All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ். சுபா ஸ்ரீசியின் 'நீயே என் கீர்த்தனம்' - கதை திரி

Status
Not open for further replies.

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... தோழமைகளே 😍.

எல்லாரும் எப்படி இருக்கிங்க? 😍😍 உங்களோட எல்லாம் பேசி ரொம்ப நாள் ஆகிட்டு🤧.இதுவரை செல்வியா இருந்த நான் இப்போ திருமதி ஆனாதுனால சைட் பக்கம் வர முடியாத அளவு கொஞ்சம் பிஸி🤧🤧🤧.

ஆனா இனிமேல் எப்பவும் போல நானும் வருவேன் கதையும் வரும் 😍😍❤.
புது வருடம் வர போகுது நானும் புதுசா வந்துருக்கேன் இல்லையா சோ புது கதையோட ஒரு தொடக்கத்தோட வந்துருக்கேன்😍❤.

"நீயே என் கீர்த்தனம்...."

கொஞ்சமே கொஞ்சம் கோபக்கார ஹீரோ. சுயமரியாதை தான் முக்கியம்னு நினைக்குற ஹீரோயின்.

இவங்களை வச்சி தான் கதை.

இப்போதைக்கு இது போதும்னு நினைக்குறேன் இனிமேல் முதல் எபில மீட் பண்ணலாம் தோழமைகளே 😍😍❤.

புதன் அன்று முதல் எபி வரும்...

அன்புடன்

சுபா ❤

 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... தோழமைகளே 😍

ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்களை பார்க்குறதுல ரொம்பவே சந்தோஷம்😍❤. என்னடா நியூ இயருக்கு வரேன்னு சொன்னவ இன்னைக்கு வந்து ஐஸ் வைக்குறாளேனு நீங்க என்னை தப்பா நினைக்க கூடாது. கல்யாணம் ஆனா இவ்வளவு பொறுப்பு வரும்னு எனக்கு தெரியாது பா 😤. சோ இனிமேல் கால தாமதம் பண்ணா கதையே எழுத முடியாதுனு தெரியவும் வேலையில இறங்கிட்டேன்.

வாங்க வாங்க எபி உள்ள போவோம் 😍😍.

நீயே என் தீர்த்தம் முதல் எபி இதோ...👇
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்: 1

ஓம் சரவண பவ,
ஓம் சரவண பவ,
ஓம் சரவண பவ, என்று இடைவிடாமல் உச்சரித்தபடி அந்த ஆற்றங்கரை முருகனுக்கு தண்ணீர் சுமந்து ஊற்றி கொண்டிருந்தாள் தெய்வ கீர்த்தனா.

பொதுவாக ஆற்றங்கரை என்றாலே பிள்ளையார் தான் அமர்ந்து இருப்பார் என்று எல்லோரும் அறிந்திருக்க, இங்கே சற்றே மாறுபட்டு முருகர் தனிமையில் ஆற்றங்கரை மரத்தடியில் அமர்ந்து இருப்பார்.

முருகர் அவர் அண்ணன் கணேசனை பார்க்க வந்து, கணேசன் அங்கு இல்லாமல் போனதால் அவருக்காக காத்திருக்க இங்கேயே அவர் அமர்ந்து விட்டதாக பெரியவர்கள் கூறுகிறார்கள்.

மிகவும் சக்தி வாய்ந்தவர். வேண்டுதல் வைத்து ஆற்றில் நீர் எடுத்து அபிஷேகம் செய்தால் எண்ணியது நடக்கும். பலருக்கும் பல நல்லது நடந்திருக்க கீர்த்தனாவின் வேண்டுதலுக்கு மட்டும் அந்த முருகர் இன்னும் செவி சாய்க்கவில்லை.

அவளும் ஐந்து வருடமாக அவருக்கு நீர் எடுத்து ஊற்றுகிறாள். ஆனாலும் முருகன் மனம் குளிரவில்லை. காத்திருப்பின் கணத்தில் நீர் எடுத்து ஊற்றியதின் அளவை மறந்திருந்தாள்.

இன்றும் முருகனின் திருநாமத்தை உச்சரித்தபடி தெய்வ கீர்த்தனா சாமிக்கு நீர் எடுத்து ஊற்ற, "என்ன தெய்வா வள்ளி மணவாளனுக்கு அபிஷேகமா? நீயும் ஐஞ்சி வருசமா வாரம் நாலு முறை அபிஷேகம் பண்ணி தான் பார்க்குற...இந்த முருகன் கண்ணை திறக்க மாட்டேங்குறானே! வயசும் இருபத்தேழு முடிய போகுது. வரன் எதுவும் வருதா?" என்று அவர்கள் தெருவில் வசிக்கும் ரூபா அக்கா கேட்க,

அவர் பேச்சில் 'ஹையோ....' என உள்ளுக்குள் அலறிய கீர்த்தனா, வெளியே "தெரியலையே கா அப்பாவை தான் கேட்கனும்" என்ற படி ஆற்றில் இறங்கி தண்ணீர் எடுத்தாள்.

"சீக்கிரம் நல்லது நடக்கும் கீர்த்தனா. நீ கவலை படாத. உனக்குனு போட்ட விதை வளர்ந்து இருக்கும். சரியான நேரத்துல உன் கையில கொண்டு முருகன் ஒப்படைப்பான். அதுவரைக்கு உன் அபிஷேகத்தை விடாத" என்ற ரூபா

தொடர்ந்து "முன்னைக்கு இப்போ ரொம்ப கருத்த மாதிரி இருக்க, இப்படி வெயில் நேரமா வந்து வேண்டுதல் பண்றதுக்கு... கொஞ்சம் வெயில் தாந்தால வந்து செய்யலாம் இல்ல!" என்றார் அக்கறையாக.

"மணி தான் ஆறு ஆகிட்டேக்கா ஆனாலும் வெயில் குறைய மாட்டேங்குது. அதான் எப்பவும் செய்யுறது தானேனு வந்துட்டேன்" என்ற கீர்த்தனா முருகர் மீது தண்ணீரை ஊற்ற, ரூபாவும் நின்று வணங்கியவர்

"நான் இப்படி கேட்டேனு நீ எதும் சங்கடப்பட்டுக்காத தெய்வா. உன்னை விட சின்ன பிள்ளைங்க எல்லாம் கல்யாணம் ஆகி கையில ஒன்னும் வயித்துல ஒன்னுமா இருக்கும் போது... அவங்க எல்லாரையும் விட பெரிய பொண்ணு நீ கல்யாணம் ஆகாம இருக்கும் போது பார்க்க சங்கடமா இருக்குது. உன் ப்ரெண்டெல்லாம் கூட பாரு... அடுத்த வருஷம் பிள்ளையை ஸ்கூல் சேர்க்கனும்னு பேசுறாளுங்க" என்றார் வருத்தம் நிறைந்த குரலில்.

"புரியுது கா. நான் ஒன்னும் தப்பா எடுத்துக்கலை" என்ற தெய்வ கீர்த்தனா உள்ளுக்குள் 'நான் ஃபீல் பண்றேன்னு உங்ககிட்ட வந்து சொன்னேனா?' என்று குமுறி கொண்டிருந்தாள்.

"சரி தெய்வா. நீ வேண்டுதலை பாரு... நான் கிளம்புறேன்" என்று ரூபா சென்று விட,

அவர்கள் சம்பாசனையை கேட்டு புன்னகையுடன் அமர்ந்திருந்த முருகனை முறைத்து பார்த்த கீர்த்தனா "எதுக்கு? இல்ல எதுக்குனு கேக்குறேன். நான் கேட்டேனா எனக்காக யாரும் பரிதாப படலை. நீ ஆள் அனுப்பி வைனு" என்று கோபமாய் கேட்டவள் " எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு சோதனை? உன்னை கும்பிடுறேனே அதுக்காகவா? எனக்கு கல்யாணம் ஆகலைங்குறதை விட இப்படி பேச்சை கேட்க தான் கஷ்டமா இருக்கு முருகா. ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல கல்யாணம் ஆகாம இருந்தா அம்மா கூட எதிரி ஆகிடுறாங்க. அவங்க வேதனை புரியுது. அதுக்குகாக... என்னோட சண்டை போட்டு என்ன பிரயோஜனம் சொல்லு? அதனால என்னோட நிம்மதியும் சேர்ந்து போறது தான் மிச்சம். அதனால உன் கருணையை கொஞ்சம் சீக்கிரம் காட்டு" என்றாள் தெய்வ கீர்த்தனா வருத்தமும் கெஞ்சலுமாய்.

ஆனால் அந்த அரசமரத்தான் தான் அதை கேட்டது போல் இல்லை. எப்போதும் முகத்தில் இருக்கும் நீங்காத புன்னகையுடனேயே தான் அமர்ந்து இருந்தார். அவரை சில நொடிகள் முறைத்து பார்த்த கீர்த்தானா முகத்திலும் அந்த புன்னகை வந்தமர

"இந்த டைம்மும் என்னை டீல்ல விட போற அதானே!" என்ற கேள்வியுடனும்
அதே புன்னகையுடனும் வேண்டுதலை முடித்துக்கொண்டு அவள் வீட்டிற்கு வந்தாள்.

அவள் நினைத்து வந்தது சரி தான் என்பது போல் "தெய்வா இங்க வா... இந்த போட்டோவை பாரு" என்று சந்தோஷத்துடன் ஒரு கவரை அவளிடம் கொடுத்தார் அபிராமி.

"யாரு மா கொண்டு வந்தா?" என்று கேட்டு கொண்டே அந்த புகைப்படத்தை வாங்கி பார்த்த தெய்வ கீர்த்தனா, அபிராமியை பார்க்க,

"பையன் பெரு மகேஷ். இஞ்சினியரிங் முடிச்சிட்டு சென்னைல வேலை பார்க்குறானாம். மாசம் எழுபது சம்பளமாம். ஜாதகம் பார்க்க வேண்டாம் பொண்ணு பிடிச்சிருந்தா பேசலாம்னு சொல்லி இருக்காங்களாம். நம்ம ஜெயா இப்போ தான் வந்து போட்டோவும் ஜாதகமும் குடுத்துட்டு போறா" என்று அவள் கேட்கும் முன்பே விபரங்களை அடுக்கியவர் ஆவலாய் கீர்த்தனா முகம் பார்க்க,

"எப்போ வராங்கலாம்?" என்றாள் கீர்த்தானா பெரிதாய் எந்த ஆர்வமும் இல்லாமல்.

"நாளைக்கே நாள் நல்லா இருக்கு பார்க்க வரட்டுமானு ஜெயா கேட்டா... நான் தான் அப்பாட்ட கேட்டுட்டு தகவல் சொல்றதா சொல்லி இருக்கேன்" என்று அபிராமி சொல்ல,

"சரிமா..." என்ற கீர்த்தனா, போட்டோவை அவரிடமே கொடுக்க,

"தெய்வாமா..." என்று தவிப்புடன் அழைத்து அவள் கையை பிடித்து கொண்ட அபிராமி "உனக்கு பையனை பிடிச்சிருக்கு தானே டா?" என்று கேட்டார்.

"பிடிக்கலைனாலும் அப்பாகிட்ட பிடிச்சிருக்குனு சொல்றேன் மா. எனக்கா இல்லைனாலும் உனக்கா சீக்கிரமே இந்த வீட்டை விட்டு போய்டுறேன் சரியா?" என்ற கீர்த்தனா இன்னதென பிரித்தறிய முடியா குரலில் சொல்ல,

அவள் வார்த்தை அபிராமியை சுருக்கென குத்த "ஏன் தெய்வா!" என்று கேட்டவருக்கு கண்ணீர் கன்னத்தில் வழிந்து விட்டது.

"வேற என்னமா செய்யட்டும். நான் எனக்கு பிடிக்கலைனு சொன்னா அடுத்த பத்து நாள் என்னோட பேச மாட்டிங்க. என்னவோ... வந்த எல்லா சம்மந்தத்தையும் நானே எட்டி உதைச்ச மாதிரி பேசுவிங்க. கேட்டு கேட்டு எனக்கு வெறுத்து போச்சி மா. இந்த வீட்டை விட்டு, உங்களை விட்டு தூரமா போனா போதும்னு ஆகிட்டு" என கீர்த்தனா விரக்தியாய் சொல்ல,

அதற்கு மேல் மகளின் பேச்சை கேட்டு உள்ளம் வெதுப்ப மனம் இல்லாத அபிர்மி "போதும் டி நீ பேசுனது. நீ பேசுனதை கேட்டு பெத்தவளா எனக்கு மனசு குளிர்ந்து போச்சி. ஆமா... நீ எதுவும் சொல்ல வேண்டாம். நான் சொன்னதை மட்டும் கேளு... போதும்" என்று கோபமும் அழுகையுமாய் சொன்னவர் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

மகள் சொன்ன இந்த வார்த்தையே ஜென்மத்துக்கும் போதுமானதாய் இருந்தது அவருக்கு.

"நீங்க இதை தான் செய்விங்கனு எனக்கு தெரியும்மா" என்று விட்டு கோபமாய் அறைக்குள் சென்று கட்டிலில் விழுந்த கீர்த்தனாவின் கண்கள் சத்தமின்றி கண்ணீரை உதிர்த்தது. கல்யாண சந்தையில் கடந்த நான்கு ஆண்டுகளாய் விலை போகாமல் இருந்தது அவள் தவறா? ஆனால் அவள் தவறு தான் என்றனர் ஊரும் உறவுகளும்.

கீர்த்தனாவை பொறுத்தவரை கல்யாணம் என்ற ஒன்று மட்டுமே வாழ்க்கை இல்லை அதை தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது என்று நினைக்கும் வகை. ஆனால் அபிராமி கல்யாணம் மட்டுமே வாழ்க்கை என்று நினைக்கும் ரகம்.

அதனால் தானோ என்னவோ! கீர்த்தனா கல்லூரி இரண்டாம் வருடம் படிக்கும் போதே அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கி விட்டார்.

அந்த வருடத்திலேயே திருமணத்தை முடித்து விட வேண்டும் என்று தீவிரமாய் இருந்தவரை "படிப்பு முடிந்த பிறகு தான் திருமணம் செய்வேன். இப்போது திருமணம் வேண்டாம்" என்று சண்டை போட்டு ஒரு வாரம் சாப்பிட்டால் இருந்து தான் கீர்த்தனா அந்த பேச்சை தள்ளி போட்டாள்.

ஆம்... அவளால் தள்ளி போட மட்டுமே முடிந்தது. நிறுத்த முடியவில்லை. அபிராமி அந்த விஷயத்தை அப்படியே விடாமல் உறவினர்கள் வீட்டு கல்யாணம், சடங்கு என்று சென்று வரும் போதெல்லாம் ஒரு ஜாதகத்துடனோ இல்லை மாப்பிள்ளை வீடு பற்றிய தகவலுடனோ தான் வருவார்.

வாரம் முழுவதும் அதை பற்றியே பேசி கீர்த்தனா மனதை கலைக்க முயற்சிப்பார். ஆனாலும் கீர்த்தனா அவள் முடிவில் உறுதியாக இருக்க அவரே அவளுக்கு தெரியாமல் ஜாதகமும் பார்க்க செல்வார்.

இதெல்லாம் தெரிந்து தெரியாதது போல் கீர்த்தனா இருந்து கொல்வாள்.

விஷயம் வெளியே வரும் போது பேசி கொள்ளலாம் என்று நினைத்து அமைதியா இருந்து விட்டாள். ஆனால் அவள் நல்ல நேரமோ இல்லை கெட்ட நேரமோ அந்த இரண்டு வருடத்தில் அவளுக்கு எந்த வரனும் அமையவில்லை.

ஆனால் அதன் பிறகும் அமையாதது தான் இங்கே கொடுமையாகி போனது. ஆனாலும் அதை பெரிதாக நினைக்காத கீர்த்தானா, வரன் அமைந்த உடன் படிப்பை விடுவதா அபிராமியிடம் கூறி படிப்பை தொடர்ந்தாள். ஆனால் எம்ஃபில் முடிந்து இதோ வருடம் ஒன்று கடந்து விட்டது இன்னும் வரம் அமையவில்லை.

அவர்களுக்கு பிடித்தால் அபிராமிக்கு பிடிக்காமல் போகும், இவர்களுக்கு பிடித்தால் அங்கே பிடிக்காமல் போகும். இருவருக்கும் பிடித்தால் ஜாதக பொருத்தம் இருக்காது. இப்படியே வருடங்கள் கடந்து இருக்க அபிராமியின் மற்றோரு முகத்தையும் கீர்த்தனா உணர்ந்து விட்டிருந்தாள்.

முன்பெல்லாம் உள்ளங்கையில் வைத்து பாசம் காட்டி வளர்ந்தர் இப்பொதெல்லாம் திருமணம் பேசவும் திட்டவும் மட்டுமே என்று இருக்க சொந்த வீட்டையே வெறுத்து விட்டாள்.

ஒரு வயதிற்கு மேல் பெண் பிள்ளை திருமணம் ஆகாமல் வீட்டில் இருந்தால் அது பெற்றவருக்கு பாரம் என்று புரிய தொடங்கியது கீர்த்தனாவிற்கு. "நீ வீட்டை விட்டு போனா தான் எனக்கு நிம்மதியா சோறு இறங்கும்" என்று அபிராமி சொல்லு நேரம் எல்லாம் தனக்குள்ளே கலங்கி துடித்து போவாள் கீர்த்தனா.

இன்று வரை அந்த பேச்சி ஓயவில்லை. மாறாக இன்னும் சில வார்த்தைகள் கூடி இருந்தது. 'உன்னை விட சின்னவளுங்க எல்லாம் கையில் ஒன்னும் வயித்துல ஒன்னுமா இருக்காளுங்க, உனக்கு எப்போ தான் நல்லா காலம் பிறக்குமோ? ராசி இல்லாதவடி நீ' என்ற வார்த்தை எல்லாம் வதைத்து கொள்ளும்.

அது எல்லாம் பெற்றவர்களான அவர்களின் வேதனையின் வெளிப்பாடு என்று புரிய தான் செய்தது ஆனால் அவர்கள் வேதனையை அவளின் மேல் திணிப்பது தான் வலியை கொடுத்தது.

அதிலும் கடந்த இரண்டு வருடமாய் ஜாதகம் அமையவில்லை என்றாலும் சரி, மாப்பிள்ளை நன்றாக இல்லா விட்டாலும் சரி, கல்யாணம் நடந்தால் போதும் என்ற அபிராமியின் மனநிலை கீர்த்தனாவிற்கு ஒரு பாதுகாப்பின்மையையும் மன கசப்பையும் கொடுத்தது.

எங்கே 'திருமணம் நடந்தால் போதும்' என்று விசாரிக்காமல் கெட்டவனிடம் பிடித்து கொடுத்து விடுவார்களோ! என்ற பயம் அடிமனதை அறிக்க தொடங்க கடவுளை சரணடைந்து விட்டாள்.

முன்பு அபிராமியின் திட்டிற்கு பயந்து கடவுளை சுற்றியவள் இப்போது மனமாற செய்கிறாள். ஆனால் பலன் தான் இன்னும் கிடைக்கவில்லை.

இப்போதும் அதை நினைத்து வேதனையுடன் படுத்திருந்த கீர்த்தனா சற்று நேரத்தில் தெளிந்து நாளை வரும் வரனை ஏற்க தயாராகி விட்டாள். அதை தவிற அவளுக்கு வேறு வழியும் இருக்கவில்லை. அவள் மறுத்து ஏதும் கூறினாள் மீண்டும் திட்டு, பேசாமல் முகத்தை திருப்புவது, உண்ணா விரதம் இருப்பது என்று இருக்கும் கொஞ்ச நிம்மதியையும் எடுத்து கொள்வார் அபிராமி. எனவே நடக்கது நடக்கட்டும் என்று விட்டு விட்டாள்.

"தெய்வாமா... சாப்பிட வாட" என்று அழைத்த குமாரின் குரலில் எழுந்து வந்த கீர்த்தனாவிற்கு, அவள் தந்தையின் முகத்தில் இருந்த புன்னகை அவள் முடிவு சரிதான் என்று எண்ணத்தை கொடுத்தது.

அபிராமி திட்டி தீர்த்து, புலம்பி என்று அவர் கவலைகளை கொட்டி விடுவார். ஆனால் குமார் மனதிலேயே போட்டு அழுத்தி கொள்வார். அதனாலேயே கடந்த இரண்டு வருடங்களாய் அவரின் பேச்சி மிகவும் குறைந்து இருந்தது.

கல்யாணம், காதுகுத்து என்று எந்த சுப நிகழ்வுகளுக்கும் செல்வதும் இல்லை. அபிராமியை அனுப்பி விட்டு வேலைக்கு சென்று விடுவார்.

எல்லாவற்றையும் கீர்த்தனா கவனித்தாலும் அமைதியாகவே இருப்பாள். இதில் அவள் என்ன செய்து விட முடியும் என்று அவளுக்கு தெரியவில்லை. எனவே அமைதியாக இருந்து கொள்வாள்.

இப்போதும் அவர் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை மன நிறைவுடன் பார்த்தபடி சாப்பிட அமர்ந்தவள் அமைதியாக சாப்பிட,

அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்த குமார் "உனக்கு இந்த பையனை புடிச்சிருக்காமா? அம்மா சொன்னானு ஒன்னும் சம்மதம் சொல்லலையே!" என்று தவிப்பை அடக்கிய குரலில் கேட்க,

"பிடிச்சிருக்கு பா. நீங்க பேசுங்க" என்றாள் கீர்த்தனா.

அதில் அகம் மகிழ்ந்து போன குமார் "சரி மா... சரி மா... உன் தம்பியை வர சொல்றேன். பையனுக்கும் உன்ன பிடிச்சிட்டுனா நாளைக்கு உடனே பூ வைக்கனும்னு சொல்லிட்டு இருந்தாங்க பையனுக்கு அப்பா. பையன் ரொம்ப நல்ல பையன் மா. அப்பா விசாரிச்சிட்டேன். நீ ஏதும் சங்கடப்பட்டுக்காத" என்று சொல்ல,

"எனக்கு உங்களை தெரியும் பா. உங்களை தவிர எனக்கு வேற யார் நல்லது நினைச்சிட போறாங்க! நீங்க ஏற்ப்பாடு பண்ணுங்கப்பா" என்றவள் அவள் அறைக்குள் சென்று படுத்து விட, அடுத்த பத்து நிமிடத்தில் அவள் அவள் தம்பி அழைத்து விட்டான்.

அவன் பங்கிற்கு அவனும் பையனை பிடித்திருக்கிறதா என்று கேட்டு திருப்தி ஆகி கொண்டவன் கிளம்பி விட்டதாக கூறி தான் அழைப்பை துண்டித்தான்.

பொழுதும் விடிந்தது. அபிராமி வீட்டு வேலைகளில் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்க அவருக்கு உதவ என்று கீர்த்தனாவும் அவருடன் சென்று நின்று சின்ன சின்ன வேலைகளை செய்து கொடுத்தாள்.

அபிராமி அடிக்கடி அவள் முகத்தை பார்ப்பதும், வேலை செய்வதுமாக இருக்க "என் முகத்துல என்ன படமாமா ஓடுது?" என்றாள் கீர்த்தனா எரிச்சலுடன்.

"சும்மா பார்த்தேன் டி. நேத்து மூக்கை சீந்திட்டு போனியே... அதான்" என்ற அபிராமி "உனக்கு பையனை பிடிச்சிருக்கு தானே தெய்வா?" என்று ஒரு அன்னையின் தவிப்புடன் கேட்க,

"பிடிச்சிருக்கு மா. ஏன் அதையே யோசிச்சிட்டு இருக்க! சீக்கிரம் வேலையை முடிப்போம். நான் குளிச்சிட்டு கிளம்பனும். அப்பா எங்க போய்ட்டாங்க? ஹால்ல இல்லை" என்று கீர்த்தனா கேட்க,

"அவர் 'எல்லாம் நல்ல படியா முடியனும்னு' அந்த ஆலமரத்தானை பார்த்து அவருக்கு மாலை போட போய் இருக்கார். நீயும் குளிச்சிட்டு போய் கும்பிட்டுட்டு வந்துடு" என்றார் அபிராமியும் சந்தோஷத்துடன்.

தெய்வ கீர்த்தனாவிற்கும் முருகனை சென்று பார்க்க தோன்ற கிளம்பி சென்று அவரை வணங்கி விட்டு வந்தாள். முருகனும் சிரித்த முகமாய் வழியனுப்பி வைத்தார்.

அடுத்த சிலமணி நேரத்தில் அவளை பெண் பார்க்க வந்தனர். அனைவரும் டீ குடித்து பஜ்ஜி சாப்பிட்டு முடிக்க பெண் அழைக்கப்பாட்டாள்.

அபிராமி வந்து கீர்த்தனாவை வெளியே அழைத்து வர, பையன் வீட்டு சார்பில் வந்திருந்த அனைவரின் பார்வையும் அவளை அங்கு வேறு ஆணி வேறாய் ஆராய்ந்தனர்.

அதை தொடர்ந்து எல்லாரும் அவர்களுக்குள் ஏதோ பேசி கொள்ள, பையனின் அம்மா பையனிடம் கண் ஜாடையில் 'பெண்ணை பிடித்திருக்கிறதா?' என்று கேட்க,

அவனின் பதில் தலையசைப்பில் வந்தது.

பையனின் பெரியம்மா தெய்வகீர்த்தனாவிடம் "எங்க பையனை பிடிச்சிருக்கானு சொல்லுமா?" என்று சொல்ல,

கீர்த்தனாவும் நிமிர்ந்து மாப்பிள்ளையை பார்த்தாள். நேற்று போட்டோவில் பார்த்தவனுக்கும் நிஜத்துக்கும் பத்து வேறுபாடு இருந்தது. நேற்று போட்டோவில் சுமார் ரகமாய் இருந்தவன் நேரில் இன்னும் சுமாராய் தான் இருந்தான்.

குண நலன்கள் பற்றி எதுவும் தெரியவில்லை. இருந்தும் குமார் அபிராமி முகத்தில் இருந்த சந்தோசத்தை நிலைக்க வைக்க வேண்டும் என்ற முடிவில் இருந்தவள் "பிடிச்சிருக்கு" என்றாள் தெளிவாய்.

அடுத்து மீண்டும் பத்து நிமிடம் அவர்களுக்குள் ஏதோ முணுமுணுப்பாய் பேசி கொண்டவர்கள் "நீங்க வேற இடம் பாருங்க" என்று நாசுக்காய் கூறி எழுந்து சென்றனர்.

அவ்வளவு தான் கீர்த்தனா வீட்டில் இருந்த அனைவர் முகத்திலும் கவலை குடியேற சோர்ந்து போனார்கள்.

ஆனாலும் அபிராமி கோபத்தையும், தவிப்பையும் அடக்க முடியாமல் "ஏங்க என்ன ஆச்சி? எதுவும் காரணம் சொல்லாம பிடிக்கலைனு சொன்னா நாங்க என்ன நினைக்குறது!" என்று கீர்த்தனா தடுத்ததையும் மீறி கேட்டு விட

"பொண்ணு மா நிறமா தான் இருக்கா. எங்க பையனுக்கு வெள்ளையா தான் பொண்ணு பார்க்க நினைச்சோம். ஜெயா பொண்ணு நல்ல வெள்ளைனு சொல்லவும் தான் வந்தோம்" என்று பையனின் அன்னை சொல்ல,

"போய்ட்டு வாங்க சாமி" என்று கை எடுத்து கும்பிட்டு விட்டார் அபிராமி.

ஆனால் அபிராமி அறியவில்லை அவரின் மருமகன் அதிரடியாக அவர் மகளை மணக்க போகிறான் என்று. அதை எல்லாம் அறிந்த முருகரோ மாற புன்னகையுடன் ஆலமரத்தின் நிழலில் அந்த விளையாட்டை பார்க்க காத்திருந்தார்.

காதல் தொடரும்....
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... தோழமைகளே 😍

"நீயே என் கீர்த்தனம்" கதையின் முதல் அத்தியாயம் பதிவிட்டு விட்டேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே 😍

கருத்து திரி

 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்: 2

கடந்த இரண்டு வாரங்களாய் கீர்த்தனா ஒருவித யோசனையிலேயே சுற்றி வந்தாள். கடந்த இரண்டு வருடங்களாய் அபிராமியின் வேகம் மனதில் ஒரு வகை பயத்தை கொடுத்து கொண்டே இருக்க வேலை என்ற ஒன்றை பற்றி யோசிக்காதவள் இந்த இரண்டு வாரமாய் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற யோசனையில் இருந்தாள்.

அதற்கு காரணமும் அபிராமி தான்.

பெண் பார்க்க வந்தவர்கள் 'வேண்டாம்' என்று சொல்லி சென்ற கோபத்தில் அபிராமி உடனே வேறு வரன் பார்க்க தொடங்க, பொறுமை இழந்து கத்தி விட்டிருந்தாள் .

எத்தனை நாள் தான் அவளும் பொறுத்துக்கொள்வாள். வாரத்தில் நான்கு நாட்கள் "பெண் பார்க்க வருகிறார்கள் கிளம்பி இரு' என்று அவர்கள் சொல்லும் நாள் எல்லாம் தயாராகி இருக்க அவள் ஒன்றும் பொம்மை இல்லையே! உயிரும் உணர்வு கொண்ட பெண் அல்லவா!

அபிராமியின் அவசரம் கீர்த்தனா மனதில் பயத்தையும், கோபத்தையும் கொடுக்க 'அடுத்த ஒரு வரன் வருகிறது. மாப்பிள்ளை நல்லவன்'என்று அபிராமி தொடங்கவும்,

"ப்ளீஸ் மா என்னை கொஞ்ச நாள் நிம்மதியா இருக்க விடுங்க. ஒரு வாரத்துக்கு எத்தனை மாப்பிள்ளை வீட்டை தான்மா கொண்டு வருவிங்க? வரவங்க வேண்டாம்னு சொன்னா உடனே அடுத்து பார்க்கனுமா? நான் அதை ஏற்றுக்க தயாரானு என்ன பத்தி கொஞ்சமாவது யோசிக்குறிங்களா மா? எதுக்கு இவ்வளவு அவசரம்? மெனக்கெடல்? விட்டுடுங்க ப்ளீஸ்... உங்களால என் நிம்மதியே போச்சி. கொஞ்ச நாள் என்னை ப்ரீயா இருக்க விடுங்க. இன்னும் ஒரு வருஷத்துக்கு எனக்கு கல்யாணமே வேண்டாம்" என கத்திவிட்டு விட்டு அறைக்குள் வந்திருந்தாள்.

அதன் பிறகே அபிராமி சற்று அமைதியாக இருக்க, இதோ இரண்டு வாரங்கள் கடந்தும் கீர்த்தனா அபிராமியிடம் முகம் கொடுத்து பேசவில்லை. குமாரையுமே தவிர்த்து விட்டாள். அவள் தம்பி அழைத்தால் ஒரு சில வார்த்தைகள் பேசி விட்டு வைத்து விடுவது என்று கொஞ்சம் அவளை அவளே தனிமை படுத்துக்கொண்டாள்.

அந்த தனிமையே ஒரு வருடம் வேலைக்கு சென்றால் என்ன என்ற உந்துதலையும் கொடுக்க, அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் இருந்தாள்.

ஆனால் கீர்த்தனா அறியாத ஒன்று அவள் அறியாதபடி அவளுக்கான வரன் தேடல் நடந்து கொண்டு தான் இருக்கிறது ஆனால் அவள் ஜாதகத்துடன் இப்போது வந்த வரங்கள் பொருந்தாததால் அவள் காதிற்கு விசயம் வரவில்லை.

'உன் வீம்புக்கு ஆடினால் ஆகாது' என்று நினைத்த அபிராமி அவர் வேலையில் சரியாக இருந்தார். அதை அவர் கீர்த்தனாவிடம் சொல்லாமல் இருந்ததே இந்த இரண்டு வார அவளின் நிம்மதிக்கு காரணம்

எப்போதும் போல் அன்று முருகனை சென்று வணங்கி வந்தவள் சோர்வுடன் வந்து படுத்து விட்டாள். தூக்கம் தான் வருவேனா என்று சண்டித்தனம் செய்து கொண்டிருந்தது.

தூங்க என்று சென்று படுத்தவுடன் எப்போதும் வந்து மோதும் எண்ண அலைகள் இப்போதும் வந்து வதம் செய்து ஓய்ந்து நித்திரா தேவி சற்றே தளுவிகொள்ள இருந்த நேரம் "கீர்த்தனா" என அழைத்த படி வந்தார் அபிராமி.

அதில் தூக்கத்தின் பிடியில் இருந்து சட்டென பதறி வெளிவந்த கீர்த்தனா "என்னம்மா?" என்றாள் தூக்கம் கலைந்த எரிச்சலுடனேயே.

"பொழுது சாயுற நேரத்துல என்னடி தூக்கம்? எந்திரிச்சு போய் வேலையை பாரு... போ" என்ற அபிராமி வீட்டை சுத்தம் செய்ய,

"என்ன...? மறுபடியும் மாப்பிள்ளைனு எவனும் டீ காஃபி குடிக்க வரானா?" என்றாள் கீர்த்தனா நக்கலாய்.

அதில் அவளை முறைத்த அபிராமி "அதான் வந்தவனை எல்லாம் பிடிக்கலைனு சொல்லியே அனுப்பிட்டியே... அப்பறம் என்ன?, காலா காலத்துல கல்யாணம் பண்ணி போகனும்னு எண்ணம் இல்லை. நீ எல்லாம் எங்க உருப்பட! அனுவை பாரு உன்னை விட சின்ன பொண்ணு. அவளுக்கு நாளைக்கு பூ வைக்க வராங்களாம். உன் அத்தை இப்போ தான் போனை போட்டா. நைட்டே கிளம்பனும்னு உன் அப்பா குதிக்கிறார். போய் ட்ரெஸ்ஸ எடுத்து வை போ" என்றார் அதீத கோபத்துடன்

அவர் சொன்னதை கேட்ட கீர்த்தனாவிற்கு ஒரு நிமிடம் 'திக்'என்று இருந்தது. அனுவிற்கு திருமணம் நடப்பது மகிழ்ச்சி தான் என்றாலும் அங்கே சென்றால் ஆட்டுறலில் அரைபடும் அரிசியாக அரை படுவது அவள் அல்லவா!

நாளை உறவினர்கள் அனைவரும் கேட்கும் கேள்வியை நினைத்து இப்போதே பதட்டம் அதிகரித்தது.

'நான் இப்போ இருக்குற நிலமையில இதுவேறையா? எனக்குனே எல்லாம் வரும் போல! நாளைக்கு எல்லாருமா சேர்ந்து "உனக்கு எப்போ கல்யாணம், உன் அப்பா மாப்பிள்ளை பார்க்குறானா? இல்லையான்னு?" கேட்டே கொன்ணுடுவாங்களே... நான் கொஞ்சம் நிம்மதியா இருந்தா இந்த கடவுளுக்கு பிடிக்காதே' என்று முணுமுணுத்த கீர்த்தனா

"பூ வைக்குற பங்ஷனுக்கு எதுக்குமா நான்? நீங்களும் அப்பாவும் மட்டும் போனா ஆகாதா?" என்றாள் கடுப்புடன்.

"அதை எங்கிட்ட சொல்லாத. உன் அப்பாக்கிட்ட வந்து சொல்லு" என்ற அபிராமி அறையை விட்டு வெளியேறி விட,

"ப்ச்" என்ற சலிப்புடனே எழுந்து ஹாலுக்கு வந்த கீர்த்தனா "ப்பா பூ வைக்குற பங்ஷனுக்கு எல்லாம் நான் எதுக்குபா? நீங்களும் அம்மாவும் போய்ட்டு வாங்க. அத்தை கிட்ட நான் போன்ல சொல்லிக்கிறேன்" என்றாள் பிடித்தமின்மையை குரலில் காட்டி.

"பங்ஷனுக்குனு இல்லை லதா வீட்டுக்கு போய் ரொம்ப நாள் ஆகிட்டு. அனுவும் உன்ன கூட்டிட்டு வர சொல்றா. நீ வந்தா உன் அத்தையும் சந்தோஷப்படுவா. கிளம்பு..." என குமரன் கூறி விட

தெய்வ கீர்த்தனாவிற்கு குமார் மீதும் சற்றே கோபம் எட்டி பார்த்தது.

எப்போதும் ஏதாவது ஒன்றை அன்பாகவோ அல்லது கோபமாகவோ கூறி அவர்கள் சொல்லுக்கு அடிபணிய வைக்க, ஒரு வித எரிச்சலுடனே அறைக்கு வந்தவள் அவள் அத்தைக்காக கிளம்ப தொடங்கினாள்.

இரவு எட்டு மணிக்கெல்லாம் இரவு உணவை முடித்து கொண்டு குமார் குடும்பம் மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்பட்டனர்.

குமார் உடன் பிறந்தது ஒரு தங்கை லதா மட்டுமே. திருமணம் முடிந்து நாகர்கோவிலை அடுத்த தக்கலையில் வசித்து வருகிறார். லதாவின் கணவர் ரவி. லதாவிற்கு ஒரு பெண் மட்டுமே அவள் அனு ராகவி. அனு வெள்ளை நிறத்தில் அகண்ட விழிகள் என அழகாக இருப்பாள்.

உறவுகளுக்கிடையில் நிறைய முறை அதை கூறி கீர்த்தனாவை மட்டம் தட்டுவதுண்டு ஆனால் கீர்த்தனா அதை எல்லாம் பெரிதாக எடுத்து இல்லை. அனுவும் பந்தா எதுவும் இல்லாமல் இயல்பாக பேச, இருவரும் நட்புடன் ஒன்றாக சுற்றுவதை பார்த்து நாளடைவில் அந்த பேச்சும் நின்று விட்டிருந்தது.

தக்கலை கேரள எல்லை பகுதியில் இருப்பதால் நல்ல தண்ணீர் வளம் மிக்க ஊர். அதனால் ஊரே அத்தனை குளிர்ச்சியுடன் இருந்தது.

அதிலும் இரவு நேர குளிர் சற்று அதிகமாகவே இருந்தது. அதில் மாலை நேரம் கை விட்டு சென்ற தூக்கம் இப்போது தானாக கீர்த்தனாவை தழுவ ஜன்னல் கம்பியில் சாய்ந்து கண் அயர்ந்தாள்.

****

திருநெல்வேலி மாவட்டத்தின் தென் கோடியில் உள்ள வள்ளியூர் ரயில் நிலையம். இரவு நேர அமைதியை தத்தெடுத்தபடி பாதி இரளில் மூழ்கி கிடந்தது ஆனால் ஆள் அரவமற்ற இடம் என்று சொல்ல முடியாத அளவு அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் இரண்டு இளைஞர்கள் இருந்தனர்.

ஆனாலும் இருவரிடமும் எந்த பேச்சு வார்த்தையும் இல்லாமல் இருக்க எங்கோ தூரமாய் வரும் ரயிலின் ஓசை துல்லியமாய் காதில் கேட்டு கொண்டிருந்தது. அதில் ஒருவன் சுயம் பெற்று மற்றவனை பார்க்க, அவனோ சுரனை அற்றவன் போல் அமர்ந்து இருந்தான்.

அவனின் பால் வண்ண நிறத்திற்கு அவன் அணிந்திருந்த கருப்பு நிற சட்டையும் வெள்ளை நிற வேஷ்டியும் அவனை அழகனாய் காட்டியது. ஆனால் ரத்த நிறத்தில் சிவந்திருந்த அவன் கண்களும், யோசனையில் சுறுங்கி இருந்த நெற்றியும் கோபத்தில் விடைத்திருந்த நாசியும் நெற்றியை தாண்டி வழிந்த முடியும் சற்றே அதிகம் வளர்ந்த அவன் தாடியும், இரு விரலின் இடையே நெருப்பை தாங்கி புகைந்து கொண்டிருந்த சிகரெட்டும், அவனின் ஆறு அடிக்கு மிஞ்சிய உயரமும், அவனை ஒரு அரக்கன் போல் காட்சிப்படுத்தியது.

அவன் கையில் இருந்த சிகரெட் தீரும் தருவாயில் இருக்க அதை உணரும் நிலையில் அவன் இல்லை. ஆனால் பார்வை அந்த நெருப்பின் மேல் தான் இருந்தது.

ஏனோ தன்னை போலவே அதுவும் ஊமையாக புகைவது போல் தோன்ற சிகரெட்டின் மேல் இரக்கம் கொண்டு இறுக பிடித்திருந்தான்.

அவன் சக்தி தரன். அருணாசலம் கோமதி தம்பதியரின் மூத்த மகன். அவன் குணம் இது தான் என்று எளிதில் கணித்து விட முடியாது. நாம் ஒன்னு நிறைக்க அதற்கு எதிர் மாறாக செய்து வைப்பவன்.

அதற்கு காரணமும் அருணாச்சலமே. "நான் சொன்னதை செய்" என சின்ன வயதில் இருந்தே அதட்டியே வளர்க்க, அவரிடம் காட்ட முடியாத கோபத்தை, மற்றவர் ஒரு விஷயத்தை செய்ய சொல்லும் போது அவரிடம் காட்டினான்.

அது ஒரு வீம்பு அவனுக்கு 'நீ சொன்னால் நான் செய்ய வேண்டுமா!' என்ற எண்ணம். அந்த எண்ணமே அவன் வளர்ந்து கல்லூரி செல்லும் வயதில் அருணாச்சலத்திடமும் திரும்பியது.

அதன் பிறகு அடிக்கடி அப்பா மகனுக்குள் முட்டி கொள்ள தொடங்கியது. அதனாலோ என்னவோ அருணாச்சலம் அவனை இன்னும் அடக்க முயற்சித்து நிறைய செய்ய தொடங்கினார்.

அப்படி அருணாசலம் செய்த ஒரு செயலால் அப்பா மகன் இருவருக்கும் கடந்த பத்து வருடங்களாய் பேச்சு வார்த்தை இல்லை. சுயதொழில் சொந்த வீடு என்று குடும்பத்தை விட்டே தனித்து சென்று விட்டான் சக்திதரன்.

எப்போதாவது கோமதி வருந்தி அழைத்தால் மட்டுமே அங்கு செல்வான். அதுவும் அருணாசலம் தொழில் விஷயமாய் வெளியே செல்கிறார் என்று தெரிந்த பின்பே செல்பவம் அவர் வரும் முன்பு கிளம்பி விடுவான். அதற்காக அருணாச்சலம் மீது பயமா என்றால் இல்லை அது ஒரு வகை வெறுப்பு.

அருணாச்சலத்தின் சொல் செயல் எதற்கும் சக்திதரன் கட்டுப்பட மாட்டான். முற்றிலுமே அவரை தன் வாழ்க்கையில் இருந்து ஒதுக்கி விட்டிருந்தான்.

சக்திதரன் பற்றிய யோசனையில் அவனையே பார்த்திருந்த குகன் ரயில் அருகே வந்த பிறகே சிந்தனை கலைந்தான். குகன் சக்திதரனின் உயிர் தோழன்.

அவன் சுயம் பெற்ற போதே ரயில் அவன் நிறுத்தத்தில் வந்து நின்று பயணிகள் இறங்க தொடங்க "லேய்..சக்தி ரயில் வந்துட்டு வா" என்ற குகன் எழுந்து சென்று ப்ளாட் பாரத்தில் நிற்க,

அவன் அழைத்ததை கவனிக்காத சக்திதரனோ.. புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்டை பார்ப்பதிலேயே தீவிரமாய் இருந்தான்.

சக்தி வராததை கவனிக்காமல் ட்ரைனிங் ஏறிய குகன் அதன் பின்பே கவனித்து அவனிடம் வந்தவன்

"லேய் மக்கா என்ன ரோ(யோ)சனை நாள சோளிய பார்க்க வேண்டாமா! வாலே..." என்று தோளில் தட்ட,

அதன் பிறகே சுயம் பெற்ற சக்திதரன்
"நீ ஏறுல நான் பின்னுக்க வரேன்" என்று கையில் இருந்த சிகரெட்டை தூக்கி வீடு விட்டு அடுத்த சிகரெட்டை பற்ற வைத்தவனாய் ட்ரைனில் ஏறினான்.

சக்திதரன் அறியவில்லை அங்கிருந்து அவன் பாதை மாற போகிறது என்பதை.

அவர்கள் ஏறிய ஒரு சில நொடிகளில் ட்ரைன் கிளம்ப நண்பர்கள் இருவரும் இருக்கையில் சென்று அமர்ந்தனர்.

"என்னாலே மக்கா என்ன யோசனை?" என்று குகன் கேட்க,

"இல்ல... என் அப்பனுக்கு இவ்வளவு தைரியம் எங்க இருந்து வருதுனுட்டு யோசிக்கே மக்கா. இவ்வளவு காலமும் அப்பனாச்சேன்னு விட்டா அந்தாள் ஓவரோ சீண்டுறான். நாளைக்கு நான் செய்யற வேலையில அந்தாள் என் வழிக்கே வர கூடாது " என்றான் சக்திதரன் அடக்கப்பட்ட கோபத்துடன்.

அவனின் சத்தத்தில் எதிர் இருக்கையில் தூக்கத்தில் அமர்ந்து இருந்த கீர்த்தனாவின் தூக்கம் லேசாய் கலைய தொடங்கியது.

எதிரில் ஆள் இருப்பதை பொருட்படுத்தாமல் சக்திதரன் சிகரெட்டை புகைத்து கொண்டிருக்க, அவன் விட்ட புகை எதிரில், கீர்த்தனாவை முகம் சுளிக்க வைத்தது.

அவள் வீட்டில் யாருக்கும் புகை மது பழக்கம் இல்லை என்பதால் அந்த வாடை எல்லாம் கீர்த்தனாவிற்கு சுத்தமாய் ஆகாது. குமட்டல் வந்து விடும்.

அபிராமியின் அருகில் அமர்ந்தால் 'கல்யாணம் மாப்பிள்ளை' என்று எப்போதும் பாடும் பல்லவியை பாட தொடங்கி விடுவார் என்பதால், அவரின் கல்யாண பேச்சில் இருந்து தப்பிக்க என்று தனியே வந்து அமர்ந்தவளை சோதிக்க என்றே வந்தவன் போல் அவள் எதிரில் வந்து அமர்ந்து இருந்தான் சக்திதரன்.

அவன் விட்ட சிகரெட்டின் புகை கீர்த்தனாவிற்கு ஒவ்வாமையை கொடுக்க, தூக்கம் தெளிந்து எழுந்தவள் முகம் சுழித்தபடி துப்பட்டா கொண்டு மூக்கை மூடியபடி சக்திதரனை முறைத்து வைத்தாள்.

ஆனால் அதை சக்திதரனீ தான் கவனிப்பதாய் இல்லை. ரயிலை தொடர்ந்து வரும் இருளும் கையில் இருந்த புகையும் என்று பார்வையை பதித்தபடி அவன் வேறு உலகத்தில் இருத்தான்.

ஆனால் கீர்த்தனா மூக்கை மூடவுமே கவனித்து விட்ட குகன் கீர்த்தனா முறைக்கவும் "லேய்... மக்கா அந்த பெண் குட்டிக்கு இந்த வாடை ஆவாதாட்டும் நினைக்கேன். அதை தூரம் போடுலே, அந்த பெண் குட்டி உன்ன மொரச்சியாவுது" என்று சக்திதரன் காதில் கிசுகிசுக்க,

"எந்த குட்டிலே மக்கா?" என்ற படி குகன் பக்கம் திரும்பிய சக்திதரன், நண்பன் பார்வை சென்ற திசையை தொடர்ந்து தன் பார்வையை திருப்பியவன் பார்வைக்குள் அகப்பட்டாள் கீர்த்தனா.

தன்னை முறைத்தபடி, புகை வாடை பிடிக்காமல் முகத்தை மூடி இருந்தவளை பார்த்தவன் விழிகள் சில நொடிகளில் அவளை ஆராய்ந்து பார்த்தவன் விழிகளில் சட்டென ஒரு மின்னல்.

அவன் அறிந்து அவனை முறைப்பவர் அவன் அப்பா மட்டுமே. அதற்கே அவரை வேண்டும் என்ற அளவு கடுப்பேற்றி மகிழ்வான். இப்போது கீர்த்தனாவும் அதையே செய்ய அவளையும் வெறுப்பேற்ற தோன்றியது சக்திதரனுக்கு.

அதில் அதுவரை இறுகி கிடந்த அவன் உதடுகள் லேசாக புன்னகைக்க சிறிது சுவாரசியத்துடன் அவளை பார்த்தவன் இலகுவாய் சாய்ந்து அமர்ந்து இன்னும் நன்றாக புகையை உள்ளிழுத்து ஊதியபடி "லேய் மக்கா இது கவர்மெண்ட் சொத்தாக்கும். இந்த குட்டிக்கு உள்ள ரைட்ஸ் நமக்கும் உண்டு. பின்ன என்னத்துக்கு அந்த குட்டி நம்மளை முறைக்குதாம்?" என்று குகனிடம் கேட்டபடி கீர்த்தனாவை பார்க்க,

அவன் பேச்சின் தொனி குகனுக்கு பயத்தை கொடுத்தது. இது அவனின் வம்புக்கு இழுக்கும் தோணி எனவே நண்பனை சிறிது கலவரத்துடன் பார்த்தவன் "லேய் மக்கா கொஞ்ச நேரம் சும்மா இருலே. ரயிலுல சம்பவம் பண்ணிராத. இந்த பெண்ணை பார்க்க நம்ம ஊர் பெண்ணாட்டும் தெரியல ஏதும் கலவரம் ஆகிட போது" என்று கூற

சக்திதரன் அதை கவனிப்பதாய் இல்லை.

குகன் பேசியது கீர்த்தனாவிற்கு புரியவில்லை என்றாலும் சக்திதரன் சத்தமாய் பேசி இருக்க அவன் பேசியது தெளிவாகவே கேட்டிருந்தது.

அவன் வார்த்தைக்கு வார்த்தை குட்டி என்று சொன்னதில் கோபம் கொண்ட கீர்த்தனா "மிஸ்டர் கீப் மைண்ட் யூவர் வாய்ஸ். குட்டி கிட்டினு சொன்ன மரியாதை இல்லை பார்த்துக்கோ. அரசாங்க சொத்துனாலும் ட்ரைன்ல புகை பிடிக்குறது தப்பு. மேல எழுதி போட்டுருக்கே பார்க்கலை?" என்று அங்கே சன்னலின் மேற்புறம் 'பயணிகள் புகை பிடிக்க கூடாது' என்று எழுதி போட்டிருப்பதை சுட்டி காட்டிய கீர்த்தனா "இவங்க எல்லாம்

அதை நிதானத்துடன் படித்த சக்திதரன் "நான் கண்டுட்டுன்னு. அதுக்கென்னா இப்போ! நீ மினிஷ்டரோ! நீ சொன்னது நான் கேட்க. நான் மினிஸ்டர் சொன்னாலும் கேட்டுக்கிட்டு இல்லை" என்றான் அலச்சியமாய்.

சக்திதரனின் திமிர் மட்டும் அலச்சிய பேச்சில் அவனை அருவெறுப்பாக பார்த்த கீர்த்தனா சட்டென அங்கிருந்து நகர்ந்து விட்டாள். 'யாரோ ஒரு குடிகாரன் ஏதோ செய்தால் தனக்கு என்ன! இங்கு வேறு சீட்டா இல்லை?' என நினைத்து வேறு இடம் மாறி கொண்டவளுக்கு சக்திதரனின் அகம்பாவம் சுத்தமாய் பிடிக்கவில்லை.

அவனின் அலச்சியம், திமிர் பேச்சு, அவன் செய்கை எல்லாம் அவனை ஒரு பொறுக்கியாக உறுவகப்படுத்த அதன் கோபம் சற்று நேரம் தெய்வ கீர்த்தனாவை விட்டு அகலவில்லை.

மீண்டும் மீண்டும் அதுவே நினைவு வர யூடியூபில் இளயராஜாவின் பாடலை ஒலிக்க விட்டு இயர் போனை மாட்டிக்கொண்டு கண் மூடி கொண்டாள். அதன் பிறகே மனம் சற்று நிதானம் அடைய, யாரோ ஒரு குடிகாரன் மேல் தான் ஏன் கோபம் கொள்ள வேண்டும் என நினைத்து அவனை மறந்து விட்டு இரவும் இளையராஜாவும் என அமிழ்ந்து விட்டாள்.

எத்தனை நிமிடங்கள் அத்தனை இனிமையாக கழிந்ததோ "தெய்வா..." என்ற அபிராமியின் அழைப்பில் நிமிர அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்திருநத்து.

நடு இரவில் அந்த ரயில் நாகர்கோவில் வந்து சேர்ந்திருக்க, அந்த நேரத்திலும் கீர்த்தனா குடும்பத்தை அழைத்து செல்ல லதாவின் கணவர் கந்தையன் காத்திருந்தார்.

கீர்த்தனாவை பார்த்ததும் கந்தையன் முகத்தில் கூடுதல் சந்தோஷம். "என்ன மக்களே.. நல்லா இருக்கியா...?" என்று அவர் அன்பு பொங்க கேட்க,

"நல்லா இருக்கேன் மாமா. நீங்க எப்படி இருக்கிங்க?" என்று கேட்ட கீர்த்தனாவிற்கும் அளவு கடந்த சந்தோஷம் அத்துடனே அந்த இரவு நேரத்திலும் அபிராமியிடம் சிக்க தேவை இல்லை நிம்மதியும் சேர்ந்தே வந்தது.

"நான் நல்ல சுகம் மக்களே. சாமம் ஆயி போச்சில்லா வீட்டுல போய் பேசுவம் வா. வாங்க அக்கா போவம்" என்று அபிராமியையும் அழைத்த கந்தையன் குமாரிடம் தலையசைப்பை கொடுத்துட்டு விட்டு முன்னே சென்றார்.

"அப்பறம் மாமா என் அத்த பெத்த ரத்தினம் எப்படி இருக்கா" என்ற கீர்த்தனாவும் அவருடன் பேசியபடி வர,

"நல்ல சுகம் தான் மக்கா. ஆனா எந்தா மக்களே உன்னட்ட தான் போன் உன்டில்லா ஒரு நா போன் போட்டு இந்த மாமன்ட விழிச்சினியா உன்னட அத்தைட்ட மட்டும் மணிக்கு ஒரு போன். யா மாமே மட்டும் கண்ணுக்கு அம்புடலியோ!" என்று கந்தையன் கேட்க,

அவர் பேசிய வேகத்தையும், சரலமான வார்த்தை கோர்வையையும் கேட்டு கீர்த்தனாவிற்கு தலை சுற்றியது. அவரின் வேகத்தில் அவர் பேசியது பாதி புரியவில்லை. அதில் பாதி மலையாளம் கலந்து பேசுவது போல் இருந்தது. ஆனால் அவர் பேச்சில் இருந்தது முழுக்க முழுக்க அவள் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடு என்று மட்டும் புரிந்தது.

இந்த வெகுளி தனமான அன்பகற்காகவே இங்கே அடிக்கடி வர விரும்புவாள் கீர்த்தனா. ஆனால் இதுவரை அப்படி சந்தர்ப்பம் அமையவில்லை. அவள் வருகை அறிதாக இருந்ததாலேயே அவர்களின் அன்பும் அதிகமாகி போனது.

அந்த அன்பு கொடுத்த உரிமையில் கீர்த்தனாவும் கந்தையனுடன் இயல்பாக பேச தொடங்கினாள்

"இதுக்கு தான் உங்க கிட்ட பேச மாட்டேன் மாமா. நீங்க இப்போ பேசுனதுல பாதி எனக்கு புரியல. இதுக்கு அத்தை கிட்ட தான் விளக்கம் கேட்கனும். இதுல போன்ல பேசுனா நான் எப்படி உங்களுக்கு பதில் சொல்ல சொல்லுங்க?" என்று கேட்க

"அப்பா இப்போ நீ சொல்லியது என்ன மக்களே?" என்றார் கந்தையன் சிரிப்புடன்.

"இது கொஞ்சமே கொஞ்சம் புரிஞ்சிது" என்று கீர்த்தனா அசடு வழிய சொல்ல,

"அப்படி தான் மக்கா. நீ மாமன்ட தொய்ந்து விழிச்சேன்னா நான் என்ன விழிச்சேன்னுட்டு விளங்கிடும். எனக்க மோளும் உன்னன்ட அம்மைட்ட அப்படி தானே விழிச்சு பழகுனா" என்றார்.

அவர் சரிக்கு சரி பேச அவருக்கு பதில் சொல்ல தடுமாறியவள் அப்போதைக்கு அவரை சமாளிக்கும் நோக்குடன் "சரி மாமா இனிமேல் பேசுறேன். இப்போ எனக்கு தூக்கம் வருது வாங்க... சீக்கிரம் போவோம்" என்றாள்.

"அதுக்கென்ன.. கார்ல ஏறுனதும் உறங்க வேண்டியதுதான. உனக்க அப்பனுக்கு கொஞ்ச கூறு கம்மி கேட்டியா! இந்த ராத்திரி நேரம் உன்ன கூட்டிட்டு இப்படி வரலாமா? இங்கயெல்லாம் ராத்திரி பஸ் கெடையாது. எல்லாம் சவுக்க காடு. கார் கார்ன நம்ம முடியுமா?" என்ற கந்தையன் கோபத்துடன் கேட்க,

"அதுக்கு காரணம் என் அப்பா இல்ல, உங்க வைஃப் தான்" என்று கீர்த்தனாவும் சிறு முறைப்புடன் சொல்ல,

"உங்கொப்பனுக்க கூட தானே உன்னன்ட மாமியும் பொறந்தா, பின்ன அவட்ட எங்கருந்து கூறு இருக்கும். எனக்கு இப்போ கொஞ்ச காலமா ஒரு மவன் இல்லையேன்னுட்டு ரொம்ப விசனமாயிட்டு வருது கேட்டியா? உன்ன மாதிரி ஒரு மருமொவள அடுத்த வீட்டுக்கு அனுப்ப வேண்டியதாயிட்டு வருது பாத்தியா" என்ற கந்தையன் வருத்ததுடன் பேச,

'அத்தாடி...' என உள்ளுக்குள் அலரி விட்டிருந்தாள் கீர்த்தனா.

கந்தையன் பேசுவதே முக்கால்வாசி நேரம் அவளுக்கு புரியாது இதில் அவர் மகன் வேறா! 'உங்களுக்கு மகன் இருந்து.. எங்களுக்கு கல்யாணம் பேசி... அவன் பேசுறது புரியாம நான் புலம்பி... நான் பாவம் மாமா. தேங் காட் தப்பிச்சேன்' என மனதில் நினைத்து கொண்டவள் "இப்போ நீங்க சொன்னது சுத்தமான எனக்கு புரியலை மாமா" என்ற கீர்த்தனா அவரை பாவம் போல் பார்க்க

"சேரி சேரி வா போவம். உனக்க மாமி வாசல்ல நிப்பா" என்ற கந்தையன் அவர்களை அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.

அதே நேரம் அங்கு சக்திதரனோ முழு போதையில் அருணாசலத்தின் முன்பு சென்று நின்றான். அவனை அந்த நிலைமையில் பார்த்த அவன் குடும்பத்தினர் அதிர்ந்து நிற்க,

அருணாசலமோ அவனை கொன்று விடும் ஆத்திரத்துடன் பார்த்து நின்றார்.

தொடரும்.....
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே....

ரொம்ப லேட் எபி தான். ஆனா என்ன பண்ண சொல்லுங்க டிப்ரண்டா யோசிப்போமேனு கன்னியாகுமரி பாஷை எடுத்தேன் எடுத்த நிமிஷத்துல இருந்து, எழுத உக்கார்ந்தா ஒரு வரி தாண்ட மாட்டேங்குது என்னமோ சரியா எழுதாத உணர்வு. அதனாலேயே எழுதி இரண்டு வாரமா இந்த எபிய போஸ்ட் பண்ணாம வச்சிருந்தேன். ஆனா இனிமேலும் வெயிட் பண்ணி வேஸ்டுனு வந்துட்டேன். எபி போட்டு இருக்கேன். படிச்சிட்டு எப்படி இருக்கு இதை தொடர்ந்து எழுதலாமா இல்லை பாஷையை மாத்தலாமானு சொல்லுங்க நட்புக்களே உங்களை நம்பி தான் இருக்கேன்.

கருத்து திரி


நன்றி ❤
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த கதை முழுக்க முழுக்க கற்பனையே... எனக்கு பிடிச்ச மாதிரி எழுதுறேன். யாரும் முருகர் ஏன் மரத்தடியில் இருக்கான்னு போர் கொடி தூக்கிறாதிங்க மக்களே.

அப்பறம் நம்ம ஹீரோ ஹீரோயினை காட்டவே இல்லை இல்ல வாங்க அவங்களையும் பார்க்கலாம்

IMG_20240316_102246.jpg
இது தான் நம்ம சக்திதரன்

IMG_20240316_102308.jpg

இது தான் நம்ம தெய்வ கீர்த்தனா ❤❤
 
Status
Not open for further replies.
Top