All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிலா ஶ்ரீதரின் "என் காதல் பொய்யும் இல்லை" - கதை திரி

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் - 8

சந்தியா இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. விக்ரம் அவளை பலமுறை அழைத்தான். அது அவளது செவிகளை எட்டவில்லை. கடைசியாக அவளை வேகமாக உலுக்கினான்.

“என்னடி ப்ரீஸ் ஆயிட்ட. அதுக்குள்ள எந்த உலகத்துக்கு போயிட்ட” அவன் நக்கலாக கேட்க, அவள் முகத்திலோ சிரிப்பை காண முடியவில்லை.

“எதுக்காக டிசிப்ளனரி ஆக்‌ஷன் எடுத்தாங்கனு உனக்கு தெரியுமா விக்ரம்”

“ஹ்ம்ம்.. தெரியும்” என்றதும் எதற்கு என்ற கேள்வியை கொண்டு அவனை பார்த்தாள்.

“லெவன் – ‘சி’ பையன் அரவிந்த். அவன் ஒரு பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருந்திருக்கான். அந்த பொண்ணும் இவனை பிடிச்சிருக்குங்கற மாதிரி தான் இருந்திருக்கா. இப்ப திடீர்னு கௌதமை தான் பிடிச்சிருக்குனு சொல்லிட்டாளாம். அதுக்கு கௌதி என்ன பண்ணுவான். கௌதிய ரிவென்ஜ் எடுக்கறதா நினைச்சி அவன் தான் அந்த டேரை தந்திருக்கான். சரியான லூசு பையன். இவனும் என்ன சொல்லப் போறான்னே தெரியாம என்ன சொன்னாலும் செய்வேன், இல்ல ஸ்கூலை விட்டு போய்டுறேன்னு சொல்லிருக்கான்”

“டேய் இதெல்லாம் எனக்கு தெரியும்டா. அதான், இவன் வின் பண்ணிட்டான்ல. அப்புறம் எதுக்கு போனான். இப்ப எதுக்கு ஆக்‌ஷன் எடுத்திருக்காங்க” அவன் சொல்வதை முழுவதாக கேட்கும் பொறுமை கூட அவளிடத்தில் அப்போதில்லை.

“ஒண்ணு இவன் டேர் பண்ணாம ஸ்கூலை விட்டு போயிடுவான். இல்ல எதாவது பொண்ணுகிட்ட ஐ லவ் யு சொல்லி அவ இவன் பேருல கம்ப்லைன் பண்ணி அதுக்கு ஸ்கூல் சைட்ல இருந்து டிசிப்ளனரி ஆக்‌ஷன் எடுத்து சஸ்பெண்ட் பண்ணனும்ங்கறது தான் அவன் பிளானே” விக்ரம் சொல்ல

“ஆனா நான் தான் கம்ப்லைன் பண்ணலையே விக்ரம்” அப்பாவி தனமாக கேட்டாள்.

“ஹேய் முதல்ல கேளுடி. கௌதமுக்கு வேற ஆளெல்லாம் சூனியம் வைக்க தேவையில்ல. அவனே வச்சிப்பான். அரவிந்த் பிளான் ஒண்ணும் சக்ஸஸ் ஆகல. நீயா போயிட்டனால பெருசுப்படுத்தாம விட்டுட்ட. இப்ப கௌதம் வின் பண்ணிட்டான், அதனால ஸ்கூலை விட்டும் போகமாட்டான்னு அடுத்த நாளே எங்கிட்ட வந்து போட்டு கொடுத்துட்டான்”

“என்னடா சொல்ற. அவனா உங்கிட்ட சொன்னான்” கண்களை விரித்து கேட்டாள்.

“ஆமா, கௌதம் ப்ரொபோஸ் பண்ணினான் சந்தியா சைலண்டா அழுதிட்டே போயிட்டானு அவன் தான் எங்கிட்ட சொன்னான். இத நான் கௌதம்கிட்ட சொன்னேன். சொன்னவுடனே அவனை அப்படியே விட்டுடுன்னும் சொன்னேன். கேட்கற ஆளா அவன். சாயந்திரமே கிரவுண்ட்ல வச்சி அவனை அடி அடின்னு அடிச்சிருக்கான். என்னமோ அவன் அடிக்கலனு அன்னைக்கு கவலைப்பட்டீயே. நாளைக்கு போய் அரவிந்த பாரு எப்படி அடிச்சிருக்கான்னு தெரியும். கண்ணுக்கு கீழ இன்னமும் வீக்கம் குறையல. அதப் பார்த்துட்டு ஸ்டாஃப், பிரின்சிபெல்கிட்ட கூட்டிட்டு போயிட்டாங்க. ப்ரின்ஸி உடனே ஒன் வீக் சஸ்பெண்ட் பண்ணி வீட்டுக்கு அனுப்பிட்டாங்க” விக்ரம் நடந்ததை சொல்ல சந்தியாவிற்கு அதிர்ச்சியில் கண்களே வெளியே வந்துவிட்டது.

“ஏன் விக்ரம் இப்படி பண்ணான். அவன் தான் பைத்தியம், ஒரு பொண்ணுக்காக இவ்ளோ கேவலமா நடந்துக்கிட்டான்னா. இவன் எதுக்கு அவனை அடிக்கணும்”

“என்னை கேட்டா”

“நீ பேசினியா”

“நான் அவன்கிட்ட பேசல. பிரச்சனை வேண்டாம்னு குழந்தைக்கு சொல்றமாதிரி சொன்னேன். எல்லாத்தையும் கேட்டுட்டு போய் அடிச்சி வச்சிருக்கான். பிரின்சிபெல் ரூம்ல இருக்குற நம்ப சுரேந்திரன் சார் சொல்றாரு, பிரின்சிபெல் ரெண்டுபேரயும் நிக்க வச்சி இப்படி அடிச்சிக்கிற அளவுக்கு என்ன பிரச்சனைனு கேட்டாங்களாம். அவன் கௌதிக்கு டேர் சொன்னேன்னு சொன்னா வீட்டுக்கு தெரிஞ்சி திட்டப் போறாங்கனு எதுவும் சொல்லலையாம். இவன்கிட்ட ஏன் அடிச்சனு கேட்டதுக்கு வாயயே திறக்கலயாம். அதான் ஒன் வீக் சஸ்பெண்ட் பண்ணிருக்காங்க” விக்ரமுக்கு கௌதம் மீது கோபம் அதனால் இவன் அவனுக்கு அழைக்கவே இல்லை. கௌதமும் ஒன்றிரண்டு முறை அழைத்துப் பார்த்துவிட்டு விட்டு விட்டான்.

“அவனை அசிஸ்டன்ட் ப்யூப்பெல் லீடர் போஸ்ட்க்கு எலேக்‌ஷன்ல நிக்க வைக்கலாம்னு பிளான் பண்ணி வச்சிருந்தோம். அவ்ளோ தான் எல்லாம் போச்சு. இந்த வருஷம் எதுவுமே பண்ணமுடியாது. பெரிய பிளாக் மார்க்” விக்ரம் ஆதங்கத்தில் புலம்ப

“இவன் ஏன் இப்படி பண்றான். அவனுக்கு கால் பண்ணு” சந்தியா வருத்தத்தில் சொன்னாள்.

அவள் சொன்னதை கேட்டு விக்ரமும் கௌதமுக்கு அழைத்து கைபேசியை ஸ்பீக்கரிலும் போட்டான்.

“சொல்லு விக்கி” குரலில் எந்த ஒரு வருத்தமுமின்றி சொன்னவன் மீது இருவருக்கும் கோபம் தான் வந்தது.

இருந்தும் அதை அடக்கிக்கொண்டு “எங்க இருக்க கௌதி” என்று விக்ரம் கேட்டான்.

“வீட்ல தான். இப்ப தான் எங்க அம்மாவ கொஞ்சி நைஸ் பிடிச்சி கேசரி செஞ்சித் தர சொன்னேன். அவங்க அத செஞ்சிக்கிட்டு இருக்காங்க நான் பக்கத்துமேடைல உட்கார்ந்து எப்போ கேசரி ரெடி ஆகும்னு பார்த்துட்டு இருக்கேன்” அவன் சொன்னதை கேட்டு விக்ரமுக்கு சிரிப்பு வந்தது. சத்தமாக சிரிக்கவும் செய்தான்.

சந்தியாவிற்கோ எரிச்சலாக இருந்தது ‘என்னமோ பெரிய சாதனை பண்ணி அவார்ட் வாங்கின மாதிரி எவ்ளோ சந்தோசமா கேசரி கேட்டிருக்கான். ஸ்கூல்ல சஸ்பெண்ட் பண்ணிருக்காங்கனு கொஞ்சமாவது கவலை இருக்கா’ மனதிற்குள் அவனுக்கு அர்ச்சனை செய்துக் கொண்டிருந்தாள்.

“என்னடா, விஷயம் வீட்டுல தெரியுமா” விக்ரம் கேட்க சமையலறையில் இருந்து மெல்ல நகர்ந்தவன்

“அத சொன்னா எங்க அம்மா கேசரி செஞ்சிட்டு இருப்பாங்களா. உடம்பு சரியில்லாம லீவ் போட்ட மாதிரி செட் பண்ணிருக்கேன்” சொல்லிவிட்டு சத்தமாக சிரித்தான். சந்தியாவிற்கு வெறுத்தேவிட்டது. நீ பேசுகிறாயா என்று விக்ரம் கண்ஜாடை காட்ட அவள் மாட்டேன் என்று தலையை ஆட்டினாள்.

“ஏன்” என்று சத்தம்வராமல் வாயசைத்து கேட்க

“நான் அவன்கிட்ட பேசமாட்டேன்” என்று அவள் கையசைவாலே பதிலளித்தாள்.

“டேய் லைன்ல இருக்கியா” அதற்குள் கௌதமின் குரல் ஒலிக்க “இருக்கேன்டா. ஏன்டா வீட்டுல இருந்து வர சொல்லிருப்பாங்களே. அப்புறம் எப்படி வீட்டுக்கு தெரியாம” புரியாமல் விக்ரம் கேட்க

“ஆமா சொன்னாங்க. அதுக்கு தான கார்த்தி அக்கா இருக்கா. கூட்டிக்கிட்டு வந்து நிறுத்தினேன்ல. அக்காவ தவிர வீட்டுல வேற யாருக்கும் தெரியாதுடா” என்ற கௌதமின் மீது சந்தியாவிற்கு கோபம் எல்லையை கடந்திருந்தது.

“அவனை இங்க வரச் சொல்லு” அவள் சத்தம் வராமல் வாயசைத்து சொன்னாள்.

“கௌதி. எங்க வீட்டுக்கு இப்ப வர்றீயா” இவர்களுக்கு நடுவில் நான் என்ன தூதா என்றெண்ணி கொண்டே சொன்னான்.

“டேய் அதெல்லாம் முடியாது. இந்த நேரத்துல அவ்ளோ தூரமெல்லாம் கஷ்டம்”

“ரொம்ப பண்றடா நீ. என்னமோ நைட்ல ஊரே சுத்தாத மாதிரி. உனக்கு போட்கிளப்ல இருந்து மயிலாப்பூர் வர கசக்குதா. ஒழுங்கு மரியாதையா கிளம்பி வா”

“அது இல்லடா எனக்காக கேசரி வேற ரெடியாகிட்டு இருக்கு” என்று குறும்பு சிரிப்பு சிரித்தவன் “சரி அவ இருக்காளா. அவ இருந்தா நான் வரல. தேவையில்லாம அவளை வேற பார்க்கறா மாதிரி இருக்கும்” அவன் சொல்ல இங்கே விக்ரமை முறைத்துக் கொண்டிருந்தவள் “நான் இங்க இல்லனு சொல்லு” என்று வாயசைத்தாள்.

“அவ இங்க இல்லடா” அவனும் அதையே சொன்னான்.

“அதெப்படி. பூஸ்ட்டும் ஈவ்னிங் ஸ்னாக்ஸும் வந்திருக்குமே” அவன் கேட்க, இங்கே எரிச்சலோடு சந்தியா விக்ரமை முறைக்க, அவன் தான் இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு விழித்தான்.

“அதெல்லாம் கொடுத்துட்டு போயிட்டா. அவ வீட்ல இல்ல. வெளில போயிருக்கா”

“ஓ அப்போ சரி. நான் வரேன்” என்றவன் அழைப்பைக் கூட துண்டிக்காமல் “அம்மா கேசரி கேன்சல். நான் ப்ரண்ட் வீடு வரைக்கும் போயிட்டு வரேன்ம்மா” என்று சொன்னது இங்கே சந்தியாவிற்கும் விக்ரமிற்கும் கேட்க தவறவில்லை.

“அவனுக்கு திமிற பார்த்தியா விக்ரம். என்ன வேற பார்க்கறா மாதிரி இருக்குமாம். எப்படி விக்ரம் உனக்கு இப்படி ஒரு ப்ரண்ட். சஸ்பெண்ட் ஆன கவலை கொஞ்சமாச்சும் இருக்கா. கேசரி செய்ய சொன்னானாம்” அவனிடம் காட்ட வேண்டியதையும் சேர்த்து இவனை அர்ச்சனை செய்துக் கொண்டிருந்தவளை பார்த்த விக்ரம், தான் வாய் திறக்காமல் இருப்பதே சிறந்தது என்ற முடிவெடுத்தான்.

சந்தியாவிற்கு இப்படி சட்டென கோபம் வராது. அவளது கோபத்தை அவன் தூண்டிக் கொண்டு தான் இருந்தான். அது விக்ரமுக்கும் புரிந்து தான் இருந்தது. அதே கோபத்தோடு அங்கிருந்து கிளம்பினாள்.

அடுத்த அரைமணி நேரத்தில் கௌதம் விக்ரம் வீட்டிற்கு வந்து அழைப்பு மணியை அடிக்க, கதவை அவர்கள் வீட்டில் வேலைசெய்யும் மாரியப்பன் திறந்துவிட நேராக படியேறி விக்ரம் அறைக்கு சென்றான்.

வந்தவன் வாயை வைத்துக் கொண்டு அமைதியாக இல்லாமல் “மச்சான் ரொம்ப தேங்க்ஸ். நல்லவேளை, நிஜமாவே அவ இல்ல. சஸ்பெண்ட் வேற ஆயிட்டேனா, அவ முகத்துல முழிக்கவே ஒருமாதிரி இருக்கு. எங்கிட்ட பேசமாட்டா. ஒருவேளை அட்வைஸ் எதாவது பண்ணானா. நமக்கு இந்த அட்வைஸ்யெல்லாம் செட்டே ஆகாது” கௌதம் பேசிக் கொண்டிருக்க சந்தியா கதவிற்கு அருகில் தான் நின்றுக் கொண்டிருந்தாள். கௌதம் விக்ரமை நேர்கொண்டு அமர்ந்திருந்ததால் அவனுக்கு தெரியவில்லை. கீழே மாரியப்பனை கதவை திறக்கச் சொன்னதே அவள் தான். அதுமட்டுமா அவனுக்கு பின்னால் அவளும் படியேறி வந்தாள். அதையும் அவன் கவனிக்கவில்லை. இப்போதும் அவன் பின்னால் இருக்கிறாள் என்று விக்ரம் பலமுறை ஜாடை செய்தான். இவனோ கவனிக்காமல் பேசினான்.

பின் விக்ரமே “கௌதி கொஞ்சம் திரும்பி பாரேன்” என்று சொல்ல, திரும்பியவன் அதிர்ந்துப் போனான். சந்தியா அவனை கண்களாலே எரித்துவிடும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கையில் ஒரு தட்டில் மூன்று கிண்ணத்தில் கேசரி இருந்தது. அவன் வருகிறான் என்று தான் செய்து எடுத்து வந்திருக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது.

எதுவும் பேசாமல் உள்ளே வந்தவள் “விக்ரம் எடுத்துக்கோ” என்றாள். விக்ரம் எடுத்ததும் “அவனையும் எடுத்துக்க சொல்லுடா” கௌதமிடம் தட்டை நீட்டி சொன்னாள்.

“எனக்கு வேண்டாம்டா” அவளை நிமிர்ந்தும் பார்க்காமல் சொன்னான்.

“எடுத்துக்கோ கௌதி. சாரிடா, நீ பேசிக்கிட்டு இருந்தப்போ அவளும் இங்க தான் இருந்தா. வீட்ல சாப்பிடாம வந்துட்டேனு உனக்காக தான் செஞ்சிருக்கா” தட்டை நீட்டியவள் இன்னும் அவனிடமிருந்து அதை நகர்த்தவில்லை.

“இவ யாரு எனக்கு கேசரி செஞ்சி தர. எங்க அம்மா இருக்காங்க எனக்கு செஞ்சிக் கொடுக்க” அன்று ஆட்டோவிற்கு கொடுத்த எண்பது ரூபாயை அவள் நீ யார் எனக்கு கொடுக்க என்று சொல்லித் தானே திருப்பித் தந்தாள் அதையே அவனும் இன்று சொன்னான்.

சந்தியாவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வர “விடு விக்ரம் எடுத்தா எடுக்கறான் இல்லாட்டி விடு நாம சாப்பிடலாம்” என்று தன் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு தட்டை அவன் அருகிலேயே வைத்துவிட்டாள். அவளுக்கு கௌதமை பற்றி இன்னும் சரியாக தெரியவில்லை. அவனுக்கு வேண்டாம் என்றால் வேண்டாம் தான். அவன் தான் பிடிவாதத்திற்கு மூத்த பிள்ளையாயிற்றே.

இருவரும் சாப்பிட கௌதம் அதை கண்டுக்கொள்ள கூட இல்லை. அறையே அமைதியாக இருந்தது. விக்ரம் தான் அந்த அமைதியை கலைக்கும் பொருட்டு பேச ஆரம்பித்தான்.

“ஏன்டா அதான் பிரின்ஸி எதுக்கு இப்படி பண்ணனு கேட்டாங்கல. அப்பவாவது சொல்லிருக்கலாம்ல அவன் செஞ்ச வேலைய. சஸ்பென்ஷன் அளவுக்கு போயிருக்காது ஜஸ்ட் ரெண்டுபேரையும் வார்ன் பண்ணி விட்டிருப்பாங்க”

“சொல்லிருக்கலாம். அவன் ஏற்கனவே அடிபட்டவன். நான் டேரை பத்தி சொல்ல அவன் கௌதம் டேரை பண்ணான் அதுவும் மேடமுக்கு தான் ப்ரொபோஸ் பண்ணான்னு சொல்லிட்டான்னா. தேவையில்லாம அவளை வேற இந்த பிரச்சனைல இழுத்துவிட்டா மாதிரி ஆகிடும். அதான் பர்சனல் ப்ராப்ளம்னு மட்டும் சொன்னேன். என்னனு சொல்லலைனா நீதான் அவனை அடிச்சிருக்க, உன்மேல தான் தப்புனு சஸ்பென்ட் பண்ணுவோம்னு சொன்னாங்க. சரி சஸ்பென்ட்டே பண்ணிகட்டும்னு விட்டுட்டேன்” சந்தியாவை பற்றி யோசித்து தான் அமைதியாக இருந்திருக்கிறான். அது அவளுக்கு அவன்மீது நல்ல அபிப்ராயத்தையே கொடுத்தது.

“அதுவும் கரெக்ட் தான். ஆனா எனக்கு இன்னும் கோவம் குறையல. நான் தான் பிரச்சனைய அத்தோட விடுன்னு சொன்னேன்ல அத அப்படியே விடாம அவனை அடிச்சி கேஸாகி சஸ்பெண்ட் ஆகியிருக்க. தேவையா இதெல்லாம்” விக்ரம் கேட்க, சந்தியாவின் கண்களும் அதையே தான் கேட்டுக் கொண்டிருந்தது. அதை கௌதம் தான் கவனிக்கவில்லை.

“அப்படி விட்டுட்டு போனா அவன் கௌதமே இல்லயே” என்றுவிட்டு சிரிக்க சந்தியாவிற்கு கோபத்தில் கிண்ணத்திலிருக்கும் கேசரியை அவன் தலையில் கொட்டலாம் என்றிருந்தது.

“பெரிய கௌதம்” என்று தனக்குள்ளேயே சொன்னாலும் அது அவனுக்கும் கேட்டது, விக்ரமும் கேட்டிருந்தான்.

“விக்ரம் எரிச்சலா இருக்கு” என்று எரிச்சலை காட்டியும் விட்டாள்.

“எரிச்சலா இருந்தா, தண்ணிக் குடிக்க சொல்லுடா. இவ செஞ்ச கேசரில காரம் அதிகமோ எரிச்சலெல்லாம் வருது” அவனை தான் சொல்கிறாள் என்பதை புரிந்து பதிலளித்தான் கௌதம்.

“கேசரி எங்கயாவது காரமா இருக்குமா விக்ரம்”

“கேசரி ஸ்வீட்டா தான் இருக்கும் விக்கி. சிலர் முகத்தை காரமா வச்சிக்கிட்டு சமைச்சா அவுட்கம் அப்படி தான் இருக்கும். நீ கூட இனிமே பூஸ்ட் குடிக்கறப்போ பார்த்து குடிடா” என்றான்.

அதற்குள் விக்ரம் இவர்கள் இருவருக்கும் இடையில் நேரடியான பேச்சுக்கள் இல்லை என்பதை உணர்ந்தான். அதற்கு அவர்கள் தனக்கு கொடுத்த வாக்குறுதி காரணமாக இருக்குமோ என்றெண்ணியவன், அதை உடனே சரி செய்ய முடிவெடுத்தான்.

“ஆமா நீங்க ரெண்டுபேரும் என்ன என்னை மத்தளமா யூஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. எதுவா இருந்தாலும் நேருக்கு நேர் பேசுங்க” அவன் சொன்ன அடுத்த நொடி

“நான் அவகிட்ட பேசமாட்டேன்”

“நான் அவன்கிட்ட பேசமாட்டேன்” இருவரும் ஒரேநேரத்தில் ஒன்றாக சொன்னார்கள்.

“எதுக்காக” விக்ரம் புரிந்தும் புரியாதது போல் கேட்டான்.

“உனக்கு தெரியாதா விக்ரம்” அதைமட்டுமே சந்தியா சொன்னாள். அவளுக்கு தெரிந்ததெல்லாம் அவள் சொன்னதால் தான் கௌதம் அவளிடம் பேசாமல் இருக்கிறான் என்று. ஆனால், அவள் சொல்வதற்கு முன்பே கௌதம் விக்ரமிடம் பேசியது அவளுக்கு தெரியாது.

சந்தியா அவளைப் பற்றி மட்டும் கூறுகிறாள் என்பதை புரிந்த விக்ரம் “உனக்கு தெரியாதுல, நீ அன்னைக்கு ஈவ்னிங் இனி நான் கௌதம்கிட்ட பேசமாட்டேன்னு சொன்னியா. அடுத்தநாள் காலைல கௌதியும் உங்கிட்ட பேசமாட்டேன்னு சொல்லிட்டான்” என்று விளக்கினான். இது அவளுக்கு புதுத்தகவல். அந்த தகவல் அவளுக்கு வருத்தத்தை தந்தது. அவள் சொன்னபோது ஏற்படாத வலி அவனும் சொல்லியிருக்கிறான் என்பதை கேட்டபோது வந்தது. திரும்பி அவனை பார்த்தாள் அவன் இவளை பார்க்கவில்லை. வேறெங்கோ பார்த்திருந்தான்.

“ஏன் ரெண்டுபேரும் இப்படி பண்றீங்க. எனக்காக தான அப்படி ஒரு முடிவை எடுத்தீங்க. அதான் ப்ராப்ளம் இப்ப சால்வ் ஆகிடுச்சுல. ரெண்டுபேரும் கைகொடுத்து பேசிக்கறீங்க” என்றான் விக்ரம்.

“எனக்கு அவன்கிட்ட பேசறதுல எந்த ப்ராப்ளமும் இல்லடா” சந்தியா சொல்ல

“எனக்கு இருக்குடா. நான் அவகிட்ட பேசறதா இல்ல” கௌதம் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு சொல்ல அவளுக்கு முகமே வாடியது.

“டேய் ஏன்டா” விக்ரம் அதிர்ந்துக் கேட்க

“பிடிக்கல. நான் முடிவு பண்ணா பண்ணது தான். நான் இவகிட்ட எப்பவும் பேசப் போறதில்ல” இவ்வளவு தீர்க்கமாக சொல்லும் அளவிற்கு தான் என்ன செய்தோமென்று சந்தியாவே குழம்பிப் போனாள்.

“என்னடா எனக்கு தெரியாம எதாவது ஓடிக்கிட்டு இருக்கா. சண்டை எதாவது போட்டுக்கிட்டீங்களா” விக்ரம் புரியாமல் கேட்க

“நீ உடனே ஆரம்பிக்காத. ஓடுற அளவுக்கோ, சண்டைபோடுற அளவுக்கோ இங்க ஒண்ணுமில்ல” கௌதமின் பேச்சு சந்தியாவிற்கு கோபத்தைத் தூண்டியது. தான் பேச தயாராக இருக்கும்போது அவன் இப்படி சொல்வது அவளை அலைக்கழிப்பது போல் தோன்ற

“போதும் விக்ரம். யாரும் பேசணும்னு நான் காத்துக்கிட்டு இல்ல” சந்தியாவும் சொல்ல, விக்ரம் அவளை அடக்கப் பார்த்தான்.

அதற்குள் கௌதம் “கேட்டுக்கிட்டியா” என்றான்.

“பின்ன பேசமாட்டேன் பேசமாட்டேன்னு சீன் போடறவன்கிட்ட கெஞ்ச சொல்றியா விக்ரம்” அவளும் அமைதியாவதாக தெரியவில்லை.

கௌதமிற்கும் இப்போது கோபம் வர “நீயும் நானும் இதுவரைக்கும் பேசிக்கிட்டதே இல்ல. அப்படி இருக்கப்பவே உன்னால என் லைஃப்ல இவ்ளோ பிரச்சனை வந்திடுச்சு. இன்னும் நீயும் நானும் பேசிக்கிட்டோம்னா என்னென்ன நடக்கும்னு நினைச்சாலே பயமா இருக்குனு சொல்றவகிட்ட கெஞ்ச சொல்றியா விக்ரம்” அவனும் பதிலுக்கு சொல்ல, அப்போது தான் சந்தியாவிற்கு தான் செய்த தவறே புரிந்தது.

“என்னடா சொல்ற. சந்தியாவா அப்படி சொன்னா” விக்ரம் கேட்க கௌதம் அவளை பதிலாக பார்த்தான்.

“சொன்னியாடி” விக்ரம் இம்முறை நேரடியாக அவளிடமே கேட்க

“அது அன்னைக்கு இருந்த கோவத்துல சொல்லிட்டேன். அத இவன் பெரிய இஸ்யூ ஆக்குவானாம். இவன் ஒண்ணும் எங்கிட்ட பேச தேவையில்ல. யாரும் பேசணும்னு நான் ஒண்ணும் ஏங்கிட்டு இல்ல” அவள் மறுபடியும் வார்த்தையை விடுகிறாள் என்பதை உணராமலே சொன்னாள்.

“அவ்ளோ தான் மச்சான். மேட்டர் சால்வ்ட். ரெண்டுபேருமே பேசணும்னு ஏங்கல” கௌதம் திடமாக சொல்ல அவளுக்கு கோபம் தான் வந்ததே தவிர தான் மறுபடியும் தவறாகப் பேசினோம் என்பதே புரியவில்லை.

“போதும் ரெண்டுபேரும் நிறுத்துறீங்களா. நான் ஒருநாள் லூசுதனம் பண்ணா, நீங்க டெய்லி பண்றீங்க. பெரியவன் சொல்றத ரெண்டுபேரும் கேட்கற வழிய பாருங்க. ஒழுங்கா பேசிக்கோங்க” விக்ரம் இடைமறிக்க

“யாரு விக்கி பெரியவன்” கௌதம் சிரிப்பை அடக்கமுடியாமல் கேட்க

“நான் தான்டா. உன்னோட ஒரு மாசம் பெரியவன். இவளோட எட்டு மாசம் பெரியவன். அதனால நான் சொன்னா கரெக்டா தான் இருக்கும். ரெண்டுபேரும் பேசிக்கோங்க”

“போ மச்சான் சும்மா காமெடி பண்ணாத. பெரியவனாம் பெரியவன்” கௌதம் மறுபடியும் சிரிக்க இம்முறை எரிச்சலானது சந்தியாவே.

“நான் கிளம்பறேன் விக்ரம். அம்மா தேடுவாங்க” என்று எழுந்தவளை “இரு சந்து” என்று நிறுத்தினான் விக்ரம். முதல்முறையாக அவன் சந்தியாவை சந்துவென்று அழைப்பதை அப்போது தான் கவனித்தான் கௌதம். அவர்களுக்குள் அப்படி கூப்பிட்டு கொள்ளும் வழக்கம் இருக்கிறது போல் என்றெண்ணிக் கொண்டவன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

“நான் உங்க ரெண்டுபேரையும் கம்பெல் பண்ணல. ஆனா, சீக்கிரம் உங்க பிரச்சனைய சால்வ் பண்ணிக்கோங்க. கௌதி, அவ எதோ கோவத்துல வார்த்தைய விட்டுட்டா. யோசிச்சுப்பாரு நீ அவகிட்ட ஐ லவ் யு சொன்னதுக்கே அவ உன்னை ஒண்ணும் சொல்லல. அத பெருசும் பண்ணல. அவகிட்ட போய் இப்படி நடந்துக்கலாமா அண்ட் சந்தியா, நீ அவன்கிட்ட அன்னைக்கு பேசினது, இன்னைக்கு பேசினது எல்லாம் தப்பு. அதனால மேல மேல பேசி பெருசாக்காத” இருவருக்கும் சரியானதை சொல்ல அவர்களுக்கும் அது சரி என்றே பட்டது. இருந்தும் வாயைத் திறந்து பேசிக்கொள்ள தான் இல்லை.

இருவரும் பேசிக் கொள்வார்கள் என்று காத்திருந்து ஓய்ந்துப்போன விக்ரம், ஓர் ஆழ பெருமூச்சை வெளியே விட்டு “சரி பேசிக்க வேண்டாம். ஆனா, இனி நாம மூணு பேரும் ப்ரண்ட்ஸ். எங்க போனாலும் ஒண்ணா தான் போறோம் வரோம். வந்து பேசாம இருப்பீங்களோ இல்ல பேசி சண்டைப் போடுவீங்களோ அது உங்க பிரச்சனை. பட் டோன்’ட் ஃபர்கெட், மூணு பேரும் ஒண்ணாதான் இருக்கோம். காட் இட்” இருவருக்கும் பொதுவாக சொன்னவன் கௌதம் பக்கம் திரும்பி “கௌதி நாளைக்கு கடைல இருப்பீயா” என்றான். சந்தியாவிற்கு எந்தக் கடை எதை பற்றிப் பேசுகிறான் என்று புரியவில்லை.

“இல்லடா. நித்தி என்னை வெளில கூட்டிக்கிட்டு போக சொல்லிருக்கா. எதோ வாங்கனுமாம். கார்த்தி அக்கா தான் இருப்பா. தி.நகர்ல தான சொல்ற” என்றான் பதிலுக்கு. சந்தியாவிற்கு ஒன்றும் புரியாமல் ‘இவனுங்க ரெண்டுபேரும் எதப்பத்திடா பேசிக்கிறாங்க’ என்று இருவர் வாயையே பார்த்திருந்தாள். அத்தோடு யாரந்த நித்தி என்ற சந்தேகம் வேறு.

“ஆமா எதுக்கு கேட்கற. நீ வர போறியா” அடுத்த கேள்வியையும் கௌதம் கேட்க

“ஆமான்டா. அம்மாக்கு பர்த்டே வருது, சாரீ எடுக்கணும். நீ கூட இருந்தா நல்லா செலக்ட் பண்ணி தருவ. குட்டி பொண்ண தான வெளில கூட்டிட்டு போற பேசாம அவளையும் கூட கூட்டிட்டு வந்திடு. நாம பர்ச்சேஸ் பண்ண வேண்டியதை பண்ணிட்டு, அவ கேட்டத வாங்கிட்டு வீட்டுக்கு போய்டலாம். உனக்கு ஞாபகம் இருக்கா நம்ப ஹர்ஷினி பர்த்டேக்கு போனப்போ உன் தங்கச்சிய கூட்டிட்டு வந்தீயே. அவளோட செம்ம ஃபன். சரியான வாயாடி” விக்ரம் சொன்னத்தை கேட்ட பிறகே தங்கையா என்று நிம்மதியானாள்.

“அதுவும் சரிதான். அப்படியே பண்ணிடலாம். நீ சொல்ற டைம்ல நான் அங்க இருப்பேன்டா” விக்ரம் சொன்னதை கௌதமும் ஆமோதித்து சொன்னான்.

“சந்து, நீயும் வர தான” சந்தியாவையும் விக்ரம் சேர்த்துக் கொள்ள

“எங்க” என்றாள்.

“செல்வராணி சில்க்ஸ்” என்றவன் கௌதமை பார்த்து “சாயந்திரம் ஸ்கூல் விட்டதும் வீட்டுக்கு போய் டிரஸ் சேன்ஞ் பண்ணிட்டு ஒரு அஞ்சரை மணிக்கு அங்க வந்திடறோம்டா. உனக்கு ஓகேவா” என்று கேட்கவும்

“ஓ.. உங்களுக்கெல்லாம் ஸ்கூல் இருக்குல. எனக்கு எந்த ப்ராப்..” என்று நக்கலாக சிரித்துக் கொண்டே சொல்லவந்தவன் அவள் முறைப்பதை பார்த்ததும் சட்டென்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு “ப்ச் நீங்கயெல்லாம் ஸ்கூலுக்கு போறீங்க. நான் மட்டும் பாரு” என்றான் பரிதாபமாக.

‘அப்படியே வருத்தப்படற மாதிரி தான்’ சந்தியா முணுமுணுத்தாள்.

“நாம ஒரு அஞ்சு மணிக்கு கிளம்பிடலாம்டி. அப்போ தான் கௌதி அங்க இருப்பான். அப்புறம் கிளம்பிடுவான்” என்று சந்தியாவிடம் சொல்ல

“இவன் அந்த டைம்ல செல்வராணி சில்க்ஸ்ல என்ன பண்றான்” என்றவளை இதுவரை கோபத்தில் இருந்த கௌதம் இப்போது தன்னை மீறி ரசித்தான். என்னவொரு உரிமையான பேச்சு. அவளுக்கு அது அவர்களுடைய கடை என்று தெரியாது. விக்ரம் நாளை அவன் கடையில் இருப்பானா என்று விசாரித்தது. அதுவும் இவன் போகும் நேரம் அவன் இருக்க வேண்டும் என்று சொன்னது, இதையெல்லாம் வைத்து அரைகுறையாகவே புரிய அதை வைத்து அப்படி ஒரு அதிகார கேள்வியை கேட்டாள்.

“என்னடீ உனக்கு தெரியாதா. அவங்களுது தான் செல்வராணி சில்க்ஸ்” அவளை ஆச்சர்யமாக பார்த்து விக்ரம் சொல்ல சந்தியாவிற்கு ஐயோவென்று ஆனது. இது தெரியாமல் இவனுக்கு அங்கே என்ன வேலை என்று கேட்டுவிட்டோமே என்ற உணர்வில் கண்களை அழுந்த மூட அதில் அவள் முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டது. கையை வைத்து ஒருபக்க முகத்தையும் மறைத்துக் கொண்டாள். பின் அசட்டுசிரிப்பு சிரித்துக் கொண்டே கையை விலக்கி கண்களை திறந்தாள். அவளை பார்த்தவனுக்கு பிடித்திருந்தது. ரசித்தும் கொண்டிருந்தான்.

“சரி நாளைக்கு போகலாமா” விக்ரம் அவளிடம் மறுபடியும் உறுதிச் செய்ய கேட்க “ஹ்ம்ம்” என்றாள்.

“சரிடா நாளைக்கு பார்க்கலாம்” கௌதம் கிளம்பும் நேரத்தில் அவளுக்கு ஒன்று நினைவிற்கு வர

“ஒரு நிமிஷம்” என்று அவள் சொல்ல அந்த வார்த்தைகள் தனக்கானது, தன்னிடம் தான் பேசுகிறாள் என்ற ஆவலில் அவனும் திரும்ப அதற்குள் கிண்ணத்தில் ஆறிக் கிடந்த கேசரியை பார்த்தவளுக்கு மறுபடியும் கோபம் வந்து ஒட்டிக்கொள்ள “ஒரு நிமிஷம் நிக்க சொல்லு விக்ரம்” என்றாள்.

இவனும் பதிலுக்கு “ஹ்ம்ம். சொல்ல சொல்லுடா” என்றான். மறுபடியும் இரண்டு வேதாளமும் முருங்கை மரம் ஏறி இருந்தது.

‘இவங்க ரெண்டுபேருக்கும் இருக்க திமிறும் கொழுப்பும் இருக்கே’ மனதிற்குள் நினைத்து நொந்துக் கொண்டான் விக்ரம்.

“செல்வராணி சில்க்ஸ் இவங்க கடை தான” விக்ரமிடம் அவள் கேட்க

“ஆமா டி” என்றான் அவனும் பதிலுக்கு.

“டி.நகர்ல இருக்கே அதுவா” என்றாள். அதற்கும் ஆமாமென்று தலையை ஆட்டினான் விக்ரம். கௌதம் வேடிக்கை மட்டுமே பார்த்தான்.

“நான் இவங்க கடைக்கு போயிருக்கேன். சாரீ எடுக்க” என்றாள். அவ்வளவு தான் இப்போது கௌதமிற்கு கிலி பற்றிக் கொண்டது. கண்டுப்பிடித்து விட்டாளோ என்ற எண்ணத்தில் அவன் இதயத்தின் தாளங்கள் அவனுக்கே குத்துப்பாட்டாக கேட்டது. அத்தோடு அன்று ஆட்டோவிற்கு கொடுத்தப் பணத்தை திருப்பி தந்ததும் நினைவிற்கு வர வியர்க்கவே தொடங்கிற்று.

“சரி அதுக்கு என்ன” என்றான் இது எதுவும் அறியாத விக்ரம்.

அவள் “நான் அங்க ஒரு பையனை பார்த்தேன்” என்றது தான் மிச்சம் ‘செத்தான்டா சேகரு’ என்று ஓட்டம் பிடிக்கும் நோக்கத்தில் “நான் கிளம்பறேன்டா விக்கி. இவ சொல்ற கதையே கேட்க எனக்கு டைம் இல்ல” என்று ஓடப் பார்த்தான்.

“இப்ப அவன் நிப்பானா மாட்டானா விக்ரம்” ஓடுப்பவனை கையால் மட்டும் தானா பிடிக்கமுடியும். அவளது வார்த்தையாலே பிடித்து நிறுத்தினாள்.

“சரி சொல்ல வேண்டியதை சீக்கிரம் சொல்ல சொல்லுடா. வீட்ல அம்மா தேடுவாங்க” என்றான். அம்மா தேடுவதற்கெல்லாம் பயப்படுப்பவனா அவன். அவன் சொன்னதை பின் நினைத்து பார்த்தால் அவனுக்கே சிரிப்பு வரும்.

“சொல்லத்தான் போறாங்க. இவனை பிடிச்சி வச்சிக்கணும்னு எனக்கு என்ன ஆசையா” உரத்த குரலிலேயே சொன்னவள் “அன்னைக்கு நாங்க சாரீ எடுக்க போனப்போ அந்த பையன் தான் எனக்கும் அம்மாக்கும் சாரீ காட்டினான் விக்ரம். ரொம்ப வயசு இருக்காது. மேபி நம்ப வயசு தான் இருக்கும். ஆனா வேலை செய்யறான். இப்ப எனக்கு அவன் முகம் கூட ஞாபகமில்ல” இப்போது தான் கௌதமுக்கு போன உயிரே திரும்ப வந்தது.

நிம்மதி பெருமூச்சை விட்டவன் “சரி மேல சொல்ல சொல்லு விக்கி” அவன் சொல்ல, அவனை முறைத்துவிட்டு

“படிக்க வைக்க வீட்டுல வசதி இல்லாம தான வேலைக்கு வந்திருக்கான். அவனை இவங்களால படிக்க வைக்க முடியுமா” என்றாள். கௌதமுக்கு இப்போது புறக்கை ஏறியது. மாலை செல்வராணி ஊட்டிவிட்டு அனுப்பியதெல்லாம் தலைக்கு ஏறி கண்களில் தண்ணீர் நின்றது.

“டேய் என்னடா நீ. இந்தா தண்ணி குடி” தலையில் தட்டி தண்ணீர் பார்ட்டிலை விக்ரம் அவனிடம் நீட்டினான். அதை வாங்கிக் குடித்தவன் தன்னை ஆசுவாசப்படுத்தினான்.

“இவன் என்ன வேணும்னு பண்றானா” அதற்கும் அவள் அவனை விடவில்லை.

“எங்களுக்கு வசதி இல்ல. அப்பா உங்ககிட்ட டிரைவரா இருக்காரு. எனக்கும் சக்திக்கும் பீஸ் கட்டுற அளவுக்கு அப்பாகிட்ட காசு இல்ல. அப்ப நீ சொல்லி லாயர் அய்யாதான், நீ படிக்கற ஸ்கூல்லயே என்னையும் சேர்த்து படிக்க வச்சு பீஸூம் கட்டிக்கிட்டு இருக்காரு. சக்தி படிப்புக்கும் மெய்ன் டர்ம் பீஸ் அவர் தான் கட்டுறாரு. அதேமாதிரி பாவம் அந்த பையனுக்கு என்ன குடும்பக் கஷ்டமோ, இந்த வயசுல வேலைக்கு வந்துட்டான். அவனை இவங்க பேமிலி படிக்க வைக்கலாம்ல. இருக்குறவங்க தான எங்கள மாதிரி இல்லாதவங்களுக்கு உதவி பண்ணனும். படிப்பு கொடுக்கறது ரொம்ப பெரிய புண்ணியம் விக்ரம். முதல்ல இந்தமாதிரி சின்ன பசங்களுக்கு வேலை தரவேணாம்னு அவங்க அப்பாகிட்ட சொல்ல சொல்லு விக்ரம்” விக்ரமிடம் சொல்வதாக அனைத்தையும் அவனிடம் சொன்னாள்.

முதல்முறையாக சந்தியா தன் வீட்டை பற்றியும் தங்களது நிதி நிலையை பற்றியும் சொன்னாள். அத்தோடு யாரோ முன் பின் தெரியாத ஒருவன் தானே என்று நினைக்காமல் அவனுக்கு படிப்பு கொடுக்கக் கேட்பது அவளது உயர்ந்த உள்ளத்தை காட்டியது. அதையெப்படி அவனால் ரசிக்காமல் இருக்கமுடியும்.

‘இந்த வியாக்கானம் எல்லாம் நல்லா பேசுவா. அந்த பையனை படிக்க வைக்கணுமாம். இல்லாதவங்களுக்கு படிப்பு தர்றது பெரிய புண்ணியமாம். ஆனா அந்த பையன் முகத்தை மட்டும் மறந்திடுவா. இவ மறந்ததும் ஒரு விதத்துல நல்லது தான். இதுல சின்னப் பசங்கள வேலைக்கு வைக்ககூடாதுன்னு நான் அப்பாகிட்ட சொல்லணுமாம். எங்க கடைல வேலை பார்த்த ஒரே சின்னபையன் நான் தான். அதுவும் பதினாலு வயசுக்கு அப்புறம் தான். எது எப்படியோ யாரோ ஒருத்தனுக்காக இவ்ளோ அக்கறைப்படறாளே இதுதான் இவளை எனக்கு தனியா காட்டுது. ஐ லைக் ஹர்’ கடந்த சில நாட்களாக எல்லாவற்றையும் இழந்துவிட்டதாக எண்ணினான். இன்றோ அனைத்தும் திரும்ப பெற்றுவிட்டதாக தோன்ற, சந்தோசத்தில் சிரிக்க உதடுகள் பிரிய ‘ஐயோ வேண்டாம் கௌதம். இப்ப மட்டும் சிரிச்ச அந்த பையன் கஷ்டம் உனக்கு சந்தோசமா இருக்கானு கேட்பா. கன்ட்ரோல் யுவர்செல்ஃப்’ தனக்குள்ளேயே பேசிக் கொண்டிருந்தவனை பதிலுக்காக பார்த்திருந்தாள். அவன் தனக்குள் பேசிக் கொண்டிருந்ததால் அவளை கவனிக்கவில்லை.

“என்ன விக்ரம் நான் சொன்னதுக்கு பதிலை காணோம்” கிட்டத்தட்ட மிரட்டினாள்.

‘பதிலா.. நான் என்னனு சொல்லுவேன். என்னை நானே எப்படி படிக்க வச்சிக்க முடியும். இவளுக்கு இத நான் எப்படி புரிய வைப்பேன். சரி படிக்க வைக்கறேன்னு சொல்றது கூட பரவாயில்ல. அப்புறம் அவனை காட்டுன்னு சொன்னா’ என்று யோசிக்க ‘டேய் கௌதம் நீதான் அவகிட்ட பேசலயே. அப்படியே யெஸ் ஆகிடு. அதான் பெஸ்ட்’ திட்டத்தை உருவாக்கியவன்

“நான் கிளம்பறேன்டா விக்கி. வீட்டுல தேடுவாங்க. நாளைக்கு கிளம்பறப்போ மெசேஜ் பண்ணு. நான் அங்க இருப்பேன். கிளம்பறேன்னு சொல்லிடுடா” என்றுவிட்டு அவளை திரும்பிக் கூட பார்க்காமல் சென்றான். அவனுக்கு புரியவில்லை அவனது இச்செயல் அவளுக்கு கோபத்தை தான் தூண்டுமென்று.

“திமிருப்பிடிச்சவன். நான் என்ன எனக்காகவா கேட்டேன். அந்த தம்பிக்காக தான கேட்டேன்” வாய்க்குள்ளே முணுமுணுத்துக் கொண்டாள். நல்லவேளை ‘தம்பி’ என்ற சொல்லை கௌதமிடம் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் துடித்துப் போயிருப்பான்.

“நானும் கிளம்பறேன் விக்ரம்” என்றுவிட்டு அவளும் கிளம்பினாள்.


உண்மையாகும்..


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் - 9

அடுத்தநாள் விக்ரமும் சந்தியாவும் டி.நகரில் இருக்கும் செல்வராணி சில்க்ஸை வந்தடைந்தனர். வந்ததும் கௌதமிற்கு அழைக்க அவன் புடவைகள் இருக்கும் தளத்திற்கு வந்துவிட சொன்னான். உள்ளே சென்றால் கார்த்தியாயினி பணம் செலுத்துமிடத்தில் அமர்ந்திருக்க உடன் குட்டிப்பெண் நித்திலா இருந்தாள். கௌதம் அங்கே பில் கௌன்டரின் மீது சாய்ந்து நின்று அவர்களிடத்தில் பேசிக் கொண்டிருந்தான்.

விக்ரமும் சந்தியாவும் வர “அக்கா. இது என் ப்ரண்ட் விக்ரம், ஞாபகம் இருக்கா. அவங்க அவன் ப்ரண்ட்” இருவரையும் கௌதம் கார்த்தியாயனிக்கு அறிமுகப்படுத்தினான். கார்த்தியாயினியும் இருவரையும் பார்த்து சிறுப் புன்னகையுடன் தலையசைக்க

“ஹலோ க்கா. ஹலோ குட்டி” கார்த்தியாயினி, நித்திலா இருவருக்கும் சேர்த்து விக்ரம் சொல்ல உடன் நின்றிருந்த சந்தியா தலையை மட்டும் மரியாதை நிமித்தமாக அசைத்தாள்.

“நான் இவங்க கூட போயிட்டு வரேன்க்கா” கௌதம் சொல்லிவிட்டு கிளம்ப “நானும் அண்ணன் கூட போறேன்க்கா” சொல்லிக் கொண்டே நித்திலா ஓடிவந்து கௌதம் கையை பிடித்துக் கொண்டாள்.

புடவைகளை பார்த்தனர். கௌதம் மிகவும் எச்சரிக்கையாக இருந்தான். உள்ளே சென்று ஒவ்வொரு புடவையையும் எடுத்துக்காட்ட ஆசை தான். அதை பார்ப்பவள் கண்டு பிடித்துவிட்டால்? அதனால் பணிபுரிபவரை எடுத்து பிரித்துக்காட்ட சொல்லிவிட்டு அவன் விக்ரம் அருகிலேயே நின்றான். கௌதம், இது இப்படியிருக்கும் அது அப்படியிருக்கும் என்று ஒவ்வொரு புடவையையும் காட்டி சொல்ல விக்ரமும் அவனுக்கு பிடித்ததை தேர்வு செய்தான். பின் பணம் செலுத்தும் இடத்திற்கு சென்று பணத்தை செலுத்திவிட்டு திரும்பிப் பார்த்தால் சந்தியாவை காணவில்லை.

“அந்த அக்கா இந்த சைடு போனாங்கண்ணா” நித்திலா சொல்ல கௌதமும் விக்ரமும் நித்திலாவை ஆளுக்கு ஒரு கையில் பிடித்துக் கொண்டு நித்தி சொன்ன பக்கம் போனார்கள். அவள் அந்த பகுதிக்கு பின்னால் இருந்த பட்டுப்புடவை பகுதியில் அன்றைக்கு புடவை பார்த்த இடத்தில் நின்றிருந்தாள். விக்ரமுக்கு புரியவில்லை, ஆனால் கௌதமுக்கு நன்றாக புரிந்தது.

வேகமாக அவளிடம் சென்றவன் “மேடம் எதுக்கு இங்க நிக்கறாங்க விக்கி” என்றான்.

“நான் சொன்னேன்ல விக்ரம். அந்த பையன் இங்க தான் இருந்தான். இன்னைக்கு காணோம்” வருத்தப்பட்டு சொன்னவள், அங்கே தள்ளி நின்றிருந்த பணியாளரை அழைக்க உடன் கௌதம் நின்றிருப்பதை பார்த்து அவரும் ஓடிவந்தார்.

“இங்க எங்க வயசுல எதாவது சின்ன பையன் வேலை செய்யறானா” அவரிடம் அவள் கேட்க

“சின்ன பையனா. அந்த மாதிரி யாரும் வேலை பார்க்கலைங்களே. இந்த கடைல ரொம்ப சின்னப்பசங்கள வேலைக்கு வைக்க எங்க அய்யா விரும்ப மாட்டாருங்க. படிப்பு தான் முக்கியம்னு சொல்லுவார். எங்க பசங்களயே அய்யா தான் படிக்க வைக்கறாரு” அவர் சொல்ல சந்தியா குழம்பிப் போய் அவரை பார்த்தாள்.

“இல்ல மூணு மாசம் முன்னாடி இங்க ஒரு தம்பிய நான் பார்த்தேன்”

‘தம்பியா’ கௌதம் அதிர்ந்துப் போனான். அது தான் தான் என்று முன்பே சொல்லியிருந்தால் அவள் இந்தளவிற்கு போயிருப்பாளா?

இம்முறை அந்த பணியாளர் “ம்மா, நீங்களே சின்னப்பொண்ணு மாதிரி தான் தெரியறீங்க. உங்க தம்பின்னா நம்ப சின்னம்மா வயசுல தான் இருப்பாங்க” நித்திலாவை காட்டி சொல்லியவர் “அந்த வயசுல இருக்கவங்கள ஏன் எங்க அய்யா வேலைக்கு வைக்கப் போறாரு” என்று சிரித்தார். கௌதமும் விக்ரமும் அடக்கமுடியாத சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்றிருந்தனர்.

“சந்து, என்னடி இங்க கலாட்டா பண்ணிக்கிட்டு இருக்க. அதான் யாருமில்லனு சொல்றாங்கல. அதோட நீ அந்த பையன் முகத்தை வேற மறந்துட்டேனு சொல்ற. அப்புறம் எதுக்குடி அவரை வேற படுத்தற” விக்ரம் பணியாளரை காட்டிச் சொல்ல

“இல்லடா நான் பார்த்தேன்” பாவமாக சொன்னவளை ரசிக்கும் எண்ணத்தில் இருந்தானே தவிர, தான் தான் அது என்று உண்மையை சொல்லும் எண்ணத்தில் இல்லை.

“கொஞ்சம் ஞாபகப்படுத்தி பாரு. அந்த பையன் எப்படி இருந்தான். என்னை மாதிரி, இல்ல நம்ம கௌதிய மாதிரி” விக்ரம் அவளுக்கு அவன் முகத்தை ஞாபகப்படுத்த முயற்சிச் செய்ய

‘அடப்பாவி டேய். நீ வேற ஏன்டா இப்படி பண்ற. அவ தான் மறந்துட்டால. அப்புறம் எதுக்கு உனக்கிந்த வேண்டாத வேலை’ தன் மனதிற்குள்ளேயே விக்ரமுக்கு பூஜை செய்தான்.

“ஐயோ நான் அன்னைக்கு அவன் முகத்தையே பார்க்கலைடா. அவன் பாட்டுக்கு புடவை காட்டினான் நான் வெறும் புடவைய தான் பார்த்தேன். அவன் அப்பியரன்ஸ் வச்சி அவனுக்கு நம்ம ஏஜ் தான் இருக்கும்னு சொல்றேன்”

‘அடிப்பாவி, அப்ப நீ என் முகத்தையே பார்க்கலையா. நான் இவ முகத்தை மட்டும் தான் பார்த்துக்கிட்டு இருந்தேன். இவன் என்னனா என் அப்பியரன்ஸ் பார்த்தாளாம். இதுல அவனை படிக்க வை கலெக்டராக்குனு டயலாக் பேசிக்கிட்டு இருக்கா’ இப்போது மனதிலேயே சந்தியாவிற்கும் சேர்த்து பூஜை செய்தான்.

“ஒழுங்கா கிளம்பு சந்தியா. டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க. மீனாம்மாகிட்ட யார் திட்டு வாங்கறது. அடுத்து நித்தி பாப்பாவுக்கு வேற எதோ திங்ஸ் வாங்கணும்” விக்ரம் சந்தியாவை இழுத்துச் செல்ல

அந்நேரத்தில் அந்த பணியாளர் “அம்மா ஒருவேளை நீங்க எங்க சின்ன அய்யா..” என்று ஆரம்பித்தவரை ஒன்றை பார்வையிலேயே நிறுத்தினான் கௌதம்.

‘முதல்ல அவ, அப்புறம் விக்கி, இப்போ இவரா. டேய் கௌதம், என்னடா உன் பொழப்பு இப்படி ஓவர்டைமா போகுது’ மனதிற்குள்ளேயே நொந்துக் கொண்டான்.

நால்வரும் அங்கிருந்து கிளம்பினார்கள். நித்திலாவிற்கு வாங்க வேண்டியதை வாங்கிவிட்டு அவள் ஐஸ்கிரீம் கேட்டதால் நால்வரும் ஐஸ்கிரீம் பார்லருக்குள் நுழைந்தனர்.

“அக்கா உங்களுக்கு ஹேர் ரொம்ப லாங்கா இருக்கு. நானும் பெருசான இந்தமாதிரி லாங்கா வளர்த்துப்பேன்” ஐஸ்கிரீமை நக்கிக் கொண்டே நித்திலா சொல்ல அவளது கன்னத்தை செல்லமாக கிள்ளி முத்தமிட்டாள்.

நித்திலா கௌதமிடம் பன்மையில் பேசுவது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. சக்தி அவளை அக்காவென்று அழைத்தாலும் ஒருமையில் தான் பேசுவான். அதனாலேயே நித்திலாவை அவளுக்கு பார்த்தது முதலே பிடித்துப் போனது.

அந்நேரத்தில் கௌதமுக்கு அழைப்பு வர “டேய் அக்காடா. இப்ப வந்திடுறேன்” என்று எழுந்துப் போனான்.

அவன் தமையென்று சொன்னதை கேட்ட நித்திலா, கேட்காத தகவலாக “எங்க தமையா அக்கா. டாக்டர் படிக்கறாங்க” என்றுச் சொன்னாள்.

அவளது கன்னத்தைப் பிடித்து “அப்படியா, சோ க்யூட். உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, எங்க வீட்டுக்கு வந்துறியா” என்றாள்.

“ம்ஹூம்.. பெரியப்பா பெரியம்மா இல்லாம நான் வரமாட்டேன்” அவள் சொல்ல என்ன இவள் யாரை பெரியப்பா பெரியம்மா என்று சொல்கிறாள் என்ற குழப்பம் வந்தாலும் அதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

“செம வாயாடி. லாஸ்ட் டைம் இவளோட செம ஃபன். என்ன நித்திலா, என்னை மறந்துட்டியா” விக்ரம் கேட்க

“ஆமா நீங்க யாரு. எனக்கு ஞாபகம் இல்லயே” என்று சொன்னவள் “எனக்கு இந்த அக்காவ மட்டும் தான் தெரியுது. இவங்களுக்கு செம லாங் ஹேர். ஃபேரிடைல் பிரின்சஸ் ரபன்ஸல் மாதிரி” என்றாள் நித்திலா. அத்தோடு,

“ரபன்ஸல்! ரபன்ஸல்! லெட் டோவ்ன் யுவர் ஹேர், தட் ஐ மே கிளைம் யுவர் கோல்டன் ஸ்டேர்!”

அந்த கதையை படித்தவள் அதில் வரும் பாடலைப்பாடி “ஐ லைக் யு அக்கா” என்று சந்தியாவிற்கு ஐஸ்கிரீம் சாப்பிட்ட வாயாலேயே ஒரு முத்தமும் கொடுத்தாள்.

“ஐ லைக் யு டூ நித்தி” இவளும் பதிலுக்கு முத்தம் கொடுத்தவள் “டேய், சம்மந்தமே இல்லாம ஒரு அக்கா. சம்மந்தமே இல்லாம ரைம்ஸ் சொல்ற குட்டி தங்கச்சி, நடுவுல இவனா. இப்ப யாரோ ஃபோன் பண்ணாங்க. நான் கூட அக்காவ தான் தமைனு சொல்றான்னு நினைச்சேன். ஆனா இந்த குட்டிப் பொண்ணு ‘தமையா அக்கானு’ சொல்லுது. நேத்து கார்த்தி அக்கானு சொன்னமாதிரி ஒரு ஞாபகம். இவனை உனக்கு எத்தனை வருஷமா தெரியும். உண்மையிலேயே இவன் நல்லவன் தானா. ஒருவேளை எல்லாம் பொண்ணுங்களையும் அக்கானு சொல்லிட்டா இவனை நல்லவன்னு நம்பிடுவாங்கனு நினைக்கறானோ” விக்ரமிடம் மெல்லிய குரலில் சொன்னாள்.

“ஏன்டி எப்பவும் எங்க வந்தாலும் சைலண்ட்டா தான இருப்ப. இன்னைக்கு இந்த குட்டிப் பொண்ணு நித்தியோட மோசமா இருக்க” விக்ரமால் இன்று சந்தியாவை சமாளிக்க முடியவில்லை. அந்த ஆதங்கத்தில் சொன்னான்.

அந்நேரத்தில் கௌதம் அங்கு வந்தமர்ந்து “நித்தி, ஐஸ்கிரீம் போதுமா இன்னும் வேணுமா” என்றான்.

“சும்மா குழந்தைய கெடுக்க வேணாம் விக்ரம். அவ ஏற்கனவே நிறைய ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டா” அதட்டல் குரலில் சொன்னவள் டிஸ்சு பேப்பரை எடுத்து நித்திலாவின் கை, வாயை துடைத்துவிட வழக்கம் போல் அதையும் அவன் ரசித்தான்.

“அண்ணா இந்த அக்காக்கு நீங்க நல்லவங்களானு டவுட் வந்துச்சாம்ண்ணா” என்று நித்தி போட்டு கொடுக்க, அவளெதிரில் பேசியது தவறென அப்போதே சந்தியாவிற்கு புரிந்தது.

அவளை தன் ஒரு புருவத்தை உயர்த்திப் கௌதம் முறைக்க, அவளுக்கோ என்ன சொல்லவென்றே புரியாமல் “இந்த குட்டி நான் முன்னாடி சொன்னத விட்டுடுச்சு” என்றவள் “இப்ப தான என்னை பார்த்து ஐ லைக் யு அக்கானு சொன்ன அதுக்குள்ள உன் அண்ணன பார்த்ததும் போட்டு தர” நித்திலாவிடம் குழந்தைப் போல் சண்டை பிடித்துக் கொண்டிருந்தாள்.

“ஓ.. முன்னாடி வேற சொன்னீயா” கௌதம் விடாமல் பேச்சிற்கு வந்தான்.

“நான் முன்னாடி என்ன சொன்னேன்னா. உனக்கு ஒரு பெரிய அக்கா அப்புறம் ஒரு ரொம்ப சின்ன தங்கச்சி. நடுவுல தமைனு யாரோ ஃபோன் பண்ணாங்க. நீ போனதும் அது உங்களோட தமையா அக்கானு நித்தி சொன்னா. அவங்க டாக்டர்க்கு வேற படிக்கறாங்கனு சொல்றா இந்த குட்டிப்பொண்ணு.. ஆனா உங்க அக்கா.. கடைல.. அவங்க கார்த்தி தான.. அதான் ஒரே குழப்பமா இருக்கு.. ஒருவேளை.. நீ நல்லவனானு.. டவுட்.. அதோட உங்க கடைல வேற எல்லாம் மர்மமா இருக்கு” மென்று முழுங்கிச் சொல்லி முடித்தாள்.

இப்போது அவன் இரு புருவத்தையும் உயர்த்தி முறைக்க “சும்மா சும்மா முறைக்காத. சஸ்பீசியஸா இருந்தா அப்படிதான் கேட்க தோணும்” என்றுவிட்டாள்.

“வாட்? சஸ்பீசியஸா தெரியறோமா” அவள் சொன்னதில் அவனுக்கு கோபம் தலைகேறியது. அதுவும் அவனது தாய், தந்தை, குடும்பம், அவர்களது கடையை பற்றி யாராவது ஏதாவது சொன்னால் முடிந்தது கதை. அவனை அடக்கவே முடியாது.

“ஆமா” என்றவள் மீது கோபம் எல்லையை கடந்திருந்தது. அருகில் நித்திலா இருப்பதை உணர்ந்தவன் கண்களை மூடி தன்னை ஆசுவாசப்படுத்தினான்.

“என்னை, எங்க கடைய சஸ்பெக்ட் பண்ற அளவுக்கு என் குடும்பத்தை பத்தி அப்படி என்ன குழப்பம் வந்துச்சு உனக்கு. எனக்கு மொத்தம் மூணு அக்கா, ரெண்டு தங்கச்சி. பெரிய அக்கா கார்த்தியாயினி தான் கடைல இருந்தாங்க. அடுத்த அக்கா அருந்ததி. லா படிக்கறாங்க. இன்னொரு அக்கா தமயந்தி. நான் தமைனு கூப்பிட்டது அவங்கள தான். டாக்டருக்கு படிக்கறாங்க. அருந்ததியும் தமயந்தியும் டிவின்ஸ். அப்புறம் நிரஞ்சனா நயன்த் படிக்கறா. குட்டி நித்தி..”

அவன் சொல்லவும் குட்டி நித்திலா “ஃபோர்த் படிக்கறா” என்று அவளே தன்னை பற்றி மழலை குரலில் சொன்னாள். “நிரஞ்சனாவும் நித்திலாவும் என் சித்தப்பா பொண்ணுங்க. எல்லாம் ஒண்ணா தான் இருக்கோம். இப்ப நான் நல்லவனா தெரிஞ்சிட்டேனா” என்றவன்

“அப்புறம் கடை மர்மமா இருக்கா. எங்க கடைய பத்தி இப்படி சொன்ன முதல் ஆள் நீதான். இப்ப என்ன, அந்த பையனை படிக்க வைக்கனும். சரி படிக்க வச்சு டாக்டரோ.. இல்ல இல்ல வேண்டாம். டாக்டர் வேண்டாம். இன்ஜினீயர் ஓகேவா. அவனை இன்ஜினீயர் ஆக்கிடுறேன். இல்ல வேற எதாவது ஆக்கணும்னாலும் சொல்லு, பண்ணிடலாம்” அவன் கோபமாக பேசுகிறான் என்று நித்திலாவிற்கு தெரியவில்லை ஆனால் விக்ரமிற்கும் சந்தியாவிற்கும் நன்கு புரிந்தது.

“உனக்கு தான் ஒரு தம்பி இருக்கான்ல அப்புறம் எதுக்கு ஊருல இருக்கிறவனெல்லாம் தம்பியா எடுத்துக்கற. பாவம் அவங்களை விட்ரு” அவன் பேசி முடிக்கவும் அவளுக்கே தான் அதிகபடியாக பேசி அவனை காயப்படுத்தி விட்டோமோ என்று தோன்றியது.

“சாரி கௌதம். அது.. சாரி” தயங்கி தயங்கி அவனிடம் மன்னிப்பும் கேட்டாள்.

“இத நீ வீட்டுக்கு வந்து கேட்டிருந்தா, நானே சொல்லிருப்பேன். ஏன்டி இப்படி மானத்தை வாங்கற. சாரி கௌதம்” விக்ரம் சொன்ன பிறகு தான் கவனித்தவன்

“ஆமா நீங்க ரெண்டுபேரும் பேசிக்கிட்டீங்க தான” விக்ரம் சொல்ல, அப்போது தான் இருவருக்குமே நடந்த வாக்குவாதத்தில் அவர்கள் பேசிக்கொண்டது புரிந்தது.. அதை நினைத்து இருவரும் சிரித்துக் கொண்டனர்.

அதை புரிந்து விக்ரமும் புரியாமல் நித்திலாவும் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தார்கள். அந்த நால்வருக்கும் விதி என்னென்ன திட்டத்தைப் போட்டு வைத்துள்ளது என்பதை அறியாதவர்கள் சிரித்து மகிழ்ச்சியாக இருந்தனர். நித்திலாவும் விக்ரமும் இன்று போல் பின்வரும் காலத்திலும் சந்தியாவிற்கும் கௌதமிற்கும் தெரிந்தும் தெரியாமலும் நிறைய உதவிகளை செய்துக்கொண்டே தான் இருந்தனர். அவர்களே முடிவெடுக்க முடியாமல் திணறியபோதும் இவர்களின் முடிவு அவர்களுக்கு உதவியுள்ளது.

விக்ரம் தானே அவர்கள் பேசிக் கொள்ளவில்லை என்றாலும் மூவரும் ஒன்றாக தான் இருக்கவேண்டும் என்று சொன்னான். இங்கே குட்டி நித்தி அண்ணனிடம் சந்தியாவை மாட்டிவிட சொல்லி, அவர்களை பேச வைத்துவிட்டாள். நிகழ்காலத்திலும் நித்திலா தானே பெரிய அன்னையை அண்ணனிடம் அனுப்பியிருக்கிறாள்.

நித்தியும் அவளுடைய ரபன்ஸலை எப்படி மறந்தாள் என்று தான் தெரியவில்லை. ஞாபகம் இருந்திருந்தால் நிச்சயம் அண்ணன் காதலிக்கும் பெண் அவளென்று உறுதி செய்திருப்பாள். விக்ரமிடம் அவளை பற்றி கேட்டும் இருப்பாள்.

அதுமட்டுமா உண்மையில் சந்தியா சொன்ன வார்த்தைகள் நிஜம் தானோ? அவள் அவனிடம் பேசாமல் இருந்திருந்தால் அவள் வாழ்க்கை இல்லையில்லை அவர்கள் வாழ்க்கை சந்தோசமாக இருந்திருக்குமோ என்னவோ.


*****
அந்த ஐஸ்கிரீம் பார்லரில் கோபத்தில் தங்களை மறந்து இருவரும் பேசிக் கொண்டார்கள். இதுதான் சந்தியாவும் கௌதமும். பொறுமையாக இருக்கும் வரையே இருவரும் ‘பூ’. கோபம் வந்து இருவரும் பேச ஆரம்பித்தால் புயலாக மாறி தங்களையே மறந்து ‘உண்மையை பேசுபவன் தெய்வத்திற்கு சமம்’ என்று அனைத்தையும் கக்கி விடுவார்கள்.

முதலில் நம்பர் மாற்றி கொள்ளப்பட்டது. சந்தியா அப்போது விக்ரம் அவளுக்கு வாங்கிக் கொடுத்த கைபேசியை தான் வைத்திருந்தாள். பக்கத்துக்கு வீட்டில் தானே இருக்கிறேன், கூப்பிட்டால் வரப் போகிறேன். இதற்கு எதற்கு கைபேசி என்று தான் அவன் வாங்கிக் கொடுத்த போது சந்தியா சொன்னாள். அவன் கைபேசி வாங்கி தந்தது அவனுக்கு உதவியாக இருந்ததோ என்னவோ கௌதமுக்கு நன்கு உதவியது. சந்தியா கௌதமுடைய ‘குட் மார்னிங்’ குறுஞ்செய்தியை பார்த்தே எழுவாள். காலையில் நேரத்தில் எழுவது அவனது வழக்கம். எழுந்ததும் அவளுக்கு குட் மார்னிங் சொல்லிவிட்டு தான் அடுத்த வேலையே.

குட் மார்னிங்கில் ஆரம்பித்து வீட்டு பாடத்தை செய்தாயா, தேர்விற்கு படித்தாயா, அந்த மேத்ஸ் சம்மிற்கு என்ன விடை வந்தது போன்றதாகவே பேச்சுக்கள் இருக்கும். கௌதமுக்கும் அதற்குமேல் வேறு மாதிரியான பேச்சுக்களை வைத்துக் கொள்ள தோன்றவில்லை.

கௌதம் நிறைய பேசுவான். அவன் பேசும் போது அவ்வளவு அழகாக இருக்கும். கண்களிலும் வார்த்தைகளிலும் உயிர் இருக்கும். எதை சொன்னாலும் கோர்வையாக கதையாக சொல்லுவான். அவன் பேசுவதை கேட்கவே சந்தியாவிற்கு மிகவும் பிடிக்கும். அதற்காக அவள் பேசமாட்டாள் என்று நினைக்க வேண்டாம். அது என்னவோ மற்றவர்களிடம் அதிகம் பேசாதவள், விக்ரம் கௌதம் என்று வந்துவிட்டால் அதிகமும் பேசுவாள் அதிகாரமும் செய்வாள். அவர்கள் தவறு செய்தால் அதட்டவும் செய்வாள் கோபமும் படுவாள்.

ஆம், இப்போது விக்ரம், சந்தியா மட்டுமல்ல கௌதமோடு சேர்ந்து அவர்கள் மூவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகியிருந்தனர். விக்ரம் கௌதமை அழைப்பது போல் சந்தியாவும் ‘கௌதி’ என்றே அவனை அழைப்பாள்.

மூவரும் அரட்டை அடிப்பதும், விடுமுறை நாட்களில் வெளியே செல்வதும் என அந்த பள்ளியிருந்த மந்தவெளியிலும் அதை சுற்றியுள்ள பகுதியிலும் ஒரே கலாட்டா செய்து வந்தனர்.

சந்தியா வீட்டில் விக்ரம் உடன் இருப்பதால் அவனுடன் சென்று வருகிறாள் என்று எதுவும் சொல்ல மாட்டார்கள். விக்ரம் வீட்டில் சொல்ல ஆளே இருக்க மாட்டார்கள். கௌதம் வீட்டில் சொல்லவே மாட்டான். அவன் முதலிலிருந்தே வீட்டில் சொல்லிவிட்டு எதையும் செய்பவன் அல்லவே. நண்பர்களுடன் வெளியே செல்கிறேன் என்று தகவலாக மட்டுமே சொல்வான்.

கௌதம் டிரைவரை வைத்து கார் எடுத்து வந்தால் அட்டகாசம் இன்னும் பலமடங்கு அதிகமாகும். சந்தியா முதன்முதலில் இறக்குமதி செய்யப்பட்ட உயர்தர காரில் ஏறினாள் என்றால் அது அவனது காரே. சத்தமாக பாடலை ஒலிக்கவிட்டு ஜன்னலை திறந்துக் கொண்டு லாங் டிரைவ் போவது அவளுக்கு மிகவும் பிடிக்கும். சின்ன வயதில் இருந்தே முத்துகிருஷ்ணன் ஆட்டோவிலும் வாடகைக்காரிலும் அழைத்துச் சென்று அதை பிள்ளைகளுக்கு பழகியிருக்கிறார்.

“கௌதி நம்ப ப்ரண்ட்ஷிப் சாங் போடேன்” சந்தியா கேட்க காரில் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த கௌதமும் போட்டான்.

‘வார் ஷிப் என்றும் நீரில் ஓடும்
ஸ்பேஸ் ஷிப் என்றும் வானில் ஓடும்
ப்ரண்ஷிப் ஒன்றுதான் என்றும் நெஞ்சில் ஓடுமே
ஓஹோ ஹோ

ப்ரண்ட்ஷிப் என்றும் தெய்வம் என்று
ஒர்ஷிப் செய்வோம் ஒன்றாய் நின்று
ஒவ்வோர் உள்ளமும் இங்கு கோயில் ஆகுமே

நாட்டில் உள்ள கூட்டணிப் போல்
நாங்கள் மாற மாட்டோமே
நட்பு என்னும் சத்தியத்தை
நாங்கள் மீற மாட்டோமே

நண்பா வா ஹே ஹே ஹே ஹே
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் என்று கண்டு யார் சொல்வாரோ

கடல் கொண்ட மழை நீரை
இதை காண முடியாது

கடல் கொண்ட நதி நீரை
அடையாளம் தெரியாது’

மூவரும் வானில் பறந்து சந்தோசமாக திரிந்தனர். ஒரு பெண்ணிற்கு தந்தை, சகோதரன், பின்னாளில் கணவன், மகன். இவர்கள் தான் அவள் வாழ்வின் பாதுகாவலர்கள் என்றிருந்த பழையகாலம் மாறி இப்போது ஒரு நல்ல ஆண் நண்பனும் அவளை பாதுகாப்பான் என்று உலகம் மாறித் தான் இருந்தது. அது சந்தியா விசயத்திலும் பொய்யில்லை. அதுவும் அவளுக்கு ஒன்றல்ல, அவளுக்காக எதையும் செய்யும் இரண்டு ஆண் நண்பர்களாக விக்ரமும் கௌதமும் இருந்தனர்.

அதற்காக பாதுகாப்பது மட்டும் அவர்களது பணி என்று இருந்துவிடவில்லை. அவளை படுத்துபவர்களும் அவர்கள் இருவரே. அவர்களை பொறுத்தவரை அவர்கள் கையில் கிடைத்த பொம்மை அவள். அவளை சீண்டி பார்ப்பதும், கிண்டல் செய்வதும், சமயத்தில் அவர்களது கேலியால் அவளை அழ வைப்பதும் அவர்களே. இதுவெல்லாம் அவர்கள் நட்பில் சகஜமே.

எங்கு வெளியே சென்றாலும் கேமராவை வைத்து விதவிதமாக புகைப்படம் எடுக்கவும் மூவரும் தவறியதில்லை. அன்றும் மூவரும் அவர்களது மற்ற நண்பர்கள் பீட்டர், தினேஷ், சரவணன், செல்வம் மற்றும் விக்னேஷுடன் வெளியே சென்றிருந்தனர்.

“ஹேய், சீக்கிரம் ஒழுங்கா போஸ் கொடுடி. எவ்ளோ நேரம் குனிய வைப்ப” பொறுமையை இழந்த கௌதம் சொன்னான். கௌதமும் விக்ரமும் தரையில் முட்டிப் போட்டிருக்க, கௌதம் மீது ஒரு காலையும் விக்ரம் மீது மற்றொரு காலையும் வைத்து அவர்கள் மீது ஏறி நின்றிருந்தாள்.

“நான் என்னடா பண்ணுவேன் காத்துல முடி பறக்குது. ரெண்டுபேரும் நல்ல கடோர்கஜன் மாதிரி தான இருக்கீங்க. கொஞ்சம் நேரம் வெய்ட் பண்ணமுடியாதா. இதோ சரி பண்ணிட்டேன். தினேஷ் அண்ணா இப்ப எடு” என்றாள்.

ஆம், இப்போது விக்ரம் கௌதமை தவிர அவர்களது மற்ற நண்பர்களை சந்தியா ‘அண்ணா’ என்றே அழைக்கிறாள். கௌதம் தான் அவள் யாரிடத்திலும் அதிகம் பேசுவதில்லை என்று அவர்களின் நண்பர்களிடத்தில் அறிமுகம் செய்து வைத்தான். அவளோ அவர்களை அண்ணாவென்று அழைக்க துவங்கிவிட்டாள்.

சந்தியா மிகவும் சந்தோஷமாக இருந்தாள். இந்த உலகத்திலேயே அவள் தான் மிகவும் கொடுத்து வைத்தவள் என்றெண்ண தொடங்கினாள். அப்படி தான் விக்ரமும் கௌதமும் அவளை தாங்கினார்கள். இந்த நிமிடம் இந்த நொடி அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை பின்னாளில், ஒருவன் தனக்காக எதையும் இழக்கும் உயிர்தோழனாகவும், இன்னொருவன் தனக்காக உயிரையே கொடுக்கும் காதலனாகவும் மாறப் போகிறார்கள் என்று.

எது எப்படி நடந்தால் என்ன, இந்த நொடி அவர்கள் மூவரும் அடுத்த நாளை பற்றி யோசிக்காமல் இந்த நாளை மகிழ்ச்சியாக கழித்தார்கள். இதில் கௌதம், தான் எதற்கு இந்த பள்ளியில் சேர்ந்தோம் என்பதையே முற்றிலுமாக மறந்திருந்தான். அவனுக்கு வேண்டியதெல்லாம் அவன் தேவதை கடைசிவரை அவனுடன் இருக்கவேண்டும். இப்போது சந்தியா அப்படி தான் அவனுக்கு இருந்தாள். அவனை பொறுத்தவரை அந்த நட்பே போதுமென்று எண்ண ஆரம்பித்தான். ஆனால் ஒன்று மட்டும் உறுதி, அவள் தான் அவனது தேவதை. அதில் எந்த மாற்றமும் அந்நாளிலும் இந்நாளிலும் எந்நாளிலும் வந்ததில்லை, வரப் போவதுமில்லை.

அவள் அவனுடன் இருக்கிறாள். அதுபோதும் என்றெண்ணி திருப்தி அடைந்தவன் அதற்கே மோசம் வரும்போது என்ன முடிவெடுப்பான் என்பது அவனுக்கே தெரியாத ஒன்று.

இப்படியே பதினோறாம் வகுப்பு இறுதியை வந்தடைந்தனர். அப்போது தான் அந்த நிகழ்வு நடந்தேறியது.

விக்ரம், கௌதம், சந்தியா மூவரும் விக்ரமின் வீட்டில் கூடி ஒன்றாக படிப்பது, விளையாடுவது, அரட்டை அடிப்பது வழக்கமான ஒன்றே. அன்றும் அது தான் நடந்துக் கொண்டிருந்தது.

“ரெண்டுபேரும் ஆன்வல் எக்ஸாம்க்கு ப்ரிபேர் பண்ணப்போறேன்னு வந்ததுல இருந்து பிளே ஸ்டேஷன்ல கேம் தான் விளையாடிட்டு இருக்கீங்க” காலையிலிருந்து இருவரும் படிக்கிறோம் என்று சொல்லிவிட்டு விளையாடிக் கொண்டு தான் இருந்தார்கள். சந்தியாவும் அவள் வீட்டுற்கு சென்று அன்னைக்கு வீட்டு வேலையில் உதவி செய்துவிட்டு வந்துப் பார்த்தால் அப்போதும் விளையாடிக் கொண்டு தான் இருந்தனர்.

அவள் சொன்னதை காதில் வாங்கினார்களா இல்லையா என்று கூட தெரியவில்லை. கீழே சென்று இருவருக்கும் பூஸ்ட் மற்றும் மாலை சிற்றுண்டி செய்து எடுத்து வந்தாள்.

“விக்ரம் டைம் ஓவர் எழுந்து வா” அவள் வார்த்தைக்கு ஜாய் ஸ்டிக்கை அப்படியே போட்டுவிட்டு அவன் எழுந்து வந்தான். கௌதம் மட்டும் வரவில்லை. இன்னும் ஆர்வமாக விளையாடிக் கொண்டிருந்தான்.

“கௌதி, உனக்கு தனியா சொல்லணுமா. எழுந்து வா” அவ்வளவு தான். விக்ரமுக்கு நேற்று நடந்தது நினைவிற்கு வந்தது.

விக்ரமின் வகுப்புத் தோழன் சபரீஷ் செய்த வேலையே அது. ‘டேய் மச்சான். நீ கொஞ்சம் உஷாரா இருந்துக்கோ. எனக்கென்னமோ சந்தியாவும் கௌதமும் லவ் பண்றாங்கனு தோணுது. அது எப்படிடா, அவ அவனை மட்டும் கௌதினு கூப்பிடறா உன்னை விக்ரம்னு சொல்றா. என்னமோ தப்பா தெரியுதுடா பார்த்துக்கோனு’ சொல்லியிருந்தான். சபரீஷை கௌதமுக்கும் நன்கு தெரியும். அவனுக்கும் அவன் நண்பனே. இருந்தும் நாம் சிலர் மீது கூடுதல் அன்பும் அக்கறையும் காட்டுவோம். சபரீஷிக்கு விக்ரம் அப்படித்தான்.

அவன் பேசியது விக்ரமின் மனதில் நிறைந்திருக்க “நில்லு சந்து. அது என்ன நான் மட்டும் விக்ரம், அவன் கௌதியா” என்றான். அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் கௌதம் விளையாடுவதை நிறுத்திவிட்டு அவனை திரும்பிப் பார்த்தான்.

“இது என்னடா புதுசா. நான் உன்னை எப்பவுமே அப்படி தான கூப்பிடுவேன். ஆனா, அவன்கிட்ட பேச ஆரம்பிச்சப்பவே நீ கௌதினு கூப்பிடறத பார்த்து நானும் அவனை அப்படி கூப்பிட ஆரம்பிச்சிட்டேன்” சந்தியா அவனுக்கு பொறுமையாக விளக்கினாள்.

“அப்ப அவனும் தான் என்னை விக்கினு கூப்பிடறான். நீ அப்போ என்னை விக்கினு கூப்பிட வேண்டியது தான” விக்ரம் புரிந்துக் கொள்ளும் நிலையில் இல்லை.

“டேய், அப்ப நீ கூட தான் அவளை சந்துனு கூப்பிடற. நான் சந்தியான்னு தான கூப்பிடறேன். இதெல்லாமா பெருசு பண்ணுவாங்க” கௌதம் சந்தியாவிற்கு பரிந்துப் பேச அவள் அவனை குறுக்கே பேசாதே என்று கண் ஜாடை காட்ட, அதில் கோபம் வந்து வெடுக்கென்று எழுந்து

“நான் கிளம்பறேன்டா” விக்ரமிடம் மட்டும் சொல்லிவிட்டு சென்றுவிட்டான் கௌதம்.

அன்று முழுவதும் எந்த குறுஞ்செய்தியும் கௌதமிடம் இருந்து வரவில்லை. அடுத்தநாளும் மறுநாள் தேர்வு இருந்ததால் அதை படித்துவிட்டாயா இதை முடித்துவிட்டாயா என்பது போன்ற குறுஞ்செய்திகளே அவனிடமிருந்து வர இவளும் ஆம் இல்லை என்று அவன் பெயரை எங்கும் குறிப்பிடாமல் ஓரிரண்டு வார்த்தையிலேயே பதிலளித்தாள். அது அவனுக்கு புரிந்தும் இருந்தது. ஒரு தக்க சமயத்திற்காக காத்திருந்தான்.

காலையில் அவனுக்கும் அவளுக்கும் வேறு வேறு வகுப்பில் தேர்வு. தேர்வுக்கு செல்வதற்கு முன்பு பயாலஜி பரீட்சையை தவிர மற்ற பரீட்சைகளுக்கு மூவரும் ஒன்றாக அமர்ந்து ஒருமுறை படித்ததை நினைவுக் கூர்ந்துவிட்டு செல்வர். அன்று அவர்களுக்கு வேதியியல் பரீட்சை.

“இது இம்பார்ட்டண்ட் டாபிக்டா. வர வாய்ப்பிருக்குனு சொல்றாங்க. படிச்சிட்டியா” விக்ரமிடம் தான் முதலில் கேட்டான் கௌதம்.

“படிச்சிட்டேன் கௌதி. சந்து தான் நோட்ஸ் தந்தா” விக்ரம் சொல்ல

“ஐயோ.. நான் அந்த நோட்ஸை எப்படியோ மிஸ் பண்ணிட்டு இருக்கேன்டா. உன் நோட்ஸ் கொடு சந்தியா” என்றான்.

“இதோ ஒரு நிமிஷம். இந்தா கௌதம்” என்றாள். அந்த கௌதம் என்ற விளிப்பில் அவனுக்கு கண்கள் சிவந்து கோபம் தலைக்கு ஏறியது. நிமிர்ந்து அவளை அவன் பார்த்த பார்வையிலேயே அவன் அவள் மீது அளவில்லாத கோபத்தில் இருக்கிறான் என்பது அவளுக்கு புரிந்தது.

இது விக்ரமுக்கு புரியாமல் இல்லை. புரிந்துக் கொள்ள விருப்பமில்லாமல் இருந்தான். சொல்லப்போனால் அவனுக்கு அவளற்ற மகிழ்ச்சியே. அவள் தான் அவனை சரிசெய்ய அன்றே அவனிடம் சொல்லிவிட்டாளே, இனி தான் கௌதமை கௌதி என்று அழைக்கமாட்டேன் என்று. இப்போது அதை நடைமுறை மட்டுமே படுத்தியிருக்கிறாள்.

அதற்குமேல் அவளிடம் பேச தனக்கு ஒன்றுமில்லை என்று தோன்ற, அங்கிருந்து எழுந்த கௌதம் “இன்னும் டென் மினிட்ஸ் தான் இருக்கு. நான் கிளாஸுக்கு போறேன் விக்கி” என்று விக்ரமிடம் மட்டும் சொல்லிவிட்டு தன்னுடைய பையை மாட்டிக் கொண்டு விடுவிடுவென நடந்தான். சந்தியாவிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. இந்த நண்பனுக்காக பரிந்து நடந்தால் அந்த நண்பன் கோபித்துக் கொள்கிறான். அந்த நண்பனுக்காக பரிந்து நடந்தால் இவன் கோபித்துக் கொள்கிறான். மீண்டும் அவளுக்கு இக்கட்டான நிலையாகி போனது.


உண்மையாகும்..


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
 
Top