பகுதி 3
அவர்கள் கிராமம் ஒரு வானம் பார்த்த பூமி. மழை பெய்தால் பயிர்கள் தழைத்து வளரும். மழை இல்லை என்றால் உப்பு விளையும். இந்த வருடம் கடவுள் கண் திறந்து, அதில் கொஞ்சம் எல்லாமே பசுமையாக தெரிந்தன.
ஊருக்கு மத்தியில் இருந்தது இந்த கோயில். காமாட்சியம்மன் நடுவில் வீற்றிருக்க, இரண்டு பக்கமும் மாடசாமியும் கருப்பசாமியும் காவல் வீற்றிருந்தார்கள். இன்னும் சில நாட்களில் கும்பாபிஷேகம். அதற்கான வேலைகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தன.
சந்தானம் அந்த ஊர் பெரிய மனிதர். பண்ணைக்காரர். எல்லோரையும் வேலை வாங்கிக் கொண்டிருந்தார். இந்தக் கோவில் திருவிழா எப்பொழுதுமே களை கட்டும். இந்த ஊரில் பூர்வீகம் கொண்டிருந்த பல குடும்பங்கள் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பிழைப்பு தேடி சென்று, அங்கு செழிக்க, அதற்கு இந்த கிராம தேவதையின் அருள்தான் காரணம் என்று ஒரு நம்பிக்கை. வருடம் ஒருமுறை வந்து திருவிழாவை நல்லபடியாக நடத்துவார்கள். சென்னை, மதுரை, கோவை, இன்னும் வெளி மாநிலங்களில் கூட சில குடும்பங்கள் இருந்தன. அந்தத் தலை கட்டுகளில் எல்லாம் பெரிய தலை பரந்தாமன் குடும்பத்தினர். சில தலைமுறைகளுக்கு முன் சென்னை சென்று தொழில் தொடங்கி, அது செழித்தோங்க, அவர்கள் குடும்பத்தினர் வழிவழியாக இந்த கோவில் நடப்பு மற்றும் விழாக்களுக்கு முக்கிய கொடைக்காரர்கள். இந்த கும்பாபிஷேகத்திற்கும் கிட்டத்தட்ட முழுமையாக பணப் பொறுப்பை ஏற்றிருந்தார். ஊர் பெரியவர்களிடம் நல்ல மரியாதை.
“பரந்தாமன் சார் மட்டும் தான் வந்திருக்கிறார் போல?”
“பரந்தாமனின் மனைவி தேவகி அம்மாவுக்கு, பத்து நாட்களுக்கு முன்னால் இதயத்தில் அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. பயணம் நல்லதல்ல என்று மருத்துவர் சொல்லிவிட்டாராம். அவருக்குத் துணையாக சுந்தரி அம்மாவும் இருப்பதால் சார் மட்டும் வந்திருக்கிறார். பயணத்தினால் அசந்து தெரிந்தார். நான் தான் கொஞ்சம் ஓய்வு எடுத்து விட்டு வரச் சொல்லியிருக்கிறேன்”
“பாத்துப்பா. வீட்டில் இருந்து வரும்போது துணைக்கு நம்ம பையன் யாரையாவது அனுப்பு. போன முறை வந்தப்போ தானே அவரை வழிமறிச்சாங்க?”
“ஆமாண்ணே. நினைச்சாலே ஆத்திரமாக வருது. பயபுள்ளைக, குடிக்க காசில்லைன்னா அம்மா நகையிலேயே கை வைக்கப் பாத்திருக்காங்களே!”
“நல்ல வேளை! அந்த நேரம் செல்லம்மா அந்த பக்கம் வந்தாங்க.”
“ம்ம். ஆமாம். ஆனால் அவருக்கும் உடம்பு சரியில்லை போல. போன வாரம் ஒரு கம்மலைக் கொடுத்துட்டு காசு வாங்கி போச்சி”
மரத்தடியில்உருண்டு கொண்டிருந்த இருவரில் ஒருவரை பார்த்து, “எப்படித்தான் இவன் செல்லம்மாவிற்கு மகனாக பிறந்தானோ? அங்க இவன் பிள்ளைக்காகத்தான் அது தன்னால் மருவுது” என்று வாய்விட்டு கூறினார்.
“எப்போ ரெண்டு வயசு பிள்ளையை தூக்கிட்டு காசைக் கொடு, இல்லை கழுத்தை நெறிச்சிருவேன்னு மிரட்டினானோ, அன்னைக்கே அந்த அம்மா இவனை தண்ணி தெளிச்சி விட்டுருச்சிப்பா”. வீட்டுலயே சேர்க்கிறது இல்ல. அப்பவும் போன வாரம் அந்த ராணியிடம் போய் காசு கேட்டு ஒரே சண்டை.”
கோயிலைச் சுற்றி விழாவிற்கு வருபவர் உட்கார ஓலை வேய்ந்து கொண்டிருந்தார்கள். ஓலை போடுபவர்களுக்கு நடுவில் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஓலையை ஒவ்வொருவராக போட்டி போட்டு எடுத்து வர, “மணி இதை ரகு அண்ணனிடம் கொடு! ஜோதி இதோ இதை, செந்தில் அண்ணாவிடம் கொடு!” என்று மத்தியஸ்தம் பண்ணிக் கொண்டிருந்தாள் பாரதி, நம் கதையின் நாயகி.
“என்னம்மா பாரதி, பாட்டி எப்படி இருக்காங்க?”
“இரண்டாவது தடவை மருந்து போட போயிருக்காங்க அண்ணா.”
“இன்னும் வரலையா?”
“போனமுறை பத்து நாளில் அனுப்பிட்டாங்க. இந்த முறை இன்னைக்கோட பதினைந்து நாளாச்சி.”
“அப்போ இன்னும் ரெண்டு நாளைக்கு எங்க வீட்டுக்கு வர முடியாதா?”
செல்லம்மா அவர்கள் வீட்டில் கூடமாட ஒத்தாசையாக இருப்பார்.
“வீட்டுக்கு வந்ததும் வருவாங்க அண்ணா.”
“ம்ம்ம்…”
மீண்டும் விளையாட்டை ஆரம்பித்தார்கள்.
பாரதி 10 வயது பெண். செல்லம்மாவின் பேத்தி. வேப்பங்குச்சியில் பச்சை மாறி காப்பி நிறம் கலக்கும் இடத்தில் ஒரு நிறம் வருமே அந்த நிறம். பெரிய கண்கள். சிரித்தால் என்னோடு சிரியேன் என்று அழைக்கும் தெளிவான கண்கள், லட்சணமான முகம்.
விளையாடி களைத்து, வீடு வரும்போது வீட்டு வாசலில் படுத்திருந்த பாட்டியை பார்த்ததும், “பாட்டி!” என்று ஓடி கட்டிக்கொண்டாள்.
இரண்டு வாரங்களாக செல்லம்மா இல்லாத நேரத்தில் நடந்ததையெல்லாம் ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தாள்.
இரவு, “சித்தி வீட்டுக்கு போய் சாப்பிட்டு வருகிறாயா?” என்று பாட்டி கேட்ட போது, “வேண்டாம்!” என்று சொல்லதான் வாயெடுத்தாள். ஆனால் களைத்திருந்த பாட்டியின் முகத்தைப் பார்த்ததும் குனிந்து, “சரி பாட்டி” என்று பாட்டிக்கு சாப்பாடு எடுத்து வர பாத்திரம் எடுத்து சென்றாள். இவர்கள் எதிர்வீடு தான் சித்தி வீடு.
ஆனால் இந்த முறை மருத்துவமனையிலிருந்து வந்து மூன்று நாட்களாகியும் இதே நிலைதான் தொடர்ந்தது. பாட்டியால் எழுந்து வேலை செய்ய முடியவில்லை. போன முறை வீடு வந்த போது எப்போதும் போல செய்தார். இந்த முறை இருமலும் அதிகம்.
“பாட்டி! மறுபடியும் ஆஸ்பத்திரிக்கு போலாமா?.. ரொம்ப இருமல் இருக்கே?”
“அது, இன்னும் ஒரு வாரத்தில் உனக்கு பரிட்சை முடியுதுல்ல. முடிந்ததும் உன்னையும் கூட்டிட்டு போறேன்.”
முகம் மலர, “சரி பாட்டி! நான் போய் கொஞ்ச நேரம் விளையாடிட்டு வர்றேன்” என்று ஓடினாள்.
எப்போதையும் விட அரைமணிநேரம் முன்னேயே இன்று பாரதி திரும்பி வந்தாள்,
“பாட்டி இன்னைக்கு நான் சோறாக்கவா?” என்றாள் தரையைப் பார்த்தபடி.
கண்கள் கூர்மையாக, “ஏன் அந்த சிறுக்கி ஏதாவது சொன்னாளா?..”
“இல்லை பாட்டி. சித்தி ஒண்ணும் சொல்லலை. நான்தான். எனக்கும் சமைக்கணும்னு ஆசையா இருக்கு.”
“இந்த வயசுல எப்படிம்மா நெருப்புல வேலை செய்வ?”
“பாத்து பத்திரமா செய்றேன்.”
“அனல் அடிக்குமே! சூடு தாங்க மாட்டியே!”
“அதெல்லாம் செய்ய செய்ய சரியாயிடும் பாட்டி.”
“அப்படின்னு அவள் சொன்னாளா?”
“அச்சச்சோ. அவங்க சொல்லலை.” முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு, “போ பாட்டி!” என்று கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த யூனிபார்மை மடிக்கலானாள்..
“சரி இரு. ஒரு ஆழாக்கு அரிசி தானே. பாட்டி கழுவி வைக்கிறேன்.” என்று கூறியவாரே எழுந்தவர், கால்கள் தடுமாற பக்கத்திலிருந்த தூணை பிடித்து மூச்சை உள்ளே இழுத்து விட்டார்.
பாரதிக்கு கோபம் வந்தது. “பாட்டி! ஏன் இப்படி பண்றீங்க? வேண்டாம். நீங்க சமைக்க வேண்டாம். நானும் சமைக்கலை. சித்தி வீட்டில் போய் சாப்பிட்டுட்டு உங்களுக்கும் எடுத்துட்டு வரேன். சரியா?”
முகம் இன்னும் நீளமாக, தூக்குச் சட்டியை எடுத்து அதன் மூடியைத் தேட ஆரம்பித்தாள். அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த செல்லம்மா, பெரிய மூச்சு ஒன்றை வெளியிட்டு மெதுவாகப் பேசினார்.
“பாரதி! உனக்கும் வேணாம், எனக்கும் வேணாம். பாட்டி அஞ்சு ரூபா தாரேன். நம்ம ரெண்டு பேருக்கும் இட்லி வாங்கிட்டு வர்றியா?”
சட்டென்று முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிய, “என் செல்ல பாட்டி!” என்று ஓடி வந்து அவரை அணைத்தவள், கன்னத்திலும் முத்தமிட்டாள்.
சிரித்துக்கொண்டே, “சீச்சி கழுதை! என்னடி பண்ற! விடு!” “அதெல்லாம் முடியாது! என் செல்ல பாட்டியை நான் என்ன வேணும்னாலும் செய்வேன்,” என்று மீண்டும் ஒருமுறை அவரை அணைத்து விட்டு அவர் தந்த ஐந்து ரூபாயை தூக்கிக்கொண்டு கடைக்கு சிட்டாகப் பறந்தாள்.