All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
பழந்தமிழர் ஆட்சி பார் முழுவதும் புகழும் வண்ணம் பரவி இருந்தது, என்பதற்கு ஆதாரங்கள் ஏராளம் அதிலும் குறிப்பிட்டு சொல்வதென்றால் பல உண்டு எனினும் கம்போடியா நாடு. முன்பு காம்பூச்சியா,காம்போஜம் என அழைக்கப்பட்ட இந்த நாட்டுக்கும் தமிழர்களுக்கும் அரசியல் வர்த்தகம் கலை பண்பாட்டு வகையில் நெருங்கிய தொடர்பு உண்டு . அதற்கான ஆதாரம் அங்கோர்வாட் கோயில்கள் சோழர் பரம்பரையின் வழித்தோன்றலான கெமர் ராஜ்யத்தின் மன்னான இரண்டாம் சூர்யவர்மனால் கட்டப்பட்டது.
அந்நாட்டு நீர் மேலாண்மை பழந்தமிழரின் நீர் மேலாண்மைக்கு மற்றோறு சான்று பத்து இலட்சம் மக்கள் வாழ்ந்த அங்கோர் நகருக்கு எந்த பஞ்சத்திலும் கிடைக்கும் படி இருந்த நீர் மேலாண்மை திட்டங்கள், முப்போகம் நெல் விளைய ஏற்றபடி முறைப்படுத்தபட்ட நீர் பாசாண முறை. அங்கிருக்கும் நீர் நிலைகளுக்கு இங்கு தமிழகத்தில் இருப்பது போன்றே பெயர்கள்
கிழக்கு பேரேரி ராஜதடாகா , தடாகம் என்பதன்
மருவி தடாகா, இவை தமிழக மன்னர்களை பின்பற்றி கட்டப்பட்டவை.
இது போன்ற பல ஏரிகள் கெமர் ராஜ்யத்தில் இருந்தாலும் இவற்றின் முன்னுதாரணம் சோழர் காலத்தில் இங்கு அமைக்கப்பட்ட கண்ட ராதித்த ஏரி,வீராணம் பேரேரி போன்ற ஏரிகள் ஆகும். இந்த ஏரிகள் அந்த மன்னர்கள் பெயர்களால் வழங்கப்பட்டன.
ஆனால் சோழர்களுக்கு முன்பு ஆண்ட பல்லவர்களும் சிறந்த அரசர்களாக இருந்திருக்கின்றனர், என்பதை கைலாச நாதர் கோவில், வைகுந்த பெருமாள், மாமல்லபுரம் சிற்பங்கள் கற்றளிகள் , யுவான் சுவாங் பயனக் குறிப்பு கூறும்.
அவர்கள் காலத்திலும் காம்போடியாவிற்கும் தமிழகத்திற்கும் இடையே அரசியல் தொடர்பு இருந்திருக்கிறது. அங்கு உள்ள இந்திர தடாக
என்ற ஏரி இந்திரவர்மன் என்ற அரசன் கட்டியது
இவன் சோழர்களுக்கு முந்தயன், இவனது காலம் எட்டாம் நூற்றாண்டு
அது போன்று தமிழகத்தில் மகேந்திர தடாகம் , பரமேச்வர தடாகம், இவை முதலாம் மகேந்திர வர்மனால் 6 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது சென்னையை சுற்றிய, புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி மாமண்டூர் ஏரி போன்றவையும் பல்லவர் காலத்தவை.
பல்லவர்களில் முற்கால பல்லவர்கள், இடைக்கால பல்லவர்கள் ,பிற்கால பல்லவர்கள் என மூன்றாக பிரிக்கப்படுகிறார்கள் .
இதில் ஒரு பல்லவ அரசனை பற்றியே கூற
விழைகிறேன் இதில் உண்மையுடன் எனது கற்பனையும் கலந்து இருக்கும் என்பதால் , வரலாற்று ஆய்வாளர்கள் ஆதரவாளர்கள் எனை என் எழுத்துகளை பொறுத்தருளவும் .
இது இரு நாடுகளுக்கும் தொடர்புடைய பல்லவ அரசன் ஒருவனை பற்றிய கதை என்பதால்
தடாகக் கரை எனும் தலைப்பு வைத்திருக்கிறேன். சரி தானே
தாமரை பூ இதழ் விரித்து மலர்ந்திருக்க , அதன் மீதூறும் தேனை பருகிய தும்பியது , தேனின் இன்பத்தில் மதிமயங்கி இலேசாக தள்ளாடும் அதை மேலும் தள்ளும் காற்றில் தும்பியும் சேர்ந்தாடும் அத்தாமரையுடன் ,மதி மயங்கி பறந்து செல்ல இயலாது தாமரையுள் வீழ்ந்தது,
விரிந்த தாமரையோ ,கதிரவன் தன் கடற் காதலியை அணைத்துக் கொள்வதை கண்டு , மனம் தாளாமல் , தன் முகம் மறைத்துக் கொள்ள எண்ணி , இதழ் திரையை இழுக்க , வண்டு தனது இடம் என உணர்ந்து அதை மாற்றிக் கொள்ள எண்ணி பறந்தது .
கடலில் இருந்த கலத்தின் அருகில் சென்றது, அதன் இரு புறமும் வெளிப்பக்கத்தில் ஓவியமாக வரையப்பட்டிருந்த நந்தவன மலர்களை கண்டது .தேனில் வீழ்ந்த அதற்கு ஊட்டியிருந்த போதையில் பகுத்தறியும் திறன் இல்லை.
ஓவிய மலர்களை உண்மையென எண்ணி , ஒவ்வோரு மலரிலும் தேன் தேடி இயலாமல் களைத்து போய் அங்கேயே வீழ்ந்தது.
அத்தகைய சித்திரங்களை வரையப்பெற்றிருந்தது அந்தக் கலம் , அதன் பக்கங்களில் எண் திசைகளிலும் சூரியன், கரி, புலி சிங்கம் பறவை எருமை, புரவி என அந்த திசைகளுக்கு உரிய தெய்வங்களுக்கான விலங்குகளின் சித்திரம் வரையப்பட்டு இருந்தது. அவை தாவரங்கள் ,சிப்பி கணிமங்கள் போன்றவற்றை கொண்டு தயாரிக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சிவப்பு, வெள்ளை, மஞ்சள் , நீல வண்ணங்களை கொண்டிருந்தது.
அவற்றின் இடையில் சுற்றிலும் தாமரை, அன்னம், மயில் என பறவைகள் இந்திரன், முதலான தேவர்களின் உருவங்கள் கப்பலின் உடல் முழுவதும் புனையப்பட்டு அது கலத்தின் ஆடையின் அணி வேலைப்பாட்டை ஒத்திருந்தது.
நான்கு வகை மரங்களில் சத்ரிய வகை என சொல்லப்படும் தேக்குமரத்தில் இருந்து வேறு துண்டுகள் இணைப்பின்றி ஒரே வகை தேக்கு மரத்தால் செய்யப்பட்டிருந்தது. அதன் கழுத்து பகுதி ஒரே துண்டால் செய்து அடிபகுதி மற்றும் அதன் மற்ற பாகங்களுடன் வெண்கல ஆணியால் இணைக்கபட்டிருந்தது .
அந்த கலத்தின் முகம் இரு சிங்கமுகமும் பொற் கவசம் பூட்டப்பட்டு கழுத்த அணி செய்யப்பட்டிருந்தது.கழிமுகத்தில் சரிபார்க்க பட்டு ( கழிமுகம் என்பது கப்பல்களை ஆறும் கடலும் கூடும் இடம் மட்டும் அல்ல கப்பல்களை பழுபார்க்கும் இடம் அல்லது புதிதாக கட்டும் இடம் )
நாகையின் முன் துறையில் சரக்குகளை ஏற்ற
நின்றது.
ஒரு இனிப்பு பாதார்த்தை சுற்றி வரும் எரும்பு போல் , அவ் வங்கத்தை (கப்பல்) சுற்றி சிறு படகுகள் சாரியாக நின்று சரக்குகளை ஏற்றுவதை சரிபார்த்த மீகாமன் (கப்பற்தலைவன்) தன்னருகில் நின்ற உதவியாளனிடம்
"இரண்டு கலம் கோதுமை அரிசி கூடுதலாக சேமிப்பில் வைக்கசொல். குடிநீர் அளவை சரி செய்ய சொல் "
என உத்தரவிட
"ஆகட்டும் அவ்வண்ணமே கூறிவிடுகிறேன்"
என அவன் அவ்விடம் விட்டு நீங்கி பணியாளர்களிடம் செல்வதை பார்த்தவன்.மீண்டும் உட்பக்கம் திரும்பி கப்பலை பார்வையிடலானான். அழகிய உறுதியான வெள்ளை துணியில் இரு பாய்மரங்கள் விரிந்திருக்க அதில் நந்தி இலட்சனை வரைந்திருக்க அதனை தாங்கி நிற்கும் பாய்மரக் கம்பு அது பொருந்தி இருக்கும் குழியை பார்த்தவன். பிறகு சுற்றி வர இருக்கும் சிறு பாய்மரங்களை பார்த்தான் அவை இப்போது சுற்றி வைக்கபட்டு இருந்தன. கப்பல் பாய்ந்து வேகமெடுத்து செல்லும் போது இவை விரித்துவிடபடும்.
வங்கங்கள் நீரினை கிழித்து பாய்வதால் வங்கக் கடல் என பெயரெடுத்த அந்த இளநீலம் காட்டும் கடலில் தனது கலம் வென் மயிலை அவனுக்கு நினைவுபடுத்தும் இன்றும் அப்படியே தோன்ற ஒரு சிறு மகிழ்வு மனதில் குமிழியிட மேலும் நகர்ந்தவன் சுற்றி வர அங்கும் இங்கும் மலைப்பாம்பு போல் இருக்கும் அந்த தடித்த கயிறுகளை தாண்டியவன். கலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் என அனைத்தையும் பார்வையிட்டு முடித்தவனுக்கு அது சற்று திருப்திகரமாக இருக்கவே
அங்கிருந்து கீழ்தளத்திற்கு செல்லும் படிகளில் இறங்கினான். பணியாளர் சிலர் இவனைக் கண்டதும் ஏதேனும் தேவையோ என "தலைவரே" என வர தனது கை உயர்த்தி அவர்களை தடுத்தவன்
"உங்கள் வேலைகளை தொடருங்கள்"
என பணித்தவன் கீழ் தளத்தின் அறைகளுக்குள் நுழைந்தான். பிறகு அடிப்பகுதியில் இருக்கும் தளத்திற்கு தளவாடங்கள் அனைத்தையும் மீண்டும் ஒரு முறை தனிப்பட்ட முறையில் சோதித்தவன்.
தனது கப்பலின் இருந்து அந்த பகுதியை பார்க்க துவங்கினான். துறைமுகம் பரபரப்பாக இருந்தது. கப்பல்கள் வருவதும் போவதும் ஒரு புறம். வணிகர்கள் சான்றோர்கள் பெண்கள் விற்பவர் வாங்குவோர் சுமை ஏற்றி இறக்குவோர் எனபலரும் ஏதோ வேலையாய் கூடும் இடம் அது எப்போதும் போல் இன்றும் சுறுசுறுப்பாகவே இருந்தது.
சற்று தள்ளி இருந்த சுங்கம் வசூலிக்கும் இடத்தில் இன்று எப்போதும் விட கூட்டம் குறைவாக இருப்பது மீகாமனுக்கு தெரிந்தது.
அங்கு வரிசெலுத்தும் இடத்தில் அரபு வணிகர்கள் கொண்டு வந்த குதிரைகள் , யவனர்கள் தங்களது சிலைகள் காசுகள் மற்றும் உரோமானியர்கள் தங்கள் பொருட்கள் போன்றவற்றிக்கு சுங்கம் செலுத்தவும் முத்திரையை பெறவும் நிற்க இவர்களுடன் அந்நாட்டு பெண்கள் கல்வி கற்க மற்றும் பார்வையிட வந்திருந்த சான்றோர்கள் நிறைந்து இருந்தது.
மற்றோர் இடத்தில் ஏற்றுமதி செய்யும் பொருட்களான மணிகள் மாணிக்கங்கள், ஆபரணங்கள், தந்தங்கள், வாசனை பொருட்கள் , வரிவிதித்து பணியாளர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டுக் கொண்டு இருந்தது.
சொர்ணமுகியின் மீகாமன் அவன் நிம்மதியாய் மூச்சு விட்டான் , ஏனெனில் அவனை ஒப்பந்தம் செய்திருந்த சாத்தன், சுய் அரசுக்கு (சீன தேசத்தில் இருந்த அரசுகளில் ஒன்று ) கொண்டு செல்ல மருக்கொழுந்து, உப்பு, வெல்லம், பரிகள் , மற்றும் பிற செல்வங்களையும் கடந்த இரு தினமாக பார்வையிட்டு திரை செலுத்தியாகி விட்டதால் கலத்தில் ஏற்றிவிட்டான்.
அவனது பணி இனி கப்பலை செலுத்துவதில் மட்டுமே . கலத்தில் பயணிக்க வேண்டிய பயணிகள் யார் முடிவு செய்ய வேண்டியதும் வணிக சாத்தனே. ஏனெனில் நாவாயின் உரிமையாளன் அவன் அன்றோ....அவன்
பயணிகளை ஏற்றி கொண்டு அதற்கென, சில பொருட்களை அவனின் தேவைக்கு தகுதிக்கு ஏற்ப பெற்று கொள்வான். அதற்கென தனி அலுவலர்களை நியமித்து இருந்தான்.
கலத்தினை பல அடுக்கு பாதுகாப்பு வழி முறைகளை, கொண்டதாக அதனை உருவாக்கி இருந்தான். அவனுக்கு பொருள் முக்கியம் அல்லவா.கொள்ளையர்கள் , எதிரிகள் என அனைவரிடம் இருந்து காக்க கப்பலில் சில பாதுகாப்பு பொறிகள் அவசியம் , அவை இல்லாத பொருள் நிறைந்த கப்பல், வீதியில் கேட்பாரற்று கிடக்கும் செல்வம் போல ,கூரை மேல் இட்ட சோறிட்டு காக்கைகளை வா வென்று எதிரிகளை ஈர்த்து வரவழைத்து விடும்.
மற்றொன்று இயற்கை அதை நாம் நிர்ணயிக்க முடியாது. ஒரளவு காற்றின் திசை நீரோட்டம் ஆகியவற்றை கொண்டு கணிக்க முடியும். பெரும் புயல்களிலும் , திசை மாறாமல் கலம் செலுத்தும் திறமை கொண்ட வீரன். கொள்ளையர் பலரை சமாளித்தன் பலன் இன்றைய அவன் வாழ்வு.கடல் செல்லும் கலம்
சென்று சேரும் இடம் அறிந்து சேர்க்க அவன் தேவை , வழி நடத்த கப்பற் தலைவன் இன்றி வழி தவறிய கலம் மீளும் வகை ஏது?
நாகை பௌத்த விகாரத்தின் மணியொலிக்கும் ஒசை கேட்டது .அதில் கலைந்தவன் திரும்ப அருகில் துணைததலைவன் வந்து நின்றான். அவனிடம்
"கழி முக ஓதம் பெருகுவதால் , காற்றும்
சாதகமாய் இருப்பதால் , இரவு சொர்ணமுகி தன் பயணத்தை துவங்குவாள் என அறிவித்துவிடு"
(வங்கம் இரவு புறப்படுவது மரபு, ஏனெனில் வின் மீன்களின் கூட்டம் கொண்டு திசையறிந்து, கலம் செல்லுத்துதல் அக்கால வழக்கம்.)
"உத்தரவு " என்றவன் சற்று தயங்கி நின்றான்.
அவனைப் பார்த்தவன்,
"வேறு ஏதேனும் கேட்க வேண்டுமா?"
என்ற கப்பல் தலைவனிடம் எப்படி கேட்பது என நினைத்தாலும் தெரிந்து கொண்டே ஆகவேண்டும் எனும் ஆவல் உந்த
"தலைவரே முக்கிய அதிகாரிகள் , அல்லது ராஜ்யத்தின் முக்கியஸ்தர்கள் , யாரேனும் நம்முடன் பயணிக்க போகிறார்களா ?"
என்றதும் மீகாமன் பார்த்த பார்வையில் தான் இந்த கேள்வியை கேட்டிருக்க கூடாது என்பது புரிய அச்சத்தில் வியர்க்க துவங்கியது.
"யாராக இருந்தாலும் , நம்மை பொறுத்த வரை எல்லா பயணிகளும் ஒன்று தான். அவர்களின் பாதுகாப்பு நமக்கு முக்கியம் .மற்றொன்றையும் தெரிந்து கொள் உனக்கு அவசியமற்ற வேலைகளை பற்றிய உனது ஈடுபாட்டை கலம் செலுத்துதலில் , அதன் பணிகளில் காட்டு"
என அழுத்தமாக உரைத்தவன் 'போ' என்பதாய் தலையாட்டினான். இத்தோடு விட்டாரே... என , தனது வேலையை பார்க்க ஒடிப்போனான். அவன் சென்றவுடன் சற்றுநேரம் ஏதோ சிந்தித்தபடி இருந்தவன் மீண்டும் மற்ற வேலைகளை கவனிக்க சென்றான் .
சுற்றிலும் மரங்கள் அடர்ந்து பரவிய அந்த சோலையில் , தனது உள்ளத்தின் நினைவான அவனை நினைத்தபடி தடங்கண்ணி ஒருபுறம் சரிந்து படுத்திருந்தாள். அவள் அருகில் தோழிகள் அம்மானை விளையாடிக் கொண்டிருந்தனர். (அம்மானை என்பது ஒரு வகை பெண்கள் விளையாட்டு வட்டமாக அமர்ந்து கொள்ளும் பெண்களுள், ஒருவள் பாவகையில் ஒன்றைக் கூற அக் கூற்றுக்கு மற்றோறுவள் மீண்டும் வினா தொடுக்க அதை தொடர்ந்து மூன்றாவது பெண் இருவருக்கும் , ஏற்ற பதிலை கூற வேண்டும்.)
அதில் ஒருத்தி "தடங்கண்ணி நீயும் வருகியா?"
"நீங்கள் தொடருங்கள் எனக்கு விருப்பம் இல்லை" என்றவள் மீண்டும் தன்னுள்ளே போய்விட இவர்கள் ஆட துவங்கினர்.
ஆடிக்கொண்டிருந்த பெண்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஒருவள் தன் கையில் இருந்த பொன்னால் ஆன உள்ளே முத்துகள் இட்ட அம்மானை காயை மேல் நோக்கி வீசி
எனவும் மற்றவள் அதை கீழே விழாமல் நொடியில் பிடித்தாள். பிறகு
" காயும் ரோகத்தின் மருந்து ,
காய்பவனிடமே இருப்பதை
கருதியே கன்னியவள் கண்கள் - தடம்
பார்ப்பதுவோ? அம்மானை "
என இரண்டாமவள் தன் கையில் இருந்த அம்மானைக் காயை புன்னகைத்தபடி மீண்டும் வீச இப்போது தன் கவனம் கலைந்த தடங்கண்ணி இவர்கள் புறம் திரும்ப அதை கண்டு நகைத்தபடி அம்மானைக் காயைப் பிடித்த மற்றொருவள்
என மூன்றாமனவள் சிரிப்புடன் பதில் கூறி காயை வீச தொடர்ந்தது விளையாட்டு, அம்மானை காயின் ஒலி அவர்களின் வளையல் ஒலி அத்தோடு பெண்களின் சிரிப்பொலியும் சேர்ந்து கொண்டது இவர்களின் விளையாட்டை பார்த்த தடங்கண்ணி எழுந்து
"உங்களுக்கு இன்று நான் தான் அகப்பட்டேனா
பாடு பொருளாய் "
என்று காயை பிடுங்கி வைத்துக்கொண்டு கருங்குவளை என வண்டு அலை மோதும் தன் இரு கண்களை விரித்து கேட்க, தோழியரோ
"சரிதான் நாங்கள் எப்போதடி உன்னை பற்றி
பேசினோம், இந்த நாகை துறையின் தலைவன்
எம் பெருமான் காயாரோகணத்தாரையும் இறைவி கருத்தடங் கண்ணியையும் அல்வா
போற்றினோம்"
எனச் சீண்ட கருத்தடங்கண்ணிக்கு கோபம் வர
"நப்பின்னை இங்கு வா"
தனது உற்ற தோழி நப்பின்னையை அழைத்தாள். ஊஞ்சல் ஆடியபடி இதைப் பார்த்துக் கொண்டிருந்த நப்பின்னை
"என்னவாயிற்று தடங்கண்ணி ? எதற்கு அழைத்தாய்?"
என்றாள். ஒன்றும் அறியாதவள் போல வந்த சிரிப்பை உள்ளே அடக்கியபடி, அவள் கரத்தை பிடித்து தன்னருகில் இருத்தியவள்
"நப்பின்னை நீ கூறடி இதன் பொருளை "
என்றாள். அந்த புன்னை மரத்தின் அடியில் அமரந்திருந்த மற்ற தோழிப் பெண்களையும் தடங்கண்ணியையும் பார்த்தவள்
"அப்படி கூறுவதால் எனக்கு என்ன பலன்? அதுமட்டுமல்லாமல் இதன் பொருளை ஏற்கனவே நீ அறிந்தவள் தானே , மீண்டும் கேட்டு செவி இன்பம் பெற விழைகிறாய் போலும் "
இவளை மேலும் சீண்ட , அவர்களது பேச்சில் போலிக் கோபம் கொண்டு
"நீயும் இவர்களுடன் சேர்ந்து கொண்டாய் அல்லவா? ஒருவரும் கூற வேண்டாம் போங்கள் "
என்றபடி முகம் திருப்பி தள்ளி நகர்ந்து அமர்ந்து கொண்டாள்.அவளருகில் வந்த நப்பின்னை
"சரி சரி கோபம் கொள்ளாதே நான் கூறுகிறேன் , நான் மட்டும் கூறவா இல்லை இவர்கள் எல்லாரையும் ஒவ்வொரு முறை கூறச் சொல்லவா"
எனவும்
"நீ மட்டும் ஒரு முறை கூறு போதும் "
என்றவள்முகத்தில் சிறு வெட்கம் இதழ்களில் சிறு புன்னகை . நப்பின்னை வாய் திறக்கும் முன்
" இறைவா காயரோகணத்தா, கரிய பெரிய கண்களை உடைய (கருந்தடங்கண்ணி) பெண்ணிவள் சந்திரனவன் காய ரோகத்தினால் ( பசலை நோயினால்/ரோகம் - நோய்) தாக்கப்பட்டாள் .
அப்படி காயும் இந்த ரோகத்தினை , நீக்கும்
மருந்து அந்த காயும் செயல் புரியும் சந்திரனே என அறிந்து அவன் வரும் தடம் பார்கிறாளோ?
ரோகினி சந்திரனின் மனைவியருள் ஒருவள் அவளுடன், மட்டும் நெருக்கமாய் இருந்ததால்
தேயும் நிலை பெற்றான், அந்நிலவினை தலையில் சூடிய காயாரோகணர் அந்த மதியின் பெயரை கொண்ட , தன் சந்திரை காண விரும்பியும் தனை காயும் நோய் பசலை நீக்கவும் அருள் புரிய வேண்டும் என அந்த கரம் குவித்தாள் இந்த கருத்தடங்கண்ணி "
என்று கூறியபடி வந்து நின்றான் அவன்.
தன் முன் நின்றவனை மகிழ்ச்சியில் கண்களில் நீர் சொரிய பார்த்தபடி நின்றிருந்தாள்.
(மகரம் - மீன், வேலை / திரை - கடல், கழல் - காலில் அணியும் ஆபரணம்)
ஆசை காற்றின்
வீச்சில் என் மனக்கலம்
உன் முன் துறை வந்தேன்
காதல்கழிமுகம் உள்ளிளுக்க
நாணப் பெருந்துறை தாண்டி
நானும் விரைந்தேன்
உனை காணாமல்
ஏக்கம் அலை ஓதமென
பெருகி நாவாய் நான்
உனை நீங்கி ,
(நாவாய் / கலம் / வங்கம் - கப்பல்)
சாதக காற்றுக்கு
காத்து நிற்கும்
வங்கம் போல்
உன் சாகச அனைப்புக்கு
காத்து நிற்கும் நான்
உன் அன்புத் துறைக்கு
வந்தேன் நான்
இதோ உலர் துறை
கலமென சாய்த்து
விட்டாய் அடியோடு
வாரி நீக்கம் செய்கிறாய்
கண்களால்
இதயதளம் மதில்
மீண்டும் எண்ணங்களில்
நிணைவுககளால்
இரு கரம் கொண்டும்
உன் கலம் எனை ஆக்கி
இறுக தழுவி இறுக்கி வையடி
என் ஆவியை உன் தேன்
இதழ் மலர் தூவி
கயலி ரண்டில் கடல் பொங்க
உள்ள மதில் அலையடிக்க
அலை ஓசை , அளக்கும் ஒசையில்
உறங்கா ஆர்கலி அன்னமேனி
உனைசேராமல் , சோர
பொன் நிறம் ஒளி குறையும்
என் ஒளி குறைந்து
நோயில் …
( கயல்_மீன், ஆர்கலி / ஆழி _ கடல்)
ஆழியென எனை காதலில்
ஆழ்த்தியவளே….
துறை எனை கொள்ளடி
துறை பாரா கலம் போல்
எனை நீ மறந்தால்...
நித்தமும்
மடலேறும் தலைவன்
போல் மடல் குதிரை ஏறி
எருக்கம் பூ சூடுதடி
என் நெஞ்சம்….
(மடலேருதல் _ காதலியை தர அவள் பெற்றோர் மறுக்க அவளை அடைய முடியாத தலைவன் , அவள் ஓவியத்தை துணியில் எழுதி பனை மட்டையில் செய்த மடல்குதிரையில் ஏறி ஊர் சுற்றி வர அதைக் கண்ட ஊரார் அவனுக்கு இரங்கி மணம் செய்து தரக் கூறுவர்)
நெய்தல் நில தலைவ ….
இறங்கும் பொழுதும்
இரங்கும் நிலையும்
உன் பொருள்
என் தலைவன் வரும்
வரை நான்
கைக்கொள்ள தந்து
மாற்றாய் என் நலம்
வேண்டுவதேன் ?
(ஐவகை நிலங்களில் கடல் கடல் சார்ந்த இடம் நெய்தல் நிலம், அதற்கு உரிய பொழுது சூரியன் மறையும் ஏற்பாடு எனும் பொழுது, நெய்தல் தினைக்கு உரிய கருப்பொருள்,
இரங்கலும் இரங்கல் நிலையும் )
அத்தியாயம் 2
சுங்க சாவடி தாண்டி நடந்த மீகாமன் கண்களில் உலர் துறை எனும் இடம் பட்டது . அது பெருந்துறையை தாண்டிய கழிமுக பகுதி. அங்கு கப்பல்கள் அடிப்பகுதி மேல்பக்கம் தெரியும் படி ஒருபுறமாக சாய்த்து போடப்பட்ட கலங்கள் யானை போல் கிடக்க அதில் படிந்து இருக்கும் கசடுகளை அகற்றும் வாரிநீக்க பணியை ஊழியர்கள் செய்து கொண்டு இருந்தனர்.
அது மட்டுமன்றி கப்பலின் பிற பாகங்களும் பழுது பார்க்கப்படும் . கப்பல்கள் ஐம்பது ஆண்டுக்கு ஒரு முறை முழு பராமரிப்பு செய்தால் போதும் எனினும் அதன் சீரான பராமரிப்பு அதன் வேகம் , ஆயுள் இரண்டுக்கும் உறுதியளிக்கும். அத்தகைய பராமரிப்பிற்காக
அங்கே ஓர் திமில் சதையற்ற திமிங்கலமாக நிற்பதை பார்த்தபடி கடந்தான்.
அதற்கு எதிர்புறம் புதிய
கப்பல் கட்டும் தளம், அதை தாண்டி யவனர் உரோமர் எபிரேயர் குடியிறுப்பு அவர்களது வழக்கத்திற்கு ஏற்ப அமைக்கப்பட்டிருந்தது. இரவில் பாவை விளக்குகள் கையில் ஏந்திய தீபத்துடன் ஒளி தரும் அழகு காண கண்கள் வேறு எங்கும் அகலாது அத்தனை அழகிய பதுமைகள் அவை அவை நிற்கும் விதமும் அவற்றின் ஒயிலும் நினைத்தவுடன் அத்திசைக்கு திரும்பி விடும் கால்கள், அப்படி செல்வோரை மீளாமல் செய்து விடும் யவன பாவைகளின் பச்சை விழியும் மதுவின் இச்சையும் ( திமில் -கப்பல் வகையில் ஒன்று)
உலர்தள ஒசை கப்பல் தள மரத்தண்டறுக்கும் ரம்பத்தின் ஒசை இரவும் பகலும் ஒலிக்கும் ஒசையும் அந்நியர்குடியிருப்பில் தேறலிலும் ஆடிகளிப்பதானாலும் எழும் ஒசையும் ஒன்றிசைந்து புது அலையாகி அழுவத்தின் ஒசையை அடக்க மாற்ற முயன்று தோற்றுக் கொண்டிருந்தன. (அழுவம்- கடல்)
வழக்கமாக இது போன்ற நேரங்களில் அவன் மனம் இசைந்து அவ்வொலியை சற்று நின்று ரசித்து விட்டு தான் செல்வான் . இன்று அதற்கு நேரமில்லை என உணர்ந்ததால் விரைந்தான். நுழைப்பாடியை நோக்கி
பொன் நிற வானில் , வெள்ளை வின்மீகள் எங்கும் பூத்து மின்னி தங்கள் இருப்பை சொல்லிக் கொண்டிருக்க கால் பதித்து அவன் நடக்க நுரை மேகம் பாதம் தழுவியது,
விடியும் முன் பரவை சென்ற பரதவ கலங்கள் அணியாய் மீண்டு வந்து கொண்டிருந்தன. மீன்களோடும், குளித்து எடுத்த முத்தகளோடும், பறித்த சங்குகள் மற்றும் பவளம் சேகரித்து திரும்பிக் கொண்டிருந்தன.
அவற்றை பொன்னும் மணியும் கொடுத்து மாற்றாக பெற வணிகர்கள் காத்திருந்தனர்.
பரதவர் குலப் பெண்கள் மீன் உலர்த்த எழுந்த புலால் வாடையை , அருகில் புன்னை மரங்கள் தன் பொன்மலர் சொரிந்து அவ்வாடையை விஞ்ச முயன்று கொண்டிருந்தது.
அந்த இல்லத்தில் முற்றத்தில் நின்ற புன்னை மரக்கிளையில் , தங்கள் மீன் பிடிக்கும் வலையினை தூளியாக்கி , ஒரு சிறு குழவியை
அதிலிட்டு ஆட்டிக்கொண்டிருந்தாள். அச்சிறு குழந்தையோ இத்தனை நேரம் தன் தாயின் சீலையிலும் அழுதபடி இருந்தது. இப்போது
உடல் அழுத்தாத அந்த நூல் வலையில் கடலன்னை அவள் வாசம் பெற்று , அலை ஒசையில் தாலாட்டு கேட்டு கண்ணுறங்க ஆரம்பித்தது .
குழந்தையை தாலாட்டிக் கொண்டுஇருந்தவள் தன்னை
கொண்டவனை கண்டதும் சந்திரனை கண்ட அல்லியென மலர்ந்தாள். ஆனாலும், அடுத்த நொடி முகம் திருப்பினாள். அவன் உள்ளம் கொண்டவள்.அவனோ அவளை மயக்கிய மாயவன் ,இச் சிறு திருப்பலை அறியாதவனா என்ன?
"அதிபத்த நாயனார் வழி வந்த எனை இப் பொன் மீன் போன்ற பெண் மீன் , என் கரம் தழுவுமோ ?
இல்லை நழுவுமோ?"
என சிறு முறுவலுடன் நெருங்கினான்
(அதிபத்தனார் - நாயண்மார்களில் ஒருவர், இவர் தனது வலையில் முதலில் கிடைக்கும் மீன்கள் தலைமையான மீனை சிவனுக்கு அர்பணித்து கடலில் விட்டுவிடுவார். பல நாள் ஒரு மீன் மட்டுமே கிடைக்க அதையும் கடலில் மீள விட்டு குடும்பமே பட்டினி கிடக்க, அன்று கையில் கிடைத்த பொன்மீனை மீள விடவும்
சிவபெருமான் அவருக்கு காட்சி தந்து அருளிச் செய்தார். இவர் நாகை பரதவர் குலத்தை சார்ந்தவர்.)
அக்குல தலைவியவள் தன்னவனை பார்த்து தண்டையலார்க்கு ,
"தலை மீனை மீள கடல் விட்ட அதிபத்தர் போன்று எனை தாய் வீடு திருப்பும் நோக்கம் போலும் என நொடித்தாள்."
(தண்டையலார் - கப்பல் தலைவன் ) இதில் பதறியவன்
"இல்லை , இல்லை என மறுத்தவன் , அவர் அதிதீவிர சிவ பக்தர் என்றும் அது போல நானும் உன் தீவர பக்தன் அறியாயோ நீ ?"
என்றவனின் முகபாவத்தில் அவள் சிறியதாக நகைக்க அவ்வொலி அவள் கழுத்தில் கிடந்த தங்க கம்பியில் கோர்த்த பவள மணிகளை , சங்கு வளை மோதும் ஒலி மட்டுபடுத்தியது
"போதும் உங்கள் பொய்யுரை, இத்தனை பொழுதும் உங்கள் காதலியுடன் மகிழ்ந்து இருந்து விட்டு . இப்போது மீண்டும் விடை பெறவந்த கோவலனே நீங்கள் "
என்ற அவள் சாடலில்
"முத்துமாலை …. இது நியாயமே அல்ல , அவள் உனக்கு அன்னை போன்றவள் , நீ அவளை என்
காதலி என்பது தகாது "
எனவும்
"எந்த அன்னை மகளின் கணவனுடன் உறவாடுகிறாள்? என்று எனக்கு உரையுங்கள் மீகாமரே?"
விடாமல் ஊடல் கொண்டாடினாள்.
"சிறு கலத்தில் காலம் ஒத்துழைக்காத நிலையிலும் பாரசீகத்திற்க்கு பெரும் பொருள் கொண்டு சேர்த்து நேர்மையாளன் , ஒற்றை ஆளாய் கொல்சுறா எறிந்த வீரன் என கடற்கரையில் தோழிகளுடன் சிற்றில் கட்டி விளையாடிய பேதை என் மனதை வளைத்தவர் அவளிடம் என்ன கூறினீரோ ?"
என்றவளின் பரிகாச கேள்வியில் , அவனுக்கு அவளுடனான களவுக் காலம் நினைவுக்கு வந்தது.சற்று விரிந்த இதழ் பிரிய நகைத்தவன்
"அது உண்மையும் கூட தானே? கண்ணே.. என் வீரம் , நேர்மை இரண்டும் உன் விழி வீச்சில் தோற்று போகறதடி என்றும் "
என அவள் முகம் பார்க்க , அவளோ நிலைக் கண்ணாடியில் தன் முகமும், தன்னவனின் பொன் முகமும் பார்திருந்தாள் .
நீண்ட கூந்தலை ஒரு சுற்று கொண்டையிட்டு அதில் பொன்தாழம் பூ நடுவில் சொருகி குறு முத்துகள் தொங்க சுற்றில் தாழை மடல் சூடியிருக்க அதன் மீதி சுற்று நீண்டு சுருண்டு தோள் தடவி மார்பில் பரவி இருந்தது .
அக் கூந்தல் ஒதுக்கி அவ்வேலையை ,தான் செய்ய சித்தம் கொண்டவன் , அருகே நெருங்கி தோள் தொட்டு
"நான் ஒன்றும் கூறவில்லை முத்துமாலை என் முன்னோர் விட்ட பொன் மீனை பெற்றதால், கடனாளியான நங்கையவள் மீண்டும் பொன் மீனாக அன்றி பெண் மீன் உன்னில் ரத்தினமாக நற்குணங்கள் பதித்து சுற்றிலும் அன்பு ஒளி வீசும் உனை தந்திருப்பதாக கூறினள்.எனில் அவள் உன் அன்னை எனவே தான் தங்க இடம் தந்து வாழ பொருள் தந்து என் உயிராக உள்ளமாக உனைதந்தாள் ."
" பல்லவ பெருங்கலத்தின் தலைவன் அல்லவா
சிலையை பேசவைக்கும் கலையறிந்தவர்க்கு,
எனக்கு பதிலுரைக்கும் வழி தெரியாதா என்ன?"
முத்துமாலை அவனை பிரியும் துயர் தாளாது , இவ்விதம் கடலையும் நாவாயையும் அவன் காதலியாக அவள் உருவகித்து ஊடல் கொண்டவளை , மாற்றும் வகையறியாத மீகாமனா அவன் காற்றின் திசை அறிந்து கலம் செலுத்துமவன் , அவள் மனக்காற்றின் திசையறியாமலா இருப்பான்.
இரண்டாம் யாமத்திற்க்குள் நான் துறை மீள வேண்டும் . என்றவனுக்கு பதில் இல்லை.
"முத்து மாலை ", என அவன் ஆழ்ந்த குரலில் காதல் நிரப்பி அழைக்க நிமிர்ந்து அவனை நோக்கியவளின் கண்களில் இருந்து நீர் முத்துக்கள் வெளிவர , அது கீழே இறங்கும் முன் இரு கரம் கொண்டும் அவள் கன்னம் தாங்கி அதை கோர்த்தவன் அவளை தன்னுடன் கோர்த்தான்.
"தந்தையே ... " எனும் முன் முற்றத்தில் ஒலித்த மகன் குரலில் , முதலில் மீண்டவன் சட்டென
எழுந்து தன் மகனிடம் சென்றான்.
"அதி பத்தா…. "என தன் முதல் மகனை , தூக்கி கொண்டவனிடம், அதிபத்தன் தன் கையில் இருந்த சிறிய மீன் கோட்பறையை அடித்து காட்டிய அச் சிறுவன்,
" தந்தையே இது அஞ்சாளை மீனின் தோலில்
செய்தது தெரியுமா? "
"என் நண்பர்களுடன் விளையாட சென்ற போது இதை பிடித்து தோலை உரித்து காய வைத்து இப்பறை செய்தேன் " என மீண்டும் ஒரு முறை
அடித்து காட்ட
அப்போது வெளியே வந்த முத்துமாலையிடம்
" பார்த்தாயா ? பாம்பைக் கண்டால் நடுங்கும் படை போல அஞ்சாளைக்கு அஞ்சும் பரதவர் "
எனும் கூற்றை பொய்யாக்கி இருக்கிறான்
என் மகன் என அவனை அனைத்துக் கொள்ளவும்
" உங்களுக்கு மகன் புராணம் ,சிவ புராணம் . ஆரம்பித்தால் உண்டியும் நீரும் இன்றி ஆவனி மூல நாளில் பொன்மீன் திரை விடும் காட்சியன்று காயாரோகணர் அருளால் அதிபத்த நாயனார் அவதரித்த நாளில் உங்கள் குமரன் பிறந்ததில் இருந்து கூறுவீர்களே, போதும் இருவரும் சாப்பிட வாருங்கள் "
என வட்டில்களை வைத்தாள். மகனோ தந்தையிடம் இருந்து வழுகி இறங்கியவன்
"உப்புக்கு பதிலாக பெற்ற நெல்லில் குற்றிய அரிசி சோறும், அயிலை (ரை) மீன் புளி கறியும், கருவாட்டு மீன் கொழுவி புட்டும் வைத்திருக்கிறார்கள் அன்னை வாருங்கள் போகலாம். "
என தந்தையை கை பிடித்து இழுத்துக் கொண்டு உணவு உண்ண ஓடினான்.
"மெதுவாகச் செல் அதிபத்தா ஓடாதே" என தானும் மகனை தொடர்ந்து உண்ணச் சென்றான்.
ஆம்பல் காட்டின் கரையில் பூத்திருக்கும் ஞாழல் மரத்தினடியில் நின்றவன் பூரண சந்திரனை பழிக்கும் வகையில் , குளிர் முகத்தோடு ஒளி வீசும் தேகத்துடன் நின்றான்.
நிலவினை தேக்கு மரத்தில் செய்திருப்பார்களோ ? எனும் தனது உருவத்தில் ஐயத்தை கவிஞர்களுக்கும் , ஆவலை கன்னியருக்கும், ஈர்ப்பையும், இருப்பையும் கருத்தடங்கன்னிக்கும் அளித்த காதற்காளை பருவத்தில் இருந்தான்.
(ஆண்களின் ஏழு வகை பருவத்தின் வகையில் காளை - 17-30 வயது, மற்றோர் பட்டியல் படி காளை - காதற் பருவம்)
வாளுயர்த்தும் வீரகரங்களிரண்டும் அவை வலுபெற்றிறுக்க அவை
இணைந்த தோளிரண்டுமோ சிறு குன்றாக திரண்டிருந்தன. எதற்கும் குன்றாத மார்பு எப்போது பொருந்தும் போர் கவசம் ? என துடித்திருந்தது.
ஒளிதரும் இரு கரு ஞாயிறு மிதக்கும் வென்வானாமாய் அவனது இரு விழிகள்.அதன் அளவிடும் பார்வை சுற்றம் சூழல் அலசிடும். பகைவர்க்கோ அனலாகி விடும். இப்போது அந்த பார்வை பாவை அவளை அலசி அலகிட்டது.
அதில் மயங்கியவள் கண்களில் அவனது கூரான நேரான நாசி விழ அதனைக் கண்டவளுக்கு அது செய்தியோ அவனை நெருங்காதே என்பதே அதில் கலைந்து அவன் இதழ் நோக்க
காளை அவனது இதழ் இரண்டும் இணைந்து இறுகி இருப்பது போலும் ஒன்றுடன் ஒன்று சேர்வது போலும் அவனது மனமும் , புத்தியும் இணைந்து இறுகி சேர்ந்து இருக்கிறது போலும் என்று நினைக்க தோன்றியது.
தோள் தொட்ட சுருண்டு கிடந்த கூந்தல் சிறு கருநாகங்களை நினைவுறுத்த , இரு செவிகளும் மகர குண்டலங்களை தாங்க , கங்கணம் தாங்கிய முன் வலக்கரம் இடை தாங்க இடை தாங்கிய பட்டுகச்சைஅது தாங்கிய வாள் தொடை தாண்டி நீள பொற்கழல் அணிந்த பாதம் கொண்ட உதயசந்திரன் அவன் கருத்தடங்கண்ணியவள் முன் நின்று அம்மானை பாடலுக்கு நப்பின்னைக்கு பதில் பொருளுரைக்க ,
புலநகக் கொன்றை மலர்கள் தன் மேல்விழுந்து புலி நகமாய் கீறுவதாய் , தன் தலைவனை காணாமல் பிச்சியாகி தான் வளர்த்த புன்னை மரத்திடமும்,செடி,கொடிகளிடம் அவனைக் காணாமல் புலம்பிக் கொண்டு இருந்தாள்.
ஊராரோ அவர்கள் இன்னும் காலம் மணம் கொள்ளாமல் காலம் தாழ்த்துவதை பலவாறு தூற்ற அதை தோழியர் அவளிடம் எடுத்துரைக்க அதை கவனிக்கவில்லை வருந்தவும் இல்லை. மாறாக தான்வளர்க்கும் அன்னம் பாலையும் நீரையும் பிரித்து பருகுவது போல அவளும் அந்த அலர் தூற்றலிலும் அவன் பெயரும் அவள் பெயரும் இணையும் நிலையைக்கண்டு மகிழ்திருந்தாள்.
(அலர் தூற்றுதல் - பழி தூற்றுதல்)
உதயசந்திரன் அவள் முன் வந்து பொருள் கூறியதை கண்ட அவள்
எழுந்த வேகத்தில் இடையில் முத்தும் சிறுமணிகளும் கொண்டு செய்யப்பட்டமேகலையை அணிந்திருந்தாள். அது கோர்ப்பட்டிருந்த நூலை ஏதோ கொடி பிடித்து இழுக்க அறுபட்டு மேகலையின் முத்தும் மணியும் சுற்றிலும் சிதறியது. மார்பில் தோய்த்து எழுதிய சந்தனத்தின் மீது அவளது அணிகள் உரசியதில் பொடியாக உதிர்ந்தது. கன்னியவள் ஆடை நெகிழந்து போனது. , கருமேகமன்ன குழல்கலைய அதில் சூடிய மலர்களும் அதில் இருந்த தேனும் சிதிறயது. தேன் பருக என வந்த சிறு வண்டுகள் கருமேகம் வந்ததுஎன பதறியடித்துப் பறந்தன.
எழுந்து நின்ற கருதடங்கண்ணியவளின் விழிஇரண்டும் பெரு நீர் பெருக்க நின்றாள்.
காப்பிடும் பருவத்து குழந்தைபோல் , காக்கும் தெய்வத்தை வணங்கி , குலமகளிர் சந்தனம்
தேன் நறுமலர் தூவ பயணம் துவங்கும் வங்கம்
செங்கீரைபருவத்து குழந்தைகள் இனிய மழலை ஒலி எழுப்பியபடி ஒரு கால் உயர்த்தியும் மறுகால் மடக்கியும் , இரு கை நிலம் ஊண்றி முகம் பார்ப்பதுபோல், அடிப்பகுதி அலைகளில் மேலும் கீழும் அசைய இனிய ஒசை பாய்மரங்கள் காற்றுடன் உராய்வதில் உண்டாக , தன் முகம்
நிமர்த்தி கடலில் செங்கீரைஆடி
தாலப் பருவக் குழந்தைக்கு , தாயவள் பாடும் தாலாட்டை துடுப்பிசைப்பவர் துடுப்பு வலிக்கும்
போது பாடும் பாடலினை கேட்கும்,
சப்பாணி பருவத்து குழந்தை சப்பென
இருகை தட்டி மகிழ்ச்சியில் கொட்டுவதுபோல் ,
துடிப்புகை நீரில் தட்டிசத்தமிட அதில்
மயங்கிய பரவையவள் , முத்தபருவக் குழந்தையென மடியேந்தி அலை இதழலால் உடல் முழுவதும் முத்தம்தந்து தத்தித் தளர்நடையிட்டு வரும் சிறுமதலையை சிறப்புகள் கூறி வரவேற்க்கும் தாய் போல் ஒதங்களில் ஆடியபடி தத்தித் தளர்நடையிட்டு தன்னுள் வந்த கலமதனை வரவேற்றாள்.
நடக்க கற்றுக் கொண்ட அம்புலிபருவத்து குழந்தை காட்சிகளை காண விளையும் அப்போது சந்திரனை விளையாட துணைக்கழைத்து , வாராமல் போனால் பிடித்துவைத்துக் கொள்வேன் கடலினுள் மறைத்து விடுவேன் என அச்சுருத்தி விளையாடியபடி
பிள்ளைதமிழ் பருவங்களை காண்பித்து சென்று கொண்டிருந்தது அந்த சொர்ணமுகி.
கலத்தின் மேல் தளத்தில் முன்புற முகத்தில் சிறு மண்டபம் போண்ற அமைப்பின் நாற்புறமும் பந்தங்கள் ஒளி வீசிக்கொண்டிருந்து. மண்டபத்திற்குள் மரஇருக்கைகள் போடபட்டு இருந்தன. இரவு நேரமாகயினால் கலம் முழுவதும் விளக்குள் ஏற்றப்பட்டு அது கடல் நீரில் தோற்றுவித்த சாயலானது. பருவமங்கை ஒருவள் விளக்கொளியில் ஒரு சாய்த்து நின்று தன் பிம்பம் கண்டு ரசிப்பது போல் இருந்தது.
இத்தனை அழகும் கவரும் தோற்றமும் இருந்தாலும் அங்கிருந்த எவருக்கும் அது கண்ணிலும் கருத்திலும் பதியவில்லை. அனைவரது மனமும் கலங்கி இருந்தன. அவரவர் வகையில் சிந்தனை வசப்பட்டு இருந்தனர்.
யாரும் எதையும் கூறும் நிலையில் இல்லை. தேவையும் இல்லை. அது பல்லவ நாடறிந்த செய்தியாற்றே . செய்தியா அது? இல்லை .. நினைத்தாலே உயிர் வாங்கும் மீளா துயரல்லவா?
அந்த கலத்தில் எங்கோ பார்வையை பதித்தபடி சிந்தனை வசப்பட்டு நின்றார் ஒருவர் பார்வைக்கு நாற்பதுகளின் இறுதியில் இருந்தார். உயரமும் பருமனும் சரியாக இருக்கும் உடல்வாகுடன் , முப்புரி நூல் அணிந்து பின் தலையில் சிறு குடுமியுடன் , வலக்கையில் கங்கணம் அணிந்து இடையில் கச்சையும் மேல் உடம்பில் மென்பட்டு துகிலும் அணிந்திருந்தவர், பல்லவ பேரசின் தலைமை
அமைச்சர் பிரம்மஸ்ரீராஜன்
அவர் எண்ணங்கள் அங்கில்லை என்பதையும் சுற்றி சுழன்று கொண்டிருந்ததையும் , எங்கோ நிலைத்த பார்வை உணர்த்தி கொண்டிருந்தது. அவர் நினைவுகள் விளந்தையில் அல்லவா அலைந்து கொண்டிருந்தன.
அன்றைய தினம் களத்தில் போர் உக்கிரமாக இருக்க போரில் பல்லவ சேனை வென்றுவிடும் மும்மரத்தில் இருக்க இறுதிகட்ட போரில் பரமேஸ்வர பல்லவர் வென்று விட சாம்ராஜ்ஜியத்தை நேர்வழியில் கொள்ள முடியாது என்றுணர்ந்த சாளுக்கியரின் வஞ்சக வாள் அரசரின் மார்பில் பாய்ந்து இருந்தது. ஆனாலும் செய்தி வெளியே எட்டும் முன்பு அரசரை அப்புறப்படுத்திய தலைமை தளபதி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தார். ஆகையால் தான் அவர்களால் காஞ்சியை கைப்பற்ற இயலவில்லை . தனது இறுதி அத்தியாயம் நெருங்கியதை உணர்ந்த அரசர் பரமேஸ்வரப்பல்லவர் .பல்லவன் மகாதேவியை வரவழைத்தார்.
மார்பில் ஆழ பாய்ந்த வாளை உருகியதால், பெருகிய குருதியை துடைத்து மூலிகைகள் கொண்டு இரண்டு நாழிகை போராடி ரத்த போக்கை நிறுத்தி இருந்தார் தலைமை மருத்துவர். மென் துகில் மார்பு வரை மூடியிருக்க , உயிர்போகும் வலியிலும் சிறு
முக சுளிப்பும் காட்டாது , மருந்துகளின் வீரியத்தில் சற்று மயங்கி இருந்தவர். விழித்தவர் கண்களில் தன் கால்மாட்டில் அமர்ந்திருந்த தனது அருமை மனையாளைக்
கண்டவர் அவளை அழைக்க லேசாக கரம் தூக்கி
" தே...வி ..." எனும் முன்னம் மூச்சு வாங்கியது பரமேஸ்வர பல்லவருக்கு
மன்னவன் கரம் அசையவும் எழுந்து அருகில் வந்து விட்டவள் குனிந்து தன் செவியை அவர் வாயருகே வைக்க , சற்றே சிரமப்பட்டவர் தனக்கு அதிக நேரமில்லாததை உணர்ந்தவராய் , மிக மெல்லிய குரலில் உதடுகள் அசைய நினைவு இழக்கும் முன்
நினைத்ததை கூறியவர் பின் மீண்டும் மயங்கி கண்ணயர்ந்தார்.கண்கள் கலங்க கேட்டவள் பின்பு கைகளை குவித்து இறைவனை வேண்டியவர்
யாரங்கே என்றதில்
வாயில் கேட்போன் வந்து பணிந்து
"கூறுங்கள் தேவி "
எனவும் ,
"உள்படுகருமத் தலைவரையும் அமைச்சர் பெருமக்களையும் உடனே வரச் சொல்"
என, அரசர் கூறியவற்றை செய்ய வேண்டிய ஆயத்தங்களை முடித்தார்.
அப்போது மருத்துவர் வரவும் கஷாயம் வழங்கும் நேரம்
நெருங்கி விட்டதை அறிந்து அவருடன் , உள்ளே நுழைந்தவள் மெதுவாக மூலிகை நீரை
பருக செய்தவள், மெல்லிய பருத்தி துணி கொண்டு வழிந்திருந்த நீரை துடைத்தவள், மன்னவனின் முகத்தை பார்த்திருந்தாள்.
சூல் கொண்ட மேகம்போல் எப்போது வேண்டுமானாலும் வந்துவிடுவேன் எனும் விழிநீர் , அவளது உறுதிக்கு சற்று தயங்கியே உள்நின்றது. சற்று நேரம் மன்னர் அருகில் அமர்ந்து இருந்தாள் .
வெளியே "அரசருக்கு வணக்கம் "
எனும் சேவகனின் குரலைக் கேட்டவர் மன்னரின் அமைதியை கலைக்க விரும்பாதவளாய் வெளியே வந்தவர் .
"அனைவரும் வந்தாயிற்றா?" எனவும்
"ஆம் அன்னையே " என பணிந்தவன் விலகிவிட . இன்னும் உறுதியான முகம் மற்றும் மனத்துடன் அந்த மந்திரஆலோசனை அறைக்குள் நுழைந்தாள்.
பல்லவதேசத்தின் அரசியவள் இன்னும் சற்று நேரத்தில் அனைவரும் கூடிய பின் ஆற்றவேண்டிய காரியங்களை பற்றி பேசவும் செய்யவும் இந்த உறுதி மிக முக்கியம்.
காடவர், முத்தரையர், தமிழ்பேரரையன், உத்தமசீலன் , நம்பினன் , தலைமை தளபதி கூடியிருந்தனர். நாட்டின் உயர் பதவி வகிப்பவருக்கு விதித்த தண்டனையோ இது என எண்ணியிருந்தனர். தங்களுக்கான வருத்தத்தை வெளியிடும் முன் அடுத்தது என்ன என்பதை , ஆலோசித்தாக வேண்டும்.
"பல்லவ மாதேவிக்கு வணக்கம் " என அனைவரும் எழுந்து தங்கள் அரசியை பணிய
"அனைவரும் அமரலாம் "என்றவர்.
"பல்லவ தேசத்திற்கு மற்றோரு வாரிசை தேடியாக வேண்டிய சூழலில் இருக்கிறோம்."
என நேரடியாக விஷயதிற்கு வந்து விட
"தேவி…. இளவரசர் சித்திரமாயன் … "என முத்தரையர் இழுக்க,
"அரசரின் விருப்பம் தாங்கள் அறியாததா முத்தரையரே , தந்தை உயிர் ஊசலாட நாட்டின் பாதுகாப்பு அச்சத்தில் இருக்கும் இது போன்ற முக்கிய தருணத்தில் கூட தந்தை மற்றும் தாய் நாட்டின் நலன் பற்றிய கவலையற்று , மதுவிடமும் மாதிடமும் முழ்கி இருப்பவனிடம் , சிந்தனை தெளிவும் மக்களைப் பற்றிய அக்கறை எப்படி இருக்கும்?"
"இவனை போன்ற ஒருவனிடம் தேசத்தை தருவதும் வாள் கொண்டு ஏதும் அறியா சிசுவை தாயே கொல்வதும் ஒன்று "
"ஆதால் தான் சாளுக்கியர்கள் இவனுக்கு முடி சூட விழைகின்றனர். ஒன்று சித்திரமாயனை உல்லாச வாழ்கையில் முழ்க வைத்த பதுமையரசனாக இவன் இருக்க தாங்கள் நாடாளலாம் "
"இல்லை எடுப்பார் கைப்பிள்ளை என துர்மதி படைத்த இவன் நாடாள்வதை எதிர்த்து மக்களே கிளர்ச்சி செய்து பல்லவ தேசத்தை சாளுக்கிய தேசத்திடம் கொடுத்து விடுவர் இந்த பழியில் பல்லவ வம்சம் பெருமை இழந்து அழிந்தது போகும் இவனால் வரும் அவமானம் வரலாற்றில் காலத்திற்கும் பதிந்து விடும்.வாதாபியை இழந்து அவர்கள் பட்ட அவலத்திற்கு பதில் பழி செய்து நம்மை
பழி வாங்க எண்ணியிருக்கிறான் விக்ரமன்."
என்ற பல்லவ பேரசியின் வார்த்தைகளில் , தன் தேசம் அதன் மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியும் வேகமும் மட்டுமே இருந்தது.
சித்திரமாயன் தன் மகன் என்பதோ , அவனுக்கு அரச பதவி கிடைக்கவில்லையே எனும் வேதனையை விட அவனை திருத்த மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்ததை எண்ணி தாயுள்ளம் வருந்தியது .
ஆனால் நாட்டு மக்கள் அனைவருக்கும் தாய் தந்தை எனும் இடத்தில் இருப்பவர்கள் அரசனும் அரசியும் தனது மகனின் நலனை விட பிரஜைகளின் நலனுக்கு என்றுமே முக்கியத்துவம் அளிக்கும் பல்லவபரம்பரையில் வந்தவர்கள் அல்லவா பரமேஸ்வர பல்லவனும் , அவன் மனைவியும்
பேரசரசர் பரமேஸ்வர பல்வரின் திட்டத்தை கூறியிருந்தாள் ,
"பேரசரின் உடல்நிலை , " என்ற தமிழ்பேரரையனுக்கு தங்களுக்கான கால அவகாசம் பற்றிய தெளிவு தேவைபட்டது , தென்புறம் பாண்டியரும் வடபுறம் சாளுக்கியரும் மீனுக்கு காத்திருக்கும் கொக்காக நின்றிருக்க தெளிவான திட்டமிடல் தேவை , இல்லை எனில் தேசம் சிதறி விடும்
"ஏகாம்பரேஸ்வரரும் , கூரத்தாரும் " மறு திங்கள் ( மாதம்) திரும்பும் வரை பேரசருக்கு அவகாசம் தருவார் என நம்பிக்கை வைப்போம்
எனும் கூற்றிற்கு என்ன மொழி உரைக்க என
திகைத்து போயினர் அனைவரும் .
பிரம்மஸ்ரீ ராஜன் "ராஜமாதா தாங்களும் மற்ற
இடங்களின் போர் நடவடிக்கைகளுக்கும் , பாதுகாப்புக்கும் தலைமை தளபதி அவசியம் "
ஆம் " எனவே நீங்கள், காடகர், முத்தரையர், நகரத்தார் , உதயசந்திரன் , உத்தமசீலன் என
நீங்கள் ஐவர் மட்டும் சென்று வாருங்கள்"
"இங்கு எங்களது பொறுப்பு, " என்றவர்
எழுந்து கொள்ள .அனைவரும் எழுந்து கொண்டனர்.
"பேரசரின் திருமுகம் " (ஆனைஎழுதபட்டபட்டோலை ) எனவும்
அதை
"உத்தரவு அரசி " என பணிந்து பெற்று தலைமை அமைச்சர் பெற்றுக் கொண்டார்.
அரசர் காஞ்சி செல்ல ஏற்பாடு செய்தவர், பின்பு
தாங்கள் நாகை வழி செல்ல வேண்டியதையும் அதற்கு முன் அவர்களுக்கு உரிய வேலைகளை
பிரித்தளித்த பின் அவரவர் பாதையில் பிரிந்தவர்கள் சந்தித்தது நாகையில் இரண்டாம் சாமத்தில் தான் .
தலைமை அமைச்சர் தன் போக்கில் நிகழ்ந்தவற்றை எண்ணியிருந்தார். அவரிடம் வந்த முத்தரையரும் நம்பனாரும் அவரை எவ்விதம் அனுக என்று அறியாமல் நின்று விட்டனர்.
சற்று நேரம் அதில் அருகில் ஏதோ அரவம் கேட்க தன் கவனம் கலைந்தார்.
முத்தரையரும், நம்பனாரும் நின்றிருப்பதை பார்த்தவர். "இருவருக்கும் வணக்கம் அழைப்பது தானே? ஏதோ ஆலோசனை அதைப் பற்றிய எண்ணங்கள் "
என்றவரிடம் முத்தரையர் " தாங்கள் சிந்தனை பல்லவதேசம் குறித்து என்பதை தான் அனைவருக்கும் தெரியுமே மேலும் அதில் நன்மை விளையும் எனில் ஏன் கலைப்பது? "
என்றவர் முகத்தை பார்க்க அவர்களது எதையோ கூறவிழைவதை அறிந்தவர் கண்கள் சுற்றும்
நோக்கியவர்
"அந்தி சாய்ந்து நேரமாகிவிட்டது போஜனத்தை முடித்துக் கொண்டு நம் பேச்சுவார்த்தையை தொடரலாம்." என்றவருக்கு
"ஆஹா தாராளாமாக, அவ்வண்ணமே ஆகட்டும்" என்ற முத்தரையருக்கு
" அமருங்கள் "என அந்த ஆசனத்தை காட்ட மரத்தில்
மயில் போலும் அழகிய மரசிற்ப வேலைப்பாடமைந்த ஆசனங்களில் அமரந்தவர்கள், நிஜத்தில் மயில் அமர்ந்திருப்தை அந்த அழகிய ஆசனத்தின் இரு கைப்பிடிகளும் மயில் முகத்துடனும் பின்புறம் சாயும் பகுதி தோகை போலும் அமரும் பகுதியும் கால்களும் மரக்கிளை போன்றும் அமைந்திருக்க அதில் அமர்ந்திருப்பவர்களுக்கு இரு மயில்கள் தன்னை தோகை கொண்டு அனைத்திருப்பதுபோன்ற சுகம் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த அந்த இருக்கையின் வடிவமைப்பை
"மிக சிறந்த வேலை பாடு " பாராட்டியபடி
அமர்ந்தார்கள். காத்திருந்த பணியாளர்கள்
அவர்களுக்கான வட்டில்கள், குவளைகள் வைக்கப்பட்டு உணவு பரிமாற வரவும் சற்று பொறுங்கள் என்ற நம்பனார்
"நகரத்தார் தலைவர் தரணிகொண்ட போசர் ... அவர்கள்"
என இழுக்க,தலைமைஅமைச்சர் பிரம்மஸ்ரீராஜன்
"ஆம் வருவதாக கூறியிருந்தார் ", ஆனால் நாம்அவருக்காக காத்திருக்க தேவையில்லை. கீழே
இசையும் ,ஆட்டமும், விருந்தும் நடக்கிறது
இசை , இரைச்சலாக மாறி உங்களுக்கு கேட்கவில்லையா? என்றவர் எதையோ நினைத்து சிறு முறுவலுடன் பரிமாறப்பட்ட உணவினை உண்ணத் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து முத்தரையரும் நம்பனாரும் உண்ணத்தொடங்கினர். மனம் மட்டும் அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள தவித்ததது. ஆனால் அதை அறிந்ததாலும் அதற்கு காரணம் யார் என்று தெரிந்ததால் தான் பிரம்மஸ்ரீராஜனின் புன்னகையே
கலத்தின் மறுபுறம் நிலவரம் அப்படித்தான் இருந்தது, உதயச்சந்திரன் தன் படையினருடன் , கேளிக்கையில் இருந்தான். தங்களுக்கு தெரிந்தபடி பாடிக் கொண்டும் உற்சாகம் கரை புரள ஒருவன் வாய்க்கு வந்ததை ஸ்வர வரிசை
என பாடி வைத்தான் அதற்க்கு இஷ்டம் போல் மற்றோர் குழு ஆடிக்கொண்டிருந்தனர்.
காலை , மாலை இரு வேளையும் தங்கள் போர்பயிற்சி செய்யும் படையினர் இரவுகளில்
ஒரு பிரிவினர் கண்காணிப்புக்கு செல்ல ஒரு
பிரிவு ஒய்வு எடுத்து கொண்டிருந்தனர். அவர்களுடன் துடுப்பு வீசுபவர்களும் இருக்க
அவ்விடம் களைகட்டி இருந்தது.
மறுபுறம் மெல்லிசையும் , சிறு பேச்சு வார்த்தைகளும் நடைபெற்று கொண்டிருந்தது. அரசன் உயிர் என்றால் நாட்டிற்கு செல்வத்தை கொண்டு வரும் வணிகர்கள் நரம்புகள் போண்றவர்கள் பாயும் இரத்தம் ஒரிடத்தில் தேங்கி விடாமல் சுற்றி வர நரம்புகள் பயன்பாடு எவ்வளவு அவசியமோ அவ்வளவு முக்கியம் ஒர் அரசிற்கு வணிகம் , ஏனெனில் அதை சார்ந்து தானே எல்லாமே இயங்குகிறது. எனவே தான் பொருளும் அதை பெருக்கும் முறையும் காத்து
செலவிடும் விதம் பற்றி அத்தனை நூல்கள் பேசுகின்றன.
நம் வணிகர்களின் பெருமையும் அது தான் மிக்க கொடுக்காமல் மிகுதியாய் வாங்காமல் மெய் வணிகம் இருந்தாலேயே தலைமுறைகள் கடந்தும் வணிகம் செய்ய முடிந்தது.
அரசர்களும் அதனால் தான் தாங்கள் யார் மாறினும் , வணிகத்தை வளர்க்க முயன்றனரே அன்றி அழிக்கவில்லை, தங்கள் போரில் பொதுமக்கள் பாதிப்படையாத வண்ணம் போர் நெறிமுறைகளை கொண்டொழுகினர் .
எனினும் அவர்களை தனது கட்டுக்குள் வைக்க தெரியாத அரசன் சீக்கிரம் தோற்று விடுவான்.
அத்தகைய வணிகர்களில் பலர் அரசருக்கும் அரசாங்கத்திற்கும் உதவியாக இருந்தனர். அதில் ஒருவர் தரணி கொண்ட போசர்.
வீரர்களது உற்சாக கூச்சல் ,
அவர்களது உலகத்திற்கு எரிச்சலை தர , பேச்சுவார்த்தையை முடித்தவர்
அவர்களை எச்சரிக்கும் பொருட்டு வெளியே மேல் தளத்திற்கு செல்லும் படிக்களில் ஏறினார்.
அங்கோ இந்தக் கொண்டாட்டத்தையும் அவர்களில் ஒருவனாக இருந்து ரசித்துக் கொண்டு இருந்தான் அவர்களின் அபிமானத்தை பெற்றவன்.
ஆஜானுபாகுவான உடற்கட்டுடன் வீரர்கள் இருவர் தங்கள் திறமையை மல்யுத்தம் செய்து கட்டி உருண்டு வெளிப்படுத்தி கொண்டு இருந்தனர்.
இளநிலவில் தீபந்த ஒளியில் வரிசை பற்கள்மின்ன சுருள் குழல் காற்றாட திருநீறு கீற்றாக தீற்றப்பட்ட நெற்றியுடன் பொன்னாய் ஒளிர நின்றவன் நெருப்பொளியில் மின்னும் தேன் சிறப்பமென நின்று கன்னியர் மட்டுமல்ல காளையரையும் மயக்கி கொண்டிருந்தான். அதனைக் கண்டவாயில் காப்பாளர்களில் ஒருவன்,
"உதயசந்திரர் நம்முடன் இருக்க போவது தெரிந்து இருந்தால் இரவு பணியை வேறு யாரிடமாவது ஒப்புவித்து இருப்பேன் " என ஏக்க பெருமூச்சு விட்டவன்
"பார் அவர்களது மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் " தான் அவர்களில் ஒருவனாக இன்றி போனோமே எனும் ஆதங்கம் அவன் குரலில்,
"இத்தனை நாள் எங்கு சென்றிருந்தார். என்பதேதெரியவில்லை. " என அவன் வருத்தப்பட மற்றோருவன்
"ஏன் இப்படி விசனப்படுகிறாய் ?,
இவர் எந்த விதத்தில் உயர்வு ?
நாம் காவலர் அவர் சிறு படைத் தலைவர் ? அவ்வளவு தானே ?" என்றவனை
"நீ பல்லவ நாட்டை சேர்ந்தவன் தானே " என்பது போல் பார்த்த காவலனுக்கு அவன் கேள்வி புரிந்தது போலும்
"நான் புதிய படை பிரிவை சார்ந்தவன், நான் இவரை பார்த்ததில்லை " என்றான்.
புதிய துணியை உடுத்திய குழந்தை ஒவ்வோவெரிடமும் காட்டி பெருமை கொள்வது போல அந்த காவலனிடம் இப்போது
"அவர் இந்த பல்லவ நாட்டின் வருங்கால படைத் தளபதி " என்றான் தன் முகத்தில் வெளிச்சம் பரவ
"அப்படியானால் இவர் நம் தளபதி பூசலாரின் "
என மற்றொருவன் ஏதோ தான் காதால் கேட்டு அறிந்து கொண்ட விவரத்தின் உண்மையை புரிந்தவனாய் ஐய வினாவை ஆரம்பிக்க
"ஆம், தளபதியாரின் திருக்குமரன் உதயசந்திரனே அவர்களேதான் " என முடித்து வைத்தான் அந்த காவலன்.மேலும் அவனருகில் குனிந்து
"உனக்கு மற்றுமோர் சேதி தெரியுமா?"
என சுற்றும் முற்றும் பார்த்தபடி அந்த காவலன் மெல்லிய குரலில்வினவ , அவனிடம் வேறு யாருக்கும் தெரியாத ரகசியம் தனக்கு மட்டும் தெரியும் என்பதை அவனுடைய குரலில் உணர்ந்த மற்றோர் காவலன், தன் இடத்தில் இருந்தும் அவனை நெருங்கி
"என்ன ?" அவனை விட மெல்லிய குரலில் வினவவும்
"இவருக்கு தான் நகரத்தார் தரணி கொண்டபோசர் தன் மகள் கருத் தடங்கண்ணியை விவாஹம் செய்து தர இருக்கிறார் "
என மெல்லிய குரலில் காதோரம் சொல்லிக் கொண்டு இருந்தான். அப்போது அந்த மெல்லிய இருளில் அவர்கள் பின் இருந்த
மேல் தளத்திற்கு செல்லும் படிகளில் ஸ்... ஸ்… எனும் சர்ப்பத்தின் ஒலி கேட்க செவியை கூராக்கியப் புதிய படைப் பிரிவை சார்ந்தவன்
"பாம்பின் பெருமூச்சு ஒலி கேட்கிறதே" பயந்து போய் கண்களை இறுக மூடிக் கொண்டு கேட்க
" ஆமாம் எனக்கும் கேட்கிறது "
"நடுகடலில் கப்பலுக்குள் பாம்பு வந்தால் என்ன செய்வத டா? " என்று கண்களைத் திறவாமலே கேட்டான் அவன் பயம் அவனுக்கு
"அடித்து கடலில் தூக்கி போடுவது . இல்லை கூட நின்று கூத்தாடுவது "
என்ற குரலில் இருந்த பேதத்தை அவன் இருந்த பயத்தில் உணரவில்லை .
"எனக்கு பாம்பு என்றால் பயம் இல்லை , அதை அடிக்க கூடாது என்று அறிவுறுத்தி உள்ளனர். மேலும் அதன் கூத்துக்கு மகுடியல்லவா வாசிக்க வேண்டும் எனக்கு அது தெரியாது எனவே வேண்டாம் " என
இன்னும் கண் திறவாமல் கூடுதலான நடுக்கதில் தனது வீரத்தையும் யோசனையும் கூற
" எனில் வீட்டில் வைத்து வழிபாடு செய் முட்டாள் ! இப்போது கண்களை திறந்து பார் " எனும் சத்ததில் கண்களை திறந்தவன் அதிர்ந்து போனான்
அவரோ அப்போது தான் சற்று கணத்த தன் சரீரத்தை வைத்துக் கொண்டு சிரமப்பட்டு மேல் ஏறி பெருமூச்சு வாங்கியபடி நிற்க , அந்த ஒசையை சர்ப்பம் என எண்ணியது மட்டுமல்லாது , அவரையே கட்டியணைத்தபடி நின்றால் ...
ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்தவர். ஏதேனும்
கூறும் முன் இடையில் வந்தான் உதயன் அங்கு நிகழ்ந்தவற்றை பார்த்தபடி பார்த்தவன் தனக்கு வந்து நகைப்பை அதரத்துள் அடக்கியவன் சுற்றி பார்க்க சுற்றி நிற்பவர்களும் அங்கு நிகழ்ந்ததை பார்த்து சிலர் சிரிப்பை அடக்கி கொண்டு நிற்பதையும் சிலர் வாய் மூடி சிரிக்கக் பலர் நன்கு சிரிக்க கண்டவன்
"பாவம் பயந்த சுபாவம் போலிருக்கிறது விட்டு
விடுங்கள் " எனவும் ஏதும் அப்போதைக்கு ஏதும் கூற முடியாதவராய்
"இனியாவது கவனமாய் இரு" என அவனிடம் உறுமியவர் திரும்பி நடக்கத் துவங்கினார். அதற்குள்
"அனைவரும் இருப்பிடங்களுக்கு திரும்புங்கள்" என்ற உதயினின் உத்தரவு குரலில் அடுத்த நொடி அந்த இடம் காலியாகி இருந்தது.இவ்வளவு நேரம் அவனது நகைப்பொலி என்ன இப்போதை உத்தரவில் இருக்கும் அழுத்தம் அதிகாரம் என்ன ?
என்று தான் போசர் நினைத்துக் கொண்டிருந்தார்.
'அது எப்படி இவன் விழியசைவுக்கு அனைவரையும் ஆட வைக்கிறான் .
அங்கோ என் மகள் இவன் வாய் திறவும் முன்னம் அதை செய்கிறேன் என்கிறாள் , இங்கு படை வீரர் முதல் தலைமை அமைச்சர் வரை இவன் விழி அசைவில் குறிபறிந்து நடக்கின்றனர்.கலத்தை அந்தமான் தீவில் நீருக்கு நிறுத்தியது தவிர வேறு எங்கும் நிறுத்தவில்லை. இவனோ
உலவு படகில் இருக்கிறானா? துனை கலங்களிலும் சுற்றியலைகிறானா ? எங்கும் நிலப்பகுதிக்கு செல்கிறானா? என எதையும் அறிய முடிவது இல்லை எப்போது எங்கே இருப்பான் என்பது யாருக்கும் தெரிவதில்லை.
எல்லாம் அரசியார் ஆதரவு இருக்கும் தைரியம் என
எண்ணியவர்
இல்லை இல்லை அனைத்து பெண்களின் ஆதரவு இருக்கும் திமிர்'
என பொருமியபடி விதானத்தை நோக்கி சென்றவர் , பிறகு ஒருவேளை பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வருவானா? என்பது போல் பார்க்க அவரிடம் வந்தவன்
"வருகிறேன்" என இரு கரம் குவித்தவன் எதிர் திசையில் செல்ல
"அது தானே பார்த்தேன், திருந்துவதாவது "என முனுமுனுத்தபடி பதிலுக்கு கரம் குவித்தவர் தலைமை அமைச்சரை நோக்கி சென்றார்.அவரின் எண்ணம் புரிந்தவனோ சிரித்தபடி மீகாமனிடம் சென்றான். பாயமரத்தை பார்வையிட்டு கொண்டு இருந்த கலத்தலைவனோ உதயனைக கண்டதும் கரம் குவிக்க பதிலுக்கு தானும் கரம் குவித்தவன்
"லங்க சுகா நாட்டின் துறையை நாளை கலம் அடைந்துவிடும் அல்வா?" என்ற உதயனிடம் மீகாமன்
"நாளை பொழுது புலரும் போது லங்க சுகாவின் துறையை எட்டி இருப்போம்"
எனவும் கலமும் ஆம் என்பது போல் ஏறி இறங்கி அவன் கூற்றை ஆமோதித்தது.
( லங்கா சுகா எனும் நாடு தாய்லாந்தின் தெற்கு பகுதியும் மலேசியாவின் சில பகுதிகளும் இணைந்தது லங்க(bliss) சுகா (இனிமை / sweet ) என்பது சமஸ்கிருத சொல் இந்த நாட்டின் துறைமுகம் கடா இன்று மலேசியாவின் ஒரு மாநிலம் கடாரம் கொண்டான் என்பது இந்த நாட்டை ராஜேந்திர சோழன் வெற்றி பெற்றபின்னர் அவருக்கு கிடைத்த பட்டம் அதற்கு முன்னர் லங்க சுகா , ஸ்ரீவிஜயம், புன்னன் பேரசினால் கைக்கொள்ளப்பட்டது , இன்றும் கடாவை சுற்றி
லங்காவி சுற்றுல்லா தீவுகள் உள்ளன. புதைபொருட்கள் ஆராய்சியில் தென் தமிழர் மற்றும், புத்த , இந்து பேரசுகள் ஆட்சி செய்த ஆதாரங்கள் வழிபாட்டு படிமங்கள் கிடைத்துள்ளன)
என்னுயிரின் விகுதியும்
தொடர்ந்த உன்னுயிரின்
பகுதியும் இணைகையில்
உருவானதோ காதல் சந்தி
பொருள் மாறாதிருக்க
மொழிக்கு சந்தி
என் வாழ்வின்
பொருள் மாறாதிருக்க
காதல் சந்தி
சந்தி பிழை நீக்க
காதல்தமிழ் பழக
உனை சந்திக்க
பிழைக்கும் என்
நேசம் பின்
சிந்தித்து இழைக்கும்
இரு பதத்தின் சந்தியில்
மிகும் ஒற்றை குறிக்கும்
ஒரு பதம் சந்தி
நம்
இருபதத்தின் சந்தியில்
மிகும் ஒன்றை குறிக்கும்
ஒரு பதம் நாம்
வல்லினம் மிகும்
இடம் , மிகா இடம்
அறியின் சந்தி
பிழை தீரும்
என் வல்லினம்
நீ மிகும் மிகா
இடங்களில்
காதல் சுவை கூறும்.
சந்திபிழை நீக்கி
ஒற்றறிவான்
என் நோய்
பிழை நீக்க
என் மன
ஒற்றறிவான்
அது அவன் மனம்
ஒத்ததையும் அறிவான்.
தாய் சார் மதலை
சார் பெழுத்து
வகையவளோ
என் மனம் சாரும்
அவளை
மகரங்கள்
குறுகி விழ
ஆகியது அவள்
விழி எனும்
மகர குறுக்கம் - நீ
அகங்காரம்
குறுகி வீழ
ஆகியது அவள்
ஐந்தும் எனும்
ஐகாரா குறுக்கம் - நீ
ஒளவியம்
குறுகி வீழ
ஆகியது அவள்
ஒளடதம் எனும்
ஒளகாரக் குறுக்கம் - நீ
ஆயுதங்கள்
குறுகி வீழ
ஆகியது அவள்
அங்க தேசம் எனும்
ஆயதக் குறுக்கம் - நீ
இல்லை
குறுகி வீழ
ஆகியது அவள்
இடை எனும்
குற்றிய இகரம் (குற்றியலிகரம்)_ நீ
உன்னில்
குறுகி வீழ
குற்றிய உயிர்
ஆகியது எனும்
குற்றியலுகரம் - நான்
என்
உயிர் அளக்கும்
உன் விழிப்படை
உயிரெள படையோ?
இல்லை
உன் மனம்
அறிவிப்பதால்
ஒற்றெள படையா?
(என் ) உயிரும்
(நம்(ல்) )மெய்யும்
சேர்ந்த உன்
முன் என் வார்த்தை
ஆயுதம் பயன்படாதடி
என்
முதல்எழுத்தும்
இன் எழுத்தும்
இனி என் எழுத்தும்
நீ
உனை சார்ந்து
இயங்கும்
சார்பெழுத்து நான்
அத்தியாயம் 5
"நாளை லங்க சுகா துறையை கலம் அடைந்து விடும் அல்லவா மீகாமரே?"
என்ற உதயனவனின் கேள்விக்கு
" நாளை காலை சூரிய உதயத்தில் லங்கசுகாவை அடைந்து விடலாம்"
என்றபடி உதயனை பார்த்து புன்னகைத்தவன், அருகில் இருந்த பணியாளனை பார்க்க , அவனது பார்வையில் ஒடி வந்த பணியாளன் மீகாமன் அவன் கையில் இருந்த சுக்கானை பிடித்துக் கொண்டான்.
மற்றோர் பணியாளரிடம்
"உப தலைவனை அழைத்து கவனித்து கொள்ள
சொல் நான் தளங்களை பார்வையிட செல்கிறேன் "
என்றது
"உத்தரவு தலைவரே " என வணங்கியவன் உப தலைவரை தேடி சென்றுவிட
"வாருங்கள் உதயேந்திரரே தளங்களை பார்த்து விட்டு வரலாம்" என அழைத்தான். அவனுடன் இணைந்து உதயனுடன் நடக்க எதுவும் பேசவில்லை
கப்பலின் முன் முனைக்கு வந்தார்கள் .
மீகாமனிடம் எதுவும் கூறாமல்
கீழே துடிப்பிசைக்கும் வேகத்தில் நீரினை பின்தள்ளி முன் நோக்கி நீரினை கிழித்தபடி கலம் செல்வதை பார்த்தவன்
'இது போன்றுதான் நடந்த நிகழ்வுகளை கிழித்துக் கொண்டு காலம் எனும் கலமும் முன்னேறி செல்கிறது போலும் ஆனால் பின்னோக்கி செல்வது இல்லை.
அவனுக்கு மட்டும் காலம் எனும் கலம் செலுத்தும் சக்தி இருந்தால் அதை பின்னோக்கி செலுத்தி விளந்தை போரில் பேரசரின் விழுப்புண்ணை மாற்றி இருப்பேனே என மாய்ந்து போனான். போரில் பேரசர் அல்லவா வென்று இருந்தார். எனினும் அவரை வீழ்த்தியே ஆக வேன்டும் என வெஞ்சினம் கொண்டு வஞ்சகத்தில் போர் களத்தில் சாய்த்திருந்தவர்கள் மீது சினம் பெருகியது.
அப்போது உதயேந்திரன் சாளுக்கியர்களுக்கு எதிராக மற்றோர் இடத்தில் போரில் ஈடுபட்டு இருந்தான். செய்தி கேட்ட மறுநொடி அவன்அங்கு இல்லை. பறந்திருந்தான் விளந்தையை நோக்கி , நிற்கவும் நடக்க இயலாத அவனது கால்கள் எப்படி பாசறை வந்து சேர்ந்தனர் என்பதை அவன் அறியான் .எனினும் உள்ளே சென்று அவரை காணும் துணிச்சல் சிறிதும் இல்லை அவனுக்கு , பல போர்க்களங்களை ,இழப்புகளையும் இறப்புகளையும் பார்த்தது மட்டுமன்றி எதிரிக்கு ஏற்படுத்தியும் இருக்கிறான். அப்போது அவனுக்கு இது போன்று ஒரு நாள் தானும் தயங்கி நிற்க கூடும் , என கூறியிந்தால் அப்போதே அங்கேயே வெட்டி வீசி இருப்பான். ஆம் போர் களத்தில் விழுப்புண் அதுவும் மார்பில் என்றால் அதை விட பெருமை வேறு என்ன உள்ளது. தன் தந்தை மட்டுமல்ல தானும் ஏன் போர் களம் புகும் அனைத்து வீரர்களின் வேண்டுதலும் அது தானே ? எனினும் தன் நாயகனுக்கு, தந்தைக்கும் மேல் அன்பு செய்து தன்னை அவரது சொந்த மகனாக பராட்டுபவரை , அவன் கடவுளாக தொழுபவரை
மார்பில் விழுப்புன்னை தாங்கி அயர்ந்து இருக்கும் தோற்றம் கண்டும் ஏதும் செய்ய இயலாமல் வீனே பார்த்துக் கொண்டு இருக்கும் நிலையை அறவே வெறுத்தான்.
போர்களத்தை பொருத்தவரை அவர் அவனது ஆசான் அல்லவா ? நாட்டு மக்களுக்கு தந்தை அல்லவா, பின் அவன் நெஞ்சம் துடிக்க தானே செய்யும். பல்லவ தேசமே கலங்கி தான் போயிருந்தது. அவர் காயம் பட்ட செய்தி அறிந்து இன்னும் அவர் உயிருக்கு ஆபத்தான நிலை அறிந்தால்….இப்போது , ஆறுதல் அளிக்க வேண்டியவனோ பொறுப்பற்று , ஆட்சியை அவனே தூக்கி கொடுத்து விட இருக்கிறான். சித்திரமாயனை நினைக்கும் போதே நெஞ்சம் கசந்து போனது ,
அவனது செயல்களில் இப்போதும் அவனுக்கு ஆத்திரம் ஏற கண்கள் சிவக்க நின்றவன் அவனை அப்போதே கூறுபோட எண்ணி தன் வாளை உருவ உறையில் கை வைத்தான்.
"உதயேந்திரரே"
என்ற பலமான விளிப்பு அவனை மீண்டும் கலத்திற்க்கு கொண்டு வந்து சேர்த்தது. மீண்டவன்
"கூறுங்கள் மீகாமரே " என்றதும்
" எதை கூறுவது தாங்கள் நான் கூறியதை கேட்கும் நிலையில் இல்லையே, மிக தீவிர சிந்தனை போலும் ?"
என்றவனின் முகத்திலும்
குரலிலும் வந்த கேலி கருத்தடங்கண்ணியை கொண்டு என் புரிந்தவன் முகம் லேசான சிவப்பு அடைய
"அதெல்லாம் ஒன்றும் இல்லை " என்று தயங்கிய குரலில் கூறியவன் ,சற்று வேறு எண்ணங்களில் நின்று விட்டேன்.
"நாளை லங்கக சுகா வை அடைந்து விட வேண்டும் "
என்றவனின் குரலில் தெரிந்த உறுதியில்,அடைந்தாக வேண்டும் எனும் கட்டளையும் இருந்ததோ? மேலும் சில விவரங்களும் கேட்டபடி இருவரும் கலத்தின் அனைத்து தளங்களையும் சுற்றி வந்தனர்.
இறுதியாக
"கலத்தின் பாதுகாப்பை கண்காணித்து கொள்ளுங்கள் மீகாமரே நான் வருகிறேன். " கூறி விடைபெற்று தன் அறைக்கு திரும்பினான்.
அறை வாயிலில் நின்ற காவலனை கண்டதும் அவன் மனதில் மாலை நடந்தவை நினைவுக்கு வர சிரித்து விட்டான். அவன் சிரித்து விட காவலனுக்கு வெட்கம் வந்து விட்டது ,
"நீங்களும் இப்படி என்ன பார்த்து நகைக்கலாமா?"
என்றபடி குவளையுடன் நின்றவன் பாவமாக கேட்க
"சரி சரி இனி நகைக்கவில்லை " என்றவன்
" உன் பெயர் என்ன ?" என்றான். அவன் கையில் இருந்த பானத்தை வாங்கிக் கொண்டபடி .
"கார்மேகம் "
"நீ எப்படி புதிய படை பிரிவில் சேர்ந்தாய் ?"
"நான் எங்கே சேர்ந்தேன் சேர்த்து விட்டாள் ?"
"சேர்த்து விட்டாள் என்றால் ?"
என கேள்வி கேட்டபடி தனது அறைக்குள் பிரவேசித்தவன் முன்னறையில் இருந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்து கொள்ள அவனை தொடர்ந்து வந்த கார்மேகம்.
"ஆமாம் சேர்த்து விட்டாள் , "
என்றவன் கதை கூற ஆயத்தமாக முதலில் வசதியாக உட்கார்ந்து கொள்ள இடம் தேவை அதை தேடியவன், ஆசனத்தில் அமர்ந்திருந்த உதயனின் அருகில் சென்று தரையில் அமர்ந்தவன்,
"என் அத்தை மகள் நப்பின்னை மேல் எனக்கு அவ்வளவு காதல் "
நப்பின்னை என்ற வார்த்தையில் உதயன் நெற்றி சுருக்கி
"இந்த பெயர் எங்கேயோ கேட்டது போல் இருக்கிறதே?"
என யோசிக்க
"யோசிக்காதீங்க சந்தேகமே வேண்டாம் உங்க காதலி கருத்தடங்கண்ணி தேவியின் தோழியே தான் என் காதலி நப்பின்னை"
எனவும் தான் அவனுக்கு நினைவுக்கு வந்தது.
" என்றாலும் என்னையும், எங்கள் காதல் எப்படி உனக்கு தெரியும் "
"உங்களை நேரில் பார்த்ததில்லையே தவிர உங்கள் காதலும் வீரமும் வெகு பிரசித்தம், மேலும் நப்பின்னை அவளை சந்திக்கும் போதெல்லாம் உங்களை பற்றி அதிகம் உரைப்பாள் " என்ற கார்மேகம் .
"இப்போது உங்களால் உங்களை போல வீரனைத் தான் திருமணம் செய்வேன் என்கிறாள்."
"வீரன் ஆகி விட வேண்டியதுதானே"
என்றான் உதயன் வந்த நகையை உதட்டுக்குள் நிறுத்தியபடி. காவலனோ
"வேண்டியது ... தானே… உங்களுக்கு என்ன எளிதாக கூறி விட்டீர்கள் , அது என்ன வீட்டின்
பின் இருக்கும் வாழை இலையா அறுத்து கொண்டு வர , இல்லை அங்காடியில் விற்கிறார்களா வாங்கி வர "
"பிறகு என்ன தான் செய்தாய்? " என்ற உதயனுக்கு
"நானும் பலவாறு சிந்தித்து பார்த்தேன் தலைவரே . சரி காளையை அடக்கி வீரனாகி விடுவது என முடிவு செய்தேன்."
"ம் பிறகு ?"
" தைத் திங்களன்று காளையை அடக்க ஏறுதழுவும் இடத்துக்கு சென்றேன், அம்மாடி காளைகளா அவை யானைகள். இருந்தும் அடக்குவோம் வேறு வழி இல்லையே ..நப்பின்னை ஒத்து கொள்ள வேண்டுமே என ஒரு காளையின் வரவிற்காக வாடிவாசல் முன் சென்றுநின்றேன். காளை என்னை நெருங்கி ஒடி வரும் என நான் நிற்க அது நினைத்ததோ மீண்டும் உள்ளே சென்று நின்றுகொண்டது. அதுதான் அப்படி என்றால் அதன் பிறகு வந்த நான்கு காளைகளும் அது போலவே திரும்பி விட்டன.அதற்கு நான் என்ன செய்வேன்? எனது அந்த வீரத்தை பார்த்து நப்பின்னையை திருமணம் கொள் என்றால் முடியாது என்று விட்டாள்."
அதை நினைத்து பார்த்த உதயன் நகைக்க ஆரம்பித்து விட்டான் வயிறு நோக சிரித்தவன்
" பிறகு என்னவாயிற்று ? " என்றான்.
பிறகு கருத் தடங்கண்ணி தேவியார் சிபாரிசில் புதிய படைப்பிரிவில் சேர்ந்து இப்போதுஇந்த கப்பலில் சேர்ந்துள்ளேன். என தன் கதை
கூறியவனுடன் சற்று நேரம் பேசியவன் சரி நாளை சந்திக்கலாம் கார்மேகம் இப்போது நான் சற்று ஓய்வு எடுத்துக் கொள்கிறேன் ".என மஞ்சத்தில் சாய்ந்தான்.
"நாளை வருகிறேன் தலைவரே"
என கார்மேகம் விடைபெற்றுக் கொள்ள
உதயன் அவன் நினைவோ கருத்தடங்கண்ணி அவளில் வந்து நிறைந்தது. அன்று அம்மானை பாடலுக்கு விளக்கம் கூறி
நின்றவனுடன் சேர்ந்து மகிழ்ந்திருந்தவன். அவளிடம்
"தடங்கண்ணி நான் சென்று வரவா?"
அவளோ நான் உங்களுக்கு என்றும் முக்கியம் இல்லை அல்லவா?
என ஊடல் கொள்ள
"அவ்வாறு இல்லை தடங்கண்ணி நீ இல்லையேல் எனக்கு வாழ்வே இல்லை. எனது சூழலை புரிந்தும் முகம் திருப்பலாமா. எங்கே எப்போதும் போல் உன் குறுநகையுடன் வழியனுப்பிவை பார்க்கலாம் "
என மீண்டும் விடை பெற முயல அவளோ தவித்து விட்டாள். சாளுக்கிய தேசம் செல்லும் முன் அவனை பார்த்தது தொடர்ந்து போர் பிறகு கடற்பயணம் என்றால் அவள் சீறாமல் இருந்தால் தான் அதிசயம் . ,அவனும் என்ன செய்வான் கடமை
பெரிதல்லவா அவனுக்கு காத்திருக்கும் பணிகளும் ஏராளும் அத்தனைக்கும் இடையில்
அவளை காண மட்டும் அவன் வந்திருக்கிறான் என்பதை அவனது கலைந்த குழல் மிக சிறிதே
கசங்சிய உடை உணர்த்தி விட தடங்கண்ணியவள் தாயாக மாறிப் போனவள்அவனை தன்னில் சேர்த்தணைத்து தாலாட்டியவள் , சந்திரன் விடை பெறும் நேரம் வாடிய பெண் அல்லியென ஆனாள். என்றாலும் முறுவலை முயன்று கொண்டு வந்திருந்தாள்.
"நாட்கள் காற்றினும் கடுகி ஓடிவிடும் விரைந்து வந்து உன்னை மணந்து கொள்கிறேன். "
என்று தனது புரவியில் விரைந்து விட்டான்.இல்லையென்றால் அவனால் அது இயலாது.அதை நினைத்தபடி அவளது நினைவுகளில் உறங்கியும் போனான்.
மணமேடைக்கு வரும் மணமகள் கால்கள் செம்பஞ்சு குழம்பில் சிவந்திருப்பதுபோல் தன்
முகம் சிவக்க மிக மெல்லிய நாணம் இழைந்தோட தலை நிமிரா கன்னி மண மேடை அடைவது போலும் , செஞ்சூரியன் மிக இளமையாய் தன் பூ முகம்உலகோர் காண மேல் எழும்பி வந்தான். அலைகள் ஆரத்தி எடுக்க மாலை அணிவிக்க விரையும் பெண்ணவள் போல் கதிரவனை பார்த்த லங்க சுகா நாட்டின் கடாரம் துறையினுள் நுழைந்திருந்தாள் சொர்ணமுகி.
உதயசந்திரன் கலத்தில் இருந்து மிக லாவகமாக குதித்திறங்கி கரையில் கால் வைத்ததும் அவனை அழகியர் சூழ்ந்து கொண்டனர்.ஒரு அழகியவள் சிகை கலைத்து ஆடைக்குள் புகுந்து கொஞ்சிட, ஒய்யாரமாக நின்ற மற்றவளோ நின்று நிமிர்ந்த தன் அழகில் மயங்க வைத்தாள் பச்சைவண்ண ஆடை கட்டி. தன் வளைவு நெளிவுகளில் அனைவரையும் வசீகரித்த மற்றவள் சலங்கை கட்டி குதித்தோடி வந்தவள் அவனை ஆரத் தழுவிக் கொண்டாள் எங்கும் இடைவெளியின்றி . தன்னை அவர்களுக்கு தன்னை ஒப்புக் கொடுத்து நின்றவன். சற்று நேரம் கழித்து தென்றல், மலை, நதி அழகிகளை மனமின்றி விடுத்து மீளச் சென்றான்.
தனது குடியிருப்புக்கு சென்று வெளியில் செல்ல தயாராக இடுப்பில் கால் சராயும் மேல் அங்கியும் அணிந்து நெற்றியில் திருநீறு அணிந்தவன், ஆடியில் தன்னை சரி பார்த்து கொண்டான். தன்னுடைய சிறிய குறுவாளை எடுத்து இடுப்பில் சொருகியபடி வெளியே வரவும்
"தலைவரே " எனும் கூவலுடன் அங்கு வந்து நின்ற கார் மேகத்தை கண்டனத்துடன் நோக்கியவன் ,
"நீ எனக்கு தோழன் புரிகிறதா?
இனி உதயன் நான் உனக்கு , ஒத்துக் கொள்வது என்றால் மட்டும் என்னுடன் வரலாம்.இல்லை, இத்துடன் நமது உறவு முற்றுப் பெறட்டும்."
"சரி , தங்கள் சித்தம் " என்ற கார்மேகம் உதயனுடன் இணைந்து நடக்க ஆரம்பித்தான். கார்மேகம் , லங்கசுகாவிற்கு புதிது ஆகையால் தன் நாட்டை போல தட்பவெப்ப நிலை இருந்தாலும், கடலும் அதன் அருகில் அதனை சூழ்ந்த மலைகள் அதில் வீழும் அருவிகள் பற்றி விசாரித்தபடியும் அதற்கு உதயன் பதிலிருக்க நடந்து வந்தவர்கள் முக்கிய வீதிக்கு வந்திருந்தனர். காலை நேரம் ஆதலால் இன்னும் பரபரப்பாகவே இருந்தது. துறையும் அவர்கள் இருந்த இடமும்
கார் மேகத்துடன் அங்காடிகள் இருக்கும் பகுதிக்குள் நுழைந்தவன் அங்கு விற்பனைக்கு இருந்த உணவு பொருட்கள் துணிகள் ஆபரணங்கள் போன்றவற்றை பார்வையிட்டு கொண்டு வந்தார்கள். அவர்களை, பார்வையிட்டபடி கன்னி ஒருவளும் அவர்களைத் தொடர்ந்து கொண்டு இருந்தாள்.
ஒரு உணவு பொருள் அங்காடியில் ஏதோ உணவுகளை தீயில் வாட்டி மூங்கில் குச்சியில் சொருகி வைத்து இருக்க,
"இது மீன் போன்று தெரிகிறதே. "
"இது என்ன வகையான உணவு ஐயா ?" என அங்காடியில் கேட்க
"இது மீன் தான் அதனை அணலில் வாட்டி சதை பகுதியை சுத்தி செய்து மிளகு மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் மூங்கில் குச்சியில் குத்தி வைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஒரு வெள்ளி "
அதை ஆளுக்கொன்று வாங்கியவர்கள்,உதயன் கடைக்காருக்கு காசு தரும் பொருட்டு நாணயத்தை எடுக்க தனது பட்டு துணியில் செய்த பையை எடுத்து அதற்குள் கையை நுழைக்கும் முன்னம் உதயனை நெருங்கிய அவள் உதயன் அவன் கையிலிருந்து சுருக்கு பையை ஒரு நொடியில் பிடிங்கிக் கொண்டு அருகில் இருந்த சந்துக்குள் ஓட , அவளை தொடர்ந்து ஓடினானான் சந்திரன். இப்போது இருவரும் மின்னல் வேகத்தில் மறைந்திட , அவர்களை பின் தொடர்ந்த கார்மேகம் அவர்களைத் தவற விட்டு இருந்தான் சற்று தயங்கி அந்த பரபரப்பான வீதியை சுற்றி பார்த்தவன் , பின்தானும் அந்த சந்தை (குறுக்கு தெரு) கண்டு பிடித்து ஓட
அவர்கள் அங்கே இருந்தால் தானே?
பின் மேலும் சில சந்துகளுக்குள் தேடியவன் தொடங்கிய இடத்திற்கு மீண்டும் வந்து சேர்ந்தான்.
"இந்த ஊர்ல இடமும் தெரியாது வலமும் தெரியாது , இப்ப என்ன செய்வது ?அப்பா ஈசா நப்பின்னைக்கு ஆசை பட்டு இங்க
வந்தேன் , இந்த திசை தெரியாத மொழி தெரியாத ஊர்ல என்ன அநாதையா தவிக்க விட்டு விடாதே…
எந்த சந்துன்னு தெரியலியே எல்லாம் ஒன்று போல இருக்கே இப்ப எந்த சந்துக்குள்ள போய்
தேடுவேன்…"
என தன் போக்கில் புலம்பியபடி அமர்ந்திருந்தான்.
அப்போது அவன் முன் ஒரு நாணயம் விழ நிமிர்ந்து பார்த்தவன் அதிர்ந்து போனான். பின் அவன் முன் சில சில்லறை நாணயங்கள் கிடந்தன. அவனுக்கு பித்து பிடித்து விட்டதாக எண்ணி இரக்கம் கொண்டு சிலர் வீசி இருந்தனர். இது அத்தனைக்கும் காரணமானவன் எதிரில் நின்று எதுவுமே நடக்காதது போல் விட்ட இடத்தில் அமர்ந்து அந்தகுச்சியில் சொருகி இருந்த கறி துண்டை கடித்து இழுத்து சுவைத்தபடி கார்மேகத்தை பார்த்து கொண்டிருந்தான்.கார்மேகம் அவனைப் பார்த்த உடன் எழுந்தவன் "மேகா , இந்த கறி துண்டுகளுக்கும் சேர்த்து சில்லறைகளை கொடுத்து விடு "
என மேலும் சில குச்சிகளை எடுத்து கொண்டு நடக்க கார்மேகம் வேகமாக கீழே கிடந்த சில்லறைகளை பொறுக்கி எடுத்து கடைக்காரரிடம் கொடுத்தவன்
வேகமாக ஓடி வந்து அவனுடன் இணைந்து கொண்டான். உதயன் அவனிடம் சில இறைச்சி துண்டங்கள் இருந்த குச்சியை கொடுத்தான்.
எங்கே போகிறோம் ? என கேட்கவில்லை கார்மேகம். உதயன் அவனை நண்பன் போல் நடத்தலாம், ஆனால் தளபதி தகுதியில் இருப்பவன் , அவனிடம் இது போன்ற கேள்விகளை கேட்பது முடியாது .மேலும் இவன் கேட்டால் மட்டும் உதயன அவன் பதில் கூறி விடவா போகிறான் . காலையில் நடந்த நிகழ்வு அவன் நினைவுக்கு வந்தது .
போசர், அமைச்சர், முத்தரையர் , இளம் திரையன் அனைவரும் லங்க சுகஅரசரை சந்திக்க முடிவு செய்து ஆயத்தமாகி வந்து கொண்டிருந்தனர். அப்போது உதயனை பார்கவும் அவனையும் உடன் அழைக்க நினைத்து அவனை பார்த்தார்.
அவன் போசரை பார்த்த பார்வையில் , அவரது
நாவு அசையவில்லை , பிறகு எங்கே ? உடன் வரும்படி அழைக்க முடிந்தால் என்னை அழைத்து பார் என்ற சவாலை ஏற்க இயலாமல் அப்படியே பின் வாங்கியவர்
"எனக்கு ஒரு முக்கிய வேலை இருக்கிறது. நீங்கள் செல்லுங்கள் நான் என் பணியை சுருக்கமாக முடித்துக் கொண்டு வருகிறேன்."
என தன் அறைக்கு ஓட்டமும்நடையுமாக வந்த பின் தான் மூச்செடுத்தார்.
உதயனிடம் வந்த போசர் அவனது தோள்களை தட்டி "நான் பார்த்துக் கொள்கிறேன் .நீ உன் வேலையை தொடர்ந்து செல்"
என்றவரிடம் "அவர் நினைப்பது என்றும் நிறைவேறாது என்பதை அவருக்கு எடுத்து கூறுங்கள் நான் அவரது மகளைத் தான் விரும்புகிறேனே அன்றி அவரது சொத்துக்களை அல்லது. உள்நாட்டில் தவிர்த்து வெளி இடங்களிலும் என்னை வேவு பார்ப்பது கட்டுப்படுத்துவது அவருக்கு நன்மைபயக்காது."
"ஆத்திரத்தை குறை அவர் தேர்ந்த வியாபாரியும் நீ அரசரை சந்திப்பது வியாபார ரீதியில் மட்டுமல்ல வீரன் என்ற வகையிலும் நன்மை தரும். அதை விட தடங்கண்ணியை அவர் மகள்தான் இன்னும் உன் மனைவியாகவில்லை என்பதையும் நினைவில் கொள். இப்படி முறைத்து அவரை விலக்கி வைப்பதைவிட ராஜாங்க காரியமாக செல்கிறேன் என்று கூறிப் பழகு உன் வாளின் உன் வார்த்தைகளும் இரண்டின் கூர்மையும் பயன்படுத்த வேண்டிய இடங்கள் உண்டு. "
என்று பேசியபடி வாசல் வரை சென்றவரிடம்
அவனும் மேலும் ஏதோ பேசிவிட்டு சென்றபிறகு
போசரின் அறைக்கு வந்தார் அமைச்சர் பிரம்மராஜன் .
"வாருங்கள் அமைச்சரே இந்த பானத்தை அருந்துங்கள் ."
என ஒரு பழரசத்தை தர அதைப் பருகியவர்
" நார்த்தங்காயை ஒத்த சுவையில் இருக்கிறதே"
"ஆம் பார்க்கவும் அப்படியே தான் கடாரத்தில் இந்த பழம் கிடைக்கிறது."
"போசரே ,உதயசந்திரரை எதற்கு நம்முடன் அழைக்க நினைக்கிறீர்கள் ?அவர் உங்களை போன்று வணிகத்தில் விருப்பம் உடையவர் அல்ல, மேலும் அவரை கட்டுபடுத்தும் அதிகாரம் நம் எவருக்கும் இல்லை . அவரது செயல்களை பற்றி கேள்வி கேட்பதற்கு அரசியாருக்கும் பேரசருக்கும் மட்டுமே அதிகாரம் உண்டு , மேலும் உதயன் தவறான பாதையில் செல்பவனும் அல்ல மேலும் தன் இயல்பு மற்றும் முடிவில் இருந்து மாற மாட்டான் இதை நன்கு அறிந்தவர் தானே தாங்கள் "
எனவும் ,
'அக்காரணங்களுக்காகவும் அவன் எதிர்கால தளபதி என்பதில் கிடைக்கும் நன்மைகளை எண்ணித்தானே நான் அமைதியாக இருப்பது ' என மனதினுள் பேசியவர் , உதயனை தேர்ந்த வணிகனாக்கும் தனது நீண்ட கால திட்டத்தை அப்போதைக்கு ஒத்தி வைத்தார்.
"எனது மற்ற அலுவல்களை பார்க்க வேண்டியும் இருக்கிறது ஆகையினால் தான் வந்தேன் மற்றபடி வேறு ஒன்றும் இல்லை" என்ற போசரை பார்த்து குறுநகையுடன் பிரம்மராஜன்
"நான் வருகிறேன்"
என விடை பெற்றுக் கொண்டார்.
கார்மேகம் போசரின் நிலையை பார்த்தவன் அதை எண்ணியபடி உதயனுடன் நடந்தவன்
எங்கே போகிறோம் என்ற கேள்வியை மனதில் இருந்து அழித்திருந்தான் .
ஊருக்கு வெளிப்பக்கம் வந்தவர்கள். அங்கிருந்த சிறிய படகில் ஏறினர். கைகள் துடுப்பு போட தன் போக்கில் இருந்த உதயனது சிந்தனை செயல் எதையும் , அவனது முகம் பார்த்து ஊகிக்க முடியவில்லை கார்மேகத்தால் எனவே அமைதியாய் மறு புறம் துடுப்பசைத்தபடி அவனுடன் பயணித்தான்.
கழி முகத்திலிருந்து கடல் தன்னை விரிக்க தொடங்கிய அந்த கரையில் இருக்கும் மலை மீது ஏறியதும். உதயன் கடலை இன்னும் தெளிவாக பார்க்க கூடிய பாறையின் மீது ஏறி நோக்க அவன் கண்களில் கடலில் சென்று கொண்டிருந்த கலங்களை விழ அவற்றை கூர்ந்து நோக்கியவன், காற்றின் போக்கையும் அனுமானித்தவன் அவை எப்போது ஸ்ரீ விஜயத்தை அடையும் என்பதை கணக்கிட்டான். தான் செய்யவேண்டியவற்றை மனதில் வகுத்தபடி நின்றான்.
ஸ்ரீவிஜயத்தை தாண்டியே எந்த கலமும் சீனத்தை அடைய முடியும் இருபுறமும் தீவுகள் கொண்ட அந்த குறுகலான கடல் பாதை அதில் அனேக இடங்கள் கடற் கொள்ளையர்கள் பதுங்கவும், பாயவும் கலங்களை மறைவாக நிறுத்தவும் மிக சாதகம் எனவே வணிக கப்பல்கள் அதை தாண்ட பெரும்பாலும் குழுவாகவே செல்வர் தங்கள் பாதுகாப்பினை கருதி
அப்படியும் அவர்களுக்கு ஐந்து முதல் பத்து சதவீதம் பொருட்களின் மதிப்பில் தங்கமாகவோ இல்லை பொருட்களாகவோ செலுத்த வேண்டும் இதற்கு உடன்படாதவர்களின் கப்பலை மூழ்கடிப்பது , பொருட்களை திருடுவது பணயபடுத்துவது என பல அராஜகங்களை கட்டவிழ்த்து இந்த கடல் வணிக பாதையை இப்போது அபாயமாக மாற்றிக் கொண்டு இருந்தனர்.
இதற்கு ஸ்ரீ விஜய இளவரசர்களின் மறைமுக ஆதரவும் ஒரு காரணம் , இவர்களுக்கு இடையில் இருந்த பகைமையில் ஒருவரின் பொருளாதாரத்தை ஒருவர் அழிக்க எண்ணி கடற் கொள்ளையர்களுக்கு ஆதரவு தர விளைவு அவர்கள் கொழுத்து போனார்கள் தங்களை வலுப்படுத்தி கொண்டனர்.
நேற்றய பதிவு இன்று பதிவு செய்துள்ளேன். தாமதத்திற்கு பொறுத்தருளவும்
கைகள், கால்கள் சங்கிலி கொண்டு பிணைக்கப்பட்டு மண்டியிட்டு அமர வைக்கப்பட்டிருந்தான் ஒருவன். அவன் முக்கிய பொறுப்பில் இருப்பவன் எனவே சற்று திடமாகவே இருந்தான் .தனக்கு பெரிய தண்டனை கொடுக்க முடியாது தலைவனுக்கு நெருங்கியவன் எனும் திண்ணக்கம் வேறு அவனுக்கு உதவிட தன் தவறுக்கு வருந்தியதாக தெரியவில்லை.
முன்னிரவில் இருள் கவிய ஆரம்பித்து இருக்க தீப்பந்தங்கள் ஒளி வீசிக் கொண்டிருந்தது. காற்று அதை கலைத்து விளையாடிக் கொண்டிருந்தது நீரில் கை வீசி விளையாடும் குழந்தை போல . திடலை சுற்றி வட்டமாக பலர் நின்றார்கள் . அதில் அவன் செய்த குற்றம் என்ன.என்பதை அறிய ஆவலாக சிலர் .அவன் செய்த குற்றத்தை அறிந்த சில இளைஞர்கள் அவனுக்கு நேரப் போவதை காணும் ஆவலுடன் காத்திருந்த பலர்.
அப்போது ஒருவன்
"காதுகளை வெட்டுவர் ஐந்து பொன் "
" கண்களை குருடாக்கப்படும் ஆறு பொன் "
"பாதாளச் சிறை ஏழு பொன் "
"முடமாக்க படுவான் பத்து பொன்"
"விடுவிக்க படுவான் ஐம்பது பொன்"
தாங்கள் விரும்பிய தண்டனை கூறியவர்களுக்கு ஆதரவாக பேசி தண்டனை சூதாட்டம் நடந்து கொண்டு இருந்தது.அவன் செய்த குற்றத்தை மற்றவர்களிடம் கூறி அவனுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என சூதாடிக் கொண்டிருந்தனர்.
பெண்கள் சிலர் சிறு குழந்தைகளை இடுப்பில் இடுக்கியபடி அருகில் நின்ற பெண்களுடன் பேசிக் கொண்டும் நிலவரத்தை விசாரித்துக் கொண்டும் இருந்தனர்.சிறார்களோ எக்கி எக்கி எதுவும் தெரியாமல் இடுக்குகளின் வழி முன்னேற முயல அவர்களை அனாயாசமாய் தடுத்த வாலிபர்களும் ஆண்களும் எனஅவ்விடம் பரபரப்பிற்கு பஞ்சமின்றி இருந்தது.
"சந்தன தீவின் தலைவர் சமுத்திர கடம்பன் வருகிறார் . "
என்ற அறிவிப்பில் அங்கிருந்த மக்கள் சற்று அமைதியாகி அவனுக்கு வழிவிட்டு நடப்பதை பார்க்க தொடங்கினர். ஒங்கு தாங்காக வளர்ந்த கருந்தேக்கு போன்ற உடல் அமைப்புடன் ஒரு காலில் தண்டை மற்றும் மார்பில் ஒரு பதக்கம் என இடைதாண்டிய அகன்ற வாள் மார்பை முழுவதும் மறைக்காத பின்புறம் நீண்டு புரளும் அங்கி , சற்று நீண்ட குழலை மொத்தமாக சேர்த்து சிறு உலோகக் கம்பி ஒன்றினை வளையம் ஆக்கி இணைத்திருந்தான். சமுத்திரக் கடம்பன்.
அவனுடன் கரம் கோர்த்து வந்த அந்த அழகு
பதுமை ஜாம்பவதி, பேரழகிகள் வகையில்
மிக சுலபமாக இடம் பிடித்து விட்டவள். அடிமையாக விற்கப்பட்டு கணிகையர் விடுதிக்கு வந்தவள் .ஒரு முறை அங்கு வந்த சமுத்திர கடம்பன் கண்களில் பட்டாள். வந்தவன் ஜாம்பவதியின் அழகில்மயங்கியது அதிசயம் அல்ல ஆனால் அதை அவள் அழகாக உபயோகித்துக் கொண்டாள்.
அவள்தன் அழகை மூலதனமாக்கி அறிவையும்
கொண்டு பல கலங்களையும் ,அரசுகளையும் ,
சூழ்ச்சிகளையும் பற்றிய தகவல்களை அவனுக்கு தர முதலில் பணம் பிறகு கணிகையர் விடுதிக்கு சொந்தக்காரி எனதன்னை உயர்த்தி கொண்டாள். அழகு அறிவு இரண்டையும் கண்டவன் ஐந்து வருட பழக்கதிற்க்கு பின் அவளை மணந்து கொண்டான்.தனது கடற்கொள்ளைகளில் அவளையும் சேர்த்துக் கொண்டான்.
இப்போது சமுத்திர தீவின் தலைவியான அவளது வார்த்தைகள் சாசனங்கள்,இந்தோனேஷியாவின் தீவுக் கூட்டங்களில் ஒன்றான சந்தன தீவு எரி மலைகள் அற்றது.மேலும் அதன் புவியியல் அமைப்பில், புல்வெளிகளும் சந்தன மரங்களும் மிகுந்து இருந்ததால் அத்தீவு சந்தனத்தீவு எனும் பெயர் கொண்டது. அதன் ஒரு புறம் இந்திய பெருங்கடல் வணிகவழிக்கு அருகிருக்க வணிக கப்பல்களை சூறையாடவும். மற்ற ராஜ்யங்களுக்கு கடற்படை உதவி செய்து தங்களை வலுப்படுத்தி கொள்ளவும் ஆரம்பித்து இருந்தனர்.
சமுத்திர கடம்பன் காவலனை பார்க்க , உடனே
என்ன செய்ய வேண்டும் என குறிப்புணர்ந்த காவலன்
" வழக்கு விவரங்களை கூறுங்கள் ?"
எனவும் ஒருவன் முன் வந்து அந்த திடலின் ஒரத்தில் நின்று கொண்டிருந்த அவளை இழுத்து வந்துசபையில் நிறுத்தியவன்,
"இவளை வன்புணர்வு செய்ய முயன்றான். மக்கள் பிடித்து கட்டி வைத்துள்ளனர் "
அவன் முக்கிய கொள்ளையர்களில் ஒருவன் அவன் பயமற்று இருப்பதையும் முகம் பார்த்ததும் அறிந்த சமுத்திரக் கடம்பன்
"ஜாம்பவதி இவனுக்கான தண்டனையை நீ முடிவு செய், ஏனெனில் இவன் எனக்கு மிகவும் வேண்டியவன் எனவே இந்த வழக்கை நான் உன்னிடம் ஒப்படைக்கிறேன் "
என்று அவளிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சென்று ஆசனத்தில் அமர்ந்து கொண்டான்.
"இருவரின் முன் வந்து நின்றவள் இதற்கான
சாட்சிகள் எவையும் உள்ளனவா ?" என்றாள்
கூட்டத்தினரிடம் .
"ஆம் தலைவி என ஒருவன் வந்தான் .
நான் அவனைப் பார்த்தேன் "
என்று முன் வந்து கூறினான்.
"விளக்கமாக கூறு , " என்றவளின் கட்டளைக்கு தலை வணங்கியவன்
" நேற்று நான் அந்தப் பக்கம் போகும் போது இந்த பெண்ணின் அலறல் குரல் கேட்டு அங்கே சென்ற நான் இக் காட்சியை பார்க்க நேரிட்டது."
அவனைப் பார்த்தவள் இதழ்கள் விரிந்தது.
"நீ இவனை பார்த்தாயா பெண்ணே ?" என்றாள்
அந்த பெண்ணை நோக்கி
"பொறுத்தருள வேண்டும் தலைவி , நான் மயங்கி விட்டேன் , எனவே யார் அங்கு வந்து என்னை காப்பாற்றியது என்பதை அறியவில்லை. ஆனால் அப்பாதகத்தை செய்ய முயன்றது இவனே "
என கை கால்கள் சங்கிலியில் பிணைக்கப்பட்டவனை காட்டினாள்.
"போதும் "என ஜாம்பவதி கை உயர்த்த , இடை வரை குனிந்தவள் ஒதுங்கி நிற்க ,குற்றம் சாட்டப்பட்டவன் முன்பு எதுவோ சிந்தித்தபடி குறுக்காக இரு முறை நடந்தவள் . மீண்டும் அவன் முன்பு
"நீ இதை மறுத்து எதுவும் கூறப் போகிறாயா ?"
என்றவளின் கேள்விக்கு இல்லை என்பதாய் தலையசைத்தான். கண்கள் கலங்கி போயிருந்தது. முகம் அச்சத்தில் வெளிரிப் போய் இருக்க தன் நிலையை எண்ணி அச்சத்தில் உடல் நடுங்க உயிர் பயத்தில் அந்த திடலில் நின்றிருந்தான் அவன்.
தான் முக்கிய பொறுப்பில் இருப்பவன் என்பதால் தண்டனை இருக்காது அல்லது குறைந்தபட்ச தண்டனையாக இருக்கும் எனும் எண்ணத்தில்அவன் இருக்க சமுத்திரன் ஜாம்பவதியை கொண்டு முடிவு செய்ய சொன்னதும் திடுக்கிட்டு போனான் .அவனை ஒரு முறைப் பார்த்தவள் சுற்றிலும் பார்க்க , அனைவரும் என்ன தீர்ப்பு வழங்கப்பட
போகிறது என ஆர்வமாக கவனம் கொண்டனர்.
சற்றே தொண்டையை செறுமியவள் "இத்தீவின் சட்டங்கள் அனைவருக்கும் பொதுவானவை. அடிமைகளாக வரும் பெண்களிடமோ இல்லை இத்தீவு பெண்களிடமோ தவறாக நடந்து கொள்வது தண்டனைக்கு உரிய குற்றம் எனவே
இவனது ஆண்மையை நீக்கி அடிமையாக அவளுக்கு சேவகம் செய்ய உத்தரவிடுகிறேன்.
மேலும் இவனுடைய சொத்துக்களையும், பொன் பொருட்களில் மூன்றில் ஒரு பகுதியை இவளுக்கும் மற்ற இரு பாகங்கள் இவனது மனைவிகள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்க
உத்தரவிடுகிறேன் இது போக இன்னும் வேறு தண்டனை எதுவும் தர நினைத்தால் அந்த பெண் தாராளமாக தரலாம் "
என்றவள் தன் குறுவாளை எடுத்து சாட்சி கூறியவனின் நெஞ்சில் சொருகியிருந்தாள். "இதுஉளவறிய முயன்ற குற்றத்திற்கு " என்றவளின் முகம் கண்டஅனைவரும் திகைத்து போயினர். என்ன கூறுவது என்று கூட ஒருவரும் அறியவில்லை ஆனால் வாயை
மூடிக் கொண்டிருப்பதே சாலச் சிறந்தது என உணர்ந்து பதுமைகளாக மாறி போனார்கள்.
சமுத்திரன் "அனைவரும் கலையலாம், " என்ற உத்தரவை விடுத்தகணம் சுயத்துக்கு வந்த அனைவரும் வேகமாக கலைந்தனர் .
சமுத்திரன் கடலின் கரையில் கால்கள் மணலில் புதைய அவனுடன் இணைந்து நடந்த ஜாம்பவதியவளை இழுத்து அணைத்தவன் "எப்படி அவன் உளவாளி என்பதை அறிந்தாய்?" என்றான் பொறுமையற்றவனாய்.
" நீங்களே யோசியுங்கள் . இல்லை பிறகு கூறுகிறேன் "
அவன் மீது சாய்ந்து கொண்டு அவன் முகம் பார்த்தவளிடம்
"உனக்கு நன்கு தெரியும் என்னைப் பற்றி ஆதலால் உடனே கூறிவிடு இல்லை எனக்கு வேறு எங்கும் மனம் போகாது."
"அதுவும் நல்லதுதான் . தாங்கள் என்னைப் பற்றி மட்டுமே சிந்திப்பீர்கள்"
"ஏற்கனவே அப்படித்தானே இருக்கிறேன். விளக்கி கூறு ஜாம்பவதி"
"சரி என் கேள்விக்கு முதலில் பதில்
கூறுங்கள் "
"முதலில் நான் தானே கேட்டேன் என் கேள்வி விடைதராமல் உன் கேள்விகளுக்கு விடை தரச் சொன்னால் எப்படி… ம் "என புருவங்களை உயர்த்தவும்
"என் கேள்வியில் உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும் என்று பொருள்" என அவன் இரு கை வளைவுக்குள் இருந்து கூறினாள்.
"சரி கேள் தெரிந்தால் பதில் கூறுகிறேன் "
"குற்றம் செய்தவன் பணி என்ன?"
"பொக்கிஷங்களை காவல் செய்யும்பணி "
"அந்த பெண்ணை அவன் கடத்தி கொண்டு போனது எங்கே?"
"பொக்கிஷ அறை இருக்கும் இடத்திற்கு அருகில்தான்."
"அந்தப் பகுதி யாரும் எளிதில் நுழைய முடியாதபடி கட்டுப்பாட்டுடன் இருக்க இவனோ புதியவன் காப்பாற்றியது சரி ஆனால் அங்கு வர வேண்டிய அவசியம் என்ன?
எப்படி வந்தான்? எதற்காக வந்தான்?
மேலும் அவனைப் பற்றிய தகவல்களும் சரி இல்லை."
"ஜாம்பவதி உன் அறிவு அபாரம் .ரேவா துர்க்த்திலிருந்து வர வேண்டிய பொன்னில் பாதி வந்துவிட்டது. மீதி பணி முடிந்ததும் தந்து விடுவதாக ஒலை அனுப்பி இருக்கின்றனர். "
".பல்லவ தேசத்தை சேர்ந்த வணிகக் கப்பல்கள்
லங்க சுகாவிலிருந்து புறப்பட்டு விட்டன.
அறிவிப்பு வந்துவிட்டது கலத்தை பற்றிய தகவலும் வந்து நர நாரைகள் மூலம் வந்து விட்டது."
என்றாள் ஜாம்பவதி
தடாகக் கரையில் உலவலாம் ….
லங்க சுகா ஸ்ரீவிஜயம் இணைக்கப்பட்டது 7ம் நூற்றாண்டில் பிற்பகுதியில் ஸ்ரீவிஜயம் என்பது இந்தோனேஷியா, மலாய், பாலி, ஜாவா, சுமத்திரா போன்ற பகுதிகள் இணைத்து
உருவாக்கப்பட்ட அரசு,ரேவா துர்க்கம் என்பது கோவாவின் மற்றோரு
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.