All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கலாபம் கொ(ல்)ள்(லு) ளும் காதலா!!!’ - இரண்டாம் பாகம்

Status
Not open for further replies.

Sasimukesh

Administrator
"இன்னும் என்ன யோசனை? போ..." அவன் சொன்னதும்...



சகுந்தலா அவன் வாங்கி வந்த பைகளை உருட்டலானாள். அனைத்து உடைகளையும் எடுத்து பார்த்தவளுக்கு எதைப் போடுவது என்று தெரியவில்லை. அவளது குழப்பத்தைக் கண்டு அவனே,



"அந்தப் பிங்க் கலர் டிரெஸ் உனக்கு அழகா இருக்கும். அதைப் போடு." என்று சொல்ல...



"இல்லை, எனக்கு மஞ்சள் தான் பிடிக்கும்." என்று ஏட்டிக்கு போட்டி பேசியவள் எல்லா உடைகளையும் எடுத்துக் கொண்டு உடை மாற்றும் அறைக்குச் சென்றாள்.



சில நிமிடங்களில் வெளியில் வந்த சகுந்தலாவை கண்டு சக்தீஸ்வரன் இன்ப அதிர்ச்சியுடன் எழுந்து நின்றான். ஏனெனில் அவள் அவன் சொன்ன இளஞ்சிவப்பு சுடிதாரை தான் அணிந்து நின்றாள். அவன் வாங்கிக் கொடுத்த உடை அவளது மேனியில் கச்சிதமாகப் பொருந்தி இருந்தது. அவன் அவள் அருகே வந்து அவளைச் சுற்றி பார்த்தவன்,



"ரொம்ப அழகா இருக்கு சக்கு." என்று சொல்ல...



அவள் அதற்குப் பதில் சொல்லாது, "போவோமா?" என்று கூற...



"இப்படியேவா? கொஞ்சம் இரு." என்றவன் அலமாரியை திறந்து வைர நகை பெட்டியை எடுத்து அவளிடம் நீட்டியபடி, "இதைப் போட்டுட்டு வா." என்க...



"வேண்டாம்..." என்றவளது முகம் வேதனையில் கசங்கியது.



"நீ கேட்டதும்... ஏன், எதுக்குன்னு கேள்வி கேட்காம நான் வாங்கிக் கொடுத்த முதல் நகை இது. இதில் என்னோட தூய அன்பு மட்டும் தான் இருக்கு." என்றவனை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகள் அன்றைய நினைவில் கலங்கியது.



"இரு, நானே போட்டு விடறேன்." என்றவன் அந்த நகையை அவளுக்கு அணிவிக்கலானான்.



அரசன் இங்கு அரசிக்கு சேவகனாகி போனான். பெண்ணவள் தான் ஆணவனின் சிறு ஸ்பரிசத்தில் நெளிந்தபடி நின்றிருந்தாள். அவனோ காரியம் ஒன்றே கண் என்பது போல் நகையை மாட்டி விட்டுக் கொண்டிருந்தான். அதைக் கண்டும் அவளது மனம் சுணங்கியது. அவனுக்குத் தன்னைப் பிடிக்கவில்லை என்று... பெண் மனம் கடிகாரம் பெண்டுலம் போன்று அங்குமிங்கும் அலைபாய்ந்தது.



"இப்போ எப்படி இருக்கிறன்னு நீயே பார்." அவன் அங்கிருந்த கண்ணாடியை காட்டினான்.



"எனக்கு என்ன? நான் எப்பவும் அழகு தான்." அவள் எப்போதும் போல் அமர்த்தலாய் சொல்ல... அதைக் கேட்டு அவன் வாய்விட்டுச் சிரித்தான்.



கண்ணாடி வழியே தெரிந்த கணவனது சிரிப்பினை கண்டு அவளது காதல் மனம் ஒரு கணம் மயங்கி தான் போனது. அவளது பார்வையை உணர்ந்து அவன் என்னவென்று புருவங்களை உயர்த்த... அதில் சுயம் உணர்ந்தவள் அவனை முறைத்துக் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.



"சரி, வா... போகலாம்." அவன் அவளது கோபத்தை, வெறுப்பை எதையும் கண்டு கொள்ளவில்லை. எல்லாவற்றையும் சிறுபிள்ளை செயல் என்றெண்ணி புறம் தள்ளினான்.



இருவரும் புறப்பட்டுச் சகுந்தலா வீட்டிற்குச் சென்றனர். அவர்களைக் கண்டதும் கணபதி, விஜயா இருவரும் வாயிலுக்கே வந்து வரவேற்றனர். இது சக்தீஸ்வரனுக்கான மரியாதை என்பதைச் சகுந்தலா உணர்ந்தே இருந்தாள். நாராயணனும், பத்மினியும் புன்னகை முகமாய் இருவரையும் வரவேற்றனர். சஞ்சய் கூட இவர்களை வரவேற்க தான் செய்தான். கன்னிகா மட்டும் அமைதியாக நின்றிருந்தாள். விலையுயர்ந்த சுடிதார், வைர நகை அணிந்து வந்த சகுந்தலாவை கண்டு அவளுக்குப் பொறாமையாக இருந்தது. அதிலும் சக்தீஸ்வரன் சகுந்தலாவின் கரத்தினை விடாது பற்றிக் கொண்டிருந்தது கண்டு அவளுக்கு அப்படியொரு எரிச்சல் வந்தது.



காதலர்களான அவர்கள் கூட விலகி தான் இருந்தனர். அதிலும் சஞ்சய் எல்லோர் முன்னிலையில் அவளது கரத்தினைப் பிடிப்பதற்கு அத்தனை யோசிப்பான். காதலன் சஞ்சய் வேறு, கணவன் சஞ்சய் வேறு என்பதை அவன் அவளுக்கு உணர்த்திக் கொண்டே இருந்தான். கன்னிகா அந்தப் பொறாமையில் உள்ளுக்குள் வெந்து கொண்டிருந்தாள். சகுந்தலா தனியே மாட்டினால் அவளை ஒருவிழியாக்க கன்னிகா வஞ்சம் வைத்து காத்து கொண்டிருந்தாள்.



நாராயணன் எப்போதுமே எல்லோர் முன்னிலையிலும் சக்தீஸ்வரனுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுப்பான். அது போல் தான் இன்றும் அவன் நடந்து கொண்டான். சஞ்சய்க்குச் சக்தீஸ்வரனை கண்டு பிரமிப்பு கலந்த மரியாதை. அதனால் அவன் சக்தீஸ்வரனிடம் பணிவுடன் பேசி கொண்டிருந்தான். அதைக் கண்டு கன்னிகாவுக்கு எரிச்சலாக வந்தது.



"சக்கு இங்கே வா..." இந்திராணி தங்கையை அழைக்க...



"எதுக்கு இந்துக்கா? சக்கு இங்கேயே இருக்கட்டும்." சக்தீஸ்வரன் மனைவியைத் தன்னுடனே வைத்துக் கொண்டான். அவள் யாரிடமும் காயப்பட்டு விடக் கூடாது என்பதில் அவன் கவனமாக இருந்தான்.



ஏனோ சகுந்தலாவும் கணவனது வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு அமைதியாக இருந்தாள். அவளுமே யாரிடமும் சுமூகமாகப் பேசும் மனநிலையில் இல்லை.



மதிய விருந்து தடபுடலாக நடந்தது. உணவு நேரத்தின் போது சர்வேஸ்வரன், உதயரேகா, ஆகாஷ், வித்யா நால்வரும் அங்கு வந்து கலந்து கொண்டனர். சிரிப்பும், சந்தோசமுமாய் விருந்து களை கட்டியது. சகுந்தலாவும் தனது கூட்டில் இருந்து மெல்ல வெளியில் வர தொடங்கினாள். அவளது புன்னகை முகத்தைத் திருப்தியாகப் பார்த்த சக்தீஸ்வரன் இன்று ஒரு பிடி சோறு அதிகம் உண்டான்.



விருந்து முடிந்து எல்லோரும் கிளம்பி தங்களது வீட்டிற்கு வந்து விட்டனர்.



கன்னிகா மட்டும் யோசித்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள். எப்படிச் சகுந்தலாவை காயப்படுத்தலாம் என்று... அதற்கான சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து அவள் காத்து கொண்டிருந்தாள்.



இரவு உணவுக்கு எல்லோரும் சக்தீஸ்வரன் வீட்டிற்கு வந்திருந்தனர். சகுந்தலா வீட்டாளாய் எல்லோரையும் வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்தாள். பெண்கள் அனைவரும் தனியே அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். கன்னிகா இது தான் சந்தர்ப்பம் என்று எண்ணியவளாய் விழிகள் பளபளக்க அக்காவை பார்த்தவள்,



"சக்கு, அப்புறம் என்ன? ரொம்பச் சந்தோசமா இருக்கிற போல? நேத்து ஒரே மஜாவோ?" என்று கேலியாய் கேட்டவள் பின்பு தலையில் அடித்துக் கொண்டு, "நான் ஒருத்தி... இதைப் போய் உன் கிட்ட கேட்டுக்கிட்டு... உனக்குத் தான் ஏற்கெனவே எக்ஸ்ப்ரீயன்ஸ் இருக்கே. அதுவும் தாலி கட்டுறதுக்கு முன்னாடியே." என்று அக்காவை ஏளனமாய்ப் பேசி அவமானப்படுத்த...



உதயரேகா, பத்மினி, வித்யா மூவரும் பதில் கூற இயலாது அமைதியாக இருந்தனர். அவர்களது வீட்டுப் பையனிடம் அல்லவா தவறு இருக்கிறது.



"கனி, பேசாம இரு. வந்த இடத்தில் வம்பிழுத்துக்கிட்டு..." இந்திராணி தான் தங்கையை அதட்டினாள்.



"நான் என்ன பொய்யா சொன்னேன்? உண்மையைத் தானே சொன்னேன்." கன்னிகா நொடித்துக் கொண்டவள், "உண்மை என்பதால் தான் சக்குவே அமைதியா இருக்கிறாள். நீங்க எதுக்கு அவளுக்கு வக்காலத்து வாங்கிறீங்க?" என்று விசமமாய்ச் சகுந்தலாவை பார்த்தாள்.



சகுந்தலா கண்கள் கலங்க அங்கிருந்து எழுந்து சென்று விட்டாள். மனைவி கண்ணீர் வழிய செல்வதைச் சக்தீஸ்வரன் கண்டு விட்டான். அவன் அவளின் பின்னேயே சென்றான்.



"சக்கு நில்லு..." அவன் சொன்னதும் அவள் நின்றாள். ஆனால் திரும்பி பார்க்கவில்லை.



"எதுக்கு அழுற?"



"என் விதிய நெனச்சு அழறேன். அழுறதுக்குக் கூடச் சுதந்திரம் இல்லையா?" அவள் கோபத்துடன் கத்த...



"ஹேய், குழந்தை உண்டாகி இருக்கும் போது இவ்வளவு கோபம் ஆகாது." அவன் ஆறுதலாய் அவளின் தோள்களில் கை வைத்து அவளை ஆறுதல்படுத்த... அவள் அமைதியாக நின்றாள்.



"என்னாச்சு? யாராவது ஏதாவது சொன்னாங்களா? யாராவது என்ன? கனி எதுவும் சொன்னாளா?" அவன் நேரிடையாகக் கேட்டான். மதியத்தில் இருந்து அவன் தான் கன்னிகாவை கவனித்துப் பார்த்து கொண்டிருக்கிறானே. அவளது பார்வையே சரியில்லையே.



"ஆமா..." என்றவள் அனைத்தையும் அவனிடம் சொல்லிவிட்டு, "உங்களால தான் நான் அசிங்கப்பட்டு நிக்கிறேன்." என்று கூற...



"இதில் என்ன அசிங்கம் இருக்கு? கணவன், மனைவிக்கு இடையில் நடக்கும் தாம்பத்தியம் புனிதம்."



"அப்போ நாம புருசன், பொஞ்சாதி இல்லையே." என்றவளுக்குக் கண்ணீர் முட்டி கொண்டு வந்தது.



"அதுக்கு முன்னாடியே நாம புருசன், பொஞ்சாதி தான். வா, என் கூட..." என்றவன் அவளது கையைப் பிடித்துக் கொண்டு நடந்தான்.



அவள் திகைப்பாய் பார்த்தபடி அவனுடன் நடந்தாள். அவன் நேரே கன்னிகா முன் வந்து நின்றவன், "நீ சக்குவை பார்த்து என்ன சொன்னியோ... அதை இப்போ சொல்லு." அவன் கோபமாய்க் கேட்க...



முதலில் கன்னிகா பயத்தில் எச்சிலை விழுங்கியவள் பிறகு அவனை மிதப்பாகப் பார்த்துக் கொண்டு, "நான் என்ன பொய்யா சொன்னேன்? உண்மையைத் தானே சொன்னேன். கல்யாணத்துக்கு முன்னாடி குழந்தை உண்டானால்... எல்லோரும் இப்படித்தான் பேசுவாங்க." என்று பதிலடி கொடுக்க...



"கனி, அதிகம் பேசுற. அமைதியா இரு." இந்திராணி அப்போதும் தங்கையைக் கண்டு எச்சரித்தாள்.



"இங்கே பார்..." கன்னிகாவை பார்த்து சொன்னவன் பிறகு மற்றவர்களிடமும் திரும்பி தனது அலைப்பேசியை எடுத்து காட்டி, "எல்லோருக்கும் சேர்த்து தான். எல்லோரும் இங்கே பாருங்க. இது எங்களுடைய மேரேஜ் சர்ட்டிபிகேட். இதில் இருக்கும் தேதியை நல்லா பாருங்க. சரியா இரண்டு மாதங்களுக்கு முன்... அதாவது குழந்தை உண்டாவதற்கு முன்... இந்த ஆதாரம் போதுமா?" என்று அவன் கேட்க...



எல்லோரும் ஆச்சிரியமும், திகைப்புமாய் 'எப்புட்றா' என்பது போல் அவனைப் பார்த்தனர்.



"என்னால் எல்லாத்தையும் மாத்த முடியும். மாத்துவேன். சக்குவுக்காக எல்லாத்தையும் மாத்துவேன். அப்படி இருக்கும் போது ஆப்டரால் கல்யாண தேதியை என்னால் மாத்த முடியாதா?" சக்தீஸ்வரனின் சர்வ வல்லமையை உணர்ந்து அனைவரும் வாயடைத்து போயினர்.



சகுந்தலாவின் விழிகள் கலங்கிய போதிலும், அவளின் இதழ்களில் மெல்லிய புன்னகை ஒன்று உதித்தது. அவளது காயமும் அவனே! அவளது மருந்தும் அவனே! அவளது எல்லாமும் அவனே! இனி அவன் அதை அவளுக்கு மெல்ல புரிய வைப்பான்.



"இனி எனக்காக அழ வேண்டாம்

இங்குக் கண்ணீரும் விழ வேண்டாம்

உன்னையே எண்ணியே வாழ்கிறேன்"



தொடரும்...!!!
 

ஶ்ரீகலா

Administrator

Sasimukesh

Administrator
அத்தியாயம் : 26



காலையில் எப்போதும் போல் எழுந்தான் சக்தீஸ்வரன். படுக்கையில் அமர்ந்தவனின் விழிகளுக்கு அவனது மனைவி அழகாகத் தரிசனம் கொடுத்தாள். அதிலும் அவள் குளித்து முடித்து, நெற்றியில் விபூதி பட்டை அடித்துக் கொண்டு சமத்தாக அமர்ந்து இருப்பதைக் கண்டு அவனுக்குச் சந்தேகமாக இருந்தது. அவள் இப்படி அமைதியாக இருக்கும் ஆள் கிடையாதே என்று... அதிலும் அவள் கரங்களில் ஆங்கிலப் பத்திரிக்கையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த தோரணை கண்டு அவனுக்குச் சிரிப்பு வந்தது. அவளுடன் விளையாடி பார்க்க அவனுக்கு ஆசை எழுந்தது.



"சக்கு, பேப்பர் தலைகீழா இருக்கு..." என்று அவன் சொல்ல...



சகுந்தலா அவன் சொன்னதை நம்பி நாளிதழை வேகமாகத் தலைகீழாய் திருப்பினாள். பிறகு தான் அதிலிருந்த ஆங்கில எழுத்துகள் தலைகீழாக இருப்பதைக் கண்டு புரிந்தவளாய் அவள் அவனை முறைத்தாள். அவளது விழிகள் அவனை முறைத்தாலும்... அவளது இதழ்களின் ஓரம் ஏன் சிரிப்பில் துடிக்கின்றது? அவன் யோசித்தபடி நேரே குளியலறைக்குள் புகுந்தான். அடுத்த நொடி அவன்,



"சக்கு..." என்று கத்தி கொண்டே வெளியில் வந்தான்.



கணவனுக்கு விசயம் தெரிந்து விட்டது என்றதும்... இதுவரை மனதிற்குள் சிரித்துக் கொண்டிருந்த சகுந்தலா இப்போது வெளிப்படையாக வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தாள். சக்தீஸ்வரன் ஒரு கணம் அவளது சிரிப்பினை தாயின் வாஞ்சனையுடன் பார்த்தான். அடுத்தக் கணம் அவள் முன்னே வந்து நின்றவன்,



"என்னடி பண்ணி வச்சிருக்க? வர வர உனக்குக் கொழுப்பு கூடி போச்சு?" என்று அவன் கோபமாய் அவளைத் திட்டினான். இல்லை, இல்லை அப்படி நடித்தான். அவளிடம் அவனால் கோபம் கொள்ள முடியுமா? அதுவும் குழந்தை உண்டாகி இருப்பவளிடம்...



காலையில் சீக்கிரமே எழுந்து விட்ட சகுந்தலா எப்போதும் போல் குளித்து முடித்து மாமனார், மாமியாருக்கு பூஜைக்கு உதவி செய்தாள். பிறகு அறைக்கு வந்தவளுக்கு நேரம் போகவில்லை. அப்போது தான் அயர்ந்து தூங்கும் கணவனைக் கண்டாள். கணவன் மீதிருந்த கோபத்தைக் காட்ட வழி தெரியாது தவித்துக் கொண்டிருந்த சகுந்தலாவின் மூளையில் ஒரு திட்டம் பளிச்சிட்டது. அடுத்த நொடி அவள் தாமதியாது அதைச் செயல்படுத்தி விட்டாள்.



அவள் மெல்ல சக்தீஸ்வரனின் தலைமுடியை வாரி உச்சி கொண்டை போட்டவள்... பின்பு அவனது முகத்தில் பவுடரை அதிகமாய்ப் பூசி... அவனது நெற்றி, கன்னத்தில் கண் மை கொண்டு பொட்டு வைத்து... அவனைத் திருஷ்டி பொம்மையாக்கி இருந்தாள். அதைக் கண்டு தான் அவன் கோபம் கொள்வது போன்று நடித்தான். அவளும் விழுந்து விழுந்து சிரித்தது.



"இப்போ தான் அழகா இருக்கீங்க கேப்டன்." அவளது புன்னகையில், அவளது சேட்டையில் பழைய சகுந்தலா எட்டிப்பார்ப்பதை அவன் கண்டு கொண்டான். அவன் மனம் நிறைந்து போனான். இந்த அழகிய நொடியை அவன் நீட்டிக்க விரும்பினான்.



"என்னைய திருஷ்டி பொம்மையாக்கிட்டுச் சிரிக்கவா செய்ற... உன்னை?" அவன் அவளை அடிப்பது போல் அருகில் வர...



"என்னைய பிடிக்க முடியாதே." அவள் பழிப்பு காட்டியபடி ஓட...



"எங்கேடி ஓடுற? நில்லு..." அவன் அவளின் பின்னேயே ஓடி சென்று துரத்தினான்.



அந்த அறை ஓடி பிடித்து விளையாடுவதற்கு ஏற்றார் போன்று பெரிதாய் இருந்தது. சகுந்தலா அங்குமிங்கும் ஓடி அவனது கைகளில் அகப்படாது அவனுக்குப் போக்கு காட்டினாள். அவனும் சளைக்காது அவளைப் பிடிப்பதற்காக அவளின் பின்னே ஓடினான். அவள் கட்டில் மீதேறி தப்பிக்க நினைக்க... அவன் பாய்ந்து வந்து அவளைப் பிடித்தவன் அப்படியே அவளோடு கட்டிலில் சரிந்தான்.



இருவரும் மூச்சு வாங்க ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். இருவரது முகத்திலும் அத்தனை சிரிப்பு. அவனது அலங்காரம் கண்டு அவள் நகைக்க... அவளது புன்னகை கண்டு அவன் மகிழ்ந்தான். அவன் அவளை இறுக அணைத்தபடி இருந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருந்ததால் அந்த அணைப்பை உணரவில்லை.



"என்னையவா கோமாளி ஆக்கிற? இருடி, உன்னை என்ன பண்றேன்னு பார்..." வில்லன் போன்று கூறிக் கொண்டே அவன் அவளை நோக்கி குனிந்தான்.



அவன் தனது முகம் நோக்கி குனிவதை அவள் கண்டாலும் அதை உணரவில்லை. அப்போதும் அவள் அவனைக் கண்டு கேலியாகச் சிரித்துக் கொண்டிருந்தாள். அவன் அவளது முகத்தோடு முகம் வைத்து தனது முகத்தில் இருந்த பவுடரை எல்லாம் அவளது முகத்திற்கு மாற்றிக் கொண்டிருந்தான். அதேபோன்றே தனது நெற்றியில், கன்னத்தில் இருந்த மை பொட்டினை அவளது நெற்றி, கன்னத்திற்கு இடம் மாற்றிக் கொண்டிருந்தான். அவனது செயலில் சகுந்தலா மின்சாரம் தாக்கியது போன்று அப்படியே சிலையாய் சமைந்து போனாள்.



"இன்னொரு முறை இப்படிப் பண்ணின? என்னோட தண்டனை வேற மாதிரி இருக்கும்." அவன் போலியாய் அவளை மிரட்ட... அவளோ பேவென விழித்தாள்.



"ஏய் சக்கு... என்னாச்சு?" அவன் அவளது கன்னத்தைத் தட்டி எழுப்ப...



"ஆங்..." என்றபடி அவள் விழிக்க...



"என்னடி பார்க்கிற? இதுக்குப் பனிஷ்மென்ட் கொடுத்தே ஆகணுமே." அவன் வில்லன் போன்று தாடையைத் தடவ...



"என்னது தண்டனையா? நான் வரலை இந்த ஆட்டத்துக்கு..." அவள் அவனது பிடியில் இருந்து நழுவி ஓடி விட்டாள்.



மனைவி செல்வதைப் பார்த்திருந்தவன் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியோடு அவன் குளிக்கச் சென்றான்.



அன்று தாலி பிரித்துக் கோர்க்கும் வைபவம் இருந்ததால் பெரியவர்கள் இரு ஜோடிகளையும் கோவிலுக்குச் சென்று வருமாறு கூறினர். அப்போது பார்த்து தான் பத்மினிக்கு மருத்துவமனையில் இருந்து அழைப்பு வர... அவள் நேரே வைபவத்திற்கு வந்துவிடுவதாகக் கூறிவிட்டு கிளம்பினாள். நாராயணன் அவளை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டாள். அதனால் சக்தீஸ்வரன், சகுந்தலா இருவரும் மட்டும் கோவிலுக்குச் செல்வதாய் முடிவு செய்யப்பட்டது.



அறைக்கு வந்து சக்தீஸ்வரன் தனது உடையை மாற்றிக் கொண்டு மனைவிக்காகக் காத்திருந்தான். அவள் இன்னமும் உடை மாற்றிக் கொண்டிருந்தாள். அவன் சோபாவில் அமர்ந்து அலைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தான். சற்று நேரத்தில் உடை மாற்றும் அறை கதவு திறக்கும் ஒலியில் அவன் நிமிர்ந்து பார்த்தான். அங்கு அவனது மனைவி புடவையைக் கணுக்கால் தெரிய தூக்கி கட்டி கொண்டு நின்றிருந்தாள்.



"நான் ரெடி. போகலாம்..." என்றபடி அவள் முன்னே நடக்க...



அவன் ஒன்றும் பேசாது அவளின் பின்னேயே சென்றவன் அவள் கதவை திறக்கும் முன்... அவளைப் பின்னால் இருந்து அலேக்காகத் தூக்கினான்.



"கேப்டன், என்னைய விடுங்க..." அவனது பிடியில் இருந்து அவள் துள்ள...



"என்னைய கேப்டன்னு கூப்பிட உனக்கு இத்தனை நாளாச்சா?" அவன் கேட்க...



அவளது காதோரம் அவனது மீசை ரோமம் உராய்ந்ததில் அவளுக்குத் தான் என்னவோ போலிருந்தது.



"கீழே இறக்கி விடுங்க..." அவள் துள்ள...



"இறக்காம... தூக்கி வச்சிருக்கவா முடியும்?" என்று கேட்டவன் உடை மாற்றும் அறைக்குள் சென்று அவளைக் கீழே இறக்கி விட்டான்.



"என்னா வெயிட்... அப்பா முடியலை." அவன் கரங்களை உதறிக் கொள்ள...



"நான் ஒண்ணும் அதிக வெயிட் இல்லை." அவள் முறைக்க...



"அதிக வெயிட் இல்லை. ஜஸ்ட் எண்பது கிலோ இருப்பியா?" அவன் அவளை மேலும் கீழுமாய்ப் பார்த்தபடி கேலி செய்ய...



"நான் ஐம்பது கிலோ தான்." அவள் தரையில் காலை உதைத்துக் கொண்டு சொல்ல... அவளது இயல்பான செயலில் அவன் நிம்மதியானான்.



"பிஃப்டி கேஜி தாஜ்மஹால் எனக்கே எனக்கா?" அவன் இருகரங்களையும் விரித்தபடி அவள் அருகே வர...



அவள் அவனது கைகளுக்குக் கீழே குனிந்து விலகி நின்றவள், "உங்களுக்குக் கிடையாது." என்று அவள் விரைத்துக் கொண்டு பதில் சொல்ல...



"டெரர் சக்கு ரிட்டன்ஸ்." என்றவனைக் கண்டு அவள் புரியாது பார்த்தாள்.



"புடவையை இப்படித்தான் காட்டுவாங்களா? ஒழுங்கா கட்ட மாட்டியா?" அவன் அவளைக் கண்டு சத்தம் போட...



"வேலை செய்ய இது தான் வசதியா இருக்கும்." அவள் குனிந்து தன்னைப் பார்த்து கொண்டாள்.



"இப்போ நாம கோவிலுக்குப் போறோம். வேலைக்கு இல்லை." என்றவன், "இங்கே வா... நான் உனக்குக் கட்டி விடறேன்." என்க...



"நீங்களா? முடியாது..." அவள் மறுத்துப் பின்னால் நகர...



"நான் தொடாம தான் பிள்ளை வந்துச்சா?" அவன் கேலியாய் கேட்க...



"அது..." அவள் பேவென விழிக்க...



"முதல்ல இந்தப் புடவையைக் கழட்டு." அவன் சொல்ல...



சகுந்தலா அவன் சொன்னதைச் செய்யாது அப்படியே நின்றிருக்க... சக்தீஸ்வரன் தானே அவளது புடவையை அவிழ்க்க தொடங்கினான்.



"என்ன பண்றீங்க கேப்டன்?" அவள் நெஞ்சோடு புடவையைப் பிடித்துக் கொள்ள...



"உன்னைய ஒண்ணும் பண்ண மாட்டேன். பிராமிஸ்..." என்றவன் அவளது புடவையை முற்றிலும் உருவி எடுத்து விட்டான்.



அவன் மீண்டும் அந்தப் புடவையைக் கட்ட நினைத்து அதைப் பார்க்க... அதில் ஏகப்பட்ட சுருக்கங்கள்...



"வேற புடவை கட்டலாம்." என்றவன் தானே ஒரு புடவையை அவளுக்குத் தேர்வு செய்து கொடுத்தான்.



ஊதாப்பூ நிறத்தில், இளஞ்சிவப்பு கரையிட்ட மென்பட்டினை எடுத்து அவன் அவளின் முன்னே நீட்டினான்.



"ஜாக்கெட் மாத்திட்டு வா." என்றவன் வெளியில் சென்று விட்டான்.



அவன் சென்ற பிறகே சகுந்தலாவுக்கு மூச்சு வந்தது. அவள் இரவிக்கையை மாற்ற தொடங்கினாள். அதேசமயம் சற்று முன்னர் நடந்ததை அவள் நினைத்து கொண்டிருந்தாள்.



'இது தான் நீ கோபப்படும் லட்சணமா?' அவளது மனசாட்சி அவளைக் காறி துப்பியது.



தனக்குச் சரியாகக் கோபப்படத் தெரியவில்லையோ என்று அவளுக்கே சந்தேகமாகி போனது. இன்னும் கொஞ்சம் பயிற்சி வேண்டுமோ? அவள் தனக்குள் சிந்தித்தாள். அவளுக்குத் தெரியவில்லை, அவள் என்ன செய்தாலும் அவன் கோபப்படப் போவதில்லை என்று...



சகுந்தலா இரவிக்கையை மாற்றிக் கொண்டு புடவையைக் கொண்டு நெஞ்சினை மறைத்துக் கொண்டு அறையை எட்டிப்பார்த்தாள்.



"இங்கே வா..." அங்கிருந்த கண்ணாடி முன்னே அவளை அழைத்து வந்து நிறுத்தினான் சக்தீஸ்வரன்.



"புடவையைக் கொடு..." என்றவன் அதன் பின் அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. ஒரு பார்வை தவறாகப் பார்க்கவில்லை.



சக்தீஸ்வரன் அழகாகப் புடவை கட்டுவதைக் கண்டு சகுந்தலா இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தாள். அவனுடைய நாசூக்கு, நறுவிசு எதுவும் அவளுக்குத் தெரியாது. அவளுக்கு வரவும் வராது.



"இப்போ எப்படி இருக்கிறேன்னு நீயே பார்?" அவன் கண்ணாடி முன் அவளைத் திருப்பிக் காட்டிய போது... அவள் பிரமித்துத் தான் போனாள். அவன் அவ்வளவு அழகாக அவளுக்குப் புடவையைக் கட்டி விட்டிருந்தான்.



"இனி நீ இப்படித்தான் புடவை கட்டணும்." என்றவனைக் கண்டு அவள் ஒன்றும் சொல்லாது செல்ல...



"எனக்கு எதுவும் பரிசு கிடையாதா?" அவன் அவளின் பின்னேயே சென்றபடி கேட்க...



"பரிசு தானே கொடுக்கிறேன்." என்றபடி அவன் அருகே வந்தவள் அவனைக் கடிப்பது போல் பாவனைச் செய்ய...



"ஐயோ ரத்த காட்டேரி..." என்று அவன் அலறியடித்துக் கொண்டு ஓட... அவனைக் கண்டு சகுந்தலாவின் உதடுகளில் அவளையும் அறியாது புன்னகை தோன்றியது,



**************************



"இறங்கு சக்கு..." சக்தீஸ்வரன் சகுந்தலாவுக்காகக் கார் கதவினை திறந்து வைத்துக் காத்திருக்க...



"எனக்குக் கை இல்லையா? நான் கதவை திறக்க மாட்டேனா?" அவள் அவனிடம் காய்ந்தாலும்... அவள் இராணியின் தோரணையுடன் காரிலிருந்து இறங்கினாள்.



"உன் பொன்னான கைகள் புண்ணாகலாமா? உதவிக்கு வரலாமா?" அவன் பதிலை பாட்டாகப் பாடி காட்டி கண்சிமிட்டி புன்னகைத்தான்.



"உங்களுக்குப் பைத்தியம் தான் பிடிச்சிருக்கு." அவள் துடுக்காகப் பேசிய பிறகே தான் பேசிய வார்த்தைகளின் வீரியத்தை உணர்ந்தாள். அவள் பயத்துடன் அவனைப் பார்த்தவள்,



"கேப்டன், தலையில் கொட்டிராதீங்க. மொட்டை தலை. ரத்தம் பீய்ச்சி அடிக்கும். பொறவு கொலை கேசாகிடும்." என்று பாவமாகச் சொல்ல...



"பயம் இருக்குல்ல... அப்புறம் எதுக்குடி வீராப்பா பேசிக்கிட்டு இருக்க?" அவன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு கேட்டான்.



'ஆத்தி, இன்னைக்கு மண்டை உடைஞ்சது.' அவள் மொட்டை தலையில் கை வைத்துக் கொண்டு பாவமாக நிற்க...



மனைவியின் தோற்றம் கண்டு சக்தீஸ்வரன் பக்கென்று சிரித்து விட்டான். அதில் சற்றுப் பயம் தெளிந்தவள் அவனைக் கண்டு முறைத்தாள்.



"நீ சொன்னது என்னவோ உண்மை தான். எனக்குப் பைத்தியம் தான் பிடிச்சிருக்கு." என்றவனின் பார்வை அவளை மையலாய் வருடி சென்றது.



அந்த மக்குக்கு அவன் நேரிடையாகச் சொன்னாலே புரியாது. இதில் பார்வையின் அர்த்தம் எங்ஙனம் புரியும்?



"உங்களுக்கே தெரிஞ்சிருக்கு பார்த்தீங்களா? நீங்க நிமிசத்துக்கு நிமிசம் குணத்தை மாத்துறீங்க. வித்தியாசமா நடந்துக்கிறீங்க." அவள் சொல்ல...



"இப்போ தான்டி நான் சரியா நடந்துக்கிறேன்." அவன் அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டு சொன்னான்.



"நீங்க எப்படி நடந்தாலும் எனக்குக் கோபமா வருது. உங்க மேல நான் கோபமா இருக்கேன்." என்றவள் முன்னால் நடக்க...



"ஓ... உங்க ஊருல இப்படித்தான் கோபப்படுவாங்களா? சரி, இனிமேல் நீ இப்படியே கோபப்படு." என்று கேலி போல் சொன்னவன் அவளுடன் இணைந்து நடந்தான்.



கோவிலினுள் வந்ததும் இருவரும் எதுவும் பேசாது அமைதியாக வந்தனர். அர்ச்சனை தட்டை வாங்கிக் கொண்டு அவன் நடக்க... அவளும் அவனுடன் நடந்தாள். இருவரும் கடவுளின் சந்நிதானத்தில் வந்து நின்றனர். அங்கிருந்த அர்ச்சகரிடம் சக்தீஸ்வரன் அர்ச்சனை தட்டை கொடுத்தான். அவர் வாங்கிக் கொண்டு சென்றதும் இருவரும் விழிகளை மூடி நின்றிருந்தனர். சக்தீஸ்வரன் கடவுளிடம் மும்முரமாக எதையோ வேண்டி கொண்டிருக்க... சகுந்தலாவோ தனக்குள் குழம்பியபடி நின்றிருந்தாள்.



சக்தீஸ்வரனுடன் தான் வெளியில் செல்ல போவதில்லை என்றும்... அவனும் தன்னை வெளியில் அழைத்துக் கொண்டு செல்ல மாட்டான் என்றும்... அவள் நினைத்து கொண்டிருந்தாள். இதோ இப்போது அவளது எண்ணம் தவறாகி போனது. அவன் எந்தவித சுணக்கமும் இன்றித் தன்னை அழைத்து வந்தது குறித்து அவளுக்குப் பெருத்த ஆச்சிரியமாக இருந்தது. அதுவும் திருமணத்திற்குப் பிறகு அவனது மாற்றம் அவளுக்குப் பெருத்த குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது. அவள் குழம்பி போய் நின்றிருந்தாள்.
 

Sasimukesh

Administrator
"தீபாராதனையைக் கண்ணில் ஒத்திக்கோங்கோ." அர்ச்சகர் குரலில் சகுந்தலா விழிகளைத் திறந்தாள்.



இருவரும் தீபாராதனையைக் கண்களில் ஒற்றிக் கொண்டு அர்ச்சனை தட்டை வாங்கிக் கொண்டனர். சக்தீஸ்வரன் குங்குமத்தை எடுத்து மனைவியின் நெற்றியில் அழுத்தமாய் வைத்து விட்டான். அன்றொரு நாள் சுமங்கலி பூஜையின் போது அவன் தனது நெற்றியில் குங்குமம் வைத்துவிடுவதற்கு அத்தனை தயங்கியது அவளது ஞாபகத்தில் வந்தது. தான் வலியுறுத்தியதும் தான் அவன் அவளுக்குக் குங்குமம் வைத்து விட்டான். அதுவும் நண்பன், அக்கறையுள்ளவன் என்கிற அடைமொழியோடு... இப்போது மட்டும் என்னவாம்? அவளது குழந்தை மனம் அவன் மீது கோபம் கொண்டது.



"இப்போ என்ன உறவுல குங்குமம் வச்சி விடுறீங்க?" அவள் கேலியாய் அவனைக் கண்டு கேட்டாள்.



அவன் நிதானமாக அவள் அருகில் வந்து கழுத்தில் கிடந்த மங்கலநாணை வெளியில் எடுத்து அதில் இருந்த தாலியை கையில் வைத்துக் கொண்டு, "இதைக் கட்டிய புருசன்ங்கிற உறவுல குங்குமம் வச்சு விடுறேன்." என்றவன் அந்தத் தாலியிலும் குங்குமம் வைத்து விட்டான்.



வேறு ஏதாவது சொல்லுவான்... மடக்கி விடலாம் என்று நினைத்தால்... என்ன இப்படிச் சொல்லுகின்றான்? அவள் தனக்குள் யோசித்துக் கொண்டிருந்தாள்.



"வா..." அவன் அவளை அழைக்க...



"உங்களுக்குச் சமமா நான் இல்லைன்னு தானே நீங்க என்னைக் கண்டபடி பேசி, விட்டுட்டு போனீங்க. இப்போ மட்டும் என்ன புருசன், பொஞ்சாதின்னு உரிமை கொண்டாடுறீங்க?" அவள் அவனைக் கண்டு கோபமாய்க் கேட்க...



"ம், போனவனை அப்படியே போக விட்டு இருக்கணும். எதுக்கு உன் வயித்தில் வளர்ற குழந்தைக்கு நான் தான் அப்பான்னு சொன்ன? அதுவும் எங்கப்பா கிட்ட?" அவன் புருவங்களை உயர்த்த...



"அது... மாமா தான் கேட்டாங்க." அவளது வாய் அவனுக்குப் பதில் சொன்னாலும்... அவளது மனம் தான் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாதா? என்று யோசித்தது.



"சும்மாவே உங்க மாமா என்னை முறைச்சிட்டு திரிவார். நீ இப்படிச் சொன்னால்... அவர் சும்மா விடுவாரா? கப்பல்ல பாதிக் கடல் தாண்டுனவனை அழைச்சிட்டு வந்து உன் கழுத்தில் தாலி கட்ட வச்சிட்டாரு. இனி தப்பிக்க முடியாதே. அதான் புருசன் ரோலை சரியா பண்ணலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்." என்றவனைக் கண்டு அவள் தான் குழம்பி போனாள். அதைக் கண்டு அவன் மனதிற்குள் நகைத்துக் கொண்டான். குழம்பிய குட்டையில் தானே மீன் பிடிக்க முடியும்.



சகுந்தலாவை அழைத்து வந்து கோவில் பிரகாரத்தில் அமர வைத்த சக்தீஸ்வரன், "தேவையில்லாம குழம்பாதே. நாம கணவன், மனைவி என்பதை மாற்ற முடியாது. எல்லாம் உன் வயிற்றில் இருக்கும் நம்ம குழந்தை போட்ட முடிச்சு இது. எல்லோருக்கும் திருமணம் கடவுள் போட்ட முடிச்சுன்னு சொல்லுவாங்க. ஆனா நமக்கு நம்ம குழந்தை போட்ட முடிச்சு. குழந்தைக்காக நாம நம்ம உறவை ஏத்துக்கிட்டு தான் ஆகணும். நீ இப்படி மனசை போட்டு குழப்பிக்கிறதால குழந்தையோட ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும். குழந்தையோட வளர்ச்சி பாதிக்கப்படும். குழந்தைக்காக நீ சந்தோசமான மனநிலையில் இருக்கணும்." என்று அறிவுரை சொல்ல...



"கடவுளே, இனி நான் குழம்ப மாட்டேன். என்னோட குழந்தை..." என்றவளை கண்டு அவன், "நம்ம குழந்தை..." என்க...



அவள் அவனை முறைத்து விட்டு, "இது என்னோட குழந்தை தான். குழந்தை என்னைய மாதிரி லூசா பொறக்காம... அவுக அப்பா மாதிரி புத்திசாலியா பொறக்கணும்." என்று பயபக்தியுடன் கடவுள் சந்நிதானத்தை நோக்கி வேண்டி கொள்ள...



மனைவியின் வார்த்தைகளில் சுணங்கிய அவனது மனது அடுத்து அவள் வேண்டியதை கேட்டு மலர்ந்தது. அவனது முகமும் மலர்ந்து விகசித்தது.



"நீ லூசுன்னு யாரு சொன்னது?" அவன் முடிப்பதற்குள் அவள் குறுக்கிட்டு,



"நீங்க தான்... மூச்சுக்கு முன்னூறு தடவை என்னைய லூசுன்னு சொல்லுவீங்களே." என்று குறை கூற...



"அப்படியா? என் வாயை உடைச்சுருவோமா? என்னைக்கு மாதிரி..." அவன் கண்ச்சிமிட்ட... அவன் எதைப் பற்றிச் சொல்கின்றான் என்பதைப் புரிந்தவளாய் அவளது முகம் நாணத்தில் சிவந்து போனது. காதல் விசயங்கள் மட்டும் மக்குவுக்குச் சட்டென்று புரிந்து விடுகிறது.



"நீ இங்கேயே இரு. நான் போய்ப் பிரசாதம் வாங்கிட்டு வர்றேன். இந்தக் கோவிலில் கொடுக்கும் பிரசாதம் உனக்கு ரொம்பப் பிடிக்கும்ல." என்றவன் அங்கிருந்து விலகி செல்ல...



அப்போது தான் சகுந்தலா கருத்தில் அந்தக் கோவில் பதிந்தது. அவள் அடிக்கடி வரும் கோவில் தான். சக்தீஸ்வரனும் சிறுவயதில் இங்கு அடிக்கடி வருவான் தான். வளர்ந்த பிறகு தான் அவன் கோவில் பக்கம் எட்டிப்பார்ப்பது இல்லை. அப்போது நடந்த விசயத்தை அவன் இன்னமும் ஞாபகத்தில் வைத்திருப்பது கண்டு அவளுக்கு ஆச்சிரியமாக இருந்தது.



பழைய நினைவில் மூழ்கியிருந்த சகுந்தலா முகத்தின் மீது ஏதோ ஒன்று மோத... அவளது நினைவுகள் அறுபட... என்னவென்று எடுத்து பார்த்தாள். அது ஒரு பலூன்.



"அக்கா, இது என்னோட பலூன் தான். தாங்கக்கா." என்று ஒரு சிறுமி வந்து கேட்க...



"நான் உனக்கு இந்தப் பலூனை கொடுத்தா... நீ எனக்கு என்ன தருவ?" அவள் மிடுக்காகக் கேட்டாள்.



"என்ன வேணும்?"



"நானும் உங்க கூட விளையாட வரவா?"



சகுந்தலா கேட்டதும் அந்தச் சிறுமி சம்மதிக்க... சகுந்தலா அந்தச் சிறுமியுடன் சென்று அவர்களது கூட்டத்தில் ஐக்கியமாகி விட்டாள். எல்லோரும் பலூனை தூக்கி போட்டு விளையாட... அவளும் அவர்களுடன் சந்தோசமாய் விளையாட தொடங்கினாள்.



சக்தீஸ்வரன் பிரசாதத்தை வாங்கிக் கொண்டு சகுந்தலா அமர்ந்திருந்த இடத்தை நோக்கி வந்தான். அங்கு அவளைக் காணவில்லை என்றதும் அவனுக்கு உள்ளுக்குள் பதட்டம் தொற்றிக் கொண்டது.



'குழந்தப்புள்ளைய பேசியே குழப்பி விட்டு... இப்போ காணாம போக வச்சிட்டியேடா.' அவனது மனசாட்சி அவனைக் கோபமாய்ச் சாடியது.



அவன் அவளைத் தேடி கோவிலின் மறுமுனைக்கு வந்து பார்க்க... சற்றுத் தூரத்தில் சகுந்தலா சிறுபிள்ளைகளுடன் விளையாடி கொண்டிருந்தாள். அதைக் கண்டதும் தான் அவனுக்கு நிம்மதி வந்தது. அவன் அவள் விளையாடுவதைக் கண்டபடி அங்கிருந்த பிரகாரத்தில் அமர்ந்தான். விளையாடும் போது அவளது முகத்தில் தோன்றிய சந்தோச உணர்வுகளைக் கண்டு அவன் ரசித்தபடி அமர்ந்து இருந்தான்.



சிறுவர்களின் பெற்றோர்கள் வந்து அழைத்ததும் அவர்கள் சென்றுவிட... அதன் பிறகே சகுந்தலாவுக்குச் சக்தீஸ்வரன் நினைவு வந்தது. அவள் அவனைத் தேடி வர... அவனோ வழியில் இருந்த பிரகாரத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டு வியப்பாய் பார்த்தவள் அவன் நோக்கி வந்தாள். அவன் அவளை நோக்கி பிரசாதத்தை நீட்ட... அவள் அவன் அருகில் அமர்ந்து கொண்டு பிரசாதத்தை வாங்கி உண்ண ஆரம்பித்தாள்.



"நீ சாப்பிட்டுட்டு இரு. நான் தண்ணி பாட்டில் வாங்கிட்டு வர்றேன்." விளையாடி களைத்து மூச்சிரைத்தவளை கண்டவன் அவளுக்காகத் தண்ணீர் பாட்டில் வாங்க சென்றான்.



சக்தீஸ்வரன் தண்ணி பாட்டிலை வாங்கிக் கொண்டு வரும் போது சகுந்தலா பிரசாதம் அனைத்தையும் உண்டு முடித்திருந்தாள். அவனைக் கண்டதும் தான் அவளுக்கு ஞாபகம் வந்தது, அவனுக்குக் கொடுக்காது தான் மட்டும் உண்டது...



"தண்ணி குடி..." என்றவன் பாட்டிலை திறந்து அவளிடம் கொடுத்தான்.



"உங்களுக்குக் கொடுக்காம சாப்பிட்டுட்டேன்." அவள் தவறு செய்த பிள்ளை போல் திருதிருக்க...



"பரவாயில்லை..." என்றவன் அவள் அருகில் அமர்ந்தான்.



அவள் தண்ணீரை குடிக்க... அவன் திரும்பி அவளைப் பார்த்தான். அப்போது தான் அவன் கவனித்தான், அவளது இதழோரம் உணவின் சிறு துணுக்கு ஒன்று ஒட்டி கொண்டிருப்பதை... அவன் கை நீட்டி அதை எடுத்து தனது வாயில் போட்டுக் கொண்டான். தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தவள் அவனது செய்கையைத் தான் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டு இருந்தாள். அவன் உணவு துணுக்கை எடுத்த போது கூட அவள் பெரிதாக அலட்டி கொள்ளவில்லை. ஆனால் அவன் அதை எடுத்து அவனது வாயில் போட்டு கொண்டதை கண்டு அவளது விழிகள் திகைப்பிலும், வியப்பிலும் விரிந்தது. அவள் தண்ணீர் குடிப்பதை நிறுத்தி விட்டு அவனைப் பார்த்தாள்.



சிறுவயதில் அவன் இது போன்று செய்து இருக்கின்றான் தான். அப்போது அவர்களுக்குள் எந்தவித ஏற்றத்தாழ்வும் கிடையாது. எந்தவித விகல்பமும் கிடையாது. ஆனால் இப்போது? அவனது செய்கை அவளுள் ஏதோ ஒன்றை உருக்கியது என்னவோ உண்மை.



"எனக்கு இது போதும்." என்றவனைக் கண்டு அவளுக்குத் தான் வெட்கம் வந்து தொலைத்தது.



சகுந்தலா ஒன்றும் பேசாது எழுந்து கொள்ள... சக்தீஸ்வரன் தொன்னை கிண்ணங்களைப் பொறுக்கி கொண்டு போய் அங்கிருந்த குப்பை தொட்டியில் போட்டான். அவனது சுத்தம், நேர்த்திக் கண்டு அவள் தனது வயிற்றில் கை வைத்து,



"குட்டிப்பையா, நீ அப்பா மாதிரி தான் இருக்கணும். அம்மாவுக்கு இந்தச் சுத்த, பத்தம் எல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது." என்று கூறி கொண்டாள்.



"என் மகள் கிட்ட என்ன சொல்லிக்கிட்டு இருக்க?" அவன் கேட்டுக் கொண்டே அருகில் வர...



"என்னோட மகன்..." என்றவள் தான் பேசியதை மட்டும் சொல்லவில்லை.



இருவரும் இணைந்து நடந்தனர். கோவில் வாயிலுக்குச் செல்லும் போது அவர்களின் பின்னால் இருந்து, "சக்தி..." என்று ஒரு குரல் கேட்டது.



சக்தீஸ்வரன் திரும்பி பார்த்தான். அவனது பள்ளிக்காலத் தோழன் வாசு தனது மனைவியுடன் நின்றிருந்தான். இன்னமும் தொடர்பில் இருப்பவன்.



"வாசு, எப்படி இருக்க?" சக்தீஸ்வரன் முகம் மலர கேட்க...



"நல்லா இருக்கேன்டா. நீ எப்படி இருக்க?" என்று கேட்ட வாசுவின் விழிகள் சகுந்தலாவை கேள்வியாகப் பார்த்தது.



"எனக்கு என்ன நல்லா இருக்கேன்." சக்தீஸ்வரன் புன்னகை முகத்துடன் பதில் சொன்னான்.



"யார்டா இது?" வாசு அவனிடம் கேட்க...



"அறிமுகப்படுத்த மறந்துட்டேன். இவள் என்னோட மனைவி சகுந்தலா." என்று அவன் சகுந்தலாவை நண்பனுக்கும், அவனது மனைவிக்கும் அறிமுகப்படுத்தி வைத்தான்.



மொட்டை தலையோடு, மாநிறத்திற்கும் சற்று கீழான நிறத்தில் சாதாரணத் தோற்றத்தில் இருந்த பெண்ணவளை கண்டு கணவன், மனைவி இருவரின் முகத்திலும் கேலி புன்னகை தோன்றியது.



"என்னடா ஆச்சு உனக்கு? உன் பின்னாடி சுத்தாத பெண்களா? இல்லை உலகத்தில் பெண்களுக்குப் பஞ்சமா? இப்படி ஒரு பெண்ணைப் போய்க் கல்யாணம் பண்ணி இருக்கியே? அப்பா, அம்மா வற்புறுத்தலால் பண்ணிக்கிட்டியா?" வாசு கவலையுடன் கேட்பது போல் கேட்டாலும்... அதில் அதிகமாய் நக்கலே இருந்தது.



சகுந்தலா வாசுவின் பேச்சினை சட்டை செய்யவே இல்லை. இது போன்ற பேச்சுகள் அவளுக்குச் சகஜம். பெற்றோரே இப்படிப் பேசும் போது... வாசு அவளுக்கு யாரோ தானே. அவள் அலட்டி கொள்ளாது வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்.



தன்னை விட எல்லாவற்றிலும் சிறந்த ஒருவன் இப்படிச் சாதாரணமாய், அதுவும் தனது மனைவியை விட வெகுசாதாரணமான ஒரு பெண்ணைத் திருமணம் செய்து இருப்பது கண்டு வாசுவிற்குச் சந்தோசமாகி போனது. அதாவது அடுத்தவன் துன்பத்தில் சந்தோசப்படுவது போன்று... இந்த இடத்தில் சக்தீஸ்வரன் சிறிது மனச்சுணக்கத்தைக் காட்டியிருந்தாலோ? அல்லது அவன் மனைவியை வெறுப்பாய் பார்த்து இருந்தாலோ? வாசு மகிழ்ந்து இருப்பான்.



மாறாகச் சக்தீஸ்வரன் சகுந்தலா தோளில் கரத்தினைப் போட்டு அவளைத் தன்னுடன் அணைத்துக் கொண்டு, "உனக்கு உடம்பு சரியில்லைன்னா உன் மனைவி உனக்காக வேண்டிக்கிட்டு மொட்டை போடுவாங்களா?" என்று கேட்டான்.



சகுந்தலா சக்தீஸ்வரனின் செயலில் திகைத்து போய் அவனைப் பார்த்து கொண்டிருந்தாள். அதைவிடத் திகைப்பு அவன் பேசியது கேட்டு...



"இதுக்கு எல்லாமா மொட்டை போடுவாங்க? மொட்டை போட்டால் அசிங்கமா இருக்கும். தலைமுடி தான் பெண்ணுக்கு அழகு." அந்தப் பெண் முகத்தைச் சுளிக்க...



மனைவியின் பேச்சு கேட்டு வாசுவின் முகம் அவமானத்தில் கன்றிப் போனது.



"ஆனா என் மனைவி எனக்காக வேண்டிக்கிட்டு மொட்டை போடுவாள். அவளது அழகு பத்தி எல்லாம் அவளுக்குக் கவலை இல்லை. என்னோட நலன் மட்டுமே அவளுக்கு முக்கியம்." என்றவன் தனது அலைப்பேசியில் இருந்து சகுந்தலாவின் ஒரு புகைப்படத்தை எடுத்து அவர்களிடம் காட்டி,



"இது தான் அவளது நிஜ அழகு... அவளோட தலைமுடியை பார்த்தீங்க தானே சிஸ்டர். உங்க முடியை விட அதிகம். அழகு என்பது தோற்றத்தில் இல்லை. அது மனசில் இருப்பது." என்று சொல்ல... வாசு மற்றும் அவன் மனைவி முகத்தில் ஈயாடவில்லை.



சகுந்தலா எட்டி கணவனது அலைப்பேசியில் இருந்த தனது புகைப்படத்தைப் பார்த்தாள். அன்று வினிதாவின் திருமண உறுதியின் போது எடுத்த புகைப்படம் போலும்... அவள் உடுத்தியிருந்த ஆடை, அலங்காரம் அதைத் தான் பறைச்சாற்றியது. பச்சை நிற பட்டுடுத்தி அழகுற இருந்த சகுந்தலா தரையில் அமர்ந்து கொண்டு தாம்பாள தட்டில் பழங்களை அடுக்கி கொண்டிருந்தாள். அவளது தோள் வழியே அவளது நீண்ட பின்னல் வழிந்தோடி தரையைத் தொட்டுக் கொண்டிருந்தது. அந்தப் புகைப்படம் அவளை அப்படியொரு அழகாகக் காட்டியது. அப்படியொரு அழகான கோணத்தில் புகைப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. நிச்சயம் அதைச் சக்தீஸ்வரன் தான் எடுத்திருக்க வேண்டும். அவள் பிரமிப்பாய் கணவனைப் பார்த்தாள்.



"போகலாம் வா..." சக்தீஸ்வரன் சகுந்தலாவை அணைத்த கரத்தினை எடுக்காது அவளை அழைத்துக் கொண்டு செல்ல... அவள் அவனையே பார்த்தபடி வந்தாள்.



"ஹேய் சக்கு, படி இருக்கு. பார்த்து வா..." அவன் எச்சரித்த போதும் அவள் தனது பார்வையைத் திருப்பிக் கொள்ளவில்லை.



சக்தீஸ்வரன் தான் அவளது கரத்தினைப் பிடித்துப் பத்திரமாய், பாதுகாப்பாய் அவளை நடத்தி வந்தான். அவன் தன்னை வழிநடத்துவான் என்று அந்தப் பேதையின் உள்மனம் நம்பிக்கை கொண்டதுவோ! அவளது விழிகள் வழியைப் பார்க்கவில்லை. அவளது விழிகள் கணவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தது.



வழிப்பாதை மட்டுமல்ல... வாழ்க்கையிலும் அவன் உடனிருந்து அவளை வழிநடத்துவான்.



“விதியை சரி செய்ய, தேடி வந்த தேவதையே

தீதாய் பிறந்தேனே, நன்றி சொல்ல வார்த்தை இல்லை

உள்ளம் உருகுதே ராசாத்தி, உள்ளவரை எல்லாம் நீதான்டி”



தொடரும்...!!!



பிகு : வீக்என்ட்ன்னால சந்தோசமா முடிச்சாச்சு. எல்லோரும் சந்தோசமான மனநிலையில் தூங்க போங்க. குட்நைட் பிரெண்ட்ஸ் :)
 

Sasimukesh

Administrator
அத்தியாயம் : 27



"வாவ் சக்கு, சூப்பரா புடவை கட்டியிருக்க... எப்படிடி?" வீட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்த சகுந்தலாவை ஓடிவந்து அரவணைத்துக் கொண்டு பாராட்டினாள் பத்மினி.



சக்தீஸ்வரன் மனைவியிடம் அன்பு பாராட்டும் தனது தங்கையை வாஞ்சையுடன் பார்த்தான். நாராயணனோ தனது தங்கையிடம் முன்பிருந்த அதே பாசத்துடன் இப்போதும் இருக்கும் தனது மனைவியவளை கனிவுடன் பார்த்தான். இருவருக்கும் பத்மினியை கண்டு மகிழ்ச்சி தான். பத்மினி எப்போதுமே சகுந்தலாவை புறக்கணிப்பது இல்லையே.



"எனக்கு இது எல்லாம் எப்படித் தெரியும் சக்கு? எல்லாம் உங்கண்ணே தான் கட்டி விட்டாக. உண்மையிலே நல்லாயிருக்கா?" சகுந்தலா புடவை முந்தானையை வலக்கையால் பிடித்தபடி தன்னைக் கீழே குனிந்து பார்த்துக் கொண்டு கேட்டாள்.



"என்னது???" எல்லோரும் ஒருசேர கேட்டபடி சக்தீஸ்வரனை திகைப்புடன் பார்த்தனர்.



மனைவி சொன்னது கேட்டு சக்தீஸ்வரனுக்குப் புரையேறியது.



"பாருடா, சிங்கம் சாய்ஞ்சிட்டதை." ஆகாஷ் தம்பி மகனை கேலி செய்ய...



சர்வேஸ்வரன் சிரிப்பை அடக்கி கொண்டு அமர்ந்து இருந்தான். உதயரேகா நிம்மதி கொண்டவளாய் மகன், மருமகளைப் பார்த்தாள். இருவருக்குமே மகிழ்ச்சி தான். எப்படியோ சின்னவர்கள் அந்நியோன்யமாய், சந்தோசமாய் இருந்தால்... பெரியவர்களான அவர்களுக்கு மகிழ்ச்சி தானே.



பத்மினி, வினிதா, இந்திராணி, ஆதித்யா, ஆதிரை என்று சின்னவர்கள் அனைவரும் சக்தீஸ்வரன், சகுந்தலாவை ஓட்டி தள்ளினர்.



"நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா?" சகுந்தலா எப்போதும் போல் சத்தமாய் முணுமுணுத்துக் கொள்ள... அது அருகிலிருந்த சக்தீஸ்வரனுக்கும் கேட்டது.



"நீ தப்பா சொல்லலை. பொய் சொல்லலை. உண்மையைத் தான் சொன்ன. ஃபீல் ப்ரீ." என்று ஆதரவாய் சொல்லியவன் அனைவரையும் பார்த்து,



"இப்போ எதுக்கு இப்படி ஓட்டுறீங்க? நான் என்ன அடுத்தவளுக்கா புடவை கட்டி விட்டேன்? நான் தொட்டு தாலி கட்டிய, நோட் திஸ் பாயிண்ட் யுவரானர்... நான் தொட்டு தாலி கட்டிய என் பொண்டாட்டிக்கு தானே புடவை கட்டி விட்டேன். இது தப்பா? இல்லை தப்பாங்கிறேன்? என்னமோ நான் தப்பு பண்ணிட்ட மாதிரி பில்டப் கொடுக்கிறீங்க. குடும்ப அரசியலில் இது எல்லாம் சாதாரணமப்பா." என்று அவன் 'கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை' என்பது போல் கெத்தாகச் சொன்னான். இருந்த போதும் ஆணவனின் முகமும் வெட்கத்தில் சிவந்து தான் போனது.



"அடேங்கப்பா..." என்று எல்லோரும் சக்தீஸ்வரனை கண்டு சிரிக்க...



"அப்பா, பெரியப்பா உங்க கதையை நான் எடுத்துவிடவா? அப்போ எனக்குச் சின்ன வயசா இருந்தாலும்... எல்லாமே எனக்கு ஞாபகம் இருக்குது." சக்தீஸ்வரன் சொன்னதும்... சர்வேஸ்வரனும், ஆகாஷும் ஒருவரை ஒருவர் சங்கோஜத்துடன் பார்த்து கொண்டனர்.



"தம்பி, தாலி பிரிச்சு கோர்க்கணும்ல. டைம் ஆகுது பார். சீக்கிரம் எல்லோரையும் கூப்பிடு." என்றுவிட்டு ஆகாஷ் எழுந்து செல்ல...



"எல்லோரும் வாங்க..." சர்வேஸ்வரனும் அண்ணன் பின்னே ஓடினான்.



இப்போது மற்றவர்கள் அவர்களைக் கண்டு கேலி செய்து சிரித்தனர். கணபதி, விஜயா இருவரும் மனம் நிறைய இதை எல்லாம் பார்த்திருந்தனர். மகளது வாழ்க்கை குறித்துக் கவலை கொண்டு இருந்தவர்களுக்கு... சக்தீஸ்வரனின் இந்த இணக்கம் மகிழ்ச்சியைக் கொடுத்தது.



தாலி பிரித்துக் கோர்க்கும் வைபவத்தை உதயரேகா, வித்யா, விஜயா மூவரும் இணைந்து சகுந்தலா, பத்மினிக்கு செய்தனர். நாராயணன் ஐந்து பவுனில் தாலி சங்கிலி செய்து வைத்திருந்தான். அதில் தான் பத்மினிக்கு மாங்கல்யம் கோர்க்கப்பட்டு, அதை நாராயணன் கரங்களால் பத்மினிக்கு அணிவித்தனர். சிறிதும் இல்லாது, பெரிதும் இல்லாதிருந்த அந்தச் சங்கிலி பத்மினிக்குப் பாந்தமாகப் பொருந்தி இருந்தது.



சக்தீஸ்வரன் சகுந்தலாவுக்காகப் பார்த்து பார்த்து வடிவமைத்த பதினைந்து பவுன் தாலி சங்கிலியில் மாங்கல்யத்தைக் கோர்த்து, அதை அவனது கரங்களால் அவளுக்கு அணிவிக்க வைத்தனர். சக்தீஸ்வரன் மனைவியைப் பார்த்தபடி சங்கிலியை அணிவிக்க... சகுந்தலா அவனது பார்வையை எங்கே கவனித்தாள்? அவள் தனது கழுத்தில் புது முறுக்கோடு இருந்த சங்கிலியை சுற்றி சுற்றி பார்த்தபடி,



"மாட்டுக்கு போடுற மாதிரி சங்கிலி பெருசா இருக்கு." என்று சிணுங்க...



"நீ அத்துட்டு எங்கேயாவது ஓடி போயிர கூடாதுல்ல. அதுக்குத் தான் நான் ஸ்ட்ராங்கா போட்டு இருக்கேன். நீ அத்துட்டு எங்கேயும் ஓடி போக முடியாது." என்ற சக்தீஸ்வரன் அந்தச் சங்கிலியை பிடித்திழுத்து அவளது முகத்தைத் தனது அருகில் இழுத்தவன்... அவளது நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட...



"ஹேய்..." என்று சின்னவர்கள் அனைவரும் குதூகலமாய் ஆர்ப்பரிக்க...



"பூஜையறையில் இருந்துட்டு என்னடா பண்ற?" பெரியவர்கள் செல்லமாய்க் கடிய... அங்கே மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருந்தது.



மதிய உணவு முடிந்ததும் அனைவரும் ஓய்வெடுக்கச் சென்றுவிட... சக்தீஸ்வரன் அறைக்கு வந்து உடை மாற்றிக் கொண்டிருந்தான். அப்போது சகுந்தலா அறை கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள். அவளது திடீர் வரவினை அறிந்த அவன் உடனே சட்டையை எடுத்து மாட்டி கொண்டு,



"கதவை தட்டிட்டு உள்ளே வர மாட்டியா?" என்று கேட்க...



"நான் எதுக்குக் கதவை தட்டிட்டு வரணும்? இது என்னோட ரூமும் கூட... நீங்க அங்கே போய் டிரெஸ் மாத்தி இருக்கணும்." என்று அவள் உடை மாற்றும் அறையைச் சுட்டிக்காட்டியபடி உரிமை குரல் எழுப்ப...



"அது எங்களுக்கும் தெரியும்." என்று அவளுக்குப் பதிலுரைத்தவன், "வர வர ஆண்களுக்குப் பாதுகாப்பு இல்லாம போயிருச்சு." என்று அவன் தனக்குள் முணுமுணுக்க... அவள் அவன் முன்னே வந்து குதித்தாள்.



"ஏய், வயித்தில் குழந்தை இருக்குடி. இன்னும் கொஞ்ச நாளைக்கு உன் குரங்கு சேட்டை எல்லாத்தையும் மூட்டை கட்டி வை." அவன் அவளைக் கண்டு பயந்தபடி சொல்ல...



"பேச்சை மாத்தாதீங்க. நீங்க மட்டும் எனக்குச் சேலை கட்டி விட்டீங்க. நான் பிளவுஸ் மட்டும் போட்டுட்டு தானே நின்னேன். நான் என்ன உங்களை மாதிரியா சொன்னேன். இல்லை வெட்கப்பட்டேனா?" அவள் இடுப்பில் இரு கரங்களை வைத்துக் கொண்டு அவனைக் கண்டு முறைத்தபடி கேட்க...



"உனக்கு வெட்கம் எல்லாம் வருமா?" அவன் அவளைக் கலாய்க்க...



"அதெல்லாம் எனக்கு வரும். உங்களுக்கு என் கிட்ட வெட்கத்தை வரவழைக்கத் தெரியலை." அவள் அலட்சியமாகக் கூற...



"இப்போ வெட்கத்தை வரவழைச்சு காட்டவா?" என்றவன் அவள் அருகே நெருங்க...



சகுந்தலா அவனையே பார்த்தபடி அசையாது நின்றிருக்க... சக்தீஸ்வரன் அவளையே பார்த்தபடி அவளைத் தாண்டி செல்ல... அவள் குழப்பத்துடன் அவனைத் திரும்பி பார்த்தாள். அவனோ கண்ணாடியை நோக்கி சென்றான். அவன் என்ன செய்யப் போகின்றான்? என்பதை அவளும் பார்த்துக் கொண்டே இருந்தாள். அவளது பின் பிம்பம் கண்ணாடியில் அப்படியே தெரிந்தது. அவள் தலையை மட்டும் திருப்பி அவனைப் பார்த்திருந்தாள்.



சக்தீஸ்வரன் வலக்கை ஆள்காட்டி விரலை கொண்டு கண்ணாடியில் தெரிந்த அவளது இரவிக்கையின் முதுகு பகுதியில் அதன் ஓரத்தில் தனது கையை வைத்து மேலும், கீழுமாய்க் கோடு இழுத்தான். அதுவும் அவன் கண்ணாடி வழியே அவளைப் பார்த்தபடி... அவனது செயலில் அவள் உறைந்து நின்றாள். வேறொரு பெண்ணாக இருந்தால் ஆணவனின் செயலில் தனது மனதின் கோபத்தை முறைப்பில் காட்டி இருப்பாள். அவளோ வெகுளி பெண். அவளால் கோபத்தைக் கூடச் சரியாகக் காட்ட தெரியவில்லை.



அவளுக்கு அவன் மீது கோபம் இருந்தாலும்... அவளும் சாதாரண உணர்வுகள் கொண்ட பெண் தானே. அதுவும் அவளுக்குக் காதல் என்றால் மிகவும் பிடிக்கும். அதைவிட அவள் உயிருக்கு உயிராய் காதலித்தவன் அவன்... அப்படி இருக்கும் போது அவனது செயலில் அவளது மனம் மயங்காது இருந்தால் தான் அதிசயம். அவள் காதலில் மனம் தடுமாறி நின்றாள்.



கண்ணாடியில் தெரிந்த இரவிக்கை மூடாத அவளது வெற்று முதுகு பகுதியில் அவன் அழுத்தமாய்த் தனது அச்சாரத்தைப் பதித்தான். அதுவும் அவளது விழிகளைப் பார்த்தபடி... அவள் மெய்சிலிர்க்க தனது விழிகளை மெல்ல மூடி கொண்டாள். ஒட்டுமொத்த உணர்ச்சி குவியல் காரணமாக அவளது தேகம் அதிர்ந்தது, கால்கள் நடுங்கியது. அவள் இதழ்கள் துடிக்க அப்படியே நின்றிருந்தாள்.



அந்த நொடி அவளது மனக்கண்ணில் அன்று நட்சத்திர விடுதியில், 'நீயெல்லாம் எனக்கு இணையா?' என்று கேலியாகப் பேசிய சக்தீஸ்வரன் வந்தான். அதேநேரம் சற்று முன்னர்த் தனது நண்பனிடம், 'அழகு என்பது வெளித்தோற்றத்தில் இல்லை, அது மனதில் இருப்பது.' என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கர்வமாய்ச் சொன்ன சக்தீஸ்வரனும் வந்தான். எது உண்மை? அவள் குழப்பத்துடன் தனது விழிகளைத் திறந்தாள்.



அடுத்த நொடி சகுந்தலா கணவனை வெறுமையுடன் பார்த்தபடி பால்கனியில் சென்று அமர்ந்தாள். அவளது தடுமாற்றம், அதன் பிறகு வந்த குழப்பம் எல்லாவற்றையும் சக்தீஸ்வரன் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். ஆனால் அவன் அதைப் பற்றி எதுவும் கேட்கவில்லை. அவனும் பால்கனிக்கு சென்று அவள் முன்னே வந்து நின்றான். அவள் அவனைப் பார்த்தாலும் ஒன்றும் பேசாது இருந்தாள்.



"சாயங்காலம் ஹாஸ்பிட்டலுக்குப் போயிட்டு வந்திரலாம்." என்று அவன் சொல்ல...



"எதுக்கு?" அவள் பயத்துடன் கேட்டாள்.



"குழந்தை உண்டாகி இருக்குன்னு கன்ஃபார்ம் தான் பண்ணி இருக்கு. குழந்தை எப்படி இருக்கு? என்ன ஏதுன்னு பார்க்க வேண்டாமா? அப்படியே உனக்கும், குழந்தைக்கும் தேவையான விட்டமின் டேப்லெட்டும் கேட்டு வாங்கிட்டு வந்திருவோம்." அவன் விளக்கி சொல்ல...



"சரி..." என்றவள் முகம் தெளிவில்லாது இருந்தது கண்டு... சக்தீஸ்வரன் மனைவி அருகில் அமர்ந்தான்.



"என்ன யோசனை?" அவன் அவளது கரத்தினை ஆறுதலாய் பிடித்தபடி கேட்க...



"எனக்குப் பயமா இருக்கு கேப்டன்." அவளது கண்களில் கண்ணீர் துளிர்த்தது.



"நான் இருக்கும் போது எதுக்குடி பயப்படுற?" அவன் ஆதரவாய் அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டான்.



சகுந்தலா தன்னையும் அறியாது கணவனது கரத்தினை இறுக பிடித்துக் கொண்டு, அவனது நெஞ்சில் முகம் புதைத்து கொண்டாள். அவன் ஒருவனே ஆதரவு என்பது போலிருந்தது அவளது செய்கை. அவன் நம்பிக்கை கொடுக்காது இந்த உணர்வு வருவது சாத்தியம் இல்லை.



****************************



நாராயணன், பத்மினி இருவரும் ஓய்வுக்காகத் தங்களது அறைக்குள் நுழைந்தனர். பத்மினி அங்கிருந்த கண்ணாடியில் தனது பிம்பத்தைக் கண்டு பூரித்திருந்தாள். எத்தனை வருட கனவு இது... அவள் தாலி சங்கிலியை காதலோடு வருடி கொடுத்தாள். அதே காதலை விழிகளில் தேக்கி, நாணத்தை முகத்தில் தேக்கி அவள் கணவனைத் திரும்பி பார்த்தாள். நாராயணனோ ஏதோ யோசனையுடன் அமர்ந்து இருந்தான். அதைக் கண்டதும் அவளது விழிகள் சுருங்கியது.



"நானா, என்ன யோசனை?" அவள் கேட்டபடி அவன் அருகில் வர... அவளது அழைப்பில் அவளை ஏறிட்டு பார்த்தவன்,



"இங்கே உட்கார் மினி." என்று கூற... அவளும் அவன் அருகே அமர்ந்தாள்.



நாராயணன் தனது மனதில் இருப்பதை மனைவியிடம் எப்படிக் கூறுவது? என்று புரியாது விழித்திருந்தான். நேற்றிரவு கூறி விடலாம் என்று நினைக்கும் போது தான் கன்னிகா தனது கணவனுடன் மறுவீட்டிற்கு இங்கு வந்து விட்டாள். அதனால் அவன் அமைதி காத்தான். இன்று எப்படியாவது அவளிடம் பேசிவிட வேண்டும் என்று அவன் விரும்பினாலும்... அவனது நாவு பேச மறுத்து அவனுக்கு எதிராகச் சதிராடியது.



"என்ன நானா? எதுவாக இருந்தாலும் சொல்லுங்க." அவள் புன்னகையுடன் அவனது கரத்தின் மீது தனது கரத்தினை ஆதரவாய் வைத்தபடி கேட்க...



"அது வந்து மினி... எப்படிச் சொல்றது? நான் சொல்றதை நீ தப்பா எடுத்துக்கக் கூடாது." அவன் பீடிகை போட...



"நான் உங்க வொய்ப். உங்களைப் போய்த் தப்பா நினைப்பேனா?" பத்மினி அவனுக்குத் தைரியம் கொடுக்க...



அந்தத் தைரியத்தில் நாராயணன் பேச ஆரம்பித்தான். அப்போது அவனுக்குத் தெரியவில்லை... எந்த மனைவிக்கும், இல்லை இல்லை எந்தப் பெண்ணுக்கும் கணவன் தனது பழைய காதலை பற்றிப் பேசினால் பிடிக்காது என்பது...



"மினி, நான் வந்து..." அவன் இழுக்க... அவள் புன்னகையுடன் அவனையே பார்த்திருக்க... அவளது புன்னகை கொடுத்த தைரியத்தில் அவன் எல்லாவற்றையும் அவளிடம் கொட்ட ஆரம்பித்தான்.



"நான் ஒரு பொண்ணைக் காதலிச்சேன். ஆனால்..." என்றவன் சக்தீஸ்வரன் தனது வாழ்க்கையில் விளையாடிய திருவிளையாடலை கூறினான்.



"எங்கண்ணா உங்க காதலுக்கு இடையில் வரலைன்னா... நீங்க அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணி இருப்பீங்களா?" அவள் அமைதியாகக் கேட்க...



"நிச்சயமாய்... காதலிக்கும் பெண்ணைக் கைவிடும் நோக்கம் எனக்கு இல்லை." அவன் வேகமாய்ப் பதிலளிக்க...



கணவன் சொன்னது கேட்டு அவளது காதல் மனம் வலியில் துடித்தது. எந்தப் பெண்ணுக்கும் இந்த நிலை வர கூடாது. தாலி கட்டிய கணவன், அதுவும் அவள் உயிருக்கு உயிராய் காதலித்தவன் வாயில் இருந்து இந்த வார்த்தைகளைக் கேட்க... அவள் என்ன தவம் செய்திருக்க வேண்டும்? அவள் தனக்குள் விரக்தியாய் புன்னகைத்து கொண்டாள்.



"அப்போ என்ன ம...த்துக்கு அவளைக் கைவிட்டீங்க?" அடுத்த நொடி அவள் காளியின் உக்கிரத்துடன் கேட்க...



திடுமென அவளது குரல் மாறியது கண்டு... அவளை ஏறிட்டு பார்த்த நாராயணன் உள்ளுக்குள் பதறி தான் போனான். அதிலும் அவள் பேசிய கெட்ட வார்த்தை அவனைத் திகைப்படைய வைத்தது. பத்மினியா இதைப் பேசியது என்று அவன் ஆவென அவளை அதிர்ந்து போய்ப் பார்த்திருந்தான்.
 

Sasimukesh

Administrator
"மினி..."



"பேசாதீங்க நானா... அவளைக் காதலிக்கும் போது அவள் உங்க குடும்பத்துக்கு ஒத்து வருவாளா? மாட்டாளா?ன்னு யோசிக்க மாட்டீங்களா? காதலிக்கும் போது காதல் மட்டும் இனிச்சதுல்ல. அதே மாதிரி கல்யாணம்ன்னு வரும் போது அவளோட பிளஸ், மைனஸ் எல்லாத்தையும் நீங்க ஏத்துக்கிட்டு இருந்திருக்கணும். நீங்க அவங்க கிட்ட உங்களைப் பத்தி, உங்க குடும்பத்தைப் பத்தி சொல்லி புரிய வச்சிருக்கணும். இல்லையா அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அவளுக்கு நம்பிக்கை கொடுத்து இருக்கணும்." என்று அவனைக் கோபத்துடன் சாடியவள்,



"அவளுக்குக் கூட்டுக் குடும்பம் அருமை புரியலையாம். அதனால இவர் தன்னோட காதலை விட்டு கொடுத்துட்டாராம்." என்று தனக்குள் கோபத்துடன் முணுமுணுத்து கொண்டாள்.



"மினி, அது முடிஞ்சு போன கதை..." அவன் அவளைச் சமாதானப்படுத்தும் விதமாகப் பேச...



"எது முடிஞ்சு போன கதை? நீங்க ஒரு பொண்ணை ஏமாத்தி இருக்கீங்க நானா. எங்கண்ணா இடையில் வராம இருந்தாலும்... நீங்க அந்தப் பொண்ணைக் கைவிட்டு தான் இருப்பீங்க. நீங்க தைரியசாலின்னு நினைச்சேன். ஆனா நீங்க ஒரு கோழை." அவள் அவனைச் சாட...



"வரம்பு மீறி பேசாதே மினி. எனக்கும் பேச தெரியும்." நாராயணனுக்கும் கோபம் வந்தது.



"நான் வரம்பு மீறலை. உண்மையைச் சொன்னேன்." அவள் தைரியமாக எதிர்த்து நின்றாள்.



"அப்போ நான் என்ன பண்ணணும்ங்கிற? சக்குக் கல்யாணமாக வீட்டில் இருக்கும் போது... அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, அதே வீட்டில் அவள் கூடக் கொஞ்சி குழாவிட்டு இருக்கச் சொல்றியா?" அவன் சற்றுக் காட்டமாகக் கேட்டான்.



அடுத்தப் பெண்ணுடன் கணவனை இணைத்து பேசுவது கேட்டு அவள் வேதனை கொண்டாள்.



'சும்மா பேச்சுக்கே வேதனையா இருக்கா? அவனே அடுத்தவளை காதலிச்சவன் தான்.' அவளது மனசாட்சி வேறு அவளைக் கேலி செய்து சிரித்தது.



"என்னால அப்படிச் செய்ய முடியாது. அப்படி இருந்தும் நான் அவளுக்குச் சொல்லி புரிய வைக்கத் தான் நினைச்சேன். அவள் முடியாதுன்னு பிடிவாதம் பிடிச்சா, நான் என்ன பண்ணட்டும்?" அவன் சொன்னதைக் கேட்டு அவளுக்கு வலித்தது.



அப்படி என்றால் அந்தப் பெண் அவன் சொன்னதற்குச் சம்மதித்து இருந்தால்... அவன் தன்னைத் திருமணம் செய்து இருக்க மாட்டான். திருமணம் என்ன? அவளை ஒரு பொருட்டாய் சீண்டி கூட இருக்க மாட்டான். அவளுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.



"எல்லாம் உன் அண்ணன் பார்த்த வேலை அப்படி. அவளோட அப்பா கிட்ட ஏதோ சொல்லி குழப்பி விட்டு இருக்கான். அதான் அவர் அவசரப்பட்டு அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் பேசி முடிச்சிட்டாரு. இல்லைன்னா அவள் சிஏ பாஸ் பண்ணும் வரை அவளுக்குக் கல்யாணம் பண்ற ஐடியால அவர் இல்லை." அவன் சொன்னது கேட்டு யோசித்த பத்மினி,



"அன்று பார்த்தோமே அனுபமா... அவள் தானா நீங்க காதலித்த பெண்?" என்று சரியாகக் கேட்க...



"ஆமா..." என்றான் அவன் முகம் கருக்க...



"நீங்க எல்லாம் ஆண்கள் இல்லையா? அதான் எல்லாத்தையும் அலட்சியமா கையாளுறீங்க. அது எப்படிக் கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாம அந்தப் பொண்ணு கல்யாணத்துக்குப் போயிட்டு வந்திருக்கீங்க? அங்கே உங்களைப் பார்த்த போது அந்தப் பெண்ணோட மனசு என்ன பாடு பட்டு இருக்கும்?" அவள் கோபத்தோடு கேட்க...



நாராயணனுக்குத் திக்கென்று இருந்தது. இது பற்றி அவன் இதுவரை யோசித்தது இல்லையே. அந்த நொடி திருமணத்தின் போது அனுபமா அவனைக் கண்டு முகத்தைத் திருப்பியது அவனது ஞாபகத்தில் வந்தது.



"நான் அப்படி நினைக்கலை... அவர் என்னோட குரு. அவர் அழைப்பிதழ் வைக்கும் போது கல்யாணத்துக்குப் போகாம இருக்க முடியலை." அவன் தன்மையுடன் சொன்னான். அது தான் உண்மையும் கூட...



"எல்லாம் சரி... எதுக்காக நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதம் சொன்னீங்க? எதுக்காகச் சக்குவோட வாழ்க்கையைப் பணயம் வச்சீங்க? எங்க ரெண்டு பேரோட வாழ்க்கையில் விளையாட உங்களுக்கு யாரு அதிகாரம் கொடுத்தது. எங்கண்ணா பண்ணியதாவது என்னோட காதலுக்காகன்னு வச்சுக்கலாம். ஆனா நீங்க பண்ணியது? சக்குவோட வாழ்க்கையில் விளையாட நீங்க யாரு? இடையில் எவ்வளவு பிரச்சினைகள்? சக்கு எவ்வளவு கண்ணீர் வடித்தாள்? எல்லாம் யாரால? உங்களால மட்டும் தான்..."



"இங்கே பார் மினி... வாய்க்கு வந்ததைப் பேசாதே. என்னால் பாதிக்கப்பட்டு இருப்பது நீ மட்டும் தான். அதை வேணா நான் ஒத்துக்கிறேன். ஆனா சக்குவோட பாதிப்புக்குக் காரணம் உங்கண்ணா மட்டும் தான். அவன் பண்றது எல்லாம் பண்ணிட்டு... இப்போ சக்கு பின்னாடி பல்லை காட்டிட்டுப் போறான். அவனைப் புரிஞ்சிக்கவே முடியலை." நாராயணனுக்குச் சக்தீஸ்வரனை கண்டு எரிச்சல் வந்தது.



"உங்க ரெண்டு பேரோட ஈகோவில் அதிகம் பாதிக்கப்பட்டது சக்கு மட்டும் தான்." அவள் குற்றம் சாற்ற... அவன் அமைதி காத்தான்.



"நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி நீங்க என் கிட்ட உங்க காதல் விசயத்தைச் சொல்லி இருக்கலாமே நானா?" அவள் ஆதங்கத்துடன் கேட்க...



"நான் உன்னிடம் இதைச் சொல்லி... நீ கல்யாணத்தை நிறுத்தி விட்டால்? இதில் சக்குவோட வாழ்க்கையும் அடங்கி இருக்கே." என்ற நாராயணனை கண்டு அவளுக்குக் கோபம் தான் வந்தது.



"நிச்சயம் நிறுத்தி இருக்க மாட்டேன். இந்த விசயம் எனக்கு முதலிலேயே தெரிந்து இருந்தால்... உங்களை எப்படியாவது அனு கூடச் சேர்த்து வச்சிருப்பேன்." என்றவளை கண்டு அவன் என்ன மாதிரியாக உணர்ந்தான் என்று தெரியவில்லை.



"என்னோட காதல் ஒரு பொண்ணோட காதலை கொன்னு இருக்கு. அது என் மனசாட்சியை உறுத்துது."



"மினி..." அவன் ஏதோ சொல்ல வர...



"இப்போ எதுவும் பேசாதீங்க. கோபத்துல வார்த்தைகள் தடிக்கச் சான்ஸ் இருக்கு. இப்போதைக்கு இந்த விசயத்தை ஆற போடுங்க." அவள் அவனது முகத்தைப் பார்க்காது சொல்ல...



"ஆற போட்டும் ஆறலைன்னா?" அவன் கேள்வியாய் அவளைப் பார்த்தான்.



"தெரியலை... இப்போதைக்கு என்னால் எதுவும் சொல்ல முடியலை. உங்க மேல எனக்கு அப்படி ஒரு கோபம் இருக்கு. ஆனா இதுக்கு எல்லாம் காரணம் எங்கண்ணா எனும் போது... உங்க மேல் கோபப்பட்டு என்ன பிரயோஜனம்? எல்லாம் என் தலைவிதி." அவள் கோபமாய்ச் சலித்துக் கொண்டாள்.



"காதலில் தோல்வி அடைஞ்சவங்க அதையே நினைச்சிட்டு இருக்கணும்ன்னு சொல்றியா?"



"காதல் தானா தோல்வி அடைஞ்சா பரவாயில்லை... ஆனா இங்கே நீங்க தானே வலிய போய்க் காதலில் தோத்துட்டு வந்திருக்கீங்க. தப்பு உங்க மேல தான். அனு மேல இல்லை."



"திரும்பத் திரும்ப அதையே பேசாதே. அனு முடிஞ்சு போன கதை. என்னைத் திரும்பப் படிக்க வைக்கணும்ன்னு நினைக்காதே. ஆனா நீ அப்படி இல்லை. புத்தம் புதிய புத்தகம். எனக்கு உன்னைப் படிக்கத் தான் ஆசை. உனக்கு ஒரு மாசம் டைம். அதுக்குள்ள என்னை ஏத்துக்கிட்டு வாழ பார். இல்லைன்னா..." அவன் நிறுத்தி விட்டு அவளைப் பார்த்தான்.



"இல்லைன்னா என்ன? டிவோர்ஸ் பண்ணிருவீங்களா மிஸ்டர் நாராயணா?" அவள் கேலியாய் அவனை நோக்கினாள்.



"ச்சேச்சே... அந்த மடத்தனமான வேலை எல்லாம் நான் பண்ண மாட்டேன். உனக்குப் பிடிக்கலைன்னாலும் பரவாயில்லைன்னு... நான் வலுக்கட்டாயமா உன் கூட வாழ்ந்திருவேன்." என்றவனைக் கண்டு பத்மினி திகைப்பாய் பார்த்தாள்.



"நான் வில்லனா நடந்துக்கிறதும், ஹீரோவா நடந்துக்கிறதும் உன் கையில் தான் இருக்கு." என்ற நாராயணன் அவளது பதிலை எதிர்பாராது வெளியில் சென்றுவிட...



பத்மினி கணவனது வார்த்தைகளை ஜீரணிக்க முடியாது அதிர்ச்சியில் அப்படியே அசையாது நின்றாள்.



*********************************



மருத்துவமனையில் சக்தீஸ்வரன் சகுந்தலாவுடன் மருத்துவருக்காகக் காத்திருந்தான். அவர் இரவு நேரம் தான் அவர்களை வர சொல்லி இருந்தார். விஐபிக்களுக்கு என்று அவர் இந்த நேரம் தான் ஒதுக்கி கொடுப்பார். அவர் சொன்னது போல் அவன் அவளை அழைத்து வந்திருந்தான்.



"ஏன் கை எல்லாம் வியர்க்குது?" அவன் தனது கைகளுக்குள் பொத்தி வைத்திருந்த மனைவியின் உள்ளங்கையை விரித்துப் பார்த்தான்.



"என்னமோ தெரியலை? படபடன்னு இருக்கு கேப்டன்." அவள் பயத்துடன் சொன்னாள்.



"எதுக்கு?"



"இதுக்கு முன்னாடி நான் என்ன குழந்தையா உண்டாகி இருந்தேன்? ஏன், எதுக்குன்னு விளக்கம் சொல்ல? இப்போ தான் நானே புதுசா குழந்தை உண்டாகி இருக்கேன். எனக்குப் பயமா இருக்காதா?"



"குழந்தை உண்டாகி இருக்கிறதுக்கு நீ சந்தோசமா இருக்கணும். இப்படிப் பயப்படக் கூடாது. நீ பயப்படுறது வயித்தில் இருக்கும் பாப்பாவுக்கும் நல்லது இல்லை." அவன் புரியும் விதமாய் எடுத்து சொல்ல...



குழந்தைக்கு நல்லது இல்லை என்றதும் சகுந்தலா சற்றுப் பயத்தை ஒதுக்கி வைத்து விட்டுத் தைரியமாய்த் தெளிந்து அமர்ந்தாள்.



"தண்ணி குடிக்கிறியா? கொஞ்சம் ரிலாக்சா இருக்கும்." அவன் அருகில் இருந்த பையில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்தான். அவன் சகுந்தலாவுக்காக எல்லாவற்றையும் கையோடு எடுத்துக் கொண்டு வந்துவிட்டான்.



சகுந்தலா தண்ணீரை பருகி விட்டுக் கொஞ்சம் அமைதியாக இருந்தாள். இருந்தாலும் அவள் மனதிற்குள் ஏனோ ஒருவித படபடப்பு...



மருத்துவர் அழைக்கவும் இருவரும் உள்ளே நுழைந்தனர். சக்தீஸ்வரனை கண்டதும் மருத்துவர் புன்னகைத்தார். அவர் அவர்களது குடும்ப மருத்துவர் இல்லை. வேறு ஒரு மருத்துவர்.



"டாக்டர், நான் சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்குல்ல. இவங்க தான் என்னோ வொய்ப் சகுந்தலா. கொஞ்சம் நல்லா செக் பண்ணுங்க." அவன் சொல்லவும்...



"ஓ, எஸ்... நல்லா ஞாபகம் இருக்கு. நீங்க கொஞ்ச நேரம் வெளியில் இருங்க. நான் உங்க வொய்ப்பை செக் பண்ணிட்டு கூப்பிடறேன்." மருத்துவர் சொன்னதும், அவன் வெளியேற போக...



"கேப்டன், நீங்களும் இருங்களேன்." சகுந்தலா கணவனது கரத்தினைப் பிடித்துக் கொண்டு பயத்துடன் பார்க்க...



"இது பொம்பளைங்க சமாச்சாரம்மா. ஆம்பிளைங்க இருக்கக் கூடாது." மருத்துவர் சொன்னதும்...



சகுந்தலா அரை மனதாக அவனது கரத்தினை விடுவித்தாள். சக்தீஸ்வரன் அவளது தோளை ஆறுதலாய் அழுத்தி விட்டு வெளியில் வந்தான்.



"உன் பெயர் என்னம்மா?" மருத்துவர் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்.



"அதான் கேப்டன் சொன்னாரே... சகுந்தலா." அவள் வெள்ளேந்தியாய் சொல்ல...



"வயசு?" மருத்துவர் கேட்கவும்... அவள் பதில் சொன்னாள்.



"கடைசியா எப்போ பீரியட்ஸ் வந்தது?" அதற்கும் அவள் பதில் சொல்ல...



"கிட்டத்தட்ட அறுபது நாட்கள் ஆகுது இல்லையா? ஸ்கேன் பண்ணி பார்த்தால்... குழந்தையோட வயசு என்னென்னு தெரிஞ்சிரும்." என்றவர் அவளை ஸ்கேன் எடுக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றார்.



மருத்துவர் சகுந்தலாவுக்கு ஸ்கேன் எடுத்துக் கொண்டே, "உங்களுக்குள்ள தாம்பத்தியம் எல்லாம் எப்படிப் போகுது? ஒரு நாளைக்கு எத்தனை முறை? உங்க கணவர் அந்த மாதிரி நேரத்தில் எப்படி நடந்துப்பாரு. உங்களை எப்படி எல்லாம் கையாள்வாரு..." மருத்துவர் சற்று அந்தரங்கமான கேள்விகளை அவளைக் கண்டு கேட்க ஆரம்பித்தார்.



"ச்சீ, இப்படி எல்லாமா கேட்பீங்க? அசிங்கம், கர்மம்." என்று அவள் அருவருப்பாய் தலையில் அடித்துக் கொண்டவள்,



"நீங்க ரொம்ப மோசமா கேள்வி கேட்கிறீங்க. நீங்க தப்பு." என்றவள் உடையைச் சரி செய்து கொண்டு அங்கிருந்து கோபமாய் வெளியேறி விட்டாள்.



"அதுக்குள்ள செக்கப் முடிஞ்சிருச்சா?" சக்தீஸ்வரன் மனைவியைக் கண்டு ஆச்சிரியமாய்க் கேட்டான்.



"எனக்கு இந்த டாக்டரை பிடிக்கலை." அவள் சொல்லவும்,



"ஏன்? என்னாச்சு?" அவன் புரியாது அவளைப் பார்த்தான். அவர் தான் நகரத்தில் புகழ் பெற்ற மருத்துவர். அதுவும் கைராசியான மருத்துவரும் கூட. அவரைப் போய் மனைவி இப்படிச் சொன்னால்?



"அவங்க அசிங்கமா பேசுறாங்க. அசிங்கமா கேள்வி கேட்கிறாங்க." அவள் சொன்னது கேட்டு அவன் தான் திகைத்தான்.



"நீ இங்கேயே இரு. இதோ நான் வந்திர்றேன்." அவன் மருத்துவர் அறைக்குள் நுழைந்தான்.



"டாக்டர், என் மனைவி எது பேசி இருந்தாலும்... அதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்." அவன் எடுத்ததுமே மருத்துவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.



"நீங்க சொன்னது சரி தான் மிஸ்டர் சக்தி. அவங்களுக்குத் தாம்பத்தியம் பற்றிய சரியான புரிதல் இல்லை." அவர் சொன்னது கேட்டு அவன் திகைக்கவில்லை. சகுந்தலாவை பற்றித் தான் அவனுக்குத் தெரியுமே.



"அது எனக்குமே தெரியும் டாக்டர். அவளுக்கு ஏதாவது?" அவன் இப்படிக் கேட்கும் போதே அவனது இதயம் பயத்தில் எகிறித் துடித்தது.



"அதையும் நீங்க சொன்ன மாதிரி ஜாடைமாடையா கேட்டுப் பார்த்தேன். அப்படி எதுவும் நடந்ததா அவங்க சொல்லலை. அவங்களுக்குச் செ*ஸ் பத்தின சரியான புரிதல் இல்லை. அதுக்கு அவங்களால பதில் சொல்லவும் முடியலை." அவர் சொன்னது கேட்டு அவனுக்குத் தான் என்ன சொல்வது என்று தெரியவில்லை.



"இதுக்கு ஒரே ஒரு தீர்வு தான் இருக்கு." என்றவர் அதற்கான தீர்வை சொல்ல...



"சீதையைத் தீக்குளிக்கச் சொன்னது எல்லாம் அந்தக் காலம். நான் ராமனும் இல்லை. அவள் சீதாவும் இல்லை. அவளைப் பரீட்சித்துப் பார்க்க வேண்டாம். அவளுக்கு ஏதாவது தவறா நடந்து இருந்தால்... அடுத்த நொடி அவள் தனது உயிரை விட்டு இருப்பாள். ஏன்னா அவள் மனசில் இருப்பது நான் மட்டும் தான். அவள் உள்ளமும் சரி, உடலும் சரி எனக்கு மட்டும் தான்." அவனது காதல் மட்டுமல்ல... அவளது காதலும் மருத்துவரை மலைக்க வைத்தது.



"அவள் எப்படி இருந்தாலும் என் மனைவி தான். அவள் வயிற்றில் வளரும் குழந்தை என்னுடைய குழந்தை தான். இதுக்கு மேல இது பற்றி எதுவும் பேச வேண்டாம் டாக்டர்." என்று உறுதியாகக் கூறியவனைக் கண்டு மருத்துவருக்குத் தான் பிரமிப்பாக இருந்தது.



பிறகு சக்தீஸ்வரன் குழந்தையின் நலத்தைப் பற்றி மருத்துவரிடம் விசாரித்து விட்டு வெளியில் வந்தான். அவனைக் கண்டதும் சகுந்தலா எழுந்து நின்றாள்.



"கேப்டன், அவங்களை நீங்க நல்லா திட்டினீங்களா?" அவள் கேட்கவும்,



"ம்..." என்றான் வாஞ்சையுடன் அவளைக் கண்டு...



"இப்போ தான் சந்தோசமா இருக்கு. அந்தக் கிழவி என்ன கேள்வி எல்லாம் கேட்குது. வயசுக்கு ஏத்த மாதிரி பேச மாட்டேங்குது." அவள் பேசி கொண்டே வர...



சக்தீஸ்வரன் மனைவியை அணைத்துக் கொண்டு நடந்தான். எந்த நிலையிலும் அவன் அவளைக் கைவிடுவதாக இல்லை.



“மாமன் தோளில் சாய்ந்த முல்லையே

மயங்கி மயங்கி பேசும் கிள்ளையே

நீயென் வாழ்வின் எல்லையே

இதை மீறிய தவம் இல்லையே

இனி எந்தக் குறையும் இல்லையே

தினம் தீரும் தீரும் தொல்லையே”



தொடரும்...!!!
 

Sasimukesh

Administrator
அத்தியாயம் : 28



சக்தீஸ்வரன் பரபரப்பாகச் சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தான். அவனும், சகுந்தலாவும் நேற்று தான் அவனது தீவுக்கு வந்து சேர்ந்திருந்தனர். சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு வேண்டி இங்கு இன்னமும் வேலைகள் நடந்து கொண்டிருந்தது. அதேசமயம் குடியிருப்புகள், மருத்துவமனை, பள்ளிக்கூடம் என்று அடிப்படை தேவைகளும் இங்கு இருந்தது. சக்தீஸ்வரனுக்கும் இங்கே நிறைய வேலைகள் இருந்ததால்... அவன் மனைவியைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு இங்கு வந்துவிட்டான்.



சகுந்தலாவை இங்கே அழைத்துக் கொண்டு வருவதற்கு அவனுக்கு ஏகப்பட்ட தடைகள். அவனுக்கு வேறு யார் தடைகள் போட போகின்றார்கள்? எல்லாம் அவனைப் பெற்றவர் தான். அவன் இங்கே கிளம்பும் முன் நடந்த நிகழ்வினை நினைத்துப் பார்த்தான்.



அன்று சக்தீஸ்வரன் சகுந்தலாவை வேறு ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றதற்கே அவனது தந்தை அவனை ஒருவழி செய்துவிட்டார்.



"எதுக்குடா வேற டாக்டர் கிட்ட சக்குவை காண்பித்த? குழந்தையை ஏதாவது பண்ணும் பிளான் இருக்கா? இந்தக் குழந்தைக்கு மட்டும் ஏதாவது ஒண்ணு ஆச்சு... உன்னைச் சும்மா விட மாட்டேன்." சர்வேஸ்வரன் மகனை எச்சரித்தான்.



"என்னோட குழந்தையை எனக்குப் பார்த்துக்கத் தெரியும்." சக்தீஸ்வரன் கோபமாய் முணுமுணுக்க...



"ஆமாம், ஆமாம்... ரொம்பப் பெரிய அக்கறை... இதுக்கு முன்னாடி எங்கேடா போயிருந்தது இந்த அக்கறை?" அதற்கும் தந்தை மகனை கடிந்து கொண்டான்.



"ப்ச், இப்போ எதுக்குத் தேவை இல்லாம பேசுறீங்க? இந்தாங்க ரிப்போர்ட். குழந்தை நல்லா ஆரோக்கியமா இருக்கு. போதுமா?" அவன் மனைவியின் மருத்துவ அறிக்கையை எடுத்து காட்டிய பிறகு தான் சர்வேஸ்வரன் சற்று அடங்கினான்.



"நான் சக்குவை என்னோட அழைச்சிட்டு போறேன்." என்ற மகனை கண்டு விழிகளைச் சுருக்கிய தந்தை,



"எங்கே?" என்று கேட்க...



"தீவுக்கு..."



"பிள்ளைதாச்சி பொண்ணைத் தனித்தீவுக்குக் கூட்டிட்டு போய் என்ன பண்ண போற? ஏதாவது ஆத்திரம், அவசரம்ன்னா என்னடா பண்ணுவ?" அவ்வளவு தான் அதற்கும் சர்வேஸ்வரன் கோபத்தில் பொரிந்து தள்ளிவிட்டான்.



"அங்கே ஹாஸ்பிட்டல் இருக்கு. இங்கே இருக்கிற மாதிரி எல்லாம் வசதியும் அங்கேயும் இருக்கு. நீங்க கவலைப்படற மாதிரி, பயப்படற மாதிரி ஒண்ணும் நடக்காது." அவன் தான் சமாதானமாய்ப் போக வேண்டியதாய் போயிற்று.



"நீ என்ன சொன்னாலும் நான் இதுக்குச் சம்மதிக்க மாட்டேன். உன்னால் சக்குவை பார்த்துக்க முடியாது. நீ வேலை, வேலைன்னு நேரம் காலம் தெரியாது பழியா கிடப்ப. இது சரிப்பட்டு வராது." சர்வேஸ்வரன் தனது நிலையில் நிலையாய் நின்றான்.



"நீங்க வேலை, வேலைன்னா இருந்தீங்க? வேலையோடு அம்மாவையும் சேர்த்து பார்த்துக்கிட்டீங்கல்ல. அது மாதிரி நானும் சக்குவை பார்த்துக்குவேன்."



"டேய், எங்க கதை வேறடா. உன் கதை வேற." தந்தை கோபத்தில் பல்லை கடித்தான்.



"எல்லாம் ஒரே கதை தான்." மகன் முடித்துக் கொள்ள...



"உன்னை நம்ப முடியாது." மருமகளை மகன் கூட அனுப்புவதில் சர்வேஸ்வரனுக்கு இன்னமும் உடன்பாடில்லை.



"கடந்த ரெண்டு மாசமா உங்க கூடச் சக்கு எப்படி இருந்தாள்? கொஞ்சம் யோசிச்சு பாருங்க." என்ற மகனை கண்டு சர்வேஸ்வரன் யோசிக்க ஆரம்பித்தான்.



சக்தீஸ்வரனை பிரிந்து சகுந்தலா உயிரற்ற உடலாய் ஏதோ ஒப்புக்கு உயிர் வாழ்ந்து கொண்டிருந்தாள். அவள் மற்றவர்களுக்காக வெளியில் சிரித்தவள் மனதிற்குள் அழுது கொண்டு அல்லவா இருந்தாள். அதைச் சர்வேஸ்வரன் உணர்ந்தே இருந்தானே. மகனது கேள்விக்கு அவனால் பதில் கூற முடியவில்லை.



"உங்களோட இருந்தால் சக்கு உயிர்ப்போடு இருக்க மாட்டாள். அப்புறம் எப்படி அவள் சந்தோசமாக இருப்பாள்? அவளது இந்த மனநிலை குழந்தைக்கு நல்லது இல்லை. இதே இது சக்கு என்னுடன் இருந்தால்... நிச்சயம் உயிர்ப்புடன் இருப்பாள். அந்த உயிர்ப்பு அவளுக்குச் சந்தோசத்தைக் கொடுக்கிறதோ இல்லையோ... நிச்சயம் அவளுக்கு நிம்மதி கொடுக்கும். இப்போதைக்கு அவளுக்கு நிம்மதி தான் தேவை. மறுக்காதீங்க." என்றவனைக் கண்டு சர்வேஸ்வரன் குழப்பத்துடன் அமர்ந்து இருந்தான்.



"சக்கு என் மனைவி. நிச்சயம் நான் அவளைச் சந்தோசமா பார்த்துப்பேன். ஐ பிராமிஸ் யூப்பா." என்று சத்தியம் செய்த மகனை கண்டு சர்வேஸ்வரன் எதுவும் பேசவில்லை. அவன் அமைதியாக இருந்தான்.



அப்போது சகுந்தலா அங்கு வந்து கொண்டிருந்தாள். அவள் புடவை தான் அணிந்திருந்தாள். அதுவும் தழைய, தழைய... இப்படி ஒரு தோற்றத்தில் பார்க்கும் போது அவள் அத்தனை அழகாக இருந்தாள்.



"அங்கே சக்குவை பாருங்க. நீங்க எத்தனையோ முறை அவளை மாற்ற முயற்சி பண்ணினீங்க. ஏதாவது முன்னேற்றம் தெரிந்ததா? இல்லையே. ஆனால் நான் புடவை இப்படித்தான் கட்டணும்ன்னு ஒரு நாள் தான் சொல்லி கொடுத்தேன். இதோ தினமும் இப்படித் தான் அவள் புடவை கட்டுகிறாள். சொல்றவங்க சொன்னால் தான் கேட்கிறவங்க கேட்பாங்க." மகன் சொன்னது கேட்டு தந்தை மருமகளைத் திரும்பி பார்த்தான். மகன் சொன்னது சரி தான் என்பது போலிருந்தது மருமகளின் புடவை கட்டு...



"இதுக்கு முன்னே நடந்ததை எல்லாம் மறந்திடுங்கப்பா. சக்குக் கழுத்தில் தாலி காட்டியதில் இருந்து நான் அவளுக்கு உண்மையா தான் இருக்கேன். அவள் என் மனைவி. அவளை எப்படிப் பார்த்துக்கணும்ன்னு எனக்குத் தெரியும்."



"நீ பேசுறது கேட்கிறதுக்கு நல்லா தான் இருக்கு. அதை நீ செஞ்சு காட்டு. அப்போ நான் நம்பறேன். ஆனா அதுக்காகக் கர்ப்பிணி பெண்ணை விசப்பரீட்சைக்கு உட்படுத்த தான் எனக்குப் பயமா இருக்கு." சர்வேஸ்வரனுக்கு இன்னமும் யோசனை தான். மகன் மீது நம்பிக்கை வர மறுக்கின்றதே.



பிறகு உதயரேகா தான் கணவனது மனதினை மாற்றி மருமகளை மகனுடன் தீவிற்கு அனுப்பி வைத்தாள்.



பழசை நினைத்து கொண்டிருந்தவன் தன் பின்னால் யாரோ வரும் அரவம் கேட்டதில் திரும்பி பார்த்தான். அவனது மனைவி தான் தூக்க கலக்கத்தில் நடந்து வந்து கொண்டிருந்தாள். இரவு உடையில் நலுங்கிய தோற்றத்திலும் அவள் அவனது விழிகளுக்கு அழகாகத் தான் தெரிந்தாள்.



"குட்மார்னிங் மேடம்." அவன் புன்சிரிப்புடன் அவளை வரவேற்க...



"குட்மார்னிங் கேப்டன்." அவள் கதவில் சாய்ந்தபடி தூங்க முயல... சக்தீஸ்வரன் அவள் அருகே வந்து அவளை அப்படியே தூக்கினான்.



"கேப்டன், என்ன பண்றீங்க?"



"ஒண்ணும் பண்ணலை." என்றவன் அவளை அங்கே இருந்த திண்டில் அமர வைத்தான்.



சகுந்தலா பின்பக்கம் நகர்ந்து சுவற்றில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.



"இந்தா பால்." அவன் பால் கோப்பையை அவளிடம் நீட்ட...



"பாலா? காபி இல்லையா?" அவள் முகத்தைச் சுளித்தாள்.



"காபி குடிச்சா, குழந்தை டிகாசன் கலரில் பிறக்குமாம். பால் குடிச்சா, பால் நிறத்தில் குழந்தை பிறக்குமாம்." அவன் சொன்னதும்,



"அப்படின்னா பால் ஓகே." என்றவள் பாலை ஒரே மூச்சில் குடித்து முடித்தாள்.



"குழந்தை என்னைய மாதிரி கருப்பா வேண்டாம். உங்களை மாதிரி செவப்பா பிறக்கணும்." என்றவளின் கரங்களைப் பிடித்து இழுத்து அவளைத் தன்னருகே வரவழைத்தவன் அவளது கால்களுக்கு இடையில் நின்று கொண்டான்.



"நீ சாக்லேட் மாதிரி தித்திப்பு. நீ டஸ்க்கி அழகிடி..." என்றவனது பார்வை அவளது இதழ்களை மையலுடன் மொய்த்தது. அவனது வலக்கை அவளது இதழ்களை மென்மையாய் வருடி விட்டது.



கணவனது பார்வையில் அவளுள் ஜில்லென்று ஒரு உணர்வு... அவளது அடிவயிற்றில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் ஒருசேர பறப்பது போன்று ஒரு குறுகுறுப்பு. அவள் இனம்புரியாத ஒரு உணர்வில் சிக்கி தவித்தபடி அவனையே பார்த்திருந்தவள், அடுத்த நொடி தான் குடித்த பாலை வாந்தியாக அவன் மீதே எடுத்திருந்தாள். இப்போது தான் அவளுக்கு மசக்கை ஆரம்பமாகி இருந்தது.



சக்தீஸ்வரன் அருவருப்பு அடையாது அவளது வாந்தியை தனது கையில் ஏந்தி கொண்டான். அவனது செய்கையில் அவளுக்குக் கண்களைக் கரித்துக் கொண்டு வந்தது.



"மன்னிச்சுக்கோங்க கேப்டன். தெரியாம..." அவள் விழிகள் கலங்க அவனிடம் மன்னிப்பு கேட்டாள்.



"குழந்தை உண்டாகி இருக்கும் போது இது எல்லாம் சகஜம் சக்கு. நீ பதட்டப்படாத. ரிலாக்ஸ். முதல்ல நீ போய் டிரெஸ் மாத்திட்டு வா." என்றவன் தன்னைச் சுத்தப்படுத்த சென்று விட்டான்.



சகுந்தலா உடை மாற்ற வேண்டி தங்களது அறைக்குள் நுழைந்தாள். அவளது கரங்கள் உடையை மாற்றிக் கொண்டிருந்த போதும் அவளது எண்ணங்கள் மருத்துவமனைக்குச் சென்ற நாளிற்குப் பயணித்துக் கொண்டிருந்தது.



அன்று மருத்துவரின் அறையில் இருந்து வெளியில் வந்த சக்தீஸ்வரனிடம் சகுந்தலா ஏதேதோ பேசி கொண்டு வந்தாள். அவனும் அதற்கு எல்லாம் சளைக்காது உம் கொட்டி கொண்டு வந்தான். மருத்துவமனை வரவேற்பறையில் இருந்த இருக்கையில் அவளை அமர வைத்தவன்,



"நான் மருந்து வாங்கிட்டு, காரை எடுத்துட்டு வந்து உனக்கு ஃபோன் பண்றேன். அதுவரைக்கும் நீ இங்கேயே இரு." என்று கூற...



"நானும் கூட வர்றேனே கேப்டன்." தனியாக இருக்க அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.



"இந்த மாதிரி சமயத்தில் ரொம்ப நேரம் நிற்க கூடாது, அலைய கூடாது சக்கு. சொன்னால் கேட்கணும்."



"ம், சரி..." அவள் வேறுவழியின்றித் தலையாட்டினாள்.



"எங்கேயும் போயிர கூடாது." என்று ஆயிரம் பத்திரங்களைக் கூறி விட்டு சென்றவனை அவள் பார்த்துக் கொண்டே இருந்தாள்.



திருமணத்திற்கு முன்பிருந்த சக்தீஸ்வரனை அவளுக்கு ஒரு விதத்தில் பிடித்தது என்றால்... திருமணத்திற்குப் பின் இருக்கும் இந்தச் சக்தீஸ்வரனை அவளுக்கு மிகவும் பிடித்தது. ஆனால் இடைப்பட்ட காலத்தில் வில்லனான அந்தச் சக்தீஸ்வரனை மட்டும் அவளுக்குப் பிடிக்கவே இல்லை. இப்போதும் அவனது செயல்களுக்கான காரணம் அவளுக்குத் தெரியவில்லை.



தன்னைக் கீழாகப் பேசி விட்டானே என்கிற கோபம் அவளுக்கு இருந்தது தான். ஆனால் இப்போது அவன் அவளை அவனுடனேயே வைத்துக் கொண்டு சுற்றுவதைக் கண்ட போது... அவளது கோபம் சிறிது மட்டுப்பட்டது. 'என் மனைவி' என்று அவன் அவளை எல்லோரிடமும் சிரித்த முகமாய் அறிமுகப்படுத்தி வைத்ததை அவள் நினைவு கூர்ந்தாள். அவனது முகத்தில் கோபமோ, வருத்தமோ, அவமானமோ எதுவுமே இல்லை. மாறாக மகிழ்ச்சி தான் இருந்தது. இதை எல்லாம் காணும் போது அவளது கோபம் சிறிது குறையத் தான் செய்தது.



'இவ்வளவு தான் நீயா? உன் கோபம் இவ்வளவு தானா? அவன் சிரிச்சு சிரிச்சு பேசியதும் நீ மயங்கிட்ட. உனக்கு எல்லாம் எதுக்குத் தன்மானம்? அவன் வேறு ஒரு பெண்ணை விரும்பியவன். அவளுடன் ஒரே அறையில் தங்கி இருந்து தப்பு செய்தவன். அப்படிப்பட்ட ஒருத்தன் உனக்குத் தேவையா? அவன் மனசில் நீ இல்லை.' அவளது மனசாட்சி நேரம் காலம் தெரியாது அவளைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.



கணவன் மனதில் வேறு பெண் இருக்கிறாள் என்பது அவளுக்கு நிச்சயம் தெரியும். ஏனெனில் அன்று அவன் மது போதையில் அவளை முத்தமிடும் போதும் அந்தப் பெண்ணின் செல்ல பெயரை சொல்லி தானே அவளை அழைத்தான். ஒருவேளை அந்தப் பெண்ணாக எண்ணித்தான் அவளை...? அதற்கு மேல் சிந்திக்க முடியாதபடி அவளுக்கு அழுகை வரும் போலிருந்தது.



'நீ குழந்தை உண்டாகியதால் அவன் வேறுவழியில்லாம உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டான். இது குழந்தைக்காக நடந்த கல்யாணம். குழந்தை பிறந்ததும் அவன் குழந்தையை வாங்கிக் கொண்டு உன்னைத் துரத்தி விடப் போகிறான் பாரு.' அவளது மனசாட்சி அவளுக்கு எடுத்து சொல்ல... அவள் மிகவும் குழம்பி போனாள்.



"ஹேய், நீயா?" தர்சனாவின் ஆத்திர குரலில் சகுந்தலா அவளைத் திரும்பி பார்த்தாள்.



தர்சனா அவளுக்குப் பக்கத்து இருக்கையில் தான் அமர்ந்து இருந்தாள். அவளது கையில் டிரிப்ஸ் ஏற்றப்பட்டு இருந்ததற்கு அடையாளமாகப் பிளாஸ்திரி இருந்தது. அவள் மிகவும் சோர்வாக இருந்தாள்.



"அச்சோ, உங்களுக்கு என்னாச்சு? உடம்பு சரியில்லையா?" சகுந்தலா பதறி போய் அவளிடம் நலன் விசாரித்தாள். சக மனுசியாய் அவள் தர்சனாவிடம் அன்பு பாராட்டினாள்.



தர்சனா பிறவி குணம் அடங்குமா? அவளோ இவளை கண்டு, "எல்லாம் உன்னால் தான்டி." என்று கோபத்துடன் படபடத்தாள்.



"நானா? நான் என்ன செஞ்சேன்?" தர்சனாவுக்கு உடம்பு சரியில்லை என்றால்... அதற்குத் தான் என்ன செய்தோம்? அவள் தனக்குள் குழம்பி போனாள்.




"அது எப்படிடி? என் கிட்ட மயங்காத சக்தி உன் கிட்ட மட்டும் மயங்கினான். அன்னைக்கு அவனுக்குக் குடிக்க மது கொடுத்து, அவனைப் போதையில் மட்டையாக்கி, அங்கேயே ரூம் போட்டு அவனை மடக்கலாம்ன்னு பார்த்தால்? அவன் என்னைப் பொண்ணா என்ன... ஒரு மனுசியா கூட மதிக்கலை. அவன் என்னை அவனைத் தொட கூட விடலை. அந்தப் போதையிலும் அவன் என்னைத் தள்ளி விட்டான்." என்றவளை கண்டு சகுந்தலாவின் விழிகள் திகைப்பில் விரிந்தது. அவளது மனதிற்குள் இனம் புரியாத மகிழ்ச்சி தோன்றியது.
 

Sasimukesh

Administrator
"அப்படிப்பட்டவன் உன்னை எப்படித் தொட்டான்? போதையில் இருந்தால் கூட வரம்பு மீறாதவன்... உன்னைத் தொட்டு இருக்கான்னா? அதைவிட உன்னைக் கல்யாணம் பண்ணி இருக்கான்னா? இதுக்கு எல்லாம் என்ன காரணம்?"



'என்ன காரணம்?' சகுந்தலா இனிய அதிர்ச்சியுடன் தர்சனாவை பார்த்தாள்.



"எனக்கு அப்பவே தெரியும்டி. அவன் உன்னை ஸ்பெசலா ட்ரீட் பண்ணும் போதே நான் நினைச்சேன். அவனுக்கு உன்னைப் பிடிக்கும்ன்னு... இதோ இப்போ புரிஞ்சு போச்சே. அவன் குழந்தையை நீ சுமந்துக்கிட்டு இருக்கியாமே. கேள்விப்பட்டேன். யாருக்கும் அடங்காதவன நீ அடக்கி காட்டிட்டியே. ஆனா ஒண்ணு மட்டும் சொல்லுறேன்... சக்திக்கு நீ சமமான ஜோடி இல்லை. நீயா அவனை விட்டு விலகி போயிரு. அது தான் உனக்கு நல்லது." தர்சனா வயிற்றெரிச்சலில் கோபமாய்க் கத்தினாள்.



சகுந்தலா பதில் எதுவும் கூறாது அமைதியாக இருந்தாள். தர்சனா முதலில் கூறிய வார்த்தைகள் அனைத்தும் அவளுள் மகிழ்ச்சியைத் தோற்றுவித்தது. தர்சனா கடைசியில் கூறிய வார்த்தைகளைச் சகுந்தலா காற்றில் பறக்க விட்டாள். எந்தப் பெண்ணிடமும் மயங்காதவன் தன்னவன் என்கிற பெருமையில் அவளது நெஞ்சம் பூரித்தது.



இது தானே ஒரு பெண்ணுக்கு வேண்டும். இந்த உறுதி இருந்தால் போதுமே... மனம் கவர்ந்தவன் கரம் கோர்த்து வாழ்க்கையில் எத்தகைய கடின பாதையையும் கடந்து வந்து விடலாமே.



"என்னடி பேசிக்கிட்டு இருக்க? இன்னும் நீ அவனை மறக்கலையா?" இளைஞன் ஒருவன் தர்சனாவை கண்டு பல்லை கடித்தான்.



"இல்லை கரண்..." அவள் ஏதோ கூறி சமாளிக்கப் பார்த்தாள்.



"இப்போ தான் என்னோட குழந்தையை அபார்ட் பண்ணிட்டு வந்திருக்க. அப்படி இருந்தும் நீ அவனைப் பத்தி பேசுற. நான் கூடக் குழந்தையைக் கலைக்கிறதை நினைச்சுக் கொஞ்சம் கவலைப்பட்டேன் தான். இப்போ இல்லை. நீ எல்லாம் திருந்தா ஜென்மம்." என்ற கரண் அவளைத் திட்டி கொண்டே அழைத்துச் சென்றான்.



கரண் இன்னொரு அமைச்சரின் மகன். கேளிக்கை விருந்தில் பார்த்துக் கொண்ட இருவரும் காதலிப்பதாய் கூறி பழகி வந்தனர். தர்சனா, சக்தீஸ்வரன் பழக்கம், பிரிவு எல்லாம் கரணுக்கு தெரியும். அவன் அதைத் தவறாக எடுத்து கொள்ளவில்லை. இன்றைய காலக்கட்டத்தில் இது எல்லாம் சகஜம் என்று எண்ணினான். ஏனெனில் அவனுக்குமே அத்தனை பிரேக்கப் கதைகள் இருந்தது. இருவரும் திருமணத்திற்கு முன்னர்த் தவறு செய்து குழந்தை உண்டாகி விட... அதைப் பெற்றோரிடம் கூற பயந்து குழந்தையைக் கலைக்க அவனே அவளை இங்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டான். அதற்காக அவன் அவளைக் கைவிட எண்ணவில்லை. சீக்கிரமே அவளைத் திருமணம் செய்யத் தான் அவன் எண்ணி இருந்தான். வந்த இடத்தில் தர்சனா வாயை கொடுத்து மாட்டி கொண்டாள்.



அதன்பிறகு சக்தீஸ்வரன் அலைப்பேசியில் சகுந்தலாவை அழைக்க... அவள் கணவனைத் தேடி சென்றாள். காரில் அமர்ந்ததும் அவள் கணவனைத் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே வந்தாள்.



"என்ன சக்கு, எதுவும் கேட்கணுமா?" அவன் புன்னகையுடன் கேட்க...



"இல்லை..." அவள் மறுப்பாய் தலையாட்டினாள்.



நீண்ட நாட்களாய் சகுந்தலாவின் மனதில் உறுத்தி கொண்டிருந்த தர்சனா என்கிற நெருஞ்சி முள் இப்போது காணாது போயிற்று. சகுந்தலாவின் மகிழ்ச்சி மீண்டிருந்தது. அவள் சக்தீஸ்வரன் மீது நம்பிக்கை கொண்டாள். அந்த நம்பிக்கையில் தான் அவள் அவன் அழைத்ததும் இந்தத் தீவிற்குக் கிளம்பி வந்தது.



"சக்கு..." கணவன் கதவை தட்டியதும் தன்னுணர்வு பெற்ற சகுந்தலா அவசரமாக உடை மாற்றி விட்டு கதவை திறந்தாள்.



"ரொம்ப நேரமாச்சா... அதான் பயந்துட்டேன்." என்றவனைக் கூர்ந்து பார்த்தவள்,



"செத்து போயிட்டேனோன்னு பயந்துட்டீங்களா கேப்டன்." என்று கேட்க...



"என்ன பேச்சு பேசுற? இனி இப்படிப் பேசினால் வாயிலேயே அடிப்பேன். இந்த மாதிரி வார்த்தைகள் இனி ஒரு போதும் உன் வாயில் இருந்து வர கூடாது." அவன் கண்டிப்பான குரலில் கூறிய போதும்... அவனது விழிகள் சொல்லொண்ணா வேதனையைப் பிரதிபலித்தது.



முன்பிருந்த சகுந்தலா இதை எல்லாம் உணர்ந்திருக்க மாட்டாள். கண்டு கொண்டிருக்க மாட்டாள். இந்தச் சகுந்தலா புதியவள். அவள் கணவனது ஒவ்வொரு செயல்களையும் அவதானித்துப் பார்த்து கொண்டிருந்தாள். கணவனது மனதில் என்ன இருக்கிறது? என்று அவளுக்குத் தெரியவில்லை. அவனது செயல்களுக்கான எந்த விளக்கமும் அவளுக்கு இப்போது வரை தெரியாது. அவனாகக் கூறினால் தான் உண்டு. அவனும் இது பற்றி அவளிடம் எதுவும் பேசவில்லை. கணவனாக வாய் திறக்கும் வரை அவளும் காத்திருப்பதாய் முடிவு செய்தாள்.



காதல் வந்ததும் குழந்தை பெண்ணவள் குமரி பெண்ணாய் மாறி யோசிக்க ஆரம்பித்து இருந்தாள். இதுவே நல்ல மாற்றம் தான்.



"மன்னிச்சுக்கோங்க கேப்டன். தெரியாம சொல்லிட்டேன்." அவளது வார்த்தைகளில் அவன் புன்னகைத்தாலும் அவனது முகம் தெளியவில்லை. அதைக் கண்டு அவள் தான் சோர்ந்து போனாள். அவளது சோர்வை கண்டு அவன் தான் பதறிப் போனான்.



"டயர்டா இருக்கா? கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறியா?"



"இல்லை கேப்டன். அதெல்லாம் ஒண்ணும் இல்லை."



"அப்போ என் கூட வர்றியா. பீச்சில் காலார நடந்துட்டு வரலாம்." அவன் சொன்னதும் அவளும் மறுக்காது உடன் சென்றாள்.



சக்தீஸ்வரன் சகுந்தலாவின் கரத்தினைப் பிடித்துக் கொண்டு கடற்கரையோரம் நடந்தான். அலைகள் ஓடி வந்து அவர்களது பாதங்களை முத்தமிட்டு விட்டு பின்பு நாணி வேகமாய் ஓடி சென்று கடலுக்குள் மறைந்தது. பின்பு வெட்கம் விட்டு மீண்டும் வந்து முத்தமிட்டது. சகுந்தலாவுக்கு உமட்டி கொண்டிருந்த நிலை மாறி... இப்போது அவள் ரிலாக்சாக உணர்ந்தாள். அவளது இதழ்களில் புன்னகை தவழ்ந்திருந்தது.



"கேப்டன், எனக்கு வேலை வேணும்." அவள் கேட்கவும்... அவன் அவளைத் திரும்பி பார்த்தான்.



"எதுக்கு?"



"நீங்க எனக்கு வாங்கிக் கொடுத்த டிரெஸுக்கான பணம், ஹாஸ்பிட்டல் பில்லுக்கான பணம் எல்லாத்தையும் திருப்பிக் கொடுக்க வேண்டாமா?" அவள் சொன்னது கேட்டு... அவன் பெருமூச்சுடன் நிமிர்ந்தான்.



"நீ என் மனைவி. உன் வயிற்றில் இருப்பது என் குழந்தை. இது என்னோட கடமை." என்றவனைக் கண்டு அவளுக்கு முன்பு மாதிரி ரோசம் பொங்கவில்லை.



"இருக்கலாம்... ஆனா எனக்கும் கடமை இருக்குல்ல." என்றவளை கண்டு,



"வேலை தானே வேணும். ஏற்கெனவே ஏற்பாடு பண்ணிட்டேன். நாளைக்குப் போகலாம்."



"எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு தான்... என் கிட்ட வம்பிழுத்தீங்களா?" அவள் அவனைக் கண்டு முறைத்தாள்.



"இப்போ கூட நீ வேண்டாம்ன்னு சொல்லு... ஏற்பாடு பண்ணிய வேலையை வேண்டாம்ன்னு சொல்லிர்றேன்."



"இல்லை, இல்லை வேணும்." அவள் அவசரமாக மறுத்து சொன்னாள்.



கணவனது வாயிலிருந்து உண்மையை அறியாது அவள் எதையும் இனாமாக அவனிடம் இருந்து பெற்றுக் கொள்ளத் தயங்கினாள்.



இன்னமும் விலகி நிற்கும் மனைவியைக் கண்டு அவனுக்கு ஆற்றாமையாக இருந்தது. அவன் தனது மனதில் இருப்பதை எல்லாம் அவளிடம் சொல்லி... அவளைக் காதலால் ஆராதிக்க வேண்டும் என்று அவன் ஆசை கொண்டான். அவன் எல்லாவற்றையும் சொல்லிய பிறகு அவள் மனதில் காதல் அப்படியே இருக்குமா? இல்லை காணாது போகுமா? இது எல்லாவற்றையும் விட இப்போது குழந்தை பற்றிய குழப்பம் வேறு... அவன் அடுத்த நிலைக்குச் செல்ல முடியாதபடி ஏகப்பட்ட தடைகள் அவன் முன்னே இருந்தது.



பெண்ணின் மனம் கண்ணாடி போன்றது. ஏற்கெனவே அவன் அதைக் கையாள தெரியாது, அவசரப்பட்டு ஒரு முறை உடைத்தது போதும். மீண்டும் ஒரு முறை அவன் அவளது மனதினை உடைக்கத் தயாராக இல்லை. அதனால் குழந்தை பிறக்கும் வரை அவன் பொறுமையாக இருக்க முடிவு செய்தான்.



"சக்கு, இங்கே உட்காரலாமா?" அவன் கேட்கவும்...



"நீங்க உட்காருங்க கேப்டன். நான் கிளிஞ்சல்கள் பொறுக்கப் போறேன்." அவள் உற்சாகமாய் ஓடினாள்.



அழகிய கடற்கரையைப் பார்த்ததும் அவள் குழந்தையாய் மாறி போனாள்.



"ஹேய் பார்த்து, வயித்தில் குழந்தை இருப்பது ஞாபகத்தில் இருக்கட்டும்." அவன் எச்சரிக்கை விடுத்தபடி அவளைப் பார்த்தபடி அமர்ந்து இருந்தான். சகுந்தலா ஓடி ஓடி கிளிஞ்சல்களைப் பொறுக்கி கொண்டிருந்ததை அவன் புன்னகையுடன் பார்த்திருந்தான்.



சக்தீஸ்வரன் மனம் தங்கையிடம் சென்றது. அங்குச் சென்னையில் இருந்த போது பத்மினி அவனின் முகத்தைப் பார்த்து பேசுவதைத் தவிர்ப்பது கண்டு அவனுக்கு யோசனையாக இருந்தது. அதனால் அவன் பத்மினியை தனியே சந்தித்துப் பேசினான்.



"மினி, என்னடாச்சு? ஏன் என் கிட்ட பேச மாட்டேங்கிற?" அவன் பாசத்தோடு கேட்க...



"ஏன்னு உங்களுக்குத் தெரியாதா அண்ணா?" அவள் அவனைத் தீர்க்கமாய்ப் பார்த்தாள்.



"சொன்னால் தானேம்மா தெரியும்." அவன் தங்கையைப் புரியாது பார்த்தான்.



"நானா காதல் பத்தி..." அவள் சொன்னதும் அவனுக்குப் புரிந்து போனது. அதற்காக எல்லாம் அவன் அலட்டி கொள்ளவில்லை.



"அது முடிந்து போன கதை மினி. நீ நாராயணன் கூடச் சந்தோசமாக வாழும் வழியைப் பார்." அவன் ஒரு அண்ணனாய் தன்மையுடன் அறிவுரை கூற...



"எது முடிந்து போன கதை அண்ணா? ஒரு காதலை அழிச்சிட்டு எப்படி உங்களால் இப்படிப் பேச முடியுது?" அவளுக்குக் கோபமும் வந்தது... அதேசமயம் வருத்தமும் வந்தது.



"ஹேய், என்னமோ அவங்க காதல் தெய்வீக காதல் ரேன்ஞ்சுக்கு பேசுற? அப்படி எல்லாம் இல்லை மினி." அவன் சிரித்துக் கொண்டே சொல்ல...



"சிரிக்காதீங்க அண்ணா... அது தெய்வீக காதல் இல்லைன்னு நீங்க எப்படிச் சொல்லலாம்? காதலிச்ச அவங்களுக்குத் தானே தெரியும். அவங்க காதலை பத்தி..." அவள் கோபமாகக் கேட்க...



"சரி, அவங்களை விடு. உன்னையே எடுத்துக்கோ. உன் காதலை உதாரணமா வச்சுக்கோ. அனு இடத்தில் நீ இருக்கேன்னு வச்சுக்கோ. உனக்கு வீட்டில் கல்யாணம் பேசுறோம். நாராயணன் இது மாதிரி இப்போதைக்குக் கல்யாணம் பண்ண முடியாதுன்னு பிடியாய் நிற்கிறான். நீ என்ன பண்ணுவ?"



"அது...? எவ்வளவு நாளானாலும் நான் நானாவுக்காகக் காத்திருப்பேன்." அவள் தடுமாற்றத்துடன் சொல்ல...



"குட்... ஆனா நம்ம வீட்டில் உன் காதலை ஒத்துக்கலை. அப்பா உயிரை விட்டுருவேன்னு உன்னை மிரட்டுறாரு. நீ என்ன பண்ணுவ?"



அண்ணன் கேட்பது மிகவும் கஷ்டமான கேள்வி தான். அதற்காகக் காதலை விட்டு கொடுக்க முடியாதே. அவளுக்குத் தகப்பனும் வேண்டும், காதலனும் வேண்டும்.



"அப்பா கிட்டேயும் அதையே தான் சொல்வேன். உங்க மனசு மாறும் வரை நான் காத்திருப்பேன். எத்தனை வருசமானாலும் நானா தான் என் கணவன்னு என்னுடைய காதலை அழுத்தி சொல்லுவேன்."



"சபாஷ்... இது தான் என் தங்கை. இந்தத் தெளிவு ஏன் அனுவுக்கு இல்லாது போனது? நாராயணன் கிட்ட உடனே கல்யாணம் பண்ணிக்கோ. நாம தனியா போகலாம், இப்படி எல்லாம் சொன்னால் எந்தப் பையனால தான் தாங்கி கொள்ள முடியும். அவங்க காதலை நான் அழிக்கலை. அவங்களே அழிச்சிக்கிட்டாங்க. காதலுக்குப் பொறுமை ரொம்ப அவசியம். அது அவங்க ரெண்டு பேருக்குமே இல்லை."



"இருந்தாலும்... எனக்கு மனசு ஒப்பலை அண்ணா. மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு." பத்மினியின் விழிகள் கலங்கியது. தனது கணவன் மனதில் இன்னொருத்தி இருந்திருப்பதைக் கண்டு அவளது மனம் வேதனையில் துடித்தது.



"இப்போ என்ன செய்யலாம்? நானா கிட்ட இருந்து டிவோர்ஸ் வாங்கிரலாமா?" சக்தீஸ்வரன் அலட்டி கொள்ளாது கேட்டான்.



"அண்ணா?" அவள் திகைப்பாய் சகோதரனை பார்த்தாள்.



"ஒண்ணு நீ எல்லாத்தையும் மறந்துட்டு நாராயணன் கூட வாழு. இல்லை அவனை விட்டு விலகிரு. அவன் வாழ்க்கையை அவன் வாழட்டும்."



"ஓஹோ, நீங்களே அவங்களுக்கு ஒரு பொண்ணு பார்த்துக் கல்யாணம் பண்ணி வைப்பீங்க போலிருக்கே." அவள் விழிகள் கலங்க அண்ணனை பார்த்து கேட்டாள்.



"முட்டாள்... எந்த அண்ணன் அப்படிச் செய்வான்? நீ நல்லபடியா கணவனுடன் வாழ்ந்தால் தான் எனக்குச் சந்தோசம்."



"அண்ணா..." அவள் அண்ணன் நெஞ்சில் சாய்ந்து கொள்ள...



"நாராயணனுக்கு ஒரு சான்ஸ் கொடு. நல்ல காதல் கணவனா அவன் இருப்பான். எனக்கு நம்பிக்கை இருக்கு."



"ம்..." என்று மட்டுமே அவள் தலையாட்டினாள்.



தங்கை தனது வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்வாள் என்கிற நம்பிக்கை அவனுக்கு வந்தது.



சக்தீஸ்வரன் நினைவுகள் தங்கையிடம் இருந்து மீண்டும் மனைவியிடம் வந்தது. சகுந்தலா இன்னமும் கிளிஞ்சல்களைத் தான் பொறுக்கி கொண்டிருந்தாள்.



"சக்கு, இங்கே வா... ஜூஸ் குடிச்சிட்டு போ." அவன் நேரத்தை கணக்கிட்டு அவளை அழைத்தான்.



சகுந்தலா கை நிறையக் கிளிஞ்சல்களை அள்ளி கொண்டு அவன் முன்னே வந்து அமர்ந்தாள்.



"இந்தா..." அவன் பழச்சாறை அவளிடம் நீட்ட...



சகுந்தலா அதை வாங்கிப் பருகினாள். ஆரஞ்சு பழச்சாறு புளிப்பு, உப்பு, இனிப்பு கலந்து நாவிற்கு இதமாக இருந்தது. உமட்டல் கூடச் சற்று மட்டுப்பட்டது போல் ஒரு உணர்வு. சக்தீஸ்வரன் அவளையே ஆசையுடன் பார்த்திருந்தான்.



"கேப்டன்..." அவள் அழைக்கவும் அவன் தனது பார்வையை மாற்றிக் கொண்டு,



"என்ன சக்கு?" என்று கேட்க...



"சகி யாரு?" என்று அவள் அவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே கேட்க...



அடுத்த நொடி சக்தீஸ்வரனுக்குப் புரையேறியது. அவன் திகைப்புடன் மனைவியைப் பார்த்தான்.



"கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா

நான் கண்ணாடி பொருள் போலடா

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா?

எனக்கென உணர்ச்சிகள் தனியா இல்லையா? "



தொடரும்...!!!
 
Status
Not open for further replies.
Top