All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிலா ஶ்ரீதரின் "எங்கேயும் நீயடி.. போகுதே உயிரடி..!!!" - கதை திரி

Status
Not open for further replies.

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹலோ ப்ரண்ட்ஸ்,

இதோ அடுத்த கதையுடன் வந்துவிட்டேன்.

கதையின் பெயர் - எங்கேயும் நீயடி.. போகுதே உயிரடி..!!!

இது சிபி சக்கரவர்த்தி, அன்பரசியின் அழகிய காதல்...


முந்தைய கதைகளுக்கு கொடுத்த ஆதாரவை இக்கதைக்கும் தாருங்கள் ப்ரண்ட்ஸ்.


அன்புடன்,
நிலா ஶ்ரீதர்
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 1

காக்கைச் சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கு மரங்கலெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சைநிறந் தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் மொழியிலெல்லாம் நந்தலாலா - நின்றன்
கீத மிசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னைத்

தீண்டுமின்பம்ந் தோன்றுதடா நந்தலாலா.

யாருமற்ற அந்த பெரிய கூடத்தில் கண்களில் நீர் வழிய வீணையை மீட்டுக் கொண்டே தன் தென்மதுர குரலில் பாடி கொண்டிருந்தாள் அவனது ராசி.

வாழ்க்கையின் அர்த்தத்தை தொலைத்திருந்தவளுக்கு வாழ கற்று கொடுத்தவன் அவன் தானே. இன்று அவனை விட்டு வெகு தூரத்தில் வந்திருக்க வேண்டிய கட்டாயம்.

எத்தனை எத்தனை இன்பங்களை திகட்ட திகட்ட அவளுக்கு கொடுத்திருக்கிறான். இப்போதும் இந்த பாடலை பாடும் போது அவன் அவள் மடியில் கண்களை மூடி படுத்து அவள் பாடுவதை லயித்து கேட்பது நினைவில் ஆடியது. அது மட்டுமா அவள் அவன் தலையை கோதி கொடுக்க அவளது வயிற்று பகுதியை மறைத்திருக்கும் புடவையை விலக்கி வெற்று வயிற்றில் முகம் புதைத்து அவளுக்கு சிலிர்க்க செய்வான். அதில் சுருதியோடு சேர்ந்து அவளும் தப்பி போவாளே. இன்றும் தன் வயிற்றை வருடி கொடுத்துக் கொண்டாள்.

மனதில் அவன் நினைப்பும், உடலில் அவன் வாசமும் நிறைந்திருக்க, அவர்களது தூய அன்பை புரியாமல் பேசிய வார்த்தைகளுக்காக அவனை விட்டு விலகி வந்துவிட்டோமே என்று எண்ணும் போதே கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது.

கண்ணீரை துடைத்தவள் நினைவுகளில் பின்னோக்கி சென்றாள்.

இரண்டு வருடங்களுக்கு முன்..

தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் ஓட்டுநருக்கு பணத்தை செலுத்தி விட்டு கீழே இறங்கியவள் காவலாளியிடம் யாரை காணவேண்டும் என்ற விபரம் சொல்ல, அவரும் வீட்டினுள் இருப்பவருக்கு தகவல் சொல்லி அனுமதி பெற்று கொண்டே அவளை உள்ளே அனுப்பினார்.

இவள் உள்ளே வருவதற்கும் பொறுக்காத அவளது தோழி வாசலுக்கே வந்து “வா டி.. உன்னை நேர்ல பார்த்து எத்தனை வருஷமாச்சு” என்று ஆர்பரித்தவள் அவளை அணைத்து விடுத்து “சாப்பிடறியா இல்லையா, இப்படி இளைச்சி போயிருக்க” தோழியின் மெலிந்த தோற்றத்தை பார்த்து கவலையாக கேட்டாள்.

“அப்படியெல்லாம் இல்ல. எப்போவும் போல தான் இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க” அவளோ எதிரிலிருப்பவளை நலம் விசாரித்தாள்.

“எனக்கு என்ன. நல்லா இருக்கேன். மாசமானதுல இருந்து வீட்டுல இருக்க ஒவ்வொருத்தரும் கவனிக்கிற கவனிப்புல ரெண்டு மூணு சுத்து பெருத்துட்டேன்” தன்னை கண்களாலே காட்டி சொன்னவள் அவள் காதருகே குனிந்து “இப்போ எல்லாம் ஃபீலிங்கே வராத என் புருஷன் சிட்டி ரோபோ கூட தாங்கு தாங்குனு தாங்குறான்” என்று சிரித்து விட்டு

“நான் பாரு வாசலிலேயே நிக்க வச்சி பேசிட்டு இருக்கேன்.. உள்ளே வா அன்பு” என்று அவளை அழைத்து சென்ற அபர்னா சற்றே தெரிய தொடங்கிய தன் வயிற்றை பிடித்துக் கொண்டு உள்ளே செல்ல, அவளை தொடர்ந்து தனக்கே தெரியாமல் தன் வலது காலை எடுத்து வைத்து அந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தாள் அன்பரசி.

அன்பரசியை சோபாவில் அமர்த்திவிட்டு அவள் வேண்டாம் என்று மறுத்தும் அவளுக்கு குடிக்க சூடாக ஏதாவது எடுத்து வருகிறேன் என்று அபர்னா சமையலறைக்கு சென்றாள்.

புது இடத்தில், அதுவும் அங்கு யாரும் இல்லாத போது நம் கண்கள் நம்மை மீறி அந்த வீட்டை சுற்றி பார்வையை சுழலவிடும். ஆனால் அன்புவோ தன் பார்வையை கொஞ்சமும் நகர்த்தாமல் நிலத்தை பார்த்து சோபாவில் அமர்ந்திருந்தாள்.

அந்நேரம் வெளியே வந்த அபர்ணா அன்பரசியின் அருகில் சென்றமர, அவளுடன் வந்த அவ்வீட்டில் பணிபுரியும் பார்வதி ஆவி பறக்க காப்பியும் இருவரும் சாப்பிட தின்பண்டமும் எடுத்து வந்து எதிரே இருக்கும் டீபாயில் வைத்தார்.

காப்பியை வாங்கி மீண்டும் டீபாயில் வைத்த அன்பு “செக்கப் போனீங்களா” என்று அபர்ணாவை விசாரிக்க

“போயிட்டு வந்தேன் அன்பு. பேபியோட க்ரோத் நல்லா இருக்குன்னு சொன்னாங்க. வீட்டுலயும் ஆள் மாத்தி ஆள் யாராவது கூடவே இருக்காங்க. சரி, வேலையெல்லாம் எப்படி போகுது. இங்க நான் ப்ரெக்னன்ட்னு தெரிஞ்சதும் ஜாப் போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அப்போ வேற எனக்கு தலைசுத்தல், வாந்தி எல்லாம் இருந்துச்சு. அதான் நானும் ஒன்னும் சொல்லல” என்றாள் அபர்ணா.

அன்பரசி அபர்ணாவை விட இரண்டு வருடம் சிறியவள். இருவரும் ஒரே கம்பனியில் ஒரே ப்ரொஜெக்ட்டில் பணிபுரிந்திருந்தனர்.

அபர்ணா வசதியான வீட்டு பெண். அவளது தந்தைக்கு அம்பத்தூரில் சொந்தமாக மூன்று பேக்டரி இருக்கின்றது. அவள் அவளது வீட்டிற்கு ஒரே பெண்ணும். அவள் வேலைக்கு வருவதே பொழுதுபோக்கிற்கும் சம்பளத்தை வைத்து சுதந்திரமாக செலவு செய்து ஊர் சுற்றுவதற்கும் தான்.

எல்லாம் இருந்தும் ஜாதகத்தில் ஏதோ கோளாரென அபர்ணாவிற்கு இருபத்தியொன்பது வயதில் தான் திருமணமானது.

அதேநேரம் அன்பரசியோ குடும்ப தேவைக்காக வேலைக்கு செல்பவள். அவளது வீட்டில் அவளும் அண்ணனும் என இருவர். மகனுக்கு பிறகு பத்து வருடம் கழித்து அன்பு பிறந்ததால் வீட்டின் இளவரசியாகவே அவளை செல்லமாக வளர்த்திருந்தாலும், தந்தை பணி ஓய்வு பெற்றுவிட, அண்ணனும் தன் மனைவியோடு தனி குடித்தனம் சென்றுவிட்டிருக்க இப்போது இவள் வேலைக்கு செல்வது இன்றியமையாததாக ஆகிவிட்டது.

வேலையில் சேர்ந்து ஐந்து வருடங்கள் மட்டுமே ஆகியிருந்தாலும் அன்புவின் கடின உழைப்பால் ஒன்றரை வருடம் வெளிநாட்டில் வேலையில் இருந்துவிட்டு திரும்பியிருக்கிறாள். அவள் ஜெர்மனியில் இருந்த போது தான் அபர்ணாவிற்கு வரன் முடிவானதோடு திருமணமும் முடிந்து இப்போது அவள் ஐந்து மாதம் கருவுற்றிருக்கிறாள்.

பதினைந்து நாட்களுக்கு முன்னே ஜெர்மனியில் இருந்து வந்த அன்பு, இங்கே முடிக்க வேண்டிய வேலைகளை முடித்துக் கொண்டு இப்போது மாதமாக இருக்கும் தன் தோழியை காண வந்திருக்கிறாள்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்ன தான் காணொளி அழைப்பில் பேசி கொண்டாலும், இப்போதே ஒன்றரை வருட கதைகளை நேரில் பேசி கொள்ள சந்தர்ப்பம் கிடைக்க, இருவரும் அதில் ழூழ்கி போக அப்போதே கீழிறங்கி வந்தான் அந்த இளைஞன்.

ஆறடிக்கு மேல் உயரம், மாநிறத்திற்கும் சற்று மேலான நிறம், பரந்த மார்பு, நேர்கொண்ட பார்வை, கூர் நாசியோடு சரியாக கத்தரித்திருந்த மீசையென நேர்த்தியாக இருந்தான். உடலை பிடித்துக் கொண்டு இருந்த அவனது ட்-ஷர்ட்டில் அவனது கட்டுக்கோப்பான உடலும் புஜங்களும் தெரிந்தது.

தோழிகள் இருவரும் அபர்ணாவின் திருமண ஆல்பத்தை பார்த்திருக்க இவன் கீழே வந்ததை அவர்கள் கவனிக்கவில்லை. தனக்கு முதுகு காட்டி அமர்ந்து பேசியிருந்தவர்களை பார்த்து கொண்டே சமையலறைக்குள் சென்றவனோ அடுத்த பதினைந்து நிமிடங்களில் அவர்கள் முன் ஒரு டிரேவை நீட்டினான்.

இருவரும் அவனை நிமிர்ந்து பார்க்க, புன்னகை முகமாக நின்றிருந்தவனை பார்த்த அபர்ணா “அது எப்படி சிபி டைமுக்கு டைம் எல்லாம் செய்யறீங்க” என்று ஆச்சர்யப்பட..

“அசோக் இல்லாதப்போ நான் தானே அண்ணி உங்களை பத்திரமா பார்த்துக்கணும்” என்று புன்னகைத்தான் சிபி.. சிபி சக்கரவர்த்தி.

அவனது அண்ணன் அசோக் சக்கரவர்த்தியும் தந்தை பூபதி கேசவனும் அவர்களது கார்மெண்ட்ஸுக்கு தேவையான மெட்டீரியல்களை நல்ல தரத்தில் வாங்க வெளியூர் சென்றிருக்க, அவனது அன்னையோ வெளியில் சென்றிருக்கிறார்.

அதனால் இன்று அண்ணியை பார்த்து கொள்ளும் பொறுப்பு சிபியினுடையது. அவன் வேலைக்கு செல்லும் நேரம் சம்மந்தி அம்மா திரும்பி வரும் வரை அபர்ணாவின் அம்மா மகளுக்கு துணையாக வந்து இருப்பார்.

இரண்டு பெரிய கண்ணாடி குவளையில் இருந்த ஆப்பிள் பழச்சாறில் அபர்ணா ஒன்றை எடுத்துக் கொள்ள, இன்னொன்றை அன்பரசியின் முன் நீட்டி “எடுத்துக்கோங்க” என்றான் சிபி.

அதை கேட்ட அன்பு அவனை விழித்துப் பார்க்க, அப்போதே ஒருவரை ஒருவர் தெரியாதென்பதே அபர்ணாவின் புத்திக்கு எட்ட “நான் பாரு, சாரி சாரி.. சிபி, இது என் ப்ரண்ட் அன்பரசி.. ஒண்ணா தான் ஒர்க் பண்ணிட்டு இருந்தோம்” என்று சிபியிடம் சொன்னவள் “அன்பு, இது சிபி.. என் மச்சினர். ஜூஸ் எடுத்துக்கோ டி” என்று அன்பரசியிடமும் சொன்னாள்.

அப்போதும் அவள் தயங்க, அதை புரிந்தவனாக மேசை மீது வைத்துவிட்டு மீண்டும் சமையலறை சென்று தனக்கு ஒரு கண்ணாடி குவளையில் பழசாறை எடுத்துக் கொண்டு மாடியிலிருக்கும் தன்னறைக்கு சென்றுவிட்டான் சிபி.

இன்னும் ஒரு மணிநேரமாகியிருக்க, இப்போது நன்கு தயாராகி இருந்தவன் தன் வண்டி சாவியை விரலில் சுழற்றி கொண்டே கீழே வந்து, வாசலருகே இருந்த காலணி அடுக்கு தட்டில் இருந்து ஷுவை எடுத்து அதற்கு பாலிஷ் போட்டுக் கொண்டிருந்தான்.

அப்போது “ஜெர்மனி போன கொஞ்ச மாசத்துலயே வட்டிக்கு வாங்கியிருந்த பணத்தை அடைச்சிட்டேன். இப்போ பேங்க்ல இருந்த கடனையும் கட்டி முடிச்சிட்டேன். அடுத்து ஒரு நல்ல வீடா பார்த்து மாறி போய்டணும்னு பார்க்கறேன்” சிபியை கவனிக்காத அன்பரசி அபர்ணாவிடம் பேசிக் கொண்டிருக்க, அது அவனுக்கும் கேட்டிருக்க எத்தனை பொறுப்பான பெண்ணென்று எண்ணிக் கொண்டான்.

பேசி முடித்த அன்பு சில நிமிடம் மௌனமாக இருக்க “எல்லாம் சரி ஆகிடும் அன்பு“ என்று அபர்ணா தோழியின் கையை அழுத்திக் கொடுக்க அன்பரசியும் மெலிதாக இதழ் விரித்தாள்.

எதையோ விழுங்குவதாக அங்கிருந்த தண்ணீரை எடுத்து குடித்த அன்பு தன் கை கடிகாரத்தை உயர்த்தி பார்த்து “டைம் ஆகிடுச்சு அபர்ணா. நான் கிளம்பறேன். உடம்பை பார்த்துக்கோங்க” என்று சொல்லிக் கொண்டே தன் கைபேசியை எடுத்து வண்டிக்கு பதிய ஒரு வண்டியும் பதிவாகவில்லை.

தோழியின் முகம் வருத்தத்தை காட்டுவதை கண்ட அபர்ணா “என்னாச்சு அன்பு. கேப் புக் ஆகலையா” என்று விசாரிக்க

“தெரியலங்க அபர்ணா. எதுவும் புக் ஆக மாட்டேங்குது” என்று கவலை தோய்ந்த குரலில் சொன்னாள்.

அப்போதே மேலே தன்னறையில் பார்த்த செய்தி சிபிக்கு ஞாபகம் வர “அண்ணி, கேப் டிரைவர்ஸெல்லாம் ஸ்ரைக் பண்றாங்க” என்று சொல்ல அன்பரசியும் அபர்ணாவும் அதிர்ந்து போனார்கள். அவர்களின் முகத்தை வைத்தே அதை புரிந்தவன் “கவர்ன்மென்ட் எதோ நியூ ரூல்ஸ் கொண்டு வந்திருக்காங்களாம். அதுல அவங்களுக்கு உடன்பாடு இல்லாம இத்தனை நாள் பேச்சுவார்த்தை நடந்து தோல்வில முடிஞ்சு, இப்போ ஸ்ரைக்னால எந்த ஆப்லயும் கேப்போ ஆட்டோவோ புக் ஆகாது அண்ணி” என்று விளக்கமும் தந்தான்.

விசயத்தை கேட்ட அன்பரசிக்கு இப்போது எப்படி செல்வது என்ற கவலை இருந்தாலும், சட்டென யோசனை தோன்றியவளாக “நான் ஆட்டோ பிடிச்சு போயிடுறேன்ங்க அபர்ணா” என்று முகம் மலர சொல்ல..

“இல்ல அன்பு, இது கொஞ்சம் பாஷ்ஷான ஏரியா. உள்ள ஆட்டோவெல்லாம் வராது” அபர்ணா வருத்தமாக சொல்ல அன்பிற்கு இப்போது அழுகையே வரும் போல் இருந்தது.

“மாமாவும் அவரும் ஒரு கார்ல போயிருக்காங்க. அத்தை அவங்க கார்ல போயிருக்காங்க. வீட்டுல இருந்த காரையும் அம்மாவை கூப்பிட்டு வர அனுப்பி இருக்கேன்” இப்போது தோழியை எப்படி அனுப்புவது என்று தனக்கு தானே சொல்லியிருந்த அபர்ணா இவர்களையே பார்த்திருந்த சிபியை பார்த்து

“சிபி.. உங்களால அன்புவ ட்ராப் பண்ண முடியுமா” என்று கேட்டாள்.

அவன் பதில் சொல்வதற்குள் தோழி சொன்னதில் அதிர்ந்துப் போன அன்பு “இல்ல அபர்ணா, நான் பஸ்லயோ, டிரைன்லயோ போயிக்கிறேன்” என்று படபடத்தாள்.

“இங்க இருந்து பஸ் ஸ்டாப் இல்ல ரயில்வே ஸ்டேஷனுக்கு எப்படி போவ” என்று அபர்ணா கேள்வி எழுப்ப,

அவளோ ‘நடந்து போயிக்கிறேன்’ என்று சொல்ல வருவதற்குள், தன் கை கடிகாரத்தில் மணி பார்த்த சிபி “எனக்கு ப்ராப்ளம் இல்ல அண்ணி. இவங்கள ஸ்டேஷன்ல விட்டுடுறேன்” என்றுவிட்டு ஷுவை மாட்டி கொண்டு வெளியே செல்ல..

தயங்கி நின்ற அன்பரசிக்கு ஏதேதோ சமாதானம் சொல்லி சம்மதிக்க வைத்தாள் அபர்ணா.

அன்பு கைகளை பிசைந்துக் கொண்டு தலையை கூட நிமிர்த்தாமல் வண்டியில் அமர்ந்திருக்க, சிபி தான் “நாங்க கிளம்பறோம் அண்ணி. டோன்ட் ஒர்ரி, உங்க ப்ரண்டை பத்திரமா இறக்கிவிடுறேன். டிராபிக் போல, அத்தையை இன்னும் காணோம். வந்ததும் எனக்கு ஒரு மெசேஜ் பண்ணிடுங்க” என்றுவிட்டு காரை கிளப்ப, தயக்கத்துடனே அபர்ணாவிற்கு கையாட்டி விட்டு அவனுடன் கிளம்பினாள் அன்பரசி.

சிபி அன்பரசியை மத்திய புறநகர் ரயில் நிலையத்தில் இறக்கிவிடுவதாக சொல்லியே அழைத்து வந்திருக்க அவளும் வழியெங்கும் அவனை நிமிர்ந்தும் பாராமல் தலை குனிந்தது குனிந்ததாகவே அமர்ந்திருந்தாள்.

சிபி தான் அவளை அவ்வபோது பார்த்துக் கொண்டிருக்க அவனுக்கு வீட்டிலிருந்து கிளம்பும் போது நிகழ்ந்தது நினைவு வந்தது.

மகிழுந்தை காட்டிலும் தன் இருசக்கர வாகனத்தில் செல்வதையே அவன் அதிகம் விரும்புவான். இன்றும் தன் வண்டியில் ஏறி அமர்ந்து திரும்பி அவளை பார்க்க “பைக்கா.. இல்ல, நான் வரல” என்று மீண்டும் முரண்டு பிடித்தாள்.

அதை கண்டு சிபி கடுப்பாகி விட, அபர்ணா தான் “சிபி, அவ தயங்குறா. இன்னைக்கு ஒருநாள் கார்ல போறீங்களா” என்று கேட்க சரியென்று தலையாட்டிவிட்டு இருசக்கர வாகனத்தை மீண்டும் அதன் இடத்தில் விட்டு காரை எடுத்தான்.

கார், பைக் பூலிங் என யாரென்றே தெரியாத ஆடவனுடன் பயணிக்கும் காலத்தில் ஒரு அவசர தேவைக்கு கூட இன்னொருவனின் வண்டியில் ஏறமாட்டேன் என்று அடம்பிடிக்கும் பெண்ணை அதிசயமாக பார்த்துக் கொண்டே வண்டியை இயக்கி கொண்டிருந்தான் சிபி.

அப்போது தன் பொழுதுபோக்கிற்காக எஃப்.எமை உயிர்ப்பிக்க, அதில் ஸ்ரேயா கோஷலின் குரலில் இனிமையாக பாடல் ஒலித்தது.

‘நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைத்தேன்
நீயே அர்த்தம்

உன் மழை
வானம் மட்டும் இருள்
பூசிக்கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும்
மட்டும் இது கவிதையோ’

சிபி பாட்டுக்கு ஏற்ப தன் விரல்களால் தாளம் போட்டு கொண்டே வண்டியை செலுத்த, அவள் இறுதியாக கேட்ட வரியில் சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தவள் கண்களில் கனல் கக்க “பாட்டை கொஞ்சம் நிறுத்தறீங்களா ப்ளீஸ்” என்று பற்களை கடித்தாள்.

அதில் உடனே அவள் சொன்னதை செய்தவன் “ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபீஸரா இருப்பாங்க போல” என்று தனக்குள்ளேயே முணுமுணுத்து கொண்டவன் அதற்கு மேல் அமைதியாகவே அவளை அழைத்து சென்றான்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வண்டியை நிறுத்தியவன் “நீங்க வெயிட் பண்ணுங்க, நான் காரை பார்க் பண்ணிட்டு வந்திடுறேன்” என்று இயல்பாக அவன் சொல்ல, அவளுக்கு தான் அதில் தூக்கி வாரி போட்டது.

“நீங்க ஏன்ங்க என் கூட வர்றீங்க. என்னை இவ்ளோ தூரம் ட்ராப் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ்” என்று அடித்து பிடித்து கீழே இறங்கினாள்.

அதில் அண்ணி சொன்னதை வைத்து அவள் பெயரை நினைவு வைத்திருந்தவன் “அன்பரசி” என்று இதழ்கடையோராம் புன்னகை வழிய அழைக்க, அந்த குரல் அவளையும் செல்லவிடாமல் தடுத்து நிறுத்த, திரும்பி அவனை குனிந்து பார்த்தாள்.

“நானும் உள்ள தான் வரணும். ஐ ஆம் எ எல்.பி. லோகோ பைலட்” என்று புன்னகைக்க, அப்போதே அவன் உடையை அவள் கவனிக்க, இளம்நீல நிறத்தில் சட்டையும் அடர் நிலத்தில் கால் சராயும் அணிந்திருந்தான்.

தன் அறியாமையை எண்ணி அவள் நொந்து கொள்ள “என் கூட பைக்ல வர்றதுக்கும் கார்ல வர்றதுக்கும் இவ்வளவு யோசிச்சீங்களே, யாருக்கு தெரியும் நீங்க போற டிரைனையே நான் தான் எடுக்கணுமோ என்னமோ” என்று அடக்கப்பட்ட புன்னகையுடன் அவன் சொல்ல, கண்கள் துடிக்க அவனையே பார்த்திருந்தாள் அன்பு.




உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்
 
Status
Not open for further replies.
Top