புது கதைக்கான டீஸர்
எப்போதும் போல் கதைக்கு இன்னும் பெயர் வைக்கல.
டீசர்
அந்தச் சிறிய நடுகூடம் முழுவதும் ஆழ்ந்த நிசப்தம் நிலவியது. அந்த அமைதியை கலைக்கும் விதமாக.. "நீங்க என்ன சொல்றீங்க..?" என்று வினவி, அவர் பதிலுக்காக முகத்தை நோக்கியவாறு பதைபதைப்புடன் காத்திருந்தான் ஈஸ்வரன்.
குரலை செருமியாவறு "இப்போதான் மலை மாதிரி ஒருத்தனை தூக்கி கொடுத்துட்டு துக்கம்கூட முழுசா இன்னும் வீட்டு வாசலை தாண்டாமே.. விதியேன்னு வாழ்ந்துகிட்டு இருக்கோம். அதுக்குள்ள நீங்க கல்யாணத்தை பத்தி பேசுறீங்க! மகன் போன துக்கத்துல சுவாதீனம் இல்லாமல் எப்போதும் வெறிச்சுகிட்டு, நைட்டானா அவன் கூப்பிடுறான்னு மருண்டு மருண்டு ஓடுறவளே காவல் காக்க முடியாம, சோறு தண்ணிய நினைக்காம வீடும், மனசும் வறண்டு போய் கிடக்குது, இன்னும் ஒரு வருஷம் ஆகட்டும் தம்பி அப்புறம் பார்த்துக்கலாம்" என்றார்.
"நான் நாளைக்கு மறுபடியும் வெளிநாடு போறேன், ஊருக்கு போறதால் இப்போதைக்கு உங்ககிட்ட பேசி வச்சுட்டு அடுத்த வருஷம் வந்து கல்யாணம் பண்ணிக்கலாம் என்ற எண்ணத்தில் தான் கேட்டேன், கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க" என்றான்.
"இல்லை தம்பி இப்போ நான் எந்த முடிவையும் உறுதியா சொல்ல முடியாது. அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்" என்று சமாளித்தார்.
அவனுக்கு ஏமாற்றத்தில் முகம் சிறுத்து போக, "அப்போ சரிங்க நான் கிளம்புறேன்" என்று எழுந்து வெளியேறி விட்டான்.
"ஏன் அண்ணே ஒரு கெட்டது நடந்த வீட்ல, நல்லது நடந்தா துக்கத்தை மறந்து கொஞ்சம் சந்தோசம் பிறக்கும்னு தான் நல்ல காரியத்தை செய்வாங்க. அந்த பையன் ரொம்ப தங்கமானவனா தெரியுறான், அவனை ஏன் வேண்டாம்னு சொல்றீங்க" என்று கேட்டார் அவருடைய தங்கை.
"பாராட்டி, சீராட்டி வளர்த்து படிக்க வச்சு இப்போதான் கொஞ்சம் முன்னேறி வர சமயத்துல.. காலம் முழுக்க அவன் நினைவோடையே ஜடம் மாதிரி வாழ்ற வாழ்க்கையை கொடுத்துட்டு ஒருத்தன் போய்ட்டான். என் பொண்ணுங்களுக்கு நல்லது கெட்டது ஏதாவது ஒண்ணுன்னா அவன் துணையாக இருப்பான்னு நினைச்சுருந்தேன். ஆனால், அந்த சண்டாளன் எனக்கு கொல்லி வச்சு என்னை நிம்மதியா அனுப்பி வைப்பான்னு நினைச்சா.. கடைசியில் அவனுக்கு நான் கொல்லி வச்சு அனுப்பி வைக்க வேண்டியதா போய்டுச்சு. எனக்கும் இப்போ மனசில் தெம்பு இல்லை. எவ்வளவு நாள் இருப்பேன்னு எனக்கே தெரியல! எடுத்தோம் கவுத்தோம்னு கல்யாணத்தை பண்ண முடியாது. எனக்கு பிறகு என் மகள்கள் வாழ்க்கை நிம்மதியா இருக்கணும்னு நினைக்கிறேன், அதான் எதையும் யோசிச்சு செய்யலாம்னு இருக்கேன். சின்னவளை பத்தி கவலை இல்லை, அவளுக்கு மாப்பிள்ளை இருக்கு. பெரியவளை நினைச்சுதான் எனக்கு கவலை!" என்று நாற்காலியில் தலையை சாய்த்தார்.
"அந்த பையனோட அம்மா ராங்கின்னு உனக்கு தெரியும்ல, பெரிய மருமகளோட ஏகப்பட்ட பிரச்சனை நடந்து போலீஸ் கேஸ் வரைக்கும் போச்சு, என் புள்ளைங்க கால் வயிறு கஞ்சி குடிச்சாலும் எந்த ஒரு இடிசொல் இல்லாமல் நிம்மதியா குடிக்கணும் அதான் எனக்கு முக்கியம். வருஷம் திரும்பட்டும்மா வேற மாப்பிள்ளை பார்த்துக்கலாம்" என்றார்.
அருந்ததி பேருந்தை விட்டு இறங்கி வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருக்கும்போது, அவளது வீட்டிலிருந்து வண்டியில் சென்று கொண்டிருந்தவன், அவளை சமீபித்ததும் வண்டியும் வேகத்தை குறைத்து, அவளை திரும்பி திரும்பி பார்த்தவாறு சென்றான்.
"இந்த ஆளு ஏன் என்னை திரும்பி திரும்பி பார்த்துட்டு போறான். முகத்தில் ஏதாவது ஒட்டிருக்கோ?" என்று முகத்தை துடைத்தாவறு வீட்டை அடைந்தாள், வாசலில் நின்றிருந்த "டிஸ்கவர்" இருசக்கர வாகனத்தை கண்டதும் தயங்கி நின்று, அதை தடவி கொடுத்தவளின் நினைவு 'இது ஓடாது பறக்கும்' என்று சொல்லும் தமையனின் ஞாபகம் வர, அவன் மிச்சத்தின் எச்சமாக இருந்த வாகனத்தை, அவன் தலையை தடவி கொடுப்பது போல் வருடி கொடுத்துவிட்டு உள்ளே சென்றாள்.
அவள் உள்ளே வந்ததும், உடையைக்கூட மாற்ற விடாமல் கையை பிடித்து வீட்டின் பின்புறம் அழைத்து சென்ற அவளது தமக்கை, "இன்னைக்கு ஒரு அதிசயம் நடந்துச்சு, அதை பார்த்ததும் எனக்கு உன் மேல் பொறாமை வந்துடுச்சுக்கா" என்றாள் தலையும் புரியாமல் காலும் புரியாமல்.
"ஏற்கனவே நான் ரொம்ப சோர்ந்து போயிருக்கேன், நீ வேற ரம்பம் போடாமல் என்னன்னு சொல்லு, வீட்டு வேலை நிரம்ப கிடக்கு"
"அது வந்து அந்த பாடிபில்டர் இருக்காருல்ல.."
"எந்த பாடிபில்டர்..?"
"அதான்கா நான் கூட உன்னி முகுந்த் மாதிரியே இருக்கிறதால உன்னி ஏட்டன்னு சொல்லுவேனே.. அவர் இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்து அப்பாகிட்ட உன்னை பொண்ணு கேட்டார். அப்பா கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டார்" அவள் தந்தை மறுதலித்ததும் வருத்தமாக மொழிந்தாள்.
"இதுதான் அதிசயமா..?" சாரமில்லாத குரலில் சொன்னவள், 'இதனால்தான் அந்த ஆளு என்னை திரும்பி திரும்பி பார்த்துட்டு போனான் போல' காரணம் பிடிபட, அதை பெரிதாக எண்ணாமல் சென்று விட்டாள்.
*************************************
"எவ்வளவும்மா ஆச்சு..?"
"பதினைந்து ரூபாய் ஆச்சுண்ணா" என்று நகல் எடுத்தவற்றை அவர் கையில் கொடுத்து விட்டு, பணத்தை பெற்றுக் கொண்டாள்.
"எனக்கு பான் கார்டு அப்ளை பண்ணனும்" என்ற குரலில் நிமிர்ந்து பார்த்தவளை, ஒரு வருடம் கழித்து பார்ப்பதால் குறுகுறுவென்று பார்த்தான் ஈஸ்வரன்.
"வைட் பண்ணுங்க, இவங்களுக்கு முடிச்சுட்டு பண்ணலாம்" என்று எந்த வித முகமாறுதலும் இல்லாமல் கணினியின் முன் அமர்ந்தவள், மற்றொரு வேலையை முடித்தாள்.
அடுத்ததாக அவன் வந்து, அவள் அருகில் அமர.. "யம்மா இந்த ஆதார் கார்டை ரெண்டு ஷெரொக்ஸ் போட்டு கொடு" ஒரு முதியவர் கேட்க,
'நான் வந்து உட்காரும்போதுதான் எல்லாரும் இடைஞ்சல் பண்ணுவாங்க' மெல்லிய சினத்துடன் அலுத்துக் கொண்டான்.
"ஏய் அமலா! அந்த வேலையை முடிச்சுட்டு இவருக்கு பான் அப்ளை பண்ணி கொடு" என்று எழுந்தவள், அந்த முதியவர் கொடுத்த ஆதார் கார்டை நகல் எடுத்து கொண்டிருந்தாள்.
"அண்ணே! உங்க ப்ரூஃப் எல்லாம் கொடுங்க" என்று அமலா என்பவள் அவனிடம் கேட்க,
"இல்லை நான் அவகிட்ட பண்ணிக்கிறேன்" என்றவனின் 'அவள்' என்ற உரிமையான அழைப்பில் அவனை பாதாதிகேசம் அளந்தவள்,
"அது சரி" என்று தலையாட்டி நக்கலாக இதழ் வளைத்து,.
"அம்மா 'தீ' நீ தான் அப்ளை பண்ணி கொடுக்கணும்னு கஷ்டமர் விருப்பம் வந்து இந்த ஆசனத்தில் அமரு, நான் அந்த வேலையை பார்த்துக்கிறேன்" என்று நமட்டு சிரிப்புடன் எழுந்து சென்றாள்.
அருந்ததி அமர்ந்து கடமையே கண்ணாக அவளது வேலையை செய்து கொண்டிருக்க, எப்படி பிள்ளையார் சுழி போட்டு பேச்சை ஆரம்பிப்பதென்று தெரியாமல் "அருந்ததி" என்று மெல்ல அழைத்தான்.
"ஏதாவது தப்பா இருக்கா?" கணினி திரையை காட்டி கேட்டாள்.
"இல்லை, உங்க அப்பா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டார், உனக்கு என்னை பிடிச்சிருக்கா?" என்று கேட்டான்.
"ஊரிலிருந்து வந்ததும் இந்த வேலையை தான் முதலில் பார்த்தீங்களா..?"
"உனக்கு கல்யாணமாயிடக் கூடாதுன்னு ஒவ்வொரு நாளும் வேண்டிக்கிட்டே இருப்பேன். அதான் வந்ததும் விசாரிச்சுட்டு பேசி முடிச்சுட்டேன்" அவன் வைத்திருந்த தாடி கன்னக்குழியை மறைக்க விரிந்த முறுவலை சிந்தியவாறு கூறினான்.
அவனை ஒரு மாதிரியாக பார்த்தவள், "எனக்கு சில கண்டிஷன் இருக்கு அதுக்கு ஓகே சொன்னா, உங்களை கல்யாணம் பண்ணிக்கிறதில் எனக்கு ஆட்சேபனை இல்லை" என்றாள் கணினி திரையிலிருந்து பார்வையை விலக்காமல்.
"சொல்லு என்னது?"
"நீங்க கல்யாணம் பண்ண கொஞ்ச நாளில் வெளிநாடு போய்டுவீங்க, என் அம்மா முன்னை இருந்ததை விட பரவாயில்லை. ஆனால், இன்னும் வீட்டை விட்டு வெளியில் வர மாட்டேங்கிறாங்க அப்படியே தான் இருக்காங்க, அப்பாவுக்கு அண்ணா போன கவலையில் உடல் பலவீனம் ஆயிடுச்சு. என் தங்கச்சி இப்போ படிச்சுட்டு இருக்கா அவளால் வீட்டை பார்த்துக்க முடியாது. அதனால், நீங்க போனதும் நான் எங்க வீட்டில் குடும்பத்தை பார்த்துகிட்டு இருப்பேன். நீங்க திரும்பி வர வரைக்கும்"
"நீங்க ஒரு ரெண்டு வருஷம் மட்டும் வெளி நாட்டிலிருந்துட்டு என்ன குடும்ப சூழ்நிலையாக இருந்தாலும் திரும்ப வந்துடணும். நீங்க அங்க, நான் இங்கன்னு வருசத்துக்கு ஒரு மாதம் மட்டும் பொண்டாட்டியா குடும்பம் நடத்தி, கடைமைக்கு புள்ளைகளை பெத்து போட நான் ரெடியில்ல. என் குடும்பத்தில் என் அண்ணன் இடத்திலிருந்து என் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும். பணத்தை பத்தி நான் சொல்லல.. ஆதரவனா உறவு முறைக்கு சொல்றேன், நீங்க தப்பா எடுத்துக்க வேண்டாம். உங்க குடும்பத்தை உடனே நான் எப்படி ஏத்துக்கிட்டு எல்லாம் செய்யணும்னு நினைப்பிங்களோ அதே மாதிரி தான் நீங்களும் என் குடும்பத்தை ஏத்துக்கிட்டு அவங்ககிட்ட நல்லபடியா நடந்துக்கணும்."
"நான் எனக்கு பிடிக்கிற வரைக்கும் இங்க வேலைக்கு வருவேன், என்னை தடுக்கக் கூடாது. உங்களுக்கு நான் சொன்ன விஷயங்களில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம், இல்லைன்னா சொல்லிடுங்க ஒரு பிரச்சனையும் இல்லை" என்று முடித்தாள்.
"எனக்கும் பிரச்சனை இல்லை, நீ சொன்னதுக்கெல்லாம் எனக்கு சம்மதம்" எள்முனை அளவுக்கூட யோசிக்காது சம்மதம் சொன்னதும், அவனை நெற்றி ரேகைகள் சுருங்கப் பார்த்தாள்.
"இல்லை, நீங்க நிதானமா யோசிச்சு சொல்லுங்க ஒண்ணும் அவசரமில்ல, எனக்கு வந்த மாப்பிள்ளைங்க எல்லாருக்கும் இந்த கண்டிஷன் போட்டதால் தான் என்னை வேண்டாம்னு சொல்லிட்டாங்க.. அதனால் தான் சொல்றேன் கொஞ்சம் நிதானமா முடிவெடுங்கன்னு"
"இதில் யோசிக்க என்ன இருக்கு? எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை" திருமண வாழ்க்கையை பற்றி சரியாக விளங்கிக் கொள்ளாமல் அவன் சொல்லிவிட்டுருந்தான்.
"அப்போ சரி, நான் அப்பாகிட்ட கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிடுறேன்" என்று முகத்தில் எந்த ஒரு உணர்வையும் வெளிப்படுத்தாமல் அவள் கூறியிருந்தாள்.
'இவ என்ன முகத்தில் ரியாக்ஸனே காமிக்காமல் பேசுறா..? இவ குணமே இப்படிதானா? இல்லை, அவ அண்ணன் போனதும் வருத்தத்தில் இப்படி ஆயிட்டாளா?' என்று சிந்தித்தவன், அவள் சொன்னது போல் அவள் குடும்பத்தை தன் குடும்பம் போல் பார்த்துகொள்ள வேண்டும் என்று எண்ணினான்.
************************
"நானும் வந்ததிலிருந்து பார்த்துகிட்டே இருக்கேன், என்கூட ஒழுங்கா பேச மாட்டேங்குறே.. பக்கத்தில் வந்தா தள்ளி போறே.. என்ன தான் உன் பிரச்சனை?"
'நீ சொன்னபடி நடந்து கொண்டிருந்தால், நான் ஏன் இப்படி இருக்க போகிறேன்' என்ற பார்வை பார்த்து வைத்தவள்,
"ஒண்ணுமில்ல.." என்று வெளியே செல்ல முனைந்தவளை கை பிடித்து தடுத்தவன்,
"இல்ல ஏதோ இருக்கு, என்னன்னு சொல்லு.."
"நான் தான் ஒண்ணுமில்லன்னு சொல்றேனே.. என்னமோ அக்கறை இருக்க மாதிரி என்ன என்னன்னு நச்சரிக்கீறீங்க.. ஒழுங்கா கையை விடுங்க" என்று பல்லை கடித்துக் கொண்டு கூறினாள்.
"அக்கறை எல்லாம் நிறைய இருக்கு, இப்போ நீ ஏன் இப்படி இருக்கேன்னு சொல்லாமல் நான் விட போறது இல்லை."
"நான் நாளைக்கு எங்க வீட்டுக்கு போறேன்" என்று அருந்ததி சொல்ல,
அவளை உறுத்து பார்த்தவன், "அங்க தான் போகக்கூடாதுன்னு சொல்லிருக்கேனே.."
"என் வீட்டுக்கு போறதுக்கு யாரோட பெர்மிசனும் எனக்கு தேவை இல்லை."
"என்னோடதுக்கூட தேவை இல்லையா..?"
"நான் சொன்னதுக்கெல்லாம் தலையாட்டிட்டு.. அதில் ஒன்னை கூட நிறைவேத்தாமல், உங்க குடும்பத்தில் உள்ளவங்க பேச்சை மட்டும் கேட்டுகிட்டு, நான் சொன்னதை காது கொடுத்து என்னன்னுகூட கேட்காமல், எங்க வீட்டுக்கு போக கூடாதுன்னு சொல்லி தடுத்தவங்க பேச்சை நான் ஏன் கேட்கணும்? அது புருஷனா இருந்தாலும் இப்போ கேட்கிற நிலையில் நான் இல்லை. அதை தாண்டி வந்துட்டேன்"
"நீங்க சொன்னதுக்கு நான் உடன்பட காரணம்.. வெளியில் இருக்கீங்க, வீணா சண்டை போட்டு மனசை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு தான். இப்போ இங்க வந்துட்டீங்க.. இனி நீங்களாச்சு, உங்க குடும்பமாச்சு. என் தங்கச்சி கல்யாணத்துக்கு போகக்கூடாதுன்னு உங்க வீட்டில் உள்ளவங்க சண்டை போட்டாங்க. அவங்க பேச்சை கேட்டுகிட்டு நீங்களும் வரலை. இப்போ உங்க தம்பி கல்யாணத்துக்கு மட்டும் வந்துருக்கீங்க.. அப்போ நான் அவ்வளவு இளக்காரமா போய்ட்டேன்ல. இப்போ சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க உங்க தம்பி கல்யாணத்துக்கு நான் வர மாட்டேன்" என்று கண்களில் நீர்திரை மறைக்க கூற..
"என்னை பழி வாங்குறியா..?"
"நான் இங்கையும், நீங்க அங்கையும் சிறப்பா வாழ்ந்த இந்த ஐந்து வருஷ வாழ்க்கைக்கு பழிதான் வாங்குறேன்.
இனிமேலும் இப்படி தான் என் வாழ்க்கை போகும்னு எனக்கு தெரியும். அதுக்கு ஒரு மண்ணுக்கும் பிரயோஜனப்படதா இந்த வாழ்க்கையை வாழ்றதுக்கு நான் தனியா வாழ்றதே மேல். கேட்க ஆள் இல்லைன்னா இப்படி தான் உங்க இஷ்டத்துக்கு நடத்துவீங்க! நான் வாழ்ந்த வாழ்க்கை போதும், இனியாவது என் அம்மா அப்பாவை பக்கத்திலிருந்து பார்த்துக்கிற பாக்கியம் எனக்கு கிடைக்குட்டும், அதிலையாவது எனக்கு நிம்மதி கிடைக்கும்" குரலில் வேதனை தொனிக்க விரக்தியுடன் மொழிந்தாள்.
"அப்போ நான் உனக்கு வேண்டாமில்லை?" அவளை ஆழ்ந்து பார்த்தவாறு வினவினான்.
"நீங்க வேணும்னு தான் இங்க நடந்த பல கசப்பான சம்பவத்துக்கு பிறகும் அமைதியா இருந்தேன். இதுக்கு மேல் என்னால் முடியாது எனக்கு யாரும் வேண்டாம். வாழ்க்கையே வாழ்றதுக்கு தானே.. அந்த வாழ்க்கை நல்லா இல்லாதபோது, எதுக்கு கோமாளி மாதிரி கூத்துகட்டி எல்லாரும் சிரிக்க வாழணும்? அதுக்கு நான் இந்த வாழ்க்கையை முடிச்சுக்கலாம்" என்று ஆத்திரத்தில் சொல்ல,
அவள் சொன்ன 'வாழ்க்கையை முடிச்சுக்கலாம்' என்ற வார்த்தைகளில் உடல் முழுதும் நடுங்கிப்பதறி "அருந்ததி..!" என்று உச்சஸ்தாயில் கத்தியவன்,
"என்னால் யாரும் வாழ்க்கையையும் முடிச்சுக்க வேண்டாம். நாளைக்கு நானே உன்னை கொண்டு போய் விடறேன்" என்று அவனும் இப்படி பேசி விட்டாளே என்ற கோபத்தில் பிரஸ்தாபித்தான்.
"உங்கத் தப்பை உணரவே மாட்டிங்கள்ள? அப்படியே இருங்க" என்று கசந்த முறுவலை சிந்திவிட்டு செல்ல,
"ஆம்பளையா ஏன்டா பிறந்தோம்..? பொம்பளையா பிறந்திருந்தளாவது என் அம்மா மாதிரி மருமகளை குறை சொல்லிக்கிட்டும்.. இவ மாதிரி புருஷனை டார்ச்சர் பண்ணிக்கிட்டும் இருந்திருக்கலாம். பேசாமல் அங்கையே இருந்து செத்து போயிருக்கலாம், என்ன வாழ்க்கை!" என்று அவனும் தலையை பிடித்துகொண்டு அமர்ந்தான்.