட சொல்லாம... 'இப்ப என்ன சாப்பிட அவசரம்'னு கேக்கறாங்களே' என்று மிக வருத்தமாய் இருந்தது...
ஒரு வழியாக உறவினர் அனைவரும் கிளம்ப மதியம் மூன்று ஆகிவிட்டது...
இன்னும் தன் மகள் பசியோடிருக்கிறாள் என்பதே அவளைப் பெற்றவர்களுக்கு கவலையாய் இருந்தது...
மரகதம் சர்க்கரை நோயாளி என்பதால் அவரும் உண்டு முடித்துவிட்டார்... எனவே மல்லிகாவிற்கு, "அப்ப இவங்க இவங்களுக்காக எடுத்து வெக்கலபோல அந்த பதார்த்தத்தை எல்லாம்... சாயுங்காலம் வருவாருன்னு அவங்க பையனுக்காக எடுத்து வெச்சிருக்காங்க போல... அப்ப கூட உன்னைப் பத்தி யோசிக்கல பாரு அவங்க... " என்று குறைபட்டு்க் கொண்டார் தன் மகளிடம்...
"ம்மா... விடுங்கம்மா... ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க? அவங்க ஏதாவது பண்ணிட்டுப் போகட்டும்... நான் என்ன அதெல்லாம் சாப்பிட்டதே கிடையாதா? போங்கம்மா..." என சலித்துக் கொண்டாள்... அவளுக்குமே நல்ல பசி... தன் மாமியார் எப்பொழுதுதான் தன்னை சாப்பிட சொல்வார் என காத்துக்கொண்டிருந்தாள்... எப்படியும் தன் கணவன் வீடுவந்து சேர மாலை ஐந்து மணியாகிவிடும் என்று அலைபேசியில் அழைத்து சொல்லிவிட்டான்...
ஒருவேளை அவருடன் சேர்ந்து நான் சாப்பிட வேண்டும் என்பதற்காகத்தான் என்னை சாப்பிட சொல்லவில்லையா என் மாமியார்... அவ்வளவு நேரம் பசியோடு காத்திருக்க முடியுமா?' என்று யோசித்து கொண்டிருந்தாள் அனி.. அந்நேரம் கடைசி உறவினரையும் வழியனுப்பிவிட்டு உள்ளே வந்த மரகதம், தன் மருமகளை அழைத்து, "அம்மாடி.. வாம்மா.. வந்து சாப்பிடும்மா..." என கையோடு அழைத்துக்கொண்டு 'கிச்சனில்' இருந்த உணவு மேசையினருகில் இருந்த நாற்காலியில் அவளை அமர வைத்துவிட்டு, தான் பத்திரப்படுத்தி எடுத்து வைத்திருந்த எல்லா பதார்த்தங்களையும் கொண்டு வந்து அவள் முன்னால் வைத்தார்... அவளுக்கு தன் கைகளாலேயே அனைத்தையும் பரிமாறினார்... அங்கிருந்த மூவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை... தாங்கள் வேறுமாதிரி நினைத்திருக்க, மரகதம் வேறுமாதிரி நடந்துகொள்வது அவர்களுக்குப் புரியவில்லை...
அவர்களின் பார்வையின் அர்த்தம் புரிந்த மரகதம், அவர்களைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு, "நீங்க எல்லாரும் என்ன நினைக்கறீங்கன்னு எனக்குத் தெரியும்... சம்பந்திம்மா... நீங்க என் மருமககிட்ட பேசினதை நான் கேட்டேன்... இதை எல்லாத்தையும் என் பையனுக்காகவோ இல்லை எனக்காகவோ எடுத்து வைக்கல... என் மருமகளுக்காகதான் நான் எடுத்து வெச்சேன்..." என்றார்...
அதில் அசந்து போய் மூவரும் ஸ்தம்பித்து நின்றுவிட்டனர்... மேலும் தொடர்ந்தார் மரகதம்.... "நான்தான் எங்க வீ்ட்டுக்கு முதல் மருமக... நாலு மச்சினன், மூணு நாத்தனாருன்னு எங்க குடும்பம் ரொம்ப பெருசு... சமையல் வேலையெல்லாம் நான்தான் பார்ப்பேன்... எல்லாருக்கும் பரிமாறுற வேலை என் மாமியாரோடது... அவங்க பேரு பங்கஜம்... எல்லாரும் சாப்பிட்டபிறகுதான் நான் போய் சாப்பிடுவேன்... நான் சாப்பிட்டு முடிச்சு எல்லாத்தையும் ஒழுங்குபண்ணி வெச்சதும் என் மாமியார், மீதி எவ்ளோ சாப்பாடு, குழம்பு, பதார்த்தம் இருக்குன்னு போய்ப் பார்ப்பாங்க... எனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கும்... இருந்தாலும் எதுவும் கேட்டுக்க மாட்டேன்..."
"வாரத்துல ஒருநாள் கண்டிப்பா மீன் செய்வோம்... எப்பவும்போல ஒருநாள் நான் எத்தனை மீன் துண்டு சாப்பிட்டேன்னு பார்த்தாங்க என் மாமியார்... என் மனசு கேக்காம, 'ஏன் அத்தை இப்படி பண்றீங்க? நான் என்ன மொத்தத்தையுமா தின்னுடபோறேன்? நான் எப்ப சாப்புட்டு முடிச்சாலும் நீங்க சமையலறையில போய், நான் எவ்ளோ சாப்பிட்டிருக்கேன்னு கணக்கு பாக்கறீங்களே'ன்னு கேட்டேன்..."
"அதுக்கு என் மாமியார் சொன்னாங்க பாருங்க ஒரு பதில்... நான் அப்படியே சிலையாயிட்டேன்..."
"அம்மாடி...அப்படி என்னிய தப்பா நெனச்சிடாதம்மா... வீட்டுல இருக்க எல்லா வேலையும் நீதான் பாக்குற... இந்த வயசான காலத்துல என்னால உனக்கு எந்த ஒத்தாசையும் பண்ண முடியல... இவ்ளோ வேலையைப் பார்த்துட்டு, கொஞ்சமாதான் நீ சோறு திங்கற... எப்புடி உன் உழைப்புக்குப் பத்தும்? அதான் நீ எவ்ளோ சாப்பிட்டன்னு பார்த்து அதுக்கேத்த மாதிரி , நீ செய்ய வேண்டிய வேலையில சின்ன சின்ன வேலைங்களை உன் நாத்தனாருங்களை செய்ய சொல்லுவேன்...
ரொம்ப கம்மியா சாப்பாடு இருந்தா, உன்னை பக்கத்து தெருவுல இருக்கற உங்கம்மா வீட்டுக்கு போக சொல்லிடுவேன்... அங்க போயாச்சும் ஏதாவது வயிறாற சாப்பிடுவல்ல... என்னிய தப்பா எடுத்துக்காதம்மா..."ன்னு சொன்னாங்க என் மாமியார்...
"அப்பத்துல இருந்து என் மாமியாரை நான் சரியா புரிஞ்சிக்கிட்டேன்.. அதுதான் எனக்கு என் மாமியாருக்கும் ஏற்பட்ட முதலும் கடைசியுமான வாக்குவாதம்... அதே மாதிரிதாம்மா....நீதான் கஷ்டப்பட்டு எல்லாத்தையும் சமைச்ச... கடைசியில நீ சாப்பிடும்போது உனக்கு எதுவும் இல்லாமப் போயிடக்கூடாதுன்னு நெனச்சிதான் நான் எடுத்து வெச்சேன்... அதுவுமில்லாம நீ சாப்பிடறதைப் பார்த்து யாரோட கண்ணாவது பட்டு திருஷடி ஆயிடும்னுதான்மா, அவங்க கூட உன்னை சாப்பிடவிடலை... என்னை தப்பா நெனைக்காதம்மா.. சம்பந்திம்மா... நீங்களும் என்னைப் புரிஞ்சிப்பீங்கன்னு நெனைக்கறேன்..." என்று தன் மருமகளிடம் ஆரம்பித்து தன் சம்பந்தியிடம் முடித்தார் மரகதம்...
"சம்பந்திம்மா... நீங்கதான் எங்களை மன்னிக்கனும்... உங்க நல்ல மனசு தெரியாம உங்கள பத்தி தப்பா நெனச்சிப் பேசிட்டோம்... எங்களை மன்னிச்சிடுங்கம்மா...".என மல்லிகா கூற, அதை ஆமோதித்தார் லட்சுமணன்...
"அச்சச்சோ நமக்குள்ள எதுக்கு மன்னிப்பு அது இதுன்னு பெரிய வார்த்தையெல்லாம்... இனி என் மருமகள் என் பொறுப்பு... இவளை என் பொண்ணு மாதிரி பார்த்துக்க வேண்டியது என் கடமை..." என்று கூறியவர், "அம்மாடி நாம பேசிக்கிட்டே இருந்ததுல என் மருமகளுக்கு இந்த மீன் வறுவலை வெக்காம விட்டுட்டேனே..." என்று மாமியார் மீன் வறுவலை தன் மருமகள் தட்டில் வைத்தார்...
தன் மாமியாரின் கைகளைப் பிடித்துக்கொண்ட அனிஸ்ரீ, "அத்தை... உங்களை மாதிரி ஒருத்தங்க எனக்கு மாமியாரா கிடைச்சதுக்கு நான் புண்ணியம் பண்ணியிருக்கணும்... மருமகளையும் தன் பொண்ணு மாதிரி நேசிக்க ஆரம்பிச்சிட்டா, எந்த மருமகளும் தன்னோட மாமியார மாமியாரா பார்க்கமாட்டா... அம்மாவாதான் பார்ப்பா... அப்படி நடந்துச்சின்னா... 'முதியோர் இல்லம்' அப்படிங்கற வார்த்தையே அகராதியில இல்லாம போயிடும்... குழந்தைங்களுக்கும் தாத்தா பாட்டி பாசம் கிடைக்கும்... குழந்தைங்களுக்கு படிப்பறிவுக்குக் கூடவே, உங்களை மாதிரி அனுபவமிக்கவங்களோட பட்டறிவும் சேரும்போது, இன்னும் நல்லவங்களா வளருவாங்க... அடுத்த தலைமுறை ஒரு நல்ல சமுதாயமா உருமாறும்..." என உணர்ச்சி பொங்க கூறியவள், "எனக்கு இனி ரெண்டு அம்மா... உங்களையும் சேர்த்து..." என்று அனிஸ்ரீ அழகாய் சிரித்து ஆசையாய் தன் மாமியாரைக் கட்டிக்கொண்டாள்...
தன் மருமகளையும், அவளின் மருமகளையும் பார்த்து அழகாய் சிரித்துக் கொண்டிருந்தார் பங்கஜம்... வரவேற்பறையில் மாட்டியிருந்த புகைப்படம் வாயிலாக...