அத்தியாயம் 6
மலர்கள் மொட்டவிழ்ந்து மணம் பரப்பும் அதிகாலை நேரத்தில்…
மாமரத்துக் குயிலின் இனிய கானத்தில் மெதுவாகக் கண் விழித்துப் பார்த்தாள் காயத்ரி…
ஒரு நொடியில் தான் புது இடத்தில் இருப்பதைப் புரிந்து கொண்டாள்…
ஆனால் இரண்டு கைகளையும் அவளால் தூக்க முடியவில்லை…
என் கைகளுக்கு என்னவாயிற்று என யோசித்தவள்…
மெல்லத் தலை திருப்பிப் பார்த்தாள்...
அவளது வலது கையைப் பிடித்தபடி கஸ்தூரியும் இடது கையைப் பிடித்தபடி பல்லவியும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்…
மெல்லிய புன்னகை பூத்தவள் இருவர் கரத்தையும் மெதுவாக எடுத்து விட்டு ஓசைப் படாமல் எழுந்து சென்றாள்…
வாசலில் நின்று மீண்டும் திரும்பிப் பார்த்தாள்…
பல்லவியின் குழந்தைத்தனமான முகமும் கஸ்தூரியின் பெரியமனுஷித் தனமான முகமும் அவளை அமைதி கொள்ளச் செய்தது…
தொலைந்து போன ஒன்று இனிமேல் பார்க்கவே முடியாது என்றிருந்த ஒன்று மீண்டும் கண் முன்னே தோன்றும் போது மனமது எப்படிக் குதியாட்டம் போடும்…
பல்லவியைப் பார்த்ததும் அத்தகையதொரு நிலையில் இருந்தாள் காயத்ரி…
ஆனாலும் முன்பு இருந்ததைப் போல இல்லாமல் அவள் இப்படி மாறியதற்குக் காரணம் தான் என்ன?
இந்தக் கேள்வி தான் மரங்கொத்தியாகி மனத்தைத் துளையிட்டுக் கொண்டிருந்தது...
மெதுவாக வெளியே தனது பார்வையை ஓட விட்டாள்…
அதிகாலை நேரத்தில் தோட்டத்திலிருந்து வரும் சுகந்தமான தென்றல் அவளை வருடிச் சென்றது…
என்றுமில்லாத புத்துணர்வு அவளுள் உருவானதை அவள் இனிதாக இரசிக்கத் தொடங்கினாள்…
எத்தனை நேரம் அப்படியே நின்றாளோ தெரியவில்லை…
“அக்கா” என்ற கஸ்தூரியின் குரலில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்…
கஸ்தூரியும் பல்லவியும் அப்போது தான் துயில் நீங்கி எழுந்திருந்தார்கள்…
அந்த நேரத்தில் அங்கு வந்த சூரியனின் சித்தி “பல்லவி” என்றழைத்தார்…
எவ்வித அசைவும் இல்லாமல் அமைதியாக அமர்ந்து இருந்தாள் பல்லவி…
அதனைப் பார்த்த காயத்ரி “நீங்கள் போங்கள் நாங்கள் அழைத்து வருகிறோம்” எனச் சொல்ல அவரும் போய் விட்டார்…
மெதுவாகப் பல்லவியின் அருகில் சென்றவள்
பல்லவியின் முகத்தை லேசாக நிமிர்த்தி அவளது விழிகளுக்குள் பார்த்தாள்...
“அனூ” என்று அவளது உதடுகள் உச்சரித்தன…
பதிலுக்கு அவள் அமைதியாக இருப்பாளோ என்று கஸ்தூரி நோக்கினாள்…
ஆனால் பல்லவியிடமிருந்து “ம்ம்ம்” என்ற சத்தம் கேட்டது…
மீண்டும் “அனூ” என்றதற்குக் காயத்ரியின் முகத்தை நிமிர்ந்து பார்த்துப் புன்னகை செய்திருந்தாள் பல்லவி…
அவளது புன்னகை முகம் பார்த்த காயத்ரிக்கு வானத்தில் பறப்பது போன்றதொரு உணர்வு…
“அக்கா… அக்கா… பாருங்களேன்… அனு அக்காவிற்கு எங்களைத் தெரிகிறது…”
“உண்மை தானடி”
“எங்களுடன் இனியாவது பேசுவார்களாக்கா”
“பேசுவாள் பேச வேண்டும்”
என்றாள் காயத்ரி கண்ணில் நீருடன்…
“அக்கா… அனு அக்கா இப்படிச் சிரிப்பதே முன்னேற்றம் தானே”
என்றாள் கஸ்தூரி தானும் கண்ணைத் துடைத்தபடி…
பல்லவியைக் குளிப்பாட்டி உடை அணிவித்து விட்டு, அவளுக்கு உணவை ஊட்டுமாறு கஸ்தூரியிடம் சொன்னவள்…
மெதுவாக வெளியே சென்றாள்…
இந்த நேரத்தில் சூரிய வர்மன் தனியாகவே இருப்பான் என்பதைக் கணித்தவள் பெரிய வீடு நோக்கிச் சென்றாள்…
தோட்டத்து வீட்டிலிருந்து வெளியே வந்த காயத்ரி தங்கள் வீடு நோக்கி வருவதனை சாளரத்தின் வழியே பார்த்தான் சூரிய வர்மன்…
அவள் ஏன் வருகிறாள் என்பதைப் புரிந்து கொண்டவன் மெதுவாக வரவேற்பு அறையில் வந்து அமர்ந்து கொண்டான்…
வீட்டு வாசலில் வந்து உள்ளே எட்டிப்பார்த்தாள் காயத்ரி
“இங்கே தான் இருக்கிறேன் உள்ளே வாருங்கள்”
“நான் உங்களைத் தேடித் தான் வந்தேனென்று உங்களுக்கு எப்படித் தெரியும்”
“எல்லாம் ஒரு ஊகம் தான்”
“ஊகமா? அப்படி எதை ஊகித்தீர்கள்”
“முதலில் வந்து அமருங்கள்… இப்போதைக்கு இங்கே யாரும் வர மாட்டார்கள்”
“நன்றி”
“பரவாயில்லை”
“அப்படியென்றால் நான் வந்த விஷயம் உங்களுக்குத் தெரியுமா?”
“முழுமையாகத் தெரியாது… ஆனால் பல்லவி பற்றிப் பேசத்தான் வைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்”
“உண்மை தான்”
“சரி என்ன கேட்க வேண்டும் நான் என்ன சொல்ல வேண்டும்”
“பல்லவிக்கு ஏன் இந்த நிலை என்று சொல்ல முடியுமா”
“பல்லவி தொடர்பான விஷயங்களை என் அண்ணனால் தான் கூற முடியும்... மன்னிக்க வேண்டும் என்னால் எதுவும் கூற முடியாது”
என்றான் சூரியன் வேண்டுமென்றே…
அதை அறியாதவளாகி
“உங்கள் அண்ணனுக்கு மட்டும் தான் தெரியுமா? சரி நான் அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்”
என்றாள் காயத்ரி…
அவளை ஏறெடுத்துப் பார்த்தவன்
“ஆனால் அண்ணா இப்போது இங்கே இல்லை… இன்றிரவு தான் வருவதாகச் சொன்னான்”
“அப்படியா அவர் வந்ததும் என்னிடம் சொல்லுங்கள்… நான் அவரைப் பார்க்க வேண்டும்…”
என்றவாறு எழுந்து சென்றாள் காயத்ரி...
காயத்ரி செல்வதையே பார்த்துக் கொண்டு இருந்த சூரியன்...
“அவரைப் பார்க்க வேண்டுமா? நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள வேண்டும் அதற்காகத் தானே நான் இவ்வளவு பாடுபடுகிறேன்”
என மனதினுள் பேசிக் கொண்டான்…
காயத்ரி சென்றதும் தன் அலைபேசியை எடுத்துத் தன் அண்ணனுக்கு அழைத்தான்…
எதிர்முனையில் அண்ணனின் குரல் கேட்டதும்
“எப்போது அண்ணா இங்கே வருகிறாய்… எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வரப் பார்”
என்றவன் தமையன் பதில் சொல்லுவதற்கு முன்பே அழைப்பைத் துண்டித்தான்…
“உனக்கு மட்டுமாடா பேசிக் கொண்டு இருக்கும் போதே பதில் சொல்ல முன்பு அழைப்பைத் துண்டிக்கத் தெரியும்… எங்களுக்கும் தெரியும்”
எனத் தனக்குத் தானே சொல்லியபடி எழுந்து சென்று விட்டான் சூரிய வர்மன்…
மாலை மயங்கி மெதுவாக இருள் சூழும் நேரம் சூரியவர்மன் வாயிலைப் பார்ப்பதும் அலைபேசியைப் பார்ப்பதுமாக அங்குமிங்கும் நடை பயின்று கொண்டிருந்தான்…
தன் வேலைகளை முடித்து மீண்டும் அவ்விதமே வாசலைப் பார்த்தபடி நடக்கத் தொடங்கினான்...
நேரம் மெது மெதுவாகப் பத்தைத் தொட்டிருந்தது…
சூரியனுக்கும் கோபம் உச்சியைத் தொட்டிருந்தது…
“இந்த அண்ணனுக்கு நான் சொன்னது காதில் ஏறவில்லையா?”
என முணுமுணுத்துக் கொண்டிருந்தான்…
அந்த நேரத்தில் வாசலில் வாகனச் சத்தம் கேட்கவே ஓடிச் சென்று எட்டிப் பார்த்தான்…
அவன் எதிர்பார்த்தது போல ஆதித்யனின் வாகனம் தான் வாசலைத் தாண்டி வந்து கொண்டிருந்தது…
அண்ணனின் வாகனத்தைப் பார்த்ததும் அவ்வளவு நேரமும் இருந்த கோபம் போன இடம் தெரியவில்லை…
முகமெல்லாம் பிரகாசமாக வெளியே ஓடிச் சென்றான்…
வாகனத்தில் இருந்து இறங்கிய ஆதித்யன் ஒரு எட்டுக்கூட எடுத்து வைக்கவில்லை…
அவனைத் தாவிக் கட்டிக் கொண்டான் சூரியன்…
சூரியன் கட்டியணைத்த வேகத்தில் தடுமாறியவன் உடனே சுதாரித்துக் கொண்டு நின்றான்…
“டேய் எருமை இப்படியா வந்து மேலே பாய்வது”
“அண்ணா… எவ்வளவு பாசத்தில் ஓடி வந்தேன்… என்னைத் திட்டுகிறாயே”
என்றவாறு விலகியவனை
“சரி சரி உடனே முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ளாதே”
என்றவாறு அவனது தோளைத் தட்டிக் கொடுத்தான் ஆதித்யன்…
அண்ணன் தட்டிக் கொடுத்ததில் குஷியானான் சூரியன்...
“சரி சரி உள்ளே வா அண்ணா… போன காரியம் என்னவாயிற்று”
“போன காரியம் இருக்கட்டும் வீட்டு நிலவரம் எப்படி சூரியா… பல்லவி எப்படி இருக்கிறாள்”
“எல்லாம் நன்றாகத் தான் இருக்கிறது… நீ இல்லை என்கிற குறை மட்டும் தான் அண்ணா…”
என்றான் உண்மையான கவலையுடன்…
சூரியா சொன்னதற்கு லேசான புன்னகையைத் தந்தவன் தோட்டத்து வீட்டைத் திரும்பிப் பார்த்தான்…
அண்ணனின் பார்வையைத் தொடர்ந்து தானும் தோட்டத்து வீட்டைப் பார்த்தான் சூரியா…
“பல்லவி எப்படி இருக்கிறாள் சூரியா”
“பல்லவிக்கு என்ன அண்ணா அவள் இப்போது முன்னை விட நன்றாக இருக்கிறாள்”
“உண்மையாகவா சூரியா”
“என்ன அண்ணா நீ... உன்னிடம் பொய் சொல்லுவேனா”
“அதில்லை சூரியா”
“அண்ணா முதலில் உள்ளே வா… வந்து ஓய்வெடு… விடிந்ததும் பல்லவியைப் பார்த்து உன் சந்தேகத்தைப் போக்கிக் கொள்”
என்றான் சூரியா..
ஆனால் மனதினுள் “பல்லவியை மட்டுமா பார்க்கப் போகிறாய்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்...
சூரியாவைத் தொடர்ந்து வீட்டினுள் நுழைந்தான் ஆதித்யன்
“சூரியா சித்தி ஊருக்குப் போய் விட்டார்களா”
“ஆமாம் அண்ணா”
“ஏன்”
“அதையெல்லாம் காலையில் பேசிக் கொள்ளலாம்… அறையில் உணவு வைத்துள்ளேன் சாப்பிட்டு விட்டுத் தூங்கு அண்ணா”
என்றவன் அண்ணனின் பதிலுக்குக் கூடக் காத்திருக்காமல் தன் அறைக்குப் போய் விட்டான்…
“இவன் ஏன் ஒரு மாதிரி நடந்து கொள்கிறான்… நின்று பேசாமல் ஓடுகிறானே”
என எண்ணியபடி தன் வேலைகளைப் பார்த்தான் ஆதித்யன்...
அதிகாலையில் அவனுக்கு ஏற்படப் போகும் அதிர்ச்சி பற்றி ஏதும் அறியாமல் சாப்பிட்டு விட்டுத் தூங்கினான்…
எதிர்பாராத நேரத்தில் ஏற்படும் எதிர்பாராத நிகழ்ச்சிகளால் சூழப்பட்டது தானே இந்த வாழ்க்கை…
சூரிய வர்மனுக்கு இரவு முழுவதும் தூக்கம் தூரமாகிப் போனது…
அண்ணா காலையில் எப்படி நடந்து கொள்ளுவேனோ என்ற எண்ணமே அவனைத் தூங்க விடாமல் செய்திருந்தது…
எது எப்படியோ அண்ணாவின் வாழ்வில் சந்தோஷமும் நிம்மதியும் வந்தால் அதை விட வேறு என்ன வேண்டும் என நினைத்தான்…
இதே எண்ணத்துடன் கிழக்குத் திசையில் எப்போது சூரியன் உதயமாவான் எனக் காத்திருந்தான் சூரியன்…
இந்தக் காத்திருப்பும் கூட ஒரு விதமான வகையில் ஆறுதலாகவே இருந்தது…
“
நெஞ்சிலே இந்த நெஞ்சிலே கடல் பொங்குதே ஆனந்தமாய்
கையிலே இந்தக் கையிலே வெற்றி வந்ததே ஆரம்பமாய்
அட வாழ்வில் இன்றே திறப்புவிழா இனி வாழ்க்கை எங்கும் வசந்தங்களா”