அத்தியாயம்: 4
அபிராமி சொன்னது போல் சற்று நல்லதாக வேறு உடை எடுத்து போட்டு கொண்ட கீர்த்தனா கண்ணாடி முன்னாடி சென்று நின்றாள். முகம் கவலையில் சோர்ந்து இருந்தாலும், அந்த உடை அவளை சற்றே அழகாய் காட்டுவதாய் தோன்றியது.
அந்த எண்ணம் கீர்த்தனா முகத்தில் சின்னதாய் ஒரு புன்னகையை தோற்றுவிக்க "அனு... எனக்கு இந்த ட்ரெஸ் ஓகே வா?" என அனு பக்கம் திரும்பிய படி கேட்க,
"அடி பொலி.. தெய்வா" என்ற அனு கையில் செய்கையும், கண்ணில் மெச்சுதலையும் காட்ட, கீர்த்தனா முகத்தில் இன்னும் பெரிதாய் ஒரு புன்னகை.
அவள் புன்னகையை பார்த்து அனுவும் சேர்ந்து சிரிக்க, அதுவரை அங்கு ஆச்சி செய்த சோகம் அவர்கள் சிரிப்பில் அங்கிருந்து விடைபெற்று சென்றது.
அதன் பிறகு பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து பேசி சிரித்து கொண்டிருக்க, கொஞ்ச நேரத்தில் வெளியே கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
தொடர்ந்து வந்த காரின் சத்தத்தில் பெண்கள் இருவரும் ஜன்னல் வழியே வெளியே பார்க்க, மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்தவர்கள் அனைவரும் இறங்கிக் கொண்டிருந்தனர்.
'மாப்பிள்ளை எங்கே?' என்று அனுராகவியின் கண்கள் தேடியது என்றால், 'இதில் மாப்பிள்ளை யார்!' என்று தேடியது தெய்வ கீர்த்தனாவின் கண்கள்.
சற்று நேரம் உத்து பார்த்தும் இருவர் கண்ணிலும் மாப்பிள்ளை தென்படவில்லை. அதில் பெரிய சோகம் காரில் இருந்து இறங்கிய யாரும் மாப்பிள்ளைக்கு உரிய லச்சனத்தில் இருக்கவில்லை.
அதில் குழம்பி போன கீர்த்தனா "அனு இதுல யாரு பையன்? வந்திருக்கவங்கள்ல யாரும் பார்க்க மாப்பிள்ளை மாதிரி இல்லையே..!" என கேட்டபடி தன் ஆராய்ச்சி பார்வையை தொடர,
"அதான் எனக்கும் ஒன்னும் புரியலை தெய்வா. இப்போ வந்து இருக்கவங்கல்ல பாதி பேர் பொண்ணு பாக்க வந்துட்டு போனவங்க தான். பையனுக்கு அம்மா அப்பா தான் "எங்களுக்கு எல்லாம் ஓகே. ஒரு நல்ல நாள் பார்த்து பையனை கூட்டிட்டு பூ வைக்க வரோம்னு" சொல்லிட்டு போனாங்க" என கீர்த்தனாவிடம் கூறிய அனுராகவி
"அப்பறம் ஏன் மாப்பிள்ளையை கூட்டிட்டு வர்லை" என்று தனக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டாள்.
அதில் தெய்வ கீர்த்தனா, அனுவை வினோத பிரவியை போல் பார்க்க,
"என்னடி பார்வை இது!" என்ற அனு தெய்வ கீர்த்தனாவை முறைத்து பார்த்தாள்.
"சும்மா பார்த்தேன் டி. நீ உன் ஆளை தேடு" என்று கீர்த்தனா சொல்ல,
"தெய்வா எனக்கு என்னமோ பயமா இருக்கு டி..." என்றாள் அனுராகவி சற்றே பதட்டத்துடன்.
"ஏன்டி" என்று கீர்த்தனா கேட்க, "தெரியலை தெய்வா" என்றாள் அனு.
ஆம்... உண்மையாகவே அவளுக்கு ஏன் இந்த பயம் என்று தெரியவில்லை. மாப்பிள்ளை வரவில்லை என்றதும் ஒருவகை பயமும், பதட்டமும் அவளை சூழ்ந்துக் கொண்டது.
அதிலும் நேற்று மாலையில் இருந்து அவள் கண்ட கனவெல்லாம் கனவாகவே போனதில் எரிச்சல் உணர்வு தோன்ற அதுவரை இருந்த அவள் முகத்தின் பொலிவு சற்றே குறைந்து போனது.
அவள் கோபத்தை பார்த்து உள்ளுக்குள் சிரித்து கொண்ட கீர்த்தனா "ப்ச் இதுக்கெல்லாம் ஏன் டென்ஷன் ஆகுற அனு! எதும் அவசர வேலையா போய் இருப்பாங்க. கொஞ்சம் லேட்டா வருவாங்களா இருக்கும். இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகிட்டு" என அனுவை சமாதானம் செய்தபடி மீண்டும் ஜன்னல் பக்கம் பார்க்க, அவள் கண்ணில் பட்டான் சக்திதரன்.
அவனை பார்த்த அடுத்த நொடியே அவன் யார் என்று தெரிந்து விட கூடவே நேற்றைய அவனின் செயலும் அழையா விருந்தாளியாக நினைவு வந்து தொலைத்தது.
'இவன் ஏன் இங்கு வந்திருக்கிறான்' என்று கோபமும் யோசனையுமாய் அவனை பார்த்தவள் "அனு இந்த ரெட் ஷர்ட் போட்டவன் உங்க சொந்தமா?" என அனுராகவியிடம் கேட்க,
"யாரு தெய்வா?" என்று வெளியே எட்டி பார்த்த அனு "நம்ம சொந்தம் இல்லை. மாப்பிள்ளை வீட்டு ஆளு போல! ஏன் கேக்குற?" என்றாள் கீர்த்தனா முகத்தில் இருந்த கோபம் ஏன் என்று புரியாதவளாய்.
"நேத்து எங்கிட்ட ஒருத்தன் மோசமா பிகேவ் பண்ணான்னு நான் சொன்னேன் இல்ல! அது இவன் தான். சரியான தண்ணி வண்டி. சரியான திமிர் பிடிச்சவன்" என்று கீர்த்தனா முகத்தை சுழித்தபடி சொல்ல,
"நானே... மாப்பிள்ளை வர்லையேனு டென்ஷன்ல இருக்கேன். இவ வேற தண்ணி வண்டி தண்ணி இல்லாத வண்டினுட்டு. அவன் எவனாவோ இருந்துட்டு போரான். இப்போ அவனா நமக்கு முக்கியம்" என அனுராகவி கோபத்தில் சிடுசிடுத்தாள்.
அனு பேசிய விதம் கீர்த்தனாவிற்கு சிரிப்பை கொடுக்க "அதானே... நமக்கு தண்ணி வண்டியா முக்கியம்? மாப்பிள்ளை தான் முக்கியம்" என்று கீர்த்தனாவும் சிரிப்பை அடக்கிய படி கிண்டலாய் சொல்ல,
"கொஞ்ச நேரம் முன்னாடி வரைக்கும் அழுதுட்டு இருந்துட்டு இப்போ வந்து நக்கல் பண்ற பாரு. எல்லாம் என் நேரம்..." என்றாள் அனுராகவியும் பதிலுக்கு கடுப்புடன்.
"அதுக்காக எப்பவும் அழுதுட்டே இருக்க முடியுமா? சின்ன சின்ன விஷயத்துக்கும் சிரிக்க கத்துக்கணும். இல்லைனா நாமும் கல்லூ, மண்ணு மாதிரி ஜடம் ஆகிடுவோம்" என்ற கீர்த்தனா அனுராகவியின் முறைப்பில்,
"சரி அதை விடு. இப்போ என்ன? உனக்கு மாப்பிள்ளை ஏன் வர்லைனு தெரியனும்? அவ்வளவு தானே..? இரு இப்போ கேட்டுடுவோம்" என்று கூறியபடி கந்தையனுக்கு அழைத்தாள்.
அதில் சட்டென பதட்டமான அனுராகவி "ஏய்... என்னடி பண்ற?" என்ற படி அனு கீர்த்தனாவை தடுக்க,
"ஸ்... பேசாம இரு. நான் கேட்கிறேன்" என்று அவளை அடக்கிய கீர்த்தனா கந்தையன் அழைப்பை ஏற்க காத்திருந்தாள்.
அழைப்பின் கடைசி நொடியில் அழைப்பை ஏற்ற கந்தையன் "என்ன மக்ளே என்ன வேணும்? இங்க மாப்பிள்ளை வீட்டு ஆளுவ வந்தாச்சி கேட்டியா. எனக்கு வேலை நெறய கெடக்கு" என வேகமாய் பேச,
"நானும் பார்த்தேன் மாமா. ஆனா மாப்பிள்ளை யாருனு தான் எனக்கு தெரியலை. அதான் உங்ககிட்ட கேக்கலாமேனு கூப்பிட்டேன். மாப்பிள்ளை வர்லையா மாமா?" என்றாள் தெய்வ கீர்த்தனா.
"வந்து இருக்கார்லா. நீ பாக்கலியா! அவர் அம்ம பக்கத்துல இருக்காரு பாரு. ஆளு போட்டோல பாத்ததுக்கு கொஞ்சம் மாத்தமா தான் இருக்காவ. சேரி நமக்கு மொகமா முக்கியம் கொணம் தான் வேணும். தாடி எடுத்தா நல்லா இருப்பாவலா இருக்கும். சேரி மக்ளே எனக்கு சோழி கெடக்கு நான் வைக்கேன். நீங்க கிளம்பி இருங்க" என்ற கந்தையன் அவரின் எண்ணத்தையும் புலம்பலாக கீர்த்தனாவிடம் கொட்டி விட்டு அழைப்பை துண்டித்து விட,
அவரின் புலம்பலை கேட்ட பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். ஆனால் பார்வையின் அர்த்தம் வேறாக இருந்தது. தெய்வ கீர்த்தனா யோசனையுடன் பார்த்தாள் என்றால் அனு ராகவி பயத்துடன் பார்த்தாள்.
அவளுக்கு வந்திருந்த யாரும் போட்டோவில் பார்த்து போல் தோன்றவில்லை.
அப்படி இருக்க கந்தையன் மாப்பிள்ளை வந்திருப்பதாய் சொல்ல, 'யாராக இருக்கும்!' என்ற யோசனையுடனே சென்று 'மாப்பிள்ளை போட்டோ' என்று கந்தையன் அவளிடம் கொடுத்த போட்டோவை எடுத்து வந்து கீர்த்தனாவிடம் கொடுத்தாள்.
அதை வாங்கி பார்த்த கீர்த்தனாவிற்கு அந்த போட்டோவை பார்த்ததும் முதல் பார்வையிலேயே மாப்பிள்ளை யார் என்று தெரிந்து விட்டது.
சக்திதரனை நேரில், மிக அருகில் பார்த்திருந்த கீர்த்தனாவிற்கு அவனை எளிதில் அடையாளம் காண முடிந்தது. ஆனால் போட்டோவில் இருந்த சிரித்த முகம் தான் சிறிது யோசனையை கொடுத்தது.
போட்டோவில் பார்க்க, சக்திதரனின் முகம் பழக இனிமையானவன், எளிமையானவன் என்ற தோற்றத்தில் இருக்க 'இவன் எப்படி இப்படி!' என்ற யோசனையுடன் அனுவை பார்த்த கீர்த்தனா " இது தண்ணி வண்டி அனு" என்றாள் இன்னதென பகுத்தறிய முடியா உணர்வுடன்.
அதை கேட்ட அனுவிற்கு "திக்" என்று இருந்தது.
'நேற்றில் இருந்து கீர்த்தனா திட்டி தீர்த்தவன் தான் தனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை' என்ற உண்மை அனுவிற்கு ஒரு வகை பிடித்தமின்மையை கொடுத்தது.
அதிலும் கீர்த்தனா, சக்திதரனை திட்டும் போதெல்லாம் அவள் முகத்தில் வந்து சென்ற கோபத்தையையும், ஒவ்வாமையையும் , பார்த்து அனுவிற்கும் சக்திதரன் மீது அதே உணர்வு தோன்றி இருந்தது.
அப்படி இருக்க இப்போது அவன் தான் மாப்பிள்ளை என்பது அவளுக்கு பிடித்தமின்மையை கொடுத்து. அதில் அனுவின் முகம் தன் இயல்பாய் சுறுங்கி விட,
"தெய்வா... எனக்கு இந்த மாப்பிள்ளையை பிடிக்கலை. நான் அப்பாட்ட சொல்லிட போறேன்" என்றாள் பிடித்தமின்மையை முகத்தில் காட்டி ஒரு வித பிடிவாதத்துடன்.
அனு சட்டென இப்படி ஒரு முடிவு எடுப்பாள் என்று சிறிதும் எதிர்பார்க்காத கீர்த்தனா அனுவை அதிர்வுடன் பார்த்தாள்.
பெரியவர்கள் பார்த்து ஏற்பாடு செய்த நிகழ்வை அனு தன் பேச்சை கேட்டு நிராகரிப்பதும் சரியாக தோன்றவில்லை கீர்த்தனாவிற்கு. எனவே "அனு அவசரப்படாத மாமா கிட்ட பேசலாம்" என்று கீர்த்தனா சொல்ல,
"இனி பேச என்ன இருக்கு தெய்வா? என்னால எல்லாம் அந்த குடிகாரனை கல்யாணம் பண்ண முடியாது. அதுவும் இல்லாம நான் போட்டோல பார்த்து ஓகே சொன்ன பையனும் இவன மாதிரி இல்லை" என்றாள் அனுராகவி பிடிவாதத்துடன்.
சக்திதரன் தான் மாப்பிள்ளை என தெரிந்ததும் கீர்த்தனாவும் அவனை வேண்டாம் என்று கூற சொல்லி தான் சொல்ல நினைத்தாள், ஆனால் கந்தையன் பார்த்த மாப்பிள்ளை தான் சக்திதரன் என்னும் போது ... அவன் தப்பானவனாய் இருக்க வாய்ப்பு இருப்பதாய் தோன்றவில்லை.
அனுவிற்கு என்று வரும் போது கந்தையனின் செயலில் அத்தனை தெளிவு இருக்கும். இதை கீர்த்தனாவே பல முறை கண்கூடாக பார்த்திருக்கிறாள். அப்படி இருக்க அவரின் தேர்வான சக்திதரன் தப்பானவனாய் இருப்பான் என்றும் தோன்றவில்லை.
அதே நேரம் சக்திதரனின் செயலை நேரில் பார்த்தவளால் 'அவனை திருமணம் செய்து கொள். பெரியவர்கள் பேச்சை கேள்' என்றும் அனுவிடம் சொல்ல முடியவில்லை.
'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பது போல் ஒருவரின் செயல் அவரின் குணத்தின் வெளிப்பாடு அல்லவா! அப்படி இருக்க சக்திதரனின் செயல் அவன் குணமாக தான் தோன்றியது.
ஆனாலும் அவளுக்கு கந்தையனை தெரிந்த அளவு சக்திதரனை தெரியாது என்பதால் கந்தையன் அவனை விசாரிப்பதில் ஏதும் தவறு செய்து விட்டாரோ! இல்லை மாப்பிள்ளை வீட்டில் அவன் குடிப்பதை மறைத்து விட்டார்களோ! என்றெல்லாம் மனதிற்குள் ஒரு எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது.
எண்ணத்தின் முடிவில் சக்திதரன் எப்படி இருந்தாலும், அவன் நல்லவனாகவே இருந்தாலும், ஒரு குடிகாரன் அனுவிற்கு வேண்டாம் என்று கீர்த்தனா முடிவிற்கு வர, அனு கோபமாய் சென்று கட்டிலில் அமர்ந்தாள்.
அவள் அசைவில் சுயம் பெற்ற கீர்த்தனா "இதை பத்தி மாமாகிட்ட பேசுவோமா அனு?" என்று கேட்க,
"இப்போ சொன்னா அப்பா என்னை கன்வீன்ஸ் பண்ண தான் பார்ப்பாங்க தெய்வா. சோ வேண்டாம். நான் எப்படி சொல்லனுமோ அப்படி சொல்லிக்கிறேன்" என்றாள் அனு உறுதியுடன்.
கீர்த்தனாவிற்கும் அனு சொல்வதே சரி என்று தோன்ற, அவள் முடிவையே ஆமோதித்தாள்.
ஆனால் அதுவரை உறுதியாக இருந்த அனுவிற்கு அதன் பிறகே பயம் பிடித்து கொண்டது. அவர்கள் முடிவு யாரையெல்லாம் பாதிக்குமோ! என்ன பிரச்சனை வருமோ! எத்தனை பேரிடம் திட்டு வாங்க போகிறோமோ!என்றெல்லாம் நினைத்து பயத்தில் நடுங்கி போனவர்கள், தங்களுக்குள் மாறி மாறி ஒருவரை ஒருவர் சமாதானம் செய்து, தைரியம் கொடுத்து என்று பேசி கொண்டிருக்க, அங்கே சபையில் பெண்ணை அழைத்து வரும் படி கூறி இருந்தனர்.
அபிராமி வந்து அனுவை அழைத்து செல்ல, பயமும், பதட்டமுமாய் அவருடன் சென்றாள் அனு ராகவி.
என்ன தான் சக்திதரனை பிடிக்கவில்லை என்று முடிவெடுத்து விட்டாலும், அதை எப்படி அத்தனை பேர் முன்னிலையில் கூறுவது? என்ற தயக்கம் அவளை ஆட்டுவிக்க பொம்மை போல் அபிராமியுடன் சென்றாள் அனுராகவி.
அனுவை தொடர்ந்து ஹாலுக்கு வந்த கீர்த்தனாவின் முகம் சக்திதரனை பார்த்ததும் தன்னியல்பாய் கோபத்தை தத்தெடுக்க, அதை கவனிக்க வேண்டியவனோ போனில் பார்வையை பதித்திருந்தான்.
ஹாலில் இருந்த இரு பக்க உறவினர்களும் தங்களுக்குள் உறவை வளர்க்கும் விதமாய் அன்பாய் பேசி கொண்டிருக்க, அனுவை பார்த்ததும் கோமதி அன்பாய் புன்னகைத்தார்.
ஆனால் மனதில் குற்ற உணர்வுடன் இருந்த அனு தலையை குனிந்து கொண்டாள்.
சத்யா இப்போது தான் முதல் முறை அனுவை பார்ப்பதால் "அம்மா பொண்ணு நல்லா இருக்காங்க. ஆனா ஏன் டல்லா இருந்த மாதிரி இருக்கு" என்று கோமதியிடம் கிசுகிசுப்பாக கேட்க,
'தெரியவில்லை' என்னும் விதமாக தலை அசைத்த கோமதி "என்ன மோளே எதுக்கு பதட்டமா இருக்க? இதுல பயம் கொள்ள ஒன்னும் இல்ல கேட்டியா? இவன் தான் என் பையன்" என்று அவர் அருகில் அமர்ந்திருந்த சக்திதரனை காட்டினான்.
அவர் சொல்லுக்காக சற்றே நிமிர்ந்து சக்திதரனை பார்த்த அனுவின் கைகல் பதட்டத்தில் நடுங்க, ஆதரவாய் அவள் கைகளை அழுத்த பற்றி கொண்ட கீர்த்தனா "பயப்படாம இரு அனு... எல்லாரும் உன்னை தான் பார்க்குறாங்க" என்று அனுவை எச்சரிக்க,
"நான் பிடிக்கலைனு சொன்ன அப்பறம் இவங்க எல்லாம் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு நினைச்சா ரொம்ப பயமா இருக்கு தெய்வா" என்றாள் அனு மிக மெல்லிய குரலில்.
"எல்லாரும் கோப படுவாங்க தான். ஆனா இதை விட்டா நமக்கு வேற வழி இல்லை அனு. பூ வச்ச அப்பறம் நம்மால ஒன்னும் பண்ண முடியாது. இப்போவே உன் முடிவ சொல்லிட்டா இரண்டு நாள்ல அதை மறந்துட்டு அவங்கவங்க வேலையை பார்க்க போய்டுவாங்க .ஆனா சொல்லாம விட்டா நீ தான் லைஃப் லாங் கஷ்ட படனும் அனு" என தெய்வ கீர்த்தனா சொல்ல,
ஆமோதிப்பாய் தலை அசைத்த அனுராகவி அதன் பின் சற்று திடத்துடனே தான் நின்றாள்.
பெரியவர்களுக்கு இடையில் சில பேச்சு வார்த்தை நடக்க, அது முடியும் தருவாயில் மாப்பிள்ளை வீட்டார் ஒருவர் "என்னலே முக்கியமான விஷயத்த கேட்காம மத்த விஷயத்த கேட்டுட்டுகிடக்கிங்க. பெண்ணுக்கு பையன பிடிச்சிருக்கா மொத கேளுங்க" என்றவர்,
"என்ன பிள்ளா ஒனக்கு எங்க பையன புடிச்சிருக்கா?" என்றார் அனைவரும் கேட்கும் விதமாக.
அதில் அங்கிருந்தோர் பலரின் பார்வையும் அனுராகவியின் மீது பதிய அவர்களை சங்கட பார்வை பார்த்த அனு திரும்பி கந்தையனை பார்த்தாள்.
அவரும் மகளின் பதிலுக்காக அவளை புன்னகையுடன் பார்க்க 'இல்லபா என்னக்கு வேண்டாம்' என்று அனு மறுப்பாய் தலையசைக்க, கந்தையன் சற்று அதிர்ந்து தான் போனார்.
அனு பிடித்திருக்கிறது என்று சொன்ன பிறகு தான் மாப்பிளையை பற்றியே விசாரிக்க தொடங்கினார் கந்தையன்.
அதன் பிறகே மற்ற நிகழ்வுகள் எல்லாம் அரங்கேறி இருக்க, அனு சபையில் வைத்து சக்திதரனை மறுத்தது அவருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
அனுவின் பதிலில் மாப்பிள்ளை வீட்டிரும் அதிர்ந்து தங்களுக்குள் பேசி கொள்ள தொடங்க,
அனு சொன்னது உண்மை தானா என்று அறிய நினைத்த கந்தையன் "என்ன மோளே! என்ன சொல்ல வர" என்று கேட்டார்.
அவர் கேட்கவும் "எனக்கு மாப்பிள்ளையை பிடிக்கலைப்பா" என்றாள் சற்றே குரலில் அழுத்தம் கூட்டி அதே நேரம் உறுதியுடன்.
அனுவின் பேச்சில் கந்தையன் அதிர்ந்தார் என்றால், அதுவரை செல்போனில் கவனத்தை பதிந்திருந்த சக்திதரனும் நிமிர்ந்து அனுவை மெச்சுதல் பார்வை பார்த்தான்.
அவன் வீட்டின் நடந்த அரசியல் தெரியாமல் இங்கு வந்து உறவினர்கள் மூலம் அருணாச்சலத்தின் திட்டம் தெரிந்து முகம் இறுக தன் நேரத்திற்காக காத்திருந்தவனுக்கு அனுவின் பதில் மிக பெரிய சர்ப்ரைஸ்.
இந்த பெண் பார்க்கும் நிகழ்வு கோமதியின் ஏற்ப்பாடு என்று நம்பி பெண் பார்க்கும் எண்ணத்தில் மட்டுமே சக்திதரன் அங்கு வந்திருந்தான்.
பெண் பார்ப்பதின் மொத்த செயலும் கோமதியுடையது, அருணாசலம் இதில் கடுகளவு இல்லை என்று நம்பி பெண் பிடித்திருந்தாள் திருமணம் செய்யும் எண்ணத்தில் வந்தவனை உறவினர்களின் பேச்சு திசை திரும்பி இருந்தது.
ஆம்... இது முழுக்க முழுக்க கோமதியின் ஏற்ப்பாடு என நம்பி வந்தவனுக்கு "அருணாச்சலம் அண்ணன் வராமா.. எப்படி மா பூ வைக்குறது!" என்று உறவினர் ஒருவர் கோமதியிடம் கேட்டது அச்சி பிசங்காமல் அவன் காதில் விழுந்திருந்தது.
அதன் பிறகே வீட்டினரின் விளையாட்டு புரிய, அவனும் கொஞ்சம் விளையாட நினைத்து அதற்கான நேரத்திற்காக அமைதியாக காத்திருக்க, அனு அவன் விளையாட்டில் தண்ணீரை ஊற்றி இருந்தாள்.
அனுவின் திடமான பதில் சக்திதரனை கவர தான் செய்தது. ஆனால் அவள் அருணாசலம் பார்த்த பெண் என்பதால் அந்த பிடித்தத்தை ஒதுக்கி வைத்தவன் மெச்சுதலாய் அவளை பார்க்க, அப்போது தான் அனுவின் கைகள் பயத்தில் நடுங்குவதையும், அதை ஒரு கரம் அழுத்த பற்றி தைரியம் கொடுப்பதையும் கவனித்தான்.
'பாருங்கப்பா இங்க நெறய வீரச்சி இருப்பாங்க போலயே' என நினைத்தபடி அந்த கைகளுக்கு உரியவளை பார்க்க, மீண்டும் ஒரு முறை சக்திதரன் கண்ணில் விழுந்தாள் தெய்வ கீர்த்தனா.
சட்டென கீர்த்தனாவை சக்திதரனுக்கு அடையாளம் தெரியா விட்டாலும், அவளின் பார்வை அவனை உற்று நோக்க வைக்க, அவள் யாரென புரிந்த நொடி, அவள் இதழ்கள் வஞ்சத்தில் சிரிக்க அவன் மூளை சில யோசனைகளை கொடுத்தது.
நேற்று இரவு பார்த்த நொடியில் இருந்து தன்னை முறைத்து கொண்டும், தவறாக நினைத்து கொண்டு இருப்பளின் மீது கொஞ்சம் கோபமும் இருக்க,
அதை வெளிப்படுத்தும் விதமாய் கீர்த்தனாவை அலட்சியத்துடன் பார்த்தவன் "அக்காவுக்கு பிடிக்கலைனா என்ன! அதான் தங்கை இருக்காளே அந்த பெண்ண எனக்கு பிடிச்சிருக்கு அவளை கட்டி தாங்க" என்றான் சக்திதரன் வெகு சாதாரணமாய்.
சக்திதரனின் இந்தகைய பேச்சை எதிர் பார்க்காமல் அங்கிருந்த அனைவரும் திகைத்து நிற்க "லேய் ஒனக்கு கோட்டி பிடிச்சி போச்சா? என்ன பேசுதனு மண்டையில நிக்கலையா? பேசாம இரு" என்றார் கோமதி அதட்டலாய்.
"ஏ.. இதுல என்ன பிரச்சனை? அந்த பெண்ணு பிடிக்கலைனு சொல்லுது. ஏன் பிடிக்காத பெண்ண கட்டாய படுத்தனும். எனக்கும் அந்த பெண்ண விட இந்த பெண்ணை பிடிச்சிருக்கு அதான் கேட்டேன்" என கோமதியிடம் கூறியவன்
"இந்தா குட்டி ஒனக்க பேரு என்ன?" என்றான் கீர்த்தனாவிடம் அதட்டல் தோனியில்.
அவனின் தங்கை என்ற சொல்லில் அனுவின் அருகில் நின்ற கீர்த்தனா எளிதாக அனைவர் கண்ணிலும் விழுந்திருக்க, இப்போது அவனின் நேரடி பேச்சில் இன்னும் தெளிவாக கீர்த்தனா அடையாளம் காணப்பட்டாள்.
சக்திதரனின் பேச்சில் கடும் கோபத்துடன் அவனை பார்த்த கீர்த்தனா அதே கோபத்துடன் அவனுக்கு பதில் சொல்ல போக "தெய்வா நீ உள்ள போ" என்றார் அவளை பேச விடாமல் தடுத்து.
"அம்மா அந்த ஆளை எனக்கு..." என்ற கீர்த்தனா மீண்டும் ஏதோ சொல்ல போக, "உன்னை உள்ள போன்னு சொன்னேன் தெய்வா. நான் பேசிக்குறேன் நீ போ. அனு நீயும் உள்ள போ. இனி நாங்க பெரியவங்க பேசிக்குறோம்" என்றார் அபிராமி சற்றே கோபம் எட்டி பார்க்க,
அனுராகவியும் இது தான் சமயம் என தெய்வகீர்த்தனாவை அழைத்துக்கொண்டு உள்ளே சென்று விட, ஹாலில் கத்தலும் கூச்சலுமாய் நிறைய சத்தம். இரு வீட்டாருக்கும் இடையில் ஏதோ சண்டை நடப்பது பெண்கள் இருவருக்கும் புரிந்த போதும்... அமைதியாக இருந்து கொண்டனர்.
சற்று நேரத்தில் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைய, அதன் பிறகு பேச்சு சத்தம் மட்டுமே கேட்க, அங்கே என்ன நடக்கிறது என்று புரியாமல் பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
இப்படியே நிமிடங்கள் கடக்க அடுத்த சில நிமிடங்களில் கார்கள் கிளம்பி செல்லும் சத்தமும் கேட்டது.
அதில் சக்திதரன் வீட்டினர் கிளம்பி விட்டது புரிய "அப்பாடி போய்ட்டாங்க, ஆனா என்ன பொறலிய கெளப்புனாங்க தெரியல. நீ சொன்னது சரிதான் கேட்டியா! எப்படி எவ்வளவு பேரு முன்னுக்க இந்த பெண்ண கட்டி தாங்கனு கேக்குறான். நல்ல நேரம் நான் தப்பிச்சேன்" என அனுராகவி நிம்மதி பெருமூச்சுடன் சொல்ல,
சக்திதரன் தன்னை பிடித்திருக்கிறது என்று சொன்னதில் அவன் மேல் கடும் கோபத்தில் இருந்த கீர்த்தனாவும் "அவன் சரியான பொறுக்கி அதான் அவன் புத்தியை காட்டிட்டான்" என்றாள் அதீத கோபத்துடன்.
இவர்கள் இருவரும் பேசி கொண்டிருக்கும் போதே கோபமாய் உள்ளே வந்த அபிராமி "தெய்வா கிளம்பு நாம ஊருக்கு போறோம்" என்றவர் அவர்கள் உடைகளை எடுத்து வைக்க தொடங்க,
"ஏன் மாமி? என்ன ஆச்சி? அவங்க ஏதும் பிரச்சனை பண்ணாங்களா?" என்று கேட்டாள் அனு தயக்கத்துடன்.
"ஒன்னும் ஆகல அனு. கொஞ்சம் அவசரம். அதான் நாங்க கிளம்புறோம்" என்று அவள் முகம் பார்க்காமல் சொன்ன அபிராமி, அவர்களை வேடிக்கை பார்த்தபடி நின்ற தெய்வாவிடம் "கிளம்பு டி. ஒரு முறை சொன்னா உனக்கு புரியாதா?" என்றார் மீண்டும் அதட்டலுடன்.
"நான் கிளம்பி தானேமா இருக்கேன். இதுக்கு மேல என்ன செய்யனும்? போகனும்னா போலாம்..." என்று கீர்த்தனா சொல்ல,
"அப்பாவை போய் கிளம்ப சொல்லு போ..." என்றார் அடுத்ததாய்.
கீர்த்தனாவிற்கு அங்கே என்ன நடந்தது என்று புரியவில்லை என்றாலும் ஏதோ பிரச்சனை என்று மட்டும் புரிந்தது. ஆனால் அதை பற்றி பேசும் இடம் இது இல்லை என்று புரிந்தவள் அனுவிடம் 'போய்ட்டு வருவதாய்' கூறி விட்டு அமைதியாக கிளம்பி விட்டாள்.
அவர்கள் கிளம்பி சென்ற சற்று நேரத்தில் அனுவின் அறைக்கு வந்த கந்தையன் "என்ன அனு ஒனக்க விருப்பம் கேட்டுதானே நான் அவங்களை வர சொன்னது? நீ ஏன் அப்படி பண்ண பிள்ளா?" என்று வருத்தத்துடன் கேட்க,
"அந்த பையன் நல்ல பையன் இல்லையாப்பா" என்ற அனு நடந்ததை கூறினாள்.
"நீங்க எல்லாம் படிச்ச பிள்ளேலுவ தானே! ஒருத்தரை ஒரு செயல வச்சி எப்படி அவிய அப்படி தான்னு முடிவு பண்ணுவிய. சின்ன பிள்ளைவ செயல்ங்குறது செரியாதான் இருக்கு" என்று கோபமும் ஆற்றாமையுமாய் கூறிய கந்தையன் அருணாசலத்திற்கு அழைப்பு விடுத்த படி அங்கிருந்து செல்ல,
அங்கு அருணாசலமோ கோமதியிடம் ருத்ர தாண்டவம் ஆடி கொண்டிருந்தார்.
தொடரும்....