எண்ணங்களே மழைச்சாரலாய்
டீஸர் கேட்டவர்களுக்கு நாளைய பதிவிலிருந்து ஒரு சின்ன டீஸர்.
டீஸர்
வர்த்தினிக்கு தலைவலி இன்னும் அதிகமாக, வீட்டுக்கு கிளம்பி விட்டாள். காரில் ஏறியதும் ராயன் காரை உயிர்ப்பிக்க “இருங்க அண்ணா, ஏதோ ஆஃபிஸில் விட்டு வந்துவிட்டதுபோல் இருக்கிறது. கொஞ்சம் இருங்க யோசிக்கிறேன்” என்றவள் காரின் கண்ணாடி மூலமாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். ராயனுக்கு இந்த தங்கை புதியவள். சரியென்று தலையசைத்தவன் அவளின் பார்வை சென்ற திக்கை கவணித்துக் கொண்டிருந்தான்.
கொஞ்ச நேரத்தில் ராயனின் பைங்கிளி டூவீலரை உயிர்பித்துவிட்டு சிட்டுபோல் பறந்துவிட்டாள். ராயனிடமிருந்து ஒரு பெருமூச்சு மட்டும் வந்தது ‘இங்கே ஒருத்தன் இருக்கேனு திரும்பி பார்க்கிறாளா? ராட்சசி.. இவளுக்கு காதல் பாடம் சொல்லி கொடுப்பதற்குள் எனக்கு வயசாகிடும் போலிருக்கே' புலம்பிக் கொண்டான்.
தனதறைக்கு நுழைந்த செம்பவளனுக்கு வாழ்க்கை சூன்யமாகிவிட்டது போல் உணர்ந்தான். நாற்காலியில் தொப்பென அமர்ந்தவன் கண்களுக்கு முன்னால் அவளுடன் கழித்த இன்பமான நாட்கள் வந்து போனது. எல்லாம் என்னால்தான், என்னுடைய முட்டாள்தனத்தினால்தான்!! எப்படி எல்லாம் தவித்தாளோ? அந்த விரக்தியில்தான் நிலவன் சாரை கல்யாணம் செய்து கொண்டாளோ?
அதற்கு மேல் அந்த காட்சியை கற்பனை செய்ய பிடிக்காதவன் கைகளை முகத்தில் வைத்து பொத்திக் கொண்டான். மன அழுத்தத்தில் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து அவன் கைகளை நனைத்தது. அவளின் ‘மிசஸ் சக்கரவர்த்தினி சந்தனநிலவன்’ என்ற வார்த்தைகளே அவன் காதில் எதிரொலித்து கொண்டிருந்தது. எல்லாம் தான் செய்த தவறினால் வந்தது என்று நினைக்க நினைக்க கோபம் பொங்க வலது கையை ஓங்கி மரத்தினால் ஆன மேசையை பலமுறை குத்தினான்.
கை சிவந்து போனது. உயிர் போகும் வலி வந்தது. ஏனோ அந்த வலி அவன் மனவலிக்கு மருந்தாக ஆகி வலியை குறைத்தது போல் உணர, வலியை பொருட்படுத்தாமல் முகத்தை அழுந்த துடைத்தவன், அறையை பூட்டிவிட்டு வெளியாகினான்.
எண்ணங்கள் எங்கெங்கோ செல்ல கால்கள் சரியாக அவன் காருக்கு கூட்டி சென்றது. பாக்கெட்டிலிருந்து கார் சாவியை எடுக்கும் போதுதான் வலது கை வீங்கியிருப்பதை கவனித்தவன், ஒரு பெருமூச்சுடன் ஒற்றை கையை காரில் மேல் வைத்து தலையை முட்டுக்கொடுத்து நின்றுவிட்டான்.
நாளை சந்திப்போம் தோழமைகளே