"ஏலோ.. குறவள்ளிப் பெண்ணே! என் கையில் அகப்படாமல் இருக்கும் வரையில் உன் செவிமடல் சிறக்கும். இல்லையேல் நிச்சயம் சிவக்கும்.
ஒயிலா! நீ மட்டும் என் போன்று இருந்து இருந்தால்.." என்று இளையவளை எச்சரித்து, முன்னவளிடத்தில் எதையோ சொல்லத் தொடங்கிய உலகம்மை பிடாரச்சியிடத்தில்,
"நான் மட்டும் உங்களைக் கொண்டு பிறந்து இருந்தேன் எனில், நான் குறவள்ளி ஆகி இருப்பேன். அவள் ஒயிலா குமரி ஆகி இருப்பாள் மூதா. நீங்கள் வாருங்கள் நாம் செல்வோம், அவளது வருகையைப் பற்றிய கவலை வீண் என்பது உங்களுக்கும் தெரியும். அங்கு உச்சியில், முல்லை மேட்டில், நாம் உட்பட.. நம் குடியானவர்களின் முதல் கால்தடம் பதியும் முன்பாக, குறவள்ளியின் கை விரல்கள்.. யாழ்தனில் படர்ந்து இழைந்தோட, அதில் எழும் அதிர்வும்! விதிர்ப்பும்! கண்டு நம் செவி சுரக்கும்." என்ற ஒயிலாவின் கூற்றை அவர்தம் குறுநகைக் கொண்டு ஆமோதித்து மலையுச்சியை நோக்கி பயணம் கொண்டார் உலகம்மை பிடாரச்சி.
முல்லை மேடு என்று அம்மக்களால் அழைக்கப்பட்ட அம்மலையின் உச்சி! அடர்த்தியான தொடர் மரங்களுக்கு நடுவே, செங்குத்தாய் வானளவு ஓங்கி விரிந்து! திரண்டு! இருந்த கற்பாறை ஒன்றில் தத்ரூபமாகச் செதுக்கப்பட்ட மிகப் பிரம்மாண்டமான வேல்! குறவர்களின் குல வேல்! அவர்களின் குல தெய்வமான தமிழ்க் கடவுள் முருகோனின் திருவேல்! அயிலவனின் வீர வேல் அது!
வலப்புறம், சற்றே சிறிய அளவிலான கற்பாறையில், பின்னிப் பிணைக்கப்பட்ட ஒரு ஜோடி நாகப் பாம்புகள். இடப்புறம் அதனினும் சிறிய அளவிலான கற்பாறையில் செதுக்கப்பட்ட அகத்திய முனிவரின் திருவுருவம்! என மெய்சிலிர்க்கும் தெய்வீக அகண்டப் பிரவாகம்.
அக்குறமக்களின் ஆதியும் அந்தமும் சாட்சிப்படுவது அங்கே தான். கரணம் கொள்வது அங்கே தான். களவுக்கு வேண்டுதலும் அங்கே தான். இளங்க்காலையர்கள் முதற்க் காப்பணிவது அங்கே தான். பிடாரர்கள் முடிவிழா எடுப்பதும் அங்கே தான்.
அவ்வாறாக அங்கு இரு விழாக்கள் நடக்க உள்ளது. ஒன்று ஓர் இளம் மக்களின் கரணம். இங்கே கரணம் என்பது மணம் முடித்தல் ஆகும். மற்றொன்று அவர்களின் பெரு விழா என்று உரைப்பது தான் தகும். இரண்டு தலைமுறைக்குப் பின் நிகழும் பிடாரச்சி முடி விழா. எனவே மக்கள் இரட்டிப்பு ஆரவாரத்துடன், முரசுகளின் அதிர்வலைகளுடன், அவரவர் வயதுக்கு ஏற்ப சிறு சிறு குழுக்களாய் அம்மலைப் பீடத்தை நெருங்கத் தொடங்கிய போது, நுண் மயிர் சிலிர்க்கும் விதமாக வில் யாழின் தேவ கானம் காற்றோடு மருவி கவிப்புனைந்துக் கொண்டு இருந்தது.
திருவேல்ப் பாறைக்கு நேர் எதிர் புறத்தில் நின்றுக் கொண்டு இருந்த குறவள்ளியின் முன்பு அவளது இடுப்பளவிற்கு குவிந்து கிடந்த பாறையில் ஊன்றி இருந்த வில்யாழ்! அதனை அவளது வலக்கை பிடித்து இருக்க, இடக்கை விரல்கள் யாழ்தனில் விந்தை படைத்துக் கொண்டு இருந்தது. வளைக்காப்போ, மரக்காப்போ இல்லாத அவளது நீண்ட வெற்றுக் கைகள் இரண்டும் யாழ் மீட்டே செம்மைக் கொண்டு இருந்தன. அவிழ்த்தால் மயில் தோகையைப் போல விரிந்து பரந்து முழங்கால் தழுவும் கருங்குழல்தனை, அலட்சியமாக அள்ளி முடுத்து அவிழாமல் இருக்க, அவள் குறி சொல்லும் குறவஞ்சி கருங்க் கோலினை இடமிருந்து வலமாகவும், அவளது கூர் வளரியை வலமிருந்து இடமாகவும் சொருகி இருந்தாள்.
குழல் அள்ளி முடித்தமையால், உச்சி முதல் பாதம் வரையிலான எழில் மிஞ்சும் அவளது வளைவு நெளிவுகள் எல்லாம் இளமைக்கு என்று ஓர் இலக்கணம் வகுத்து இயற்கையோடு இயற்கையாக இணைந்து விருந்து படைத்துக் கொண்டு இருந்தது. அவளது இந்த வனப்பும் திறனும், அங்கு உள்ள இளங்காளையர்களுக்கு அகச்சுவைக்கு மாறாக ஏனோ அச்சச் சுவைதனையே வாரி வழங்கிற்று! கூடலுக்கும் ஊடலுக்கும் ஏனோ! அவள் விதிவிலக்காக பார்க்கப்பட்டாள். அவளது விழிவீச்சு ஆடவர்களை எட்டி நிறுத்தியது. அவள் குறவள்ளியே என்றாலும் ஏனோ அங்கு உள்ளவர்களுக்கு, அவர்களின் குல தெய்வ வள்ளியாகவே தென்பட்டாள்! ஒரே ஓர் ஆடவனைத் தவிர மற்றவர்கள் யாரும் அவளிடத்தில் வாய்ப்பேச்சு கூட மேற்கொள்வதில்லை. அந்த ஓர் ஆடவனும் அவளது தாய் மாமன் இடும்பனாகத் தான் இருந்தான். அக்காரணம் கொண்டே பெரும்பாலானோர் குறவள்ளியை நெருங்க தயக்கம் கொண்டனர் என்றும் கூறலாம்.
ஒயிலாவின் கூற்றை மெய்ப்பிக்கும் விதமாகவே குடியானவர்களின் முதல் கால் தடம் அங்குப் பதியும் முன்பாக, குறவள்ளி அங்கு வந்து சேர்ந்து இருந்தாள். அதுவரையில் ஆரவார சலசலப்புடன் வந்து கொண்டு இருந்த மக்கள் அவற்றை எல்லாம் கைவிடுத்து அவர்கள் அங்கு அனுபவிக்க இருக்கும் ஓர் உன்னத சூழலுக்காய், மெளனக் காப்பினை ஏற்றுத் திரண்டனர்.
வேல்தனையே முருகனாகக் கருதி வழிப்பாட்டு நடக்கும் அவ்விடத்தில், விழாவிற்கு ஏற்ற சிறப்பு வழிப்பாட்டு முறைக்கான சூழல் உருவெடுத்துக் கொண்டு இருந்தது. குறவஞ்சியர் கைகளால் பின்னப்பட்ட மஞ்சள் பூசிய புத்தம் புதிய ஓலக்கூடைகள் அணிவகுத்தன. நல்மணம் வீசும் பலவிதமான மலர்களும், மலர் மாலைகளும் சில கூடைகளை நிரப்பி இருக்க, மஞ்சக்கிழங்கில் ஊறி உலர்ந்த பருத்தி ஆடைகள் சில கூடைகளை நிரப்பி இருக்க, சற்றே அகலமான இரு கூடைகளில் பசு நெய்யிட்ட வளரிகள் இருந்தன. நெடுநெடுவான மூங்கில் குவலைகளில் தங்கத் தேன் சிலவற்றிலும், நெய்யால் செய்த கள் சிலவற்றிலும் இருந்தன. பரங்கிக் குவளையில் தினைமாவும், பனையோலைக் குவளையில் சுட்ட பலாவிதை மாவும் படைக்கப்பட்டன. ஒரு பக்கம் சிறு கற்பாறைகளுக்கு இடையில் விறகு வைத்து, தீமூட்டி கற்சட்டியில் புது மூங்கில் அரிசியைச் சமைத்துக் கொண்டு இருந்தனர்.
ஒருசேர மூவர் சுமக்கும் மலை வாழைத்தார்கள் ஒரு புறம். தனக்கு நிகரான இடையுள்ள கனிந்த பெரிய அளவிலான மலைப்பலாப் பழங்களை வலிமையான கரங்களால் தோளில் சுமந்து கொண்டு வந்த இளங்க் குறவர் பட்டாளம் மறு புறம் என்று களைகட்டியது.
அப்போது அங்கு வந்து சேர்ந்தனர் உலகம்மை பிடாரச்சியும், ஒயிலா குமாரியும். உலகம்மை பிடாரச்சியை பார்த்ததும் மக்கள் அனைவரும் எழுந்து நின்று வணங்கி மரியாதை அளித்தனர். அவர்களின் மரியாதையை ஏற்கும் விதமாக உலகம்மை பிடாரச்சியும் அவர்களுக்கு வணக்கம் தெரிவித்து குறவள்ளிக்கு அருகே இருந்த ஒரு சிறிய பாறையில் சென்று அமர்ந்து கொண்டார். ஒயிலா குமாரியோ, சகாக்களுடன் இணைந்து கொண்டு அவர்களைப்போலவே யாருடைய வருகைக்காகவோ வேண்டி அவர்கள் வந்த வழி நோக்கிக் காத்து இருக்கலானாள்.
சலங்கைக் கட்டிய மூங்கில் கோல் ஊன்றிக் கொண்டும், புலித் தோல் ஒன்று இடுப்பைச் சுற்றியும்.. மார்புக்குக் குருக்காகவும் அணிந்து கொண்டும், பழுத்துப் பெருத்து, உயர்ந்த உருவம் ஒன்று டம்.. டம்.. என உறுதியான கால்தட ஓசையுடன் அவர்கள் முன் வந்து நிற்கவே, அனைவரும் மண்டியிட்டு வணங்கி எழுந்தனர். குறவள்ளியும் யாழ் மீட்டி முடித்து அவருக்கு சிரம் தாழ்த்தி வணங்கினாளே தவிர மண்டியிடவில்லை. ஏனோ! சிறு வயதுக் கொண்டே அவளால் யாரிடமும் மண்டியிட்டு வணங்க முடிந்தது இல்லை. அவள் முற்படவும் இல்லை. அது ஏன்? என்று இன்று வரையிலும் யாரும் அவளிடம் கேட்டதும் இல்லை.
அப்படியான அந்த பெரிய உருவத்தின் சொந்தக்காரர் அனலேந்தி தலையாரி ஆவார். அவர் தான் பொதியல் மலைத்தொடரின் தலைக் காவல்காரர். உலகம்மை பிடாரச்சிக்கும் மூத்தவர். குறவர்களின் முதல் மரியாதைக்கு உரியவர். குரவள்ளியையும் எண்ணில் கொண்டால், நான்கு பிடாரச்சிகளின் முடி விழாவினை சிறப்பித்த பெருமை கொண்டவர். அவரது கட்டுப்பாட்டில் களவு அங்கு இல்லாத விடயம். உளவு என்பது அங்கு இயலாத விடயம். அவருக்கு என்று தனிக் குடும்ப அமைப்பு இல்லை. அத்தகைய துறவு நிலையே தலையாரி பதவிக்கு அவரை மிகச்சிறந்த தகுதியுடையவர் ஆக நிறுத்தியது. பய உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர். அவர் சிறுவயதிலிருந்து இன்று வரையிலும் பொதியில் மலைதனை எந்த ஒரு அரசனும் சொந்தம் கொண்டதில்லை. பாண்டியநாட்டுக்கு உட்பட்டது தான் என்றாலும் அக்குற மக்களின் மன்னன், தலைவன், இறைவன் தமிழ்க் கடவுள் முருகன் மட்டுமே. அவர்களின் குல வள்ளியை மணந்து அவர்களுக்குச் சிறப்பு சேர்த்தமையால் அந்த வேலவனுக்கு மட்டுமே அவர்களின் சிரம் பணிந்து வந்தது. ஆதலால் அவர்களுள் தலைவன் என்று தனி விகுதி இல்லாமல் இருந்தது. அதனை முறியடித்து எப்படியேனும் பொதியல் மலைதனை ஆண்டுவிட நினைக்கும் வேளிர் அரசர்கள் பலர் முயன்று கொண்டு தான் உள்ளனர். அனலேந்தி தலையாரியின் பகைக்கு ஆளாக நேரிடும் என்பதால் தீவிர முயற்சிகள் ஏதும் நேர்ந்ததில்லை இதுவரையில். ஆனால் காலச்சுழற்ச்சியில் மாறாது இருப்பது மாற்றம் ஒன்று தானே!
கைகள் இரண்டையும் விரித்து, தடித்த அவரது உதடுகளைப் பிரித்து விண்ணை நோக்கி நாவைச் சுழற்றி ஒரு வித ஒலி எழுப்பியவர்.. ஒரு கூடை பூக்களை விண்ணை நோக்கி வீசி எறிந்தார். என்னே ஓர் அதிசயம்! வீசிய பூக்கள் அனைத்தும் காற்றுக்கு எதிர் திசையில் ஒன்று சேர பயணித்து வேல்ப் பாறையை அடைந்து ஆராதனை செய்தது. இதையடுத்து அனைவரும் தலைக்குமேல் கைகளை கூப்பி அனலேந்தி தலையாரியைப் போலவே ஒலி எழுப்பி வழிபாடு செய்தனர். அப்போது குறவள்ளியின் கண்கள் தானே மூடிக்கொண்டன. அவளது செவிகளில்..
வெற்றி வேல்!
வீர வேல்!
சக்தி வேல்!
சூர வேல்!
என்கிற போர் முழக்கம் ஒலிக்கத் துவங்கியது. அவளது கண்முன்னே ஆர்ப்பரிக்கும் செங்குருது பூமி கடல் போல் விரிந்து கிடந்தது. செங்குருது வடிந்த இருக்கைகள் யாசிப்பாய் நீண்டு இருந்தது. அதற்கு மேல் அவள் அந்த காட்சிகளைக் காண விருப்பம் கொள்ளவில்லை, கண்களைத் திறக்க வேண்டும் போல இருந்தது. ஆனால் அவளால் அது முடியாமல் போனது. மீண்டும் அந்த காட்சி அடுக்குகள் தொடர்ந்தன. "வேண்டாம் குமரி, ஒப்புக்கொள்ள வேண்டாம் கண்மணி." என்று ஓர் இறைஞ்சும் குரல் கேட்டது. குறவள்ளியின் உடல் விறைத்தது, அப்போது..
"வள்ளி! தீச்சட்டிதனை எடுக்க வா மக்களே." என்று தன் கட்டைக் குரல் கொண்டு நேசத்தோடு அழைத்தார் அனலேந்தி தலையாரி. அவரது அழைப்பு அவளை நடப்பிற்குக் கொணர உதவியது. மெல்லக் கண் இமைகளைப் பிரித்தாள். சிவப்பேறிய அவளது கண் முழிகளிலிருந்த அனலேந்தி தலையாரி, அவள் கண்ட சில இரகசிய பக்கங்களை அவரும் காண நேர்ந்தார். அப்படிக் கண்டவரின் உள்ளம் நடுங்கியது. அவரது நெஞ்சத்தில் கிலிப்பிடித்து கொண்டது! திரும்பி ஒயிலா குமரியைப் பார்த்தார் பின் குறவள்ளியையும் பார்த்தார். பின் அவரிடம் இருந்து ஒரு பெருமூச்சு வெளிவந்தது.
மஞ்சள் காப்புக் கட்டிய ஒரு பெரும் தீச்சட்டியை குறவள்ளி கைகளில் வைத்தார் அனலேந்தி தலையாரி. நீட்டிய அவள் கைகள் இரண்டிலும் அனல் படரப் படர, வேல்ப் பாறைக்கும் அடுத்து நாக தெய்வத்திற்கும் இறுதியாக அகத்திய முனிவ கல் வெட்டிற்கும் ஆரத்தி எடுத்து விழாவை முன்னெடுத்தாள்.
நாக தெய்வத்திடம் நின்று கொண்டு சங்கு ஒலி எழுப்பினார் அனலேந்தி தலையாரி. அப்போது உலகம்மை பிடாரச்சி மெல்நடையிட்டு வந்து பூத்தூவி நாக தெய்வ வழிபாடு செய்துவிட்டு, அங்கு வைக்கப்பட்டு இருந்த அவரது வில் அம்பினை எடுத்து குறவள்ளியின் கைகளில் ஒப்புவித்தார். அடுத்து வேல்ப் பாறையின் முன்பு வைக்கப்பட்டு இருந்த குறிஞ்சிப் பூ மாலையை எடுத்து குறவள்ளிக்கு அணிவித்து, சந்தனம் பூசி குங்குமப் பொட்டு இடப்பட்ட அவரது வேல்தனை பற்றி குறவள்ளியின் கைகளில் கொடுத்ததும் அவரின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் கசிந்தது. காண்போருக்கு அந்த வேல் மிக எளிதானவையாக இருந்தாலும் அதை பற்றித் தூக்கவே மிகுந்த வலிமை தேவைப்படும். அந்த வேல்க் கொண்டு அனைவராலும் சரியாக இலக்கை நோக்கிக் கூறிவைக்க இயலாது.