ஆரிய அர்ஜூனா 3:
சென்னையில் உள்ள ஒரு பெரிய அடுக்கு மாடி குடியிருப்பில் நிர்மூலமாய் படுத்திருந்த பாவையவள் தன் மலர் கண்களை மெதுவாக மலர்த்தினாள்.
இமைகளை திறக்க முடியாமல் தலையில் வலி வேறு கிண்கிண்யென்று தெறிக்க தலையை இரு கரங்களால் தாங்கியப்படியே படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்த சுபத்ராவிற்கு தலைச்சுற்றி வர சில வினாடிகள் தலையை தாங்கியப்படி கண்ணை மூடி ஆசுவாச பெருமூச்சை வெளியிட்டு அமைதியடைய முயற்சித்தாள்.
ஆரிய சுபத்ரா ஆரோக்யமான திடக்கத்திரமான பெண் என்றாலும்,கடந்த சில நாட்களாகவே ஒரு வித மனநோயுடன் அமைதியின்றி அலைப்புரிதலுடன் காணப்படுவதாக நிரவ் சோப்ராவிற்கு தோன்றுகிறது.
ஒரு சில வேளைகளில் அவளின் பிடிவாதம் எல்லை மீறுகையில் அதற்கு நாம் ஒத்துழைக்கவில்லை என்றால்,அவள் ஆக்ரோஷமாக நடந்துக்கொண்டு எதிரில் இருப்பவர்களை காயப்படுத்துகிறாள்.
அதேப்போல் இந்த திருமண விடயத்திலும் தாங்கள் அசோக்கை ஏற்றுக்கொள்ளாத வேளையில் வீட்டிலிருக்கும் பொருட்களையே உடைத்து ரணக்களப்படுத்தி இறுதியாக தன்னை தானே அழித்துக் கொள்ள துணிந்த தங்கள் புதல்வியின் நிலையறிந்து பதறிக்கொண்டு அவளை மருத்துவரிடம் அழைத்து சென்றார்கள்.
மருத்துவர் அவள் உடலை முழுமையாய் பரிசோதனை செய்துவிட்டு "உங்க பொண்ணுக்கு எந்த மன அழுத்தமும் இல்லை...நல்லப்படியா தான் இருக்காங்க...ஆனால் திடீர் திடீர்னு ஏன் இப்படி நடந்துக்கறாங்கன்னு எனக்கும் தெரியலை...வேணும்னா நல்லா தூங்கறதுக்கு சில மாத்திரைகள் தருகிறேன்...அதை இரண்டு மாதம் தொடர்ந்து கொடுங்க...அப்புறம் அவங்க கேட்கிற எதற்கும் மறுப்பு தெரிவிக்காமல் உடனடியா செய்து கொடுங்க...இல்லைனா அவங்க தன்னை தானே அழித்துக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்" அவர்களின் தலையில் பாரத்தை இறக்கிவிட்டு சென்ற மருத்துவரை கண்ணீரோடு பார்த்திருந்தனர் அவளின் பெற்றோர்.
'ஏன்?எதற்கு?எப்படி?' என்ற கேள்விகளுக்கு விடையறியாமல் மகளின் நல்வாழ்வை கருத்தில் கொண்டு அரைமனதுடன் விவாஹத்திற்கு சம்மதம் தெரிவித்தார்கள்.
ஆனால் இப்போது இறுதி நொடியில் மணமகன் மாறியதில் மிகப்பெரிய அழுத்தம் நெஞ்சை அடைக்க வைத்தாலும் அசோக் மணமகனாக வராதது ஒரு ஆறுதலையே கொடுத்திருந்தது.
ஏனெனில் அசோக்கின் தந்தை விஜய ராகவன் இந்த திருமணத்தில் காட்டுமளவு ஆர்வத்தை கூட,மணமகன் காட்டியிராதது உள்ளுக்குள் ஒரு நெருடலை கொடுத்துக் கொண்டிருந்தது.
அவனது ஒவ்வொரு அசைவிலும் அவனின் விருப்பமின்மையை தெள்ள தெளிவாக எடுத்துரைத்தவனை கண்டு 'இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றால்,பின்பு எதற்காக என் மகளை காதலித்தான்?' என்ற கேள்வி மனதிற்குள் விஸ்வரூபம் எடுத்து மிரட்டிக்கொண்டே இருக்க,தற்போது அர்ஜூன் தன் மருமகனாய் வந்தது ஒரு வித திருப்தியையே அளித்தது.
அத்தோடு அவனை தனிமையில் சந்தித்து பேசியதற்கு பிறகு தன் மகளுக்கு நூறு சதவீதம் ஏற்ற மணமகன் அர்ஜூன் தான் என்ற முடிவிற்கு வரவழைத்து மகளை அவனோடு வாழ வைக்கும் விபரீதமான முடிவை எடுக்க வைத்தது.
நிஜத்தில் நல்லவன் போல் தோற்றமளித்தாலும் விஜய ராகவன் என்னும் நாகத்தை தோற்கடிப்பதற்காகவும் தான் எடுத்த சபதத்தில் வெற்றிக்கொள்வதற்காகவும் தந்திரமாய் சுபத்ராவை மணமுடித்திருந்தான் அர்ஜூன் என்பதை யாவரும் அறியர்.
இதன் மூலம் பல திட்டங்களை தீட்டி பாவையவளை பகடை காயாக பயன்படுத்தி தான் அமைத்த வியூகங்களை கொண்டு தெளிவாக காய் நகர்த்தி அதன் ஆரம்ப கட்டத்தில் வெற்றி வாகை சூடியிருந்தான்.
ஆனால் பெண்களின் மனதை கணிக்கும் வல்லவன் இந்த உலகத்தில் எவரும் இலர்,அதற்கு தான் மட்டும் விதி விலக்கல்ல நிஜமறியாத கோழை தான் இந்த அர்ஜூன் என்பதை அவனே அறியேன்.
சுபத்ராவை மணம் புரிந்தது தொடர்பாக அர்ஜூன் கூறிய நியாயமான காரணங்களை நிரவ் சோப்ரா எடுத்துக்கொண்டு,தன்னுடைய மகளை மண்டபத்திலிருந்து நேரே அர்ஜூனின் இல்லத்திற்கு அழைத்து சென்றுவிட்டார்.
சுய நினைவுடன் இருக்கும் வேளையில் இதற்கு மகள் ஒப்புக்கொள்ளமாட்டாள் என்பதினால் அவள் மயக்கத்தில் இருந்தப்போதே மகளை அர்ஜூனிடம் ஒப்படைத்துவிட்டு "சுபத்ரா ரொம்ப சின்ன பொண்ணு...நிறைய கோபம் வரும்...அவ எந்த தப்பு செய்தாலும் பொறுத்துப்போங்க மாப்பிள்ளை...எழுந்து எதுவும் கலாட்டா செய்தால் எந்த நேரமானலும் உடனடியா எங்களை கூப்பிடுங்க" அரைமனதாக மகளை அர்ஜூனிடம் ஒப்படைத்து விட்டு சென்றிருந்தனர்.
காலை வேளையில் மயக்க மருந்தின் உதவியுடன் மூர்ச்சையடைந்த பாவையவளிற்கு இரவு ஏழு மணிக்கே விழிப்புத்தட்டியது.
முதலில் தன் இமைகளை திறந்து சுற்றுப்புறத்தை கண்ணுற்றவளிற்கு அதன்பிறகே ‘இது தன்னுடைய இருப்பிடமல்ல’ என்ற நிஜம் புரிந்ததோடு,மண்டபத்தில் நடந்த நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக நினைவிற்கு வரத்தொடங்கியது.
அனைத்தும் சிந்தைக்கு வந்த அடுத்த வினாடியே கட்டிலிலிருந்து படக்கென்று எழுந்து நின்றவள் சுற்றுப்புறத்தை ஆராய,அங்கிருந்த வெள்ளை பூச்சுகள் பூசப்பட்ட சுவற்றில் மாட்டியிருந்த புகைப்படத்திலிருந்தவனை கண்டவுடன் ‘இது யாருடைய இடம்?’ என்பது விளங்கியதோடு,அவள் கழுத்தோடு பின்னிப்பிணைந்திருந்த தாலியும் அவளிற்கு விபரத்தை தெள்ள தெளிவாக புரிய வைத்தது.
அவை உணர்ந்த நொடியில் அவளின் அழகிய வதனம் கோபத்தில் செந்நிறமாய் சிவந்துவிட ‘ஹவ் டேர் யூ டு டூ திஸ் டூ மீ’ மனதிற்குள் பொருமிக்கொண்டே கீழே குனிந்து தன் உடையை நோக்கினாள்.
காலையில் அணிந்திருந்த பட்டுப்புடவையை களைந்துவிட்டு சாதாரணமாக வீட்டில் அணியும் பைஜாமாவை கண்டு ‘இதை யார் எனக்கு அணிவித்தது?’ என்ற கேள்வியுடன் புருவம் சுருக்கியவளிற்கு தேகமெல்லாம் தீப்பற்றிய உணர்வு எழ “டாட்...மாம்” என அழைத்துக்கொண்டே அந்த அறையிலிருந்து வெளியேறினாள்.
வரவேற்பறைக்குள் நுழைந்த சுபத்ரா பெரிய விசாலமாக இருந்த அவ்விடத்தை கண்டு முகம் சுருக்கினாள்.
ஏனெனில் அவ்விடத்தில் ‘ப’ வடிவிலான நீள் விரிக்கையும் ஒரு சிறிய அலங்கார மேசையையும் தவிர வேறு எந்த பொருட்களும் அங்கில்லை.அத்தோடு அவளின் சொற்கள் பெண்ணவளின் செவியில் வந்து எதிரொளிக்கும் வகையில் பெரிதாக இருந்த அறையில் அதற்கு ஈடான எந்த வித அலங்காரப்பொருட்களும் இல்லாமல் இருப்பதை கண்டு ‘அவனை மாதிரி அவன் வீடும் ஒண்ணுமில்லாத மாதிரி இருக்கு’ என சத்தமாக முணுமுணுத்து வசைப்பாடியவளிற்கு தாயும் தந்தையும் இவ்விடத்தில் இல்லை என்பது புரிந்துப்போனது.
உடனடியாக சுள்ளென்று சினம் உச்சந்தலைக்குள் ஏற ‘என்ன நினைச்சு என்னை இவன் வீட்டில் தனியா விட்டுட்டு போயிருக்காங்க’ என முனகியப்படி 'முதல்ல இந்த ஃப*கிங் ஹவுஸிலிருந்து வெளிய போகணும்' என பல்லை கடித்துக்கொண்டு கதவு வரை சென்று அதை திறக்க முயற்சிக்க அந்தோ பரிதாபம் அவளால் திறக்க முடியவில்லை.
அது வெளிப்புறமாக பூட்டியிருப்பதை கண்டு எரிச்சலடைந்த பாவை கதவை காலால் ஒரு உதைவிட்டு ஆங்கில கெட்ட வார்த்தைகள் கொண்டு ஆடவனை வறுத்தெடுத்தவள்,திடீரென்று முகம் பளீச்சிட தான் படுத்திருந்த அறைக்கு திரும்பினாள்.
வரவேற்பறை போலவே அந்த அறையிலும் ஒரு கட்டிலும் மெத்தையும்,அதற்கு அருகே ஒரு சிறிய மேசையும் அதன் மீது ஒரு விடி விளக்கு மட்டுமே எஞ்சியிருந்தது.
அறையை சுத்தமாக வழித்தெடுத்தது போல் வெறிச்சோடி இருக்க,கட்டிலின் முகப்பிற்கு மேல் பகுதியில் அவனுடைய புகைப்படம் மட்டும் அலங்கார பொருளாக அவ்வறையனுள் வீற்றியிருந்தது.
‘ஒரு வீட்டை எப்படி வைச்சுக்கணும்னே தெரியலை...இவனுக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடு’ கடுகாய் பொரிந்து தள்ளியவள் மேசை மீது இளஞ்சிவப்பு பூனைக்குட்டி உறையுடன் இருந்த தன்னுடைய அலைப்பேசியை எடுத்து தந்தையின் எண்ணிற்கு தொடர்பு கொண்டாள்.
நீண்ட நேரம் அவளின் பொறுமையை சோதித்தப்பிறகே அலைப்பேசி அந்தப்புறமாக எடுக்கப்பட்டதும் அவரை பேசவிடாமல் “டாட் உங்க மனசில் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?எந்த தைரியத்தில் அவன்கிட்ட என்னை விட்டுட்டு போயிருக்கீங்க?எனக்கு இங்க சுத்தமா பிடிக்கலை?முதல்ல என்னை இங்கிருந்து கூட்டிட்டு போங்க...என் விருப்பமில்லாமல் தாலிக்கட்டின அவனை நான் ஏத்துக்கணுமா?நெவர்...முடியவே முடியாது...அந்த ஆள் ஒரு தப்பானவன்...வீட்டை வேற பூட்டி வைச்சிட்டு போயிட்டேன்...நீங்க உடனே கிளம்பி இங்க வாங்க...நான் நம்ப வீட்டுக்கு வந்திடறேன்” படபடவென பேசிக்கொண்டே சென்றவள் சினத்தில் நகத்தை கடித்து துப்பிக்கொண்டிருந்தாள்.
எதிர்ப்புறம் மகளின் செயலை அறிந்த தந்தையாக “பேட்டி நகம் கடிக்கிறதை முதல்ல நிறுத்து...உனக்கு கோபம் வந்தால் என்ன செய்வேன்னு தெரியாது...உன்னை பப்பா அங்க விட்டுட்டு வந்திருக்கேனா அதில் ஒரு காரணம் இருக்கும்...இது தான் உனக்கு ஏத்த வாழ்க்கை...கோபத்தையெல்லாம் தூக்கி வைச்சிட்டு பொறுமையா உட்கார்ந்து யோசிம்மா” என்றார் சற்று நிதானமான குரலில்.
தந்தை கூறிய சொற்களை கேட்டவுடன் சீற்றம் கூரையை பிய்த்துக்கொண்டு சீறி எழ “மண்ணாங்கட்டி வாழ்க்கை?அது இதுன்னு என்னை டென்ஷன் பண்ணாதீங்க டாட்...முதல்ல நீங்க இங்க வர முடியுமா முடியாதா?அதை சொல்லுங்க” என்று எகிற,
அவரோ தாழ்ந்த குரலில் “பேட்டி ஒரு நாள் நான் செய்தது தான் சரின்னு புரிஞ்சிப்பே நீ...அர்ஜூன் தான் உனக்கு ஏற்றவன்...அந்த அசோக் நல்லவன் இல்லைம்மா...அதுவும் அந்த விஜய ராகவன்…” என்னும் போதே இடைமறித்த சுபத்ரா,
“டாட் ஷட் அப்...இனியொரு வார்த்தை என் அசோக்கை கண்டவனோட கம்பேர் பண்ணி பேசினால் நான் கொலைவெறியாகிடுவேன்...அதே மாதிரி அங்கிள் பத்திபேச உங்களுக்கு என்ன தகுதியிருக்கு?பெத்த பொண்ணு கழுத்தில் எவனோ ஒருத்தன் தாலிக்கட்டிட்டான்...அவனை பிடிச்சு ஜெயில்ல போடாமல் அவன் பெரிய நல்லவன் உத்தமன்னு காண்டெக்ட் சர்ட்டிபிக்கேட் கொடுத்திட்டு இருக்கீங்க?நீங்கயெல்லாம் ஒரு நல்ல அப்பாவா?” ஆத்திரக்கரனுக்கு புத்தி மட்டு என்பது போல் வார்த்தைகளை நெருப்பு கங்குகளாய் அள்ளி வீசி தந்தையின் மனதை காரிகை காயப்படுத்தினாள்.
அவரோ விரக்தியாக சிரித்து “நல்ல அப்பாவா இருப்பதினால் தான் உனக்கு எது நல்லதுன்னு யோசித்து முடிவு எடுத்திருக்கிறேன்” என,
“எது கண்டவனையெல்லாம் எனக்கு புருஷனாக்கிறது நல்ல முடிவா?” என உறும,
“உன்னை மனசில் வைச்சு யோசித்ததால் தான் அர்ஜூனை உனக்காக நான் தேர்ந்தெடுத்து இருக்கிறேன்”
இதழை சுழித்து “ஏதோ நீங்களே எனக்காக பார்த்து பார்த்து செலக்ட் பண்ண மாதிரி பில்டப் எதுக்கு விடறீங்க?” என எரிந்து விழ,
“என் பொண்ணுக்காக ஒரு மாப்பிள்ளை பார்க்கிறதுன்னா அது அர்ஜூன் மாதிரி துணிச்சலான ஒருத்தனை பார்ப்பனே ஒழிய,அசோக் மாதிரி அப்பாவுக்கு பின்னாடி ஓடி ஒளிஞ்சிக்கிறே கோழையையில்லை” அவரும் மகளிற்கு சலித்தவளில்லை என்பது போல் வாதத்தில் நிரூப்பித்தார்.
“டாட் இது தான் கடைசி எச்சரிக்கை...இனியொரு முறை என் அசோக்கை பத்தி தப்பா பேசனீங்க நான் சும்மா இருக்கமாட்டேன்” என குரல் கீறிச்சிட,
“இப்பவும் சொல்லுறேன்...அந்த அசோக் எதுக்குமே உதவாத உதவாக்கரை...சுயநலப்பிடித்தவன்...தோற்றத்தில் அவனை போலவே இருந்தாலும் அர்ஜூன் தைரியசாலி...நல்லவன்” என அவளின் சீற்றத்தை அதிகரித்து கொண்டே இருக்க,
இவள் அறைக்குள்ளே நடைப்பயின்றவாறு “பப்பாஆஆஆஆ” என பல்லைக்கடிக்க,
“பேட்டி ஒழுங்கா அர்ஜூனோட வாழப்பாரு...இது தான் இந்த அப்பாவோட விருப்பம்” என்றார் நிதானத்துடன்.
“எனக்கு இஷ்டமில்லை” பட்டு கத்தறித்தாற் போன்று பதில் வந்து விழ,
அவரோ பெருமூச்சை வெளியிட்டு “அப்போ பப்பாவோட பதிலையும் கேட்டுக்கோ..நீ அர்ஜூனோட வாழ்ந்தால் மட்டும் தான் நான் சம்பாதித்த சொத்து முழுவதும் உனக்கு கிடைக்கும்” என வேறு விதமாக மகளிற்கு நெருக்கடி கொடுக்க பார்க்க,
அவளோ இகழ்ச்சியாக புன்னகைத்து கூந்தலை கோதி விட்டு “என்ன பப்பா பிளாக்மெயிலா?சரி வைச்சுக்கோங்க...எனக்கு உங்க சொத்து எதுவும் வேணாம்...எனக்கு அசோக் இருந்தால் போதும் வேற யாரும் வேணாம்” அவரின் திட்டத்தை முறியடிக்க நினைக்க,
“ஹாஹாஹா” என வாய்விட்டு சிரித்த நிரவ் சோப்ரா “என்னுடைய செல்வாக்கும் சொத்துமில்லாமல் நீ வெறும் செல்ல காசு பேட்டி...அந்த விஜய ராகவன் சந்தையில் பிடிச்சு வந்த கறவை மாடா பார்ப்பானே தவிர உன்னை ஒரு உயிரா மதிக்கக்கூட மாட்டான்...பார்க்கலாமா?” என சவால் விட,
“அதையும் பார்க்கலாம்...அசோக் தான் என்னைக்கும் என்னுடைய காதலன்,கணவன் எல்லாமே!” என்றாள் தீரத்துடன்.
“இப்படி சொல்லற இதே வாயாலே அர்ஜூன் தான் எனக்கு எல்லாமேன்னு கூடிய சீக்கிரம் இந்த பப்பாக்கிட்ட சொல்லுவே நீ!" என்றார் இதழ் வளைய.
“டாட் கனவில் தான் அதெல்லாம் நடக்கும்” என்றாள் நக்கல் தொணியில் பாவையவள்.
“சரி...இன்னையிலிருந்து எண்ணி ஆறு மாசம் அதுக்குள்ள நீ மனசு மாறி அர்ஜூனோட வாழ்ந்திடுவேன்னு இந்த ப ப்பா சொல்லுறேன்” அவளை தூண்டிலில் சிக்க வைக்க முயல,
அதை அறியாத பேதையோ “டாட் நல்லா காமெடி பண்ணறீங்க போங்க...நீங்க சொல்லற மாதிரி அடுத்த ஆறு மாசம் என்ன?ஆறு வருஷமானாலும் அவன் மேலே எனக்கு எந்த பிளீங்கும் வராது" என திமிருடன் பதிலளிக்க,
"சவாலா?" என இவரும் தூண்ட,
"சவால் டாட்" சரியாக அவர் விரித்த வலையில் சிக்கினாள் அவரது பேட்டி.
தாழ்ந்துப்போனால் மிஞ்சுபவள் சீறினால் பதிலுக்கு சீறி அவசரமாக முடிவெடுக்கும் துடுக்குத்தனமானவள் தன் மகள் என்பதை அறிந்த தந்தையாய் அவளை சீற வைத்து குளிர்க்காய்ந்தார் அந்த பெரிய மனிதர்.
அத்தோடு தனக்கு பிடித்தமானவர்களிடம் வாக்குறுதி கொடுத்துவிட்டால்,அதை எக்காரணம் கொண்டு மீற மாட்டாள்.அதை இப்போது பயன்படுத்திய நிரவ் சோப்ராவின் இதழ்கள் வெற்றியுடன் முறுவலடைந்தது.
இனி அவளுடனான வாழ்க்கை பிரம்மனுக்கு நிகரானவன் கரத்தில் என்பதை பேதையவள் அறியவில்லை.