அத்தியாயம் : 1
"கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்"
உதயரேகா பூஜையறையில் பாடி கொண்டிருக்க... அவள் அருகே சர்வேஸ்வரன் புன்னகை முகத்துடன் நின்றிருந்தான். அவனிடத்தில் அதே காதல், அதே நேசம், அதே கனிவு... திருமணமாகி இத்தனை வருடங்கள் கடந்திருந்தும் அவனிடத்தில் எந்த மாற்றமும் இல்லை. மாறாக அவனிடத்தில் இன்னும் காதல் அதிகரித்துத் தான் காணப்பட்டது. உதயரேகா மட்டுமென்ன குறைவா! அவளும் எப்போதும் போல் தினமும் அதீத காதலுடன் கணவனை ஆராதிக்கத் தான் செய்கிறாள். அன்று முதல் இன்று வரை இருவரும் அதே காதல் கிறுக்குகள் தான்.
இருவரின் காதலையும் எப்போதும் போல் உலக அதிசயமாகப் பார்த்தபடி நின்றிருந்தாள் சகுந்தலா. இந்த வயதில் இப்படிக் காதலிக்க முடியுமா? என்கிற கேள்விக்கு விடையாக இருக்கும் ஆதர்ச தம்பதியினர் இவர்கள் இருவரும். அவர்கள் இருவரையும் கண்டு அவளுக்கு எப்போதும் போல் இன்றும் வியப்பே.
உதயரேகா கடவுளை கும்பிட்டு விட்டு தீபாராதனையைக் கணவனிடம் காட்டி விட்டு அவனது நெற்றியில் திருநீறு பூசி விட்டாள். அதே போன்றே அவள் சகுந்தலாவுக்கும் செய்தாள்.
"மாமோய், அத்தைம்மா, ராவு ரெண்டு பேருக்கும் சுத்தி போடணும். என் கண்ணே பட்டுரும்." அவள் இருவரையும் கண்டு சந்தோசமாய்க் கூற...
"உனக்கு வேற வேலையே இல்லையா சக்கும்மா?" உதயரேகா அவளைச் செல்லமாய்க் கடிந்து கொண்டாள்.
"இதைவிட வேற வேலை எனக்கு என்ன இருக்குங்கிறேன்? நான் மறந்தாலும் எனக்கு மறக்காம ஞாபகப்படுத்துங்க அத்தைம்மா." சகுந்தலா நீட்டி முழக்கினாள்.
அவள் எப்போதும் அப்படித்தான் நீட்டி முழக்கி ஒருவித ராகத்துடன் இழுத்து பேசுவாள். அவள் அன்னை விஜயாவிடம் இருந்து கற்றுக் கொண்ட கிராமத்துப் பாசை இது. இத்தனை வருடங்கள் கடந்தும் அப்படியே மண் மணம் மாறாது இருக்கின்றது. இதில் ஒரு ஆச்சிரியம் என்னவென்றால் அவளது அன்னை விஜயா கூட இப்போது பட்டணத்துவாசியாகத் தனது பாசையை மாற்றிக் கொண்டது தான்.
"சரி, ஞாபகப்படுத்துறேன். நீ காபி குடிச்சியா?" உதயரேகா அவளிடம் பாசத்துடன் கேட்டாள்.
"இன்னும் இல்லை அத்தைம்மா. தூங்கி எந்திருச்சு குளிச்சிட்டு அப்படியே ஓடி வந்துட்டேன்." என்று சொன்னவளின் தலைமுடி ஈரம் கூடச் சரியாகக் காயவில்லை.
"உனக்கு எத்தனை தடவை சொல்றது சக்கும்மா? தலைமுடியை நல்லா காய வையின்னு. வா, நான் துவட்டி விடறேன்." உதயரேகா சொல்லவும்...
"அதெல்லாம் வேண்டாம். நானே பார்த்துகிறேன். உங்களுக்கும் காபி கொண்டு வரவா?" அவள் ஆசையுடன் சொல்ல...
அதுவரை இருவரையும் புன்சிரிப்புடன் பார்த்திருந்த சர்வேஸ்வரன், "அம்மா தாயே, உனக்கு உப்புக்கும், சர்க்கரையும் வித்தியாசம் தெரியாது. உன் அத்தைம்மாவே காபி போடட்டும்." என்று அவளைக் கேலி செய்ய...
"மாமோய்..." அவள் வெட்கத்துடன் சிணுங்கினாள்.
"பிரின்ஸ், சக்கும்மாவை கேலி பண்ணாதீங்கன்னு எத்தனை தடவை சொல்றது?" மனைவி அதட்டியதும் அந்த வளர்ந்த குழந்தை வாயில் கை வைத்து கப்சிப்பென்று அடங்கி விட்டது. அதைக் கண்டு சகுந்தலா வாய்விட்டு சிரித்தாள்.
பெண்கள் இருவரும் சமையலறைக்குள் சென்றனர். மூவருக்கும் காபியை கலந்த உதயரேகா ஒன்றை சகுந்தலாவிடம் கொடுத்துக் குடிக்கச் சொன்னாள்.
"இன்னைக்கு என் கூட வர்றியா?" உதயரேகா தான் செல்லும் ஐந்தறிவு ஜீவன்களின் தொண்டு நிறுவனத்திற்கு அழைத்தாள்.
"ஐயோ அத்தைம்மா, எனக்கு நாய்ங்கன்னாலே பயம்." சகுந்தலா பயத்துடன் சொல்ல...
"இப்படி எதுவும் செய்யாம வீட்டை சுத்தி வந்துக்கிட்டு இருக்கப் போறியா?"
"ஆமா, இதில் என்ன இருக்கு? உங்களை மாமோய் தூக்கிட்டு வந்த மாதிரி... என்னையும் மகாராசன் ஒருத்தன் வந்து குதிரையில் தூக்கிட்டு போவான்." சகுந்தலா கண்களில் கனவு மின்ன பேசினாள். சர்வேஸ்வரன், உதயரேகா காதல் கதை சின்னவர்கள் அனைவருக்கும் தெரியும்.
"அப்படி எல்லாம் தூக்கி கொடுத்திட மாட்டோம். கல்யாணம் பண்ணி தான் அனுப்புவோம்." என்று சொன்ன உதயரேகா, "சரி, இப்பவே வேலையை ஆரம்பிக்காதே. இன்னும் நேரம் இருக்கு. வீட்டுக்கு போயிட்டு வா. பாவம் விஜயா தனியே கிடந்து கஷ்டப்படுவாள்." என்று சொல்ல...
"சரிங்க அத்தைம்மா." என்ற சகுந்தலா காபியை பருக ஆரம்பித்தாள்.
உதயரேகா கணவனுக்குக் காபியை கொடுத்துவிட்டு அவன் அருகில் அமர்ந்தாள். அங்கு வரவேற்பறையில் தாமோதரன், மந்தாகினி இருவரும் புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தனர். இருவருமே கரண், ரக்சி திருமணங்களைப் பார்த்துவிட்டு, பின்பு அவர்களது குழந்தைகளையும் பார்த்து விட்டு தான் இறைவனடி சேர்ந்தனர். இறக்கும் தருவாயில் மந்தாகினி சின்ன மகனுக்கு நன்றி கூறிவிட்டு தான் சென்றார். குடும்பத்தை அன்போடு ஒருங்கிணைத்து அரவணைத்துச் சென்றது அவன் தானே. அந்த நிறைவு பெற்றோர் இருவருக்கும்...
"சக்கு வீட்டுக்கு போயிட்டாளா?" சர்வேஸ்வரன் மனைவியிடம் கேட்டான்.
"ஆமா, சொல்ல சொல்ல கேட்காம... காலையில் சீக்கிரமே எழுந்து வந்து பூஜைக்கு வேண்டிய பூ பறித்து, விளக்கு தேய்த்து, சாமி படங்களுக்கு அலங்காரம் பண்ணின்னு எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்கிறாள்." உதயரேகா அலுத்துக் கொள்வது போல் கூறினாலும் அதில் பெருமையே இருந்தது.
"எல்லோரையும் நல்லா வளர்த்து ஆளாக்கியாச்சு. ஆனா இவள் மட்டும் மாறாம அப்படியே இருக்கிறாளே." சர்வேஸ்வரனுக்குச் சகுந்தலாவை நினைத்துக் கவலையாக இருந்தது.
"நானும் இப்படித்தானே இருந்தேன். நீங்க என்னை மாத்தலையா?"
"நீ வேறு... நீ நல்ல படிக்கிறவ, சமையல் கலை அத்துப்படி, அதைவிட ஐந்தறிவு ஜீவன்கள் கிட்ட நீ காட்டும் பாசம் உன்னை இன்னும் வேற லெவலுக்குக் கொண்டு போயிருச்சு. ஆனால் சக்குக்கு?" சர்வேஸ்வரன் உண்மையான கவலையுடன் சொன்னான்.
சர்வேஸ்வரன் சொல்வது போல் சகுந்தலாவுக்கு எந்தத் திறமையும் இல்லை. பத்தாவது பொதுத் தேர்வில் தோல்வியுற்று... அதை நிறைய முறை முயற்சித்து... இதோ இப்போது வரை அவள் பத்தாவதில் தேர்ச்சி அடையவில்லை. சர்வேஸ்வரன் பெண்களுக்குக் கல்வி முக்கியம் என்று சகுந்தலாவுக்கு என்று தனியே டியூசன் கூட வைத்துப் பார்த்தான். ம்ஹூம், எதுவும் சகுந்தலாவை அசைக்கவில்லை. அத்தோடு அவள் படிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டாள். அதுவும் சந்தோசமாக... ஆம், அவள் பத்தாவது வரை வந்ததே அதிசயம் தான்.
சரி, படிப்பு தான் வரவில்லை. மற்ற விசயங்களில் திறமை இருக்கிறதா என்றால்... அதுவும் கிடையாது. சகுந்தலாவுக்கு இன்னமும் உப்புக்கும் சர்க்கரைக்கும், கடலை பருப்புக்கும் துவரம் பருப்புக்கும் வித்தியாசம் தெரியாது. அது மட்டுமல்ல வேற எதுவுமே அவளுக்குச் சரியாக வராது. தையல் கலை, நடனம், பாட்டு, கராத்தே, விளையாட்டு என்று எத்தனையோ முயற்சித்துப் பார்த்தும் ஒன்றும் அவளிடம் செல்லுபடியாக வில்லை. மாறாக அவளுக்குச் சொல்லி கொடுக்க வந்த வாத்தியார்கள் தான் பயந்து ஓடி விட்டனர். அந்தளவிற்கு அவள் மக்கு...
அவளிடம் இருக்கும் ஒரே ஒரு நல்ல விசயம்... மாடு போன்று எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்வாள். அதனாலேயே என்னவோ சிக்கென்று அவளுக்கு உடலமைப்பு இருக்கும். டஸ்கி ஸ்கின் என்று சொல்வார்களே அது போன்றதொரு தேன் நிறம் உடையவள். அது கூட அவளுக்கு அழகாக, கவர்ச்சியாகத் தான் இருந்தது. மொத்தத்தில் அவள் ஒரு 'டஸ்கி ப்யூட்டி'...
"அதை நினைச்சு தான் எனக்கும் கவலையா இருக்கு?" உதயரேகாவுக்கும் அந்தக் கவலை இருந்தது.
மற்ற பிள்ளைகள் எல்லோரும் அவர்கள் துறையில் திறமையுடன் வெற்றி பெற்றுக் கொண்டு வருகின்றனர். சர்வேஸ்வரன், உதயரேகாவிற்கு மூத்தது மகன் என்று அனைவருக்கும் தெரிந்ததே. அவன் பெயர் சக்தீஸ்வரன். அதுவும் தெரிந்ததுவே. அவன் படித்து முடித்து விட்டு தந்தையின் தொழிலை கையில் எடுத்தவன் அதை அழிக்காது மேலும் பெருக்கத்தான் செய்கின்றான். அவனுக்கு ஆறு வயதாக இருக்கும் போது தான் பத்மினி பிறந்தாள். அவள் இப்போது பயிற்சி மருத்துவராக இருக்கின்றாள். அவளிடம் திருமணத்திற்குச் சம்மதிக்க வேண்டி பேசி வருகின்றனர். ஆனால் மேலே படிக்க வேண்டும் என்று அவள் மறுத்து வருகிறாள்.
ஆகாஷ், வித்யாவிற்கு மூத்தது மகள், பெயர் வினிதா. அவளும் படித்து முடித்துவிட்டு தந்தையின் தொழிலை திறம்பட நடத்தி வருகிறாள். அவளுக்கு இப்போது தான் திருமணத்திற்கு வரன் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். வித்யாவின் குழந்தை ஏக்கத்தைக் கண்ட கடவுள் அவளுக்கு வரத்தை வாரி வாரி கொடுத்தார் போலும்... வினிதாவுக்கு அடுத்து இரு வருட இடைவெளியில் இரட்டையர்கள் ஆதித்யா, ஆதிரை பிறந்தனர். அவர்கள் இருவரும் பேசன் துறையில் தேர்ச்சி பெற்று மும்பையில் புகழ் பெற்ற பேசன் டிசைனரிடம் உதவியாளராகப் பணியாற்றி வருகின்றனர். இரட்டையர்கள் எல்லா விசயத்திலும் ஒன்று போல் இருப்பர்.
ஆனால் சகுந்தலா மட்டுமே ஆரம்பித்த இடத்தில் அப்படியே இருக்கின்றாள். சகுந்தலாவும் அவர்கள் வளர்த்த பெண் தானே. இந்தக் காலத்தில் இப்படிப் பெண் பிள்ளை இருப்பது சரியில்லையே. அந்தக் கவலை அவர்களுக்கு...
*************************
அதே தான் சகுந்தலாவின் வீட்டில் அவளது அன்னை விஜயா கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். அவரது கணவர் கணபதி தான் மனைவியைத் தேற்றிக் கொண்டு இருந்தார்.
"அவளுக்குன்னு ஒருத்தன் இனிமேலா பிறக்க போறான். எங்கேயாவது பிறந்து இருப்பான்?" கணபதி மனைவியைத் தேற்றினார்.
"இப்போ அதுவா பிரச்சினை. சக்குவை விடச் சின்னவ கனி. அவ காதலிச்சிட்டு வந்து கல்யாணம் பண்ணி வையின்னு நிலையா நிக்குறா. இப்போ நாம கனியை பார்க்குறதா? சக்குவை பார்க்குறதா?" விஜயா கவலை கொண்டார்.
"ரொம்ப யோசிக்காத. நடக்குறது நடக்கும்." கணபதியால் வேறு என்ன கூற முடியும்.
"அம்மை..." என்றபடி சகுந்தலா அங்கே வர... இருவரும் முகத்தை மகிழ்ச்சியாய் வைத்து கொண்டனர்.
சகுந்தலாவோ அவர்களது கண்களில் தெரிந்த கவலையைக் கண்டு கொண்டாள். அதில் எல்லாம் அவள் கெட்டிக்காரி தான்.
"இப்போ என்ன கப்பலா கவுந்து போச்சு. இப்படி இருக்கீக? கனிக்கு முதல்ல கல்யாணத்தைப் பண்ணி வையுங்க."
"உனக்குப் பண்ணாம எப்படிடி அவளுக்குக் கல்யாணத்தைப் பண்ண முடியும்?" விஜயா மகளிடம் கோபமாய்க் கேட்டார்.
"அப்போய், அம்மை கிட்ட சொல்லுங்க. நான் மகாராசனுக்காகக் காத்துக்கிட்டு இருக்கேன்னு." அவள் வெகுளியாய் சொல்ல... விஜயா வெளிப்படையாகத் தலையில் அடித்துக் கொள்ள... கணபதி மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டார்.
"உன்னைச் சொல்லி குத்தம் இல்லைடி. உன்னை மாடு மாதிரி வளர்த்து விட்டிருக்கேன் பாரு. என்னைய சொல்லணும். எதுலயும் கூறு கிடையாது" விஜயா தன்னையே நொந்து கொண்டார்.
"அம்மை, காலையில எவ்வளவு வேலை கெடக்கு? அதைவுட்டு போட்டு எதுக்கு இப்படி மசமசன்னு பேசிக்கிட்டு இருக்கீக? போங்க, போய் வேலையைப் பாருங்க." என்ற சகுந்தலா வீட்டின் பின்புறம் துணி துவைக்கச் சென்றாள்.
"விஜயா, நானும் கிளம்பறேன்." கணபதி வேலைக்குச் சென்று விட்டார். விஜயா சமையலறைக்குச் சென்றார்.
கணபதியும், விஜயாவும் சர்வேஸ்வரனிடம் வேலை கேட்டு வந்தவர்கள். அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த நெசவு தொழில் வீழ்ந்து விட்டதால்... பிழைப்பு தேடி பட்டணம் வந்தனர். ஆசிரம நிர்வாகியின் சிபாரிசின் பேரில் இங்கே வந்தனர். கையில் மூன்று குழந்தைகள், வயிற்றில் மூன்று மாத சிசு என்று வந்து நின்ற தம்பதியினரை கண்டு இரக்கம் கொண்டு சர்வேஸ்வரன் வேலைக்கு எடுத்துக் கொண்டான்.
கணபதி அவனுக்கு ஓட்டுநர் வேலை பார்க்க... விஜயா சமையல் பொறுப்பைப் பார்த்துக் கொண்டார். ஆண்டுகள் செல்ல செல்ல கணபதி சர்வேஸ்வரனின் நம்பிக்கைக்கு உரியவராகிப் போனார். அதே போன்று தான் விஜயாவும். அதனாலேயே அவர்களது குழந்தைகளை இவர்கள் படிக்க வைத்து ஆளாக்கினர்.
கணபதி, விஜயா இவர்களின் மூத்த மகள் இந்திராணி. நன்றாகப் படிக்கக் கூடியவள். பனிரெண்டாம் வகுப்பில் பள்ளிக்கூடத்தில் முதல் மாணவியாக வந்தவள். சர்வேஸ்வரன் அவளை மருத்துவராகச் சொன்னான். அவளோ வீட்டின் நிலையை மனதில் கொண்டு சாதாரண டிகிரி எடுத்து படித்தாள். பின்பு அதிலேயே மேலே படித்துக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிக்கு சேர்ந்தாள். உடன் வேலை பார்க்கும் மணிவாசகம் காதல் என்று வந்து நிற்க... அவள் பயந்து போய்ச் சர்வேஸ்வரனிடம் தான் முதலில் சொன்னாள். சர்வேஸ்வரன் மணிவாசகத்தினை விசாரித்துப் பார்த்து திருப்தி கொண்டு... அவனுக்கே இந்திராணியைத் திருமணம் செய்து வைத்தான். அவளுக்கு வேண்டிய அனைத்தையும் சீரும் சிறப்புமாய்ச் செய்தான். இவர்களுக்கு மதி என்கிற எட்டு வயது மகள் இருக்கின்றாள்.
அடுத்து நாராயணன்... இவனும் நன்றாகப் படிக்கக் கூடியவன். திறமைசாலி... ஆடிட்டராக இருக்கின்றான். தனியே அலுவலகம் வைத்து திறம்பட நடத்தி வருகின்றான். சர்வேஸ்வரனின் நிறுவன கணக்குகளை எல்லாம் இப்போது இவன் தான் பார்த்துக் கொள்கின்றான். அத்தோடு சர்வேஸ்வரனின் சிபாரிசில் வேறு சில நிறுவனங்களின் கணக்குகளையும் பார்த்து வருகின்றான். இன்னமும் திருமணமாகவில்லை. தங்கைளுக்கு முடித்துவிட்டுத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அவன் இருக்கின்றான்.
நாராயணக்கு அடுத்து தான் சகுந்தலா. சகுந்தலாவுக்கு அடுத்து கன்னிகா. கன்னிகாவும் நன்றாகப் படிக்கக் கூடியவள் தான். நன்றாகப் படித்து முடித்து இப்போது ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறாள். உடன் வேலை பார்க்கும் சஞ்சயை காதலித்து வருகிறாள். சஞ்சய் வீட்டில் திருமணத்துக்கு அவசரப்படுத்துவதால் இப்போது தான் தனது காதலை பற்றிப் பெற்றோரிடம் சொல்லி இருக்கிறாள். அவளது காதல் விசயம் இன்னமும் சர்வேஸ்வரனுக்குத் தெரியாது. ஏனெனில் இடையில் நந்தி போன்று சகுந்தலா இருக்கின்றாளே. அந்தக் கவலையில் பெற்றோர் இருந்தனர்.