All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வசுமதியின் "வெண்பனி தூவும் நிலவே" - கதைத் திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Vasumathishiva

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ் நான் வசுமதி....எழுத்துலகிற்கு புதுவரவு....இது என் முதல் கதை....

ஹீரோ: கார்த்திகேயன்
ஹீரோயின்:நித்திலா


வாழ்வில் எந்தப் பொறுப்பும் இல்லாமல் கெட்டப் பழக்கங்களில் ஆழ்ந்திருக்கும் ஊர் பண்ணையாரின் இளைய மகன் கார்த்திகேயன்.


பெற்றோர் தம்பி தங்கை என வீட்டையேத் தாங்கும் பொறுப்பான பெண் நித்திலா.ஆசிரியையாகப் பணியாற்றுபவள்.


விதியின் விளையாட்டால் இணையும் இவர்கள் வாழ்வு எப்படி இருக்கும்?நித்திலாவால் கார்த்திகேயன் மாறுவானா?


கதைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து என்னை ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

உங்கள்
வசுமதி
 

Vasumathishiva

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Vasumathishiva

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் ஒன்று

வீரவன்கோட்டை கிராமம்

நெடிய தென்னை மரங்கள் நிறைந்த தோப்பின் நடுவே இருந்தது அந்த ஓட்டு வீடு.வாயிலின் இருப்புறமும் இரண்டு பெரியத் திண்ணைகள் தட்டியால் மறைக்கப்பட்டிருந்தது.உள்ளே நுழைந்தால் குப்பென சிகரெட் மதுபானங்களின் வாடை குடலைப் புடுங்கிக் கொண்டிருந்தது.காலி பாட்டில்கள் அங்கெங்கே விழுந்திருந்தது.சிகரெட் துண்டங்கள் குவிந்துக் கிடந்தன.மொத்தத்தில் நல்ல மனிதர்கள் வர முடியாத அலங்கோல வீடாகக் காட்சியளித்தது அந்த வீடு.

வீட்டின் உள் அறையில் பெரிய கட்டிலில் மேல் சட்டை இல்லாமல் நழுவ தயாராக இருக்கும் வேட்டியில் கவிழ்ந்து படுத்திருந்தான் ஒரு இளங்காளை.ஆஜானுபாகுவான அவன் உயரமும் எக்கைப் போல் இறுகியத் தேகமும் அவன் அஞ்சா சிங்கம் என்பதை பறைசாற்றியது.

பதினொரு மணியின் சுள்ளென்ற சூரியனின் கதிர்கள் அவன் முகத்தில் மோதி அவன் ஆழ்ந்த உறக்கத்தை லேசாக கலைத்தது.கணத்த விழிகளை சிரமப்பட்டு பிரித்தெடுத்த அவன் பக்கத்தில் இடம் காலியாக இருப்பதைக் கண்டு லேசான இகிழ்ச்சி புன்னகைப் பூத்தது அவன் முகத்தில்.நேற்று இரவு பக்கத்து டவுனில் நடந்த பொருட்காட்சிக்குச் சென்றவன் அங்கே கரக்காட்டம் ஆடிய மயில்கொடியை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான்.அவளும் அத்தனைப் பேரில் கம்பீரமாக தனித்துத் தெரிந்த அவனை பார்த்தபடியே ஆடினாள்.அன்றைக்கே பொருட்காட்சி முடிவதால் இரவு வரவு செலவு பிரித்து தன் சம்பளத்தோடு வெளியே வந்த மயில்கொடி தன் வீட்டுக்கு செல்லவில்லை என்பதை தனியாக கூற வேண்டியதில்லை.வாழ்க்கை வாழ்வதற்கே என்பது போல் மனம் வந்த வழியில் குடி சிகரெட் பெண்கள் சகவாசம் கட்டைப் பஞ்சாயித்து என்று எல்லா கெட்டப் பழக்கமும் அவனின் அன்றாட நிகழ்வாக இருந்தது.

இதற்கெல்லாம் இடைஞ்சல் என்றே பெரிய வீட்டுப் பக்கமே செல்லாமல் அவனுக்கு சொந்தமான இந்த தோப்பு வீட்டிலேயே அவனின் லீலைகள் எல்லாம் அரங்கேறியது.

ஊர் பண்ணையார் ராஜமாணிக்கம் ஊரே மெச்சும் பெரிய மனிதர்.அவரின் மனைவி முத்துசெல்வி.கணவனும் பிள்ளைகளுமே அவள் உலகம்.அவர்களின் மூத்த மகன் சந்திரசேகர்... தந்தைக்கு தக்க தனயன்.அவன் மனைவி தெய்வானை.அத்தை மாமானைப் பிடிக்காவிட்டாலும் பிடித்தது போல் நடிப்பவள்.கணவனிடம் மட்டும் ஏதாவது சொல்லியபடி இருப்பாள்.ஆனால் அது அவன் உள்ளே இறங்கியதா இல்லையா என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம்.இத்தனைக்கும் அவள் முத்துசெல்வியின் சொந்த அண்ணன் மகள்.

பொறுப்பான மூத்த மகனை எண்ணி மகிழ்ந்த பண்ணையார் இளைய மகன் கார்த்திகேயனை பற்றி எண்ணினால் நெஞ்சு வலியே வந்து விடும் அவருக்கு.கார்த்தி பதினெட்டு வயது வரை நல்லவனாகவே இருந்தான்.ஆனால் இறக்கும் தருவாயில் முத்துசெல்வியின் தந்தை அவரின் சொத்தில் சரிப் பாதியை அவன் பெயரில் எழுதி வைத்தப் பின் அவனின் பழக்க வழக்கங்கள் மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது.கெட்ட சகாவாசம் ஒவ்வொன்றாக அவனை பிடித்துக் கொண்டது.முதலில் தந்தையின் பேச்சில் பயந்தவன் பின்பு சிறிது சிறியதாக அவரை எதிர்த்தான்.இப்போதோ ஏதாவது கேள்விக் கேட்டு விட்டால் மாதக்கணக்கில் தோப்பு வீட்டிலேயே காலத்தைக் கழித்தான்.போனால் போகட்டும் என்று பண்ணையார் அவனை மனதால் வெறுத்து விட்டார்.பாவம் முத்துசெல்வி தான் மகனை எண்ணி கண்ணீர் வடிப்பார்.தாயின் கண்ணீர் மனதை இளக்கினாலும் கார்த்தி மட்டும் தன் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளவேயில்லை.

எழுந்து அவன் அமர்ந்ததும் சொல்ல வைத்தார் போல காப்பி டம்ளரோடு வந்து நின்றான் சொக்கன்.சொக்கன் கார்த்தியின் பள்ளித் தோழன்.தாய் இல்லாமல் சிற்றன்னையின் கொடுமையில் வீட்டு விட்டு கார்த்தியே கதியென்று வந்துவிட்டவன்.அவன் எங்கிருந்தாலும் அவனின் நிழலாக இருப்பான்.அவன் வாழ்க்கை முறை பிடிக்காவிட்டாலும் எதுவும் கூறி மாட்டான்.ஏதாவது கூறப் போக கூட இருக்கும் தன்னையும் அவன் வெளியேற்றி விட்டால் என்ன செய்வது என்று பயந்தே வாய் மூடி மௌன சாட்சியாக அவனின் உற்றத் துணையாக இருந்தான்.

முகத்தை கழுவிக்கொண்டு வந்தவன் சொக்கன் கொடுத்த காப்பியை ஏனோதானோவெனக் குடித்தான்.அதில் சிறியதாக சிரித்த சொக்கன்

"அதுக்கு தான் ஒரு கல்யாணத்தக் கட்டிக்கங்கறது....அது வந்து வாய்க்கு ருசியா சமைச்சுப் போடும்... இந்த ஆம்பள செஞ்சா கொடுமயாதேன் இருக்கும்.."

"போடா டேய்....வா ருசி ஆசப்பட்டு கட்டிக்கிட்டா பின்னால அதுவே என் கை கால கட்டிரும்.... இந்த கார்த்தி ஒரு நாளு அந்த கட்டுல சிக்க மாட்டான்..."

என்றபடி சென்று தயாராக இருந்த வென்னீரில் நன்றாக ஒரு குளியலைப் போட்டான்.தங்க சரிகையிட்ட வேட்டியும் அரக்கு நிற முழுக்கை சட்டையில் தயாரானவனின் கழுத்தில் புலிநக செயின் ஊசலாடியது.புல்லட் சாவியோடு காலை உணவை உண்ணுமாறு கூறிய சொக்கனிடம் மறுத்துவிட்டு வெளியே வந்தவன் அங்கே தலையை சொறிந்தபடி தயங்கி நின்ற பெரிய வீட்டு வேலையாள் மருதனை என்ன என்பது போல் ஏறிட்டான்.அவனின் கூர்ப் பார்வையிலேயே நடுங்கிய மருதன் கூற வந்ததைக் கூறாமல் தலையை இன்னும் வேகமாக சொரிந்தான்.இன்னும் அவன் காலம் தாழ்த்தினால் கார்த்தி அவனை அடி நொறுக்கி விடும் அபாயம் இருந்ததால் சொக்கன் முன் வந்து

"ஏலே மருதா!வந்த சேதிய சொல்லுலே...கட்ட காலைல அடி கேக்குதா உடம்பு...அண்ணே கோவம் தெரியாதா?"

"இல்லிங்கண்ணே...பெரியய்யா...சின்னய்யாவ பெரிய வூட்டுக்கு வர சொல்றாங்க...அத சொல்லத்தேன் வந்தேன்...."

அந்த செய்தியில் சிறிதும் அலட்டிக் கொள்ளாத கார்த்தி தன் புல்லட்டில் அமர்ந்து அதை உயிர்ப்பித்தான்.அதில் பதறிய மருதன்

"சின்னய்யா!பெரியய்யாக்கு என்னங்க சொல்றது....பதில் சேதி சொல்லாட்டி என்னைய வெட்டி பொலிப் போட்ருவாருங்களே!"

"எதுக்கு வாரது?நீ செய்றது நாயமா?நல்ல வழில நடக்கனும்...அப்புடி இப்புடின்னு அவர ராமாயணம்..பாரதம் கேக்க எனக்கு போது இல்ல...வர முடியாதுன்னு போயி சொல்லு உன் பெரிய அய்யா....வுக்கு"

என்றபடி புகையை கக்கியவாறு பறந்தது அவனின் புல்லட்.

அவன் போன வழியை சில நிமிடம் பார்த்திருந்த சொக்கன்

'கல்யாணத்த கட்டுன்னு நெனைக்கற உன் நெனப்ப மாத்த ஒருத்தி கண்டிப்பா வருவா...உன் வாழ்க்கைய பாழக்கற இந்த கெட்டப் பழக்கங்கள மாத்தி எதுக்கும் அடங்காத உன்ன அடக்குவா...அத நா பாக்காதையா போயிருவேன்'

என்று மனதில் அந்த பெண்ணை சீக்கிரமாக அவன் வாழ்வில் வர வைக்குமாறு கடவுளை வேண்டினான் அந்த உயிர் நண்பன்.
 
Status
Not open for further replies.
Top