காதல் - 3
இரண்டு நாட்கள் கழித்து காய்ச்சலில் வாடி வதங்கி எழுந்து அமர்ந்திருந்தான் கௌதம்.
“நான் எவ்ளோ சொன்னாலும் கேட்காம உடம்பை என்ன பண்ணிக்கிட்ட பார்த்தியா. இது என்ன ஊரு. அக்கம் பக்கம் இருக்கிறவன் பேசலனா கூட பரவாயில்ல. பக்கத்து வீட்டுல யார் இருக்காங்கனு கூட தெரிஞ்சிக்க மாட்டாங்க போல.
நீ என்னனா இங்க வந்து உட்கார்ந்துட்டு இருக்க. அங்க அவ்ளோ பெரிய வீடு, மக்க மனுஷங்க எல்லாம் இருக்காங்க. அது விட்டுட்டு எல்லாத்தையும் எல்லாரையும் விட்டுட்டு இங்க இருக்கறதுக்கு என்ன அவசியம் வந்துச்சு கௌதம்” அருகில் அமர்ந்து அவனுக்கு புத்திமதி சொல்லும் வகையில் கொதித்த தொனியில் பேசி கொண்டிருந்தார் செல்வராணி. அவர் பேச பேச வாய் திறக்காமல் அமர்ந்திருந்தான்.
“எத்தனையோ தடவை இந்த கேள்விகளை கேட்டுட்டேன். ஒரு தடவை வாய திறக்கறீயா. ஏன்ப்பா இப்படி மூர்க்கம் பிடிச்சிட்டு உட்கார்ந்துட்டு இருக்க. வாப்பா திரும்ப நம்ப ஊருக்கே போயிடலாம்” மென்மையாகவும் சொல்லி பார்த்தார் அதற்கும் அமைதியாகவே இருந்தான்.
“என்னமோ நீ பண்றது எதுவுமே எனக்கு புரியலப்பா” எல்லா விதத்திலும் சொல்லி பார்த்து சலித்தே போய்விட்டார்.
கௌதம், சிறுவயதில் இருந்தே மூர்க்கம் பிடித்தவன். பிடிவாதம் அதிகம். அவனுக்கு ஒன்று வேண்டும் என்றால் வேண்டும். அதை எப்படியாவது பெற்றே தீருவான். அவனுக்கு வேண்டியதற்காக உலகத்தையே எதிர்த்து நிற்கவும் தயங்கமாட்டான்.
அதேபோல் வேண்டாம் என்றாலும் வேண்டாம். அவன் ஒரு முடிவெடுத்துவிட்டால் அதை யாராலும் மாற்ற முடியாது. மொத்த உலகமும் ஒன்றுக்கூடி புத்திமதி சொல்லி அவன் முடிவை மாற்ற பார்த்தாலும் மாறமாட்டான்.
அந்நேரத்தில் இந்தியாவிலிருந்து அந்த அழைப்பு வந்தது.
அதை ஏற்றவன் “ஹலோ அத்தான். எப்படி இருக்கீங்க” என்றான். அம்முனையில் இருந்த அவனது அக்காவின் கணவர் என்ன சொன்னார் என்று தெரியவில்லை. அதற்கு இவன் “இப்ப உடம்பு பரவாயில்ல அத்தான். ஒரு ஹாஃப் அன் ஹார் டைம் கொடுங்க. நான் காலைலயிருந்து குளிக்கல. குளிச்சிட்டு நானே வீடியோ கால் பண்றேன். நாம எல்லாம் பேசிடலாம்” என்று சொல்ல, செல்வராணியோ எதுவும் புரியாமல் மகன் பேசுவதையே பார்த்து கொண்டிருந்தார். அவருக்கு புரிந்ததெல்லாம் மகன் மருமகனிடம் பேசுகிறான் என்பது மட்டுமே.
“அத்தான்ம்மா. ஆடி வருதுல அதான் கடைல என்ன பண்ணலாம். என்ன மாதிரி சரக்கு கொண்டு வரலாம்ங்கறது பத்தி பேசி முடிவு பண்ண இன்னைக்கு ஒரு மீட்டிங் இருக்காம். அப்புறம் வைரத் திருவிழா வேற நடத்தனும். அத பத்தியெல்லாம் சொல்ல தான்ம்மா கூப்பிட்டிருந்தாரு” அவர் கேட்காமலே, அவர் அதை தான் கேட்க போகிறார் என்பதை புரிந்து சொன்னான்.
செல்வராணியோ தெரிந்தும் தெரியாதது போல் “எந்த அத்தான். உனக்கென்ன ஒரு அத்தானா இருக்கார்” பொடி வைத்து கேட்டார்.
அதை புரிந்த மகனும் “எல்லாம் உங்க மூத்த மவளோட வீட்டுகாரர் தான்” முகத்தை சுளித்துக் கொண்டு பதிலளித்தான்.
“என்னது, என் மூத்த மவளா. அப்ப அவ உன் அக்கா இல்லயா” மகனை கண்டித்தார்.
அதற்கு “இல்ல” என்று சற்றும் யோசிக்காது பதிலளித்தவனை பார்த்து அதிர்ந்தார். அத்துடன் மகளுக்கும் மகனுக்கும் இடையில் இப்படி ஒரு பிளவா என்றெண்ணி மனமுடைந்தார்.
“நானும் பார்த்துக்கிட்டு தான் இருக்கேன், நீ இப்படி தான் பண்ற. அன்னைக்கு கூட அருந்ததி, தமயந்தி, நிரஞ்சனா, நித்திலாவுக்கு நான் இருப்பேன்னு சொல்ற. அப்ப, கார்த்தியாயினிக்கு யார் இருப்பா கௌதம். அவ இந்த வீட்டோட மூத்தமக. என்னையும் உங்க அப்பாவையும் முதல் முதல்ல அம்மா அப்பானு கூப்பிட்டவ. அவளை இப்படி ஒதுக்கி வச்சிட்டு நீ என்னப்பா பண்ண போற. அக்கா தம்பிக்குள்ள பிரச்சனைகள் வரத்தான் செய்யும். அதுக்காக அவகிட்ட ஒரேயடியா பேசாம விட்டிடுவியா. இது ஒரு வாழ்க்கைப்பா திரும்ப நீயும், அவளும் ஒரு தாய் வயித்து பிள்ளையா பிறக்க போறதில்ல. அவகிட்ட பேசாம இருக்காத. பேசுப்பா” அவனின் பிடிவாத குணத்திடம் மிஞ்சியும் விட்டார் கெஞ்சியும் விட்டார்.
“அம்மா சிலதை மன்னிச்சிடலாம். சில விஷயங்களை மன்னிக்க முடியாது. அதுக்கு தண்டனை பிரிவு தான்ங்கற போது அதையும் ஏத்துக்கிட்டு தான் ஆகணும். அதுக்குன்னு அவளுக்கு செய்ய வேண்டியதை செய்யாம இருக்கமாட்டேன். அத்தான் கிட்ட பேசத்தான் செய்யறேன். இனியன், நளின்கிட்ட கூட பேசி அவங்க கேக்கறதெல்லாம் செஞ்சி கொடுத்துட்டு தான் இருக்கேன். என்ன, மத்தவங்ககிட்ட பேசி விசாரிக்கற மாதிரி அக்காகிட்ட செய்யறதில்ல. அது மட்டும் தான்ம்மா வித்தியாசம்” சொன்னபின் தான் தன்னை மறந்து ‘அக்கா’ என்று சொன்னதை உணர்ந்தான். எப்படி சொல்லாமல் இருப்பான். அவனுக்கும் கார்த்தியாயினி பிடித்த அக்காவாயிற்றே.
அவன் அக்காவென்று அழைப்பது அவளை மட்டும் தானே. அருந்ததியையும் தமயந்தியையும் பெயர் சொல்லி தான் அழைப்பான். நிரஞ்சனாவும் நித்திலாவும் அவனைவிட சிறியவர்கள். கார்த்தியாயினிக்கும் இவன்மேல் தனி பாசம். அவனுக்கும் அவளுக்கும் நிறைய வயது வித்தியாசம் இருந்தும் அவன் அவளிடம் ஒருமையில் தான் பேசுவான். செல்வராணி பலமுறை கண்டித்தும் இருக்கிறார். அப்போதெல்லாம் தாய் தந்தையை பிள்ளைகள் ஒருமையில் கூப்பிடுவது இல்லையா. அதுபோல் தம்பி தன்னை அழைக்கிறான் என்று சப்பைக்கட்டு கட்டுவாள். அவனுக்கு ஏதாவது வேண்டுமென்றால் கார்த்தியாயினியிடம் தான் சொல்லுவான். அவளும் தாய் தந்தையிடம் பேசி சம்மதிக்க வைத்து வாங்கிக்கொடுத்து விடுவாள். ஒருவேளை அன்றும் அவளிடம் முதலில் பேசியிருந்தால், இன்று அவன் இருக்கும் நிலையில் இருந்திருக்க வேண்டாமோ என்னவோ? ஒருவேளை அவன் இருக்கும் நிலைக்கே அவள் தான் காரணமோ?
சண்டை காரணமாக கடந்த மூன்று வருடங்களாக இருவரும் பேசிக் கொள்வதில்லை. அவன் அக்கா என்று சொன்னதை செல்வராணியும் கவனித்து தான் இருந்தார். உள்ளுக்குள் இன்னும் பாசம் இருக்கிறது, எல்லாம் கூடியவிரைவில் சரி ஆகிவிடும் என்று தனக்கு தானே நம்பிக்கை சொல்லி சமாதானம் செய்துக்கொண்டார். அதே நம்பிக்கையுடன் பேச்சையும் ஆரம்பித்தார்.
“அத்தான் பேசினப்போ கடைல இருந்தாரா வீட்டுல இருந்தாரா” மறுபடியும் எங்கு சுற்றி எங்கு வருகிறார் என்பதை நன்கு அறிந்தவன்
“வீட்ல இருந்து தான் பேசினார். என்னனு தெரியல இன்னைக்கு காலேஜ்க்கு போகல போல. வீட்ல தான் இருக்கா. குரல் கேட்குது” அவன் சொல்ல, மகளின் ஏக்கம் அவரை தொற்றிக்கொண்டது. என்ன இருந்தாலும் மூத்த மகள் அல்லவா. அதிலும் அவள் வீட்டிற்கு சகஜமாக வந்து போய் வருடங்கள் ஆயின. கௌதம், கார்த்தியாயினி இருவரும் வீட்டிற்கு வருவதே தந்தையின் திதிக்கு மட்டுமே. அப்போதும் இருவரும் பார்த்தும் பார்க்காதது போல் இருந்துவிடுவர்.
“ஆனா உடம்பு எதோ சரியில்லனு நினைக்கறேன். குரல் தான் ஒருமாதிரி இருந்துச்சு” அவன் சொல்ல, செல்வராணிக்கு ஒரு பக்கம் மகளுக்கு உடம்பிற்கு என்ன என்ற பரிதவிப்பு இருந்தாலும், இன்னொரு பக்கம் மகன் மகளின் குரலை வைத்தே அவளை பற்றி அறிகிறான் என்ற மகிழ்ச்சியும் இருந்தது.
“என்னனு அப்புறம் ஃபோன்ல பேசிக்கோங்கம்மா” அவன் சொன்னதில் இருந்த உண்மை அக்கறையை உணர்ந்தவர், இந்த வார்த்தைகள் இப்போதைக்கு போதுமென்ற மனநிம்மதி கொண்டார்.
“நான் பேசிக்கிறேன். இன்னைக்கு இந்த மீட்டிங் எல்லாம் வேண்டாம். ஆடி என்ன நாளைக்கேவா வரப்போகுது. அதுக்கு இன்னும் ஒரு மாசத்துக்கு மேல இருக்கு. இப்ப தான் உன் முகத்துல தெளிவே வந்திருக்கு. இன்னும் ரெண்டு மூணு நாள் போகட்டும் தம்பி. நல்லா ரெஸ்ட் எடுத்ததுக்கு அப்புறம் நீ என்ன வேலைனாலும் பார்த்துக்கோ. கார்த்திக்கிட்ட பேசறப்போ நான் மாப்ளகிட்ட சொல்ல சொல்லிடுறேன். உடம்பு இன்னும் கொஞ்சம் சரி ஆகட்டும்ப்பா”
“ஐயோ அம்மா, இன்னும் ரெண்டு மூணு நாளா. சாதாரண காய்ச்சலுக்கு போய் ஒரு வாரம் ரெஸ்ட் எடுப்பாங்களா. எனக்கு உடம்பு சரியாகிடுச்சும்மா. நான் இன்னைக்கு ஆபீஸ்க்கே போகலாம்னு இருந்தேன், நீங்க எதாவது சொல்லப் போறீங்க தான் போகல” அவன் முடிவு செய்ததை மாற்றிக் கொள்ள போவதில்லை என்பதை அறிந்தவர் அவனை அவன் போக்கில் விட்டு
“சரி, நம்ம கடை வேலைய மட்டும் தான் பார்க்கணும். அதுவும் ரொம்ப நேரம் செய்யக்கூடாது. மீட்டிங் முடிஞ்சதும் படுத்து ரெஸ்ட் எடுக்கணும்” சிறுபிள்ளையை அதட்டுவது போல் அதட்டினார். அவனும் தாய் பேச்சுக்கு மறுப்பேதும் சொல்லாமல் சரியென்று தலையசைத்துவிட்டு குளிக்க சென்றான். அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவர், அப்படியே அவனது அறையை சுற்றி கண்களை சுழலவிட அவருக்கு அவனுடைய மடிக்கணினி கண்ணில்பட்டது.
எப்படி இருக்கவேண்டிய பிள்ளை. அரண்மனை போல் இருக்கும் வீட்டை விட்டு கடல் கடந்து ஏதோ ஒரு நாட்டிற்கு வந்து இந்த வீட்டில் இந்த சின்ன அறையில் யாரோ ஒருவருக்கு வேலை பார்க்க வேண்டிய தேவை என்ன வந்தது. இவனே ஐந்தாயிரம் பேருக்கும் மேல் சம்பளம் கொடுக்கும் போது இவன் ஏன் ஒருவரிடம் சம்பளத்திற்கு வேலை செய்யவேண்டும்.
அவர்கள் வீட்டை பொறுத்தவரை, சமையல் பொறுப்பை மட்டும் செல்வராணி அவர் கையிலேயே வைத்திருந்தார். மற்றதனைத்தையும் செய்ய, அங்கே வீட்டை சுற்றி ஆட்கள் இருப்பார்கள். இங்கோ அனைத்து வேலைகளையும் மகனே பார்க்கிறான். அவனை தானும் கணவரும் எப்படி தாலாட்டி சீராட்டி வளர்த்தோம். அவன் பேச்சிற்கு அந்த வீட்டில் மறுபேச்சு இருந்ததுண்டோ. அவன் தானே அந்த வீட்டின் முடிசூடா இளவரசன். பிறகு ஏன் இந்த வனவாசம், யாருக்காக இந்த சந்நியாசி வாழ்வு. தாயவர் நெஞ்சம் குமைந்தது. கணவரை பற்றி, மகனை பற்றி, அவர்கள் குடும்பம் வாழ்ந்த அந்த அழகிய வாழ்வை பற்றி எண்ணத் தொடங்கினார்.
கௌதம் செல்வராஜ், இங்கே ஆஸ்திரேலியாவில் மாத சம்பளத்திற்கு வேலைபார்த்து கொண்டிருப்பனுக்கு அங்கே ஏழு எட்டு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு சொத்தும் வசதியும் உள்ளது. இவர்களுக்கு ஜவுளி வியாபாரம், பரம்பரை தொழில். இவனது பாட்டன் முப்பாட்டன் காலத்து தொழில். வீடு வீடாக சென்று பட்டுப்புடவை விற்றுக் கொண்டிருந்தனர் இவனது பாட்டனாரும் முப்பாட்டனாரும். அதை பெரிதுப்படுத்த வேண்டும் என்ற லட்சியதுடன் அவனது பாட்டனாருக்கு மூத்த மகனாக பிறந்தவர் இவனது தந்தை செல்வராஜ். இரண்டாம் வகுப்பு மட்டுமே படித்தவர். ஆனால் தொழிலில் இவரை வெல்ல யாருண்டு. பதினைந்து வயதில் திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு வந்து ஒரு துணிக்கடையில் வேலைப்பார்த்து தொழில் கற்று, காசும் சேர்த்து இங்கே சிறியதாக பட்டுப்புடவைகள் மற்றும் பெண்கள் ஆடைகள் வைத்து ஆரம்பித்ததே இன்று பல்வேறு மாவட்டங்களிலும், மாநிலங்களிலும், தமிழர்கள் வாழும் நாடுகளிலும் கிட்டத்தட்ட முப்பத்திற்கும் மேற்பட்ட கிளைகள் கொண்ட செல்வராணி சில்க்ஸ் மற்றும் வேணி பொன்மாளிகை.
அனைவராலும் செல்வம் என்று அன்பாக அழைக்கப்படும் செல்வராஜ் தங்கமான மனிதர். மனைவி செல்வராணி மீது உயிரையே வைத்திருந்தவர். கார்த்தியாயினி அவர்களது மூத்தமகள். மகள் பிறந்த மகிழ்ச்சியை முழுவதுமாக அனுபவித்தவர்கள், அடுத்து மகன் பிறப்பான் என்று எதிர்பார்த்தனர். ஆனால், இரண்டாவது பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகளாக அருந்ததியும் தமயந்தியும் வந்து பிறந்தனர். பெண்பிள்ளைகள் பிறந்துவிட்டார்களே என்ற வருத்தம் இல்லை என்றாலும், தங்களுக்கென ஒரு ஆண்பிள்ளை இல்லையே என்று மனமுடைந்துப் போனார்கள். தங்களுக்கு ஒரு ஆண் வாரிசு வராதா என்று தினம் தினம் வேதனை உற்றனர். தனக்கு பிறகு தன்னுடைய தொழிலை எடுத்து நடத்தவும், தான் சேர்த்து வைத்ததை கட்டி ஆளவும், தன்னையும் மனைவியையும் முதுமைக்காலத்தில் கவனித்துக்கொள்ளவும், சகோதரிகளுக்கு துணையாய் நிற்கவும், தனக்கும் மனைவிக்கும் இறுதி ஈமை காரியங்களை செய்யவும் ஒரு மகன் பிறக்கமாட்டானா என செல்வராஜும் செல்வராணியும் ஏங்காத நாளில்லை. அதற்காக இருவரும் ஏறாத கோயில் இல்லை, செய்யாத வேண்டுதல் இல்லை. அவர்களது தவத்திற்கு பலனாக அவர் சேர்த்துவைத்த சொத்தை விட மிகப்பெரிய சொத்தாக தான் கௌதம் அவர்களுக்கு நான்காவது மகனாக வந்து பிறந்தான். சொல்லப்போனால் அந்த வீட்டிற்கே ஒரே ஆண் வாரிசாக பிறந்தான்.
கௌதம் பிறந்த சிலவருடங்களிலேயே ஏற்கனவே திருமணமாகியிருந்த செல்வராஜ் அவர்களின் தம்பி தங்கராஜிற்கு ஒரு பெண்பிள்ளை பிறந்தாள். அவளுக்கு நிரஞ்சனா என்று பெயரும் சூட்டினார். துர்திஷ்டவசமாக இரண்டாவது பிரசவத்தின் போது அவரது மனைவி அமிர்தவல்லி இன்னொரு மகளை பெற்று அவர் கையில் கொடுத்துவிட்டு இறைவனடி சேர்ந்தார். மனைவி போன அதிர்ச்சியில் தங்கராஜ் புத்திப் பிசகி மனநிலை சரியில்லாமல் போனார். நித்திலா பிறந்ததிலிருந்து அவளையும் அவளது தமக்கை நிரஞ்சனாவையும் தங்களது பிள்ளைகளாகவே அவர்களது பெரியப்பாவும் பெரியம்மாவும் பார்த்துக் கொண்டனர்.
மொத்தத்தில் கௌதம், ஐந்து சகோதரிகளுக்கு ஒரே சகோதரன் ஆனான். கார்த்தியாயினிக்கும் கௌதமுக்கும் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் வித்தியாசம். அதனால் அவனுக்கு இன்னொரு அன்னையாகவே அவள் எப்போதும் திகழ்ந்தாள். அருந்ததி மற்றும் தமயந்திக்கும் கௌதமுக்கும் நான்கு வருட வித்தியாசம். அருந்ததியை காட்டிலும் தமயந்தியிடம் அவளது திருமண வாழ்க்கை பொருட்டு அதிக அக்கறை செலுத்த ஆரம்பித்தான். சித்தப்பா மகள்களானாலும் நிரஞ்சனா மற்றும் நித்திலாவிடம் அவனுக்கு தனிப்பிரியம் உண்டு. அதிலும் நித்திலா தாய்முகம் பாராதவள் என்பதால் கௌதம் உட்பட வீட்டில் இருக்கும் அனைவரும் அவளைக் கொண்டாட தவறியதே இல்லை.
செல்வராஜ் மகனின் மீது பேரன்பு கொண்டிருந்தாலும், மகள்களுக்கு செய்வதில் அவர் எந்த குறையும் வைத்ததில்லை. மனைவி, மகள் என அனைத்து பெண்களையும் மதிக்கும் மனிதர் அவர். தன்னுடைய கடைக்கு வரும் பெண்களிடம், யாராவது வாலாட்டினால் அவரது இன்னொரு முகத்தை பார்த்துவிடுவர். வேட்டி சட்டையில் அவரது உயரமும், அதற்கேற்ற உடல்வாகும், திராவிடநிறமும், அடர்ந்தமீசையும், கோல்ட் பிரேம் கண்ணாடியும் அவரை எப்போதும் கம்பீரமாகவே காட்டும். அவர் நடந்து வந்தால் கைகள் தானாக கையெடுத்து கும்பிடும் அளவிற்கு சமுதாயத்தில் மரியாதையும், அந்தஸ்தும் உள்ளவர்.
பெண்பிள்ளைகளுக்கு கல்வி கொடுப்பது அவசியம் என்று நினைப்பவர், அவரது மகள்கள், தம்பியின் மகள்கள் என ஐவருக்கும் நல்ல கல்வியைக் கொடுத்தார். பெண்பிள்ளைகள் படிப்பில் உயர்ந்து நிற்க வேண்டுமென்பது அவருடைய கருத்து.
கார்த்தியாயினியும் படித்து முடித்து தந்தைக்கு உதவியாக அவருடன் தொழிலில் ஈடுபட்டாள். அவளது கணவர் வெற்றிமாறன் சென்னை, திருநெல்வேலி மற்றும் வேறு சில மாவட்டங்களில் இருக்கும் அவர்களது கடைகளை பார்த்துக் கொள்கிறார். அவர்களுக்கு இனியன், நளின் என்று இரண்டு மகன்கள். இடையில் தம்பியுடனான சண்டைக்கு பிறகு கடைக்கு வருவதை நிறுத்தியவள் இப்போது திருநெல்வேலியில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறாள். அவளது கணவர் மட்டும் கௌதமை சிறுவயதில் இருந்து பார்த்தவரானதாலும், அவன்மீது கொண்ட தனி அன்பாலும், மனைவிக்கும் அவனுக்கும் இடையில் இருக்கும் பிரச்சனையை எடுத்துக்கொண்டு அவனை தனியாக, அதுவும் மாமனார் உயிரோடு இல்லாத நேரத்தில் அவனை தன்னந்தனியாக விடமாட்டேன் என்று சொல்லி, தொடர்ந்து செல்வராணி சில்க்ஸ் மற்றும் வேணி பொன்மாளிகையை பார்த்துக் கொள்கிறார்.
அருந்ததி வழக்கறிஞர். அவர்களின் தொழிலுக்கே லீகல் அட்வைசராக இருக்கிறாள். இவளது கணவர் கவியரசனும் இவர்களது தொழிலுக்கு ஆடிட்டராக இருக்கிறார். இவர்களுக்கு பூமகள் என்ற மகளும், கோவேந்தன் என்ற மகனும் இருக்கின்றனர்.
தமயந்தி மகப்பேறு மருத்துவர். இவளது கணவர் இளமாறன், கார்த்தியாயினியின் கணவர் வெற்றிமாறனின் உடன்பிறந்த தம்பி. கட்டினால் அவளை தான் கட்டுவேன் என்று பலவருடம் காத்திருந்து திருமணம் செய்து கொண்டவர். இவரும் அண்ணனை போல் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருக்கும் செல்வராணி சில்க்ஸ் மற்றும் வேணி பொன்மாளிகையை பார்த்துக் கொள்கிறார். அமுதனும் கொற்றவையும் இவர்களது செல்லப்பிள்ளைகள்.
நிரஞ்சனா தற்போது சேலம் மாவட்டத்து ஆட்சியர். அவளது கணவர் கௌதம், செல்வராஜ் மற்றும் தங்கராஜின் ஒரே தங்கையான அம்சவேணியின் மூத்தமகன். அம்சவேணியை திருநெல்வேலியிலேயே கட்டிக் கொடுத்திருந்தார்கள். செல்வராஜ் துணிக்கடையை மனைவி செல்வராணியின் பெயரில் ஆரம்பித்திருந்தாலும், நகைக்கடையை அவரது அன்பு தங்கை வேணியின் பெயரிலேயே ஆரம்பித்திருந்தார். வேணிக்கு கௌதம், கௌசிக் என்று இரண்டு மகன்கள் மட்டும். அண்ணன் மகனை தூக்கி கொஞ்சியே மகன்கள் பிறந்ததால் இருவருக்கும் அவ்வாறு பெயர் வைத்துவிட்டார். அண்ணன் மகள் தான் தன் வீட்டிற்கு மருமகளாக வர வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே எண்ணியவர், மூத்த அண்ணனின் மகள்கள் எல்லாம் தன் மகன்களை விட பெரியவர்கள் என்பதால் சிறிய அண்ணனின் மகளை தன் மூத்தமகன் கௌதமுக்கு மணமுடித்து கொண்டார். அவனும் மனைவியின் வேலை நிமித்தமாக அவளுடனே ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருக்கிறான். தற்போது சேலத்தில் இருக்கும் இவர்களது கடையை கவனித்துக் கொள்கிறான். இன்னிலனும் இலக்கியாவும் இவர்களது மகனும் மகளும்.
கடைக்குட்டி நித்திலா ஒரு பேஷன் டிசைனர். செல்வராணி சில்க்ஸில் வியக்கவைக்கும் புதிய வடிவமைப்பில் உருவாகும் பட்டுப்புடவைகளும் ஆடைகளும் இவளது கைங்கரியத்தால் ஆனவை.
கடந்த காலத்தில் மூழ்கி இருந்தவரை மகன் குளித்து முடித்து கதவை திறந்த சத்தம் மீட்டு எடுத்தது. எழுந்து வெளியே வந்து சோபாவில் அமர்ந்தவர், தான் கண்முன்னே படமாக ஓட்டிப்பார்த்த அந்த அழகிய மகிழ்ச்சியான பழைய நாட்கள் திரும்பவராதா என்று ஏக்கம் கொண்டார். இவரது ஏக்கம் அறியாதவனாய் உள்ளே அவனது அத்தான்களுடன் காணொலியில் பேசிக் கொண்டிருந்தான் கௌதம்.
மறுபடியும் சிந்தனையில் மூழ்கினார். அவர் இன்று ஆஸ்திரேலியாவில் இருக்க காரணமே அவர்கள் வீட்டு கடைக்குட்டி நித்திலா என்று எண்ணியவர், அன்றொரு நாள் நித்திலாவின் திருமணத்தை பற்றி அவர் பேச்செடுத்தப் போது நடந்ததை நினைவு கூர்ந்தார்.
“நித்திம்மா, இங்க பாரு. இந்த பையன் எப்படி இருக்காருனு சொல்லு” செல்வராணி மகளிடம் ஆசையாக காட்டி கேட்க
“ப்ளீஸ் பெரியம்மா. எனக்கு கல்யாணமே வேண்டாம்” பட்டும்படாமல் பதிலளித்தாள்.
“அப்படிலாம் சொல்லக்கூடாது”
“இல்ல பெரியம்மா. நம்ம வீட்ல எவ்ளோ பேர் இருந்தோம். இன்னைக்கு நீங்களும் நானும் மட்டும் தான் இருக்கோம். அண்ணன் அங்க இருக்காரு. அப்பாவை ஊருல வச்சி அங்கேயே ஆள்போட்டு பார்த்துக்கறோம். இப்ப பார்த்தா நம்ப வீடே ஒண்ணுமில்லாம இருக்கு. இதுல நானும் போயிட்டேன்னா நீங்க தனியா ஆகிடுவீங்க. ஐயோ, அத நான் நினைச்சி பார்க்க கூட விரும்பல” என்றாள். ஆம் செல்வராஜ் தவறிய பின்பு கௌதமும் உடன் இல்லாததால் தங்கராஜை திருநெல்வேலியிலிருக்கும் அவர்களது பெரிய வீட்டில் ஆள் வைத்து பார்த்துக் கொள்கின்றனர். வீட்டில் பிறந்த மற்ற பெண்களோ திருமணமாகி புகுந்த வீடு சென்றுவிட்டார்கள். அவ்வளவு பெரிய வீட்டில் இப்போது செல்வராணியும் நித்திலாவும் மட்டும் தனியாக இருக்கின்றனர்.
“வேண்டாம்மா கண்டதை போட்டு யோசிக்காத. நீ உன் வாழ்க்கைய பாரு. இதெல்லாம் காலங்காலத்துல நடந்திடனும். உங்க அக்காங்க எல்லாருக்கும் இருபத்திமூணு இல்ல இருபத்திநாலுக்குள்ள பண்ணியாச்சு. நிராவுக்கு இன்னும் சீக்கிரம், இருபது வயசுலயே கல்யாணம் நடந்திடுச்சு. தமையாக்கு மட்டும் கொஞ்சம் லேட் ஆச்சு. இருபத்தாறுல பண்ணோம். அதுவும் அவளும் உன்னைமாதிரி தான், டாக்டருக்கு படிக்கிறேன் மேல படிக்கிறேன்னு லேட் பண்ணிட்டா. காலத்துல பண்ணிருந்தா அவ வாழ்க்கைல அவ்ளோ பிரச்சனை வந்திருக்காதோ என்னமோ” மகளை பற்றி சொன்னவருக்கு தானாக கண்களில் நீர் நின்றது.
தன்னை மீட்டு கொண்டு “அதனால நீ என்ன சொன்னாலும் நான் கேக்க போறதில்ல. உங்க பெரியப்பா இருந்திருந்தா இதையெல்லாம் அவரே பார்த்துப்பாரு. அண்ணன்னு ஒருத்தன் இருக்கான்னு தான் பேரு. எட்டு வருஷம் ஆகப்போகுது இன்னும் ஆஸ்திரேலியாவுல போய் உட்கார்ந்துகிட்டு இருக்கான். கேட்டா, நீங்க நம்ம நித்திகிட்ட பேசி கல்யாணத்துக்கு சம்மதம் மட்டும் வாங்குங்க, அப்புறம் மாப்பிள்ளை ஆளு யாரு என்னனு எல்லாம் விசாரிச்சு உங்க முன்னாடி நிறுத்தவேண்டியது என் பொறுப்புன்னு அங்க இருந்துட்டே வாய் சவடால் விட்டுட்டு இருக்கான். இதோ இந்த மாப்பிள்ளை போட்டோ கூட அவன் சொல்லிதான் ஆள் எடுத்துட்டு வந்து கொடுத்துட்டு போனாங்க” அவர் சொல்லிமுடிக்கவும் நித்திலாவிற்கு முகமே மாறியது. அண்ணன் வருவதே வருடத்திற்கு ஒரு முறை. வரும்வேளையில் பேச சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. இதில் இவளது திருமணப் பேச்சை வேறு தொடங்கிவிட்டனர் என்று வருத்தம் கொண்டாள். அதுவுமில்லாமல் திருமண வயதாகியும் திருமணம் ஆகாமல் இருக்கும் தன் அண்ணனை பற்றிய கவலையும் அவளுக்கு இருந்தது. இது இரண்டிற்கும் தீர்வு, ஒன்றே. அண்ணனை இந்தியா வரவழைப்பது என்று முடிவுச்செய்தவள்
“பெரியம்மா அண்ணனுக்கு கல்யாணம் ஆகாம நான் பண்ணிக்கமாட்டேன்” ஒரேயடியாக சொன்னாள். அதை கேட்டு அதிர்ந்துப்போன செல்வராணி
“என்ன நித்தி நீ இப்படி சொல்ற. அவன் தான் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்னு ஒத்தக்காலுல நிக்கறானே. கேட்டா, இனி உங்க பையன் வாழ்க்கைல கல்யாணம்னு ஒண்ணு கிடையாதுனு சொல்றான். நீ என்னனா அவனுக்கு ஆனா தான் நான் பண்ணிப்பேன்னு சொல்ற. இப்போ நான் என்ன தான் பண்றது” என்ன செய்வதென்று புரியாமல் சொன்னவரை தேற்றும் வகையாக நித்திலா பேச ஆரம்பித்தாள்.
“நான் ஒண்ணு சொல்லட்டும்மா பெரியம்மா” அவரும் சொல் என்பது போல் அவளை பார்க்க “அண்ணன் யாரையோ லவ் பண்ணிருக்காருனு தோணுது. அவங்கள இன்னும் மறக்கலனும் தோணுது. நான் பார்த்திருக்கேன் பெரியம்மா. அவர் லேப்டாப்ல ஒரு பொண்ணோட போட்டோவ நான் பார்த்திருக்கேன். சின்ன வயசுல பார்த்ததால சரியா ஞாபகம் இல்ல. ஒருவேளை அதனால தான் அண்ணன் கல்யாணம் வேண்டாம்னு சொல்றாருனு நினைக்கறேன்”
“அப்படியா சொல்ற நித்தி” ஒருபுறம் மகள் சொல்வதை கேட்கும்போது உண்மையாக இருக்குமோ என்று தோன்றினாலும் மறுபுறம் மகனை பற்றி நன்கு அறிந்தவராயிற்றே..
“ஒரு முறை உங்க பெரியப்பாவும், என் மகன் அவனுக்கு பிடிச்ச வாழ்க்கைய வாழாதப்போ என்ன இருந்து என்னனு வருத்தப்பட்டிருக்காரு. எனக்கு ஒண்ணுதான் புரியல. நீ சொல்றமாதிரி அப்படி ஒரு பொண்ணு கௌதம் வாழ்க்கைல இருந்தா, அவன் இப்படி சும்மா இருக்கவும் மாட்டான் ஆஸ்திரேலியா போயிருக்கவும் மாட்டான். ஒருவேளை அந்த பொண்ணோட எதாவது பிரச்சனை வந்து பிரிஞ்சிட்டாங்களா. அப்படிதான் இருக்கனும் நித்தி. ஏன்னா கௌதமுக்கு ஒண்ணு வேணும்னா அதை எப்படியாவது பெற்றே தீருவான். இப்படி எதுவும் செய்யாம எதோ ஒரு நாட்டுல போய் உட்கார்ந்துக்கிட்டு இருக்கமாட்டான்”
“ஒருவேளை எதாவது காரணம் இருந்து அதுக்காக அண்ணன் கட்டுப்பட்டிருந்தா” மகள் சொன்ன வார்த்தையை ஏனோ தெய்வ வாக்காக உணர்ந்தார்.
“பெரியம்மா நீங்க முதல்ல சிட்னி கிளம்புங்க. அண்ணன் எதுக்காக இப்படி இருக்காருனு நாம கண்டுபிடிக்கனும்” அவள் சொல்ல, அவர் அவளை பார்த்தார் “என்ன பத்தி யோசிக்காதீங்க. நான் அக்காங்க வீட்டுல இல்ல அத்தை வீட்டுல இருந்துக்கிறேன்” என்றாள்.
“அது சரிப்பட்டு வராது நித்திம்மா. சம்மந்தம் பண்ண வீட்டுல உன்னை தங்க வைக்கறது முறையில்ல. அதோட வேணி வீட்டுல கௌசிக் இருக்கான். ஒரு கல்யாணம் ஆகாத பையன் இருக்க வீட்டுல உன்னை தங்கவிடுறதும் சரியில்ல” மிகவும் தெளிவாக நிதர்சனத்தை பேசினார்.
“அப்ப நான் இங்கயே இருந்துகிறேன். இங்க தான் இவ்ளோ ஆளுங்க இருக்காங்களே. நம்ம வீட்ல எனக்கென்ன பயம். நீங்க இப்போ அண்ணன்கிட்ட போறது தான் பெரியம்மா ரொம்ப அவசியம்” என்று பெரிய அன்னைக்கு நம்பிக்கை சொல்லி அனுப்பிவைத்ததன் பலன் தான் இன்று செல்வராணி ஆஸ்திரேலியாவில் இருப்பது. என்ன, அவரால் கௌதமின் வாயிலிருந்து எதையும் வரவழைக்க முடியவில்லை.
செல்வராஜ் இருந்தபோதும், தவறிய பின்னும், கௌதம் இருந்தாலும், இல்லையென்றாலும் நான்கு மருமகன்களும் அவர்களது தொழிலை நன்றாக கவனித்துக் கொண்டனர். அதிலும் வெற்றிமாறன் தான் அனைத்திற்கும் முழு பொறுப்பேற்று பார்த்துக் கொண்டார். என்றாவது கௌதம் வருவானென அவனது தந்தையின் நாற்காலி அவனுக்காக காத்துக்கொண்டே தான் இருக்கிறது. இதையெல்லாம் மகன் என்று புரிந்துக்கொள்வான் என்று கண் கலங்கினார்.
அவருக்கு என்ன தெரியும் தன் மகனை புரிந்துக்கொள்ள முடியவில்லை என்று வருத்தம் கொள்பவர், அதேநேரத்தில் கணவரை பற்றி அனைத்தும் தெரிந்தவர் என்ற இறுமாப்புடன் வாழ்பவருக்கு கணவருக்கும் இன்னொரு முகம் இருப்பதென்பது. அதை மகன் மட்டுமே அறிவான் என்பது. தந்தையிடம் கொள்ளை அன்பும், மரியாதையும் கொண்டவன் அந்த ஒன்றில் அவருடன் மாற்றுக்கருத்து கொண்டு விலகி வந்துவிட்டான் என்று.
அவர் எப்படி அறிவார் பெண்களை மதிப்பது, பெண்பிள்ளைகளுக்கு கல்வி கொடுப்பது அவசியம் என்று நினைப்பது, தொழிலில் நேர்மை, தன்னுடைய கடைகளில் வேலை செய்பவர்களை மதிப்புடன் நடத்துவது என்று அனைத்திலும் அவரது கணவர் முற்போக்கு சிந்தனைக்கொண்டவரே. ஒன்றை தவிர. அதில் மட்டும் அவருடைய கருத்தில் எந்த மாற்றமும் இருந்ததில்லை. அவரை மாற்றிக் கொள்ளவும் அவர் விரும்பவில்லை. அதற்காக அவர் என்னவும் செய்ய தயாராக இருந்தார். அந்த ஒன்று தான் கௌதமின் வாழ்வையும் அழித்து இன்றைக்கு அவனை ஆஸ்திரேலியாவில் வந்து அமரவைத்துள்ளது. இதை அறியும் நேரம் செல்வராணி என்ன முடிவு எடுப்பார்.
இப்படி பலவிடையறியா கேள்விகளோடு பயணித்துக் கொண்டிக்கும் இவர்களது சாபம்பெற்ற வாழ்விற்கு விமோசனம் கொடுக்க அவனும் தான் இருக்கிறான். ஆனால், அவன் இருக்கிறான் என்பதை இவர்கள் தான் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
ராமனின் பாதம்பட்டு அகலிகை சாபம் விலகியது போல், என்று அவனது பாதம் அந்த வீட்டில் படும்? என்று அந்த வீடு பொலிவை பெரும்? என்று இவர்களது வாழ்வின் சாபம் நீங்கும்? இறைவன் ஒருவன் மட்டுமே அறிந்தது.