தந்தியில்லா வீணை
வீணை-1
அரண்மனைகள், கோட்டைகள், கொத்தளங்கள், குகை ஓவியங்கள் மற்றும் பல வரலாற்று நினைவுச் சின்னங்கள் ஆகியவற்றால் நிறைந்தக் கலாச்சார பாரம்பரியத்தையும், பல பெருமைகளையும் தாங்கிச் சிறந்து விளங்கும் மாவட்டம் ‘புதுக்கோட்டை' மாவட்டம்.
ஆதி மனிதர்களின் வசிப்பிடமாகத் திகழ்ந்த இம்மாவட்டத்தில், பல பண்டைய கிராமங்கள் தமிழ் சங்க இலக்கியங்களில் அடிக்கடி குறிப்பிடபட்டுள்ளது. இப்பகுதியை ஆண்ட வேந்தர்களால் நிர்மாணிக்கப்பட்ட அரண்மனைகள், கோட்டைகள், கால்வாய்கள் மற்றும் குளங்கள் நிறைந்துக் காணப்படுகின்றன.
இங்கு உள்ள ஆவுடையார் கோயில், குடிமியான் மலை, பிரகதம்பாள் கோயில் ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. பழமை வாய்ந்த காட்டுபாவா பள்ளி வாசலும், ஆவூர் கிருஷ்துவ தேவாலயமும், சமணர்களின் சித்தன்ன வாசலும் மத நல்லினக்கதிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
விராலிமலையில் உள்ள மயில்கள் சரணாலயமும், மலைகளில் உள்ள குகைகளில் வடிவமைக்கபட்ட கோயில்களும் பிரதானச் சுற்றுலா தலங்களாகும்.
இவ்வாறு பல சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ள மாவட்டத்திலிருந்து முப்பத்தியிரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது புதுவயல் கிராமம். விவசாயம் முக்கியத் தொழிலாக இருந்தாலும், பொய்த்துவிட்ட மழையாலும், கல்வி தரத்தாலும் இளைஞர்கள் விவசாயத்தை விட்டுவிட்டு வேறு தொழிலுக்குச் சென்றுவிடவே.. ரியல் எஸ்டேட் தொழிலுக்குப் பலியான பூமியைத் தவிர எஞ்சியிருக்கும் விவசாய நிலத்தில் தண்ணீருக்கு ஏற்றார் போல் பயிர் செய்துகொண்டு, தங்களின் சொற்ப காலத்தையும் உழவுக்கு அர்ப்பணித்து உழவுக்கு உயிர் ஊட்டி கொண்டிருக்கின்றனர் அக்கிராம மக்கள்.
அப்படி ஒரு விவசாயம் சார்ந்த குடும்பம் தான் சக்திவேல், வெற்றிவேல் சகோதரர்களின் குடும்பம். சக்திவேல் ராமன் என்றால் வெற்றிவேல் தமையன் பேச்சை கேட்டு அதன்படி நடந்து அவரை பூஜிக்கும் லக்ஷ்மணன். இந்தக் காலத்திலும் இப்படி ஒரு ஒற்றுமையா! என்று ஆச்சரியப்பட வைக்கும் அப்படி ஒற்றுமை உடன் பிறப்புகளுக்கிடையே..! அவர்களுடைய பத்தினிகள் பூங்கோதை, விசாலாட்சி இருவரும் தங்கள் கணவன் மார்களின் மனம் புரிந்து சண்டை சச்சரவுகள் இன்றி ஒற்றுமையாகக் குடும்பம் நடத்தும் மனையாட்டிகள்.
சக்திவேல், பூங்கோதை தம்பதிகளுக்கு மஹாலக்ஷ்மி, விஜயலக்ஷ்மி என்று இரு புதல்விகள். மஹாலக்ஷ்மியை தனது தம்பியின் மனைவி விசாலட்சியின் ஒன்றுவிட்ட அண்ணன் மகன் குமரனுக்கு மணமுடித்து, இரண்டு வயது ஆண் குழந்தையுடன் அதே ஊரில் வசிக்கின்றனர். அவரின் இளைய மகள் விஜயலக்ஷ்மிக்குத் திருமணம் முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இளையவரான வெற்றிவேலுக்கு.. வெற்றிவேந்தன் என்ற மகனும், நம் நாயகி வேதவள்ளி என்ற மகளும் உள்ளனர்.
வேந்தன் தனது படிப்பை முடித்துவிட்டு தனது அக்கா கணவர் குமரனுடன் இணைந்து பில்டிங் காண்ட்ராக்ட், எலக்ட்ரிக்கல் காண்ட்ராக்ட் எடுத்து இருவரும் செய்து வரவே.. வேதவள்ளி கடைசி வருடப் பொறியியல் படிப்பைப் படித்து கொண்டிருக்கிறாள்.
நான்கு அறைகள், ஒரு பெரிய ஹால், தானியங்களை அடுக்கி வைக்க ஒரு பெரிய அறை, பூஜை அறை. வீட்டின் பின்பக்கம் குளியலறை, கழிவறை, முன்பக்கம் உள்ள பகுதியில் பல வண்ண மலர் செடிகள், மரங்களால் தோட்டம் அமைக்கப்பட்டு.. அந்தக் காலத்தில் கட்டப்பட்ட வீட்டில் கூட்டு குடும்பமாக வசிக்கின்றனர் சக்திவேல், வெற்றிவேல் சகோதரர்கள்.
எப்போதுமே கலகலவென்று இருக்கும் வீட்டில்.. அன்று மதியம் பரபரப்போடு விஜயலட்சுமி தனதரையில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள். அவளின் அறை வாசலில் ஐந்தே கால் அடி உயரத்தில், மாநிறத்தில் கலையான முகத்துடன், தனது பின்னலை முன்னால் கையில் பிடித்து ஆட்டிக் கொண்டு தனது அஞ்சனம் தீட்டிய மை விழியை சுருக்கி அவளையே பார்த்துக் கொண்டிருந்தவள்..
‘க்கும்’ என்று செருமி தனது இருப்பை விஜிக்கு உணர்த்தினாள் வேதா..!
தனது நடை பயிற்சியை நிறுத்துவிட்டு “ஏய்..! வந்துட்டியா..? போகலாமா..?”
“போகலாம். ஆனா, நீ ஏன் இவ்வளவு பதட்டமா அங்க இங்க நடந்துக்கிட்டு இருக்கே?” என்று வேதா கேட்க..
தனது பதட்டத்தை மறைத்துக் கொண்டு “அதெல்லாம் ஒண்ணுமில்ல டி.. கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு நாள் தானே இருக்கு அதான் கொஞ்சம் பயமாயிருக்கு..”
“பயமா..? எதுக்குப் பயம்..? உனக்கு மாதிரி மாப்பிள்ளை யாருக்குக் கிடைப்பா..? பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஞ்னீயர்.. கை நிறைய சம்பாதிக்கிறார், எவ்வளவு நாகரிகமா, அழகா ட்ரெஸ் பண்றார். நல்லா சிரிக்க.. சிரிக்கப் பேசி பழகுறார் அப்பறம் என்ன..? இப்பவே உன்கிட்ட சொல்லி வைக்கிறேன் எனக்கும் மாமா மாதிரியே நல்ல பையனா பார்த்து வை”
“அதெல்லாம் அப்பறம் பார்க்கலாம்.. இப்போ வா பியூட்டிபார்லர் போயிட்டு வந்துடலாம்” என்று இருவரும் வாசலுக்கு வந்தனர்.
“ஏய்.. எங்கடி தனியா போறீங்க..? வேந்தன் வந்ததும் துணைக்கு அழைச்சுட்டு போங்க, இப்போ வீட்டுக்குள்ள போங்க” என்று பூங்கோதை சொல்ல..
“என்ன மா..! நாங்க என்ன சின்ன பிள்ளையா..? தனியா இதுவரைக்கும் போகாத மாதிரி இப்போ துணைக்குக் கூட்டிட்டுப் போக சொல்றிங்க.. அண்ணன் கல்யாண வேலையா வெளில போயிருக்கான். அப்பாக்கள் ரெண்டு பேரும் தோட்டத்துக்குப் போயிருக்காங்க, அவன் எப்போ வரது..? நாங்க எப்போ போறது..? அதான் அக்கா கூட நான் போறேன்ல பார்த்துக்குறேன்” என்றாள் வேதா..
“அதுக்கில்ல டா வேதா.. கல்யாணப் பொண்ணு கருவைக் காடு வழியா போகணும் அதான் துணைக்கு யாரையாவது அழைச்சுட்டு போக சொல்றேன்”
“அதெல்லாம் வேண்டாம்மா.. இந்த வேதாவை கண்டாலே பேய் பிசாசு எல்லாம் பயந்துக்கிட்டு போய்டும்.. நான் இருக்கும்போது என்ன கவலை விடுங்க” என்றாள் கண் சிமிட்டி.
“அப்பாடி இன்னிக்காவது ஒத்துக்கிட்டியே டி, பேய் எல்லாம் உன்னைப் பார்த்துப் பயப்பிடும்னு, நான் பெத்த மகளே” என்றார் விசாலாட்சி.
அவரை பார்த்து முறைத்தவள்.. “தாயா நீ..! சரியான பேய், வந்து உன்னைக் கவனிச்சுக்கிறேன்” என்றவள் வண்டியை இயக்க.. விஜி பின்னால் அமர்ந்து கொண்டு பியூட்டி பார்லர் நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கையில்.. திடீரென ஒரு இருசக்கர வாகனம் அவர்கள் வண்டியை மறைத்து நிற்க, அதில் தடுமாறி வண்டியோடு இருவரும் “அம்மா..!” என்ற அலறலோடு கீழே சரிந்தனர்.
அந்த இரு சக்கர வாகனத்திற்குச் சொந்தக்காரன் விறுவிறுவென்று விஜியின் அருகில் வந்தவன்.. தனது முழு உயரத்திற்கு நிமிர்ந்து நின்று, குடித்திருந்ததால் கண்கள் இரண்டும் சிவந்து அவளை வெறித்துப் பார்த்தவன், அவள் கையைப் பிடித்துத் தூக்கி, விழுந்து கிடந்த வேதாவை கண்டுகொள்ளாமல் கருவை மரங்கள் அடர்ந்திருந்த மறைவான பக்கம் இழுத்துச் சென்றான்.
வேதாவோ மெதுவாக எழுந்து.. முழங்கையில் சிராய்ப்பு ஏற்பட்டதால் உண்டான எரிச்சலில் முனகியவள்.. ‘சரியான ரவுடி பய..! இப்படி தள்ளி விட்டுட்டு கண்டுக்காமல் அவளை இழுத்துகிட்டுப் போறான். இவன் ஏன் இங்க வந்தான் அதுவும் விஜியை இப்படி கை பிடிச்சு இழுத்துட்டுப் போறான். அதான் வீட்ல மாமா வந்து பொண்ணு கேட்டதும்.. ரவுடி மாதிரி சண்டை போட்டுக்கிட்டு திரியிறான்னு பெரியப்பாவும், அண்ணனும் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்களே.. அப்பறம் ஏன் அக்காவை இப்படி இழுத்துட்டுப் போறான்..? அப்போ ரெண்டு பேருக்கிடையிலும் ஏதோ இருக்கு..’ என யூகித்தவள், அவர்கள் பின்னால் சென்றாள்.
“சொல்லு டி..! இப்போ பதில் சொல்ல போறியா இல்லையா..?” மிகுந்தச் சீற்றத்தோடுக் கேட்டுக்கொண்டிருந்தான் அவன்.
“என்ன அவளை மிரட்டிக்கிட்டு இருக்கீங்க..? கொஞ்சம் கூட உயிரை பத்தி கவலைப்படாமல் எங்களை சாகடிக்கப் பார்த்தீங்க.. நாளான்னைக்கு அவளுக்குக் கல்யாணம் ஆக போகுது, ஒழுங்கா அவளை விடுங்க நாங்க போகணும். இல்லை.. மாமாவுக்கும், அண்ணனுக்கும் போன் பண்ணி வர சொல்லுவேன்” ஒரு கையை இடுப்பில் வைத்து வேதா மிரட்டல் தொனியில் பேச..
அவளிடம் வந்த அவன் “என்ன டி..! உன் அக்கா ஏமாத்துகாரிக்கு சப்போர்ட்க்கு வந்துருக்கியா..? ஒழுங்கா நான் அவகிட்ட பேசி முடிக்கிறவரைக்கும் அங்க நில்லு” சிவந்தக் கண்களுடன் இரைந்தான்.
“நான் ஏன்டா அங்க நிற்கணும்..? அவளுக்கும், உனக்கும் பேச்சு என்ன வேண்டி கிடக்கு..” என்றவள்,
“வா விஜி போகலாம்” தன் தமக்கையின் கரத்தைப் பற்றச் சென்றாள்.
அதற்கு முன்னாள் வேதாவின் கையைப் பற்றியவன் “உனக்குச் சொன்னா புரியாதா டி..?” என இழுத்துச் சென்று தள்ளியவன்,
“நாங்க வர வரைக்கும் இங்கையே காவல் காத்துக்கிட்டு இரு” அவன் குரலை உயர்த்திச் சத்தம் போட, அவனது குரலில் தூக்கி வாரிப்போட.. பயந்துப் போனவள் சம்மதமாகத் தலை அசைத்தாள்.
“வீட்ல ஏற்கனவே தனியா போறோம்னு திட்டுனாங்க.. இப்போ நடந்தது தெரிஞ்சது அவ்வளவுதான்.. கட்ட பொம்மி கணக்கா வீர வசனம் பேசுன என்னைத் தான் திட்டுவாங்க.. உடனே அண்ணனையும், மாமாவையும் இங்க வர சொல்லுவோம்” என இருவருக்கும் அழைத்து நிலவரத்தை கூறி வர செய்தாள் வேதா..!
அடுத்த இருபதாவது நிமிடத்தில் அவர்கள் இருவரும் வந்து சேரவே.. கன்னம் இரண்டும் சிவந்து கண்ணீர் பெருக்கடுக்க முள்வேலி மறைவிலிருந்து விஜி வெளியே வந்தாள். அவள் கன்னம் இரண்டும் சிவந்திருப்பதைக் கண்டு அடித்திருக்கிறான் என்று உணர்ந்த வேந்தன்.. பற்களை நரநரவென்று கடித்தவன்..
“எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா என் தங்கச்சி மேல கை வச்சுருப்பே..? உன்னை என்ன பண்றேன் பாரு டா” என்று அவன் மேல் பாய்ந்தான். இருவரும் அந்த முள்வேலிக்குள் கட்டி புரண்டு அடித்துக் கொண்டிருக்க.. குமரன் படாதபாடு பட்டு இருவரையும் பிரித்து விட்டான்.
“பார்த்தீங்களா மாமா! உங்க தம்பிய.. கல்யாணம் ஆக போற பொண்ணை வழி மறிச்சு அவளை அடிச்சுருக்கிறதே..” தங்கையை அடித்துவிட்ட கோபத்தில் வானத்திற்கும் பூமிக்கும் குதித்தான்.
“கொஞ்சம் பொறுமையா இரு வேந்தா அவன்கிட்ட நான் பேசுறேன்..” பொறுமைசலியான குமரன், அவனை அமைதிப்படுத்த முயற்சி செய்தான் .
“இதுக்கு மேல எப்படி மாமா பொறுமையா இருக்க சொல்றீங்க..! இவன் அவளை லவ் பண்ணா போதுமா..? அவ லவ் பண்ண வேண்டாமா..?”
அவளை உறுத்து விழித்த அவனோ.. அவள் அருகில் செல்ல எத்தனிக்க.. “அரசு” என்று கர்ஜித்தான் குமரன்.
“டேய்.. குமரா என்ன நடந்துச்சுன்னு உனக்குத் தெரியும் தானே, அப்பறம் ஏன்டா என்னை அடக்குறே..?” என்றான் இவ்வளவு களேபரத்துக்கும் காரணமான குமரனின் தமையன் இன்பரசு!
“எதுவும் பேசாதே.. இங்க பாரு உன்னை இத்தனை நாளா அவிழ்த்துவிட்ட காளை கணக்கா விட்டுட்டேன். இனிமேலும் அப்படி இருக்க முடியாது, என்ன நடந்துச்சுன்னு எனக்குத் தெரியும் உன் மேல் எனக்கு நம்பிக்கையும் இருக்கு, விஜிக்கு கல்யாணம் ஆகப்போகுது அவளை இனி தொந்தரவுப் பண்ணாதே. நம்ம வீட்லயும் ஒரு பொண்ணு இருக்கு அதை மனதில் வச்சுக்கிட்டு ஒழுக்கமா நடந்துக்க. அது மட்டும் இல்லை இது என் மானப் பிரச்சனை புரிந்துருக்கும்னு நினைக்கிறேன்” என்க..
கைகளப்பால் முகத்தில் அங்கங்கு கீறி வெளிவந்த குருதியையும், வியர்வையையும் தன் சட்டையால் துடைத்துக் கொண்டவன்.. வேந்தனை முறைத்துவிட்டு விஜியிடம் “நீ சொன்ன விஷயங்கள் எதையும் என் வாழ்க்கையில் நடக்க விடமாட்டேன்டி” என்றவன்,
“காவல் காக்க சொன்னா போட்டா கொடுக்கிற..? இருடி உன்னை கவனிச்சுக்கிறேன்” வேதாவிடம் காய்ந்தவன், தனது வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
‘ஆளையும், சட்டையையும் பாரு.. பிச்சைகாரன் மாதிரி, என்ன ஒரு அடாவடி! விஜியையும், வேந்தனையும் அடிச்சுட்டானே.. நல்லவேளை என் அக்கா தப்பிச்சா.. எவ இவனை கட்டிக்கிட்டு படாதப்பாடு படப்போறாளோ.. பாவம்!' என்று நினைக்க, விதியோ அவளைப் பார்த்து நீதான் அந்த ஜீவன் என்று சிரித்தது.
“மாமா..! உங்க தம்பி மேலே நம்பிக்கை இருக்குன்னா.. அப்போ என் தங்கச்சிய தப்பா நினைக்கிறீங்களா..?” கோபமாக தன் மாமனிடம் கேட்டான் வேந்தன்.
‘இவனுங்க ரெண்டு பேருக்கிட்டையும் மாட்டிக்கிட்டு நான் படாதபாடு படறேன்’ என எண்ணியவன் “மாப்பிள்ளை அப்படி நான் சொல்ல வரல டா..”
“அப்படி இல்லைன்னா.. அப்பறம் எப்படி மாமா..? உங்க தம்பிக்காக என் தங்கச்சியை அவமானப்படுத்த பார்க்குறீங்க.. உங்க தம்பிதான் நாய் மாதிரி அவ பின்னால் சுத்திருப்பான், அப்படிப்பட்டவன் மேல் நம்பிக்கை இருக்குன்னு சொல்றிங்க.. இது கொஞ்சம் கூட சரி இல்லை. இதுவே நானும் உங்க தங்கச்சி பின்னாடி சுத்தி தொல்லை பண்ணிருந்தா.. இப்படிதான் பொறுமையா பேசிக்கலாம்னு சொல்லிருப்பிங்களா..?” என்றான்.
குமரன் விஜி இப்பவாவது ஏதவாது பேசுவாள் என்று அவள் முகத்தை பார்க்க அவளோ கீழே தலையை குனிந்து கொண்டாள்.
“வேந்தா..! அது வேற.. இது வேற.. நான் என்ன சொல்ல வரேன்னா..”
“நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம். என் அக்காவுக்காக பொறுமையா போறேன்.. இங்க நடந்த எதையும் நான் வீட்டில் சொல்லமாட்டேன். இதுக்கு மேல எனக்கும் உங்களுக்கும் ஒண்ணுமில்ல.. கல்யாணத்துக்கு வந்தோமா.. சப்பிட்டோமான்னு போய்கிட்டே இருங்க..” என்று தனது தங்கைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றான்.
அரசுடன் நடந்த பிரச்னையை வீட்டில் மறைத்தவர்கள், எப்போதும் போல் சாதாரணமாக இருக்க.. விஜியை அறைக்குள் அழைத்து வந்த வேதா.. “உண்மையை சொல்லு அவனும், நீயும் விரும்புனீங்க தானே?” என்று கேட்க..
“ஆமாம்” என்பது போல் தலை அசைத்தாள் விஜி.
“உனக்கெல்லாம் என்ன டேஸ்ட் விஜி! அவனை போய் லவ் பண்ணிருக்க? அவன் ட்ரெஸ்ஸும், பழக்க வழக்கமும்.. செஞ்ச வேலைய விட்டுட்டு ஆறு மாதமா இங்க சுத்திக்கிட்டு இருக்கான், அவனை போய்.. ச்சை..!” என்று முகம் சுளித்தாள்.
“நான் ஹாஸ்டலில் இருந்ததால் இதெல்லம் எனக்குத் தெரியாமல் போய்டுச்சு. லவ் பண்ணே சரி.. வீட்ல சொல்ல வேண்டியதுதானே..”
“என் மேல் வீட்ல நம்பிக்கை வச்சுருக்காங்கடி.. நான் லவ் பண்றேன்னு சொன்னா அவங்க நம்பிக்கையை உடைக்கிற மாதிரி ஆயிடாது? அதான் இதை அவங்களா ஏற்பாடு பண்ண கல்யாணம் மாதிரி இருக்கட்டும்னு, அவங்களைப் பொண்ணு கேட்டு வர சொன்னேன். ஆனா, வீட்ல ஜாதகம் பார்த்துட்டு அவருக்கு செவ்வாய் தோஷம் என்னைக் கல்யாணம் பண்ணா என் உயிருக்கு ஆபத்துன்னு சொன்னாங்க, அதோடு அவருக்கு வேலையும் இல்லை.. என்னால என்னடி பண்ண முடியும்? அதான் நமக்குள்ள ஒத்து வராதுன்னு சொல்லி பிரிஞ்சு ஆறு மாதம் ஆகுதுடி. ஆனா, இப்போ வந்து குடிச்சுட்டு பிரச்சனை பண்றான்டி, கல்யாணத்துல வந்து ஏதாவது கலாட்டா பண்ணிடுவானோன்னு பயமா இருக்கு”
“இதை முதலிலேயே யோசிச்சுருக்கணும், என்கிட்ட சொல்லிருந்தா ஜாதகத்தை மாத்தி எழுதி சம்மதிக்க வச்சுருப்பேன்டி”
“ஏண்டி.. மாத்தி எழுதி அவனை கட்டிக்கிட்டு என்னை சாகடிக்க பார்க்குறியா..?”
“அட போடி லூசு..! இந்தக் காலத்திலையும் இதெல்லாம் நம்பிக்கிட்டு, அவனும் கொஞ்சம் பாவம் தான்.. இருந்தாலும் அவனை என்னால் மாமாவாக ஏத்துக்க முடியாது. நீ எதுக்கும் பயப்பிடாதே குமரன் மாமா எல்லாத்தையும் பார்த்துக்குவாரு” என்றாள்.
குமரன் வீட்டில்.. “நீ ஆசைபட்டேன்னு நானும், மஹாவும் போய் பொண்ணு கேட்டோம்.. அவங்க செவ்வாய் தோஷம், வேலை இல்லைன்னு சொல்லித் தட்டிக் கழிச்சுட்டாங்க. நீயும் சரி விட்டுரலாம்னு சொன்னே.. அவங்களும் மாப்பிள்ளை பார்த்து நாளன்னைக்குக் கல்யாணம் வரைக்கும் வந்தாச்சு, இப்போ போய் அவகிட்ட பிரச்சனை பண்ணுனா என்ன அர்த்தம் சொல்லு..?”
“சாரி டா..! என்னால முடியல, அதான் கொஞ்சம் சரக்கு அடிச்சுட்டு அப்படி நடந்துக்கிட்டேன்.. வேண்டுமென்று பண்ணல..”
“நீ இன்னிக்குப் பண்ண காரியத்தால் எனக்கு ரொம்ப அவமானமா போய்டுச்சு டா.. இனிமேல் இது மாதிரி பண்ணி வீட்ல உள்ளவங்க நிம்மதியே கெடுக்காதே.. மஹா அவங்க வீட்டு பொண்ணு நம்மளால் அவர்களோடு உறவு அவளுக்கு விட்டு போகக் கூடாது. நம்ம வீட்ல கல்யாண வயசுல ஒரு பொண்ணு இருக்கா.. ஞாபகம் இருக்கட்டும்” என மிருதுளாவைப் பார்த்துக் கூறியவன், வெளியேறினான்.
அவன் சென்றதும்.. “என்னை மன்னிச்சுடுடா அரசு..! அவதான் உன் பின்னாடி சுத்தி, என்கிட்டே போன் நம்பர் வாங்கி பேசி உன் மனசைக் கெடுத்தான்னு எனக்குத் தெரியும். வீட்ல எதிர்த்து பேச தைரியம் இல்லாமல், இப்போ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா சுயநலவாதி” விஜியின் அக்காவும், அரசுவின் அண்ணியுமாகிய மஹா கூற..
“ஏய்..! மஹா! நீ ஏன் சாரி கேட்குற? அதெல்லாம் விடு. நான்தான் புத்தி கெட்டுப் போய் இப்படி நடந்துக்கிட்டேன். இனி குடிக்காமல் பிழைப்ப பார்க்குறேன் போ.. போய் நீயும் குட்டியும் தூங்குங்க, மித்துமா நீயும் போய் தூங்குடா.. அண்ணன் நல்லா இருக்கேன்” என்று அனுப்பி வைத்தவன் கண்களிலிருந்து ஒரு துளி கண்ணீர் வெளியேற..
“நான் சொன்ன மாதிரி செய்து காண்பிப்பேன்” என்று முணுமுணுத்தான்.
பிரச்சனைகள் அனைத்தும் ஓய்ந்து திருமணம் நல்லபடியாக முடிந்தது. அதன்பிறகு வேந்தன் அவர்களிடம் முகம் கொடுத்து பேசாததால்.. மஹா, குமரனின் வருகை குறைந்து விட, விடுமுறைக்கு வரும் வேதாவை அவர்கள் வீட்டிற்கு செல்லக்கூடாது என்று தடுத்திருந்தான் வேந்தன்.
தனது தொழிலை குமரனிடம் இருந்து பிரித்துக்கொண்டவன்.. தானாகவே பில்டிங், எலக்ட்ரிகல் ஒர்க்ஸ் காண்ட்ராக்ட் எடுத்து.. ஆட்களை வைத்து சம்பாத்தித்த மொத்த பணத்தையும் தொழிலில் போட்டு செய்துகொண்டிருந்தான்.
இவ்வாறு எட்டு மாதங்கள் கழிந்தது. தொழில் சம்மந்தமாக வேந்தன் வெளியூருக்குச் சென்றிருந்தான். அன்று இரவு திடீரென சக்திவேலுக்கு நெஞ்சு வலி வந்து துடிதுடிக்கவே.. வேந்தன் இல்லாத காரணத்தால் குமரனுக்கு அழைத்திருந்தார் விசாலாட்சி.
அவனும் மஹாவுடன் உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்றிருந்ததால்.. அவனோ அரசுக்குத் தகவலைச் சொல்லி அங்கு அனுப்பி வைத்தான்.
என்னதான் உறவினர்களாக இருந்தாலும், அவர்கள் வீட்டிற்கு குமரன் திருமணத்திற்குச் சென்றதோடு சரி, அதன்பிறகு செல்லாதவன் இன்று தான் அந்த வீட்டில் அடி எடுத்து வைத்தான்.
உடனே.. அவன் புதிதாக ஆரம்பித்த மெக்கானிக் செட்டில் பழுது பார்க்கப்பட்டு வாடிக்கையாளரிடம் ஒப்படைக்க நின்றிருந்தக் காருடன் வந்தவன், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தான்.
தொடரும்...